வியாழன், 25 ஏப்ரல், 2019

சோதிடத்தில் நம்பிக்கை - பினாக்கினி எக்ஸ்பிரஸ்- செந்தூர்புரம்

இன்னும் கிளம்பவே இல்லையா?



நான் கூட பெரிய ஆன்மீகப் பயணத்துக்கு  செல்லத் தயாராகி விட்டதாய் மனதில் சின்ன பெருமை!  "பத்து நாள் நீங்க வெளியூர் போயிட்டா எங்களுக்கு எப்படிப் பொழுது போகும்?" என்று பாஸ் கேட்டபோது அல்ப பெருமையாய் இருந்தது!  மாமியாரும் அதே கருத்தை எதிரொலித்தார்.  மனதுக்குள் கூலிங் க்ளாஸ் ஸ்மைலி போட்டுக்கொண்டேன்.

தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்றதில்லை!  இல்லை, சென்றிருக்கிறேன்.  திருப்பதி!!!  அதைத்தவிர இதுதான் முதல் விவரமான வெளி மாநிலப் பயணம்.

ஒரு பயம் வருகிறது.   இவ்வளவு விளக்கமாய் எழுத ஆரம்பித்தால் ஒழுங்காய்த் தொடர்வேனா என்று சந்தேகம் வருகிறது.  ஏகப்பட்ட மன இறுக்கங்களுக்கு மத்தியில் நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. எவ்வளவு தொடர்வேனோ தெரியவில்லை.  பார்ப்போம்.

டிஸம்பர், ஜனவரியிலேயே எனது பயணத்திட்டங்கள் தயார்.  சில முன் எச்சரிக்கைகளை மெதுவாக எடுத்துக் கொள்ளலாம் என்று ஒத்திப்போட்டது கிளம்பும்வரை செய்துகொள்ளாமலேயே போனது.  ஒத்திப்போடும் எந்தக் காரியத்துக்கும் அதுதானே விளைவு!  



ஏதோ ஒரு படத்தில் நேர்முகத்தேர்வுக்குச் செல்லும்  விவேக்கை வழியில் "டேக் டைவர்ஷன்..  டேக் டைவர்ஷன்"  என்று பாதை மாற்றி மாற்றி  சென்னைக்குள் நுங்கம்பாக்கத்துக்குச் செல்லவேண்டியவரை  திருப்பதியில் சேர்த்து விடுவார்களே...   அதுபோல (காசிக்குக் கிளம்பினாலும் திருப்பதியை விட முடியவில்லை பாருங்கள்!)  இடையிலேயே நாங்கள் செல்ல வேண்டி இருந்த அலகாபாத் ரயிலின் பாதைகள் இரண்டு முறை மாற்றி அமைக்கப்பட்டன.  அதன்படி நாங்கள் கிளம்பும் நாளன்று சென்னை சென்ட்ரலிலிருந்து கூடூர் சென்று அங்கிருந்து சங்கமித்ராவை - அதுதான் அந்த ரயிலின் பெயர் - பிடிக்க வேண்டி இருந்தது.

அதற்கான முன்பதிவு விவரங்களை எங்கள் குழுவில் ஒருவர் ஒருங்கிணைத்துச் செய்து விட, நாங்கள் பின்னர் அவருக்குப் பணம் கொடுத்தோம்.  அலகாபாத்திலிருந்து ...   இருங்கள்...  திடீரென்று அலகாபாத் வரை வந்துவிட்டேன்.  இன்னும் வீட்டிலிருந்தே கிளம்பவில்லை.  இருங்கள் கொஞ்சம் முன்னால் வந்து கொள்கிறேன்!

எங்கள் உறவினர்களில் ஓரிரு குழுக்கள் எப்போதும் ஏதாவது சுற்றுப்பயணத் திட்டத்திலேயே இருக்கும்.  சமீபத்தில்தான் ஒருகுழு இதே பயணத்திலும், இன்னொரு குழு ஸ்ரீலங்காவும் சென்று வந்தது.  ஸ்ரீலங்கா சென்று வந்த குழுவில் இருந்த மாமா எங்கள் வீடு வந்தபோது காசிப் பயணத்துக்கு வாய்ப்பு இருப்பதாகவும் நான்கு இருக்கைகள் இருப்பதாகவும் (முடிந்தவரை தமிழில் எழுத ட்ரைசெய்து- மன்னிக்கவும் - முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்!) சொன்னபோது நான் உடனே பெயர் கொடுத்து விட்டேன்.  விஸ்வநாதர் எனக்கு உத்தரவு கொடுத்து விட்டார்போலும்!  ஆனால் பாஸுக்கு உத்தரவு வரவில்லை.  எனவே அவர் வீட்டுக் கடமைகளை மனதில் நினைத்து வர மறுத்து விட்டார்.

ஏப்ரல் ஆறாம் தேதி கிளம்புவதாய் ஏற்பாடு.  பதினைந்தாம் தேதி ஆகாய மார்க்கமாய் திரும்புவதாயும் ஏற்பாடு.  அதற்கான முன்பதிவுகளும் முன்னரே முடிந்தன.  இடையில் ஏற்பட்ட மாற்றங்களுக்கேற்ப சென்னை சென்ட்ரல்  - கூடூர் ரயில் (ரயிலுக்கு தமிழ் என்ன?  புகைவண்டி என்று வராது.  தொடர் வண்டி என்று சொல்லலாமோ!)  மார்க்கத்து முன்பதிவும்  முடித்து வைத்துக் கொண்டோம்.

சொந்தப்பிரச்னை ஒன்று ஏப்ரல் பதினொன்றாம் தேதி என்று எனக்குக் குறுக்கிடவே நான் வருவது உறுதிதானா என்று குழுத்தலைவர் மாமா என்னிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.  நானும் விடுவதாயில்லை! மாற்றமில்லை, வருகிறேன் என்று உறுதி அளித்து விட்டு டென்ஷனானேன்!

'சரவணா பிரம்மாண்டமாய்' சென்று பயணத்துக்காய் வேண்டி ஒரு புதுப் பெட்டி வாங்கி கொண்டேன்.  கூடவே ஒரு தோள்பையும்.  பின்னர் இந்தத் தோள்பை சற்றே பெரிதாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது.  சாதாரணமாக நான் பயணங்களுக்கு பெரிய சுமை தூக்கிச் செல்லும் பழக்கம் கொண்டவன் அல்ல.  மிகக்குறைந்த அளவு உடைகளுடன் ( குறைந்த அளவு உடை என்றதும் தமன்னாவின் நீச்சல் உடை போல என்று நினைத்துக் கொள்பவர்களை சுஜாதாவின் பசித்த புலி தின்னட்டும்!) சுமை கொண்டு செல்பவன் நான்.

ஆனால் இங்கு எல்லோரும் எடுத்துக் கொள்ள வேண்டியவை என்று சொல்லும் எல்லாமே அளவுக்கு அதிகமாய் இருந்தன.  "இம்புட்டா?" என்று மலைக்க வைத்தது.  எனவே பெட்டி பெரிதாக வாங்கவேண்டி இருந்தது என் வழக்கத்துக்கு மாறான செயல். 



ஏதோ ஒரு தட்டு, டம்ளர்  என்றில்லாமல் காசி என்பதால் புதிய தட்டு, புதிய டம்ளர், புதிய டபரா வாங்கவேண்டும் என்று சொல்லி வாங்கியும் .கொடுத்தார் பாஸ்.  அவருக்கு ஏதோஒரு சாக்கில் சரவணாவில் அலைய வேண்டும்!  சின்ன சோப், பௌடர், சின்ன பற்பசை (டூத்பேஸ்ட் என்றே சொல்லலாமே...  ஏற்கெனவே டென்ஷன் வந்து விட்டது!).  லிஸ்ட்டில் போட்ட பொருட்களை அமாவாசை நாளில் நல்ல நேரத்தில் பெட்டியில் வைத்து அளவும் பார்த்துக் கொண்டோம்.  அதற்குப்பின் கிடைத்த நேரங்களில் எல்லாம் நினைத்து நினைத்து ஒவ்வொன்றாய் உள்ளே சேர்த்துக் கொண்டே இருந்தோம்.

'பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டீர்களா?  திருப்பதி கதை ஆகிவிடப் போகிறது...'

'தேவை இல்லை, எல்லாம் குழுவில் எடுத்து வைத்திருக்கிறார்கள்.  ஆதார் எடுத்துக் கொண்டால் போதும்!'


வீங்கிக்கொண்டே வந்த பெட்டி பீதியூட்டியது.  மறுபடி குறைத்தோம்!

பெட்டியில் வைப்பது, தோள்பையில் வைப்பது என்று தரம் பிரித்துக்கொண்டேன்.  அலுவலகத்தில் ஜனவரியிலிருந்தே சொல்லி வைத்திருந்தாலும் கிளம்பும் நாள் வரை விடுப்பு கிடைப்பது குறித்து டென்ஷன் இருந்தது.  ஒரு வழியாய் கிளம்பும் நாள் வந்தது.  

==================================================================================================

எனது பொறுப்புணர்வையும், குழப்பத்தையும் 2012 இல் நான் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டபோது...   என் மாமா ஒருவர் பேஸ்புக் என்பதை முகநூல், என்றோ வதனப்புத்தகம் என்றோ மொழிபெயர்ப்பது அபத்தம் என்றார் இந்தப் பயணத்தில்...  சில அபத்தமான மொழிபெயர்ப்புகளையும் உதாரணம் காட்டினார்.


=====================================================================================================



தடை நீக்கும் பெருமாள் கோவில் போங்க....   நல்லது நடக்கும்.

சென்று வந்தோம்.

நங்கநல்லூர் ஆஞ்சநேயரை ஆறு வாரம் சென்று வழிபடுங்கள்.

வழிபட்டோம்.

கோயம்பேடுக்கு அருகில் ஒரு முருகன் கோவில் இருக்கு....   கேட்டது கிடைக்கும்.  நாங்க அங்க சென்று வந்த பின்தான்......

அங்கு செல்ல முடியவில்லை.

ரெட் ஹில்ஸ் பக்கத்தில் ஒரு முருகன் கோவில் இருக்கு...   ரொம்பப் பழைய கோவில்....  ரெண்டு வாட்டிபோனேன்... மகன் கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடுச்சு...

இன்னும் போகவில்லை.

காட்டுப்பாக்கம் செந்தூர் முருகன் கோவில் போங்க....   நெனச்சது நடக்கும்....

போனோம்...



1987 இல் இந்தப் பகுதியில் ஒரு விநாயகர் கோவில் கட்ட அனுமதி கேட்டு மஹா பெரியவரை அணுகினார்களாம்.  "அவர்தான் தெருமுனைகளிலும், மரத்தடியிலும் .இருக்கிறாரே...   சென்னையின் வடபாகமாய் இருக்கிறது...   முருகப்பெருமானை அழையுங்கள் என்று கூறி அவரே முருகன் ப்ரதிமையும் வழங்கினாராம்.

கோவிலில் உண்டியல் கிடையாது.  பணம்   வாங்குவதில்லை. நன்கொடை கொடுத்தால் ரசீது கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.

