சனி, 20 ஜூலை, 2019

தனியார் பள்ளிக்கு இணையாக - எப்போதும்போல ஆர்வத்துடன் படிக்கும்படியாக


1)  கரூர் அருகே, தனியார் பள்ளிக்கு இணையாக, அதிநவீன வசதிகளுடன், அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருவதால், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.





===============================================================================================


சென்ற வாரப் பதிவுகள் (13-19 ஜூலை ’19) – எபி – விமர்சனம் – நெல்லைத்தமிழன்

சனிக்கிழமைகள் “நல்ல செயல்களை” அடையாளம் காட்டும் இடுகைகளாகவே இருந்தது.  அந்தக் கிழமைகளில் புதிய பகுதியாக ‘வார விமர்சனம்’ என்ற பகுதியை ஏப்ரலில் எ.பிளாக் ஆரம்பித்தது. அதனால் சனிக் கிழமையில் விமர்சனப் பகுதியை ஆர்வமாகப் படிக்கத்துவங்கினோம். சென்ற வாரம் விமர்சனப் பகுதி வராதது, ஏதோ ஒரு வெறுமையைத் தந்தது. அதனால் இந்த வாரத்தைய விமர்சனத்தை, ஸ்ரீராம் கேட்காவிட்டாலும்,  நாமே எழுதுவோமே என்று  இன்று (வியாழன் இரவு) எழுதத் துவங்கினேன். (அதற்கு முன், இந்த வாரம் விமர்சனம் பகுதி உண்டா என்று கேட்டு, இன்னும் யாரும் எழுதலை என்பதைத் தெரிந்துகொண்டேன்). இந்த வாரத்தில் திங்கள் பதிவும், செவ்வாய் பதிவும் நான் எழுதியது என்பதால், அந்தப் பகுதியை மட்டும் நினைத்ததுபோல விமர்சனம் செய்யவில்லை. இன்னொருவர் அந்த இரு தினங்களுக்கு மட்டும் விமர்சனம் எழுத நேரம் இருக்கா என்றும் தெரியவில்லை.




சனி – மென்பொருள் துறையில் வேலை பார்ப்பவர்கள் பொதுவா வார இறுதிகளில் Pub, Party என்று வாழ்க்கையை அனுபவித்த காலம் போய், அந்தத் துறையில் உள்ளவர்களும் சமூக சேவையில் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டு வருகின்றனர். சமூகத்திலிருந்து பெருவதில் ஒரு பகுதியை சமூகத்துக்கே வழங்குவதுதான் ‘சமூக சேவை’.  இந்த வாரம் நல்ல செயல்கள் செய்த 4 பேர்கள் அறிமுகப்படுத்தப்படுள்ளனர். சுவாரசியமாக, இந்த நான்கு செய்திகளையும் வெளியிட்டது தினமலர் பத்திரிகை.  இந்த நான்கு நல்ல செயல்களிலும் என்னைக் கவர்ந்தது வெள்ளத்தில் பாய்ந்து அதில் சிக்கிக்கொண்ட தாய் மற்றும் இரண்டு குழந்தைகளைக் காப்பாற்ற முயற்சி செய்த உத்தம் டடி என்ற சிறுவன். அவன் படத்தைப் பார்த்தாலே அவன் கண்களில் ஏழ்மையின் எளிமை தெரிகிறது. சிறிய வயதில் மிகப் பெரிய செயல்.  பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தண்ணீர் வைப்பது, சமூகத்தில் இருக்கும் ஏதிலிகளுக்கு உதவுவது, மற்றவர் தவறவிட்ட பணத்தை தவறவிட்டவரிடம் சேர்ப்பிக்க முயல்வது என்று செய்பவர்கள், வளர்ந்தவர்கள். அவர்களுக்குக் கல்வி அறிவு, சமூக அக்கறை போன்றவை இருப்பது பெருமைக்குரியது. இருந்தாலும் வளரும் மொட்டு உயிரைத் திரணமாக மதித்து ‘உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண்’ களைய நினைத்தது பெரிய ஆச்சர்யம். அவனை கெளரவிக்கும் விதமாக உத்தம் டடி படத்தை மீண்டும் இங்கு வெளியிடுகிறேன்.  அவனுக்கு நல்ல வளமான எதிர்காலம் அமையும், அமையட்டும்.



