செவ்வாய், 10 ஏப்ரல், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை- என் செலக்ஷன் - நெல்லைத்தமிழன்




என் செலக்ஷன் 
நெல்லைத்தமிழன் 


திருமணமாகி மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்றுதான் அகிலாவுக்கு முதன் முறையாக கார்த்திக் மேல் கோபம் வந்தது. அதற்குக் காரணம் காலைல கார்த்திக் சொன்ன விஷயம்தான்.

****

“ஏய்.. என்ன.. இன்னைக்கு உதடு ரொம்பச் சிவந்திருக்கு”.. 

‘என்ன… சாருக்கு மூடு ஜாஸ்தியாயிடிச்சி.’

‘உன்னை மாதிரி தேவதை மனைவியா வந்தா.. மூடுக்கு என்னடி கொறச்சல்’.  ‘ஸ்..அப்பா.. இந்த மீசை ரொம்பக் குத்தறது’ சிணுங்கினாள் அகிலா.
‘பேசாம இருங்க. ஆபீஸ் போற வேலையைப் பாருங்க. நான் போய் டிஃபன் பாக்ஸ் எடுத்துட்டு வரேன்”

“நாம இன்னும் ஒரு மாதத்துக்குள்ள வேற வீடு பாக்கணும். அப்பா நம்ம ரெண்டுபேரையும் தனிக்குடித்தனம் போகச் சொல்றார்”

“ஏன் நீங்க ஏதாவது அவர்கிட்ட சொன்னீங்களா?”

“நான் ஏன் சொல்றேன். நேத்தைக்கு சாயந்திரம் சம்பளக் கவரை அவர்கிட்ட கொடுக்கும்போது. தனிக்குடித்தனம் போடா என்றார். அவர் சொல்லுக்கு நான் என்னிக்கி மறுவார்த்தை சொல்லியிருக்கேன். எனக்கும் வருத்தமாத்தான் இருந்தது. ராத்திரி யோசிச்சேன். அவர் சொல்றதுக்கு ஏதேனும் காரணம் இருக்கும்னு தோணித்து. அதான் உங்கிட்ட இப்போ சொன்னேன்”.

அவளுக்குச் சட்டென்று பயமும் கோபமும் சேர்ந்தே வந்தது. ஆபீஸ் போற நேரத்துல எதுவும் சொல்லவேண்டாம்னு தோணித்து.

“சரி..சரி.. சாயந்தரம் பேசிக்கலாம். இப்போ கிளம்பற வழியை பாருங்க”… விருட்டென்று சமையலறையை நோக்கிச் சென்றாள்.




***

நினைச்ச மாதிரியே திருமண வாழ்க்கை ரொம்ப நல்லா அமைஞ்சது அவள் அதிர்ஷ்டம்தான்.

அந்தத் தெருலதான் அவன் வீடு இருந்தது. அவன் அப்பா ரிடைர்டு வாத்தியார். இவன் மெடிக்கல் ரெப்பா வேலைபார்க்கறானாம். பக்கத்துவீட்டு கலா சொன்னா.

கலா அகிலாவுக்கு ஸ்கூல்லேர்ந்து ஃப்ரெண்ட். அகிலா நல்லாப் படிக்கறதுனால, அப்போ அப்போ கூடச் சேர்ந்து படிக்கறதுக்காக வீட்டுக்கு வந்துருவா. அகிலா அம்மாவுக்கு அவள் யார் வீட்டுக்கும் போவது பிடிக்காது. அகிலா அப்பா அவளுக்கு 3 வயசா இருக்கும்போதே வேலை பார்க்கின்ற இடத்தில் மாரடைப்பால் செத்துப்போயிட்டார். அப்புறம் அந்த ஆபீசிலேயே அவள் அம்மாவுக்கு டைபிஸ்ட் உத்தியோகம் கொடுத்தார்கள். இருந்த கொஞ்ச நஞ்ச காசையும் போட்டு இப்போ இருக்கற வீட்டை வாங்கினா. காதலிச்சு கல்யாணம் செய்ததனால் அவள் அம்மாவுக்கு ரெண்டு வீட்டு ஆதரவும் இல்லாமல் போய்விட்டது. சின்ன வயசுலேர்ந்தே, அப்பா இல்லாத குறை தெரியாமல் அவள், அகிலாவை வளர்த்தாள். ஆனா கொஞ்சம் கண்டிப்புதான்.

அகிலாவுக்கு சின்ன வயசுலேர்ந்தே பொறுப்பு ஜாஸ்தி. தன் வீட்டு நிலைமை நன்றாக மனதில் பதிந்ததாலும், அம்மாவின் கண்டிப்பாலும் இயல்பாகவே ஒரு ஒழுங்குடன் வளர்ந்தாள். பள்ளியில் எல்லா சமூக சேவைக் குழுவிலும் அவள் இடம்பிடித்துவிடுவாள். அவளின் அன்பான பேச்சு, இயல்பான இரக்க குணம், நல்ல தன்மை இதெல்லாம், ஆசிரியர்களிடத்தில் அவளுக்கு ஒரு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன. படிப்பிலும் சூட்டிகை. அப்பா இல்லாத பின்னணியும் அவளது ஆசிரியர்களுக்குத் தெரியும். பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண் வாங்கியிருந்தாலும், அம்மாவுக்கு நகரத்துக்கு வெளியே இருந்த பொறியியல் கல்லூரிக்கு அனுப்புவதற்கு இஷ்டமில்லை. அதைப்பற்றிப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத அகிலாவும் பக்கத்திலிருந்த கல்லூரியில் பி.எஸ்.ஸி சேர்ந்தாள்.

பி.எஸ்.ஸி இரண்டாம் வருடம் முடிக்கும் முன்பே, அதே தெருவில் இருந்த கார்த்திக் பெற்றோர் இவளைப் பெண்பார்க்க வந்தனர். பி.எஸ்.ஸி முடித்த பின்பு திருமணம் என்று ஒத்துக்கொண்டு அப்படியே திருமணமும் ஆகிவிட்டது. கார்த்திக் வீட்டில் எதுவும் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அகிலாவின் அம்மா, குறையொன்றும் இல்லாமல் திருமணம் செய்துதந்தார். அதே தெருவில்தான் என்றாலும், திருமணமானபின் அகிலா, கார்த்திக் வீட்டிற்கு வந்துவிட்டாள். அம்மா தனியா இருப்பாள் என்று தோன்றியது, ஆனால் அம்மா, தான் தன்னைப் பார்த்துக்கொள்வதாகவும், அகிலா, புகுந்தவீட்டில் நல்லா நடந்து நல்ல பேர் வாங்கினாலே தனக்குப் போதும் என்று சொல்லிவிட்டாள்.

***

என்னதான் கார்த்திக்கை அவளுடைய திருமணத்துக்கு முன்னாலேயே பார்த்திருக்கான்னாலும், எப்போவும் ஒருத்தரோட குணம் என்பது நல்லா பழகினப்பறம்தானே தெரியும். கார்த்திக் ரொம்ப நல்லவன். அவங்க அப்பா அம்மாவும் நல்லவங்கதான். ஆரம்பத்துல அத்தே அத்தே என்று கார்த்திக் அம்மாவைக் கூப்பிட்டாள். புவனேஸ்வரிதான், தனக்கு பெண் குழந்தையே இல்லாததால், அம்மான்னே கூப்பிடு என்று சொல்லிவிட்டாள். வீட்டு நடைமுறைமட்டுமில்லாமல், யாருக்கு என்ன பிடிக்கும், எப்படிப் பண்ணணும்னெல்லாம் பொறுமையா அகிலாவுக்குச் சொல்லிக்கொடுத்தாள். தானும் எப்போவும் அகிலா கூடவே இருந்து எல்லா உதவியும் பண்ணுவார். பேச்சாக மட்டுமில்லாமல் உண்மையாகவே மகளைப்போலவே அகிலாவை நடத்தினார் புவனேஸ்வரி. அகிலாவுக்கு, தன் அம்மா வீட்டை விட்டுவிட்டு, புது வீட்டுக்கு வந்ததில் வித்தியாசமே தெரியவில்லை.

கார்த்திக் அப்பா எதுக்குமே அதிர்ந்து பேசமாட்டார். அவருக்கு காலைல பேப்பர் படிக்கணும். அப்போ காபி கொடுத்தாப்போதும். அப்புறம் கார்த்திக் ஆபீஸ் போய், மெதுவா அவருக்கு சாப்பாடு போட்டாப்போறும். காய்கறி வாங்கறது, வெளி வேலை பார்க்கிறது எல்லாம் அவர் பாத்துக்குவார்.

மத்தியானம் சாப்பாடு முடிஞ்சு, கொஞ்ச நேரம் அம்மா தூங்கும்போது அவளும் ரெஸ்ட் எடுப்பா. திருப்பி 4 மணிக்கு எழுந்து மாமாவுக்கு காபி போட எழுந்துடுவா.

சாயந்திரம் கார்த்திக் வந்தப்பறம்தான், எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவாங்க. அகிலாவுக்கு, மற்ற மூணுபேருக்கும் சாப்பாடு போட்டுட்டு சாப்பிடலாம் என்று நினைத்தாலும், மாமா ஒத்துக்கமாட்டார். எல்லாரும் சேர்ந்துதான் சாப்பிடணும்னு சொல்லிடுவார். அன்னைக்கு உள்ள விஷயங்களைப் பேசிக்கிட்டே சாப்பிடுவாங்க. அப்புறம் கார்த்திக் அவர் ரூமுக்குபோயிடுவார். அகிலா சமையல் அறையெல்லாம் ஒழிச்சுட்டு போறதுக்கு அரைமணி ஆயிடும். அம்மா, தான் பார்த்துக்கறேன்னு சொன்னாலும் அகிலா விடமாட்டாள். எல்லா வேலையும் முடித்தபின்புதான் கார்த்திக் ரூமுக்குப் போவா.

லீவு நாள் வந்தாலும் இது மாறாது. ஆனால், வாரவிடுமுறைல, ஒரு நாள், சாயந்திரம் அகிலாவும் கார்த்திக்கும்  எங்கேயாவது வெளில போய்ட்டு வருவாங்க. அன்னைக்கு மாத்திரம் வெளிலதான் சாப்பாடு. ஆரம்பத்துல அவளுக்கு அப்படி மாமாவையும் அத்தையையும் விட்டுட்டுப் போகப் பிடிக்கலை. ஆனால் ரெண்டுபேரும் கண்டிப்பா சொல்லி அனுப்பிச்சுடுவாங்க. அன்னைக்கு மாத்திரம் அத்தையும் மாமாவும் மாத்திரம் வீட்டுல சாப்பிடுவாங்க.

எப்போ நேரம் கிடைக்குதோ அப்பல்லாம் அம்மாவைப் பார்த்துட்டுவரச் சொல்லி மாமா ரொம்பச் சொல்லுவார். ஆனா அகிலா தனியா அம்மா வீட்டுக்குப் போகமாட்டா. கல்யாணமாகி இந்த மூணு மாசத்துல, மாசம் ஒரு தடவைன்னு மூணு தடவை அவள் அம்மா வீட்டுக்கு ரெண்டுபேரும் சேர்ந்துபோயிருக்காங்க.

அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. பெண்ணை மதிக்கறவங்க, மகளைப்போல் பார்த்துக்கறவங்க அவளுக்கு அமைஞ்சது கடவுள் கொடுத்த வரம்தான்னு நினைச்சா. ஆனா அந்த நெனப்புல கல்லைத் தூக்கிப் போடற மாதிரி காலைல கார்த்திக் சொன்னது அவளுக்கு முள்ளாகத் தைத்தது.

****



இரவு சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்தபோது, மாமாதான் பேச்சை ஆரம்பித்தார்.

