வியாழன், 14 மார்ச், 2019

தலைப்பில்லா அரட்டை



சமீபத்தில்  வந்த ஒரு கனவு...


பஸ்ஸின் முன்புறம் வெளியே இரண்டு இருக்கைகள் இணைக்கப்பட்டு அதில் அமர்ந்து பயணிப்பது போல கனவு!  புதிய வசதியாக அதில் ஸீட் பெல்ட்டும் வைத்திருக்கிறார்கள் என்பதைப்  பார்க்கிறேன்.  இப்போது.  நானும் மகனும் அதில் அமர்ந்து பயணிக்கிறோம்.  அகாரணமாய் மகன் என் பக்கமாய்ச் சாய,  இதோ நான் கீழே விழுந்துவிடப்போகிறேன்  என்னும் நிலையிலிருந்து மீள்கிறேன்.  கஷ்டப்பட்டு பின்னால் கண்ணாடியில் பொருத்தியிருக்கும் (!) ஸ்ப்ரிங் போன்ற பிடித்துக்கொள்ளும் சிறு கம்பியிலிருந்து விரல் நழுவும் பிரமையிலிருந்துகொண்டே  'ஸீட் பெல்ட்' பொருத்திக் கொள்கிறேன்!

அருகில் ஒரு பஸ் க்ராஸ் ஆகிறது.  அதில் டிரைவருக்கு முன்னால் கண்ணாடி இல்லை.  சங்கீத சபாவில் ரசிகர்கள் அமர்ந்திருப்பது போல அதில் முன்னால் பயணிகள் அமர்ந்திருக்கிறார்கள்.  

இப்படி(யும்) ஒரு கனவு!


=================================================================================================


தந்தையை கவனிக்க மாட்டேன் என்கிறான் பையன்.  தந்தைக்கு ஆதங்கம்.  தனது பக்கத்துக்கு வீட்டுக்கார சிநேகிதரிடம் சொல்கிறார்.  சிநேகிதர் "நாலும்" அறிந்தவர்.  சக்கரவட்டமாய்ப்பேசத்தெரிந்தவர்.

சமயங்களில் கதாசிரியர் தான்  சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்வதற்கு சில கேரக்டர்களை உருவாக்குவார்,  எஸ் வி வி அப்படி உருவாக்கிய கேரக்டர் ஜயராமய்யர் என்று நினைக்கிறேன்.  1949 இல் விகடனில் வெளிவந்த கதை.

..........."எதற்கும் எதற்கும் உபமானய்யா?" என்று கைலாசய்யர் எரிச்சலாய்ச் சொன்னார்.

"எல்லாம் அதற்கும் அதற்குதான்.  பிள்ளை இன்கம்டாக்ஸ் ஆபீஸராய் பெரிய பதவியிலிருக்கிறான்.  இன்னும் மேலும் மேலும் பதவி உயரப்போகிறது.  கவர்னர் பங்களாவுக்கு "லெஸி"க்குப் போவது முதலிய பெருமைகள் எல்லாம் அவனுக்கு ஏற்படப்போகிறது.  அவன் இந்த உச்சிக்குடுமி ஸ்கூல் வாத்தியாரை இடுப்பில் கட்டிக்கொண்டோ தலையில் தூக்கிக்கொண்டோ போய்க்கொண்டிருப்பான் என்று நினைக்கிறீரா!  போமய்யா போம்...  முன்னாடி உம்மை ஸ்கூலில் வேலையில் வைத்துக் கொண்டிருக்கிறார்களா ஐயா?  வயதாய் விட்டதென்றால் நாமாகவே கூடத்து மூலைக்குப்போய் அங்கேயே வீற்றிருப்பதுதானே ஐயா விவேகம்?  வயதாய் யாருக்கும் உபயோகம் இல்லாத எந்த வஸ்துவையும் யாரும் கவனிக்க மாட்டார்கள்.  சீண்ட மாட்டார்கள்.  தமிழில் மணிமேகலை என்று ஒரு உயரிய நூல் இருக்கிறதே தெரியுமா?  அதில் சாதுவன் என்றொரு வாணிபன் கடலில் மரக்கலம் உடைந்து, காட்டுமிராண்டிகளாகிய "நக்கசாரணா நயமிலர்" வசிக்கும் ஒரு தீவுக்குப் போய்ச சேர்ந்தான்.  சாதுவன் அவர்கள் பாஷை தெரிந்தவனாதலால் அவர்களை அவனை நன்கு நடத்தினார்கள்.  சாதுவன் அந்த தீவு அரசனுக்கு அறநெறி கூறினான்.  'உயிர்களைக் கொல்லாதே, கள் குடிக்காதே' என்று புத்திமதி சொன்னான்.  'கள்ளும் ஊனும் கைவிடின் இவ்வுடம்பு உள்ளுறை ஓம்புதலாரற்றேன்' என்றான்.



அவனுக்கு சாதுவன் பிறிதொரு தர்மம் கூறினான்.  

"மூத்துவிளிமாவொழித்து எவ்வுயிர் மாட்டும் தீத்திற மொழிக' என்றான்.  ('வயதாய்விட்ட மிருகங்களை அடித்துத் தின்பத்தைத்தவிர மற்ற எந்த உயிர்களையும் ஹிம்சை செய்யாதே' என்றான்)   வயதான மிருகங்களைக் கொன்று தின்பது அதர்மமாகத் தோன்றவில்லை.  பசுவை "கறக்கிறவரையில் கறந்துகொண்டு கசாப்புக்காரனிடம் ஓட்டு" என்பதுதானய்யா உலகம்.  உங்கள் பிள்ளை சாம்பு மாத்திரம் விசேஷனாய் இருக்கப் போகிறான் என்று நினைக்கிறீரோ?  எவனுடைய உதவியும் இல்லாமல் ஜீவனம் செய்ய உமக்கு சக்தியை இன்னும் ஈஸ்வரன் கொடுத்திருக்கிறானே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டு இரும் ஐயா!  பிள்ளை பெண் தகப்பன் தாய் என்பதுபோன்ற உறவுகளிலுள்ள உண்மை ரகசியம் உபநிஷத்தில் ஓர் ப்ராம்மணத்தில் உடைத்துச் சொல்லப்பட்டிருக்கிறது ஐயா!  புருஷன் பெண்ஜாதி பேரிலும் தகப்பன் பிள்ளைபேரிலும் ஏன் ஆசையாயிருக்கிறார்கள் என்று கேள்வி கேட்டு 'ஆத்மன  : காமாய' என்று பதில் சொல்லப் பட்டிருக்கிறது.

All out of selfishness, self love and for self gratification - எல்லாம் அவனவன் ஆத்ம திருப்திக்காகவே என்றார். உண்மை அவ்வளவுதான்.  இருக்கிற விரஸங்களைப் பாராட்டாமல் சரிப்படுத்திக்கொண்டு நாம் பூடகமாயிருக்கிற வரையில்தான் ஐயா சிநேகம், விசுவாசம், வாத்ஸல்யம் பிதுர்பக்தி என்பவைகளெல்லாம்.  உங்கள் சாம்பு மாதம் சம்பளம் வாங்கினதே தகப்பனாரிடத்தில் நூறு ரூபாய் கொண்டுவந்து கொடுத்துக் கொண்டிருந்தானானால் அவனை உத்தமமான பிள்ளை என்று போற்றுவீர்கள்.  புத்திர வாத்ஸல்யம் பெருக்கெடுத்து நிற்கும்!  விஷயம் அதுதானே ஐயா?" என்று ஜயராமய்யர் கைலாசமய்யரை சிறிது மட்டம் தட்டி வைப்பதற்காக விவேகத்தையும் விதண்டாவாதங்களையும் கலந்து காய்ச்சினார்.

"அப்படி எல்லாம் ஒன்றுமில்லை.  நீங்களாக எண்ணிக்கொண்டு விடுகிறீர்கள் போலிருக்கிறது.  உமக்கு எப்போதும் கோணலாகவே பேசி வழக்கமாய்ப் போய்விட்டது.  உம்முடைய பூர்வபக்ஷம், திருஷ்டாந்தம், சித்தாந்தம் எல்லாம் அபத்தம்.  உம்மோடு கொஞ்சநாழி ஒருவன் பேசினாலே அவன் மனது கெட்டுவிடும்" என்று மனஸ்தாபப்பட்டுக் கொண்டு கைலாசய்யர் எரிச்சலாய்ப் போய்விட்டார்.



ரமணியின் தாயார்  - எஸ்விவி 


=============================================================================================================================

என்னிடம் சேமிப்பாக இருக்கும் வரிகள் இவை.  எதிலிருந்தாவது எடுத்தேனா?  இல்லை எதையாவது படிக்கும்போது அதில் இருந்தவற்றைச் சுருக்கி  எழுதி வைத்தேனா என்று நினைவில்லை...

********************

- கட்டுப்பாடற்ற சுதந்திரம் காட்டுமிராண்டிகளை உருவாக்கும்.  கட்டுப்பாடுடன் கூடிய சுதந்திரமே மனிதத்தை நிலை நாட்டும்.


- புத்திசாலிகள் அடுத்தவர் அனுபவங்களிலிருந்தும் பாடம் கற்கிறார்கள். மூடர்கள் தனது அனுபவங்களிலிருந்தும் பாடம் கற்பதில்லை.

- எல்லா வேலைகளையும் ஒருவரே செய்ய வேண்டும் என்பது தவறு.  அவரவர் அவரவர் வேலையை மட்டும் பார்த்தாலே எல்லாம் சரியாக இருக்கும்.

- கற்பனைப் பிரச்னைகளுக்கு என்றுமே தீர்வு கிடைக்காது!