பிரதான தெய்வம் முருகன்.  அவருக்கு இடதுபுறம் அண்ணனும், வலதுபுறம் அப்பன் கைலாசநாதரும்.  அந்தப்பக்கம் துர்க்கை, இந்தப்பக்கம் தக்ஷிணாமூர்த்தி,  நவகிரகம்,ஆஞ்சநேயர்....



முருகன் ரொம்ப அழகாக இருக்கிறார். நகர்ந்து வர மனமில்லை.  மூலவரைப் புகைப்படம் எடுக்காதீர்கள் என்கிற போர்டைப் பின்னர் பார்த்தேன்.  சற்றே உயரம் குறைந்த, குளித்து, விபூதி தரித்து, சுத்தமான  அர்ச்சகர் ஒவ்வொருவரையும் கையை உயர்த்தி, கையை உயர்த்தி  பொறுமையாக இருக்கச் சொல்லி, இருக்கச் சொல்லி கற்பூரம் தந்து விபூதி குங்குமம் தருகிறார்.

சங்கடங்கள் நேரும்போது யார் எதைச் சொன்னாலும் கேட்கத் தோன்றுகிறது.   செய்கிறேன்.  சங்கடங்கள்தான் இன்னும் தீரவில்லை.  அதற்கான நேரம் வரும்போதுதான் தீரும் போலும்.  காத்திருக்கிறேன் என் நல்ல நேரத்தைச் சந்திக்க....


====================================================================================================


வல்லிம்மா தளத்தில் எழுதி இருக்கும் பதிவில் ஒரு வரி...

//அவனுக்கு 25 வயதிலே திருமணம் நடந்திருக்கணுமே.  இனி 33 வயதில்தான் நடக்கும் //

அங்கு நான் கொடுத்திருக்கும் பின்னூட்டத்தையே இங்கும் கொடுக்கிறேன்.  

இது மாதிரி ஜோதிடங்கள் நானும் கேட்டிருக்கிறேன்.  எனக்கு அப்போது சில கேள்விகள் தோன்றும்.  அப்போ 25 வயதில் இவனுக்காக எழுதி வைக்கப்பட்ட அந்தப் பெண் என்ன ஆகி இருப்பாள்?  அவளேதான் இவனின் 33 வது வயது வரை காத்திருப்பாளா?  இல்லை, அந்தப் பெண் வேறொருவனைத் திருமணம் புரிந்திருப்பாரா?  ஆம் எனில் அது நியாயமா?  இந்த 33 வயதில் இப்போது காத்திருக்கும் பெண் இதேபோல இன்னொரு பஸ்ஸைத் தவற விட்டவளா?!!

திட்டுகள் வாங்க தயாராகிறேன்!


=======================================================================================


இப்போதல்ல, ஏப்ரல் 24, 2014 இல் எழுதியது!

பிரவீன் குமார் குழுவினருக்கு ஒரு சபாஷ்....

பந்த் அன்று பார்க்கும் சாலை போல வெறிச்சோடியிருந்தது சென்னையின் சாலை. மூடியிருந்த அத்தனை கடைகளுக்கும் நடுவில் திறந்திருந்த ஒரே டீக்கடையில் டை அணிந்த இளைஞர்களும் 'டை' அடித்த பெரியோரும் வடையும் கையுமாக நின்றிருந்தனர்.

சுதந்திரமடைந்த தெருநாய்கள் இரண்டு வாகன நடமாட்டம் அதிகமில்லாத அந்தச் சாலையில் ஓடியாடி டூயட் பாடிக் கொண்டிருக்க, நிதான நடை நடந்து வந்த ஒரு போலீஸ்காரர் டீக்கடையில் கும்பலாக நின்றவர்களிடம் ஏதோ பேசினார்.

நின்றிருந்த சிலர் கல் எடுத்த சிறுவனைக் கண்ட நாய் பம்முவது போல கலைந்து செல்ல முற்பட, சிலர் இரண்டிரண்டு பேர்களாக ஒதுங்கி தள்ளித் தள்ளி நின்று டீ கிளாசை ஆட்டி ஆட்டி குடித்த வண்ணம் யோசனையில் இருந்தனர். போலீஸ்காரர் ஒரு டீ ஆர்டர் கொடுத்து விட்டு, வடையை குழந்தைக்கு ஜுரம் இருக்கிறதா என்று பார்ப்பது போல, புறங்கையால் தொட்டு சூடு பார்த்தார். வேண்டாம் என்று தீர்மானித்தார். நகர்ந்து நின்று தேநீருக்காகக் காத்திருக்கத் தொடங்கினார்.

பக்கத்து சந்திலிருந்து ஓடிவந்த இன்னொரு நாய் இவர் கையிலிருந்த தடி கண்டு வந்த வழியே சென்று மறைந்தது.

எதிர்ப்பட்ட உள்ளூர்க்காரர்கள் 'என்ன சாமி... காலங்காலையிலேயே ஜனநாயகக் கடமையாற்ற ஜோடியாக் கிளம்பியாச்சா?' என்று புன்சிரித்து, கடந்தனர்.

குப்பை பொறுக்கிக் கொண்டு எங்களைக் கடந்து சென்ற ஒரு நடுத்தர வயது அழுக்கரைக் கண்டதும் ' இவருக்கு வாக்கு இருக்குமோ... இவரும் இந்த நாட்டின் ஒரு மன்னர்தானே' என்ற ஜனநாயகக் கவலை ஏற்பட்டது என் துணைவிக்கு.

நாம்தான் முதலாவதாக இருப்போம் என்று எண்ணிய எண்ணம் அங்கு எங்களுக்கு முன்னரே நின்றிருந்த நான்கு பேர்களைக் கண்டதும் கேஸ் தீர்ந்து போன அடுப்பு போல அணைந்தது.

எங்களுக்கு முன்னால் நின்றிருந்த டிராயர் போட்ட பெரியவர் ஒருவர் எங்களைத் திரும்பிப் பார்த்து விட்டு மறுபடியும் சுவரில் ஒட்டியிருந்த போஸ்டரில் ஆழ்ந்தார். வாசலில் நின்றிருந்த போலீஸ்காரர் எங்கள் கையில் ஏதாவது பயங்கர ஆயுதம் இருக்கிறதா என்று ஓரப் பார்வை பார்த்து விட்டு நகர்ந்து வாசலுக்குச் சென்றார்.

முன்னே இருந்த ஆள் நகர்ந்து விட, நாங்களும் உள்ளே போனோம். முதலில் அமர்ந்திருந்த பெண்மணி என் ஸ்லிப்பை வாங்கிப் பார்த்து 'ஸ்ரீராம்' என்று ஹால் முழுக்க கேட்க அறிவித்தார். ஐந்தாறு பேர்கள் நோட்டில் டிக் அடித்துக் கொள்ள, தெரிந்த ஓரிரு முகங்கள் புன்னகைக்க, கையில் 'மைவச்சக் கண்ணம்மா' சீட்டைக் கையில் கொடுத்து அடுத்த ஆளிடம் தள்ள...

வாக்களிக்கும் அனுபவம் இனிதே முடிந்தது!

=================================================================================================

152 கருத்துகள்:


  1. இருங்க கோல்ஹாப்பூர்ல இருக்கேன் 2 நாளா கண்டுக்காம இருந்திருக்கேன் பார்த்துவிட்டு வருகிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்ரும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரவேற்ற துரைக்கும் மற்றும் அனைவருக்கும் வணக்கமும், நல்வரவும், பிரார்த்தனைகளும்

      நீக்கு
    2. நல்வரவு துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
  3. சுவாரசியமாக எழுதி இருக்கீங்க. முருகன் கோயில் பற்றிப் பரமாசாரியார் சொன்னதையும் கோயில் பற்றி எழுதி இருப்பதையும் ஏற்கெனவே படிச்சிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீராம் உங்கள் பயணத்தின் ஆரம்ப வரிகளே அட்டகாசம். மிகவும் ரசித்தேன்...அதுவும் பாஸும் அவங்க அம்மாவும் சொன்னவுடன் மனதுக்குள் கூலிங்களாஸ் ஸ்மைலி!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னொரு கூலிங்க்ளாஸ் ஸ்மைலி மனசுக்குள்ள போட்டுக்கோங்க!! ஹா ஹா ஹா ஹா ஹா..

      கீதா

      நீக்கு
    2. நன்றி கீதா... இன்னொரு கூலிங் க்ளாஸ் போட்டுட்டேன்.

      நீக்கு
  5. அது சரி, உங்கள் பயணம் ட்ராவல்ஸ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது என்றல்லவோ நினைச்சேன். நீங்க உங்க குடும்பத்தினரே குழுவாகப் பயணம் செய்தீர்களா? அப்போ சாப்பாடு எல்லாம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... அதைச் சரியாகச் சொல்லவில்லையா? பாருங்க... என்னமோ எழுதறேன்... டிராவல்ஸ் மூலம் ஏற்பாடு செய்யப் பட்டதுதான். அடுத்த வாரம் கொஞ்சம் சரியாய் எழுத முயற்சிக்கிறேன்.

      நீக்கு
    2. பினாக்கினி எக்ஸ்ப்ரஸ் னு படம் போட்டிருக்கீங்க! ஆனால் பயணித்தது சங்கமித்ராவில். அது எங்கிருந்து கிளம்பி எங்கே போகிறது?அதை ஏன் கூடூரில் போய்ப் பிடிச்சீங்க? அங்கே தான் சென்னைப் பயணிகளை ஏற்றிக்கொள்ளும் இடம் என ட்ராவல்ஸ் காரங்க ஏற்பாடா?

      நீக்கு
    3. ஶ்ரீராம் இப்படித்தான் கண்ணியை விட்டுவிட்டு எழுதுவார். சரி அடுத்த இடுகைல எழுதுவார்னு நினைத்திருப்போம். அதுக்குள்ள விவரங்கள் மற்ற நாட்களை நோக்கிப் போயிடும்.. என்ன பண்ணலாம் கீசா மேடம்?

      நீக்கு
    4. // அது எங்கிருந்து கிளம்பி எங்கே போகிறது?அதை ஏன் கூடூரில் போய்ப் பிடிச்சீங்க?//

      சொல்றேன்.... சொல்றேன்... தலைப்பைப் பார்த்தீங்க இல்லே? இன்னும் கிளம்பவே இல்லை!

      நீக்கு
    5. //ஶ்ரீராம் இப்படித்தான் கண்ணியை விட்டுவிட்டு எழுதுவார். சரி அடுத்த இடுகைல எழுதுவார்னு நினைத்திருப்போம். அதுக்குள்ள விவரங்கள் மற்ற நாட்களை நோக்கிப் போயிடும்..//

      ஆஹா... இப்படிச் சொல்லிட்டீங்களே... நான் இதுவரை பக எழுதியிருக்கேனா என்ன? சரி.. இப்போ என்ன செய்யலாம் நெல்லை? அழிச்சுட்டு முதல்லேருந்து தொடங்கவா?!!!!

      நீக்கு
    6. கேட்கிற சந்தேகங்களை ஞாபகம்வச்சுட்டு அடுத்த இடுகைல மறக்காம கவர் பண்ணுங்க, மறுமொழில சொல்லாம.

      திருப்பதி திருமணம் பக இல்லாம என்னவாம்?