இந்த வாரத்தில் நிறையபேர் ‘விமர்சனம்’ எங்கே என்று பின்னூட்டத்தில் கேட்டிருந்தார்கள். அதுவே இந்தப் பகுதிக்கான வெற்றி என்று நினைக்கிறேன்.  என் எண்ணத்தில்,

ஞாயிறு – மேகாலயா பயணம் – ஷில்லாங்க் படங்கள் இன்னும் தொடர்கிறது, இடுகையில் சொன்னதுபோல ‘மழை விட்டும் தூவானம் விடாது’ போல. எனக்கு பொதுவா ஞாயிறு படங்கள் கவர்வதாகத் தோன்றுவதில்லை. உப்பு சப்பில்லாத படத்தை எடுத்து கவுண்டமணி காமெடி டிராக் வைத்து ஓட்டலாம் என்று நினைக்கும் இயக்குநர்தான் என் ஞாபகத்துக்கு வருகிறார். ஹார்ஷ் விமர்சனம் என நினைக்கவேண்டாம். படங்கள் தொடர்ச்சியாக எடுத்து அதில் நல்லதை செலக்ட் செய்யாமல் அப்படியே வெளியிடுவதால் என்னைக் கவருவதாக இல்லை. முன்பு சொன்னதுபோல, கவிதையான தலைப்புகள் படங்களுக்கு இல்லை என்றால், பல சமயங்களில் ஞாயிறு இடுகை சுமாருக்கும் கீழேதான் என்பது என் அபிப்ராயம். 

அதனால்தான் இன்றைய விமர்சனங்களில் பெரும்பாலும் ‘துரை செல்வராஜு சாருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியும்”, “நகரம் எப்படி அமைக்கவேண்டும், அமெரிக்காவில் எப்படி அமைத்திருக்கிறார்கள்’ என்றெல்லாம் வந்துள்ளது.  நண்பர் துரை செல்வராஜு சாருக்கு மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.



திங்கள் – எப்போதும்போல திங்கக் கிழமைனா அதில் ‘உணவு செய்முறை’ இடுகை வரும். இந்த வாரம் நான் அனுப்பியிருந்த ‘மோர்க்கூழ்’ வெளிவந்திருக்கு. இப்போல்லாம் அபூர்வமாகத்தான் புது புது ஐட்டங்களின் செய்முறை வெளிவருகிறது. பொதுவா எல்லாத் திங்கக் கிழமைகளிலும் பின்னூட்டங்களைப் படித்தால் உணவு சம்பந்தமான நிறைய தகவல்கள், வெவ்வேறு செய்முறை இவற்றையெல்லாம் நிறையபேர் பகிர்ந்துகொள்வதைப் படிக்கலாம், குறிப்பா கீதா சாம்பசிவம் அவர்கள்.  இந்த வாரம் ‘ராகி மொத்தே’வைப் பற்றி எழுதின கீதா ரங்கன் அவர்களும், ‘புளி உப்புமா, மோர்க்கூழ்’ வித வித வடிவங்களைப் பற்றி எழுதிய கீதா சாம்பசிவம் அவர்களும் தனித்துத் தெரிந்தனர்.

இதைச் செய்துவிடவேண்டியதுதான் என்று தீர்மானித்து, செய்து, அதை நகைச்சுவையோடு பகிர்ந்துகொண்ட அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் என்னைக் கவர்ந்தார்.  இணையம் இல்லாவிட்டால் சிறப்பாக எழுதும் மதுரைத் தமிழன் துரை போன்றவர்களின் எழுத்தை எங்கே படிப்பது?