- பெருமாள் ஒருவர்தான்.  திருப்பதியில் பணக்காரராக இருக்கிறார்.  எங்கோ ஒரு குக்கிராமத்தில் அதே பெருமாள் விளக்கேற்றி வைக்கக்கூட ஆளில்லாமல் இருக்கிறார்.

- பதில் கிடைக்கா விட்டாலும் கேள்விகள் அவசியம்.  யோசிப்பு எனும் செயல்  அங்கு தொடங்குகிறது.

- காலப்போக்கில் உங்கள் அபிப்ராயங்கள் உங்களுடனே பெரும்பாலும் மாறுபடும்.

- ஒரு கேள்வி போதும் முதலில்.  மற்ற கேள்விகள் தானாக உருவாகும் கிடைக்கும் பதில்களிலிருந்து.

- மக்களுக்கான பிரச்னைகளை பெரும்பாலும் மக்கள் பேசுவதில்லை. 


=================================================================================================

 ஜனவரி மாதம் படித்து எடுத்து வைத்த செய்தி...


காமெடியா வேதனையா...

தருமபுரி நகராட்சிப் பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய்க் கிணற்றில் இரண்டு அடி ஆழத்திலேயே தண்ணீர் பீறிட்டுக் கிளம்பியது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாயில் போர்வேல் அமைத்த நகராட்சி நிர்வாகத்தின் காமெடியைக் கண்டு, தருமபுரி மக்கள் வயிறு குலுங்கச் சிரித்தனர்.

தருமபுரி நகராட்சிக்கு உள்பட்ட 30-வது வார்டு, எஸ்.வி. சாலைக்கு நேற்று போர்வெல் அமைக்கும் வாகனமும், அதற்குத் தேவையான உபகரணங்களைச் சுமந்து வரும் வாகனமும் நேற்று காலை வந்தன. அங்குள்ள தாட்கோ அலுவலகம் எதிரில், நிபுணர் மூலம் போர்வெல் அமைக்க உறுதி செய்யப்பட்ட இடத்தில் அந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு, கற்பூர ஆராதனையுடன் சிறிய பூஜை நடத்தப்பட்டது.

பின்னர் போர்வெல் வாகனம் இயங்கத் தொடங்கியது. சுமார் இரண்டு அடி ஆழத்துக்கு தரையைத் துளைத்த உடனேயே, அணையைத் திறந்து விட்டதுபோல் தண்ணீர் பீறிட்டுக் கிளம்பியது. பல இடங்களில் 500 அடி, 600 அடி தோண்டினாலும் வராத தண்ணீர், இரண்டு அடியிலேயே வந்து விட்டதால் போர்வேல் பணியாளர்கள் ஆனந்த அதிர்ச்சியடைந்தனர்.

‘எங்கள் அனுபவத்தில் இப்படியொரு அதிசயம் நடந்ததே இல்லை; நீரூற்று பார்த்த வல்லுநர் அபார திறமைசாலிதான்’ என்று சிலாகித்துப் பேசியபடியே, போர்வெல் அமைக்கும் பணியைத் தொடர்ந்தனர். சுமார் 20 அடி நீளம் கொண்ட இரண்டு ராடுகள் தரைக்குள் இறக்கப்பட்டன.

அப்போதுதான் தெரிந்தது…அவர்கள் துளையிட்டது ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டக் குழாய் என்று. வயிறு குலுங்கச் சிரித்த போர்வெல் தொழிலாளர்கள், அங்கிருந்து கிளம்பிவிட்டனர். அதற்குள் இந்த தகவல் தருமபுரி நகரில் பரவிவிட்டதால், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து நகராட்சியின் சாதனையைப் பார்த்து, நமட்டுச் சிரிப்பு சிரித்தனர்.

திமுக-வைச் சேர்ந்த தருமபுரி எம்.பி. தாமரைச்செல்வனின், நாடாளுமன்ற நிதி மூலம் நகராட்சிப் பகுதியில் போர்வெல் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, பணிக்கான ஒப்பந்த ஏலம் விடப்பட்டுள்ளது. ஏலம் எடுத்த ஒப்பந்தாரர், நீரூற்று நிபுணர் மூலம் போர்வெல் அமைக்கத் தோதான இடம் பார்த்துள்ளார். நிலத்தடியில் ஏராளமான தண்ணீர் செல்லும் இடத்தைத்தான் அவர் தேர்வு செய்துள்ளார். அந்தோ பரிதாபம்…அது நிலத்தடி நீர் அல்ல…  ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாயில் செல்லும் தண்ணீர்.

இதுகுறித்து நகராட்சித் தலைவர் சுமதி கூறுகையில், எம்.பி. நிதியில் போர்வெல் அமைக்கும் முன்பு, நகராட்சி நிர்வாகத்துடன் ஆலோசித்து, தரைக்கு அடியில் என்ன திட்டங்கள் செயல்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும். எம்.பி. தரப்பு அலட்சியத்தால், சுமார் 20 லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிவிட்டது. இதற்கெல்லாம் எம்.பி.-யிடம் தான் கட்டணம் வசூலிக்கப் போகிறோம் என்றார்.

தருமபுரி எம்.பி. தாமரைச்செல்வன் கூறுகையில், எம்.பி. நிதியை நகராட்சி வசம் தருவது மட்டும்தான் எங்கள் பணி. அதன்பிறகு, போர்வெல் அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம், அதிகாரிகள் ஆகியோர்தான் கண்காணிக்க வேண்டும். அவர்கள் குடிநீர்க் குழாயை உடைத்து விட்டு, எங்களைக் குறை கூறுகிறார்கள் என்றார்.

எது எப்படியோ…இன்னும் கொஞ்ச நாளைக்கு சிரித்து மகிழ தருமபுரி நகர மக்களுக்கு சுவையான காமெடிச் சம்பவம் கிடைத்து விட்டது. 

[ தி இந்து ]



============================================================================================

கமலா அக்கா 'எங்கே உங்கள் கவிதை, எங்கே உங்கள் கவிதை' என்று மறுபடி மறுபடி கேட்டதால்....



 ஏதோ ஒரு புள்ளியில் 
இணைந்து விடும் 
என்கிற நம்பிக்கையில்தான் 
நகர்கிறது வாழ்க்கைப்பயணம்.





 பசுமை நினைவுகளுடன் 
படுத்து கிடக்கிறது 
பழுத்த இலை. 






உடலும் மனம் 
உயரத்துக்குப் போனாலும் 
கண்களும் காலும் 
தயாராகவே இருக்கின்றன 
தரைதொட 

========================================================================================

ராஜு ஜோக் - 1949

167 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. இன்னும் கொஞ்சம் எடுத்து வைத்திருக்கிறேன் வெங்கட். அவ்வப்போது பகிர்கிறேன்.

      நீக்கு
  2. கவிதை - பழுத்துக் கிடந்த இலை மனதைத் தொட்டது.

    கதை - பக்கத்து வீட்டு கேரக்டர் மூலம் சொல்வது பிடித்தது.

    எழுதி வைத்திருந்தது - சிலவற்றை நானும் படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
  3. கனவு - வித்தியாசமான கனவு தான்.... பேருந்தின் வெளியே அமர்ந்து பயணம் - ஆஹா... நல்ல காற்றோட்டமாக இருக்குமே! :)

    பதிலளிநீக்கு
  4. தருமபுரி நகராட்சி - என்ன சொல்ல... நல்லாவே வேலை செய்யறாங்க போங்க! :(

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் காலை வணக்கம். சற்று பெரிய பதிவு போல தெரிகிறது. பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. தருமபுரி நல்ல நகைச்சுவைதான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கில்லர்ஜி.

      இது பழசு... புதுசாக ஒன்றை - முகநூலில் பகிர்ந்திருந்தேன் - 62 வருடங்களாக காது கேளாதவர் போல நடித்து மனைவியிடமிருந்து தப்பித்து வந்தாராம் - அவரைப்பற்றிய செய்தி - அதைப் பகிர எண்ணினேன். மறந்து விட்டது!

      கணினியில் எனக்கு முகநூல் பக்கம் திறக்க மாட்டேன் என்கிறது. மொபைலில் திறக்கிறது.

      நீக்கு
  7. கவிதை ரசிக்கும்படி இருந்தது. அதிசயமாக மூன்று கவிதைகளும் பிடித்திருந்தது.

    தரைக்கு அடியல் நீரோட்டம் கண்டவர் புத்திசாலிதான்.

    கனவுகூட வித்தியாசமாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    இன்று வியாழன் பதிவு சுவாரஸ்யமானதாக இருக்குமேயென எழுந்தவுடன் வருகை தந்தேன். இடையில் போன வாரம் நான் பதிவில் கவிதைகள் எதுவும் இல்லையே,.! எனக்கேட்டதும் நினைவுக்கு வரவே, ஆஹா.. அருமை..அருமை ! என் பெயர் சொல்லி நான் தேடுவதாக கூறியே, முத்து முத்தான கவிதைகளை இங்கே தந்திருக்கிறீர்கள்.! மிக மிக நன்றி சகோதரரே.

    கவிதைகளை மிகவும் ரசித்தேன். "தினமும் நம்பிக்கையில் ஓடும் வாழ்க்கை பயணமும், வயதான பின்னும் பசுமை நினைவுகளை அசை போடும் மனமுமாக, எவ்வளவு உயரப் பறந்தாலும் விருபபமாக நடை போட துடிக்கும் இயல்புமாக, கவிதைகள மிகவும் நன்றாக உள்ளது. பாக்கி அனைத்தையும் பிறகு நிதானமாக படித்து விட்டு வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. இன்றைய கவிதைகள் நீங்கள் கேட்டதால் எழுதியவையே. ரசித்ததற்கும், பாராட்டியதற்கும் நன்றி.