      நீக்கு
    7. // கேட்கிற சந்தேகங்களை ஞாபகம்வச்சுட்டு //

      முயற்சிக்கிறேன்!இறைவா... தொடர்ச்சி எழுத எப்போ நேரம்கிடைக்குமோ... ஆங்.. வியாழனுக்குள் கிடைக்காதா என்ன!

      நீக்கு
  6. உங்க பாஸுக்குக் கிடைத்தற்கரிய அரிய வாய்ப்பு! தவற விட்டுட்டாங்க! நீங்களாவது ஒரு பத்து நாட்கள் எப்படியேனும் சமாளிச்சுக்கட்டும், கிளம்புனு சொல்லிக் கிளப்பிட்டுப் போயிருக்கணும். அலை ஓய்ஞ்சு சமுத்திர ஸ்நானம் என்பதை நினைத்தே பார்க்க முடியாது! எனக்கு இதில் இன்னமும் மனக்குறைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். ஆனால் நடக்கவில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு அந்த காசி விஸ்வநாதருக்கு, வாய்ப்பைக் கொடுத்த மாமாவுக்கும் நன்றி சொன்னேன்.

      நீக்கு
    2. உங்களுக்கு எல்டிசிஉண்டு தானே? அப்புறம் என்ன? குடும்பமாகவே போயிருந்திருக்கலாம். உங்க பையர்கள் வேலைக்குப் போய்விட்டதால் அவங்களுக்குக் கிடைக்காது. மனைவிக்குக் கட்டாயம் உண்டு. மாமியாரை டிபென்டன்ட் எனப் போட்டுக் கொண்டு அவரையும் அழைத்துச் சென்றிருக்கலாம். எனக்கென்னமோ அவங்க போகலையேனு மனசு அடிச்சுக்கிறது. :)))))

      நீக்கு
    3. எல் டி சி உபயோகித்ததே இல்லை. மாமியாரால் இவ்வளவு தூரம் அலைந்திருக்க முடியாது. கடைசியில் பேச்சு வார்த்தைகள், சண்டைகள் முடிந்து நானும் போகமுடியாமல் கூட போயிருந்திருக்கலாம்.

      நீக்கு
  7. வல்லியோட பதிவில் நீங்க கேட்டிருந்த ஜோதிடம் சம்பந்தப்பட்ட பதிலைப் படித்தேன். எங்க ஜோதிடர்(என் கல்யாணத்தில் பொருத்தம் பார்த்துச் சொன்னவர்) சொன்னது என்னவெனில் அவளுக்கோ/அவனுக்கோ எனப் பிறந்திருக்கும் பெண்ணை/ஆணைப் பார்க்கும்வரை திருமணம் நிச்சயம் ஆகாது என்பதே! இவங்க தான் சேரணும் என்றிருந்தால் தான் சேருவார்கள். நீங்க என்ன தடுத்துப் பார்த்தாலும் நடக்காது என்பதும். எங்க கல்யாணத்தையும் தடுக்கணும் என்றே என் மாமனார், மாமியார் நினைத்தார்கள். சொந்தத்தில் அத்தை பெண் இருக்கவே அந்தப் பெண்ணைத் தான் முடிக்கணும்னு என் மாமனாரின் ஆசை! ஆனால் எங்க ஜோசியர் திட்டவட்டமாகக் கூறினார். இவனக்க இரண்டு பேரும் தான் கல்யாணம் பண்ணிப்பாங்க, அதுவும் குறிப்பிட்ட தேதிக்குள் என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் சொல்லிக்கொள்ளும் பதில் இது, இல்லையா கீதா அக்கா?

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உண்மையாக நடந்ததை எழுதி இருக்கேன். இப்படிச் சொல்றீங்க! :( இது போல் இன்னும் சில சம்பவங்களும் அவர் சொல்லி நடந்திருக்கு! எங்க பெண் என் வயிற்றில் இருக்கும்போது மாமியார், மாமனார் எல்லோரும் ஆண் குழந்தை தான் வேண்டும் என்று கிட்டத்தட்ட எல்லாம் என் கையில் இருப்பது போல் வற்புறுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் எங்க ஜோசியர் பெண் தான் பிறக்கும் என அடிச்சுச் சொன்னார். அதே போல் என் கணவரின் ப்ரமோஷம், ஊர் மாற்றல் எனப் பல விஷயங்களில் அவர் சொன்னதே நடந்திருக்கு. கடைசியில் அவர் தான் எப்படி இறப்பேன் எனச் சொல்லி இருந்தாரோ அப்படியே இறந்தும் போனார். நம்பறதெல்லாம் அவரவர் விருப்பம். ஆனால் அதன் பின்னர் எந்த ஜோசியர் சொல்லுவதையும்/சொன்னதையும் நான் நம்பறதில்லை.

      நீக்கு
    3. நடந்த சம்பவங்களை நினைவில் வைத்திருக்கிறீர்கள். நடக்காதவை நம் மனதிலிருக்காது. எத்தனை சம்பவங்கள் அவர் சொல்லி நடக்காமல் இருந்திருக்கும்?!! கிர்ர்ர்ர்ர்ர் சொல்லக்கூடாது சொல்லிட்டேன்!!

      நீக்கு
    4. கீசாமேடம்ஜோசியர் சொன்னது நடந்ததுன்னு விலாவாரியாத்தான் சொல்வாங்க. சரி.. நாங்களும் கன்சல்ட் பண்றோம் ஜோசியர் அட்ரஸ்ப்ளீஸ் என்றால், அவரா... நாங்கள் 40 வருடத்துக்குமுன் கன்சல்ட் செய்யும்போதே அவருக்கு 105 வயசு ஆகியிருந்ததுன்னுடுவார்.

      இதுபோல தியானம் மற்றவற்றிர்க்கு எக்சலன்ட் குரு எனக்கு இருக்கார் என்பார். எங்கே அவர் என்றால், கடைசியா அவரைப் பார்த்தே பல வருஷமாச்சு. அவருக்குத் தோணினால்தான் வருவார் என்று டபாய்ப்பார்

      நீக்கு
    5. //எத்தனை சம்பவங்கள் அவர் சொல்லி நடக்காமல் இருந்திருக்கும்?!! கிர்ர்ர்ர்ர்ர் சொல்லக்கூடாது சொல்லிட்டேன்!!//

      ஶ்ரீராம், அவர் எங்க குடும்பத்துக்கு அதாவது அப்பா, அம்மா, அண்ணா, தம்பி, எனக்கு என எல்லோருக்கும் சொல்லி இருக்கார். பலிச்சிருக்கு! அதோடு அவர் உடனே எல்லாம் அவ்வளவு விரைவில் சொல்லவும் மாட்டார். என் கல்யாணத்துக்கு ஜாதகப் பொருத்தம் பார்த்தப்போவே இந்தப் பையனோடு தான் உங்க பெண்ணுக்குக் கல்யாணம் ஆகும். வேறே பார்க்க வேண்டாம் என்றே சொன்னார். ஆனால் அப்பாவுக்கும் முதலில் இஷ்டமில்லை. புனேயில் இருந்தார் என்பதோடு அப்போல்லாம் தஞ்சாவூர்க்காரங்களுக்குப் பெண் கொடுக்கணுமே என்னும் பயமும் கூட! அது பார்த்து ஏழு எட்டு மாதங்களுக்குப் பின்னர் எங்கள் கல்யாணம் நடந்தது. அதே போல் எங்க அப்பா தன் கடைசி நாட்களில் என்னிடம் (அதாவது பெண் வீட்டில்) இருக்கும் நிலை வரும் என்றும் சொல்லி இருந்தார்.அப்பா அப்போ அதை ரொம்பத் துச்சமாகச் சொன்னார். பெண் வீட்டில் போய்த் தங்குவதை விடப் பிச்சை எடுப்பேன்! என்றார்.ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அவரை எங்களிடம் கொண்டு தள்ளியது! அப்போ அவரை நினைவு கூர்ந்தார்.

      நீக்கு
    6. நெல்லைத் தமிழரே, நீங்க நம்பறதுக்காகவெல்லாம் என்னால் பொய் சொல்ல முடியாது. பழக்கமும் இல்லை. எங்க ஆன்மிகக் குழுமத்தில் வந்து பார்த்தால் எல்லோருமே குருவைக் காணாமல் அழுவது தெரியவரும். எப்போ வருவாரோ என்று தான் காத்திருக்கேன். என் கல்யாணத்துக்குப் பொருத்தம் பார்த்த ஜோசியர் இன்னமும் உயிருடன் இருக்கணும்னு அவசியமா என்ன?

      நீக்கு
    7. ஶ்ரீராம், என் அண்ணாவுக்குப் பிரச்னை வரும் எனவும், 40 வயதில் பெண் குழந்தை பிறக்கும் என்றும் சொல்லி இருந்தார். என் அண்ணாவுக்குப் பெண் பிறக்கையில் 39 வயது! பெரிய பையருக்கும் இந்தப் பெண்ணுக்கும் 13 வயசு வித்தியாசம்!

      நீக்கு
    8. மன்னிக்கவும், பெண் பிறக்கையில் மன்னிக்கு 38 வயசு, அண்ணாவுக்கு 41 வயசு! மாத்திச் சொல்லிட்டேன்.

      நீக்கு
    9. //பெண் வீட்டில் தங்குவதைவிட// இந்த சில வரிகளில் கலங்கடித்து விட்டீர்கள் கீதா சாம்பசிவம் மேடம். வாழ்க்கையை நினைத்தால் கலக்கமாகத்தான் இருக்கிறது. எல்லோருக்கும் அப்படித்தான் என எண்ணிக் கொள்கிறேன்

      நீக்கு
    10. தெரியலை நெல்லைத் தமிழரே, ஆனால் என் மாமனார், மாமியாருக்குப் பெண்களிடம் இருக்கவும், தங்கவுமே இஷ்டம்! அங்கே தான் ரொம்பவே எளிதாகவும் சகஜமாகவும் உணர்வார்கள். நான் பலமுறை கேட்பேன், ஏன் நான் என்ன குறை வைச்சேன்? என்று. அதென்னமோ அவங்களுக்குப் பெண்களிடம் அதுவும் பெரிய பெண்/கடைசிப் பெண் இருவரும் தான்! மனசு பதிகிறாப்போல் பிள்ளைகளிடம் பதியவில்லை! :))))) என் அப்பாவோ எங்க வீட்டுக்கு வந்தால் முள் மேல் இருக்கறாப்போல் இருப்பார். வந்த வேலை முடிந்ததும் உடனே கிளம்பிடுவார். உள்ளூர்னு ஆனதும் விசேஷங்களில் தவிர்க்க முடியாமல் வருவார். மாப்பிள்ளைக்கு உடம்பு சரியில்லைனாலோ, சம்பந்திகளைப் பார்க்கணும்னாலோ வருவார். இல்லைனா வரவே மாட்டார். இத்தனைக்கும் அடுத்த தெருதான்! அவருக்குப் பிள்ளைகளிடம் தான் அதிகாரம் பண்ணிக் கொண்டு இருக்கலாம் என்றும் அங்கே தான் சகஜமாக இருக்கலாம் என்பதும் எண்ணம். அப்படியே இருக்கவும் இருந்தார்.