“இன்னிக்கு என்னாச்சு. ஏன் உம்முன்னு இருக்க. புவனா ஏதாவது சொன்னாளா. இல்லை கார்த்திக் ஏதேனும் சொன்னானா”

“அம்மா ஒண்ணும் சொல்லலப்பா. இவர்தான் நீங்க சொன்னீங்கன்னு ஏதோ சொல்றார்”

“அப்பா… நீங்க எங்களுக்கு வேற வீடு பார்க்கச் சொன்னீங்கல்ல. அதச் சொல்றா போலிருக்கு” கார்த்திக் இடையில் புகுந்தான். அகிலாவுக்கு கண்ணில் நீர் துளிர்த்தது.

“அப்பா.. நான் ஏதும் தப்பு பண்ணிட்டேனா? உங்க மனசு கோணும்படி நடந்துக்கிட்டேனா? ஏம்பா எங்களைத் தனிக்குடித்தனம் போகச் சொல்றீங்க?” சொல்லும்போதே அகிலாவின் குரல் உடைந்தது.

“இதுல என்னம்மா இருக்கு. மூணு மாசம் எங்களோட ஆசைக்காக இருந்தாச்சு. தனியா இருந்தாத்தானே உனக்கும் குடும்பத்தை நடத்துவது எப்படின்னு தெரியும். எனக்கு பென்ஷன் வருது. புவனா நல்லாத்தான் இருக்கா. நாங்க எங்களைப் பார்த்துக்கறோம். நீங்க ரெண்டுபேரும் தனிக்குடித்தனம் போனாத்தான் உங்க ரெண்டுபேருக்கும் பொறுப்பும், உங்க வாழ்க்கைக்கு என்ன பண்ணலாம்னு புரிபடும். கார்த்திக் சம்பளத்தை வச்சு எப்படி குடும்பம் நடத்தறது, சேமிக்கறது எல்லாம் அப்பத்தான் புரியும். உங்களுக்குன்னு தனிப்பட்ட ஆசை இருக்கும். சினிமா போலாம், அங்க சாப்பிடலாம், இன்ன பண்ணலாம்னு இருக்கும். இங்க எங்களோட இருக்கும்போது எல்லாத்தையும் பண்ணமுடியாதில்லையா? தனியா இருக்கும்போது கொஞ்சம் சுதந்திரமா ஃபீல் பண்ணுவீங்க. வாரா வாரம் வந்து பாருங்க. அப்புறம் பேரனோ பேத்தியோ பொறந்துட்டான்னா, நாங்க அடிக்கடி வர்றோம். இல்லை அப்போ, நாங்க உங்களோட வந்து கொஞ்ச மாசம் இருக்கணும்னாலும் இருக்கோம். அப்பத்தாம்மா உனக்கும் சந்தோஷமா இருக்கும். இல்லாட்டா உனக்கு அவனோட தனியா லைஃப் ஆரம்பிச்சமாதிரி இருக்காது. உங்க சுதந்திரத்துல நாங்க குறுக்க இருக்கறமாதிரி தோண ஆரம்பிச்சுடும். அதுனாலத்தாம்மா கார்த்திக்கிட்ட தனியா வீடு பார்க்கச்சொன்னேன். இதுல வருத்தப்படறதுக்கு என்னம்மா இருக்கு. மகள் மாதிரித்தானேம்மா உன்ன நாங்க நினைக்கிறோம்”

“அப்பா.. எனக்கு இதுல இஷ்டமில்லப்பா. அவருக்கும் இதுல இஷ்டம் இருக்காதுன்னே நினைக்கறேன். உங்களுக்குத் தெரியும் நான் அம்மாவோடயே வளர்ந்தவனு. எனக்கு அம்மாவைத் தவிர வேற எந்த உறவினருடையும் பழக்கம் கிடையாது. அது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தெரியும். இங்க எனக்கு அம்மா, அப்பா இருக்காங்க. என்னை நல்லாப் பாத்துக்கற ஹஸ்பண்ட் இருக்காரு. இப்போதான் எனக்கு ஒரு குடும்பத்துல இருக்கற ஃபீலிங் இருக்கு. நாளைக்கு எங்களுக்கு கொழந்தைங்க பொறந்தா, அவங்க தாத்தா, பாட்டி இருக்கற கூட்டுக்குடும்பத்துலதான் வளரணும்னு நினைக்கிறேன்”

“அகிலா.. கொழந்தை பொறந்தப்பறம் எல்லாரும் சேர்ந்திருக்கலாம்மா. நீ பின்னால, கொஞ்ச வருஷம் தனிக்குடித்தனம் இருந்திருக்கலாமே.. கல்யாணம் ஆனதிலேர்ந்து ஹஸ்பண்டோட தனியாவே இல்லையேன்னு நினைச்சா, அப்போ அதை எப்படிம்மா சரி பண்ணமுடியும்?”

“அப்பா.. எனக்குத் தேவையான சுதந்திரம் இங்கேயே இருக்குப்பா. கூட்டுக் குடும்பத்துல என்ன குறை? இடைல தனியா இருந்தோம்னா, ஒருவேளை அதுக்கு மனசு பழகிடுத்துன்னா, அப்புறம் திரும்பி எல்லாரும் ஒண்ணா இருக்கறது உங்களுக்கும் சங்கடமா இருக்கும். எங்களுக்கும் வித்தியாசமா இருக்கும். எனக்கு உங்களோடயே இருக்கணும்னுதாம்பா ஆசை.
நானும் ஏதேனும் தவறு பண்ணிடலாம். அப்பா அம்மா மாதிரி நீங்கதான் அதைப் பொறுத்துக்கணும், தவறை சொல்லித் திருத்தணும்.  எங்க பசங்க இந்த வீட்டுலதான் பொறக்கணும். பொறந்ததுலேர்ந்து அவங்க தாத்தா பாட்டியோடதான் இருக்கணும். இதுதாம்பா என்னோட ஆசை”

“உனக்கு குடும்ப நிர்வாகம் அப்புறம் எப்படிம்மா தெரியும்? இன்னைக்கு நாங்க பார்த்துக்கறோம். எங்க காலத்துக்கு அப்புறம் நீங்க தெகைச்சுப் போயிடமாட்டீங்களா”

“அப்பா… அப்படீல்லாம் இல்ல. நீங்க தப்பா நினைக்கலைனா நான் ஒண்ணு சொல்றேன். உங்க பென்ஷன் பணத்தையும் கார்த்திக் சம்பளத்தையும் நீங்க வச்சிக்கிட்டு, மாதம் இவ்வளவுன்னு கொடுங்க. நான் அதுல செலவு எல்லாம் பார்த்துக்கறேன். அப்போ, எனக்கும் வீட்டு வரவு செலவு தெரிஞ்ச மாதிரி இருக்கும். நீங்களும் அத்தையும் அப்போ அப்போ சொல்லித்தாங்க. அதுக்கு ஏன் நாங்க தனிக்குடித்தனம் போகணும்? ”

“சரிம்மா… இந்த விஷயத்தை இத்தோட விட்டுடலாம். இன்னொரு நாள் சாவகாசமா பேசிக்கலாம். இப்போ எப்போதும்போல சிரிச்ச முகமா வச்சுக்க”

அத்துடன் அன்று அந்தப் பேச்சு ஓய்ந்தது.

****

“என்னங்க…எப்படி இப்படி சரியா கணிச்சிருக்கீங்க. நான் கார்த்திக்குக்கு அகிலாவை முடிவுபண்றதுக்கு முன்னால சந்தேகமாச் சொன்னதுக்கு, இவதான் நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணுன்னு எப்படி கரெக்டா சொன்னீங்க”

“நான் உங்கிட்ட சொன்னேன் இல்ல. பொண்ணு நல்ல மனசோட இருக்கறதுக்கு, கூட்டுக் குடும்பத்துலேர்ந்துதான் பொண் எடுக்கணும்னு இல்லை. கஷ்டப்பட்டு, தனியாளா ஆளாகிவர குடும்பத்துலேர்ந்தும் எடுக்கலாம். உண்மைல கஷ்டப்படற ஃபேமிலில உள்ளவங்கதான் தாங்க கஷ்டப்பட்டமாதிரி தன்னோட குடும்பமும் கஷ்டப்படக்கூடாதுன்னு நினைப்பாங்க. சமூக சேவைல ஈடுபடறவ, சின்ன வயசுலயே அப்பா இல்லாம கஷ்டப்பட்டவ, அம்மாவோட கண்டிப்புல வளந்தவ, ஒரு கெட்ட பெயரோ கிசு கிசுவோ தெருவில கிடையாது. கார்த்திக்குக்கு பிடிக்குதுன்னு தெரிஞ்சுடுச்சு. அப்புறம் எதுக்கு வேற எங்கயோ பொண்ணைத் தேடணும்?”

“புவனா… காசுங்கறது வாழ்க்கைல எப்போ வேணும்னாலும் வரும்.. எப்போனாலும் போகும். ஆனா நல்ல மனசுள்ளவங்கதான் அபூர்வம். நமக்கு அகிலா மாதிரி ஒரு மகளைக் கொடுத்ததுக்கு ஆண்டவனுக்குத்தான் நன்றி சொல்லணும்”

****

“என்னடி இவ்வளவு தைரியமா அப்பாகிட்ட பேசிட்ட”

“ஏங்க.. நான் பேசினது தப்பா?”

“இல்லை. நான் மனசுல நினைச்சதுதான் நீ பேசின. என்னவோ எனக்கு அப்பாகிட்ட அப்படிப் பேசி வழக்கமில்லை. ரொம்ப தாங்க்ஸ்”

“ஏங்க.. பேசற இடத்துல பேசாம இருக்கக்கூடாதுங்க. அப்புறம் தப்புக்கு நாமளும் துணைபோன மாதிரி ஆயிடும். நான் சொன்னமாதிரியே நீங்க நினைச்சீங்கன்னு நினைக்கும்போது…. நீ Greatடா கார்த்திக்”

“ம்ம்ம். எனக்கு வேலை வச்சுட்டயா இப்போ”


குறிப்பு: படங்கள் ‘சுடப்பட்டவை’. வரைந்த ஓவியர்களுக்கு நன்றி

108 கருத்துகள்:

  1. மெதுவா வந்து படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் கீதாக்கா...

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  4. இன்னைக்கு சீக்கிரமே காஃபி ஆத்தியாச்சா!?....

    இருந்தாலும்
    டிகாக்‌ஷன் கொஞ்சம் தூக்கல்....

    பதிலளிநீக்கு
  5. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  6. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் துரை செல்வராஜு அண்ணா, கீதாக்கா அனைவருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  7. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  8. //உண்மைல கஷ்டப்படற ஃபேமிலில உள்ளவங்கதான் தாங்க கஷ்டப்பட்டமாதிரி தன்னோட குடும்பமும் கஷ்டப்படக்கூடாதுன்னு நினைப்பாங்க. // தப்பாய் நினைக்காதீங்க. சமீப காலத்து அனுபவங்களிலே கஷ்டப்படற குடும்பத்திலே இருந்து வரும் பெண்கள் ரொம்பவே மோசமா நடந்துக்கறாங்க. கணவன் சம்பாத்தியம் தனக்கும் தன் பிறந்த வீட்டுக்கும் மட்டும் சேரணும்னு நினைக்கிறாங்க! :(

    பதிலளிநீக்கு
  9. கீதக்கா கீதா நான் வந்துவிட்டேன்..வெங்கட்ஜி ப்ளாக் ஓபன் ஆகலையா மொபைல் வெர்ஷன் ஓபன் பண்ணிட்டு....கொஞ்சம் கிச்சன் கடமை....போய்விட்டேன்...லேட்டாகிப் போச்சு..

    நெ த வின் கதையா..ஆஹா....வரேன் ஆனா நிதானமா படிக்க அப்புறமாத்தான் வர முடியும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. //இருந்தாலும்
    டிகாக்‌ஷன் கொஞ்சம் தூக்கல்....// ஹிஹிஹி, இல்லை சர்க்கரை ஜாஸ்தி ஆயிடுத்து! காஃபினா கொஞ்சமானும் கசப்பு இருக்கணுமே!

