புதன், 30 ஜனவரி, 2019

புதன் 190130 : மாற்றி யோசி(த்தது உண்டா?)

                  
சென்ற வாரப் பதிவில் எல்லோரும் மாமியார் மருமகள் சண்டை போட்டதில், எங்களைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் போய்விட்டது! 
அதனால, வாட்ஸ் அப் கேள்விகளை வேண்டி விரும்பிப் பெற்றோம்.  

ஆகவே, இது ........  


வாட்ஸ் அப் வாரம்! 

 பானுமதி வெங்கடேஸ்வரன் : 

வேட்டி விளம்பரங்களை பார்க்கும் பொழுது என்ன தோன்றும்?



& நமக்கு வேட்டி, துண்டு வைத்துக் கொடுப்பவர்கள் எல்லோரும் இதைப் பார்த்து செலெக்ட் செய்யவேண்டுமே என்று நினைத்துக்கொள்வேன்! எனக்காக காசு கொடுத்து வேட்டி வாங்கியது,  நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு. அது ஒரு லினன் வேட்டி. அப்போது விலை ஏழு ரூபாய்! அப்புறம் வந்தவை எல்லாமே ஓ சி வேட்டிகள்!  

நீங்கள் ஒட்டிப்பீர்களா? கட்டிப்பீர்களா? எதை என்பதை குறிப்பிடாததால் பதிலளிக்க உங்களுக்கு வானமே எல்லை.


& // எதை என்பதை குறிப்பிடாததால் ...// 

& ஒட்டகத்தை என்றால் ..... நான் ஓடிப்போயிடறேன்! 

& கட்டி, கட்டி, ஓட்டிப்பேன். அதாவது வேட்டியைக் கட்டி, அதன் மீது நலக்காக்கை (வெல்க்ரோ!) பெல்ட் கட்டி ஒட்டிப்பேன். இந்த பதிலை தட்டச்சு செய்யும்போது கூட, வேட்டி, வெல்க்ரோ பெல்ட், சட்டை அணிந்தவாறுதான் உள்ளேன்!  

+ இந்தக் கேள்வியை, எங்கள் குடும்ப வாட்ஸ் அப் குழுவில் கேட்டிருந்தேன். அதற்கு திருமதி பிருந்தாவனி வாசுதேவன் அனுப்பிய பதில் இங்கே:

That வேஷ்டி very useful for my sons. Vasudevan bought that, when we visited Tirupati. They could wear it faster; diameter was perfect. Look was also nice after wearing. Comfortable வேஷ்டி. They could change it also faster. 

(மொத்தத்துல, இந்தக் காலப் பசங்களுக்கு சௌகரியமான வேட்டி என்கிறார்!) 

பொம்பளைங்க சமாச்சாரம் என்பது போல் ஆம்பளைங்க சமாச்சாரம் என்று ஏதாவது இருக்கிறதா?

பாட்டில், சீட்டு ?

& பொம்பளைங்க அப்படி எதையும் ஆம்பளைங்க சமாச்சாரம் என்று விட்டு வைக்கவில்லை என்று தோன்றுகிறது. 

கே ஜி விசுவேஸ்வரன், சென்னை 

நான் பல சந்தர்ப்பங்களில் எல்லோரும் நினைப்பதுபோல் நினைக்காமல் மாற்றி யோசிப்பேன். உங்களில் எவராவது அதுபோல் யோசித்தது உண்டா? அது என்ன?

(இந்தக் கேள்வியை இவர், வேறு ஒரு வாட்ஸ் அப் குழுவில் கேட்டிருந்தார். நாங்க அதை இந்தப் பதிவுக்குக் கடத்தி வந்துவிட்டோம்!) 

மாற்றி யோசிப்பதையே குறிக்கோளாக எண்ணி செயல் பட்டால் குழப்பம் தான் மிஞ்சும். மாற்றி யோசிப்பதும் செயல்படுவதும் வேறு வேறு. சபரிமலைகுழப்பங்களுக்கு பலாபலன்களை பற்றிக் கவலைப்படாத செயல்பாடு காரணம்.

'ஏன் இப்படி? இப்படி ஏன் கூடாது?' என்று யோசனை செய்யலாம். யோசனையில் பின் விளைவுகளை பற்றிக் கவலையின்றி செயல் படக்கூடாது.

யோசிப்பது தெரியும்.  மாற்றி யோசிப்பது தெரியாது. எல்லார் மாதிரியும் இல்லாமல் புது வழியில் யோசிப்பது தான் என்றால் அது போல் நான் உணர்ந்ததில்லை.

& மாத்தி யோசி என்னும் கான்செப்ட் பலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் 'Lateral thinking' என்று சொல்வதைத்தான், மாத்தி யோசி என்று சொல்கிறார்கள். லேடரல் திங்கிங் என்கிற ஆறு, படைப்பாற்றல் (Creativity) என்னும் சமுத்திரத்தில், சங்கமிக்க வேண்டும். அப்போதுதான் நல்ல பலன் கிடைக்கும். சுருக்கமாக சொல்லியிருக்கிறேன். விரிவாக எழுதும் சந்தர்ப்பம் கிடைத்தால், பிறகு எழுதுகிறேன். 

நெல்லைத்தமிழன்:

எழுதறது தற்காலத்துல ரொம்ப குறைந்துவிட்டதா? எல்லாம் தட்டச்சு பண்ணறதால பெர்சனல் டச் போயிடுச்சா? சமீபத்துல எந்த வருஷத்துல உங்களுக்கு கடிதம் வந்தது?

$  Phone இல் ஆடியோ வீடியோ எல்லாம் அனுப்பும் வசதி வந்த பின்னும் கடிதம் என்பதில் that touch(!)  இருக்க வேண்டும் ஆனால் இருக்கக் கூடாது என்றால் எப்படி?

எனக்கு கடிதம்  எப்போது வந்தது என்றே நினைவில்லை. ஊடகங்களின் முற்றுகைக்குப் பிறகு அஞ்சல் வழிக் கடிதம் என்பது காணாமல் போய்விட்டது.

& எனக்கு வரும் கடிதங்கள் என்று பார்த்தால், ஏர் டெல் நிறுவனத்திலிருந்து மாதா மாதம் பில் அனுப்புகிறார்கள். வித்தியாசமான கடிதம் என்று பார்த்தால்,  தீபாவளி சமயத்தில் நான் (ஆன் லைன் மூலம்) அனுப்பிய சிறு நிதி உதவிக்கு, ஒரு  ஆஸ்ரமத்திலிருந்து ஃபோன் செய்து, என் விலாசம் கேட்டு, அவர்கள் எழுதி அனுப்பிய நன்றிக் கடிதம்தான் சமீபத்தில் எனக்கு வந்த கடிதம். 

நம்மகிட்ட வெளிநாடுகள் மாதிரி சம்பாதி, வாழ்க்கையை அனுபவி என்ற மென்டாலிட்டி இல்லை? இன்னும் மனதளவுல நாம குடும்ப பொறுப்பை (பெற்றோர், பசங்கன்னு இறப்பு வரைக்கும்) சுமப்பதாலயா?

வெளி நாடுகள் மாதிரி social security நிச்சயம் கிடைக்கும் என்றால் நாமும் அப்படித்தான் இருப்போம்.

ஜாலியாக சம்பாதிப்பதை செலவு செய்வது இந்திய மனப்பான்மை அல்ல. தங்கம், பணம், நிலம், வீடு என சேமிப்பது நம் பாரம்பரியம். அது நல்லதும் கூட..

& முன் காலத்தில் ஆண்கள் சம்பாதி - அவர்களின் மனைவி வாழ்க்கையை அனுபவி என்று இருந்தனர். இருவரும் வேலைக்குச் செல்லும் இந்தக் காலத்தில், கணவன், மனைவி இருவருமே சம்பாதி, அவர்களின் குழந்தைகள் வாழ்க்கையை அனுபவி. ஆக, சிலர் சம்பாதித்தால், வேறு சிலர் வாழ்க்கையை அனுபவிக்கலாம்! 

மருமகள் நம்ம வீட்டுக்கு வருவதற்கு பதிலா மருமகன் நம்ம வீட்டுலயே தங்குற கான்சப்ட் பெட்டரா? (மகன் அவன் மாமனார் வீட்டுக்கு பெர்மன்ன்டா போயிடுவான்)

 மகனோ மகளோ நம் கூடவே இருக்கவேண்டும் என்பது நம் சுயநலம் காரணம் தானே?

வீட்டோடு மாப்பிள்ளை சரியாக வராது என்பது என் கருத்து.

& அம்மா அப்பா இருவருக்கும் ஒரே குழந்தை என்று இருக்கும் குடும்பங்களில், பிள்ளையின் பெற்றோரும், பெண்ணின் பெற்றோரும் ஒன்றாக அவர்களோடு சேர்ந்து ஒரே குடும்பமாக வாழலாம் என்று நான் நினைக்கிறேன். எதிர்காலத்தில் இது சாத்தியம் ஆகலாம். 

நாம பண்டிகைல இனிப்பு செய்வது பாரம்பர்யம்னு சொல்லிக்கிட்டு பாரம்பர்யத்தில் இல்லாத மைதா, சீனி, மற்ற ஆயில்லாம் உபயோகிக்கறோமே.. அப்ப பாரம்பர்யம்னு சொல்றது போலி இல்லையா?

$ பண்டிகையோ பாரம்பர்யமோ ஏதோ ஒரு தொடக்கம் இருக்கவேண்டும்.  மாற்றங்களின்றி அது சாத்தியமில்லை.
சீனியில் இல்லாத நன்மை வெல்லத்தில் இருக்கிறது என்பதே வீண்வாதம்.

காலையில் சூரிய வெளிச்சம் கண்டதும் குத்தீட்டி எடுத்துப் போய் அகப்பட்ட விலங்கோ, காயோ, கனியோ எது கிடைத்தாலும் உண்டு,  அடுத்த வேளை பற்றிக் கவலைப் படாமல் இருந்ததிலிருந்து மாறிய அன்றே பாரம்பரியம் போய்விட்டது இல்லையா?