      நீக்கு
  9. 62 வருடங்களாக காது கேளாதவர் - மகளிர் மட்டும் படம் நினைவுக்கு வந்தது

    பதிலளிநீக்கு
  10. வாழ்க நலம்....
    அனைவருக்கும் அன்பின் வணக்கங்களுடன்.....

    பதிலளிநீக்கு
  11. தமிழ்நாடே சிரிப்பாக சிரித்துக் கேவலப்பட்டுக் கிடக்கிறது..

    இதிலே தருமபுரி ஒரு பருக்கை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தருமபுரி மட்டுமா, சென்னை மதனந்தபுரம், அருப்புக்கோட்டை நிர்மலாதேவி, இப்போது பொள்ளாச்சி...

      நீக்கு
  12. வேலைக்குச் செல்ல வேண்டும்..
    அப்புறமாக வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  13. எங்கோ ஒரு புள்ளியில் இணைந்து விடும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கை...

    ஆனாலும்
    புள்ளியைத் தான் காணவில்லை...

    பதிலளிநீக்கு
  14. இங்கு குடிநீர் குழாய் சாக்கடையுடன் கனெக்சன்... தினமும் தண்ணீர்...!

    கவிதை வரிகள் அருமை...

    பதிலளிநீக்கு
  15. சமையல் குறிப்புகளுக்கு மட்டும் வரும் எனக்கு இந்த பதிவின் மூலம் விருந்தே வைத்துவீட்டீர்கள் படிக்க சுவராஸ்யமாக இருந்தது ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  16. //சங்கீத சபாவில் ரசிகர்கள் அமர்ந்திருப்பது போல அதில் முன்னால் பயணிகள் அமர்ந்திருக்கிறார்கள்.//
    கனவில் கூட சங்கீதம். சங்கீத சபா ரசிகர் அமர்ந்து இருப்பது போன்ற கனவு .
    பஸ்ஸில் போகும் போது நல்ல பாடல் போட்டால் கேட்கும் நாம் சபா ரசிகர்கள். பேரூந்து சங்கீத சாபாதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா... அப்படி இல்லை கோமதி அக்கா.. சும்மா ஒரு உவமைக்கு சொன்னேன். கனவில் கண்டதை விளக்க முற்பட்டதன் விளைவு! சஞ்சய் சுப்பிரமணியம் கச்சேரிகளில் மேடையில் அவரைச் சுற்றிலும் கூட ரசிகர்கள் அமர்ந்திருப்பார்கள்!

      நீக்கு
  17. சமயங்களில் கதாசிரியர் தான் சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்வதற்கு சில கேரக்டர்களை உருவாக்குவார், எஸ் வி வி அப்படி உருவாக்கிய கேரக்டர் ஜயராமய்யர் என்று நினைக்கிறேன். 1949 இல் விகடனில் வெளிவந்த கதை.//

    படிக்க நல்ல விஷயங்கள் இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.



    "

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னம் கூட சில இடங்கள் எடுத்து வைத்திருக்கிறேன். முடிந்தால் பின்னர் பகிர்கிறேன்.

      நீக்கு
  18. ரமணியின் தாயார் சொல்லும் அறிவுரைகள் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையில் ரமணியின் தாயார் அறிவுரை வாங்கும் இடத்தில்தான் இருப்பார்!

      நீக்கு
  19. //அப்போதுதான் தெரிந்தது…அவர்கள் துளையிட்டது ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டக் குழாய் என்று. வயிறு குலுங்கச் சிரித்த போர்வெல் தொழிலாளர்கள், அங்கிருந்து கிளம்பிவிட்டனர். அதற்குள் இந்த தகவல் தருமபுரி நகரில் பரவிவிட்டதால், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து நகராட்சியின் சாதனையைப் பார்த்து, நமட்டுச் சிரிப்பு சிரித்தனர்.//

    நல்ல சிரிப்புதான். எவ்வளவு தண்ணீர் விரயம், எவ்வளவு பொருள் நஷ்டம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னையில் இப்போதே தொடங்கி விட்ட தண்ணீர்க் கஷ்டம் நினைவில் நிழலாடுகிறது அக்கா.

      நீக்கு
  20. கவிதைகள் மூன்றும் அருமை. முதல் கவிதை உங்கள் வலைத்தளத்தில் படித்த நினைவு இருக்கிறது.
    கமலா ஹரிஹரனுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. நேற்று மாயகண்ணாடி என்ற படம் பார்த்தேன், (சேரன் படம்) அதில் இப்படி தான் இன்சூரன்ஸ் ஏஜெண்டு படும் பாடு சொல்வார்கள்.
    குறுகிய காலத்தில் பணக்காரர் ஆக நிறைய தொழில் செய்ய ஆசைபடும் கதாநாயகனைப்பற்றிய படம். இருக்கிரதை விட்டு பறக்கிரதை பிடிக்க ஆசை படும் படம். மீண்டும் இருப்பதே போதும் அதில் உழைத்து முன்னேறுவோம் என்று முடிவுக்கு வருவார்.

    பழைய சினிமாக்களில் இன்சூரன்ஸ் ஏஜேண்டுகளை வைத்து சிரிப்பு பாலிஸிகளை வைத்து கிரைம் கதைகள் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா.. நானும் அந்தப் படம் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
    2. வாழ்க்கையில் மேலே மேலே உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும். அதை விட்டு விட்டு, இருப்பதே போதும் என்று மெசேஜ் கொடுத்ததுதான் மாயக்கண்ணாடி படம் தோல்வியடைய காரணம் என்று அதன் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் கூறியிருந்தார்.

      நீக்கு
  22. 20 லட்சம் லிட்டர் குடிநீர் விணாக்கப்பட்டதில் தருமபுரியார்களுக்கு நகைச்சுவையாமா!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறு செய்தவர்கள் அல்லவா.... சமாளிப்பார்கள். கஷ்டம் அனுபவிப்பவர்களுக்கு வேதனை.

      நீக்கு
  23. சமீபத்திய கனவுக்கு பலன்:

    சொந்த வீட்டுக்கு உரிமையாளர் ஆவதற்கான ஆயத்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. எத்தனை இழுத்தடிப்புகள் இருந்தாலும் விடாப்பிடியாக முயற்சித்து உங்கள் கனவு இல்ல முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஸார்... பெரிய தடங்கல். இப்போதைக்கு இல்லை!

      நீக்கு
  24. எஸ்.வி.வி.யின் இயற்பெயர் எஸ்.வி. விஜயராகவாச்சாரியார். முதல் எஸ். அவர் பிறந்த ஊரான செவிலிமேடு என்ற கிராமத்தைக் குறிக்கிறது. இந்த கிராமம் காஞ்சீபுரம் -- செய்யார் வழிப்பாதையில் காஞ்சீபுரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. எஸ்.வி.வி.யின் பேரன் என் நண்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அவர் இயற்பெயர் அறிவேன். முதலில் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்தவர் அப்புறம் விகடனில் தமிழில் எழுதினாராம்.

      நீக்கு
  25. ஆஆஆவ்வ்வ் இன்று புதன் கிழமை இல்லை விசாளக்கிழமை:) என ஶ்ரீராமுக்கு ஆராவது தந்தி அடியுங்கோ:)... ஆளைக் காணம்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் வருவார் அதிரா....வருவார்..மெதுவாக..

      கீதா

      நீக்கு
    2. வாங்க அதிரா.,,, விசாளன் உண்மைதான்... ஆனாலும் நேர மேலாண்மை கஷ்டமாயிருக்கிறது. உடல்நிலையும் படுத்துகிறது.

      நீக்கு
    3. ஓ சில சமயங்களில் அப்படித்தான் ஸ்ரீராம், எங்கும் போக முடியாமல் இருக்கும், சிலசமயம் ஓவராக் கும்மி போடுவோம்.. சூப் குடியுங்கோ.

      நீக்கு
  26. எனக்குத்தான் கண்டபடி கனவு வருதே எனப் பார்த்தால் ஶ்ரீராமுக்குமோ... அதுதான் நல்ல கனவென ஜீவி ஐயா சொல்லிப்போட்டார்ர்....
    அப்போ குடிபூருதலுக்கு இப்பவே சாறிக்கு ஒன்லைன் ஓடர் பண்ணப்போறேன்ன்ன்ன்ன்ன்:)..
    ஆனா புது வீட்டு மொட்டை மாடி, வலையுலக லேடீஸுக்கு மட்டும்:)... ஆனா அங்கு அஞ்சுவை விடமாட்டேன்.. என்னைத் தள்ளி விட்டிடுவா:).... கீதா தேம்ஸ் கரைக்கே வருகிறேன் என்றமையால கீதா அலவுட்:)....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹாஅ ஹா அதிரா நானும் ரிசர்வ் பண்ணிட்டேன் நமக்கு மட்டும்னு ஸ்ரீராம் வீட்டு மொட்டை மாடியை!!! புதுசை!!!

      பாவம் ஏஞ்சல்!! அவங்க உங்களுக்கு எம்புட்டு சப்போர்ட் பண்ணறாங்க உங்க பிஏ ஆவ இருந்துட்டு...அவங்களும் அலவ்டு!!! ஓகேயா...

      ஆமாம் ஆமாம் உங்க பின்னாடிதான் ஒளிஞ்சுட்டுகிட்டு நிக்கிறேன் தேம்ஸ்ல ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. கனவுக்கென்ன... ஏதாவது வரும். பலன் நமக்குத் தோன்றியதைச் சொல்லிவிட வேண்டியதுதான்!