    பதிலளிநீக்கு
  11. //ஏங்க.. பேசற இடத்துல பேசாம இருக்கக்கூடாதுங்க. // இது ரொம்பவே சரியான கருத்து. அனுபவபூர்வமாகவும் உணர்ந்திருக்கேன். குடும்பத்தில் மட்டுமில்லாமல் அரசியலிலும் பேச வேண்டிய சமயத்தில் பேசி சரியான பதிலை/கருத்தைச் சொல்லணும்.

    பதிலளிநீக்கு
  12. //இன்னைக்கு சீக்கிரமே காஃபி ஆத்தியாச்சா!?....// காஃபிக் கடமை, கஞ்சிக்கடமை(15 நாட்களுக்குப் பின்னர்) எல்லாம் இன்னிக்கு ஆத்தியாச்சு! :)

    பதிலளிநீக்கு
  13. தேனோடு கலந்த தெள்ளமுதம்...
    கோல நிலவோடு கலந்த குளிர்த் தென்றல்...

    ஆகா...
    நெல்லிக்காயைத் தின்று விட்டு நீர் அருந்தியதைப் போல் இருக்கிறது..

    வாழ்க நெல்லைத் தமிழ்..
    வாழ்க கூட்டுக் குடும்பம்...

    பதிலளிநீக்கு
  14. துரை செல்வராஜூ ஸார்...

    // தேனோடு கலந்த தெள்ளமுதம்...
    கோல நிலவோடு கலந்த குளிர்த் தென்றல்...//

    ஜெமினி.... ஜெமினி.... ஜெமினி.... ஜெமினி....!

    // நெல்லிக்காயைத் தின்று விட்டு நீர் அருந்தியதைப் போல் இருக்கிறது..//

    ஆஹா.......!

    பதிலளிநீக்கு
  15. கீதா .அக்கா...

    // அரசியலிலும் பேச வேண்டிய சமயத்தில் பேசி சரியான பதிலை/கருத்தைச் சொல்லணும். //

    ஆமாமாம்... பார்க்கறோமே...!

    // இல்லை சர்க்கரை ஜாஸ்தி ஆயிடுத்து! //

    அது எப்படி? இரண்டு துகள் சர்க்கரை போட்டால் எப்படி அதிகம் ஆகும்? நான் சும்மா பேருக்குத்தான் சர்க்கரை போட்டுக்கொள்வேன்!

    பதிலளிநீக்கு
  16. காலை வணக்கம்! பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  17. காலை வணக்கம்....

    நல்ல கதை. பேச வேண்டிய இடத்தில், பேச வேண்டிய நேரத்தில் பேசி விடுவது தான் சரி.

    பதிலளிநீக்கு
  18. நெதவின் கதை நல்லா இருக்கு நாம்நினைப்பதுபோல் தான்கதையும் இருக்கு ம் ஆனால் கூட்டுக் குடும்பமா தனிக் குடும்பமா ஒருபட்டி மன்ற விஷயம்

    பதிலளிநீக்கு
  19. நேற்று நெல்லையின் நெல்லிக்காய்..
    இன்று நெல்லையின் வண்ணத்தமிழ்...

    சிலுசிலு.... என்றிருக்கிறது - பதிவு...

    பதிலளிநீக்கு
  20. கதையை ரசித்தேன் நான் அகிலாவின் கட்சிதான்.

    பதிலளிநீக்கு
  21. நெல்லை நெல்லை ஹையோ ஹையோ! நல்ல கதை நெல்லை எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பிடித்துவிட்டது....அகிலாவின் மனமே எனக்கும்....நிறைய இடங்களில் நான் அகிலாவாகத் தெரிந்தேன்...குறிப்பாகக் கல்லூரி....அவளது சிந்தனைகள்....

    இது ஐடியலிஸ்டிக் வ்யூ என்று சிலர் நினைக்கலாம். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. அகிலாவைப் போலும் இருக்கும் பெண்களை எனக்குத் தெரியும்....

    பொக்கே பொக்கே கொடுத்துட்டேன் உங்களுக்கு...இப்படியான ஒரு குடும்பம் வாவ்..

    கீதா

    பதிலளிநீக்கு
  22. “அப்பா.. எனக்குத் தேவையான சுதந்திரம் இங்கேயே இருக்குப்பா. கூட்டுக் குடும்பத்துல என்ன குறை? இடைல தனியா இருந்தோம்னா, ஒருவேளை அதுக்கு மனசு பழகிடுத்துன்னா, அப்புறம் திரும்பி எல்லாரும் ஒண்ணா இருக்கறது உங்களுக்கும் சங்கடமா இருக்கும். எங்களுக்கும் வித்தியாசமா இருக்கும்.//

    எஸ் எஸ் ரொம்பச் சரியான வார்த்தைகள். நெல்லை....என்றாலும் நாங்கள் சென்னைக்கு வந்த பிறகு மாமனார் மாமியார் எங்களுடனும் இருந்தார்கள். சந்தோஷமாக இருந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  23. எங்க பசங்க இந்த வீட்டுலதான் பொறக்கணும். பொறந்ததுலேர்ந்து அவங்க தாத்தா பாட்டியோடதான் இருக்கணும். இதுதாம்பா என்னோட ஆசை”//

    எனக்கு மிக மிகப் பிடித்த ஆசை இது. என் பொதுவான கருத்து... குழந்தைகள் தாத்தா பாட்டி உறவுடன் வளர்ந்தால் அது மிக மிக நல்ல ஆரோக்கியமான வளர்ச்சி. தாத்தா பாட்டிகளும் அப்படியான பக்குவத்துடன் இருக்க வேண்டும் என்றாலும்.....நான் என் சிறு வயதில் அதாவது 6 ஆம் வகுப்பு படிக்கும் வரை என் அப்பாவின் அம்மா அப்பா என் அப்பா அம்மா என்று தாத்தா பாட்டியுடன் வளர்ந்ததால் அதில் நான் கற்ற நல்ல விஷயங்கள் பல பல...இதோ இன்றும் உதவுகிறது. அந்தப் பாசப்பிணைப்பு சொல்லி முடியாது. நான் இறவனிடம் பல முறை நன்றி சொல்வேன் அவர்களை நினைத்துக் கொண்டு...

    கீதாக்கா கூடச் சொல்லியிருந்தாங்க. பட்டுக் குஞ்சுலுவுக்கு ஹனுமான் சாலிஸா பிடிக்கும் என்று போட்டுக் காட்டியது எல்லாம்....எஸ் இது போன்ற ஒரு சூழல் கண்டிப்பாகக் குழந்தைகளுக்கு வேண்டும் என்று நினைப்பவள் நான். அம்மா அப்பா இருவருமே வேலைக்குப் போகும் காலம் இது. தாத்தா பாட்டி விட்டில் இருந்து ஒரு வேளை அவர்களால் குழந்தையுடன் ஓட முடியவில்லை என்றாலும் குழந்தையைப் பார்த்துக் கொள்ள அதாவது ஃபிஸிக்கல் வேலைகளுக்குத் தாத்தா பாட்டிக்கு உதவியாக வைத்துக் கொண்டு ஆனால் தாத்தா பாட்டிகள் குழந்தைகளுக்கு நல்ல மாரல் கதைகள் சொல்லி நல்ல விதைகளை உன்றுவது மிக மிக அவசியம் என்பது என் தனிப்பட்டக் கருத்து.

    பெட் டைம் ஸ்டோரிஸ், க்ரான்ட்மா ஸ்டோரிஸ் என்று பல புத்தகங்கள் வருகின்றன இப்போது. இருந்தாலும் பாட்டி தாத்தா அருகில் படுத்துக் கொண்டு கதை கேட்கும் அந்தத் தருணங்கள் ஒரு குழந்தைக்குப் பல பாடங்களைச் சொல்லித்தரும். வல்லிம்மா கூடத் தன் பேரனைக் குறித்து அடிக்கடிச் சொல்லுவது மனதிற்கு மிகவும் மகிழ்வாக இருக்கும்...அக்குழந்தைகளும் கற்றுக் கொள்ளும் தங்கள் அம்மா அப்பாவை வயதான காலத்தில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று...

    இதற்கு பாட்டி தாத்தாவும் பக்குவமாக இருக்க வேண்டும் என்றும் சொல்லுவேன்...ஆனால் குடும்ப உறவுகள் தொலையும் இக்காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று

    நிறையச் சொல்லலம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  24. பேச வேண்டிய இடத்தில், பேச வேண்டிய நேரத்தில் பேசுவது மிக மிக முக்கியம்...சரியான வார்த்தைகள் நெல்லை...

    அது போல....//உண்மைல கஷ்டப்படற ஃபேமிலில உள்ளவங்கதான் தாங்க கஷ்டப்பட்டமாதிரி தன்னோட குடும்பமும் கஷ்டப்படக்கூடாதுன்னு நினைப்பாங்க. //

    இது சரிதான் என்றாலும் ஒரு சில இடங்களில் இது தவறாகிப் போகவும் செய்கிறது. அதுவும் சமீபகாலத்தில் ....

    கீதா

    பதிலளிநீக்கு
  25. நெல்லை ஒன்றே ஒன்றுதான் இதில் மகன் ஒரே மகன் என்பதால் ஓகேயாய்விட்டது. ஆனால் பல பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தில் கொஞ்சம் சிக்கலை வரவழைக்கிறது....புரிதல் இருந்தால் மட்டுமே சாத்தியமாகிறது. ஏனென்றால் அங்கு அம்மா அப்பாவின் சாய்ஸ் ஆஃப் மகன் என்றும் இருக்கிறது....அவர்களுக்கு இவர்களைப் பார்த்துக் கொள்ளப் பிடிக்கிறதோ இல்லையோ....அவர்களுக்கு அவ்வளவாகப் பிடிக்காத மகன்/மருமகள் என்றால் அவர்கள் வீட்டில் அவர்களோடு இருப்பது என்பதற்கான சாத்தியங்கள் குறைவு இத்தனைக்கும் அந்த மகனும் மரும்களும் அவர்களை வைத்துக் கொள்ள 100 சதவிகிதம் மனமுவந்து தயராக இருந்தாலும்....எனவே புரிதல் என்று இருந்தால் தாத்தா பாட்டியுடன் வளரும் அடுத்த தலைமுறை மிக மிகக் கொடுத்துவைத்தவர்கள்...

    கீதா

    பதிலளிநீக்கு
  26. நெல்லைத்தமிழன் பாராட்டுகள் வாழ்த்துகள். மிக மிக நல்ல கதை. அகிலாவின் முடிவு எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

    என் அம்மா அப்பாவும் எனக்கு அண்ணன்கள் இருந்தாலும் என்னுடன் தான் இறுதிக்காலம் வரை இருந்தார்கள். என் அக்காவும் (வாய் பேசமுடியாது காதும் கேட்காது பிறவியிலேயே) என்னுடன் தான் இருக்கிறார்கள். அவர்களை நாங்கள் பார்த்துக் கொள்ள அவர் எங்களைக் கவனித்துக் கொண்டு பல வகைகளில் உதவியாக வீட்டை நிர்வகித்துக் கொண்டு என்று என் குழந்தைகளிடமும் மிகவும் பாசமாகவும் கண்டிப்புடனும் இருப்பார். அவர்களும் அவரிடத்தில் அன்புடனும் சண்டை போட்டுக் கொண்டும் இருப்பார்கள். குழந்தைகள் பெரியவர்களுடன் வளருவது என்பது மிக மிக நல்லவிஷயம்.

    அருமையான கதை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  27. நெல்லைத்தமிழனுக்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி. கல்லூரிக்காலம் (1975-79)முதல் நான் ஓவியர் ஜெ.யின் ரசிகன். அவருடைய ஓவியக்ளைப் பார்த்ததும் வியப்பாக இருந்தது. பின்னர்தான் கதாசிரியர் கூறிய கருத்தின்மூலமாக பிறிதொரு இடத்திலிருந்து அவருடைய ஓவியங்கள் எடுத்து கையாளப்பட்டுள்ளன என்பதை அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  28. இப்படி எல்லாருமே நல்லவங்களா இருந்திட்டா கூட்டு குடும்பம் ஏன் உடையுது?!