பின் வீடு, வீதி, வயல் என்று கட்டுமானமும் நிர்வகிப்பும் வந்த பின்தானே நம் பாரம்பரியம் பற்றிய எண்ணமே வருகிறது.

 நாம் "பாரம்பரியம்" என்று சொல்லிக் கொள்ளும் பலவும் சில நூறு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் ஆனவைதான்.

& சரி. இனிமே பாரம்பரியப்படி, இனிப்பு என்றால், பானகம், காரம் என்றால், மிளகு பொடி என்று பழக்கப்படுத்திக்கொள்கிறேன். ஏற்கெனவே காபியை விட்டு, சுக்கு மல்லி வெல்லக்காபி என்று மாறிவிட்டேன்! 

புத்த சமணக் கோவில்கள் சைவ வைணவக் கோவில்களா உருமாற்றம் பெற்றதா?

 சமணர்கள் ஆயிரக் கணக்கில் கழுவேற்றப்பட்டனர் எனும் போது சமய ஆதிக்கம் வலுவாக இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. எனவே கோயில்களின் அடையாளம் மாற்றப்படுவதும் நடந்திருக்கும். சூலை நோய் நீக்கம் கதைகள் நினைவுக்கு வருகின்றன.


Revathi Narasimhan: 

Is old age is problematic  for the youngsters or the elders?

$ Problems come with dependency , be it fiscal or physical.

# இருதரப்புக்கும் தான்.


எங்கள் கேள்விகள்: 

(இவற்றை  "EB Editors & Readers" வாட்ஸ் அப்பில் கேட்டோம். ரொம்பப் பேருங்க கயண்டு ஓடிட்டாங்க! ஆனால், ஒருவர் மட்டும் எனக்கு பதில் அனுப்பியிருந்தார். அவருடைய பதில்கள் கீழே!)

1. வாழ்க்கையின் வெற்றி என்பதன் அளவு கோல் எது ?

2. நீங்கள் விடாமல் கடைப் பிடிக்கும் உடற்பயிற்சி எது ?

3. கடவுளை நீங்கள் எப்படி உருவகம் செய்கிறீர்கள் ?

4. விபூதி குங்குமம் போன்ற "பிரசாதங்கள்" பால் நாம் காட்டும் மரியாதை அற்ப ஆயுள் கொண்டதாக இருப்பது ஏன் ?

5. இலக்கியம் உல்லாச வர்கத்தினரின் பொழுது போக்கு என்பது சரியா ?

6. பாசாங்கு இல்லாத வாழ்க்கை சாத்தியமா ?


சுஜாதா பதில்கள். 

1. வாழ்க்கையில் திரும்பி பார்க்கும் போது regret அதாவது வருத்தங்கள் இல்லாமல் இருப்பது வெற்றி. 

2. நடை... அதை விட்டால் வள வள என்று அரட்டை 😀

3. Intergalactic gravity... Balance in cosmos. 

4. இலவசமாக நிறைய கிடைப்பதால்... திங்க முடியாததால்! 

5. இல்லை.  சுய முன்னேற்றத்தின் ஏணி.

6. தப்புக்களை மறைத்து பொய் வாழ்க்கையும்,  எதிராளியை மென்று முழுங்குவதையும், பிறர் அழிவில் ஆனந்தம் காண்பதையும், நம் முன்னேற்றத்தை முன்னிறுத்தி முகஸ்துதி செய்வதையும் நிறுத்தாத வரை, பாசாங்கு செய்யாமல் இருக்க முடியாது.

(மற்ற வாசகர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில்களை இங்கே பதியலாம்!)
==================================

மீண்டும் சந்திப்போம். 

வாட்ஸ் அப் மூலம் கேள்விகள் கேட்க விரும்புவோர், 9902281582 என்ற எண்ணுக்கு அனுப்பவும். நன்றி!

==================================

         

98 கருத்துகள்:

  1. இனிய மகிழ்வான காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம், துரை அண்ணா அப்புறம் தொடர்வோர் எல்லோருக்கும்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுஜாதாவின் பதில்கள் நல்லாருக்கு...முதல் பதில் செம...ஷார்ட்.அண்ட் ஸ்வீட்..நான் வள வளனு எழுதியிருப்பேன்..வெற்றி என்பதற்கு ஒவ்வொரு இன்டெர்ப்ரிட்டேஷன் உண்டு..வரேன் அப்பால...

      6. வதுக்கும் வரேன்...அவங்க பதில் சூப்பர்!!

      கீதா

      நீக்கு
    2. இரண்டு புதன் முன்ன லேட்டா வந்து அந்த புதனன்று பதிந்த கேள்விகள் வரவில்லை போலத் தெரியுது. நான் கேள்விகள் கேட்டு போட அழுத்தியதும் கமென்ட் மாடரேஷன் பண்ணியிருக்காப்ல வந்துச்சு...ஸோ தெரியலை வந்துச்சான்னு..

      கீதா

      நீக்கு
    3. பாராட்டுக்கு நன்றி. கமெண்ட் மாடரேஷனில் பெண்டிங் எதுவும் இல்லை. எந்த புதன் என்று சொன்னால், அதை சரி பார்க்க இயலும்.

      நீக்கு
  2. ஆங்கிலத்தில் 'Lateral thinking' என்று சொல்வதைத்தான், மாத்தி யோசி என்று சொல்கிறார்கள். //

    அதே அதே...இந்த லேட்டரல் திங்கிங்க் பற்றி எங்க வீட்டுல ஒரு புத்தகம் இருக்கு. ஆங்கிலத்தில். நல்ல புத்தகம். இந்த லேட்டரல் திங்கிங்கினால பல ஆய்வுக் கட்டுரைகள் ஒவ்வொரு துறையிலும் வெளி வருகின்றன...ஏற்கனவே இருப்பதும் கூட மேம்படுத்தப்பட்டு செயல்பட்டும் இருக்கிறது.

    இது கௌ அண்ணாவின் பதில் தானே? கௌ அண்ணா எழுதுங்க ப்ளீஸ் இது பற்றி. மிகவும் பிடித்த சப்ஜெக்ட்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த லேடரல் திங்கிங் வேற. கேள்வில கேட்ட 'மாத்தி யோசி' வேற.

      நண்பர்கள் எல்லாரும் ஒருத்தரை குறை சொல்லிக்கிட்டிருந்தா, அவர் சார்பா, அதுனால அவர் சொல்லியிருக்கலாம்னு ஜஸ்டிஃபை பண்ணுவது போன்றது 'மாத்தி யோசி'. லேடரல் திங்கிக் அறிவுபூர்வமான விஷயம்.

      நீக்கு
    2. எனக்கு அப்படித் தோன்றவில்லை.

      நீக்கு
  3. சுஜாதா பதில்கள் பாசாங்கு இல்லாதவை

    பதிலளிநீக்கு
  4. பாரம்பர்யம் என்பதன் கால அளவு தான் என்னாங்க!?...

    ஆகா.. காலையிலேயே தலைவலி ஆரம்பமாயிடுச்சா!...

    தினமலரோட கோயில்கள் பற்றிய தகவல்களைப் பார்த்தீர்கள் என்றால்
    கோயில்களில் சிவலிங்கங்கள் எல்லாமே அதிசயத்தின் அடிப்படையில்
    சுயம்பு லிங்கங்கள் என்று ரீல் விட்டிருப்பார்கள்...

    முந்தாநாள் சென்னையில ஏதாவது புதுசா கோயில் கட்டியிருந்தாலும்
    அதுக்கும் உடனே தல புராணம் எழுதிடறாங்களே அது ஏன்!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முந்தாநாள் சென்னையில ஏதாவது புதுசா கோயில் கட்டியிருந்தாலும்
      அதுக்கும் உடனே தல புராணம் எழுதிடறாங்களே அது ஏன்!?..//

      துரை அண்ணா செம கேள்வி! எனக்கும் இது தோன்றுவதுண்டு. அதுவும் இப்ப கன்னியாகுமரி திருப்பதி கோயில் பத்தி தெரிஞ்சதும் அதுக்கும் இப்படி தலபுராணம் எழுதிடுவாங்களோன்னு தோன்றியது...

      நீங்க இங்க கேள்வியா கேட்டுட்டீங்க அந்த சப்ஜெக்டை...சூப்பர்!!!

      கீதா

      நீக்கு
  5. கேள்விகள் பதில்கள் அத்தனையும் சூப்பர். அனைவர்க்கும் இனிய காலை வணக்கம் சிகாகோ என்னும் ஐஸ் பெட்டியிலிருந்து பதில்கள். அனுப்புகிறேன். முதல் கேள்விக்கு என் பதில் வெற்றி அவசியமான. மனசமாதானம் அவசியமா?
    சுவாஸப் பயிற்சி,
    3, கடவுள் என் தோழன்
    4, இலவசம். நிறைய சேர்த்தது உண்டு.
    5,இல்லை. நமக்காக தேவை,
    6,பாசாங்கு தேவைதான் பல சந்தர்பபங்களைக் கடக்க உதவும்.:)

    .
    3,

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ??????????????????????????? who is this person?!!!!!!!!!!!!!!!!!!!!!!1

      நீக்கு
    2. நாங்க எந்தக் கருத்தையும் நீக்குவதில்லை.

      நீக்கு
    3. பெயர் தவறாகப் பதிவாகிவிட்டதே என்று நீங்களே நீக்கியிருக்கலாம். தயவு செய்து, சரி பார்க்கவும்.

      நீக்கு
    4. கௌ அண்ணா அந்த கீதா சம்பந்தா இதோ லிங்க் ...http://golutoys.blogspot.com/2016/08/golu-dolls-pictures.html

      இதுதான் அவரது வலை. கொலுடாய்ஸ். ஆனால் ஒரே ஒரு பதிவுதான் முழுவதும் கொலு பொம்மைகள். ஒருவேளை கொலு பொம்மை விற்பவராக இருக்குமோ என்று தோன்றுகிறது. செம கலெக்ஷன் பொம்மைகள் ரொம்ப அழகா இருக்கு...பாட்டி வடை சுட்ட கதை செட், கைலாயம் செட், ராவண தர்பார், சக்கரத்தாழ்வார், ராமர் வில் உடைக்கும் செட், ஸ்கூல் செட், சீதா கல்யாணம்...குரு பகவான் கூட வந்திட்டார்!!!!!