      நீக்கு
    11. கீதா அக்கா... நீங்கள் உங்கள் குரு பற்றிச் சொல்லியிருந்தது எல்லாம் படித்த நினைவு இருக்கு. நமக்கு நடக்காததால் சரி இல்லை என்று சொல்லி விடக் கூடாது என்று புரிகிறது.

      நீக்கு
    12. ஆனால் ஒரு விஷயம் ஶ்ரீராம், அதுக்கப்புறமா எந்த ஜோசியரிடமும் நானாக என் ஜாதகத்தைக் காட்டியதே இல்லை. நம்ம ரங்க்ஸ் காட்டணும்னு சொன்னால் கூடக் கடுமையாக எதிர்ப்பேன். யார் சொல்லுவதையும் அதன் பின்னர் நம்பியதே இல்லை. இப்போ சமீபத்தில் ஒரு நாடி ஜோசியர் சொன்னதும் தூக்கி வாரிப் போட்டது!

      நீக்கு
    13. 2016-17 ஆம் ஆண்டில் எங்கள் குரு என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். அதன் பின்னர் யாருக்குமே அவருடன் தொடர்பு இல்லை! திக்குத் தெரியாத காட்டிலே தொலைந்து போனால் போல் நானும், மாமாவும் இருக்கோம். :(

      நீக்கு
    14. ஏன் அதற்குப்பிறகு நீங்கள் ஜாதகத்தைக் காட்ட எதிர்ப்பு தெரிவித்தீர்கள் என்று தெரியவில்லை. எதிர்காலம் தெரிந்து விட்டால் நிகழ்காலம் சுவாரஸ்யம் இல்லாமல் போகும் என்பதாலா?

      நீக்கு
    15. நமக்கு ஒரு குரு அமையக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் புண்ணியம் செய்தவர்.

      நீக்கு
    16. ஸ்ரீராம், ஏற்கெனவே 150 கருத்துகள் ஆகி இருக்கு. இது கண்களில் படுமா தெரியலை. ஆனால் பின்னாட்களில் நான் ஜோசியரிடம் காட்ட வேண்டாம் என்றதற்கு அப்போதைய வாழ்க்கைச் சூழ்நிலை ஒரு காரணம். நமக்கென இருப்பது, நமக்கெனக் கிடைப்பது எப்படியும் கிடைத்தே தீரும் என்பதும், நமக்கு அது தேவை இல்லைனால் என்ன முயற்சித்தாலும் கிடைக்காது எனவும் புரிந்து கொண்டேன். ஆகவே எல்லாத்தையும் கடவுளிடம் விட்டுவிட்டு எனக்கு எது தேவையோ அதை நீயே கொடுப்பே, நான் கேட்க வேண்டாம் என்னும் மன நிலைக்கு வந்துட்டேன். எதிர்பார்ப்புக்களைக் குறைத்துவிட்டேன்.

      நீக்கு
    17. வாங்க கீதா அக்கா... இருநூறுக்கு மேல் பின்னூட்டங்கள் போனால்தான் கண்ணில்படாது. ஆனால் இந்தக் கமெண்ட்டை நீங்கள் எந்த இடத்தில் கொடுத்திருக்கிறீர்கள் என்று தேடிக்கொண்டு வருவதில் சிரமம் இருந்தது!!!

      //நமக்கெனக் கிடைப்பது எப்படியும் கிடைத்தே தீரும் என்பதும், நமக்கு அது தேவை இல்லைனால் என்ன முயற்சித்தாலும் கிடைக்காது எனவும் புரிந்து கொண்டேன்.//

      இந்த மனோபாவம் வர பெரிய மனநிலை வேண்டும். எனக்கும் அது வரப் பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  9. டென்ஷனானேன்!//

    ஹா ஹா ஹா ஹா தமிழ்ச் சொல் பதற்றமானேன் சரியாகுமா?!!

    நான் தமிழ்ல டி ஆக்கும்னு எல்லாம் சொல்லிக்கலைப்பா...ஹிஹிஹி

    இடையில் தமன்னாக்காவையும் இழுத்தது ஹா ஹா ஹா ஹா குசும்பு!!! நெல்லையை வம்பிக்கிழுத்தல் ஹா ஹா ஹா ஹா

    ஹையோ இன்று கும்மி செமையா இருக்கும் போல..நேற்றும் செம கும்மி போல!

    இன்றும் கலந்து கொள்ள முடியுதான்னு பார்க்கறென். பணி ஒன்று வந்திருப்பதால் அதில் கவனம்...அதான்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நண்பர்களே. சுவாரஸ்யம் பிரயாண ஆரம்பம் . இரஇருபத்தாண்டு வயதில் சின்னப் பசங்களுடன் பத்து நாள் காசியில்தங்கி யாவும செய்தோம் .அது ஒரு கனாக் காலம். அன்புடன்

      நீக்கு
    2. கும்மி களைகட்டவில்லையே கீதா... ஏன்? அதிராவையும் அவர் செக்கையும் வேற காணோம்...

      நீக்கு
    3. வாங்க காமாட்சி அம்மா... சின்ன வயசிலேயே சென்று வந்திருக்கிறீர்களா?

      நீக்கு
    4. கல்கத்தா பாரக்பூரில் இருந்தோம். வருஷாந்திர லீவில் போனோம். மாமனார்,மாமியார் இல்லை.அதனால் அவர்களுக்கு கயாசிராத்தம்முதலானது செய்ய எல்லாம் செய்தோம். அப்புறமும், எவ்வளவோ முறைகள் கங்கா காவேரி ட்ரெயின் பிடிக்க பனாரஸ் வந்துள்ளோம். அதாவது நேபாளத்திலிருந்து வரும்போது. தரிசனமும்,கங்காஸ்னானமும் மாத்திரம். அன்புடன்

      நீக்கு
    5. //பணி ஒன்று வந்திருப்பதால்// - என்ன பணியோ.. தினமும் காலையில் மறைந்தால் மாலைதான் வர்றீங்க. வேலைக்குப் போறீங்களோ கீதா ரங்கன்?

      நீக்கு
    6. நேபாளத்திலிருந்து என்றால் முக்திநாத் யாத்திரையும் செய்திருப்பீர்கள். இல்லையா காமாட்சி அம்மா?

      நீக்கு
    7. கும்மி களைகட்டவில்லையே கீதா... ஏன்? அதிராவையும் அவர் செக்கையும் வேற காணோம்...//

      ஆமாம் ஸ்ரீராம்...இப்ப மீண்டும் பணி வந்துவிட்டது ஸ்ரீராம். டெட் லைன் இந்த வாரக் கடைசி. அதான்...பகலில் வந்து கும்மி அடிக்க முடியலை. நேற்றும் நல்ல கும்மி கீதாக்கா நெல்லை எல்லாம். அதில் நிறைய சொல்ல வந்தது இன்று காலை ஆனால் முடியலை.

      இப்ப இங்கயும் அதான் பார்த்துட்டே போயிட்டுருக்கேன் எல்லாரும் கும்மி அடிச்சு தூங்கப் போயிருப்பாங்க ஹா ஹா ஹா நான் இப்ப வரேன். பகல்ல வந்திருந்தா நிறைய சொல்லிருக்கலாம்.. இடையில் சனி ஞாயிறு, திங்கள் தவிர அடுத்த வாரம் வெள்ளி வரை பிஸி...அடுத்த வாரம் தளம் வருவதும் கொஞ்சம் சிரமம் தான். அடுத்த வெள்ளி மாலை அல்லது சனிக்கிழமைதான் வர முடியும்.

      கீதா

      நீக்கு
    8. நெல்லை, நான் வெளியில் வேலைக்கு எதுவும் செல்லவில்லை. வீட்டிலிருந்தபடி வேலை. அதுவும் நானே ஆஃபீஸ் போல டைம் ஃபிக்ஸ் செய்து கொண்டு செய்வதால் வர இயலவில்லை. அதோடு வீட்டுப் பணிகள் எல்லாம் அதான்...நாளையோடு முடிந்துவிடும். அப்புறம் சனி ஞாயிறு திங்கள் ஃப்ரீ. மீண்டும் பிஸி...அடுத்தவார வெள்ளி வரை.

      கீதா

      நீக்கு
  10. ஸ்ரீராம் உங்களுக்கு இருக்கும் டென்ஷனில் பயணத் தொடரை ஒழுங்கா எழுத முடியுமான்னு சொல்லிருக்கீங்க! புரிந்து கொள்ள முடிகிறது.

    நானும் அதே தயக்கத்தில் இன்னும் எழுத ஆரம்பிக்கவே இல்லை!! ஹா ஹா ஹா விசாகப்பட்டினம் தொடர் இருக்கு அழகான படங்களுடன்..எப்ப எழுதப் போறேன்னு தெரியலை. ஒரு சுணக்கம். இடையில் பணி ஒன்று என்று போகிறது. உத்வேகப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? நீங்கள் ஒரு பக டியூ வைத்திருக்கிறீர்களா?

      நீக்கு
    2. பயணக் கட்டுரை டியூ வைத்தால் தப்பில்லை. பாதி பயணம் எழுதிட்டு அப்புறம் மாதக் கணக்கா தொடராம இருந்தால்தான் தப்பு.

      பாருங்க.. கீசா மேடம் ஆறு மாத்த்துக்கு முன்னால் பூம்பாறை வேலப்பர் கோவிலுக்குப் போய்ட்டு இன்னும் கோவில் வளாகத்துலதான் இருக்காங்க

      நீக்கு
    3. அதைத் தொடரப் போவதில்லைனு சொல்லியாச்சு! அதிலேயும் வைத்தீஸ்வரன் கோயிலிலேயும் சில கசப்பான அனுபவங்கள். :( அதே போல்மாத்ரு கயாவும்!

      நீக்கு
    4. கசப்பான அனுபவங்கள் பிறருக்கு உபயோகப்படாதா? சரி... நேரில் பார்க்கும்போது கேட்டுக்கலாம்...

      நீக்கு
    5. ஹ்ம்..... ​தொடர்கிறேன்... முயற்சிக்கிறேன். நினைத்தால் முடியாதா என்ன? வந்த உடனே கொஞ்சம் கொஞ்சமாக எழுதி இருக்கலாமோ!

      நீக்கு
    6. ஆமாம் ஸ்ரீராம் பக ஒன்று ட்யூ இருக்கு...அதுக்கு முந்தி ரெண்டு கஷ்டப்பட்டு போட்டுவிட்டேன்...இது ஒன்று மட்டும் பாக்கி இருக்கிறது. பார்ப்போம் முடியும் என்றால் முடியாதது உண்டோ?!! ஹிஹிஹி இப்படி நம்மை நாமே சொல்லிப்போம்...

      ஸ்ரீராம் உங்கள்ளால் முடியும் முடியும் எழுத முடியும்!

      கீதா

      நீக்கு
  11. பயணத் தொடரைத் தொடருங்கள்
    காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  12. நானும் பயணத்தில் மிகக் குறைவாகவே சுமை எடுத்துச் செல்வது வழக்கம். எங்க வீட்டுல எல்லாருமே அப்படித்தான். உடைகள் எடுப்பதில் கூட ப்ளான் செய்துவிடும் வழக்கம். லெஸ் லக்கேஜ் கம்ஃபர்ட்டபிள் ட்ராவல்!