    பதிலளிநீக்கு
  29. மனம் மகிழ்வு தரும் கதை...நன்று..

    பதிலளிநீக்கு

  30. “என்னங்க…எப்படி இப்படி சரியா கணிச்சிருக்கீங்க. நான் கார்த்திக்குக்கு அகிலாவை முடிவுபண்றதுக்கு முன்னால சந்தேகமாச் சொன்னதுக்கு, இவதான் நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணுன்னு எப்படி கரெக்டா சொன்னீங்க”//

    மாமா மருமகளை சோதித்துப் பார்க்கதான் தனிக்குடித்தன பேச்சை ஆரம்பித்தாரா?

    மருமகளின் அம்மா தனியாக இருக்கிறார் , கூட்டுக்குடும்பத்தில் இருந்தால் அவர்கள் மகளைப் பார்க்க வந்து தங்க முடியாது கஷ்டபடுவார் என்று தனிக்குடித்தனம் இருக்க சொன்னார் போலும் என்று நினைத்தேன்.

    //அம்மா தனியா இருப்பாள் என்று தோன்றியது, ஆனால் அம்மா, தான் தன்னைப் பார்த்துக்கொள்வதாகவும், அகிலா, புகுந்தவீட்டில் நல்லா நடந்து நல்ல பேர் வாங்கினாலே தனக்குப் போதும் என்று சொல்லிவிட்டாள்.//


    உள்ளூரில் இருப்பதால் அடிக்கடி அம்மாவைப் பார்த்துக் கொள்கிறார், மருமகனும் மகளும் சேர்ந்து வந்து பார்த்து போவது மகிழ்ச்சிதான்.

    அம்மாவின் ஆசைபடி மகள் நல்ல பேர் வாங்கி விட்டாள்.


    //நாளைக்கு எங்களுக்கு கொழந்தைங்க பொறந்தா, அவங்க தாத்தா, பாட்டி இருக்கற கூட்டுக்குடும்பத்துலதான் வளரணும்னு நினைக்கிறேன்”//

    அகிலா சொல்வது உண்மைதான். தாத்தா, பாட்டியுடன் குழந்தைகள் இருக்கும் போது நிறைய நண்மைகள் உண்டு.

    கதை அருமையாக இருக்கிறது.

    வாழ்த்துக்கள்.
    இப்போது உள்ள கால கட்டத்தில் இப்படி இருக்க முடிவது இல்லை, இருக்க முடிந்தவர்கள் பாக்கியவான்கள்.

    நல்ல மாமனார், ந்ல்ல மாமியார், நல்ல கணவன் அமைந்து விட்டால் அதைவிட பெண்ணுக்கு சொர்க்கம் வேறு எதுவும் இல்லை.






    பதிலளிநீக்கு
  31. நல்ல ஆதர்சமான கதை. வரும் மருமகளும்,மாமனாரும் இப்படிப்பட்ட குணமாக இருந்தால் ஸரியான குடும்பமாக அமைந்து விடும். புகுந்த வீட்டு மனிதர்களே அலர்ஜி என்று, மனக்கணக்கு போட்டுவிடும் பெண்களாக இருந்தால், ஓட்டத்திலேயே இருப்பார்கள். ஒன்றிற்கு அதிகமாக பரிவாரம் இருந்து விட்டால், நெல்லின் நாற்றைப் பிறஇடங்களில் பிரித்து நட்டுப் பயிர் செய்வதுபோல ஆரம்பத்திலேயே தனிக்குடும்பம் நடத்த அனுமதி கொடுத்து விடுவது நல்லது. அழகு குடும்பம்.புவனா,அகிலா எல்லோர் வீட்டிற்கும் இம்மாதிரி வேண்டும்.
    பேசவேண்டிய நேரத்தில்,பேசவேண்டியதைப் பேசவேண்டியது முக்கியம்தான். நல்ல முறையில். பேசியாகிறது. வேலைக்குக் கட்டாயம் போவேன். தனிக்குடும்பந்தான். தப்பாகச் சொல்லவில்லை. காலம் இப்படியாகி விட்டது.
    எல்லாவற்றையும் தள்ளிவிட்டு, பேரன் பேத்திகளுக்கு அவசியகாலங்களில் தானாக உதவும் தாத்தா,பாட்டிகளும் இருக்கிரார்கள். உங்களின் கதை மனது நிறைகிறது. அகிலாக்களை வரவேற்போம். இருக்கும் அகிலாக்களைப் பாராட்டுவோம்.
    என் ஸெலக்க்ஷன் நல்ல ஸெலக்க்ஷன். அன்புடன்

    பதிலளிநீக்கு
  32. அன்புள்ள நெல்லைத்தமிழன் உங்கள் உடல் நலம் கவனித்துக் கொள்ளுங்கள். அது மிகவும் முக்கியம். ஆசிகள் அன்புடன்

    பதிலளிநீக்கு
  33. ஆஹா என்ன இது நெல்லைவாரமோ?:)..

    //
    ‘உன்னை மாதிரி தேவதை மனைவியா வந்தா.. மூடுக்கு என்னடி கொறச்சல்’. ‘ஸ்..அப்பா.. இந்த மீசை ரொம்பக் குத்தறது’ சிணுங்கினாள் அகிலா.//

    எனக்கொரு டவுட்டூஊஊ:) இது அகிலாவோ தமனாக்காவோ?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:) மீ கதைக்குள் குதிக்கிறேன்:)..

    பதிலளிநீக்கு
  34. கதையிலே சகுனி:) ஆரும் வந்திடாமல்.. மிக அருமையான கதாபாத்திரங்களைப் போட்டுக் கதையை முடிச்சிட்டார் கதாசிரியர். அழகிய உரையாடல்.. அலுப்பு இல்லாமல் படிக்க முடிந்தது கதை.

    இப்பூடி எல்லோருமே நல்லவிங்களாக:) இருந்திட்டா வாழ்க்கையில் பிரச்சனைக்கு இடமேது?.. கூட்டுக் குடும்பம் ஏன் குலையுது?... ஆனா இப்பூடி எல்லோராலுமே இருக்க முடியுதா?.. அருகிலே அம்மா தனிய இருக்கிறா.. அவவைக் கூட எட்டிப் பார்க்காமல் மூன்று மாதத்தில மூணே மூணு தடவைதானே போய் வந்திருக்கிறா அகிலா?:) இது நல்ல முறையாஆஆஆஆஆஆஆஆஆ?:)).. மாமா சொலியும் தனியே போக மாட்டாவாம் அவ்ளோ நல்ல மருமகளாம் ஹையோ ஹையோ:)).. நில்லுங்க இன்னும் இருக்கு:))

    பதிலளிநீக்கு
  35. எப்பூடித்தான் எல்லோரையும் நல்ல கரெக்ட்டராகக் காட்டி கதையை முடிச்சாலும்.. அகிலாவுக்கு கில்லர்ஜி ஓடிவந்து சப்போர்ட் பண்ணினாலும்.. மீ ஒத்துக்கவே மாட்டேன்ன்ன்ன்:))..

    அதாவது ஒரே ஒரு மகன்.. சொந்த வீடு இருக்கு.. மாமாவுக்கு பென்ஷன் வருது.. கணவருக்கு பெரிய வருமானம் எனச் சொல்ல முடியாது.. அதிலும் மாமாவும் மாமியும் தங்கமானவர்கள்.. அப்போ இப்படி ஒரு வாய்ப்பை கைநழுவ விட்டிட்டு ஆராவது தனிக்குடித்தனம் போவினமோ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அகிலா புத்திசாலீஈஈஈஈஈஈ அதனாலதான் கிட்னியை ஊஸ் பண்ணி அம்மாவைக்கூடப் பார்க்க அடிக்கடி போயிடாமல்:)).. கணவர் வீடே சொர்க்கம் என இருக்கிறா:))..

    இந்த சொர்க்கத்தை விட்டு தனிக்குடித்தனம் போனால் என்ன ஆவுறது?:) என அகிலாவுக்குத் தெரியாதோ?:)).. தனியே போனீங்கதானே போங்கோ.. என் சொத்தை எல்லாம் ஏதாவது ஆச்சிரமத்துக்கே எழுதி வச்சிடுறோம் என மாமா மனம் மாறிட்டால்ல்?:)... அதனாலதானே சொல்றா.. கொஞ்சக்காலம் தனிக்குடித்தனம் இருந்திட்டா பின்பு சேர்ந்து வாழும் ஆசை உங்களுக்கும் வராது மாமா என:) ஹையோ ஹையோ இது தெரியாமல் எல்லோரும் அகிலாவைத் தூக்கி வச்சுக் கொண்டாடுறாங்கோஓஓஓஓஓஓஒ:))

    பதிலளிநீக்கு
  36. இதே அகிலாவை.. ஒரு பொல்லாத மாமா மாமி வீட்டில விட்டு 4 நாத்தனார்.. 2,3 மச்சான் உள்ள குடும்பத்தில விட்டிட்டு இதே தனிக்குடித்தனம் போங்கோ எனும் வார்த்தையைச் சொல்லிப் பாருங்கோ பார்ப்போம்ம்:)).. துண்டைக் காணம் துணியைக் காணம் என ஓடிடுவா:)).. ஹா ஹா ஹா எனக்கும் இண்டைக்கு என்னமோ காத்துக் கருப்புப் பட்டிட்டுதுபோல:)) கல்லெறிகள் வர முன் மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏப்ப்ப்ப்ப்ப்ப்:))

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் சகோதரரே

    கூட்டு குடும்பத்தின் சிறப்பை உணர்த்தும் நல்ல கதை. எல்லா வீடுகளிலும் அகிலா மாதிரி ஒரு நல்ல பெண் மாட்டுப் பெண்ணாக அமைந்து விட்டால், மிகவும் நன்றாக இருக்கும்.

    //கூட்டுக் குடும்பத்துல என்ன குறை? இடைல தனியா இருந்தோம்னா, ஒருவேளை அதுக்கு மனசு பழகிடுத்துன்னா, அப்புறம் திரும்பி எல்லாரும் ஒண்ணா இருக்கறது உங்களுக்கும் சங்கடமா இருக்கும். எங்களுக்கும் வித்தியாசமா இருக்கும். எனக்கு உங்களோடயே இருக்கணும்னுதாம்பா ஆசை.
    நானும் ஏதேனும் தவறு பண்ணிடலாம். அப்பா அம்மா மாதிரி நீங்கதான் அதைப் பொறுத்துக்கணும், தவறை சொல்லித் திருத்தணும். எங்க பசங்க இந்த வீட்டுலதான் பொறக்கணும். பொறந்ததுலேர்ந்து அவங்க தாத்தா பாட்டியோடதான் இருக்கணும். இதுதாம்பா என்னோட ஆசை”//

    நீர் அடிச்சு நீர் விலகாது. இருந்தாலும் பிரிந்த உறவு சேர்ந்து பழையபடிக்கு சகஜமாக இருக்க இயலாது. அதில் கிடைக்கும் சௌகரியங்களை மனம் அலசும் போது அசௌகரியங்கள் காணாமல் போய் விடும். உண்மையான வார்த்தைகள்.,'பொறந்ததுலேர்ந்து அவங்க தாத்தா பாட்டியுடனதான் வளரனும் இதுதான் என்ஆசை.' இந்த இடம் நெகிழ்வை தந்தது. சிறப்பான முடிவு. நெல்லைத் தமிழன் அவர்களின் நல்ல கதைக்கு பாராட்டுக்கள் நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  38. Turn off for: Tamil
    http://engalblog.blogspot.com/2018/04/blog-post.html

    //காசுங்கறது வாழ்க்கைல எப்போ வேணும்னாலும் வரும்.. எப்போனாலும் போகும். ஆனா நல்ல மனசுள்ளவங்கதான் அபூர்வம்.//

    நமக்கு நம் ’நெல்லைத் தமிழன்’ மாதிரி ஒரு பாஸிடிவ் கதை எழுத்தாளரைக் கொடுத்ததுக்கு ஆண்டவனுக்குத்தான் நாம் நன்றி சொல்லணும்.