      கீதா

      நீக்கு
    5. இந்த கீதா சம்பந்தா ஆஸ்திரேலியாவில் வசிப்பவரா? முன்பு ஜப்பானில் இருந்தவரோ? அவரே வந்து பதில் சொன்னால்தான் தெரியவரும்!

      நீக்கு
    6. ஹிஹிஹி, இதை மறந்தே போயிட்டேன். மெயிலில் பதில்களைப் படிக்கையில் என்னடானு இருந்தது. இங்கே வந்து பார்த்தப்புறமாப் புரியுது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எத்தனை பேர் போட்டிக்கு "கீதா" என்ற பெயரோடு வருவாங்க? தனி ஒருத்தியாகக் கோலோச்சிக் கொண்டிருந்தேன். அது போயிடுச்சு! கீதா எம், தி/கீதா, கீதமஞ்சரி, முகநூலுக்குப் போனால் கீதா எம்.சுதர்சனம், கீதா வெங்கட், கீதா ராஜன், கீதா சுப்ரமணியம்! :))))))) பெயரை மாத்திக்கலாமோனு தோணுது!
      :)))))))

      நீக்கு
  7. "//அம்மா அப்பா இருவருக்கும் ஒரே குழந்தை என்று இருக்கும் குடும்பங்களில், பிள்ளையின் பெற்றோரும், பெண்ணின் பெற்றோரும் ஒன்றாக அவர்களோடு சேர்ந்து ஒரே குடும்பமாக வாழலாம் என்று நான் நினைக்கிறேன். எதிர்காலத்தில் இது சாத்தியம் ஆகலாம். //"

    எனக்கு தெரிந்து இங்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரும் அவர் மனைவியும் அவர்களின் பெற்றோர்களுக்கு ஒரே பிள்ளை. இருவருக்கும் தந்தை இல்லை. அதனால் இரண்டு பேரின் அம்மாவும் மாற்றி மாற்றி ஒவ்வொரு ஆண்டு இங்கு வந்து தங்கி விட்டு போவார்கள். ஆனால் இருவரும் சேர்ந்து தங்கியதில்லை. அதற்கு இவர்களின் குழந்தைகளை பார்த்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதால் மாற்றி மாற்றி வருகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாரஸ்யமாக உள்ளது. ஒருவரின் அம்மா இவர்களுடன் இருக்கும்பொழுது மற்றவரின் அம்மா எங்கே போய் இருக்கிறார்?

      நீக்கு
  8. // சமணர்கள் ஆயிரக் கணக்கில் கழுவேற்றப்பட்டனர் எனும் போது சமய ஆதிக்கம் வலுவாக இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. எனவே கோயில்களின் அடையாளம் மாற்றப்படுவதும் நடந்திருக்கும். சூலை நோய் நீக்கம் கதைகள் நினைவுக்கு வருகின்றன.// இதுக்கு பதில் எழுதணும்னா சில, பல பதிவுகள் தேவை. ஆனால் இந்தச் சமணர்களைக் கழுவில் ஏத்தினார்கள் என்னும் கருத்து சரி இல்லை என்பதோடு நிறுத்திக்கிறேன். :) ஆய்வுகள் வேறு முடிவுகளைக் காட்டுகின்றன. இதைப் பற்றி மின் தமிழ்க் குழுமத்தில் கூடப் பல வாத, விவாதங்கள் நடந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெறுப்பொடு சமணர் முண்டர் விதி இல் சாக்கியர்கள் நின் பால்
      பொறுப்பரியனகள் பேசில் போவதே நோயதாகி
      குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை ஆங்கே
      அறுப்பதே கருமம் கண்டாய் அரங்க மா நகருளானே - திருமாலையில் தொண்டரடிப்பொடி ஆழ்வார்

      நீக்கு
    2. நெ.த. இதுக்கு இங்கே பதில் அளிக்க முடியாது. அப்புறமா அந்த விஷயம் மட்டுமே பேசும்படி இருக்கும். தனியா வைச்சுக்கலாம்.

      நீக்கு
    3. ஶ்ரீராமுக்கு இன்னமும் உடம்பு சரியாகலையா? ஒரு வாரமா ஆளையே காணோமே?

      நீக்கு
    4. //ஶ்ரீராமுக்கு இன்னமும் உடம்பு சரியாகலையா? ஒரு வாரமா ஆளையே காணோமே?//

      grrrrrrr... நண்பர்கள் பதிவில் எல்லாம் என் பெயர் பார்த்திருக்கலாம்... என்ன அநியாயம்...

      நீக்கு
    5. அட,ஆமா இல்ல! அது சரி, எனக்குத் தான் என்னமோ ஆகி இருக்கு. திருநெல்வேலி போயிட்டு வந்தப்புறமா! ஏஞ்சல் என்னோட பதிவிலே வந்து கமென்டினதையும் மறந்திருக்கேன். :)))) இத்தனைக்கும் அங்கே கீழே கூட விழலை! கும்பகோணத்தில் கீழே விழுந்ததில் ஞாபக சக்தி அதிகமா இருந்தாப்போல் இருக்கு! :))))))

      நீக்கு
    6. ஏற்கெனவே கிழமைகள் மறந்து போகும். இப்போ ஆட்களையே மறந்துபோகும் நிலை வந்துடுச்சா! (என் பெயர் கௌதமன்.)

      நீக்கு
    7. ஹிஹிஹி, அப்படீங்கறீங்க? செரிதான்!

      நீக்கு
    8. //திருநெல்வேலி போயிட்டு வந்தப்புறமா!// - அப்படி இல்லை. திருநெல்வேலிக்குப் போய் சாக்கு நிறைய முறுக்கும் தட்டையுமா வாங்கிவந்து, யாருக்கும் சொல்லாம சாப்பிட்டதற்குப் பிறகு என்று நினைக்கிறேன். ஹா ஹா.

      நீக்கு
    9. கண்ணு வைக்காதீங்க நெ.த. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))) சாக்கிலே வாங்கிண்டு வந்தால் அந்த எண்ணெய் வாசனையில் வீடே மோசமாக ஆகி இருக்கும். வாயிலே போட முடியலை! :)))) இதிலே சாக்கிலே வாங்கிண்டு வரணுமா என்ன?

      நீக்கு
    10. கீசா மேடம்... அப்புறம் டூ மச்சா எழுதிட்டோமோன்னு தோன்றியது... சாரி..

      நான்லாம் நிறையவே வாங்கிவருவேன், மத்தவங்களுக்கும் கொடுக்கலாமேன்னு. யாரும் வரமாட்டாங்கன்னு நானே அஸ்யூம் பண்ணிக்கமாட்டேன். ஹா ஹா.

      நீக்கு
  9. // & அம்மா அப்பா இருவருக்கும் ஒரே குழந்தை என்று இருக்கும் குடும்பங்களில், பிள்ளையின் பெற்றோரும், பெண்ணின் பெற்றோரும் ஒன்றாக அவர்களோடு சேர்ந்து ஒரே குடும்பமாக வாழலாம் என்று நான் நினைக்கிறேன். எதிர்காலத்தில் இது சாத்தியம் ஆகலாம். // இப்போவே இருக்கு. எங்க உறவினர் சில குடும்பங்களின் நடைமுறை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ! நல்லது. பெண்ணும் பிள்ளையும் திருமணத்துக்கு முன்பே உறவினர் என்றால், இது சாத்தியமே. என் திருமணம் முடிந்த சில மாதங்கள் கழித்து, என் அப்பா, என்னுடைய மாமனார், மாமியார், இருவரையும் எங்களுடன் சில மாதங்கள் வந்து தங்கி இருக்கும்படி ஏற்பாடு செய்தார். அவர்கள் எங்களோடு சேர்ந்து ஒரு கூரை கீழ் இருந்தாலும், தனி சமையல், தனி செலவுகள் செய்துகொண்டு, சுமுகமாக வாழ்ந்திருந்தோம்.

      நீக்கு
    2. எங்க குடும்பத்தில் உறவெல்லாம் இல்லை. அந்நியம் தான். சொல்லப் போனால் எங்க அப்பா/அம்மா வழிகளில் உறவுகளில் பெண் எடுக்கவோ கொடுக்கவோ யோசிப்பார்கள். ஆகவே எல்லோருமே அந்நியம் தான்! :))) ஆனாலும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதில் பெருந்தன்மையுடன் இருந்தார்கள்.

      நீக்கு
  10. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வணக்கம் வணக்கம்! மதியம் ஆகி விட்டதால், காலை வெட்டிவிட்டேன்!

      நீக்கு
  11. நேரமில்லை. மற்றவர்கள் எழுதியிருப்பாங்கன்னு நினைத்தேன். யாருமே எழுதலைனு சொன்னதுனால நான் எழுதறேன்.

    1. வாழ்க்கையின் வெற்றி என்பதன் அளவு கோல் எது ? - எதுவுமே இல்லை. நாம் வெகு வயதானபோது, நல்லா வாழ்ந்தோம் என்று நாம் நினைத்தால் (அது 0.05% இருந்தாலே அதிகம்), அவர்கள்தாம் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள். நிஜ உலக வாழ்க்கையில் பலமுறை தோல்வியடைந்தவர்களும், பலமுறை முயற்சித்தோம் என்ற மன நிம்மதி அடைந்திருப்பார்கள்.

    2. நீங்கள் விடாமல் கடைப் பிடிக்கும் உடற்பயிற்சி எது ? சுதர்ஷன் கிரியாவும், ஓரளவு நடைப்பயிற்சியும்.

    3. கடவுளை நீங்கள் எப்படி உருவகம் செய்கிறீர்கள் ? - உருவகம் செய்வது கடினம். நம் ஆதர்ச கடவுளின் உருவத்தில்தான் நான் உருவகப்படுத்திக்கொள்கிறேன். அந்த அந்த மந்திரங்களின்போது மந்திரத்தின் அர்த்தத்துக்கு ஏற்றவாறு உருவகப்படுத்திக்கொள்ள முயல்கிறேன்.