    எதுக்கு புதுத் தட்டு, புது டம்ப்ளர்...டபரா? காசிக்கு? இப்படி எல்லாம் உண்டா?!!

    //அதற்குப்பின் கிடைத்த நேரங்களில் எல்லாம் நினைத்து நினைத்து ஒவ்வொன்றாய் உள்ளே சேர்த்துக் கொண்டே இருந்தோம்.//

    ஹா ஹா ஹா ஹா வெளிநாட்டுக்குப் போகிறவர்களின் பயணம் நினைவுக்கு வந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக ட்ராவல்ஸ்காரங்க ஏற்பாடு செய்யும் பயணங்களுக்குச் சாப்பாடுத் தட்டு, தம்பளர், டபரா போன்றவை கையோடு எடுத்துவரச் சொல்லுவாங்க! காசிக்குனு இல்லை. நாங்க ட்ராவல் டைம்ஸ் மூலம் போனப்போவும் அப்படித் தான். ரயிலிலேயே சமைத்துக் கொண்டு வந்து பரிமாறுவாங்க! அத்தனை பேர்களுக்குத் தட்டுக்களுக்கோ, இலைக்கோ என்ன செய்ய முடியும்? அதனால் அவரவர் தட்டு, தம்பளர்! இதிலே ட்ராவல் டைம்ஸிலே காலைக் காஃபி மட்டும் அவங்க கொடுப்பாங்க! அதுக்குத் தேதி வாரியா டோக்கன் கொடுத்துடுவாங்க! மாலைக்கு எந்த ஸ்டேஷனில் வண்டியை நிறுத்தறாங்களோ அங்கே வாங்கிக்க வேண்டியது தான். ஆனால் ஶ்ரீராம் போனது ரயில்வேயே விடும் சங்கமித்ரா வண்டி என்பதால் ட்ராவல்ஸ்காரங்க பயணிக்கும் நபர்களுக்கு ஏற்ப ஐந்து பெட்டி, அல்லது ஏழு பெட்டினு கேட்டு வாங்கி இருக்கலாம். மற்றப்பெட்டிகளில் மற்றப் பயணிகள் பயணிக்கலாம்.

      நீக்கு
    2. மஹாலக்ஷ்மி ட்ராவல்ஸ்னு ஒரு ட்ராவல்ஸ் கூடப் போக நாங்க பணம் எல்லாம் கட்டிவிட்டுப் புதுசாச் சாப்பாடுத் தட்டு, தம்பளர், வட்டை எல்லாம் வாங்கினோம். அந்தத் தட்டைக் கையிலேயே பிடிக்க முடியாது. அவ்வளவு கனம்! இதைக் கையிலே வைச்சுட்டு எப்படிச் சாப்பிடுவோம்னு நினைச்சுட்டு இருந்தப்போ அதிலே போக முடியாமல் ஏதோ பிரச்னை! கான்சல் பண்ணினோம். கட்டிய பணத்தில் ஏதோ கழித்துக் கொண்டு மிச்சம் கொடுத்தாங்கனு நினைக்கிறேன். இது சுமார் நான்கைந்து வருடங்கள் முன்னர் நடந்தது.

      நீக்கு
    3. கீதா... ஒரு பழைய குக விளம்பரம் நினைவிருக்கா? "மூட்டை முடிச்சைக் குறையுங்கள்.. வண்டிப்பயணம் சுகமாகும்... குடும்ப அளவைக் குறையுங்கள்.. வாழ்க்கைப்பயணம் சுகமாகும்.."

      யாராவது எதையாவது சொல்லி "இதை எடுத்துக் கொள்ளலாமே.." என்றால் 'எடுத்துக் கொள்ளலாமே' என்று எடுத்துக் கொண்டேன். அப்புறம் குறைத்து விட்டேன். அது வேறு கதை.

      நீக்கு
    4. ஆமாம் கீதா அக்கா... டிராவல்ஸ் காரங்க கேர் எடுத்து எல்லாம் செய்தாங்க... ஜெயலட்சுமி டிராவல்ஸ்

      நீக்கு
    5. நான் முக்திநாத் பயணத்தில் பல குழிகள டு கூடிய தட்டுகளை (கூட்டுக்கு தனி, கரேமதுக்கு தனி, சாதம் தனி என பிரிவு இருக்கும்) எடுத்துட்டுப்்போயிருந்தேன். அலகாபாத்தில் முதல் உணவு பரிமாறும்போதே அவங்க, பெரிய வட்டத்தட்டா வாங்கிடுங்க, பரிமாற ஈஸி என்று சொல்லிட்டார். அப்புறம் அங்க மாலையில் வாங்கினோம்.

      நீக்கு
    6. நாங்க கயிலை யாத்திரை சென்றப்போல்லாம் அவங்களே தர்மாகூல் அல்லது பாக்குமட்டை அல்லது தாமரை இலைத்தட்டு எனக் கொண்டு வந்திருந்தாங்க.

      நீக்கு
    7. பாக்குமட்டை தட்டு கயா சிராத்தத்தில் சாஸ்திரி வீட்டில் சாப்பிடும்போது வைத்துக்கொள்ளக் கொடுத்தார்கள்.

      நீக்கு
    8. ஓ கீதாக்கா ட்ராவல்ஸ் மூலமா நான் பயணம் செஞ்சதில்லை ஸோ தெரியலை. இப்ப புரிந்தது.

      ஸ்ரீராம் அந்த குக விளம்பரம் நினைவிருக்கே! ஆனா காலைல நினைவுக்கு வரலை ஹிஹிஹிஹி....இப்ப நீங்க சொன்னதும் தான்...

      கீதா

      நீக்கு
  13. எனக்கும் கூட 26 இல் கல்யாணம் ஆகி இருக்கணுமே என்கிறார்கள்
    எனக்கு இப்போ 42 வயசு . திருமணம் ஆகவில்லை
    அப்போ அந்த பொண்ணுக்கு என்ன ஆயிருக்கும் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கான பெண்ணை நீங்க இன்னும் சந்திக்கலைனு அர்த்தம். அல்லது அந்தப் பெண்ணுக்கு மறுபிறவி இருந்திருக்காது. ஆகவே நீங்க இந்தப் பிறவியைத் திருமணம் இல்லாமல் கழிச்சுட்டுப்போகவென்று பிறந்திருப்பீங்க! இஃகி,இஃகி, நான் ஒரு ஜோசியரைக் கேட்டப்போ அவர் சொன்ன பதில் இது!

      நீக்கு
    2. ஆனால் பாருங்க, நாலைந்து ஜோசியர்கள், 2,3 நாடி ஜோசியர்கள் எனக்கு மறுபிறவி இல்லைனு சொல்லி இருக்காங்க! அடுத்த பிறவியில் நம்ம ரங்க்ஸ் தனியா எப்படிச் சமாளிப்பார்னு எனக்கு இப்போவே பிடிச்சுக் கவலையா இருக்கு! :)))))) ஆனால் அவரோ ஜாலி! ஜாலி! என்று குதிக்கிறார்.

      நீக்கு
    3. அந்த ஜோசியருக்குத்தான் எங்கள் எல்லார் மேலயும் எவ்வளவு அக்கறை.

      எனக்கு நாடி ஜோதிடம் அடுத்த பிறவி திருவாரூரில், திருமணம் கிடையாது, கடைசி பிறவின்னு சொல்லியிருக்கார். அந்த ஜென்மப் பிறவிக்கு எப்படி சொத்து எழுதி வைக்கறதுன்னு சொல்லுங்க கீசா மேடம்

      நீக்கு
    4. இந்தப் பெயரில்லா யாராய் இருக்கும்? எனக்குத் தெரிந்தவரோ? 42 வயசா? ம்ம்ம்?

      நீக்கு
    5. கீதா அக்கா... நமக்கான பெண்ணைச் சந்திக்க முடியாமல் கூடப் போகுமா? அப்படியானால் அவருக்கு பிறவியே முடிந்து விடுமா?

      //ஆகவே நீங்க இந்தப் பிறவியைத் திருமணம் இல்லாமல் கழிச்சுட்டுப்போகவென்று பிறந்திருப்பீங்க! //

      அப்போ 26 வயசில் திருமணம் நடந்திருக்கவேண்டும் என்று சொல்லப்படும் ஜோதிடம்?

      நீக்கு
    6. நாடி ஜோதிடத்தில் நம்பிக்கை உண்ட நெல்லை? பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்ததில்லை. ஆவல் உண்டு.

      நீக்கு
    7. தாம்பரம் அகத்தியர் நாடி ஜோதிடத்தில் ஒரு ஆர்வத்தில் பார்த்தேன். எங்கப்பா அது என்ன என்று தெரிந்துகொள்ள என்னுடன் வந்திருந்தார். கப்சிப்னு ரெண்டுபேரும் இருந்தோம். எங்க அப்பா அம்மா பேர் எழுதிய ஓலையைக் கொண்டுவந்தார்கள். ஃப்ராடு எனத் தோன்றினாலும் ஆச்சர்யம் விலகவில்லை

      நீக்கு
    8. 26ல் திருமணமாயிருக்கணுமே என்றால் அப்போ கிரக நிலை சரியா திருமணத்துக்கு சூட்டபிளா இருந்திருக்கும். முயன்றிருந்தால் நடந்திருக்கலாம். ஆனால் திருமண நிகழ்வு விதியின்பாற் பட்டது.

      நீக்கு
    9. //அப்போ 26 வயசில் திருமணம் நடந்திருக்கவேண்டும் என்று சொல்லப்படும் ஜோதிடம்?//எல்லோருடைய ஜாதகப்படியும் ஆறு, ஏழு வருஷங்களுக்கு ஒரு முறை வரும் குருபலனைச் சொல்லி இருப்பார்.சிலருக்குத் திருமண யோகம் இருந்தாலோ அல்லது பார்க்கும் பெண்ணின் ஜாதகப்படித் திருமண யோகம் வந்துவிட்டாலோ கட்டாயமாய்க் கல்யாணம் ஆகிவிடும். இது எங்க குடும்பங்களில் நான் பார்த்திருக்கேன்.

      நீக்கு
    10. என் பெரியப்பா ஒருத்தர் திருமணமே செய்துக்கலை. அவருக்கு அப்படித் தான் சொன்னார்கள். அவருக்கென உள்ள பிறவிக்கு மோக்ஷம் கிடைத்துவிட்டது எனவும் இந்தப் பிறவியில் அவர் பிரமசாரி எனவும் அடுத்த ஓர் பிறவிக்குப் பின்னர் அவருக்கும் முக்தி கிடைச்சுடும் என்றும் சொன்னார்கள். யாராய்ப் பிறந்திருக்காரோ!எங்கே பிறந்திருக்காரோ? :))))))

      நீக்கு
    11. கோபித்துக் கொள்ளாதீர்கள். திருமண யோகம் கைகூடாதவர்களுக்கெல்லாம் முக்தி கிடைக்கப் போகும் பிறவியின் முதல் பிறவி என்று சொல்லி விடலாமா?!!