    //நீ Greatடா கார்த்திக்//

    நீ(ங்களும்) GREAT தான் நெல்லைத் தமிழன் ஸ்வாமீ

    //“ம்ம்ம். எனக்கு வேலை வச்சுட்டயா இப்போ”//

    ம்ம்ம்ம். எனக்கும் இந்த பின்னூட்டம் அனுப்பிவைக்கும் வேலை வச்சுட்டீங்களே ஸ்வாமீ.

    ’கார்த்திக்’க்கு அப்படி என்னதான் வேலை வைத்து விட்டாள் அந்த ’அகிலா’ என்பதை அறிவிக்காமல், கதையை ஒருவித சஸ்பென்ஸ் கொடுத்து முடித்துள்ளதால், என் மண்டையே வெடித்து விடும் போல உள்ளதே ..... ஸ்வாமீ ! :)))))

    எழுத்தாளருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  39. வெளியிட்ட எங்கள் பிளாக் ஶ்ரீராமுக்கு நன்றி.

    இன்று இன்டர்னெட் இல்லாமல் இப்போதான் வந்தது. விரைவில் பதிலெழுதறேன்.

    பதிலளிநீக்கு
  40. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா சாம்பசிவம் மேடம்.

    கஷ்டப்படற குடும்பத்திலே இருந்து வரும் பெண்கள் ரொம்பவே மோசமா நடந்துக்கறாங்க. - எதையும் நான் எழுதியதுபோல் பொதுப்படுத்திவிட முடியாது. பெண்ணின் (அதாவது திருமணம் செய்துகொடுத்தபின்) நடத்தைக்கு அவளின் பெற்றோர்தான் முழுப் பொறுப்பு. நாற்றை வேறிடத்தில் நட்டால், நம் உறவு நாற்றுடன் அல்ல, நாற்று+'நிலம் இரண்டும்தான். இதனைப் பிரித்துப் பார்க்க முடியாது (எக்செப்ஷன் தவிர. அதாவது பெண்ணைக் கொடுமைப் படுத்தினால், அவளுடைய ரெஸ்கியூவிற்குப் போகலாம் மற்றபடி, அவர்கள் குடும்பத்தில் தலையிடக்கூடாது. ஆலோசனையும் நாம் மருமகனிடம்தான் சொல்லணும், அதுவும் அவர் கேட்டால்.)

    ஆனாலும், எப்படி எழுதினாலும், உங்கள் அனுபவத்தில் வேறு மாதிரி பலரைப் பார்த்திருப்பீர்கள். உங்களைத் திருப்திப்படுத்த இயலுமா?

    பதிலளிநீக்கு
  41. துரை செல்வராஜு சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    உங்கள் கருத்து ஏதோ பட வசனம் போல் தெரிகிறதே (பேசு சாந்தா பேசு என்று முடிவதுபோல்)

    பதிலளிநீக்கு
  42. கீசா மேடம் - பேச வேண்டிய சமயத்தில் பேசி சரியான பதிலை/கருத்தைச் சொல்லணும் - இது எல்லோருக்கும் வராது. கோழை மனது உள்ளவர்கள், பிறர் மனதை எதற்கு நோகடிக்கணும் என்று நினைப்பவர்கள், நமக்கு எதுக்கு வேண்டாத பகை என்று எண்ணுபவர்கள், நேரடியாக பகைத்துக்கொள்ள ரெடியாக இல்லாதவர்கள், பேச வேண்டிய சமயத்தில் தைரியமாகப் பேச மாட்டார்கள். என் பெண்ணை நான் லைக் பண்ணுவதற்கு முதற் காரணம் அவள், அவ மனசுல என்ன கருத்து இருக்கோ அதை பட் என்று சின்ன வயசு (9+) முதலே சொல்லிடுவாள். அப்படி டிரான்ஸ்பேரன்ட்டா இருந்தால் நமக்கு அவங்க கருத்து தெளிவாத் தெரிஞ்சுடும், நாம தவறுனா திருத்திக்கலாம் உடனே. என் பையன் என் மனசு நோகும்படி பெரும்பாலும் சொல்ல மாட்டான், நான் சொல்வது தவறாக இருந்தாலும்.

    பதிலளிநீக்கு
  43. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தில்லி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  44. ஜிஎம்பி சார்... உங்கள் கருத்து சரி. ஜஸ்ட் லைக் தேட், இது நல்லது அது கெடுதல்னு சொல்லமுடியாது. எதுவா இருந்தாலும் (தனிக்குடித்தனம்னா நான் கணவரின் அப்பா அம்மாவை வைத்துக்கொள்வதையும், கூட்டுக் குடும்பம்னா சகோதரர்கள் எல்லாம் சேர்ந்து இருப்பதையும் நினைக்கிறேன்) அதை ஏற்றுக்கொண்டு சாதக பாதகங்களைப் பற்றிக் கவலை கொள்ளாமல் வாழணும்.

    பதிலளிநீக்கு
  45. துரை செல்வராஜு சார்.. இப்போல்லாம் உங்கள் எழுத்தில் கவிதை மாதிரி வசனம் வருது. நேற்றைக்கு என் மறுமொழிக்கு பதிலைக் காணோமே?

    பதிலளிநீக்கு
  46. வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  47. எழுதும்போதே எனக்குத் தெரியும் கில்லர்ஜி.. உங்களுக்கு இது பிடிக்கும் என்று. ஆனால் வாழ்க்கையில் நாம் விரும்புவது மட்டுமா நடக்கிறது? நன்றி.

    பதிலளிநீக்கு
  48. தில்லையகத்து கீதா ரங்கன் - உங்கள் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் வாழ்க்கையில் நன்றாகவே இருப்பீர்கள், அத்தகைய நல்ல குணங்களோடு இருப்பதால். உங்கள் கருத்துக்கள் எல்லாம் அருமை.

    கடைசிக் கருத்தான, மாமனார்/மாமியாருக்கு பல பிள்ளைகள் இருந்தால், அதில் ஆணும் பெண்ணும் இருந்தால் போன்றவை நீங்கள் அனுபவத்தோடு சொல்கிறீர்கள் என்று புரியவைத்தது. எந்தப் பெற்றோருக்கும் அவர்களின் குழந்தைகளில் ஒருவரை மிகவும் பிடிக்கும். அது மற்றவர்களுக்கு சங்கடம்தான். வரும் மருமகள்களும் வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்தவர்கள். எல்லாம் குழப்பத்தைத்தான் உண்டாக்கும். இதை நான் என் குடும்பங்களிலும் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  49. கீதா ரங்கன் - சாய்ஸ் மகன் என்பதுகூட ஓகேதான். ஆனால் கம்பேர் செய்து இங்கு அவர்களைப் பற்றிப் பேசறது, அங்கு இவர்களைப் பற்றிப் பேசறது, ஒரு மகன் செய்யும் தவறை எப்போதும் நல்லதாகவே சொல்றது, மற்றவன் செய்யும் சிறிய குறைகளை மட்டும் ஹைலைட் செய்து பேசறது என்று இருக்கும் அம்மாக்களையும் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  50. தில்லையகத்து துளசிதரன் சார் - உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    குழந்தைகள் பெரியவர்களுடன் வளருவது என்பது மிக மிக நல்லவிஷயம். - இது உண்மைதான். உறவினர்களிடம் வளரும்போது நம் குலத்தின் பண்புகள் வரும் (குலம் என்பது நம்ம ஒவ்வொருத்தர் வீட்டுப் பழக்க வழக்கங்கள்). இன்றைக்கு குழந்தைகளுக்கு மாமாவோடு நல்ல நட்பு இருக்கும்போது, நாளை மாமா வயதாகும்போது அவர்களையும் பரிவுடன் கவனித்துக்கொள்ளும் எண்ணம் வரும். நான் சொல்றது, உறவினர்களோடு நெருக்கம் உண்டாகும்.

    உங்கள் கருத்தைப் படித்ததும் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. ( நான் செய்த தவறு அது). ஆரம்பத்தில் இன் சார்ஜாக இருந்தபோது, ஒரு வாய் பேச முடியாத, காது கேளாத பஹ்ரைனி ஒருவனை என்னுடைய ஆபீசில் சேர்த்துக்கொண்டேன். அவனுக்கு ஒரு வேலை, வார ஆரம்ப நாளில் எல்லா ஸ்டாபிடமிருந்தும் (என் டிபார்ட்மென்ட்) முந்தைய வார வேலை விவரங்களை கலெக்ட் செய்து கம்பைல் பண்ணி எனக்குக் கொடுக்கணும். அவன் நல்லாத்தான் பண்ணிக்கொண்டிருந்தான், ஆனால் நிறைய நேரம் அவன் தூங்க ஆரம்பித்துவிட்டான் ஆபீசில். சொல்லியும் கேளாமையால், அவனை வேலையை விட்டு நீக்கும் முடிவை எடுத்து செயல் படுத்தினேன். அவனுக்கு போக இஷ்டமில்லை. என் ஆபீசில் கண்ணிருடன் போக மாட்டேன் என்று சொன்னான். (அவனை ஆபீசை விட்டு நீக்கிவிட்டேன்). சில நாட்களில் அவன் அப்பா என்னிடம் போன் செய்து அவன் இரவில் படிக்கிறான், அதனாலும் அவன் பகலில் தூங்கிவிடுகிறான் என்றெல்லாம் விவரித்தார். அவனுக்கு உடனேயே வேறு கம்பெனியில் வேலை கிடைத்துவிட்டது, ஆனாலும் என்னால் நான் தெரியாமல் செய்த தவறைத் தாங்க இயலவில்லை. ரொம்பவும் வருத்தப்பட்டேன். எனக்கு முன்னமேயே விஷயம் தெரிந்திருந்தால் நிச்சயம் அவனை என் டிபார்ட்மென்டிலேயே வைத்துக்கொண்டிருப்பேன். நினைக்கும்போதெல்லாம் நான் அவனை வேலையை விட்டு நீக்கிய தவறை எண்ணி வருத்தப்படுவேன். இது நடந்து 16 வருடங்களாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  51. முனைவர் ஜம்புலிங்கம் சார்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பதின்ம வயதிலும் கல்லூரிக் காலங்களிலும் ஜெ. ஓவியத்தையும், சுஜாதா போன்றவர்கள் கதைகளையும் ரசிக்காதவர் யார்? ( நான் கல்லூரிக் காலத்தில் யூனிவர்சிட்டி லைப்ரரியில் சுஜாதாவின் கதைகளைப் படித்தவன். ஜெ. ஓவியங்களைப் பார்த்து (குமுதம், விகடன், சாவி, இ.பேசுகிறது போன்று) வரைந்துபார்த்தவன்.

    பதிலளிநீக்கு
  52. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை.

    பதிலளிநீக்கு
  53. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனுராதா ப்ரேம் குமார்.

    பதிலளிநீக்கு
  54. வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி கோமதி அரசு மேடம்.

    மாமனார் சோதித்துப் பார்ப்பதுபோல் அமைந்தது என் எழுத்துக் குறை. நல்ல மனதில் மாமனார் சொல்வதுபோல்தான் நான் நினைத்திருந்தேன். (அதனால்தான் வாரம் ஒரு வேளை அவர்கள் வெளியில் செல்லவேண்டும், ஹோட்டலில் சாப்பிடணும் என்றெல்லாம் அமைத்திருந்தேன்)

    எல்லோரும் பெரும்பாலும் நல்லவர்கள்தான். அவர்களைப் புரிந்துகொள்ள முயன்றால் எதுவும் சுகமாகும்.