செவ்வாய் :  இன்றைக்கு இரண்டு பகுதிகளாக நான் எழுதியிருந்த ‘அவன் அறிவானா’ வின் கடைசிப் பகுதி, கேட்டு வாங்கிப் போடும் கதையில் வெளியாகியிருந்தது. கதையின் வடிவத்தைப் பற்றி, அது தரமறந்த தாக்கத்தைப் பற்றி, அதன் ஃப்ளோவில் இருந்த குறைகள் பற்றி நிறையபேர் எழுதியிருந்தனர்.  என்னை எப்போதும் ‘அருமை’, ‘நல்லாருக்கு’, ‘படித்து ரசித்தேன்’, ‘நல்ல கதை’ என்பதுபோன்ற ஸ்டாண்டர்ட் பின்னூட்டங்கள் கவர்வதில்லை. இப்படி எழுதுவதும் ‘நானும் தளத்துக்கு வந்திருந்து படித்துவிட்டேன். ஆஜர்’ என்று சொல்வதற்கும் வித்தியாசம் இல்லை என்று நினைப்பேன், பலருக்கு அதற்கான நேரம் இருப்பதில்லை என்றபோதும்.  எழுதிய விமர்சனங்கள் பலதும் கதையின் ஆசிரியராக என்னைக் கவர்ந்தன. அதிலும் குறிப்பாக ஜீவி சார், பானுமதி வெங்கடேச்வரன் அவர்கள், கீதா சாம்பசிவம் மேடம், கிருஷ்ணமூர்த்தி சார் போன்றவர்களின் விமர்சனம், கதை எழுதுபவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும். எப்போதும்போல், தான் ரசித்தனவற்றைக் குறிப்பிட்டு நிறைந்த பின்னூட்டங்கள் அளிக்கும் கோமதி அரசு மேடம், கமலா ஹரிஹரன் அவர்களுக்கும் நன்றி.

இரண்டு பகுதிகளாக வந்த என் கதைக்கு, வித்தியாசமாக ‘நிறைய பின்னூட்டங்களை’ திண்டுக்கல் தனபாலன் எழுதியிருந்தார்.  இவ்வாறு வெளிப்படையாக எழுதும்போது, அதற்கு ஏற்ற மறுமொழி கொடுப்பது திருப்தியை அளிக்கிறது.

இடைக்கிடை, படம் கொடுத்து அல்லது சில வரிகள் கொடுத்து ‘கதை எழுதி அனுப்பச் சொல்வதை’ எபி ஆசிரியர் செய்யலாம். அல்லது ஏதேனும் கருத்து கொடுத்து அதற்குக் கதை எழுதச் சொல்லலாம். அப்படிச் சொல்லும்போது, எழுதுபவர்களுக்கு ‘செருப்புக்கேற்றபடி காலைச் செதுக்கும்’ வேலை இருக்காது. உதாரணமாக ‘ஏமாற்றம்’ என்ற கருத்தில் கதை எழுதச் சொன்னால் அதற்கு எல்லை இருக்காது, எப்படி வேணுமானாலும் எழுதலாம். ஆனால் ‘ராமன் ஏமாற்றினான்’ என்று வரும்படி எழுதச் சொன்னால், கதையின் தீம் எல்லோருக்கும் படிப்பதற்கு முன்பே தெரிந்துவிடும்.

நான் பொதுவாக, என் இடுகைக்கு அனைவருக்கும் அவர்கள் பின்னூட்டத்திற்கு ஏற்றபடி சிறிது ‘வள வள’ என்று இருந்தாலும் பதில் கொடுத்துவிடுவேன். அது எப்படி இருக்கிறது என்பதை வாசகர்கள்தாம் சொல்லணும்.  என்னைப் பொருத்தவரையில், ஒருவர் தன் நேரத்தைச் செலவழித்து கருத்திடறாங்கன்னா, அதற்கு ஏற்ற மறுமொழி கொடுப்பதுதான் அவர்களது அன்பை மதிக்கும் செயல்னு நினைக்கிறேன்.