      நீக்கு
    12. ஶ்ரீராம்,இதில்கோபம் எதுக்கு வரணும்?திருமணயோகம் கை கூடாதவர்களுக்கெல்லாம் முக்தி கிடைக்கும்னு சொல்லவே இல்லை எங்கேயும். என் பெரியப்பாவுக்கு மட்டும் அப்படிச் சொன்னார்கள். மத்தவங்களோட கிரஹ நிலைமை, அவங்க பிறந்த நேரம்,முன் ஜன்மப் பலன்கள் னு எத்தனையோ இருக்கு.

      நீக்கு
    13. அது சரி... எனக்கும் தோன்றியது.

      நீக்கு
  14. ஸ்ரீராம் உங்க ஃபேஸ்புக் செய்தி கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    விசு பாணியில் ஹா ஹா ஹா ஹா இருங்க இன்னொரு வாட்டி அல்லது அதற்கு மேலும் வாசிக்கணும்...ஹிஹிஹி

    ஆனா ஒன்று புரிந்தது பகிர வேண்டியதை உடனே பகிரணும் இல்லைனா அவுட் டேட்டட் (காலாவதினு சொல்லலாமா!!!!!) ஆகும் வாய்ப்பு அதிகம்! சரியா நான் புரிந்து கொண்டது?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா

      பகிர வேண்டியதை உடனே பகிரா விட்டால் காலாவதி ஆகிவிடும் என்று எண்ணி பகிர நினைக்கும்போது ஒன்று அது மறந்து போகும், அல்லது, நாம் அதற்கு அடுத்ததாக வேறு ஏதாவது படித்து அதைப் பகிரலாம் என்று எண்ணிப் பகிர நினைக்கும்போது மறுபடியும் வேறு குறுக்கீடுகள் வருவதாலோ அல்லது வேறு எதையாவது படிப்பதாலோ...

      விடுங்கள்.. நீங்கள் சொல்வது சரி!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா படுக்கப் போகும் முன் செம சிரிப்பு இதை வாசித்துவிட்டு மிக்க மிக்க நன்றி ஸ்ரீராம்! யு மேட் மை டே நாள் முடிந்து தூங்கப் போகு சமயத்தில்!!

      கீதா

      நீக்கு
  15. பயணம் அனுபவம் அருமையாக ஆரம்பித்து விட்டது.

    //"பத்து நாள் நீங்க வெளியூர் போயிட்டா எங்களுக்கு எப்படிப் பொழுது போகும்?" என்று பாஸ் கேட்டபோது அல்ப பெருமையாய் இருந்தது! மாமியாரும் அதே கருத்தை எதிரொலித்தார். மனதுக்குள் கூலிங் க்ளாஸ் ஸ்மைலி போட்டுக்கொண்டேன்.//

    அல்ப பெருமை எதற்கு நல்லவே பெருமை படலாம். (மாமியார் வேறு சொல்லி இருக்கிறார் மாமியார் மெச்சிய மருமகனாய் இருப்பதால் )

    நல்லாதான் போட்டீர்கள் ஸ்மைலி!

    அவர்களையும் அழைத்து சென்று இருக்கலாம். நன்றாக இருந்து இருக்கும். குடும்பபொறுப்பு என்று சொல்லி விட்டீர்கள்.

    ஃபேஸ்புக்கில் பகிர்ந்த பகிர்வு பற்றி சொன்னது சரிதான்.
    அப்புறம் என்றாலே முடிவது இல்லை.


    //சங்கடங்கள் நேரும்போது யார் எதைச் சொன்னாலும் கேட்கத் தோன்றுகிறது. செய்கிறேன். சங்கடங்கள்தான் இன்னும் தீரவில்லை. அதற்கான நேரம் வரும்போதுதான் தீரும் போலும். காத்திருக்கிறேன் என் நல்ல நேரத்தைச் சந்திக்க....//

    ஃபேஸ்புக்கில் முன்பே படித்து விட்டேன்.

    சங்கடங்கள் தீர்ந்து நல்ல நேரம் இறைவன் அருளால் கூடியவிரைவில் வரும், இறைவன் அருள்வார்.

    //இந்த 33 வயதில் இப்போது காத்திருக்கும் பெண் இதேபோல இன்னொரு பஸ்ஸைத் தவற விட்டவளா?!!//

    25 வயதில் இவனுக்கு முடிந்து இருக்க வேண்டிய பெண்ணே இப்போது 33 வயதில் முடிந்து இருக்கலாம் இல்லையா?

    வாக்களிக்கும் அனுபவம் நன்றாக இருக்கிறது.

    நிறைய பேருக்கு ஓட்டு இல்லை.
    குப்பை பொறுக்கும் இந்த நாட்டு மன்னருக்கு ஓட்டு எங்கே இருக்க போகிறது?

    என் தம்பி வீட்டில் தம்பி மனைவி, மகளுக்கு இருக்கிறது ஓட்டு, என் தம்பிக்கு இல்லை.

    நாங்கள் ஓட்டு போன போது கூட்டம் இல்லை, எங்களுக்கு முன் 10 பேர் தான்.
    சீக்கீரம் ஓட்டு போட்டு விட்டு வீடு திரும்பி விட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அக்கா...

      மாமியார் மெச்சிய மருமகன் தான் நான்! ​ அவர்களை அழைத்துச் செல்வதென்பது நடக்கக் கூடிய ஒன்றாகவே இல்லை.

      சங்கடங்கள் தீர உங்கள் ஆசைகளுக்கு நன்றி.

      //25 வயதில் இவனுக்கு முடிந்து இருக்க வேண்டிய பெண்ணே இப்போது 33 வயதில் முடிந்து இருக்கலாம் இல்லையா?//

      அதெப்படி? அவர் ஜோதிடம் பார்த்திருந்தால் அவர் வயது பற்றியும் சொல்லி இருப்பார்களே... அப்போது தவற விட்டால் ஒரு சுற்று சுற்றி வரவேண்டுமோ!

      நமக்கெல்லாம் வாக்குரிமை இருந்து, கணக்கிடப்பட்டு வேறு ஏதோ காரணத்தால் வாக்களிக்க முடியாமல் போவது வேறு...

      யாசகர்களோ, இதுமாதிரி அடித்தட்டு மக்களோ கணக்கெடுப்பிலேயே கணக்கெடுக்கப் பட்டிருப்பார்களா?

      நீக்கு
  16. "அவர்தான் தெருமுனைகளிலும், மரத்தடியிலும் .இருக்கிறாரே... சென்னையின் வடபாகமாய் இருக்கிறது... முருகப்பெருமானை அழையுங்கள் என்று கூறி அவரே முருகன் ப்ரதிமையும் வழங்கினாராம்.

    கோவிலில் உண்டியல் கிடையாது. பணம் வாங்குவதில்லை. நன்கொடை கொடுத்தால் ரசீது கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.//

    சூப்பர்!!!

    ஸ்ரீராம் வேண்டுதல், பிரார்த்தனைகள், கோயிலுக்குப் போங்க நு சொல்வது நான் தெரிந்து கொண்டது அல்லது புரிந்து கொண்டது, நம் மனதை பிரச்சனைகளிலிருந்து விலக்கி நம்பிக்கையுடன், பொறுமையுடன், ப்ரச்சனைகளைத் தாங்கும் மன சக்தியோடு இருக்கச் செய்வதற்குத்தான். நம்பிக்கைதானே வாழ்க்கை! மற்றபடி தீர்வுகள் எப்ப நடக்குமோ அப்பத்தான் நடக்கும். நம் வாழ்க்கை சினிமா போன்றதில்லையே தரிசித்ததும் இறைவன் அடுத்த சீனிலேயே டொட்டடையுங்குனு நமக்கு அருளிட!! ஹிஹிஹி...

    அதற்கான நேரம் வரும்போதுதான் தீரும் போலும். காத்திருக்கிறேன் என் நல்ல நேரத்தைச் சந்திக்க....//

    அதே அதே....கண்டிப்பாக நல்லது நடக்கும் ஸ்ரீராம்!

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா...நீங்கள் சொல்லியிருக்கும் வியாக்யானம் நன்று. நானும் அறிவேன். நமக்கென்று வரும்போது, அதுவும் காலம் கடந்து சோதனை நீண்டு கொண்டே போகும்போது..... ஹூம்...​!

      நீக்கு
    2. பிரார்த்திக்கிறேன் ஶ்ரீராம்! விரைவில் உங்கள் பிரச்னைகள் தீர்ந்து நிம்மதியாக வாழ எல்லாம் வல்ல ஈசன் அருளட்டும்.

      நீக்கு
    3. உங்கள் எல்லோருடைய ஆசிகளும் பிரார்த்தனைகளும் பலிக்க வேண்டும் என்று மிக விரும்புகிறேன்.

      நீக்கு
    4. நமக்கென்று வரும்போது, அதுவும் காலம் கடந்து சோதனை நீண்டு கொண்டே போகும்போது..... ஹூம்.//

      ஸ்ரீராம் புரிகிறது. உங்களுக்காகப் பிரார்த்திக்கிறோம் நாங்கள் எல்லோருமே...கண்டிப்பாக நல்லது நடக்கும். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருதுனு நல்லது நடக்கும் பாருங்க!

      கீதா

      நீக்கு
  17. அன்பு ஶ்ரீராம், பயணக்கட்டுரை ஆரம்பித்துவிட்டது் வாழ்த்துகள். யாருக்கு யாருடன் என்று ஆண்டவன் நியமித்தபடி தான் நடக்கும். நீங்கள் சென்ற கோவில் பயணங்களின் புண்ணியம் சேர்நதசேரந்திருக்கும் பலன் கிடைக்கும். இரவு நேரமாக விட்டது. கடவுள் கிருபையில் காலை பார்க்கலாம். அனைவருக்கும் இனிய நாளுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​வாங்க வல்லிம்மா.. நீங்கள் சொல்வது சரி... அதைத் திருப்பதி பயணத்திலேயே உணர்ந்தோம். வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  18. தஞ்சாவூர் கதம்பம் போல இனிமையான தகவல் தொகுப்பு....

    அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. தஞ்சாவூர் கதம்பமான்னு யோசித்தேன்.. அப்புறம் “முப்பது பைசா மூணு மொழம் முல்லை மல்லிகை கனகாம்பரம்” பாடல் நினைவுக்கு வந்தது

      நீக்கு
  19. //நாம்தான் முதலாவதாக இருப்போம் என்று எண்ணிய எண்ணம் அங்கு எங்களுக்கு முன்னரே நின்றிருந்த நான்கு பேர்களைக் கண்டதும் கேஸ் தீர்ந்து போன அடுப்பு போல அணைந்தது.//

    ஹா ஹா ஹா ஹா நம்மைப் போல சிலரும் ஜிந்திப்பாங்க...!!!! கூட்டம் வருவதற்குள்னு..

    அதில் செல்லங்கள் பற்றி சொன்னதையும் ரசித்தேன்...டூயட் ஹா ஹா ஹா ஹா

    மைவைச்சக் கண்ணம்மா// ஹா ஹா ஹா இதுவும் ரசித்த பட்டியலில்...