    பதிலளிநீக்கு
  55. காமாட்சியம்மா - உங்கள் வருகையும் கருத்தும் மனதை நெகிழச் செய்கிறது.

    திருமணத்துக்கு முன்பே எல்லாவற்றையும் பேசிக்கொள்வது நல்லது. என் சொந்தக் கருத்து, எந்தக் காரணம் கொண்டும் பெண்ணின் பெற்றோர்கள், அவள் வாழ்க்கையில் தலையிடுவதோ, அல்லது அவளின் குடும்பத்துக்குப் பாதகமான கருத்துக்களைச் சொல்லிக்கொடுப்பதோ (மகளின் நன்மைக்காக) மிகவும் தவறு. இன்றைக்கு அவள் அதைச் செயல்படுத்தினாலும், தன் காலம் வரும்போது, தம் பெற்றோர்க் இவ்வளவு மோசமாக இருந்திருக்கிறார்களே என்று நிச்சயம் எண்ணுவாள். பெரியவர்கள், நல்லனவே செய்ய, சொல்ல வேண்டும்.

    பெரும்பாலும் மாமியார்கள் செய்வது, ரொம்ப கன்ட்'ரோல் பண்ணறது, ரொம்ப அட்வைஸ் பண்ணறது, கட்டுப்பாடுகள் விதிக்கிறது போன்ற தவறுகள்தான். 18 வயசுக்கு மேல் உள்ள பெண்ணைத்தான் தன் பையனுக்குத் திருமணம் செய்கிறோம். அவள் பெரியவள், தேவையில்லாமல் டீச்சர் வேலையை அவளுக்கு தான் பார்க்கக் கூடாது என்று மாமியாருக்கு நிச்சயம் தெரியவேண்டும் என்பது என் எண்ணம். (காரணம், காலம் வெகு வேகமாகப் போய், மருமகளின் உதவி தேவைப்படும். அந்தச் சமயத்தை மனதில் நினைத்து ஃப்ரெண்ட்லி அப்ரோச் வேண்டும் என்று நான் நினைக்கிறேன்). இது தவறா இல்லையா என்று நீங்கள் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  56. காமாட்சி அம்மா.. உங்கள் ஆசிகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  57. வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி அசோகன் குப்புசாமி.

    பதிலளிநீக்கு
  58. நல்ல மனதில் மாமனார் சொல்வதுபோல்தான் நான் நினைத்திருந்தேன்.//
    நல்லது நெல்லைத்தமிழன்.
    கல்யாணம் செய்து கொண்ட புதிதில் அங்கு போணும், இங்கு போணும் என்ற எண்ணம் வரும்தான் அதுதான் மாமனார் சொல்கிறார்.

    மாமியாரும், மாமனாரும் பேசும் உரையாடலை கேட்டு
    நான் தான் தவறாக புரிந்து கொண்டு விட்டேன்.

    எல்லோரும் பெரும்பாலும் நல்லவர்கள்தான். அவர்களைப் புரிந்துகொள்ள முயன்றால் எதுவும் சுகமாகும்.

    உண்மை தான் நீங்கள் சொல்வது புரிதல் இருந்தால் எல்லா உறவுகளும் சுகம்தான்.


    உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் நெல்லைத்தமிழன்.
    கழுத்து வலி இருந்தாலும், காதில் ஏதாவது தொந்திரவு இருந்தாலும் மயக்கம் வரும்.
    கவனித்துக் கொள்ளுங்கள் நேரம் கிடைத்தால் கழுத்து பயிற்சிகள் செய்யுங்கள்
    குடும்பத்தினர்களுடன் மகிழ்ச்சியாக இருங்கள்.
    வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன்.

    பதிலளிநீக்கு
  59. அதிரா... உங்கள் வருகைக்கும் பல பின்னூட்டங்களுக்கும் நன்றி.

    உங்களுக்குத் தெரியும் நல்ல புகுந்த வீடு என்பது பெண்ணுக்கு எவ்வளவு சுகம் என்று. இருந்தாலும் நிறைய கலாய்த்திருக்கிறீர்கள். ரசித்தேன்.

    அவவைக் கூட எட்டிப் பார்க்காமல் - இது முக்கியம். நாற்று நன்றாக பதிவதற்கு முன்பு, தன் பிறந்த வீட்டுக்கு அடிக்கடி போவது நல்லதில்லை அல்லவா? முழு நம்பிக்கையும் அன்பும் வர ஒரு வருடமாவது தேவையல்லவா?

    என் சொத்தை எல்லாம் ஏதாவது ஆச்சிரமத்துக்கே எழுதி வச்சிடுறோம் - அடப் பாவீ... இப்படி ஒரு நினைப்பா? எனக்கு எப்போதுமே, அடுத்தவர்கள் பணம் நமக்குத் தேவையில்லை என்ற கான்செப்ட். வெறும் பணம் ஒருவரை நல்லவராக்காது. அன்பு மட்டும்தான் பாசத்தை நேசத்தை வளர்க்கும்.

    ஆமாம்... நீங்கள் ஏஞ்சலினை மிரட்டி இருக்கிறீர்களா? அவர் இந்தப் பக்கம் காணவில்லையே. பாக்கி உள்ள சம்பளத்தை அவருக்குக் கொடுத்துவிடுங்கள். அதனால்தானோ என்னவோ அவர் ஏதோ சாக்குகளைச் சொல்லி இங்கு வரவில்லை. இன்னும் சில நாட்களில் (அதிகமில்லை ஜென்டில் உமன்..300 நாட்கள்தான்) கிறிஸ்துமஸ் வந்துவிடும். அப்புறம் எப்போதும்போல் க்வில் வேலை என்று காணாமல் போய்விடுவார்.

    பதிலளிநீக்கு
  60. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன்.

    என் மனைவியும் சொல்லுவாள். கணவன் இன்னொரு இடத்தில் வேலை பார்த்து தனியா இருந்து பழகுவதே நல்லதில்லை என்று. (ஓரு உறவினர் வெளி நாட்டில் வேலை பார்த்து, குடும்பத்தை சென்னையில் வைத்திருந்தார். பிறகு வேலை முடிந்து 58 வயதில் வந்தபிறகு குடும்பத்துடன் ஒன்ற முடியவில்லை. இப்போ தனி வீட்டில் இருக்கார்). கண்ணாடிப் பாத்திரம் எப்போதும் உடையக் கூடாது. உடைந்தால் ஒட்டுவது கடினம்.

    பதிலளிநீக்கு
  61. வருக கோபு சார். உங்கள் கருத்தை ரசித்தேன்.

    'எழுத்தாளர்' - இதைப் படிக்கும்போது எனக்கு ஸ்ரீராம் தான் ஞாபகம் வந்தது. அவர் சொல்லி ஊக்கப்படுத்தியிராவிட்டால் முதல் கதையையே நான் எழுதியிருக்கமாட்டேன்.

    வச்சுட்டீங்களே ஸ்வாமீ. - என்னை என் வாழ்க்கையில் யாரேனும் ஸ்வாமீ என்று சொல்லும்போது எனக்கு உங்கள் நினைவுதான் வரும்.

    ’கார்த்திக்’க்கு அப்படி என்னதான் வேலை வைத்து விட்டாள் - ம்க்கும்... அதைத் தெரிஞ்சுக்கணுமா? டிபிகல் கோபு சார் குறும்பு. அதுவும், 'சீக்கிரமேவ நீங்கள் இருவரும் எனக்கு மாமனார்/மாமியாராக ப்ராப்திரஸ்து' என்று சொல்லி யாரோ இருவரை விழுந்து வணங்கும் குறும்பு உள்ளவருக்கு இதைக் கண்டிப்பா சொல்லிடவேண்டியதுதான். ஆனால் இங்கு ஸ்வீட் 16களும் வல்லிம்மா, காமாட்சியம்மா போன்ற குழந்தைகளும், கோமதி அரசு மேடம் போன்ற சிவனடியார்களும் இருக்கின்றார்களே. அதனால் ஓபனா எழுத முடியவில்லை.

    நீங்கள் இணைய ஜோதியில் ஐக்கியமாகுங்கள்.

    பதிலளிநீக்கு
  62. கோமதி அரசு மேடம் உங்கள் மீள் வருகைக்கு நன்றி.

    பொதுவா நான் உடல் பயிற்சிகளைச் செய்பவன். நேரம் சரியில்லை என்பதுதான் காரணம். தங்கள் கனிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  63. @ நெல்லை தமிழன்

    தாமத வருகைக்கு முதலில் பென்ச் மேலேறி சாரி கேட்டுக்கறேன் :)

    காரணம் என்னானு ஸ்ரீராம் வீட்டு கொசு காலில் லெட்டர் அனுப்ப லாமான்னு மல்ட்டி கிட்ட கேட்டுட்டு அனுப்பறேன் :)

    இப்போ முதலில் நெல்லி தொக்கை டேஸ்ட் செஞ்சிட்டு அப்புறம் இங்கே இங்க வரேன்



    பதிலளிநீக்கு
  64. //அப்புறம் கார்த்திக் அவர் ரூமுக்குபோயிடுவார். //

    வாசித்துக் கொண்டு வரும் பொழுதே, இந்த இடத்தில் ஒரு சின்ன தயக்கம் ஏற்பட்டது. ஒரு அப்பா விட்டுப் போயிடுத்து போலிருக்கு கார்த்திக் அப்பா அவர் ரூமுக்குப் போயிடுவார் என்று இருந்திருக்க வேண்டுமோ?..

    பதிலளிநீக்கு
  65. ஆஹா ! எனக்கு பிடிச்சதே இந்த நெகட்டிவிட்டி இல்லாத ஸ்டோரீஸ் .
    ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க .
    அகிலாவின் அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட் போல .ஒருவேளை அகிலா புகுந்த வீட்டினருடன் அன்னியோன்யமா பழக இதுவும் ஒரு ரீஸனாக இருக்கலாம் .
    எனக்கும் மாமனார் மாமியார் கூட இருக்கணும்னு கொள்ளை ஆசை ஆனால் கொடுப்பினை இல்லை

    பதிலளிநீக்கு
  66. ///உண்மைல கஷ்டப்படற ஃபேமிலில உள்ளவங்கதான் தாங்க கஷ்டப்பட்டமாதிரி தன்னோட குடும்பமும் கஷ்டப்படக்கூடாதுன்னு நினைப்பாங்க. //
    இந்த விஷயத்தில் நானும் கீதாக்காவுடன் ஒரே கோட்டில் நிற்கிறேன் ..தான் கஷ்டப்பட்ட மாதிரி தனது குடும்பம் கஷ்டப்படக்கூடாது என நினைக்கும்போது ஒரு தற்காப்பு பின்னால் வரப்போவதை தடுக்க நினைத்தும் சிலர் குணம் மாறலாம் தான் தன் கணவன் பிள்ளைகள்னு நினைக்க சான்சும் இருக்கே .

    ஆனால் உங்க ஹீரோயின் நிச்சயம் நல்ல மனசுள்ளவர் என்று ஆழ் மனது அடிச்சி சொல்லுது

    பதிலளிநீக்கு
  67. குழப்பமில்லாத ஆற்றோட்டமான எழுத்து. பதிவு தள எழுத்து அல்ல, பத்திரிகையிலே பிரசுரமாக தகுதி உள்ள எழுத்து என்பது என் அபிப்ராயம்.

    //“சரிம்மா… இந்த விஷயத்தை இத்தோட விட்டுடலாம். இன்னொரு நாள் சாவகாசமா பேசிக்கலாம். இப்போ எப்போதும்போல சிரிச்ச முகமா வச்சுக்க”

    அத்துடன் அன்று அந்தப் பேச்சு ஓய்ந்தது.//

    இந்த இடத்தில் ஒரு 'திடுக்' ஏற்பட்டது உண்மை. அடுத்து ஒரு குண்டைப் போடுவதற்கு கதாசிரியர் தீர்மானித்து விட்டார் என்று நினைக்கையில் ஏமாற்றி விட்டார்.