      நீக்கு
    3. ஏதாவது ஒரு ஆற்றங்கரை ஓரம் வீடு கிடைக்கிறதா என்று பார்க்கிறேன் கீதா...!!! உங்கள் நலம் தேவலாமா?

      நீக்கு
  27. தலைப்பில்லா அரட்டைனு தலைப்பே கொடுத்தீங்களே ஸ்ரீராம் ஹா ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுத்திட்டீங்களே...நு வாசியுங்க...ரொம்ப பிழை வருது இப்பல்லாம் தட்டச்சும் போது..

      தமிழ்ல டி வாங்கினவங்க வேற இருக்காங்க இங்க!!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. வேறு எதுவும் தோன்றவில்லை கீதா!

      நீக்கு
    3. நல்லாருக்குனு சொல்ல வந்தேன்....அதைத்தான் தலைப்பாவே கொடுத்துட்டீங்களேனு!!!!

      இதையே நான் தலைப்பாகப் பார்த்தேன் ஸ்ரீராம் அதைத்தான் சொல்லியிருந்தேன்...

      கீதா

      நீக்கு
  28. பஸ்ஸின் முன்புறம் வெளியே இரண்டு இருக்கைகள் இணைக்கப்பட்டு அதில் அமர்ந்து பயணிப்பது போல கனவு! // ஆஹா அட!!! நல்ல அழகான கனவு...நல்லா காத்து வாங்கிட்டே போலாம் ஆனா ட்ரைவருக்கு எதிர்க்க வர வண்டி தெரியனுமே!!! இல்லைனா அம்புட்டுத்தான்...

    அருகில் ஒரு பஸ் க்ராஸ் ஆகிறது. அதில் டிரைவருக்கு முன்னால் கண்ணாடி இல்லை. சங்கீத சபாவில் ரசிகர்கள் அமர்ந்திருப்பது போல அதில் முன்னால் பயணிகள் அமர்ந்திருக்கிறார்கள். //

    ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் இது நல்லாருக்கே...அப்படினா பஸ் போன்ற அமைப்பில இனி ஒரு மேடை போட்டா?

    வித்தியாசமான கனவுதான் ஸ்ரீராம்....ஜீவி அண்ணா சொல்லிருப்பது போல உங்க கனவு நல்லவிதாமா பலிக்கனும்!!! என்பதே எங்கள் எல்லார் விருப்பமும் பிரார்த்தனைகளும்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிரைவருக்கு எதிரே இல்லை கீதா... இடது புறம்!

      எதிர்பஸ்ஸில் மேடை போட்டு அல்ல... தரைத்தளத்தில் அமர்ந்திருக்கிறார்கள்! முன்னால் சிலர் கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு!

      நீக்கு
    2. டிரைவருக்கு எதிரே இல்லை கீதா... இடது புறம்!//

      ஹப்பா பயணிகள் தப்பிச்சுட்டாங்க//

      //எதிர்பஸ்ஸில் மேடை போட்டு அல்ல... தரைத்தளத்தில் அமர்ந்திருக்கிறார்கள்! முன்னால் சிலர் கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு!//

      இது கண்டிப்பா பேய்க் கனவு!!! ஹா ஹா ஹா ஹா பின்ன தரைத் தளத்துல் கால்கள் தொங்கப் போட்டுக் கொண்டு!!!

      ரொம்பவே வித்தியாசமான கனவுதான்...

      மீக்கு கனவே வரமாட்டேங்குதே!!!

      கீதா

      நீக்கு
    3. //மீக்கு கனவே வரமாட்டேங்குதே!!!//

      அதற்குத் தூங்க வேண்டும் கீதா!!!! எனக்கு பேய்க்கனவும், யானைக்கனவும்தான் வருகிறது!

      நீக்கு
  29. உபமானய்யா//

    புரியவில்லையே ஸ்ரீராம். இச்சொல்லின் பொருள் என்ன?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உவமைதான்... வேறென்ன! 1949 பேச்சு வழக்கு!

      நீக்கு
    2. ஓ!! உவமானம்!!! இப்பத்தான் மண்டைல பல்பு எரியுது!! ஹா ஹா ஹா

      (கன்னடத்தில் வ என்பது ப என்று வரும்....நாம் வா என்பது இங்கு பா....)

      கீதா

      நீக்கு
  30. ரமணியின் தாயார் - எஸ்விவி

    கதையில் சில வார்த்தைகள் புரியவில்லை என்றாலும் நன்றாக இருக்கிறது. முழுவதும் வாசிக்க வேண்டும்..

    1949 லியே இப்படி பெற்றோர், பிள்ளை கேப் வந்துவிட்டதா....வயதானவர் ....மூலை என்றெல்லாம் கூட வருகிறதே...அப்ப இது தொடர்கதை தான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இல்லையா...

    // உமக்கு எப்போதும் கோணலாகவே பேசி வழக்கமாய்ப் போய்விட்டது. உம்மோடு கொஞ்சநாழி ஒருவன் பேசினாலே அவன் மனது கெட்டுவிடும்" என்று மனஸ்தாபப்பட்டுக் கொண்டு கைலாசய்யர் எரிச்சலாய்ப் போய்விட்டார்.//

    மிகவும் ரசித்த வரிகள்....உண்மைதானே இது....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெற்றோர் பிள்ளை கேப் சேர சோழ பாண்டிய மன்னர்கள் காலத்துக்கும் முன்னாலேயே இருந்திருக்குமே...

      நீக்கு
    2. இருந்திருக்கும் தானோ? அரசர்கள் குடும்பத்தில் இது ரொம்ப சகஜம் ஏன்னா அது அரசியல்...ஆட்சி என்பதால...

      சாதாரண குடும்பத்திலுமானு...

      கீதா

      நீக்கு
  31. பாருங்க அப்பல்லாம் சும்மா சாதரணா நாள்லயே கூட டீ யோடு ஜிலேபி வேற...அத்தனை ஈசியா செஞ்சுருக்காங்க பாருங்க....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜிலேபி அப்பல்லாம் ஸ்நாக்ஸாட்டமா ​இருந்திருக்கு என்று தெரிகிறது!

      நீக்கு
  32. - கற்பனைப் பிரச்னைகளுக்கு என்றுமே தீர்வு கிடைக்காது!//

    சூப்பர்!! சூப்பர்...பல பிரச்சனைகளை நாமேதான் கற்பனை செய்து கொண்டு வரவழைத்துக் கொள்கிறோம்...என்றுதான் எனக்குத் தோன்றும்....

    பெருமாள் ஒருவர்தான். திருப்பதியில் பணக்காரராக இருக்கிறார். எங்கோ ஒரு குக்கிராமத்தில் அதே பெருமாள் விளக்கேற்றி வைக்கக்கூட ஆளில்லாமல் இருக்கிறார்.//

    இதுவும் மிகவும் ரசித்தேன். நான் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு...

    //கேள்விகள் அவசியம். யோசிப்பு எனும் செயல் அங்கு தொடங்குகிறது.//

    மிகவும் சரியான வரிகள். நம்ம கேள்வியின் நாயகிக்கு இது ரொம்பவே பொருந்துமே!!!!! (பூசாருக்குப் புகை)

    நான் இப்படிச் சொன்னாலும் புதனுக்கு கேள்வி கேட்க தோன்றவே மாட்டேங்குது..ஹா ஹா ஹா ஹா..ஆனால் வேற சமயத்துல வரும் அதை அப்பவே குறிச்சு வைத்து புதனுக்கு அனுப்பனும்னு நினைச்சு அப்படியே விட்டு மறந்து போய்டும்...இனி குறித்து வைத்துக் கொண்டு அனுப்பனும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ரசித்த வரிகளை நீங்களும் ரசித்திருப்பதற்கு மகிழ்ச்சி கீதா.

      நீக்கு
  33. காலப்போக்கில் உங்கள் அபிப்ராயங்கள் உங்களுடனே பெரும்பாலும் மாறுபடும்.//

    யெஸ்ஸு யெஸ்ஸு...அது நம் மெச்சுரிட்டி வளர்வதால், பல அனுபவங்கள் நம்மை மாற்றுவதால் அதிலிருந்து கற்கும் பாடங்களால்...என்று நிறைய அடுக்கலாம்..

    - மக்களுக்கான பிரச்னைகளை பெரும்பாலும் மக்கள் பேசுவதில்லை. //

    அக்மார்க்!!

    உங்கள் சேமிப்பு அருமை ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் வைச்சுருக்கேன் இப்படி சேமிப்புகள். சில கதைகளில் பயன்படுத்த என்று ...பயன்படுத்தியதுண்டு...ஆனால் கோட் செய்யாமல் அப்படியே வசனமாக..ஒன்றுமட்டும் கதையில் பயன்படுத்தினேன்..

      இன்னும் இருக்கு...எப்போதேனும் பகிர்கிறேன்..

      கீதா

      நீக்கு
  34. ரமணியின் தாயார்! படித்த நினைவு இல்லை. எஸ்.வி.வியின் பல நாவல்களும் படிச்சிருக்கேன். இது பெயரே கேட்டதில்லை. ஜிலேபி சுத்தறதெல்லாம் அந்தக் காலங்களில் இவ்வளவு எளிதாக இருந்திருக்கு போல! 49 ஆம் வருஷமே டீ யைப் பற்றி எஸ்விவி எழுதி இருக்கார். ஒருவேளை சென்னைக்கு வந்து விட்டதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னிடம் எஸ் வி வி சிறுகதைகளும் இருக்கிறதென்று நினைக்கிறேன். டீ காலம் பற்றிய உங்கள் ஆச்சர்யம்தான் என் ஆச்சர்யம்!