    4. விபூதி குங்குமம் போன்ற "பிரசாதங்கள்" பால் நாம் காட்டும் மரியாதை அற்ப ஆயுள் கொண்டதாக இருப்பது ஏன் ? - சரியான கேள்வி. இத்துடன் கோவில்களில் நமக்குத் தரும் துளசி, பூக்கள், மாலயையும் சேர்த்துக்கொள்ளலாம். இது ஒருவரைப் பார்க்கும்போது கைகூப்பி வணக்கத்தைத் தெரிவிப்பதற்குச் சமம். அதற்காக அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது முழுவதும் கைகூப்பியபடியா நிற்கிறோம்?

    5. இலக்கியம் உல்லாச வர்கத்தினரின் பொழுது போக்கு என்பது சரியா ? - இல்லை. நான் இலக்கியங்கள் படித்தபோது பதின்ம வயதுதான். படிப்பது என்பது எல்லோருக்கும் உரியது. அதனை 'இலக்கியம்' என்று ஒவ்வொருவரும் அவரவர் அளவுகோலில் பார்க்கக்கூடாது. எதைப் படித்தாலும் இலக்கியம்தான், அது வெற்று உபயோகப்படாத கிசு கிசு சினிமாச் செய்திகளைத் தவிர.

    6. பாசாங்கு இல்லாத வாழ்க்கை சாத்தியமா ? - சாத்தியமே இல்லை. அப்பா ஆபீசிலிருந்து கதவைத் திறந்துகொண்டு வரும்போது, கட கட வென புத்தகத்தை எடுத்துவைத்துக்கொள்வதிலிருந்து, மருமகளுக்குத் தெரியாமல் சிறிது இனிப்பை வயதான மாமனார் சாப்பிடுவது வரை 'பாசாங்கு' நம்முடனேயே பயணிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை நான் நினைத்த கருத்து முதல் கேள்விக்கு நீங்க சொல்லிருக்கீங்க. முதல் வரிகள்...வாழ்வில் வெற்றி எனபதே மனதில் சந்தோஷமாக இருந்தாலே அதுவே வெற்றிதானே!

      5, 6 அதே அதே....அப்படியே டிட்டோ செய்கிறேன். நான் சொல்ல வந்ததும் இதே...பாசாங்கு இல்லாமல் வாழ்க்கை இல்லவே இல்லை...அந்தப் பாசாங்கு பிறரை பாதிக்கும் அளவு ஏமாற்றாத வகையில் என்பதைய்ம் சேர்த்துக் கொள்ளலாம்...

      2. நடைப் பயிற்ச்சி. மற்றும் சூரிய நமஸ்காரம், மூச்சுப்பயிற்சி. இந்த இரண்டும் இடையில் சர்ஜரி ஆன போதும் கீழே விழுந்த போதும் செய்ய முடியாமல் இருந்தது. பின்னர் மீண்டும்.

      கீதா

      நீக்கு
    2. நெ தா - சுதர்சன் கிரியா எப்படி செய்வது என்று எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

      நீக்கு
    3. ஆர்ட் ஆஃப் லிவிங் தலைமை அலுவலகம் அங்கே பெண்களூரில் தானே! அங்கே விட்டுட்டு இங்கே நெ.த.வைக் கேட்கறீங்க? :))))) நாங்களும் 2004--2005 ஆம் ஆண்டுகளில் ஆர்ட் ஆஃப் லிவிங் வகுப்புகளுக்குப் போனோம். பின்னர் போகலை! :)))) நாங்க செய்யும் யோகாவே போதும்னு விட்டுட்டோம்.

      நீக்கு
    4. நான் 9 வருஷம் ஒரு நாள் விடாம இதைச் செய்தேன். எந்த ஊர் டிராவல் பண்ணினாலும் இதனைச் செய்யாமல் விட்டதில்லை. மெக்சிகோவுக்கு நான் போய்ச்சேர்ந்தது மால 5.30 மணிக்கு. உடனே 6:30 மணிக்கு இதைச் செய்தபிறகுதான் சாப்பாடு. ஒரு தடவை தாய்வான் போய்ச் சேர்ந்தது மாலை 6 மணி, உடனே எனக்கு ஆர்கனைஸ் செய்திருந்த மீட்டிங், டின்னருக்குப் போயாகவேணும். அதனால் இரவு 9.30க்கு சுதர்சன் கிரியா செய்தேன்.

      சென்ற வருடம் 7 மாதங்களுக்கு மேல் சுதர்ஷன் கிரியா செய்யலை (உடல் நலம் காரணமாக. ப்ரஷர் இறங்கியதால் மனைவி தடா போட்டுவிட்டார்). இப்போதான் சென்ற வியாழனிலிருந்து ஆரம்பித்திருக்கிறேன்.

      இதனை அங்குதான் கற்றுக்கொள்ளணும் கேஜிஜி சார். நான் உங்களுக்கு தியானத்தின் ஆரம்பத்தைக் கற்றுத்தர முடியும். அதுவும் மூச்சுப் பயிற்சியில் சேர்ந்ததுதான்.

      நீக்கு
    5. கௌ அண்ணா சுதர்சனக் கிரியாவை நாம் அங்கு ப்ராப்பர் ஆர்ட் ஆஃப் லிவிங்க் ஆசிரியரிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். என் அத்தை பையன் ஆர்ட் ஆஃப் லிவிங்க் அட்வான்ஸ்ட் கோர்ஸ் எல்லாம்க் செய்து வகுப்புகளும் எடுக்கிறான். வேலையில் இருந்து கொண்டே. என்றாலும் எனக்கு அவன் கற்றுத் தர மாட்டேன் என்று சொல்லிட்டான். உறவினர்களிடம் கூடக் கற்றுக் கொள்ளக் கூடாதாம். வகுப்பில்தான் கற்றுக் கொள்ள வேண்டுமாம். அதாவது அவன் வகுப்பிற்கு நான் சென்று கற்கலாம். ஆனால் தனியாகச் சொல்லித் தரக் கூடாதாம்...

      கீதா

      நீக்கு
  12. அம்மா அப்பா இருவருக்கும் ஒரே குழந்தை என்று இருக்கும் குடும்பங்களில், பிள்ளையின் பெற்றோரும், பெண்ணின் பெற்றோரும் ஒன்றாக அவர்களோடு சேர்ந்து ஒரே குடும்பமாக வாழலாம் என்று நான் நினைக்கிறேன். எதிர்காலத்தில் இது சாத்தியம் ஆகலாம். //

    செம பதில். இந்த பதிலை நான் மிகவும் ரசித்தேன்! சாத்தியம் ஆகும். ஒரே பெண் குழந்தை உள்ளவர்களுக்கும் அந்த ஆசை இருக்கும் தானே? அடுத்த தலைமுறையில் இது கண்டிப்பாக சாத்தியமாகும் அண்ணா...எங்கள் வீட்டில் இப்போதே இதைப் பற்றி பேச்சுகள் நடக்கிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது சாத்தியமே இல்லை. பெண்ணின் பெற்றோர் வேற, பையனின் பெற்றோர் வேற. பையன் இருவரையும் ஓரளவு சமமா நடத்துவான் (பெண்ணின் பெற்றோர் மீது கூடுதல் கரிசனம். அதன் காரணம் நிறைய). பெண் எப்போதுமே அவளுடைய பெற்றோருக்கே முக்கியத்துவம் தருவாள். இல்லை என்று சிலர் சொன்னால், அவங்க 0.02% பெண்களில் ஒருவர்.

      இதன் காரணம் ராக்கெட் சயன்ஸ் இல்லை. பெண் தன் பெற்றோருடன் ஐக்கியமாக உணருவாள். மாமியார்னா ஒரு போலீஸ் கூட இருக்கற மாதிரி. பையனுக்கு அந்த மாதிரி வேற்றுமை இல்லை. மாமனார்/மாமியார் கொஞ்சம் மரியாதையா நடந்துப்பாங்க. பெற்றோருக்கு அவன் எப்போதுமே குழந்தைதான் என்பதால் டாமினேட் பண்ணுவாங்க, அவர்களுக்கு ரொம்ப வயதாகும் வரை

      நீக்கு
    2. பெண்ணுக்குத் தன் பெற்றோர் எனில் சலுகை அதிகமாக இருக்கும்/அவளே எடுத்துப்பாள். மாமியார், மாமனாரிடம் அப்படி முடியாது! மற்றபடி இந்த முக்கியத்துவம் தருவது எல்லாம் இருவருக்கும் ஒரே மாதிரித் தான் இருக்கும். ஆனாலும் குடும்ப விஷயங்களில் கணவன் வீட்டாரின் பேச்சே முன்னணியில் இருக்கும்.

      நீக்கு
    3. மிகவும் சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

      நீக்கு
    4. அம்மா அப்பாவிடம் பெண் உரிமையோடு சண்டை போடலாம். அதே பெண் அதே உரிமையோடு மாமனார் மாமியாரிடம் வாதம் செய்ய முடியாது. அவர்கள் விடமாட்டார்கள்.

      நீக்கு
    5. பா.வெ. மேடம்... யார் சொன்னது சரி? கீசா மேடமா நானா?

      நீக்கு
    6. நான் சொன்னது தான் நெ.த. நீங்க ஒண்ணும் சரியாச் சொல்லலையாக்கும்! :)))))

      நீக்கு
    7. நெ.த. நீங்க பெண் தன் பெற்றோருக்கே முக்கியத்துவம் தருவதாகச் சொல்லி இருக்கீங்க. நான் அதைத் தான் இல்லைனு சொல்லி இருக்கேன். அது முக்கியத்துவம் இல்லை. சலுகை என!

      நீக்கு
    8. கீசா மேடம்.... சும்மா கதை விடாதீங்க. பெண்களுக்கு அவங்க உறவு சம்பந்தப்பட்டவங்கதான் ரொம்ப முக்கியம். அதுக்கு என்னதான் லாஜிக்கான காரணம் சொன்னாலும் அதுதான் உண்மை.