    ஒரு கதைக்கு ஒரு சின்ன 'நாட்' போதும் என்று அவர் நினைப்பது தான் காரணம். அகிலா, அவள் அம்மா, ப்ரண்ட் கலா, கார்த்திக், அவன் அப்பா, அம்மா இத்தனை பேர் அறிமுகமாகியும் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாத பாஸிடிவ் பார்வை. அதற்காகவே கதாசிரியரைப் பாராட்ட வேண்டும்.

    ஆனால் நெகட்டிவ் பார்வையை ஏற்படுத்தி, என்ன ஆகுமோ என்று வாசிப்பரை திகைக்க வைத்து
    அந்த நெகட்டிவ்வை பாசிட்டிவாக ஆக்கி, வாசிப்பரை ஏமாற்றுவது தான் கதையுலக சித்தாந்தம் என்று ஆகிப்போன பத்திரிகை வாசிப்பாளர்களுக்கு 'சப்'பென்று இருக்கும் தான்.

    ஆனால் எந்தக் குழப்பமும் இல்லாத கதை நேர்த்தியில் நெல்லை நிமிர்ந்து நிற்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  68. //பேச வேண்டிய சமயத்தில் பேசி சரியான பதிலை/கருத்தைச் சொல்லணும் - இது எல்லோருக்கும் வராது. கோழை மனது உள்ளவர்கள், பிறர் மனதை எதற்கு நோகடிக்கணும் என்று நினைப்பவர்கள், நமக்கு எதுக்கு வேண்டாத பகை என்று எண்ணுபவர்கள், நேரடியாக பகைத்துக்கொள்ள ரெடியாக இல்லாதவர்கள், பேச வேண்டிய சமயத்தில் தைரியமாகப் பேச மாட்டார்கள்.//

    யாரை சொல்றீங்க :)

    பதிலளிநீக்கு
  69. @மியாவ் அதிரா

    //athira said...
    கதையிலே சகுனி:) ஆரும் வந்திடாமல்.//



    இல்லையில்லை நெல்லைத்தமிழனுக்கு நல்லாவே தெரியும் பின்னூட்டத்தில் ஒரு நாலுகால் வால் வைத்த சகுனி என்ட்ரி கொடுக்கும்னு :)

    பதிலளிநீக்கு
  70. ////AngelApril 10, 2018 at 9:14 PM
    எனக்கும் மாமனார் மாமியார் கூட இருக்கணும்னு கொள்ளை ஆசை/////

    ஹையோ ஹையோ திடீரென எனக்கு நெஞ்சு வலிக்குதே:).. தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் எண்ணுதே:)... என்னால முடியல்ல முருகா முடியல்ல:) என் வால்ல ஹையோ டங்கு வேற ஸ்லிப்பாகுதே:).. கால்ல பாறாங்கல்லைக் கட்டிப்போட்டு நடு தேம்ஸ்ல தள்ளுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:))))

    பதிலளிநீக்கு
  71. @அதிராவ் :)
    கர்ர்ர்ர் :) இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன்

    பதிலளிநீக்கு
  72. //// @நெ.த
    ஆமாம்... நீங்கள் ஏஞ்சலினை மிரட்டி இருக்கிறீர்களா? அவர் இந்தப் பக்கம் காணவில்லையே////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*3897654
    இது உங்களுக்கு தேவையா தேவையா?:).. நானே நல்ல விசயம் ஆளைக் காணமே என ஹப்பியா இருந்தனே:)... இப்போ பாருங்கோ வந்த வேகத்தில சகுனி.. பிகினி எண்டெல்லாம் பேசுறா:)... மீ அகிலாவை விட ரொம்ப நல்ல பொண்ணாக்கும்:).. க்கும்.. க்கும்:).

    பதிலளிநீக்கு
  73. ///AngelApril 10, 2018 at 9:49 PM
    @அதிராவ் :)
    கர்ர்ர்ர் :) இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன்///

    ஹலோ மிஸ்டர்:) மாமா மாமியை இனி அழைக்க முடியாது பட் ஏன் நீங்க நாத்தனார் மச்சான் அக்காக்களுடன் கூட்டுக் குடும்பமா இருக்கலாமெல்லோ இப்போ?:).. இல்ல ஆசைப்படுறீங்களே என ஒரு அட்வைஸ் ஜொன்னேன்:).. ஹா ஹா ஹா ஹையோ அஞ்சு பெயிண்ட்டாகிட்டா நானில்ல நானில்ல நான் ஒண்ணுமே பண்ணல்ல ஜாமீஈஈஈஈஈ:).

    பதிலளிநீக்கு
  74. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  75. //இல்ல ஆசைப்படுறீங்களே என ஒரு அட்வைஸ் ஜொன்னேன்:).. ஹா ஹா ஹா ஹையோ அஞ்சு பெயிண்ட்டாகிட்டா நானில்//
    garrr http://ru.wikifur.com/w/images/9/99/Jerry_Mouse.jpg

    பதிலளிநீக்கு
  76. அருமையான அன்பான கதை. அகிலா கேட்டாளோ, கதை நல்ல விதமாக முடிந்ததோ.
    எங்கள் குழந்தைகளில் பெண் மட்டுமே,தைரியமாகச் சரியாகப் பேசுவாள். பெரியவன் அதிர்ந்து ஒரு வார்த்தை சொல்ல மாட்டான், என்ன நினைக்கிறான்னும் தெரியாது.
    சின்னவன் தன் வழியே சென்று காரியங்களை நடத்திக் கொள்வான்.
    பெரியவர்களோடு இருக்கும் போது ஆதரவும் உண்டு.
    மறுப்பும் உண்டு. நாங்கள் வெளியே போனால் பெரிய பாட்டிக்குப் பிடிக்காது.

    எப்படியோ அந்தக் காலமும் போய் நானும் மாமியார் ஸ்தானம்
    வந்து 14 வருடங்கள் ஆகிவிட்டது. சம்சாரம் மின்சாரம் பட வசனம் போல்
    நீங்கள் ஒரு பக்கம். நான் ஒரு பக்கம். அவ்வப் போது சந்திக்கலாம் என்ற
    நிலையே சிறப்பு.

    எல்லோரும் அகிலாவாகவோ ,கார்த்திக் அம்மா அப்பா மாதிரியோ
    இருப்பது கொஞ்சம் சிரமம்.
    ஆனால் இந்தக் கதை மிகச் சிறப்பாக ,நல்லவர்களாகவே
    இருப்பதே இனிமை.
    வெகு அழகாகக் கதையை அமைத்து இருக்கிறீர்கள் நெ.த.
    அனைவரும் மகிழ்வோடு, ஆரோக்கியத்தோடு இருக்க என் பிராத்தனைகள்.

    பதிலளிநீக்கு
  77. ஜீவி சார் - உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    1. கார்த்திக், அகிலாவுக்கு ஒரு பெட் ரூம். அங்குதான் கார்த்திக் சென்றான் என்பது என் எழுத்து. இல்லை கார்த்திக்கு தனி ரூம் என்றும் வைத்துக்கொள்ளலாம் (கம்ப்யூட்டர், கதை படிப்பது போன்றவற்றிர்க்கு). அகிலா அவள் வேலைகள் முடிந்ததும் அவன் ரூமிற்குச் செல்வாள்.

    2. உங்கள் ரசிப்புக்கும் பாராட்டிற்கும் நான் நன்றி தெரிவிச்சிக்கறேன். பெரியவங்க (ஜீவி சார், கோபு சார், ரிஷபன் சார்..... ஸ்ரீராமும்) மற்றவங்களையும் வளர்க்க நினைப்பது மகிழ்வைத் தருகிறது.

    பதிலளிநீக்கு
  78. ஏஞ்சலின் உங்கள் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. வாழ்க்கைலதான் பெரும்பாலும் வில்லன்'களைப் பார்க்கிறோம். கதையில் நல்லவர்களை மட்டும் பார்ப்போமே.

    யாரை சொல்றீங்க :) - உண்மையாவே இந்த மாதிரி குணம் உடையவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களைத்தான் சொன்னேன்.

    அடிக்கடி வாங்க. காணாமல் போகாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  79. அதிரா - நாத்தனார் மச்சான் அக்காக்களுடன் கூட்டுக் குடும்பமா - முதல் ப்ரையாரிட்டி, மாமனார், மாமியார். அவங்க இருக்கும்போதுதான், கல்யாணமாகாத மச்சினர், நாத்தனார் நம் கூட இருக்க முடியும். இந்தக் காலத்தில் எல்லோரும் சேர்ந்து நிஜ கூட்டுக் குடும்பமாக இருப்பது என்பது மிக சாத்தியக் குறைவு. அதிலும் மேற்கத்தைய நாடுகளில் இருக்கும் ( நீங்க லண்டன் தயவுல இருக்கீங்க என்பதும் என் ஞாபகத்தில் இருக்கு ஹா ஹா ஹா) உங்களுக்கு கூட்டுக் குடும்பம் என்பது, மாமா/மாமி, அதுவும் அவங்க ரெண்டு வருடத்துக்கு ஒரு முறை வரும்போதுதான் சாத்தியம். நன்றி.

    பதிலளிநீக்கு
  80. வாங்க வல்லிம்மா. உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

    நீங்கள் ஒரு பக்கம். நான் ஒரு பக்கம். அவ்வப் போது சந்திக்கலாம் என்ற நிலையே சிறப்பு - அனுபவ வார்த்தைகள். நான் சில சமயம் (பல வருடங்களுக்கு முன்) நினைப்பதுண்டு. சதுரமான கட்டிடம், மூன்று சைடும் மூன்று பிள்ளைகள், நாலாவது பெற்றோர், நடுவில் ஓபன் ஸ்பேஸ். எல்லோரும் அவரவர் வீட்டில் சாப்பாடு. எப்போ தேவையோ அப்போ மற்றவர்கள் வீட்டிலிருந்து சாப்பாடு. இந்த மாதிரி இருந்தால் காலம் ஓடும். ஒரே வீடு என்றால், நிறைய அட்ஜஸ்ட்மென்ட் தேவை. சகிப்புத்தன்மை தேவை. நிறைகளை மட்டும் பேசும் தன்மை தேவை. குறைகளையே பேசக்கூடாது என்ற கட்டுப்பாடும் தேவை. இது மிகக் கடினம். அதிலும், தனியாக இருவர் சாதாரணமாகப் பேசினாலே, நம்மைக் குறை கூறித்தான் பேசுகிறார்கள் என்று நினைக்கும் மனித மனது.

    பதிலளிநீக்கு
  81. //சதுரமான கட்டிடம், மூன்று சைடும் மூன்று பிள்ளைகள், நாலாவது பெற்றோர், நடுவில் ஓபன் ஸ்பேஸ். எல்லோரும் அவரவர் வீட்டில் சாப்பாடு. எப்போ தேவையோ அப்போ மற்றவர்கள் வீட்டிலிருந்து சாப்பாடு. இந்த மாதிரி இருந்தால் காலம் ஓடும்.//

    நீங்கள் சொன்ன அமைப்பில் நகரத்தார் வீடுகளில் உண்டு.
    ஒப்பிட்டு ப்ணம் உனக்கு, எம்மூட்டு பணம் எனக்கு என்று தனி தனி அறை தனி தனி சமையல் என்று இருப்பார்கள், நாள், கிழமையில் ஒன்றாக கூடிக் கொள்வார்கள். கல்யாணம் என்றால் அது நடுவில் முற்றத்தில் நடக்கும் எல்லோருக்கும் சொந்தம் அந்த ஓபன் ஸ்பேஸ். சொத்துக்களை வயது வந்து விட்டால் பிரித்து கொடுத்து ஒன்றை 100 ஆக்கலாம், 1000 ஆக்கலாம் உன் அசமத்து என்று சொல்லி விடுவார்கள்.