      நீக்கு
  35. ஐம்பதுகளில் ப்ரூக் பாண்டும், லிப்டனும் போட்டி என்பார்கள். இருவரும் தங்கள் தங்கள் தேயிலை விற்கப் பெண்களை வேலைக்கு அமர்த்தி வீடு வீடாகச் சென்று சின்னப் பாக்கெட் தேயிலைத் தூளில் நான்கு பேருக்குத் தேநீர் போட்டுக் காட்டச் சொல்லுவார்களாம். நான் குழந்தையாக இருந்தப்போ அந்த மாதிரிச் சில அக்காக்கள் வந்து போட்டிருக்காங்க என்பார் அம்மா! அப்பாவும் அவங்க இலவசமாகக் கொடுத்தத் தேயிலைத் தூளில் தினம் தினம் தேநீர் தயாரித்துச் சாப்பிட்டிருக்கார் என்பார் அம்மா. அதே போல் தான் அப்போ சர்ஃபோ, ஏதோ ஒன்று! அறிமுகம். வீட்டுக்கே வந்து துணிகளைத் துவைத்துக் காட்டுவார்களாம். எனக்குத் தெரிந்து நெய்வேலி லீகோ கரி தயாரித்ததும் கரி மூட்டைகளைக் கைவண்டியில் (கைவண்டினா தெரியுமா இப்போ இருப்பவர்களுக்கு?) அடுக்கிக் கொண்டு வீடுகளுக்கு வந்து கரி அடுப்பை இலவசமாகக் கொடுத்துக் கரியைப் போட்டு அடுப்பு மூட்டிக் காட்டுவார்கள். பார்த்திருக்கேன்.இதிலும் பெண்கள் தான் கைவண்டிக்காரருடன் வருவார்கள்.ஆனாலும் நெய்வேலி கரி அத்தனை பிரபலம் அடையவில்லை. சாம்பல் அதிகம் வருவதாகப் பெண்கள் புகார் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்... டீ எல்லாம் இலவசமாக வாசலில் வந்து தந்ததில்லை. ஆனால் வாஷிங் பௌடர் அப்படி வந்து பார்த்திருக்கிறேன்! கரி நான் போய்த்தான் கடையில் வாங்கி வருவேன். அதில்தான் நிறைய கமிஷன் அடித்திருக்கிறேன்!!!!!

      நீக்கு
    2. லீகோ கரியை பற்ற வைப்பதும் கடினம், அணைப்பதும் கடினம். சாதாரண கரியை அணைப்பது போல தண்ணீர் ஊற்றி அணைத்தால் ஒரு வாடை வரும். அதனால் அதை ஆறு பாத்திரத்தை கவிழ்த்து போட்டு அணைப்பார்கள். ஆனால் அதில் ஒரே ஒரு வசதி ஆடை எடுத்தால் கை கருப்பாக ஆகாது.

      நீக்கு
    3. லீகோ கரினு மட்டும் இல்லை. பொதுவாக சாதாரணக் கரியையே எங்க வீட்டில் அதற்கென வைத்திருக்கும் ஓர் இரும்புச் சல்லடையால் மூடித் தான் அணைத்து வந்தார்கள்.வந்திருக்கோம். தண்ணீர் விட்டு அணைத்தது இல்லை. பின்னர் மறுபடி பற்ற வைக்கக் காயணுமே! ஆகவே பாத்திரமோ அல்லது மூடிகள் ஏதானுமோ போட்டு அணைப்போம். சில சமயம் போர்ன்விடா டப்பாவில் (அப்போது தகரத்தில் வரும்) போட்டும் மூடி வைத்திருக்கிறார்கள். நான் எண்பதுகளில் கூட விறகு அடுப்பு, கரி அடுப்புக்களில் சமைத்திருக்கிறேன். இத்தனைக்கு எரிவாயு அடுப்பு எங்களிடம் ஆரம்பத்திலேயே வந்து விட்டது. ஆனால் அப்போல்லாம் மாற்று சிலின்டர் கிடையாது. தீர்ந்து போனல் திரும்ப வரச் சில/பல சமயங்களில் ஒரு மாதம் கூட ஆயிடும். அப்போல்லாம் விறகும், கரியும் தான் துணை. ரேஷனில் கொடுக்கும் மண்ணெண்ணெயை வைத்துக் காஃபி, டீ போட அவசரத்துக்கு வெந்நீர் போட, பால் காய்ச்ச ஸ்டவ் அடுப்பு!

      நீக்கு
  36. நீண்ட பதிவில் பிடித்த வரிகள்/
    - பதில் கிடைக்கா விட்டாலும் கேள்விகள் அவசியம். யோசிப்பு எனும் செயல் அங்கு தொடங்குகிறது.

    பதிலளிநீக்கு
  37. உங்களைப் போல் எல்லாம் எனக்குக் கனவுகள் வருவதில்லை ஶ்ரீராம். வந்தாலும் நினைவில் நிற்பதே இல்லை! என்ன கனவு கண்டேன் எனக் கேட்டால் சொல்லத் தெரியாது. முன்னெல்லாம் இரவுகளில் கத்துவேன் என ரங்க்ஸ் சொல்லுவார். இப்போக் கத்தல் குறைஞ்சிருக்கு என்றார்.

    அது சரி, அப்படித் தொங்கிக் கொண்டு போகப் பயமாய் இல்லையோ? நானெல்லாம் உடனே கீழே குதித்து இருப்பேன். ஹிஹிஹி, தூக்கத்தில் தான்! நிஜத்தில் நடுங்கிக் கொண்டு ஒண்டி உட்கார்ந்திருப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. சிலபேரால் கண்டா கனவைச் சொல்ல முடியாமல் மறந்து போகும். எனக்குமே எல்லாக் கனவுகளும் நினைவில் இருக்காது!

      சின்னஞ்சிறு சீட் fix செய்திருந்தார்கள் அக்கா (கனவில்தான்).. அதில் அமர்ந்து....!!!!

      நீக்கு
  38. கமலாவுக்கான கவிதைகள் அமர்க்களம்! எதிரே வந்த பேருந்தில் ஓட்டுநர் ஒருவேளை கச்சேரி எதையாவது போட்டிருந்தாரோ என்னமோ! எல்லோரும் கச்சேரியில் உட்காருவது போல் உட்கார்ந்திருக்கார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா அப்ப ஸ்ரீராமுக்கு மட்டும் கேட்கலை போல கனவுல!!!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. ஆஹா... கவிதைகளை ரசித்ததற்கு நன்றி கீதாக்கா... அவர் கச்சேரி எல்லாம் போட்டிருக்க மாட்டார்! பஸ்ஸை நிறுத்தியதும் காத்திருந்த இருவர் அப்படியே முன்னால் கால் தொங்கப்போட்டு அமர்ந்து கொண்டதும் பஸ் கிளம்பியதே!!!

      நீக்கு
  39. கீதானு பெயர் வைத்துக் கொண்டால் கனவே வராதோ? ம்ம்ம்ம்ம்? :))))

    பதிலளிநீக்கு
  40. //தமிழில் மணிமேகலை என்று ஒரு உயரிய நூல் இருக்கிறதே தெரியுமா? //

    ஸ்ரீராம் எனக்கு உண்மையில் இந்த மணிமேகலை எல்லாம் படிக்க விருப்பம், இப்போ நான் ஸ்பீட்டாப் போயிட்டிருக்கிறேன் ஓன்லைன் வாசிப்பில் ஹா ஹா ஹா.. இப்போ என்ன படிக்கிறேன் தெரியுமோ? “சீவக சிந்தாமணி”...

    கிண்டில் புக்க்கில் ஃபிரீயாகக் கிடைக்கிறது, கிண்டிலுக்கு மாறி.. வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... சீக்கிரமே இலக்கியவாதி ஆகி விடுவீர்கள் போலிருக்கே அதிரா... அப்போ நான் உங்களிடம் எதுவும் கதை சொல்ல முடியாது! நீங்கள் "ஜித்தி" ஆகிவிடுவீர்கள்!!!​

      நீக்கு
    2. ஐயோ அதிரா! இப்படியா சீவக சிந்தாமணி படிக்கிறேன் என்று பொது வெளியில் வந்து சொல்வீர்கள்? ஐம்பெரும்காப்பியங்களில் சீவக சிந்தாமணி இன்பத்திற்கான நூல். சரி, சரி சீக்கிரம் படித்துவிட்டு எனக்கு அனுப்பி வையுங்கள். யாரிடமும் சொல்ல வேண்டாம்.

      நீக்கு
    3. ஆவ்வ்வ்வ் பானுமதி அக்கா... என்ன இது ஹா ஹா ஹா அப்படியோ? நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கொண்டு ஓடி விடுகிறேன்ன்:))..

      ஓ.. ஒவ்வொரு காப்பியமும் ஒவ்வொரு வகை சொல்லி நிக்குதோ?.. ஹையோ ஆண்டவா...:))..

      //சரி, சரி சீக்கிரம் படித்துவிட்டு எனக்கு அனுப்பி வையுங்கள். யாரிடமும் சொல்ல வேண்டாம்.///

      ஹா ஹா ஹா:)).. சொல்லாதே எனச் சொல்லிச் சொன்னால்ல்.. மீ தேம்ஸ்ல தள்ளினாலும் ஜொள்ளமாட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்.......:)..