      இதுல பெண் வீட்டுக்கு அவங்க போகும்போது நிலை என்றுதான் சொல்லியிருக்கேன். அதே பெண், தன் பெற்றோர் வீட்டுக்கு வந்தால், 'அக்கடா'ன்னு சும்மா உட்கார்ந்திருப்பாள், அம்மாதான் செஞ்சு போடட்டுமே என்றிருப்பாள் (அம்மா மிகவும் வயதாகும் வரை).

      நீக்கு
    9. நெல்லை, அப்படிப் பார்த்தால் வயசான அம்மாவையும் விடாமல் வேலை வாங்கும் பெண்கள் உண்டு. அந்தப் பெண்கள் ரகமே தனி! ஆனால் என்னதான் இருந்தாலும் பிறந்த வீட்டு மனிதர்களிடம் உரிமையும் சலுகையும் அதிகமாகத் தான் இருக்கும். அது வேறே! நீங்க சொல்வது வேறே! மற்றபடி கவனிப்புனு பார்த்தால் புகுந்த வீட்டினரைத் தான் விழுந்து விழுந்து கவனிக்கறாப்போல் இருக்கும்.

      நானெல்லாம் ஒரே கிண்டலும் கேலியும், விளையாட்டும் சிரிப்புமாக இருப்பேன்.இருந்தேன். எல்லோரையும் கேலி செய்வேன்/செய்வோம். ஆனால் கல்யாணம் ஆனதும் என்னை விடச் சின்ன மைத்துனர்கள்/நாத்தனார் ஆகியோரைக் கிண்டலோ, கேலியோ செய்ய முடியலை/செய்யக்கூடாது! ஆகவே மனதளவில் ஒரு விலகல் வந்துடும் இல்லையா? ஆனால் கவனிப்புனு வந்தால் என் பிறந்த வீட்டு மனிதர்களோடு அவங்களும் விசேஷங்களுக்கு வரச்சே புகுந்த வீட்டினருக்குத் தான் முதல் கவனிப்பு இருக்கும். இதை எங்க வீடுகளில் தப்பாயும் எடுத்துக்கறதில்லை. நீ அவங்களைக் கவனிச்சுக்கோ, நாங்க எல்லாம் உன்னைச் சேர்ந்தவங்க தானே என்பார்கள்! இது தான் நான் சொல்வது. மற்றபடி பிறந்த வீட்டில் அம்மாவிடம் செல்லம் கொஞ்சாத பெண்களே இருக்க மாட்டாங்க! ஆனால் என் அம்மாவே எங்க வீட்டுக்கு/எங்க குடித்தனத்துக்கு வந்து தங்கினால் என் கணவருக்கோ/மாமியார்/மாமனார்/மைத்துனர்களுக்கோ செய்ய வேண்டியதை நான் மட்டுமே தான் செய்வேன். என் அம்மா இதில் குறுக்கிட மாட்டார். அம்மா வீட்டிற்குப் போனால் அது தனி! இங்கே சொல்வது சேர்ந்து இருக்கும்போது நடப்பதை மட்டும்.

      நீக்கு
    10. கீசா மேடம்.... சும்மா கதை விடாதீங்க. பெண்களுக்கு அவங்க உறவு சம்பந்தப்பட்டவங்கதான் ரொம்ப முக்கியம். அதுக்கு என்னதான் லாஜிக்கான காரணம் சொன்னாலும் அதுதான் உண்மை.//

      நிச்சயமாக இல்லை நெல்லை......பிறந்த வீட்டில் கீதாக்கா சொன்னது போல்த்தான் நானும் பயங்கர கேலி விளையாட்டு சிரித்தல் ஹையோ என் கஸின்ஸ் சேர்ந்தால் அதிரும்..உரிமைகள் என்று..ஆனால் என் பிறந்த வீடு என் அம்மாவின் அம்மா இருந்த வரை கிட்டத்த்தட்ட புகுந்த வீடு போலத்தான் அதனால் எனக்கு எந்தவித வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால் என் அப்பாவின் அம்மா வந்த பிறகு உரிமைகள் நிறையவே பாட்டு, டான்ஸ் சிரித்தல் என்று. என் கஸின்ஸ் எல்லோருமாக...

      கல்யாணத்திற்குப் பிறகு பொறுப்பு என்பது வரும் போது கொஞ்சம் விளையாட்டுத்தனங்கள் குறையலாம் ஆனால் எனக்கு குறையலை. என் அப்பா பாட்டிதான் எனக்கு புத்திமதி நிறைய ஹிஹிஹி... கவனிப்பு என்பது புகுந்த வீட்டினருக்குத்தான் அதிகம்.

      என் மாமனார் மாமியாருக்கு என் பாட்டி, அத்தை எல்லாம் மிகவும் தோஸ்த் ஆகிட்டாங்க. கமென்ட்ஸ் இருக்கும் ஆனால் அது பெரிதாகப்படவில்லை...என் பிறந்த வீட்டினர் மிகவும் ஒப்லைஜிங்க்...மட்டுமல்ல எல்லாத்தையும் டேக் இட் ஈசி பாலிசிக்காரர்கள்.

      நான் என் அம்மாவிடம் இருந்து சாம்பார் பொடியோ, ரசப்பொடியோ வத்தலோ வாங்கிக் கொண்டதில்லை. ஏனென்றால் பாவம் அவர்கள். மிகவும் கஷ்டப்பட்டவங்க. எனவே அவங்கள வேலை வாங்கக் கூடாதுன்ற கொள்கை எனக்குண்டு. அம்மா பாட்டி ரெசிப்பிக்கள் கேட்டு நான் செய்து கொள்வது. அவர்களிடம் சலுகைகள் பெற்றுக் கொண்டதில்லை. பக்ஷனம் மட்டும் அவர்கள் சில விசேஷங்களுக்கு புகுந்த வீட்டிற்குக் கொண்டு வைப்பார்கள்...அவ்வளவே.

      என் டெலிவரி சிசேரியன். வீட்டிற்கு வந்தது பத்தாவது நாளில். அடுத்த இரண்டு நாளில் என் அம்மாவுக்கு திடீரென்று சுகர் லோவாகி தானே சிரிக்கத் தொடங்கினார். புடவை கட்டத் தெரியவில்லை. என்னென்னவோ பேசினார். உதவிக்கு அத்தை, பாட்டி என்று இருந்ததால் சமாளிக்க முடிந்தது. உடன் டாக்டரை வரவழைத்து அம்மாவிற்கு மருத்துவம் பார்த்து சர்க்கரை னிறைய சாப்பிடச் சொல்லி மறு நாள் தான் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்தார். அதே நேரத்தில் அடுத்த 10 தினத்தில் என் மாமா பெண்ணும் இரண்டாவது குழந்தை டெலிவரி. நார்மல்தான் என்றாலும் அம்மாதான் பார்த்துக் கொண்டார் ஆஸ்பத்திரி சென்று. அத்தை பாட்டி என்று இருந்ததால் இரண்டையும் சமாளித்தார்கள். அம்மா படும் அவஸ்தையை பார்த்து நானே 18 நாள் ஆன பிறகு குழந்தை துணிகளைத் துவைக்கத் துவங்கினேன். அத்தை வேலைக்குச் சென்றுவிடுவார். பாட்டியையும் வேலை செய்ய விடமாட்டேன். 40 நாள் ஆனதும் அம்மா கஷ்டப்பட வேண்டாம் என்று திருவனந்தபுரம் வந்துவிட்டேன் அப்போது அங்குதான் தாமசம். என் மாமியார் உடன் இருந்தார்.

      எங்கள் புகுந்த வீட்டிலும் எங்கள் நாத்தனார்கள், மச்சினர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் கேலி செய்து கொண்டு ஏன் மாமனாரே எங்களுடன் அமர்ந்து சீட்டு விளையாடுவார். தாயக்கட்டம் விளையாடுவார். என்ன நம் அம்மா அப்பாவிடம் கொஞ்சம் குரல் உயர்த்திப் பேசலாம் இங்கு அது முடியாது அவ்வளவே அல்லாமல் முன்னுரிமை புகுந்த வீட்டிற்குத்தான்.

      என் தனிப்பட்டக் கருத்து எந்தப் பெண்ணும் இரு வீட்டினரையும் சமமாகப் பாவிக்கனும் என்பது.

      கீதா

      நீக்கு
    11. நெல்லை, அப்புறம் என் மாமியார் தான் வாசிக்கும் கதைகளை (மம, கல்கி, என்று வீட்டிற்குவ் வருவது) எனக்கும் சொல்லுவார். தான் வாசித்த ரெசிப்பிகளை கிண்டலடித்தோ அல்லது கமென்ட் செய்தோ அல்லது நல்லதாக இருந்தால் அதைக் குறிப்பிட்டோ சொல்லுவார். இருவரும் தர்கமும் செய்திருக்கோம். நானும் அவரிடம் அம்மா நீங்க சொன்னது என் மனசுக்குக் கஷ்டமாகிடுச்சுன்னும் சொன்னதுண்டு. அவரும் என்னிடம் உரிமையோடு கோபித்துக் கொள்வார். கடிதம் தொடர்ந்து எழுதுவார். என்னிடமிருந்து கடிதம் இல்லை என்றால் ஏன் என்று கேட்டு கடிதம் வந்துவிடும். அடிக்கடி எங்களோடு வந்து இருப்பார்கள். மாமியாரும் மாமனாரும். கல்யாணம் ஆன புதிதிலேயே....

      முதல் ஐந்து வருடங்களுக்குப் பிறகு இன்னும் நல்ல புரிதலும் வந்தது.

      பெர்ஃபெக்ட் மாமியார் என்று நான் சொல்ல வரவில்லை. எல்லா மனிதரிடமும் இருக்கும் மைனஸ் உண்டுதான். நெகட்டிவும் உண்டுதான். ஆனால் அவருக்கும் வயது ஏற ஏற அனுபவங்கள் வர வர மாறினார். ஒரு வேளை என் சிறுவயது அனுபவங்கள், பிறந்த வீட்டு அனுபவங்கள் எனக்கு உதவியிருக்கலாம்...