புதன் – ‘சின்னச் சின்ன ஆசைகள்’ – பொதுவா புதன் கிழமை இடுகை, கேஜி கெளதமன் சாரின் பொறுப்பு என்று நினைக்கிறேன். அவர் ஒவ்வொரு வாரமும் எப்படியாவது ‘புதன்’ பகுதியை மென் மேலும் மெருகூட்டணும் என்று மெனெக்கிடுகிறார். ஆரம்ப காலத்தில் ‘புதிர் பக்கம்’ என ஆரம்பித்து, தற்போது கேள்வி பதில்களுடன், ஏதாகிலும் சுய முன்னேறம், PAC போன்றவற்றைப் பற்றி எழுதுகிறார்.   கேள்வி பதில் பகுதி இண்டெரெஸ்டிங் ஆக இருக்கணும்னா, கேள்விகள் இண்டெரெஸ்டிங் ஆக இருக்கணும். அப்போதுதான் அது ரசிக்கக்கூடிய பதில்களை வரவழைக்கும்.

இன்றைய கேள்விகளில் என்னைக் கவர்ந்தது, பானுமதி வெங்கடேச்வரன் அவர்கள் கேட்டிருந்த ‘பெர்ஃபெக்ஷனிஸ்ட்களிடம் மாட்டிக்கொண்டுமுழித்திருக்கிறீர்களா?”.  இதற்கு ‘&’ மிகவும் அருமையாக பதில் கொடுத்திருந்தார்.  நான் கேட்டிருந்த “திருமணச் சடங்குகள் ஏட்டளவில் அர்த்தமில்லாமல்பின்பற்றுகிறோமா?”  கேள்விக்கான பதில் இன்னும் விளக்கமாக இருந்திருக்கலாம். அல்லது வாசகர்களுக்கே பதிலளிக்க சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம்.

சமூகத்தில் ‘நான் உன்னை விடப் பெரியவன், பணக்காரன்’ என்று காண்பித்துக்கொள்ளும்போது, நிறைய பேரின் வயிற்றெரிச்சலுக்கும், சாதாரணவர்களையும் ‘ஆடம்பர அகம்பாவமாக’ மாற்றும் பாவத்திற்கும் தாங்கள் காரணமாயிருக்கிறோம் என்ற உணர்வை அவர்கள் பெறணும் என நான் நினைக்கிறேன். பிறருக்கு “அன்ன தானம்” செய்யணும் என்ற உயர்ந்த நோக்கு, நான் பெரிய கேடரிங் வைத்து ஆடம்பரமாக விருந்தளித்தேன் என்று பெருமை பேசி, உணவை யாருக்கும் பிரயோசனமில்லாமல் வீணாக்குவதில் வந்து நின்றுள்ளதை விரிவாக அலசியிருக்கலாம்.

PAC – நல்ல டாபிக். நன்றாக எழுதுகிறார்.  அதே சமயம் ‘இவர்கள் யார்’ என்று திரையுலகப் பிரமுகர்களின் சிறிய வயது போட்டோக்களைப் போட்டு, இந்தப் பகுதியை பல்சுவை விருந்தாக்கப் பார்க்கிறார்(ரா அல்லது இணையத்தில் பெண்கள் படத்தை browse செய்து, யாரேனும் புருவத்தை உயர்த்தினால் ‘புதன் இடுகை’க்காகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறாரா? ஹா ஹா)




வியாழன் – எப்போதும் ரசனைக்குரியதாகவும், பொதுவா வாரங்களில் சிறப்பான இடுகை வியாழனுக்குரியதாகவும் இருக்கும். இந்த வாரத்தில் காசிப் பயணக் கட்டுரை தொடர்ந்துள்ளது.  ஸ்ரீராம் மாதிரி, நல்ல ரசனையாக எழுதுபவர்களுக்கு, காசிப் பயணம், கங்கை படித்துறைகள், கோவில் நகரம் ஆனால் தெருக்களின் அவலம், பாரதியின் வளர்ச்சிக்குக் காரணமான ஊர், யாத்திரைக்குக் கூட்டிச் சென்றவர்கள் என்று நல்ல நல்ல டாபிக்குகள் கிடைத்தபோதும் இந்த வார இடுகை சிறப்பாக வரவில்லை.  இதன் காரணம் எனக்குப் புரிகிறது. பயணத்தின்போது குறிப்புகள் எடுத்தாலும், பயணம் முடிந்த உடன், உட்கார்ந்து எடுத்த படங்களைக் கோர்த்து, நினைவுகள் புதிதாக இருக்கும்போதே முழு பயணக் கட்டுரையையும் எழுதி வைத்துக்கொண்டு, வெளியிடும் வாரத்தில் சிறிது எடிட் செய்து இன்னும் சில செய்திகளைக் கோர்த்து வெளியிடணும். இல்லையென்றால், அந்த வாரம் ரொம்ப பிஸியான வாரமாக அமைந்துவிட்டால், ‘தொடரணுமே’ என்ற கடமைக்காக எழுதவேண்டியதாகிவிடும். அதிலும், கடைசி நேரத்தில் கோர்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தால், அதற்கான நேரம் கிடைக்காமல் இடுகையின் தரத்தை அது பாதிக்கும்.  இன்றைய இடுகை இன்னும் நன்றாக வந்திருக்கலாம். தனியாக ஸ்ரீராம் சென்றிருந்தால் நமக்கு ஏகப்பட்ட செய்திகளும் அதற்கேற்ற படங்களும் கிடைத்திருக்கும்.