      நீக்கு
  41. தருமபுரி செய்தி ரொம்பவே காமெடியாக மட்டுமில்லை கூடவே கடைசியில் பாருங்க ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டு...இப்படித்தான் நம் பல திட்டங்களும், மக்களுக்கான சேவைகளும் பயனற்றுப் போகுது. மக்களுக்கான சேவை முக்கியமா இல்லை இவர்களின் குற்றச்சாட்டல்கள் முக்கியமா? இதனால் பாதிப்பு மக்களுக்குத்தான்...உடனடித் தீர்வு பார்க்காமல் குற்றச் சாட்டல்கள்தான்..எவ்வளவு தண்ணீர் வேஸ்டாகிப் போயிருக்கு.....

    இப்படித்தான் பல திட்டங்களும் தொடங்கப்பட்டு பின் ஒதுக்கப்படுகிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசின் திட்டங்கள் கமிஷனுக்காகவே தொடங்கப்படுகின்றன... எத்தனை திட்டங்களை நல்லமுறையில் செயல் படுத்தி இருக்கிறார்கள்...

      நீக்கு
  42. பஸ், ரயில் போன்றவற்றில் பயணம் செய்வது போல கனவு வந்தால் வாழ்க்கையில் ஒரு மாற்றம் வரும் என்பார்கள்.
    உங்களுக்கு, உங்கள் மகனுக்கு இறண்டு பேருக்குமே மாற்றம்/திருப்பமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்ம்... அப்படியா பானு அக்கா? அதுதான் ஜீவி ஸாரும் அப்படிச் சொல்லி இருந்தாரா? மகனுக்கு வேண்டுமானால் மாற்றம் என்று சொல்லலாம்! நிறுவனம் மாறி இருக்கிறான்!!

      நீக்கு
  43. //என்னிடம் சேமிப்பாக இருக்கும் வரிகள் இவை. எதிலிருந்தாவது எடுத்தேனா? இல்லை எதையாவது படிக்கும்போது அதில் இருந்தவற்றைச் சுருக்கி எழுதி வைத்தேனா என்று நினைவில்லை...
    //

    ஹா ஹா ஹா நானும் அப்படித்தான் சொந்தப் புத்தகம் எனில், அதிலேயே அண்டலைன் பண்ணி வைத்து விடுவேன், இப்போ ஐ பாட்டில் படிப்பதால் ஸ்கிறீன் ஷொட் எடுத்து விடுகிறேன்..:).. பிடித்த வசனங்களை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கமாக நான் எதிலிருந்து எடுத்தேன் என்று குறித்தே வைத்திருப்பேன். இங்கே மறந்து விட்டேன் போல!

      நீக்கு
  44. //கட்டுப்பாடற்ற சுதந்திரம் காட்டுமிராண்டிகளை உருவாக்கும். கட்டுப்பாடுடன் கூடிய சுதந்திரமே மனிதத்தை நிலை நாட்டும்.
    //
    இது முற்றிலும் உண்மைதான், இப்போதைய நாட்டுப் பிரச்சனைகளுக்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  45. //காலப்போக்கில் உங்கள் அபிப்ராயங்கள் உங்களுடனே பெரும்பாலும் மாறுபடும்.//

    மாற வேண்டும்.. மாறினால்தான் நல்லது.. எப்பவும் கோடு போட்டு வாழ நினைக்கக்குடாது , சில விசயங்களில் மட்டும் கோடு போட்டு வாழத்தான் வேண்டும் அனைத்திலும் அல்ல..

    பதிலளிநீக்கு
  46. //ஏதோ ஒரு புள்ளியில்
    இணைந்து விடும்
    என்கிற நம்பிக்கையில்தான்
    நகர்கிறது வாழ்க்கைப்பயணம்.//

    அப்போ இன்னும் இணையவே இல்லையோ?:) ஹா ஹா ஹா அழகிய கற்பனை..

    //பசுமை நினைவுகளுடன்
    படுத்து கிடக்கிறது
    பழுத்த இலை. //

    “இளமை- வருங்காலத்தை எண்ணி வாழ்கிறது,
    முதுமை- கடந்த காலத்தை நினைத்து வாழ்கிறது...”

    இதை நினைவுபடுத்தியது உங்கள் கற்பனை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தண்டவாளங்கள் எங்கே இணையப் போகின்றன அதிரா!

      நீக்கு
    2. இளமை- வருங்காலத்தை எண்ணி வாழ்கிறது,
      முதுமை- கடந்த காலத்தை நினைத்து வாழ்கிறது...

      good one.

      நீக்கு
  47. //உடலும் மனம்
    உயரத்துக்குப் போனாலும்
    கண்களும் காலும்
    தயாராகவே இருக்கின்றன
    தரைதொட ///

    ஹா ஹா ஹா இது பூஸ்களுக்குத்தான் பொருந்தும்போல:))

    அனைத்தும் அழகிய ஹைக்கூ... நன்றாக எழுதியிருக்கிறீங்க ரசிக்கும் வகையில்.

    பதிலளிநீக்கு
  48. கவிதைகள் மூன்றும் மூன்று ரத்தினம். கடைசி கவிதைக்கான பூசார் படமும் ஜோர்!. இப்படியெல்லாம் கவிதை எழுதி சே! நாம் ஒரு மஹாராஜாவாக இல்லையே, இருந்திருந்தால் இந்த கவிதைகளுக்கு முன்னூறு பொற்காசுகள் கொடுத்திருக்கலாமே. என்று வருத்தப்பட வைத்து விட்டீர்கள். என்னால் முடிந்தது வாழ்த்துக்களும், ஆசிகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... நன்றி பானுக்கா...

      முன்னூறு பொற்காசுகள்தானா?!!!! மூவாயிரம் கூட கிடையாதா!!!

      வாழ்த்துகளுக்கும், ஆசிகளுக்கும் நன்றி.

      நீக்கு
  49. தண்டவாளப் படம் போட்டு கீழே உங்கள் கவிதை வரிகள் செம செம!!!!

    100 சதவிதம் இதுதான் உண்மை. அப்புள்ளி இங்கிட்டுதான் இருக்கு இதோ கொஞ்ச தூரம் தான் என்று போகும் பாதை தூரமில்லைனும் போய்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கிட்டே இருக்கோம் தான்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  50. இரண்டாவது!!! ஆஆஆஆஆஆஆஆஹா ஆஹா மிகவும் ரசித்தேன் ஸ்ரீராம்..

    படமும்...கவிதையும் என்னே அருமை ஸ்ரீராம்...

    இது என்னவெல்லாமோ சொல்லுதே.....பல அர்த்தங்கள் சொல்லுதே!!

    (இதே போல ஒரு அர்த்தத்தில் நம் அதிராவும் சொன்ன நினைவு இல்லைனா அவங்க பதிவுல!!நீங்க இதைசயே சொல்லியிருந்தீங்கனு நினைக்கிறேன் அவங்க சொன்னதுக்கு...!!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது முதியவர்கள் பற்றிய ஒரு கவிதை கீதா... படம் இதேதான், அல்லது இதுபோல.

      நீக்கு
    2. ஓ ஓகே ஒகே...புரிந்தது...

      இந்தக் கவிதை முதியவர்கள் சொல்லுவது போலவும் இருக்குதான்.....

      கீதா

      நீக்கு
  51. மூன்றாவது கவிதை....ஹைக்கூ!!

    பூஸார் படம் செம!!! அழகு நல்ல பொருத்தமாகவும்...

    ரசித்தேன் ஸ்ரீராம் மூன்றும்...பொக்கே!!! உங்களுக்கு!!

    https://www.google.com/url?sa=i&source=images&cd=&cad=rja&uact=8&ved=2ahUKEwjZm-ens4HhAhUIM48KHZbwBwEQjRx6BAgBEAU&url=https%3A%2F%2Ftenor.com%2Fsearch%2Fflowers-gifs&psig=AOvVaw0ORlpycsFtDIpnCZZHLAa9&ust=1552644899743704

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாவின் லிங்க்குக்குப் போனால்ல்.. கூட்டமாக வருதே.. அதில இப்படம்தான் முதலில் நிக்குது:)) இது ஸ்ரீராம் என நினைச்சுக் குடுத்தீங்களோ கீதா ஹா ஹா ஹா:)) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).

      https://media1.tenor.com/images/dd6b9d90eb85a6aaa3ad680960ffccc1/tenor.gif?itemid=7166145

      நீக்கு
    2. நன்றி கீதா... நன்றி அதிரா (கிர்ர்ர்ர்ர்ர்ர்.)

      நீக்கு
  52. பூசார் இப்படித்தான் தேம்ஸில் குதிப்பாரோ!!!!!!!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  53. ரமணியின் தாயார் கதையில் பத்து ரூபாய்க்கு உள்ள மகத்துவத்தை படித்து விட்டு, தொலைக்காட்சியில் சேனல்களை
    மாற்றினால், ஏதோ ஒரு சேனலில், 'விடிவெள்ளி' படம். அதில் நல்லி ஷோ ரூமில் துணி வாங்கச் செல்லும் சிவாஜி, துணியின் விலை விசாரித்து விட்டு, "ஆறு ரூபாய், பத்தணாவா? ஐயோ அவ்வளவு பணம் என்னிடம் இல்லை" என்கிறார். ஹூம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இப்போதுதான் பார்த்தேன்... பாக்கிய லக்ஷ்மி படத்தில் டணால் தங்கவேல் அவர்கள் வீட்டைக் கூட்டும் விளக்குமாறு விசாரிக்க அதன் விலை ஒன்னரை அணா என்பார்கள்.. அதாவது ஒன்பது பைசா....

      நீக்கு
    2. துரை அண்ணா ஒன்பது பைசா என்பதெல்லாம் இப்ப நினைச்சுக் கூடப் பார்க்க முடியாதே...ஆனால் அந்தக் காலம் நிஜமாகவே பொருளாதார ரீதியில் நன்றாக இருந்ததாகவே படுகிறது...இப்போது விட..