      கீதா

      நீக்கு
    12. மேலே சொன்னதுல ஒன்னு விட்டுப் போச்சு நானும் பெர்பெக்ட் மருமகள்னு சொல்ல மாட்டேன்!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    13. //பா.வெ. மேடம்... யார் சொன்னது சரி? கீசா மேடமா நானா?//
      நெ.த. என் ஒட்டு உங்களுக்குத்தான், நான் டைப் செய்து, காபி,பேஸ்ட் பண்ணும் சைக்கிள் கேப்பில் கீதா அக்காவின் பதில் வந்து விட்டது.

      நீக்கு
    14. ஒவ்வொருத்தர் அனுபவம் ஒவ்வொரு மாதிரி. எங்க வீட்டு அனுபவங்களின் அடிப்படையிலேயே என் பதில் அமைந்துள்ளது. என் அப்பா வீடு, அம்மா வீடுகளில் இரு பக்கத்து உறவுகளும் இன்றளவும் தொடர்பில் இருக்கிறோம். எல்லா விசேஷங்களுக்கும் விட்டுக்கொடுப்பதில்லை. இதில் என் அம்மாவின் பிறந்தகத்து உறவினர்கள் அத்தனை பேரும் விடாமல் வந்து கௌரவிப்பார்கள். அப்பா பக்கத்து உறவினர்கள் இப்போது அதிகம் இல்லை என்பதும் இதற்குக் காரணம். எங்க குழந்தைகளும் இரு பக்கத்து உறவினர்களோடும் தொடர்பில் இருக்கின்றனர். அதுவும் இப்போதெல்லாம் வாட்சப் குழுமம் வந்தப்புறமா அவங்க தொடர்பு அதிகரித்தே உள்ளது. மற்றபடி பெண்களுக்குப் பிறந்த வீட்டு உறவு தான் முக்கியம் என்பதெல்லாம் என் வரையில் இல்லை! இதில் எந்த லாஜிக்கும் இருப்பதாகவும் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை எல்லோரிடமும் தொடர்பும் உண்டு. தொடர்பில்லாமல் இருக்கும் சமயங்களும் உண்டு.

      நீக்கு
    15. ஆனால் தி/கீதா சொல்லி இருக்காப்போல் புக்ககத்து மனிதர்கள் மருமகளிடம் நடந்து கொள்வது என்பது வெகு அபூர்வம். மாமனார்/மாமியார் எதிரே உட்காரவே அனுமதி கிடைக்காது. நாத்தனார் ஒருவரும் மைத்துனர்கள் இருவரும் சின்னவங்களா இருந்தாலும் அவங்களுக்கு உரிய மரியாதை கொடுத்தே ஆகணும். அவங்க படிப்பில் தவறு செய்தால் கூட அதைச் சுட்டிக்காட்டித் திருத்தக் கூடாது/முடியாது. ஆகவே நெருங்கிய பழக்கம் என்பது இல்லாமல் தான் போனது! அதை மறுக்கவே முடியாது.

      நீக்கு
    16. மற்றபடி யாருமே பெர்ஃபெக்ட் இல்லைதான் தி/கீதா சொல்வதைப் போல! எல்லோரிடமும் குறைகள்/நிறைகள் உண்டு. அதை ஏற்றுக்கொண்டே வாழ்க்கை நடத்தணும். இங்கே நெ/த. அழுத்தம் திருத்தமாகப் பெண்களுக்குப் பிறந்த வீட்டினர் தான் முக்கியம் எனத் திரும்பத் திரும்பச் சொல்லுவதால் நானும் வற்புறுத்தும்படி ஆயிற்று. மற்றபடி No Hard Feelings to one and all. :)))))))

      நீக்கு
    17. கீசா மேடம்... இதுல என்ன ஹார்ட் ஃபீலிங்க்ஸ்? நான் சொந்த மற்றும் மற்ற வீடுகளில் பார்த்ததை வைத்துச் சொல்கிறேன். அபூர்வமா கீதா ரங்கன் போன்றவர்களுக்கு இரு இடமும் ஓரளவு நன்றாக இருக்கும் (பழகுறதுல). இப்படிப்பட்டவர்களுடைய குடும்பங்களையும் நான் கண்டிருக்கிறேன், வியக்கிறேன்.

      ஜி.எம்.பி. சார் வந்த மாதிரி தெரியலை. வந்தால், என் கருத்துக்குத்தான் ஆமாம் போடுவார் (அதில் உண்மை இருப்பதால்). அதுக்காக எல்லாப் பெண்களும் அப்படித்தான்னு சொல்லவே முடியாது.

      பா.வெ. மேடம்... நன்றி கிளாரிஃபை பண்ணினதற்கு. நான் என் மாமனாரிடம் ஃப்ரீயாகப் பேசுவதுபோல எங்க அப்பாவிடம் பேசினதில்லை. ஒரு இடைவெளி (மரியாதையான) இருக்கும். இது இயல்புதான்.

      இந்தக் கருத்து. நான் ஒவ்வொருவருடைய பின்னூட்டத்தையும் படித்துவிட்டேன் என்பதற்கு.

      நீக்கு
  13. வேட்டி விளம்பரங்களை பார்க்கும்போது எரிச்சல்தான் வரும்.

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  15. //அம்மா அப்பா இருவருக்கும் ஒரே குழந்தை என்று இருக்கும் குடும்பங்களில், பிள்ளையின் பெற்றோரும், பெண்ணின் பெற்றோரும் ஒன்றாக அவர்களோடு சேர்ந்து ஒரே குடும்பமாக வாழலாம் என்று நான் நினைக்கிறேன். எதிர்காலத்தில் இது சாத்தியம் ஆகலாம். //

    நானும் அப்படித்தான் நினைத்தேன், சொல்லி வந்தேன்.
    சாத்தியம் ஆகும் என்றும் நம்பினேன்.

    ஆண் தன் பெற்றோர்களை உடன் வைத்துக் கொள்ளலாம் என்றால் பெண்ணும் வைத்துக் கொண்டால் என்ன? வைத்துக் கொள்ளலாம். இருகுடும்பமும் மகிழ்ச்சியாக ஒற்றுமையாக பேரன், பேத்திகளுடன் மகிழ்ந்து இருக்கலாம்.

    சில பென்ணின் பெற்றோர்கள் அது நன்றாக இருக்காது கொண்டான் , கொடுத்தான் வீட்டில் இருப்பது என்று ஒதுங்குகிறார்கள்
    சில வீட்டில் பெண்ணின் பெற்றோர் பெண் வீட்டில் இருக்கிறார்கள் என்பதால் ஆணின் அம்மா, அப்பா வருவதை தவிர்க்கிறார்கள்.

    இரு குடும்பமும் தவறு இல்லை ஒன்றாக இருக்கலாம் ஓற்றுமையாக எனும் போதுதான் சாத்தியம் ஆகும். நீங்கள் சொல்வது.


    உறவினர் வீட்டில் இரண்டு பெண் அதில் ஒரு பெண் இறந்து விட்டது, ஒரு பெண் மேல் மிகவும் பாசம் வைத்து இருந்தனர்.
    அவளுக்கு வரும் கணவர் நம்மை நன்கு பார்த்துக் கொள்வார் என்று நம்பினார்கள். ஆனால் அவர் மனைவியின் உறவினர் , மற்றும் பெற்றோர்களும் வரக்கூடாது என்று மனைவியிடம் சட்டம் போட்டதும் இல்லாமல், அப்பா, அம்மாவை குழந்தையின் விடுமுறை மட்டும் போய் பார்த்து வர வேண்டும். அதுவும் நீ மட்டும் போய் பார்த்து வர வேண்டும் என்று சொல்கிறார்.

    அந்த பெண் உங்கள் வீட்டில் மட்டும் வரலாமா என்று கேட்டாள், அதற்கு எங்கள் பெற்றோரும் வர வேண்டாம், நான் என் குழந்தையை அழைத்துக் கொண்டு என் பெற்றொரிடம் காட்டி வந்து கொள்கிறேன் என்கிறார்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உன்னிப்பாக கவனித்தால் இதில் ஏதோ ஈகோ பிரச்னை இருப்பதுபோல உணர்கிறேன். ஒவ்வொரு குடும்பத்திலும், குடும்பத் தலைவனின் அல்லது தலைவியின் நடவடிக்கைகளுக்கு, முன்னர் நிகழ்ந்த சம்பவம், பேச்சு என்று ஏதாவது காரணங்கள் இருக்கக்கூடும். எனக்குத் தெரிந்த ஒரு உறவினர் குடும்பத்தில் கூட, திருமணம் செய்துகொண்ட கணவன், மனைவியின் தாயார் தன் வீட்டுக்குள் வரக்கூடாது என்று 144 தடை உத்தரவு போட்டிருப்பதாக அறிந்தேன். சொந்தம் விட்டு செய்துகொள்ளும் திருமணங்களில் இது நடக்க வாய்ப்புகள் அதிகம்.

      நீக்கு
    2. நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. ஈகோ பிரச்னை இருப்பது உண்மை. பெண்ணுக்கு நிறைய அன்பான உறவினர் அடிக்கடி போக வர இருந்து இருக்கிறார்கள், மாப்பிள்ளை தரப்பில் உறவினர்களை தள்ளியே வைத்து இருக்கிறார்கள் யாரும் அவர் வீட்டை தேடி வர மாட்டார்கள். பெண் வீட்டார் வந்து பெண்ணை பாராட்டுவது, கொண்டாடடுவது பிடிக்கவில்லை அவருக்கு.
      சொந்தம் இல்லாமல் அந்நியத்தில்தான் திருமணம்.

      நீக்கு
    3. கௌ அண்ணா ஈகோ வேதான்....நோ டவுட்டு!! கோமதிக்கா சொன்ன பதிலேதான்....

      கீதா

      நீக்கு
  16. அவர் மனைவியின் உறவினர் , மற்றும் பெற்றோர்களும் வரக்கூடாது என்று மனைவியிடம் சட்டம் போட்டதும் இல்லாமல், அப்பா, அம்மாவை குழந்தையின் விடுமுறை மட்டும் போய் பார்த்து வர வேண்டும். அதுவும் நீ மட்டும் போய் பார்த்து வர வேண்டும் என்று சொல்கிறார்.//

    இது போன்றவை மனதிற்கு வேதனை தருபவைதான் கோமதிக்கா.