வாரணாசியின் படங்கள், படித்துறைகள், படகுடன் கூடிய கங்கை… எப்போதுமே மனதுக்குள் சொல்ல ஒண்ணாத ஒரு நினைவைக் கொடுக்கும்.  ஒரு யாத்திரீகனுக்கு வாரணாசி கொடுக்கும் உணர்வுக்கும், அங்கு இருந்து தங்கள் வயிற்றுப்பாட்டைப் பார்த்துக்கொள்பவர்களின் உணர்வுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு என்பதை இடுகையின் சம்பவங்கள் சொல்கின்றது. பக்தியும் பக்தியைக் காசாக்கும் வியாபாரமும் எதிர் எதிர் திசையல்லவா?

மணி கர்ணிகா Gகாட்டைப் பற்றியெல்லாம் எழுதிவிட்டு, ‘ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாபம் பஜே”,  “பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன் ஐயனே என் ஐயனே” பாடல்களெல்லாம் ஸ்ரீராம் நினைவுக்கு வராமல், ஏதோ ஒரு பாட்டை வெள்ளியன்று பகிர்ந்துவிட்டாரே என்று வருத்தம்தான்.

சுகி சிவத்தின் கேள்வி பதில் என்னைக் கவரவில்லை. தியரி என்பது வேறு, ப்ராக்டிகல் என்பது வேறு. சுகி சிவம் அவர்கள் சொல்வது நடைமுறைக்குண்டானது அல்ல. அது ப்ரீச்சிங்/உபதேச வகையைச் சார்ந்தது.

தினமலர் திண்ணையில் வந்ததைப் பகிர்ந்துகொண்டது, ஸ்ரீராமின் ரசனைக்கு ஒரு எடுத்துக்காட்டு.  இன்றைய வாரம் அவரின் கவிதை மிஸ்ஸிங்.



வெள்ளி -  இன்று அதிசயமாக 1999ல் வெளிவந்த துள்ளாத மனமும் துள்ளும் என்ற படத்திலிருந்து “இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ” என்ற பேத்தல் வரிகள் கொண்ட பாடலை வெளியிட்டிருக்கிறார்.  ஹரிஹரன் அவர்களின் குழைவுக் குரலுக்காக பாடலை ரசித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.  இந்தப் பாடலில் “நூறு கோடிப் பெண்கள் உண்டு உன்போல் யாரும் இல்லையே” என்ற பாடலில் ஸ்ரீராம் மயங்கியிருக்கிறார் என்று தோன்றுகிறது.  இந்த வரியைப் படித்த உடனே எனக்குத் தோன்றியது, “எனக்கு டிரம்பைத் தெரியும், எனக்கு அமிதாப் பச்சனைத் தெரியும், எனக்கு மோடியைத் தெரியும்…. ஆனால் அவங்களுக்கு என்னைத் தெரியாது” என்று சொல்லும் ஜோக்குத்தான் நினைவுக்கு வந்தது.  கதாநாயகன் நூறு கோடி பெண்களைப் பார்த்ததாகவும் அதில் கதாநாயகியைப் போன்று ஒரு பெண்ணைப் பார்த்ததில்லை என்றும் சொல்கிறார்.  இந்தக் காதல் பித்து தலைக்கு ஏறி என்னமாதிரியெல்லாம் உளற வைக்கிறது என்பதை நினைத்துச் சிரித்துக்கொள்கிறேன்.