      கீதா

      நீக்கு
    3. நான் அடிக்கடி சொல்லும் 'ஒரு ரூபாயை எடுத்துக்கொண்டு போய் நானும் டிஃபன் சாப்பிட்டு, தங்கைக்கு பார்சல் வாங்கிக்கொண்டு, மீதியும் வாங்கிவந்த'நினைவும் வருகிறது!

      நீக்கு
  54. ஹா ஹா ஹா ஜோக்!! செம முதலில் ஏதோ கடன் என்று நினைத்தால் ஹா ஹா இன்ஷுரன்ஸ்.

    ஒரு காலத்துல இன்ஷுரன்ஸ் அப்பல்லாம் எல்ஐசி மட்டும் தானே இருந்துச்சு. ஏஜன்ட் வராங்கனாலே பலருக்கும் கிலிதான்!! ஹா ஹா இப்பல்லாம் எக்கச்சக்க இன்ஷுரன்ஸ் வந்துருச்சு...ரயில் டிக்கெட் ஆன்லைன்ல புக் பண்ணினா உடனே எஸ் எம்ஸ் வந்துரும் மொபைலுக்கு இன்சுரன்ஸ் பத்தி அப்புறம் மெயில்லயும்..நல்லவிஷயம் என்றாலும்...அதைப் பார்க்கும் போது கொஞ்சம் கலவரமாத்தான் இருக்கும் ஹா ஹா ஹா..

    கீதா

    பதிலளிநீக்கு
  55. சொல்ல விட்டுப் போன ஒன்று....அக்கதையில் அக்காலத்தில் 10 ரூபாயின் மதிப்பு அதுவும் 1949 களில் பெரிய மதிப்பு இல்லையா அதுவும் அவன் மூன்று நாட்களில் செலவழித்து என்று வருகிறது....வீட்டில் 10 ரூபாய்கையில் இருந்தாலே பெரிய பணக்காரர் என்றும் சொல்லலாம் போல...அவன் அம்மா அவனைத் திட்டுவது போலத்தான் நாங்க ஸ்கூல் போறப்ப பஸ்ஸுக்கு 10 பைசா, 15 பைசா, 20 பைசா என்று உயர்ந்ததே பெரிய விஷயம் பைசா தரவே மாட்டாங்க...கன்செஷன் தான். இல்லை நடைதான்...இது 70 களில்...அப்படினா 49 ல அதுக்கு பெரிய மதிப்பு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாத சம்பளமே அப்போது பத்து ரூபாய்க்குள்தான் இருக்கும்!

      நீக்கு
  56. பதிவு + 126 ! ஆரம்பிக்கவே மலைப்பாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  57. ஆர்ப்பாட்டமான கனவு ஸ்ரீராம். முன்னேற வேண்டும் என்கிற நினைப்பும்.
    அதற்கான பதட்டமும் தோன்றுகிறது.+இசை ஆர்வம்.

    உங்கள் கவிதைகள் இறகு போல் இனிமை.அன்பு வாழ்த்துகள்.

    இங்கே கூட வைத்திருக்கிறேன் SVV SIR stories.

    ரமணியின் தாயார் இருக்கிறார். எல்லாம் அலையன்ஸ் உபயம்.

    காலணாவுக்கு எத்தனையோ பொருட்கள் கிடைத்த காலம்.
    மன நிறைவாகச் செலவழிக்கலாம்.
    அரையணாவுக்கு மீனாட்சி பவனில் குடும்பத்துக்கே
    உருளைக்கிழங்கு மசாலா வாங்கலாம்.இது 1953யில்.

    நகைச்சுவை துணுக்குகள் பிரமாதம்.
    தர்மபுரி சங்கடம் பரிதாபம்.
    சென்னையில் எங்கள் வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்துப் போகிறார்கள்
    ராணியும் அவள் மக்களும். சிசிசி டிவியில் பார்த்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகச் சொல்லி பதில் சொல்லி விட்டீர்கள் அம்மா.. நன்றி, நன்றி.

      நீக்கு
  58. வணக்கம் சகோதரரே

    தலைப்பில்லாமலே, ஒரு தலைப்பு இங்கு, இன்று தலைப்பானதை ரசித்தேன்.

    தங்கள் கனவு நன்றாகத்தான் பயணித்தது. கனவிலும் கூட தீடிரென்று பிடிமானம் சரியில்லாத கீழே விழுவது போல் வரும் போது விழித்துக்கொண்டால், இதயம் வேகமாக அடித்துக்கொள்ள ஒரு நிமிடம் தடுமாறித்தான் போவோம். நல்லவேளை.! சீட்பெல்ட் தங்களுக்கு துணை புரிந்தது.

    பொதுவாக அன்றைய நாளின் நினைவுகள்தான், கனவுலகம் என்கிறோம். தாங்கள் ஏதாவது சங்கீதசபா நாடகசபாவிற்கு சென்று வந்தீர்களா? இல்லை, பஸ்ஸில் செல்லும் போது அதைப்பற்றிய பேச்சுகளை கேட்க/பேச நேர்ந்ததா? எது எப்படியாயினும் கனவுகள் (இரவில் நம்மை பயமுறுத்தாத பட்சத்தில்) ஸ்வாரஸ்யமானவை. எனக்கும் நிறைய கனவு வரும். ஆனால்,சிலவற்றை மறந்து விடுவேன். அதிகாலையில் கனவு வந்தால் வீட்டிலிருப்பவர்களிடம் ஞாபகமாக சொல்வேன்.

    பழையகால கதைகளின் பேச்சு வழக்குகள் எப்போதுமே நன்றாக இருக்கும். யாரும் தொந்தரவு செய்யாத ஒரு நேரத்தில், எவ்வளவு நேரம் வேண்டுமானலும் இம்மாதிரி கதைகள் படிக்க பிடிக்கும். ஆனால் இப்போதெல்லாம் அந்த மாதிரி நேரங்கள் அமைவதில்லை.

    எழுத்தாளர் எஸ் வி வி கதைகளை படித்ததாக நினைவிருக்கிறது. எதுவென்று பட்டியலிட தற்சமயம் தெரியவில்லை. தாங்கள் குறிப்பிட்டுள்ள கதையின் பகுதிகளும் படிக்க நன்றாக இருந்தது. "ரமணியின் தாயார்" கேள்விப்பட்ட பெயராக இருக்கிறது. ஒரு வேளை எங்கள் அம்மா இந்த கதையை வாசித்து எங்களுக்கு சொல்லியிருக்கிறார்களோ என்னவோ.! உபதேசங்களும், அறிவுரைகளும், அந்தக் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை வேப்பங்காய்தான். (உண்மையைச் சொன்னால், சிறிதளவாவது இதில் நாமும் அடங்குவோம்.)

    தங்கள் சேமிப்பு வார்த்தைகளை மிகவும் ரசித்தேன்.

    /கட்டுப்பாடற்ற சுதந்திரம் காட்டுமிராண்டிகளை உருவாக்கும். கட்டுப்பாடுடன் கூடிய சுதந்திரமே மனிதத்தை நிலை நாட்டும்.

    பதில் கிடைக்கா விட்டாலும் கேள்விகள் அவசியம். யோசிப்பு எனும் செயல் அங்கு தொடங்குகிறது.

    காலப்போக்கில் உங்கள் அபிப்ராயங்கள் உங்களுடனே பெரும்பாலும் மாறுபடும்/

    ஒரு கேள்வி போதும் முதலில். மற்ற கேள்விகள் தானாக உருவாகும் கிடைக்கும் பதில்களிலிருந்து.

    அருமையான இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.

    தருமபுரி நிகழ்வு வேதனையை தருகிறது. 20லட்சம் லிட்டர் குடிநீரை இப்படி யோசித்து செயலாற்றாமல் வீணாக்கியிருக்கிறார்களே என எண்ணும் போது இருக்கும் சிறு சிரிப்பும் மண்ணுக்குள் சென்ற நீரைப்போல காய்ந்து போகிறது.

    மீண்டும் படித்து ரசித்தேன். கவிதைகள் அருமை. கவிதைகளுக்கு இணையான படங்களும் மிக மிக அருமை.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மாடி... கமலா அக்கா... பதிலா, இல்லை இதுவே ஒரு பதிவா?!! அசத்தி விட்டர்கள்.

      நன்றி. நன்றி. நன்றி.

      நீக்கு
  59. //பஸ்ஸின் முன்புறம் வெளியே இரண்டு இருக்கைகள் இணைக்கப்பட்டு அதில் அமர்ந்து பயணிப்பது போல கனவு! புதிய வசதியாக அதில் ஸீட் பெல்ட்டும் //
    http://ddk82aqeuj01i.cloudfront.net/2013/March/UH191082_942long.jpg

    அது ஸ்ரீராம் :) நீங்க கனவில் லண்டன் வந்திருக்கீங்க இங்கே london open top bus ல பிரயாணம் செஞ்சிருக்கீங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ ஏஞ்சல் நான் ஸ்ரீராமுக்குச் சொல்ல நினைச்சு இன்று பல வேலைகளில் மறந்து போன ஒன்று....இந்த ஓபன் டாப் பஸ்....உங்க ஊர்ல இருக்கறது பளஸ் இருங்க ஒரு தமிழ்ப்படம் அந்த சீன் மட்டும் பார்த்திருக்கேன்.....ஜெயம் ரவி அண்ட் ஜெனிலியா ஒரு ஓபன் டாப் பஸ்ல உக்காந்து போவாங்களே அதையும் சொல்ல நினைச்சேன்....