    சமீபத்தில் நிச்சயமான என் மச்சினர் பெண் விஷயத்தில் அவள் வருங்கால கணவன் பெண்ணின் அம்மாவையும் அம்மா என்றே அழைக்கிறார். பையன் வீட்டில் அவர்களுக்கு ஒரே பையன். கூடப் பிறந்தவர்களும் இல்லை. எனவே கல்யாணத்திற்குப் பிறகு எல்லோரும் சேர்ந்திருக்க வாய்ப்புகளையும் யோசிக்கின்றனர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல விஷயம் கீதா. நல்லபையன், அதுபோல் அந்த பெண்ணும் கணவரின் பெற்றோரை தன் அப்பா, அம்மாவாக நினைத்து மகிழ்ச்சியாக இருக்கட்டும்.

      நீக்கு
  17. பாரம்பரியத்துகான பதில்கள் செம!

    கௌ அண்ணாவின் பதில் சிரித்துவிட்டேன்...

    நான் காபிய விடாட்டாலும் சுக்கு மல்லி காபியும் சாப்பிடறேன்..வீட்டுல பொடி பண்ணி வைச்சுட்டு..பனங்ககல்கண்டு போட்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. என் தம்பி மனைவிக்கு அவளுடன் கூடப்பிறந்தே ஒரே அக்கா மட்டுமே! அவள் பெற்றோர் மாற்றி மாற்றி இரு பெண்களிடமும் தான் இருந்தனர். அம்பத்தூரில் கூட்டுக்குடும்பமாக இருந்தப்போக் கூட என் அப்பா, அம்மாவோடு அவள் பெற்றோரும் இருந்திருக்கின்றனர். இது 30 வருஷத்துக்கு முந்தைய நடப்பு! அதன் பின்னரும் அவள் தாய் கடைசி வரையிலும் என் தம்பி மனைவி கூடத்தான் இருந்தாள். அவள் அக்காவுக்கு வயதும் ஆகி உடல்நிலையும் சரியில்லாமல் இருந்ததால் தன் தாய்க்கு இறந்த பிறகு செய்யவேண்டிய சடங்குகளை என் தம்பி மனைவி தான் செய்தாள். இப்போதும் வருஷா வருஷம் திதி கொடுத்து வருகிறாள். இது அவள் உரிமை, கடமை. பலரும் பெண்ணுக்கு இதெல்லாம் கிடையாது என்கின்றனர். ஆனால் நம் சாஸ்திரமோ, தர்மமோ அவ்வாறு சொல்லவில்லை. பெண்ணுக்கும் பெற்றோரைப் பார்த்துக்கொள்ளும் உரிமையும், கடமையும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பெண்ணுக்கும் பெற்றோரைப் பார்த்துக்கொள்ளும் உரிமையும், கடமையும் உண்டு.// கரெக்ட் .

      நீக்கு
    2. கீதாக்கா உங்கள் கருத்தை //இது அவள் உரிமை, கடமை. பலரும் பெண்ணுக்கு இதெல்லாம் கிடையாது என்கின்றனர். ஆனால் நம் சாஸ்திரமோ, தர்மமோ அவ்வாறு சொல்லவில்லை. பெண்ணுக்கும் பெற்றோரைப் பார்த்துக்கொள்ளும் உரிமையும், கடமையும் உண்டு.//

      அதே அதே. இதை நான் அடிக்கடிச் சொல்லிட்டிருக்கேன். என் கசின் மனைவி வீட்டிலும் இரு பெண்கள். அவர்கள் அம்மா இப்போது என் கசின் வீட்டில் அவன் மனைவி இரண்டாவது பெண் அங்குதான் இருக்கிறார். என் கஸின் மனைவியின் அப்பா இறந்துவிட்டார். அப்போது அக்காவும் தங்கையுமாகத்தான் சடங்குகள் எல்லாம் செய்தனர். இப்போதும் திதி கொடுத்து வருகின்றனர். இதற்கு முதலில் பிரச்சனை வந்தது. அவர்களுக்கு ஆதரவாக இருபக்கமும் பேசி ஸ்மூகமாகப் போகிறது இப்போது...

      என் நெருங்கிய உறவினர் வீட்டில் ஒரே பையன். அவன் விரும்பும் பெண் வீட்டில் இரு பெண்கள். பையனிடம் அப்பெண் வைத்த ஒரே ரிக்வெஸ்ட் என் அம்மா அப்பாவும் இங்கு என்னோடு இருக்கலாம் தானே? நான் உங்க அம்மா அப்பாவை நல்லா கவனிச்சுப்பேன் அதே போல நீயும் என் அம்மா அப்பாவை கவனிச்சுக்கனும். பல ஆண்கள் பிறந்த வீட்டினரை அதுவும் அம்மா அப்பா வரக் கூடாதுனு சொல்றாங்க அதனால்தான்..என்று

      பையனும் சரி அவன் பெற்றோரும் சரி இது என்ன கேள்வி அவங்களும் நம்மோடு இருக்கலாமே என்று சொல்லியாச்சு... பெண்ணின் பெற்றொருக்கும் இவர்களை விட வயது கூடுதல்...70 ஆகிவிட்டது.

      கீதா

      நீக்கு
  19. நீங்கள் கேட்டிருந்த கேள்விகளுக்கு அடுத்த புதன்(6.2.19) பதிலளித்தாள் போதும் என்று நினைத்து விட்டேன். ஹி ஹி! சரி இப்போது சொல்லிவிட்டால் போகிறது.

    1. அப்படியெல்லாம் எதுவும் இல்லை. வாழ்க்கையை வாழ்வதுதான் முக்கியம்.

    2. விடாமல் கடைப்பிடிக்க நினைத்து, முடியாமல் விட்டு விட்டு கடைபிடிக்கும் உடற்பயிற்சி சுதர்ஷன் க்ரியா. கொஞ்ச நாட்களாக பவர் யோகா.

    3. பிரபஞ்சத்தின் ஒழுங்கு அதை பேரறிவு என்று காட்டுகிறது.

    4. அந்த நாமில் நான் இல்லை.

    5. சரியில்லை.

    6. வாழ்க்கையை ஸ்வாரஸ்யமாக்குவது பாசாங்குகள்தான்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 6 அப்படியா! பாசாங்கு என்பது போலித்தனம் இல்லையோ!

      நீக்கு
    2. நம் ஊரில் பெண்களுக்கு இருக்க வேண்டிய நாள் வகை குணங்களில் 'மடம்' என்பதும் ஒன்று. அந்த மடம் என்பது முட்டாள்தனம் அல்ல. தனக்கு ஒரு விஷயம் தெரிந்திருந்தாலும் தெரியாதது போல் காட்டிக்கொள்வது. கணவனின் ஈகோவை அது satisfy பண்ணும். இது போல பல பாசாங்குகளை வீட்டிலும், வெளியிலும் செய்யத்தான் வேண்டியிருக்கிறது. அதை டிப்ளமசி என்பார்கள். ஒரு முக்கியமான விஷயம் பாசாங்கு என்பது ஏமாற்றுவது அல்ல.

      நீக்கு
  20. 1. வாழ்க்கையில் வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. வருவதை ஏற்றுக்கொண்டு மனத்திருப்தியுடன் வாழ்வதே வாழ்க்கை. என்னைப் பொறுத்தவரை more than enough!

    2. ஹிஹிஹி, யோகா விடாமல் பனிரண்டு வருஷங்களுக்கும் மேல் பண்ணிக் கொண்டிருந்தேன். இப்போது 2,3 வருடங்களாகக் கால் வலி! உட்கார்ந்தால் எழுந்துக்க முடியாமல் முட்டியை மடக்க முடியாமல் பிரச்னை! ஆகவே உடல் பயிற்சி என்பதெல்லாம் நான் செய்யும் வீட்டு வேலைகள் தான்! எந்த வேலைக்கும் ஆள் வைச்சுக்காமல் நானே செய்தேன்/செய்கிறேன்.

    3. கடவுள்னா என்ன, நம்ம கஜமுகநாயகர் மட்டும் தான்! :))) அவரிலே எல்லாமும் அடக்கம் இல்லையோ!

    4. இல்லையே, எங்க வீட்டில் எல்லா விபூதி, குங்குமங்களையும் அதற்கெனத் தனியாக ஒரு மண் சட்டி வாங்கி அதில் போட்டு வைப்போம். குழந்தைகள்/பெரியவங்களுக்கு ரொம்ப முடியலைனா அந்த விபூதி, குங்குமத்தை நெத்தியில் இடுவோம். எல்லா உம்மாசிங்களோட அருளும் அதில் இருக்குமே! நம்மவர் காலை/மாலை சந்தி பண்ணிட்டு அந்த விபூதி தான் இட்டுப்பார்.

    5.உல்லாசவர்க்கத்தினரின் ரசனையே வேறே! இலக்கியத்தை ரசிக்கும்படியான தீவிரமனப்பான்மை அவங்களுக்கு இருக்குமா? சந்தேகமே! அதோடு எது இலக்கியம் என்பதிலும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. சுஜாதா எழுதினதெல்லாம் இலக்கியமே இல்லைனு அடிச்சுச் சொல்றவங்க உண்டு. கல்கியின் எழுத்தைப் பரிகசித்தவர்கள் உண்டு. பழங்கால/சங்ககாலங்களில் எழுதப்பட்டவை தான் இலக்கியம்னு சாதிப்பவர்கள் உண்டு. இலக்கியத்தின் அளவுகோலை முதல்லே கண்டுபிடிக்கணும்.

    6. ஹிஹிஹி, பாசாங்கு எல்லாம் சும்மா உளஉளாக்கட்டிக்குத் தானே! பிறரைப் பாதிக்காத வரையில் அதனால் தப்பெல்லாம் இல்லை. ஆகவே கொஞ்சம் கொஞ்சம் பாசாங்கு செய்யலாம். தப்பில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க பதில்கள் சிந்திக்க வைக்கின்றன.

      நீக்கு
    2. திடீர்னு புத்திசாலி ஆயிட்டேனோ? :)))))) எதுக்கும் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துட்டு வந்து பார்க்கிறேன்.