அடுத்த மொழியை கொலை செய்வதால் ஹரிஹரன் மீது கோபம் கொள்ளவேண்டுமா? இல்லை பாடும்போது வரிகள் சரியாகப் பாடுகிறாரா என்று கவனிக்காத இசையமைப்பாளர் குற்றவாளியா?

இன்று பானுமதி வெங்கடேச்வரன் மேடம் பயணத்தில் இருப்பதால், ‘சிம்ரன், கமல், மலேசியா சம்பவம்’ என்றெல்லாம் கிசு கிசு எழுதவில்லை போலிருக்கிறது. எழுதியிருந்தால் ‘எனக்கு இதெல்லாம் தெரியாது’. உலக்கை நாயகன் பெயர் போட்டிருப்பதால் நடந்திருக்க வாய்ப்பு இருக்கு” என்று கீதா சாம்பசிவம் மேடத்திடமிருந்து பதில் வந்திருக்கலாம்.

மொத்தத்தில் இந்த வாரமும் எங்கள் பிளாக், எப்போதும்போல ஆர்வத்துடன் படிக்கும்படியாக ரசனையாக இருந்தது. மீண்டும் படித்தாலும் நன்றாகத்தான் இருந்தது, பின்னூடங்களோடு படிக்கும்போது.



108 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்

    ஓ நெல்லைனு தெரியுது பார்க்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். வாங்க... வாங்க...

      நீக்கு
  2. காலை வணக்கம் அனைவருக்கும், என்னைக் கண்டுகொள்ளாத கீதா சாம்பசிவம் மேடம் உட்பட

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​ஹா...ஹா...ஹா... அது ஏன்?

      காலை வணக்கம் கைகொடுத்த நெல்லை!

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், முரளி மா, கீதா ரங்கன். இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.

      இந்த வார வீமர்சகராக நெல்லைத்தமிழன் பிரமாதமாகச் செய்திருக்கிறார்.
      மீண்டும் வருகிறேன்.

      நீக்கு
    3. இனிய காலை வணக்கம் அம்மா.

      நீக்கு
    4. ஒன்றே ஆனாலும் நல்ல செய்தியை வரவேற்கிறேன்.
      நல்ல மாதிரிப் பள்ளி. இன்னும் நலம் பெற வேண்டும்.

      நீக்கு
    5. நான் நேற்றே சொல்லி இருந்தேன். இரண்டு நாட்களுக்குக் காலம்பர வர முடியாது என்று. வழக்கம்போல் பதிவைப் பாதி அரைகுறையாகப் படிக்கும் நெ.த. அந்தக் கருத்தையும் படிக்கவில்லை; பார்க்கவில்லை! :P :P :P

      நீக்கு
    6. கீசா மேடம்... அப்படியே வந்தாலும் நீங்க சிம்பிளா 'அனைவருக்கும் வணக்கம் ப்ரார்த்தனைகள்' என்று முடிச்சுடறீங்க. நான் உங்கள்டேர்ந்து எதிர்பார்க்கிறது, திமுக கட்சி மீட்டிங் மாதிரி, 'அன்புக்குக்குரிய ...அவர்களே, ... அவர்களே' என்று அவங்க 1/2 மணி நேரம் வரவேற்பதிலேயே ஒவ்வொருவரும் நேரம் எடுத்துக்கொள்வது போல.

      நீக்கு
    7. @வல்லிம்மா... விமர்சிக்கறது மாதிரியான சுலபமான வேலை கிடையாது. படைக்கறதுக்குத்தான் திறமை வேணும். தவறா எழுதிடக்கூடாதுன்னு மனசுல ஓடிக்கிட்டே இருந்தது. இரண்டாவது முறை நிறுத்தி நிதானமா படிக்க நேரமில்லாமல் அனுப்பிட்டேன்.