      கீதா

      நீக்கு
    2. அது சந்தோஷ் சுப்பிரமணியம் படம்தானே .அப்போவே நினைச்சேன் அந்த மாதிரி ஓபன் டாப் பஸ் மெட்ராஸிலும் இருக்கா ? இல்லைன்னா சும்மா ரிப்பேருக்கு ஷெட்டுக்கு போற பஸ்ஸை வச்சி எடுத்தாங்களானு நினைச்சேன்

      நீக்கு
    3. நீங்கள் சொல்லும் பஸ் எது என்று தெரிகிறது. ஆனால் நான் சொல்லும் காட்சி... பஸ்ஸின் முன்புறக் கண்ணாடி இருக்கிறதல்லவா.... அதில் வெளிப்புறமாக ஒட்டவைத்த இருக்கை... எவ்வளவு ரிஸ்க்கா பயணித்திருக்கிறேன் பாருங்க!!!

      நீக்கு
    4. https://vcdn.bergfex.at/images/downsized/a0/cfb5bfd0967e00a0_b1ca14805f7cbebf@2x.jpg

      நாங்க இதில ட்ராவல் பண்ணியிருக்கோம் :) வெங்கட் போட்டார் ஒரு போஸ்ட் இது ஓப்பன் .தலையெல்லாம் சுத்துது எனக்கு அப்போ

      நீக்கு
  60. //..கமலா அக்கா 'எங்கே உங்கள் கவிதை, எங்கே உங்கள் கவிதை' என்று மறுபடி மறுபடி கேட்டதால்..//

    கேட்டிருக்காவிட்டால் அந்தப் பூனைக்குட்டி தவ்வியிருக்காதோ!

    பதிலளிநீக்கு
  61. //இதோ நான் கீழே விழுந்துவிடப்போகிறேன் என்னும் நிலையிலிருந்து மீள்கிறேன். //

    கனவிலேயே ஆன்சரும் இருக்கு .நல்லா இறைவனிடம் பிரார்த்தியுங்க .எந்த கஷ்டமாயிருந்தாலும் அது உங்களை அமுக்கிப்போடாது அதான் மீள்கிறேன் என்று வந்திருக்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே... விழுகிறோம் என்று தெரியும்முன்பே எழுந்து விடுகிறோம்!

      நீக்கு
  62. எனக்கு கைலாசய்யர் ,ஜெயராமைய்யர் உரையாடலை திரு துறுன்னு முழிச்சிட்டு விரலையும் சூப்பிட்டு அந்த அங்கிள் மடியில் அமர்ந்திருக்கும் குட்டி வாண்டு தான் ரொம்ப ஈர்த்தது :)

    //இருக்கிற விரஸங்களைப் பாராட்டாமல் சரிப்படுத்திக்கொண்டு நாம் பூடகமாயிருக்கிற வரையில்தான் ஐயா சிநேகம், விசுவாசம், வாத்ஸல்யம் பிதுர்பக்தி என்பவைகளெல்லாம். //
    உண்மையான வார்த்தைகள் :) நம்ம மைண்டும் அங்கே போகுது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... ரசித்ததாலேயே பகிர்ந்தேன். வாண்டை ரசித்த உங்கள் ரசனை ரசனையானது.

      நீக்கு
    2. எனக்கு குண்டு குழந்தை குண்டு பப்பி குண்டு கோழி பேபி இப்படி ஆங் குண்டு பூஸ் இப்படி எல்லாமே ரொம்ப பிடிக்கும் :)

      நீக்கு
    3. //ஆங் குண்டு பூஸ் இப்படி எல்லாமே ரொம்ப பிடிக்கும்//

      ஹா... ஹா... ஹா...!

      அப்போ உங்களுக்கு குஷ்பூவை ரொம்பப் பிடிக்கும் என்று சொல்லுங்கள். வெள்ளி பாடல் கேட்கவில்லையா?

      நீக்கு
  63. ரமணியின் தாயாரின் டீ /ஜிலேபி காம்பினேஷன் சரியாயில்லையே :) அந்தக்காலத்தில் ஸ்னேக்ஸ் ஜிலேபிதான் போல்
    அதோட 10 ரூபாய்னா இப்போ ரொம்ப வேல்யூ இருக்குமே

    பதிலளிநீக்கு
  64. /கட்டுப்பாடற்ற சுதந்திரம் காட்டுமிராண்டிகளை உருவாக்கும். கட்டுப்பாடுடன் கூடிய சுதந்திரமே மனிதத்தை நிலை நாட்டும்.//

    நூத்துக்கு நூறு உண்மை .இப்போ அதுதானே கண்கூடா பார்க்கிறோம் .ஆனால் இந்த கட்டுப்பாடுதான் பலருக்கு பிடிக்கலை .கட்டுப்பாடு நாமே நமக்கு போட்டுக்கணும் .இதெல்லாம் சரி தவறு எதுன்னு சிந்திச்சி செய்றவங்களுக்கு புரியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'திருடனாய்ப் பார்த்துத் திருந்தா விட்டால்...' பாட்டு போலதான்!

      நீக்கு
  65. ஆனால் பாவம்ல பெருமாள் ஒருவர் மட்டும் கோடிஈஸ்வரர் பிற இடங்களில் இருப்பவர் விளக்கேற்றவும் ஆளில்லாம :( .இருக்கிற பெருமாள் இல்லாத பெருமாள் வெளிச்சத்துக்கு வர ஹெல்ப் செய்யலாம் .

    கேள்வி கருத்தை கன்னாபின்னாவென்று ஆதரிக்கிறேன் :) நேத்து என்ன கேட்பதுன்னு ஒன்றில் ஆரம்பிச்சது தான் 10 இல் முடிஞ்சது ஆக்சுவல்லி இன்னும் ஏழெட்டு உதிச்சது அது இங்கே வேணாம்னு விட்டுட்டேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வியின் நாயகி ஏஞ்சல் உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன்...!!!!!!!

      கீதா

      நீக்கு
    2. கேள்வி பற்றி கேள்வியின் நாயகி ரசிக்கா விட்டால்தான் ஆச்சர்யம்!

      நீக்கு
  66. - கற்பனைப் பிரச்னைகளுக்கு என்றுமே தீர்வு கிடைக்காது!//

    இதுவும் அருமை

    அட தருமபுரி :) தேவதை பிறந்த ஊராச்சே :)
    //
    சுமார் 20 லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிவிட்டது //

    வேதனையான விஷயம் .இந்த அளவுக்கா இருப்பாங்க நகராட்சி ஊழியர்கள் .

    பதிலளிநீக்கு
  67. ஆங் அப்புறம் ஹிட்டுக்கு லீவ் கொடுத்து இப்போ உங்களுக்கு ட்ரீம் ஸ்ரீராம் என்ற நாமத்தை வழங்குகிறேன் :)
    ஹாஹா :) எனக்கும் கனவுகள் பல தொல்லைகள் வந்து போனது .ரீசண்டா நீரில் நடக்கிற கனவு ..கணவர்கிட்ட அடுத்த நாளே சொன்னேன் எதோ பிரச்சினை கவனமாயிருங்கன்னு ..எங்க வீட்டு சோலார் பேனல் பெரிய பிரச்சினை கொடுத்து மிகுந்த பண விரயம் .கனவுகள் நமக்கு வரும் சில பல பிரச்சினைகளை காட்டிக்கொடுக்கும் கண்ணாடிகள் .அதனால் என்ன விஷயம்னாலும் கவனமா செய்யுங்க .ஒரு வாரத்துக்கு இரவில் மால்டட் ட்ரிங்க்ஸ் ஸ்டாப் பண்ணுங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ட்ரீம் ஸ்ரீராம் என்ற நாமத்தை வழங்குகிறேன் ://

      நன்றி ஏஞ்சல்.

      என் அம்மாவுக்கு வெளியூரில் நடந்த மரணம் ஒன்று கனவாக வந்தது என்று சொல்லி இருக்கிறார்கள். கனவில் வந்த விஷயம் காலை நிஜமானது என்று சொல்லி இருக்கிறார்.

      நீக்கு
  68. மூணு கவிதையும் பறக்கும் பூனாச்சும் அருமை .
    எனக்கு பழுத்த இலை படிக்க கஷ்டமா இருந்திச்சி

    ஹாஹா இன்சூரன்ஸ் ஏஜெண்ட்ஸ் இங்கெல்லாம் போனில் தான் பிடிப்பாங்க :)
    ராஜுவ்வின் படத்தில் 2.22,222,2222 என வரிசைப்படுத்தியிருக்கார் வித்யாசமா

    பதிலளிநீக்கு
  69. ஸ்ரீராம்ஜி வெகுநாட்களுக்குப் பிறகு உங்கள் கவிதைகள்.

    மிக மிக அருமையாக இருக்கிறது ரசித்தேன். மூன்றுமே அருமை.

    உங்கள் கனவு விசித்திரமாகவே இருக்கு. ஏதேனும் ஆங்கிலப்படம் பார்த்தீர்களோ?

    கதையின் சிறு பகுதியே அருமையாக இருக்கிறது. முதியோர் பிரச்சினை எப்போதும் இருக்கும் போல அப்போதும் பேசப்பட்டுள்ளதே...

    தருமபுரி செய்தி வினோதமாக இருக்கிறது.

    ஜோக்ஸ் அருமை படங்களும்.

    அனைத்தும் ரசித்தேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எதுவும் ஆங்கிலப்படங்கள் பாக்கவில்லை.

      கவிதைகளை ரசித்ததற்கு நன்றி.

      நன்றி துளஸிஜி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!