    "எங்கள் ப்ளாக்" ஸ்ரீராம் என்று விரும்பும் ஸ்ரீராமுக்கு இந்த அடை மொழி இல்லாமல் விளிக்கப்படும்/இடப்படும் சில இடங்களில் ஒன்று!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா... நமக்கு முன்னரே நம்மைப்போலவே சிந்தித்து இந்த முறையும் நின்றிருந்தார்கள். நான் எழுதி இருப்பது சென்ற தேர்தல் விவரம்.

      ''மைவச்ச கண்ணம்மா'' பாடல் கேட்டிருக்கிறீர்களா?

      நிறைய இடங்களில் வெறும் ஸ்ரீராம்தானே?!!!

      நீக்கு
    2. ஸ்ரீராம் நோ நோ நீங்க வெறும் ஸ்ரீராம் இல்லவே இல்லை! உங்களுக்கு என்ன குறைச்சல்னு கேக்கறேன்...
      அந்த அடைமொழி இது போன்ற இடங்களில் சொல்ல மாட்டாங்களேனு!! நான் உங்க பின்னாடி நின்னுருந்தேனா அவர் ஸ்ரீராம்னு சத்தமா சொன்னதும் நான் பழக்கத்தினால எபி/எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்னு சொல்லுங்கனு சொல்லிருப்பேனோ
      நினைத்து சிரித்துக் கொண்டேன்..

      கீதா

      நீக்கு
  20. ஓட்டு போடுவதில் உங்கள் பாஸின் கேள்வி நியாயமான கேள்வி! அதானே குப்பை பொறுக்கிச் செல்லும் அந்த மனிதரும் இந்நாட்டு மன்னர் தானே! எனக்கு யாசிப்பவரைப் பார்த்தும் இக்கேள்வி எழுந்ததுண்டு. அவர்களின் நிலைமை இப்படி இருக்கும் போது அவர் யாருக்கு ஓட்டுப் போடுவார்? அப்படியே வரவங்களும் இவங்களுக்காக ஏதாவது செய்வாங்களா என்ன? இவங்க தங்கள் அடிப்படை ஒரு வேளை சாப்பாட்டுக்காக யாசிக்கறாங்க அவங்களோ தலைமுறை தலைமுறையா சொகுசா வாழ ஓட்டுப் பிச்சை கேட்கறாங்க!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. அந்தப் பெண் காத்திருப்பாள் என்று அர்த்தமில்லை.
    குருபலன் வருவதைக் குறிக்க அதைச் சொல்லி இருப்பார். அவ்வளவே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியே! நீங்கள் சொல்லி இருப்பதை முதலிலே பார்க்கவில்லை!நன்றி.

      நீக்கு
    2. ஆமாம். நன்றி ரிஷபன் ஸார்.

      நீக்கு
  22. @ ஸ்ரீராம்: //.. "பத்து நாள் நீங்க வெளியூர் போயிட்டா எங்களுக்கு எப்படிப் பொழுது போகும்?" என்று பாஸ் கேட்டபோது அல்ப பெருமையாய் இருந்தது! மாமியாரும் அதே கருத்தை..//

    காசிக்குப்போனால், பொய் சொல்வதை விட்டுவிடவேண்டும் என யாரும் சொல்லவில்லையா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை ஏகாந்தன், காசிக்குப் போனால் கெட்ட குணங்களை விடணும் என்பதே பரமாசாரியார் சொன்னதும்!

      நீக்கு
    2. ஏகாந்தன் சார்.. ஶ்ரீராமோட மனைவியோ மாமியாரோ காசிக்குப் போனதில்லையே..

      நீக்கு
    3. @ கீதா சாம்பசிவம்: பரமாச்சாரியார் சொன்ன விஷயங்கள் பலவற்றில் அவ்வப்போது கொஎள்ஞ்சமாவது இங்கே தெளிக்கப்பட்டால் நல்லது என்று தோன்றுகிறது.

      @ நெல்லைத் தமிழன்: ஓ, அந்தப்பக்கத்திலேர்ந்து பார்த்தால் சரிதான்!

      நீக்கு
    4. வாங்க ஏகாந்தன் ஸார். நான் பதில்சொல்வதற்கு முன் நெல்லை பதில் சொல்லி விட்டார்.

      நீக்கு
  23. பயண ஆரம்பம் - ரசனையாக ஆரம்பித்துள்ளது.

    சாதாரணமாக பயணத்துக்கு ஏகப்பட்டது சேர்க்க ஆரம்பிப்போம். பயணத்துக்கு முந்தைய நாள், 5 கிலோக்கு மேல் எதுவும் அனுமதி இல்லை என்று ஸ்டிரிக்டா சொன்னால் எவை எவைகளைத் தூக்கி எனிவோம்? யோசித்துப் பாருங்கள்.. அப்போ மற்ற எல்லாப் பொருட்களுமே தேவையற்றவையா?

    பையன்களுக்கு எப்படியும் பொழுது போய்விடும் போலிருக்கு. அவங்க ஒண்ணும் சொல்லலையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை. பையன்களும் அதே மாதிரிதான் சொன்னார்கள். பின்னே, அவர்கள் மட்டும் மாற்றிச் சொல்லி மாட்டிக் கொள்வார்களா என்ன!!

      நீக்கு
    2. //சாதாரணமாக பயணத்துக்கு ஏகப்பட்டது சேர்க்க ஆரம்பிப்போம்.// ஆச்சரியம் தான்! நாளைப்பயணம் காலை என்றால் நானெல்லாம் இன்றிரவு தான் என்ன எடுத்துக்கணும் என்றே யோசிப்பேன். தட்டு, தம்பளர் எனஎடுத்துப் போனது ஐஆர்சிடிசியின் ட்ராவல் டைம்ஸ் பயணத்தின் போது தான்.மற்றப் பயணங்களில் எல்லாம் துணிகள், குளிர் இருந்தால் ஷால், மற்ற டாய்லெடரி பொருட்கள், சாப்பாடு, காஃபி ஆகியவை! சாப்பாடு, காஃபி தயாரிப்பு என்னுடையது, தயாரித்துப் போட வேண்டியதில் போட்டு வைத்துவிடுவேன். பைகளில் அவர் போடுவார். கூட இரு தம்பளர்கள் கொண்டு போவோம்.தேநீர்க்கடைகளில் அல்லது ரயிலில்(அநேகமாய் வாங்க மாட்டோம்) எங்காவது தேநீர் வாங்கினால் அவங்க கொடுக்கும். சுண்டுவிரலை விடநீளம் குறைவான கப்பைப் பிடிக்க முடியாது என்பதால் நாங்களே தம்ளர் கொண்டு போய் அதில் வாங்கிப்போம்.

      நீக்கு
    3. அக்கா... நானும் கூட அப்படிதான். ஆனால் இந்தப் பயணம் வித்தியாசமாய் அமைந்தது.

      நீக்கு
    4. @கீதா சாம்பசிவம் மேடம் - //நானெல்லாம் இன்றிரவு தான் என்ன எடுத்துக்கணும் என்றே யோசிப்பேன்.// - நான் 12 மணிக்கு பஸ் என்றால், 11 மணிக்கே அங்கே போய்ச் சேர்ந்துடணும்னு நினைப்பவன். ஒரு நாள் பயணத்துக்கே, ஒருவேளை மழை பெய்து டிரெஸ் நனைதுவிட்டால், ஒரு டிரெஸ்ஸை எடுக்கும்போது கை தவறி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்று இன்னொரு செட் எடுத்துவைப்பவன்.... என் வீட்டில் உள்ளவர்களும் நாளை பயணம் என்றால் இன்றே பேக் பண்ணி கதவு அருகில் வைக்கவில்லையென்றால் எனக்கு டென்ஷன் அதிகமாயிடும். அதிலும் சீக்கிரமாக கிளம்பவில்லை என்றால், என் கோபத்தை எல்லோரும் தாங்கவேண்டியிருக்கும்.

      நீக்கு
    5. ரயில் நிலையத்துக்கோ பேருந்து நிலையத்துக்கோ குறித்த நேரத்துக்குப் போய்ச் சேரணும் என்பது எங்கள் இருவருக்குமே உண்டு. அது வேறே! பாக்கிங்கை ஒரு வாரம் முன்னாடியே செய்வது வேறே!

      நீக்கு
  24. //தடை நீக்கும் பெருமாள்// உண்மை ஶ்ரீராம்.. நாம் இதையெல்லாம் செய்தபோதும் உரிய காலம் வரை காத்திருக்கணும். நான் ஒரு ஜோசியரைப் பார்த்தபோது அவர் டக்கெனச் சொன்னது, கடவுளை டிஸ்டர்ப் செய்யாதீங்க. கர்ம வினையை கழித்துத்தான் ஆகணும் என்றார். ஒரு வகையில் அது சரிதான் அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அவர் டக்கெனச் சொன்னது, கடவுளை டிஸ்டர்ப் செய்யாதீங்க. கர்ம வினையை கழித்துத்தான் ஆகணும் என்றார். ஒரு வகையில் அது சரிதான் அல்லவா?//

      ஆம். சட்டென உறைக்கிறது.

      நீக்கு
    2. நெல்லை இங்க பின்னூட்டத்த்ட்லயே இந்தத் தத்துவங்கள் எல்லாம் பு பூ வும் கீ யும், சொன்னாலும் கடைசில க்ரெடிட்ஸ் என்னவோ ஜோஸ்யருக்கே!!! ஹிஹிஹி ஹியயோ பு பூ வை, செக்கை காணலையே!! எனக்குக் கை கொடுக்க....நெல்லை தூங்கிருப்பார் நான் தப்பிச்சேன் ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. @கீதா ரங்கன் - அந்த ஜோஸ்யர் அப்படி பட் எனச் சொன்னதும் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாவும் இருந்தது (நான் கோவிலுக்குப் போவதையெல்லாம் அவரிடம் சொல்லாத போதும்). பொதுவா ஜோசியர்கள், இங்க போ, அங்கபோ என்றுதால் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

      நீங்களும்தான் ஐஸ்கிரீம் சாப்பிடாதீங்க, இனிப்பு அதிகமா சாப்பிடாதீங்கன்னு சொல்வீங்க. டாக்டர் சொன்னா அதுக்கு மதிப்பு வேற இல்லையா?

      நீக்கு
  25. //அப்போது சில கேள்விகள் தோன்றும்//— முன்பு எனக்கு ஜாதகங்கள் பார்த்துக்கொண்டிருந்த போது, நான் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டு இருந்தேன். எனக்கு 30 வந்துடுமேன்னு ஒரே கவலை. என் அப்பா அந்தத்தடவை திருச்சியில் பெண் ஜாதகம் நல்ல பொருத்தம். அடுத்தவாரம் போய்ப் பார்த்துவிட்டு தகவல் சொல்றேன் என்றார். அடுத்த வாரம் முடிவாயிடும் என நினைத்தேன். பத்து நாட்கள் சென்றபின் அவர் கடிதம் வந்தது. பெண் ரொம்ப பிடித்திருந்தது. அவளுக்கும் வெகு ஆர்வம். ஆனால் அவங்க அப்பாவை பிடிக்கலை, முசுடு மாதிரி தோன்றுகிறது என எழுதியிருந்தார்.