      நீக்கு
  3. நாட்டுல நடக்கும் நல்லதுகள் குறைந்துவிட்டதா இல்லை உங்களுக்கு நேரமின்மையா?

    ஒரு நல்ல செய்திதான் கண்ணில் பட்டதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நெல்லை. கலெக்டர் ஏழை மாணவர்களுக்கு உதவினார் போன்ற செய்திகளை முடிந்தவரைத் தவிர்த்து விடுகிறேன். நல்ல செயல்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்.நம் செய்தித்தாள்களை வெளியிட அதைவிட பரபரப்பான வேறு செய்திகள் கிடைத்திருக்கும். தமிழ் ஹிந்து தனது தோற்றத்தை வேறு மாற்றிக்கொண்டு படுத்துகிறது. சிலசமயங்களில் நிறைய செய்தி கிடைக்கும். மிகச்சில சமயங்களில் இப்படி ஒன்றாவது கிடைக்கும். சனிக்கிழமை பாஸிட்டிவ் மிஸ் ஆகக்கூடாது பாருங்க...

      நீக்கு
    2. தினசரி செய்திகளை மேய்ந்துவிடுவேன் என்பதால் எனக்கு நேரமின்மை என்று சொல்ல முடியாது.

      நீக்கு
    3. //எனக்கு நேரமின்மை என்று //- ஸ்ரீராம்... ஒரு இடுகை எழுதணும்னா எனக்கு எவ்வளவு நேரம் ஆகிறது, அதை முழுமையா படங்களுடன் முடிக்க எவ்வளவு எஃபர்ட் தேவையாயிருக்கு என்பது எனக்குத் தெரியும். முன்னமே சொல்லியதுபோல இரவு 9 மணிக்கு நான் படுத்துவிடுவேன். பகலில் என் வேலைகளும் உண்டு. நேரம் எவ்வளவு குறைவாகக் கிடைக்கும் என்பது தெரியும். எப்படித்தான் நீங்க நேரத்தைக் கண்டுபிடிக்கிறீங்களோன்னு தோணும்.

      நீக்கு
    4. //எனக்கு நேரமின்மை என்று //- ஸ்ரீராம்... ஒரு இடுகை எழுதணும்னா எனக்கு எவ்வளவு நேரம் ஆகிறது, அதை முழுமையா படங்களுடன் முடிக்க எவ்வளவு எஃபர்ட் தேவையாயிருக்கு.// 100 percent true. Nellai ji You have been to Indonesia. wow. You are hiding behind a fish. haha.

      நீக்கு
    5. நன்றி நெல்லை.சிரமம் இல்லாமல் செய்கிறேன் என்று சொல்ல முடியாது. விருப்பங்கள் சிரமத்தைப் பார்ப்பதில்லை.நேரம் ஒதுக்குவதும் அங்ஙனமே!!

      நீக்கு
    6. //You are hiding behind a fish. haha.// - என்ன இப்படிச் சொல்லிட்டீங்க வல்லிம்மா?

      இது என் ஏரியா. இங்க எங்களுக்குத்தான் முன்னுரிமை. நீ பாட்டுக்கு வந்து எங்க ஏரியாவுல நின்னு போட்டோ பிடிச்சுக்கிட்டுப் போயிடுவயோ? என்று நினைத்து அந்த மீன்கள் குறுக்கே வந்துவிட்டதாக எடுத்துக்கொள்ளக் கூடாதா?

      ஆனாலும் அந்த அனுபவம், அதிலும் என்னை இரண்டு முறை அழைத்துச் சென்றார்கள்.

      எனக்கு நீச்சல் தெரியாது. (தவக்களை நீச்சல் தவிர). சில வருடங்களுக்கு முன்னால்தான் சிறிது கற்றுக்கொண்டேன் (18 கிளாஸ்னா, 9 கிளாஸ் சென்றேன்). அதற்கு ஜஸ்ட் சிறிது நாட்கள் முன்பு மெக்சிகோ சென்றிருந்தேன். அங்க கடலை ஒட்டிய ரிசார்ட்டில் தங்கியிருந்தேன். அங்க, கடலுக்குள் சென்று பவளப் பாறைகள், ஆமை மற்றும் பல அழகிய மீன்கள் போன்றவற்றை கூபா டைவிங்கில் சென்று பார்க்க, ஒருவருக்கு 50 டாலர் கட்டணம். நான் 100 டாலர் தருகிறேன், எனக்கு நீச்சல் தெரியாது, கூட்டிச் செல்ல முடியுமா என்று கேட்டதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். அதனால் அந்த வாய்ப்பை இழந்தேன்.