      நீக்கு
    3. //திடீர்னு புத்திசாலி ஆயிட்டேனோ? :// எல்லாம் நெல்லை உணவின் மகிமை.

      நீக்கு
    4. நீங்க வேறே நெல்லை, அங்கே எங்க நல்ல சாப்பாடு கிடைச்சது? இங்கே வந்து சனிக்கிழமைக்கப்புறமா இந்த 3 நாள் சாப்பிட்டதில் தான் புத்திசாலித்தனம் அதிகரிச்சிருக்கு! இன்னிக்குக் காலம்பர சுறுசுறுப்பா வேலை செய்தேனாக்கும்!

      நீக்கு
    5. என்னாது... நெல்லைல நல்ல சாப்பாடு கிடைக்கலையா? //இந்த 3 நாள் சாப்பிட்டதில் தான் புத்திசாலித்தனம்// - எனக்கென்னவோ அந்த பாளையங்கோட்டை முறுக்குதான் உங்க புத்திசாலித்தனத்தை இன்னமும் தூண்டிவிட்டிருக்கோன்னு ஒரு சம்சயம்.

      நீக்கு
    6. நெ.த. பாளையங்கோட்டையைத் தான் கோட்டை விட்டுட்டேன்னு இன்னமும் சொல்லிட்டு இருக்காரே! :)))) அதோட நாங்க வாங்கிட்டு வந்த கல்லிடைக்குறிச்சி முறுக்கையும் நான் சாப்பிடலை! வம்பு எதுக்கு? இப்போத் தான் 3,4 நாளா வயிறு அமைதி காக்கிறது. அதைக் கெடுத்துக்கொள்ளணுமா? :))))

      நீக்கு
  21. பின்னூட்டங்கள் சுவாரசியமாக இருக்கிறது ஆனால் அளவு கோலாக தம்மையே நினைத்துக் கொள்கிறார்களோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரவர் அனுபவங்களே அவரவர் அளவுகோல் ஐயா. மற்றவர் நிலையிலிருந்து எவ்வாறு பார்க்கவோ/யோசிக்கவோ முடியும்?

      நீக்கு
  22. !. வெற்றி என்பதே ஒரு அளவீடுதானே! மற்றவை முயற்சிகள் அல்லது work in progress
    2. உடற்பயிற்சியா? உடம்புதான் என்னைப் படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறது
    3. உருவகம் செய்ய முடியாத ஆனால் நமக்குள்ளேயே இருப்பதான உணர்வாய்
    4. .மனிதர்களுடைய உணர்வுகள் எல்லாமே அற்பாயுள் தான் என்கிறபோது இதுமட்டும் விதிவிலக்கா?
    5. என்னமாதிரியான இலக்கியம் என்பதைப்பொறுத்து மாறக்கூடிய விஷயம். தெம்மாங்கும் எசப்பாட்டும் உல்லாச வர்க்கத்துடையதா என்ன?
    6.சாத்தியமே! பாசாங்கு வாழ்க்கையில் ஏமாற்றத்தை மட்டுமே விட்டுப்போகும்.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் சகோதரரே

    இந்த வார கேள்வி பதில்கள் மிகவு‌ம் அருமை. சுஜாதா பதில்களையும், அனைவரின் கமெண்ட்ஸ்களையும் அதிகப்படியாக ரசித்தேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  24. நல்ல கேள்விகள் எல்லாமே அருமை. பதில்களும் அப்படியே.

    சுஜாதா அவர்களின் பதில்கள் சிந்திக்க வைக்கின்றன.

    1. வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது இல்லை. நம் மனம் சந்தோஷமாக இருந்தால் அதுவேதான்.

    2. அப்படி எதுவும் இதுவரை இல்லை. இனியும் வருமா என்று தெரியவில்லை. எனக்கு வீட்டுப் பணிகள் அதிகம். கல்லூரியிலும் ஏறி இறங்கல் என்று நாள் முழுவதும் பணிகள் என்பதால் உடற்பயிற்சி என்று இல்லை.

    3. எக்கடவுளை வணங்கினாலும் என் மனதிற்குகந்த கடவுள் உருவம் தான் தெரிவார். எதிலும் எல்லாவற்றிலும் அவர்தான் தெரிவார்.

    4. நான் எப்போதும் என் பையில் சிறிய சிறிய பேப்பர்கள் வைத்துக் கொள்வதுண்டு. இல்லை என்றாலும் இப்போது கோயில்களில் சிறிய பேப்பர்கள் வைக்கிறார்களே. (தமிழ்நாட்டில்) இல்லை என்றாலும் கோயில்களில் தரும் பிரசாதத்தை பேப்பரில் எடுத்துக் கொண்டு வந்து வீட்டில் சேர்த்துவிடுவேன். விபூதி, குங்குமம் என்று. அதை தினமும் நான் காலையில் இறைவனை வணங்கியதும் என் குழந்தைகளின் நெற்றியில் இடுவது வழக்கம்.

    5. இல்லை நிச்சயமாக இல்லை.

    6. பாசாங்கு இல்லாமல் வாழ முடியுமா என்ன? சில இடங்களில் பாசாங்கு என்பது உதவும். நழுவிச் செல்வதற்கு. இங்கு பாசாங்கு என்பது போலி அல்ல. அதாவது போலித்தனம் தான் நல்லதல்ல. பாசாங்கு என்பது பிறரை பாதிக்காமல் இருக்க வேண்டும். அப்படிப் பாதித்தால் அது போலித்தனம். ஏமாற்றல்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  25. //முன் காலத்தில் ஆண்கள் சம்பாதி - அவர்களின் மனைவி வாழ்க்கையை அனுபவி என்று இருந்தனர். //

    ஆமாம், சம்பாதிக்கும் கணவனுக்குத்தான் முதல் டிகாஷன் காபி என்று பாலில் அதிகம் தண்ணீர் ஊற்றாமல், முதல் டிகாஷன் விட்டு கணவருக்கு காபி கொடுத்து விட்டு தான் கடைசி டிகாஷன் ஊற்றி காபி கொடுத்து அனுபவித்தார்கள்.

    சம்பாதிக்கும் கணவருக்கு நல்ல உணவு தயாரிக்க அதிகாலை எழுந்து விறகடுப்பிலும், குமுட்டி அடுப்பிலும் சமைத்து நேரத்திற்கு சமைத்து, கையிலும் கொடுத்து அனுபவித்தார்கள்.

    வார்க்கும் தோசையில் நல்லதை சம்பாதிக்கும் கணவருக்கு கொடுத்து விட்டு, தீய்ந்ததையும், பிய்ந்ததையும் தான் சாப்பிட்டு அனுபவித்தார்கள்.

    கணவருக்கு சாதாரண தலைவலி என்றால் கூட வீட்டில் குழந்தைகள் சத்தம் போடாமல் பார்த்துக் கொண்டு, சூடாக காபி, மாத்திரை கொடுப்பதோடு தலையில் தைலம் தேய்த்து விட்டு பணிவிடை செய்யும் மனைவிமார்கள் பிளக்கும் தலைவலி வந்தால் கூட தலையில் ஒரு துண்டை கட்டிக்கொண்டு, ஒன்றுக்கு இரண்டாக மாத்திரை போட்டுக் கொண்டு வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்ததோடு, தன் வியாதிகளை வெளியே சொன்னால் கணவருக்கு பணக்கஷ்டம்,மனக்கஷ்டம் என்பதால் எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அனுபவித்தார்கள்.(இப்போதும் பெரும்பான்மையான பெண்கள் செய்யும் தவறு இதுதான் என்றுதான் மருத்துவர்கள் கூறுகிறார்கள்).

    தனக்கு வீட்டு செலவிற்காக கணவர் கொடுக்கும் பணத்திலும், அவ்வப்பொழுது கிடைக்கும் வெற்றிலை பாக்கு பணத்திலும் மிச்சம் பிடித்து, கணவருக்கு தேவையான பொழுது உதவியும், பெண் குழந்தை இருந்தால் அவளுக்காக பாத்திரம், நகை என்று சிறிது சிறிதாக சேர்த்து அனுபவித்தார்கள்.

    தன்னுடைய உள்ளாடைகள் வாங்கக்கூட கணவனிடம் கையேந்தி, தான் விரும்பும் வாரப்பத்திரிகையை இரவல் வாங்கி படித்து, கச்சேரி, சினிமா, போன்றவைகளுக்கு கெஞ்சி, கொஞ்சி அனுபவித்தார்கள்.
    எவ்வளவு என்ஜாய்மென்ட்..!



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பா.வெ. மேடம்... இந்த விஷயங்களெல்லாம், கணவன் ஆணையிட்டு நடக்கிறதா இல்லை மனைவியே பைத்தியக்காரத் தனமாய், தியாகம் செய்வதாகவும் பணத்தை மிச்சப்படுத்துவதாகவும் நினைத்துச் செய்வதா?

      பல குடும்பங்களில், மனைவி தானாகவே தியாகியாக நினைப்பதுதான் நடக்கிறது.

      எனக்கு இந்த மாதிரி குடும்பங்களைக் கண்ட அனுபவத்தால், என்னுடனேயே சாப்பிடணும், எனக்காகக் காத்திருக்கக்கூடாது என்றெல்லாம் பலதடவை சொல்லியிருக்கேன். என்னைப் பொறுத்தவரைல, பெண்கள்தான் தங்களுக்கும் குடும்பத்தில் உரிமை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

      நீக்கு
    2. இன்னொன்று பா.வெ. மேடம்... நிறைய குடும்பத் தலைவிகள், தாங்கள் சிக்கனமாக கணவன் சம்பாதிப்பதைச் செலவு செய்யாமல் (தனக்கு) இருப்பதாக கற்பனை செய்துகொண்டு, மிஞ்சின எல்லாவற்றையும் வயிற்றுக்குள் தள்ளி, பிற்காலத்தில் உடல் நலப் பிரச்சனையால் அவதியுற்று, குடும்பத்தையும் அல்லலுறச் செய்வார்கள். இப்படிப்பட்டவர்களையும் நான் கண்டிருக்கிறேன்.

      அதுனால, 'பெண்களை' மட்டும் சப்போர்ட் பண்ணாதீங்க. ஹா ஹ ஹா.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!