    //ஒரே வீடு என்றால், நிறைய அட்ஜஸ்ட்மென்ட் தேவை. சகிப்புத்தன்மை தேவை. நிறைகளை மட்டும் பேசும் தன்மை தேவை. குறைகளையே பேசக்கூடாது என்ற கட்டுப்பாடும் தேவை. இது மிகக் கடினம். அதிலும், தனியாக இருவர் சாதாரணமாகப் பேசினாலே, நம்மைக் குறை கூறித்தான் பேசுகிறார்கள் என்று நினைக்கும் மனித மனது.//

    உண்மை நீங்கள் சொல்வது.

    பதிலளிநீக்கு
  82. உன் சமத்து என்று சொல்லிவிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  83. //நான் சில சமயம் (பல வருடங்களுக்கு முன்) நினைப்பதுண்டு. சதுரமான கட்டிடம், மூன்று சைடும் மூன்று பிள்ளைகள், நாலாவது பெற்றோர், நடுவில் ஓபன் ஸ்பேஸ். எல்லோரும் அவரவர் வீட்டில் சாப்பாடு. எப்போ தேவையோ அப்போ மற்றவர்கள் வீட்டிலிருந்து சாப்பாடு. // இப்போவும் ராஜஸ்தான், குஜராத்தில் பெரும்பாலும், பஞ்சாப், ஹரியானா, உ.பி ஆகிய மாநிலங்களில் சில இனங்களிலும் இப்படித் தான் நடந்து வருகிறது. முக்கியமாக பனியா எனப்படும் வணிகக் குடும்பங்கள்! தாக்கூர் என அழைக்கப்படும் ஒரு சில ராஜபுத்திரக் குடும்பங்களிலும் உண்டு. வீடுகள் பெரும்பாலும் மாளிகை போல் இருக்கும். இப்போல்லாம் அப்படிப்பட்ட வீடுகளைக் காண்பது அரிது. அவை ஹவேலி என அழைக்கப்படும்.

    பதிலளிநீக்கு
  84. //அப்புறம் கார்த்திக் அவர் ரூமுக்குபோயிடுவார். //

    'அவர்'-- 'போயிடுவார்'-- என்று 'ர்' விகுதி போட்டதால் தான் இந்தக் கேள்வியே வந்தது. கார்த்திக் என்றால் 'ன்' விகுதி இருந்திருக்க வேண்டும்.

    நான் பத்திரிகை சம்பந்தப்பட்டு இருந்தவன். நிறைய ப்ரூப் கரெக்ஷ்ன் எல்லாம் பண்ணியிருக்கிறேன்.
    அதனால் தான் சில தவறுகள் வாசித்துக் கொண்டு வரும் பொழுதே முதல் பார்வைக்கே பட்டுவிடும்.

    அப்ரிஷியேட் பண்ண வேண்டுமானால் கதையில் நிறைய இடங்களை குறிப்பிட்டுச் சொல்வேன்.

    வாழ்த்துக்கள், நெல்லை.

    பதிலளிநீக்கு
  85. ஜீவி சார்... தவறா நினைக்காதீங்க. அந்த போர்ஷன் அகிலா மனசுல நினைப்பது (அல்லது கதாசிரியர் சொல்றது). அவர் என்பது மரியாதைச் சொல்தானே. இருந்தாலும் இதைக் கவனத்தில் கொண்டேன் சார். மிக்க நன்றி.

    உங்கள்ட இன்னொண்ணும் கேட்கணும்னு நினைத்திருந்தேன். விமர்சனத்தைப் படித்து அதில் சிறந்தது என்று தேர்ந்தெடுக்கும்போது, அந்த விமரிசனங்கள் (இணையத்தில்) சுவாரசியமா இல்லாம கட்டுரையா போகிடாதோ?

    பதிலளிநீக்கு
  86. பின்னூட்டத்துக்கு நன்றி கீசா மேடம். சமீபத்தில் வெங்கட் தளத்திலும் இதுபோல் common kitchen இருக்கும் பெரிய கூட்டுக்குடும்பத்தைப் பற்றி (அவங்கதான் ஹோட்டலை நடத்தறாங்க, கைவினைப் பொருட்கள் விக்கறாங்க என்பது) எழுதியிருந்தார். நம் ஊரிலும் அந்தக் காலத்தில் (1 நூற்றாண்டுக்கு முன்) இருந்தது.

    பதிலளிநீக்கு
  87. // நம் ஊரிலும் அந்தக் காலத்தில் (1 நூற்றாண்டுக்கு முன்) இருந்தது.// நம்ம ஊரில் சமையல், சாப்பாடு எல்லாம் ஒரே சமையலறை, சாப்பாட்டறையில். முக்கியமாய் இதுவே பல பிரச்னைகளுக்குக் காரணமாக அமையும்! :( என்றாலும் இப்போதெல்லாம் வெளிநாடுகளில் வாழும் குழந்தைகள் பலரும் ஒரு வீட்டை நான்கு, ஐந்து பேராக எடுத்துக் கொண்டு அறைகளை அவரவர் சௌகரியத்துக்கு ஏற்றாற்போல் பிரித்துக் கொண்டு சமையலறையைப் பொதுவாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

    பதிலளிநீக்கு
  88. ஜீவி சார்... பத்திரிகை ப்ரூப் ரீடிங் என்பது சேலஞ்சிங் வேலை. எனக்குமே எழுத்துப் பிழை, பத்திரிககைல பார்க்க நேர்ந்தா முகச் சுளிப்பு வரும்.

    பதிலளிநீக்கு
  89. கீசா மேடம் - முக்கியமாய் இதுவே பல பிரச்னைகளுக்குக் காரணமாக அமையும்! - ஆமாம். மாமியாருக்கு வேண்டப்பட்ட மருமகள்(கள்) தலை வலி அது இது என்று ரெஸ்ட் எடுப்பாங்க. மாட்டிக்கிட்டவங்க, முழு சமையல் வேலையையும் செய்யணும். இதையும் பார்த்திருக்கிறேன். மனசளவுல நாம வளராம, கூட்டுக் குடும்பங்கள் சந்தோஷமா இருக்கமுடியாது.

    பதிலளிநீக்கு
  90. அந்த போர்ஷன் அகிலா மனசுல நினைப்பது..

    அகிலா மனசில் நினைப்பது என்றால், '..........' (குறிப்பிட்ட அந்தப் பகுதிக்கு ஒற்றைக் கொம்பு போட்டு விட வேண்டும்.

    காதாசிரியர் குறிப்பிடுவது என்றால் 'ன்' விகுதி தான் சரி. ஏனென்றால், அவன் இளைஞன். 'கார்த்திக் நல்லவன்' என்று கதாசிரியர் அவனை 'ன்' விகுதியிட்டுத் தான் அழைக்கிறார். பெயர் குறிப்பிடாமல் எழுதும் இடங்களில் எல்லாம் அவனா, அவன் அப்பாவா என்று வாசகர்கள் புரிந்து கொள்ள ஏதுவாக இருப்பது, இந்த 'ன்', 'ர்' விகுதிகள் தாம்.

    ஒரு பயிற்சிக்காகத் தான் சொல்ல வேண்டியதிருந்ததே தவிர, இதையெல்லாம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று ஏதும் இல்லை. நீங்களும் புரிந்து கொள்வீர்கள்.

    பதிலளிநீக்கு
  91. விமரசங்களை கதை போலக் கோர்வையாக எழுதினால், மிக அழகாக இருக்கும். வாசிப்பவர்களுக்கும்
    வாசிப்பதில் ஒன்றிப் போவார்கள்.

    எனது 'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' நூல் முழுக்க இப்படித் தான் அமைத்திருக்கிறேன்.
    உங்களை சென்னையில் சந்திக்கும் பொழுது அந்தப் புத்தகத்தை கொடுக்க வேண்டும் என்றிருக்கிறேன்.

    கோபு சார் நடத்திய போட்டிக்கு வந்த விமர்சனங்களும் ஆரம்பத்தில் அப்படித் தான் கட்டுரை போல இருந்தன. ஆனால் என் எதிர்ப்பார்ப்பு இதுவல்ல என்று தெரிந்து கொண்ட கீதா மதிவாணன் போன்றோர் அவர்களால் முடிந்தவரை கட்டுரைத் தோற்றம் அளிக்காமல் எழுதத் துவங்கி விட்டனார்.
    சொல்லப் போனால், அந்தப் பரிசுப் போட்டி இணையத்தில் எழுதுவோருக்கு நல்ல பயிற்சிக் கூடமாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  92. மிக்க நன்றி ஜீவி சார். கவனத்தில் கொள்கிறேன்.

    இன்னும் யாரையும் சந்திக்கவில்லை. அதற்கெல்லாம் ஒரு 6 மாதங்களாவது ஆகும். இங்கு-சென்னைக்கு வந்தது ஓரிரு வாரங்களுக்குத்தான். திரும்பச் செல்லவேண்டும், சென்று திரும்பவேண்டும். கொஞ்சம் என் பிரச்சனைகளை முடித்துக்கொள்கிறேன் (இறைவன் மேலும் பிரச்சனைகளை அனுப்பாமலிருந்தால்)

    பதிலளிநீக்கு
  93. ஆறு மாதங்கள் என்று குறிப்பிட்டது சரி, நெல்லை. வரும் நவம்பருக்கு அப்புறம்.
    நானும் யு.எஸ். சென்று திரும்பி விடுகிறேன்.

    மிக்க அன்புடன்,
    ஜீவி

    பதிலளிநீக்கு
  94. //அடிக்கடி வாங்க. காணாமல் போகாதீர்கள்.//

    அப்படினா என் கண்ணுக்கும் காதுக்கும் நல்லவைமட்டுமே அகப்படணும் எந்த கெட்ட விஷயமும் உலகில் நடக்கக்கூடாதுன்னு வேண்டிக்கோங்க :) அப்டி நடந்தாலும் ஆர்வக்கோளாறில் நான் எதையும் பார்க்கக்கூடாது :)
    நான் அடிக்கடி சைலன்ட் மோட் ஹைபெர்னேஷன் aestivation போக காரணமே இவைதான்

    பதிலளிநீக்கு
  95. @நெ.த.:

    நேற்றுமாலை கதை படித்தேன். பின் பின்னூட்டப் பெருவெளியில் ஆழ்ந்தேன். இப்போது வருகிறேன்:

    ஒரே ஸ்வீட்டா இருக்கே ப்ளேட்டிலே.. நம்கீன் எங்கே?

    பதிலளிநீக்கு
  96. ஏகாந்தன் சார்... நம்கீன்-உங்களிடமிருந்து வந்திருக்கலாமே.. நன்றி.

    பதிலளிநீக்கு
  97. எழுத்தாளர்... இல்லையில்லை... கதாசிரியர்... நெல்லைத் தமிழன் அண்ணாச்சிக்கு வணக்கம்...

    செம...

    அடிச்சி ஆடியிருக்கீங்க...

    அருமை அண்ணா.

    பதிலளிநீக்கு
  98. னன்றி பரிவை குமார். என்னவோ கீ போர்டுல அந்த ந வரலை.

    பதிலளிநீக்கு
  99. சரியான மாமனார்.....மருமகளை விட்டுப் பிடித்து வீட்டுக்குள் கூட்டுக் குடும்பத்திற்கு இழுத்துவிட்டார்....பின் ஏதும் பிரச்னை வந்தால் கூட...நான் தான் அப்பவே தனிக்குடித்தனம் போகச் சொன்னேனே என்று தபபிக்கத்தான்.

    பதிலளிநீக்கு
  100. //பின் ஏதும் பிரச்னை வந்தால் கூட...நான் தான் அப்பவே தனிக்குடித்தனம் போகச் சொன்னேனே என்று தபபிக்கத்தான்// அட!!!!!!!!!!!!!!! இப்படியும் ஒரு கோணத்தில் சிந்திக்கலாமா???????????????????

    பதிலளிநீக்கு
  101. வாங்க இளவை ஹரிஹரன். இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதா? நான் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி. தொடர்ந்து இந்தத் தளத்துக்கு வாருங்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!