    அன்று இரவு புட்டபர்த்தி சத்யசாய் பாபா என் கனவில் வந்து, “She is a diamond. She is not for you. You will get your diamond by 31st May. What else you want from me” என்றார். நான் நின்இருந்தது பசும்புல் தரையில். தள்ளி நிறையபேர் இருந்தாலும் என்னிடம் வந்து இதைச் சொன்னார். நான் அவரிடம், எனக்கு வெயிட் போட்டிருக்கு. நான் ஒல்லியா ஆகணும் என்று சிறுபிள்ளைத் தனமாக்க்்கேட்டேன். அவர் புன்னகைத்துக்்கொண்டே மெதுவாக புகைபோல் மறைந்துவிட்டார்.

    நான் தூக்கம் கலைந்து எழுந்து பார்த்தபோது 3 1/2-4 ஆகியிருந்தது.

    பின்பு out of curiosity I asked my f in law when the alliance was finalized. அவர் ஒரு ஃபைலைக்கொண்டுவந்து புரட்டிப்்பார்த்து 30-31 மே என்றார்

    இதுபோன்ற சில அனுபவங்கள், ஜோசியர் சொல்லி நடந்தவைகள், நமக்கு மேல் ஒரு சக்தி உண்டு என்பதை நிரூபித்தன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புட்டபர்த்தி பாபா ஏன் கனவில் வந்தார்? நேரடியாக அவர் ஏன் விஷயத்துக்கு வந்தார்? உங்கள் சந்தேகம் புன்னகைக்க வைத்தது என்றால் அதற்கு பானு அக்காவின் பதில் சிரிக்க வைத்து விட்டது.

      நீக்கு
    2. எனக்கெல்லாம் இப்படி எந்த உம்மாச்சியும் அல்லது உம்மாச்சித் தாத்தாக்களோ கனவில் வந்ததே இல்லை. சொல்லப் போனால் கனவு காண்கிறேனா என்பதே எனக்குச் சந்தேகம். எழுந்தால் எதுவும் நினைவில் வராது!

      நீக்கு
    3. கீதாக்கா மீக்கும் அதே கை கொடுங்க ஹைஃபைவ் சொல்லிப்போம்!! தரை முகர்ந்தால் கண் அயரும் அம்புட்டுத்தான்..

      கீதா

      நீக்கு
  26. //அப்போ 25 வயதில் இவனுக்காக எழுதி வைக்கப்பட்ட அந்தப் பெண் என்ன ஆகி இருப்பாள்? அவளேதான் இவனின் 33 வது வயது வரை காத்திருப்பாளா?//
    பெரும்பாலும் அப்படித்தான்.
    நீங்கள் விளையாட்டாக கேட்டிருப்பதை லா.ச.ரா., தரிசனம் என்னும் கதையில் சீரியசாக கேட்டிருப்பார். வரதட்சணை கொடுமையால் பல பெண்கள் திருமணம் ஆகாமல் முதிர் கன்னிகளாய் நின்று கொண்டிருந்த கால கட்டம். அவர்களை கன்னியாகுமரியோடு ஒப்பிட்டு, இவளுக்கு திருமணம் ஆகவில்லை என்றால், இவளுக்காக பிறந்திருக்கும் ஒரு ஆணுக்கும் திருமணம் ஆகியிருக்காதே? என்பதை அவருக்கே உரிய தனிப்பாணியில் வெகு அருமையாக எழுதியிருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ... நான் படித்ததில்லை. ஜம்பமாக லாசரா கதைகள் வாங்கி வைத்திருக்கிறேன். இன்னும் படிக்கவில்லை.

      நீக்கு
  27. /"பத்து நாள் நீங்க வெளியூர் போயிட்டா எங்களுக்கு எப்படிப் பொழுது போகும்?" என்று பாஸ் கேட்டபோது அல்ப பெருமையாய் இருந்தது! மாமியாரும் அதே கருத்தை எதிரொலித்தார். மனதுக்குள் கூலிங் க்ளாஸ் ஸ்மைலி போட்டுக்கொண்டேன்.//
    ஐயோ,ஐயோ, ஒரு உபசாரத்திற்கு சொன்னால் அதை அப்படியே எடுத்துக் கொண்டு விடுவதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஐயோ,ஐயோ, ஒரு உபசாரத்திற்கு சொன்னால் அதை அப்படியே எடுத்துக் கொண்டு விடுவதா? //

      அச்சச்சோ... நீங்கள் வேற ஸ்மைலி போட வைத்து விடுவீர்கள் போலவே....!

      நீக்கு
  28. இந்த வருடம் உங்கள் ஓட்டை வேறு யாராவது போட்டு விட்டார்களா? அல்லது இந்த வருட அனுபவமும் 2014 வருட அனுபவம் போலவே இருந்ததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வருடமும் என் வோட்டை நான்... நான்... நான்... நானே போட்டேன். இந்த வருடமும் முன்னே ஆட்கள் நின்றிருந்தார்கள். கடையில் ஆட்கள் இல்லை.

      நீக்கு
  29. //நான் அவரிடம், எனக்கு வெயிட் போட்டிருக்கு. நான் ஒல்லியா ஆகணும் என்று சிறுபிள்ளைத் தனமாக்க்்கேட்டேன். அவர் புன்னகைத்துக்்கொண்டே மெதுவாக புகைபோல் மறைந்துவிட்டார்.//
    சாய்பாபாவே தன்னால்கூட முடியாது என்று நழுவி விட்ட ஒரு விஷயத்திற்காக நீங்கள் லட்ச ரூபாய்க்கு மேல் செலவழித்திருக்கிறீர்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பிறகு நினைத்தது, என்னிடம் கேட்கத் தகுந்தவற்றை கேட்கத் தெரியலையே என அவர் உணர்த்தியிருக்கலாம். இல்லை இந்தமாதிரி தேவையில்லாதவற்றைக் கேட்டு அடுத்த ஜென்மத்தில் ஓமகுச்சி சைஸாகி வருத்தப்படுவேனோ என்னவோ.

      க்ஷஈரடி சாய்பாபா சம்பந்தமாக இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்றேன்.

      எதையும் வேண்டிக் கேட்கக்கூடாது. புத்திக்குப் புரிந்தது மனதுக்குப் புரிவதில்லை

      I am obsessed with reducing weight and have spent a lot. ஹாஹா.

      நீக்கு
    2. கடவுள் நேரில் வந்தபோது வேறு எதுவும் கேட்கத்தோன்றாமல் அப்போதைய தேவையான "சிமெண்ட் ஒரு மூட்டை" கேட்டானாம் ஒருத்தன்... அந்தக் கதை நினைவுக்கு வருகிறது.

      நீக்கு
  30. தொடக்கமே ஸூப்பர் ஜி
    நானும் காசிக்கு தொடர்ந்து வருகிறேன்.

    ஃபேஸ்புக் - வதனநூல் என்று சொல்லலாமே...

    பதிலளிநீக்கு
  31. முருகன் பத்தி பரமாச்சாரியார் சொன்னது புதுசு

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் சகோதரரே

    காசிப்பயணம் இனிதாக இருந்ததா? குடும்பத்துடன்தான் சென்றிருப்பீர்கள் என நினைத்தேன். பிரயாணங்கள் ஏற்பாடு செய்து நாள் நெருங்க நெருங்க கொஞ்சம் டென்ஷன்தான். இதில் அதை விட்டு விடலாமா, அதை கொண்டு செல்லலாமா.. என்ற எண்ணங்கள் வேறு டென்ஷனை அதிகமாக்கும். எப்படியோ பயணம்செய்யும் போது இனிதாக இருந்தால் சரிதான்..!

    /சில முன் எச்சரிக்கைகளை மெதுவாக எடுத்துக் கொள்ளலாம் என்று ஒத்திப்போட்டது கிளம்பும்வரை செய்துகொள்ளாமலேயே போனது. ஒத்திப்போடும் எந்தக் காரியத்துக்கும் அதுதானே விளைவு! /

    உண்மையான அருமையான வரிகள். தங்கள் பயண அனுபவம் குறித்து நகைச்சுவையாக மிகவும் எழுதியிருக்கிறீர்கள். ரசித்தேன்.
    தங்கள் பதிவுடன் நானும் தொடர்கிறேன்.

    பெருமாளின் தரிசனம், முருகனின் தரிசனம் அனைத்தும் நம் நேரங்களோடு ஒத்து வரும் தருணத்தில், பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். தகுந்த நேரத்தில் அவர்களும் ஒத்துக் கொண்டு உடன் வருவார்கள். தாமதமான வருகைக்கு மன்னிக்கவும். என் நேரம் இப்படி. ஹா ஹா ஹா.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...

      எல்லோரும் எங்கே போவது? வீட்டில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கடமைகள்... ஒத்திப்போட்டால் எந்நாளும் போகமுடியாமல்போயிருக்கலாம்!

      ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  33. ஒரு கதம்பப்பதிவோ என்று தோன்றியதுபயணங்கள்நன்கு திட்ட மிட்டு அதன்படி நடந்தால் மகிழ்ச்சி நாங்கள்ஜெய்ப்பூர் மதுரா ஆக்ரா வாரணாசி அலஹா பாத் ஹர்ட்வார் ரிஷி கேஷ் டெல்லி பாங்களோர் என்று திட்டமிட்டு 22 நாட்கள் பயணப்பட்டோம் அப்போது ரவுண்ட் ட்ரிப் என்ற முறையில் சில சலுகைகள் இருந்தது 2004 ல் பதிவாக்கி இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  34. ஜோதிட நம்பிக்கை
    இருக்கோ இல்லையோ
    கணிப்புச் சரியென்றால்
    ஜோதிடம் உண்மையே!

    பயணப் பதிவு
    அருமை

    பதிலளிநீக்கு
  35. ஸ்ரீராம் ஜி உங்கள் காசிப் பயணமும் சஸ்பென்ஸாகவே தொடங்கியிருக்கிறது போல.

    எந்த ரயில் எல்லாம் பின் வருமோ?

    பயணப் பதிவையும் மிகவும் ரசனையாக எழுதியிருக்கிறீர்கள். அடுத்த பதிவு அடுத்த வியாழனோ?

    எங்கள் வீட்டிலும் பயணம் என்றால் நாங்கள் 5 பேர் ஆயிற்றே அதுவும் காரில் செல்வதென்றால் லக்கேஜ் கூடுவிடும். ரயில் என்றால் போகும் போது எடுத்துச் செல்வதை விட வரும் போது அதிகமாகிவிடும்.

    கோயில் பற்றி நல்ல விஷயங்கள் அறிய முடிகிறது. ஜோஸ்யம் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை உண்டு. அதாவது கிரகங்கள் சரியாக இல்லை என்றால் அக்காலக்கட்டம் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் என்பது போன்ற நம்பிக்கை. நம்பிக்கை உண்டு என்பதற்காக எந்த ஜோஸ்யரிடமும் சென்றதில்லை. இறைவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அதையும் விட உண்டு என்பதால்.

    ஜனநாயகக் கடமையை நானும் ஆற்றினேன் எங்கள் ஊரில் 23 ஆம் தேதி. பதிவில் உங்கள் மனைவி எழுப்பிய கேள்வி அருமை. உண்மைதானே. அவர்களின் சிந்தனையும் பாராட்டிற்குரியது.

    அனைத்தும் ரசித்தேன் ஸ்ரீராம்ஜி

    துளசிதரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!