      அப்புறம் நான் சொன்ன, கொஞ்சம் நீச்சல் கற்றுக்கொண்டதனால், இந்தோநேஷியாவில், கடலில் தகுந்த உடையுடன் நீச்சலில் தண்ணீரின் மேலிருந்தவாறே பவளப் பாறைகள், மீன்கள் பார்த்தேன்.

      நீச்சல் நன்றாகத் தெரிந்திருந்தால் இன்னும் பல இடங்களில் உபயோகமாக இருந்திருக்கும். என்ன செய்ய?

      நீக்கு
  4. கரூர் அருகே உள்ள அரசு மேல்னிலைப் பள்ளி ரொம்ப அருமையாக இருக்கிறது. சூப்பர் நல்ல முயற்சி..தாந்தோன்றிமலை அருகில்.ஜெகதாபி// இப்பெயர் புதுமையாக இருக்கிறதே...தாந்தோன்றி மலைதான் புகுந்த வீட்டினரின் தெய்வம். அதுக்குப் பக்கத்துல ஜெகதாபி இது வரை கேள்விப்படவே இல்லை...

    பல ஹைடெக் வசதிகள், நீட் பயைற்சி என்று அதககள்ப்படுத்துகிறார்கள் பள்ளி வளர்ச்சிக்காக அரசு ஒதுக்கியதை நல்வழியில் பயன்படுத்தியிருப்பது மிக மிக மகிழ்வான விஷயம். இப்படி எல்லா அரசுப் பள்ளிகளும் செயலபடத் தொடங்கினால் தனியார் பள்ளிக் கொள்ளை, பினாமிக்கள் இல்லாமல் ஆகிவிடும்...இல்லையா ஸ்ரீராம்..

    ..வாழ்த்துகள் பாராட்டுகள் அப்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் தலைமை ஆசிரியருக்கும். மிக மகிழ்ச்சியான விஷயத்தைப் பகிர்ந்த ஸ்ரீராம் உங்களுக்கும் பாராட்டு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னால் இத்தனை ஆழ்ந்த கருத்துகளைச் சொல்ல முடியவில்லை என்பதே
      நான் விமரிசிக்காததற்குக் காரணம்.

      திங்கள் மோர்க்கூழும்,செவ்வாய்க் கதைக்கும் நானும் கருத்திட்டிருந்தேன்.
      எனக்கு அந்த அம்மாவுக்கு நல்ல மகிழ்ச்சி கிடைக்கவில்லையே என்ற எண்ணம்.
      என்பதை மிகப் பணிவாகப் பதிவிடுகிறேன்.

      அன்றன்றைக்கு எத்தனை சக்தியோ அது என் எழுத்திலும் தெரியும்.
      புதன் பதிவுகளுக்கு எனக்குக் கேள்விகள் தோன்றுவதில்லை.

      என்னைவிட இளையவர்கள் நீங்கள் உங்கள் கருத்துகளைப்
      படிப்பதே எனக்கு மகிழ்ச்சி.
      வியாழக்கிழமை ஸ்ரீராம் பயணப்படங்களை அழகாகத் தொகுத்து அளிக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
      அதைக் கருத்துக்களோடும் சொல்வதால் அதுவே முக்கியமான நாளாகி
      விடுகிறது. நல்லதொரு ஜர்னலிஸ்டாக ஸ்ரீராம் பரிமளிக்கிறார்.

      எப்போதுமே ஒருவருக்குப் பிடித்த பாடல்கள் எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்பதில்லை.
      அதுவும் என்னை மாதிரி சங்கீத ஞான சூன்யங்களுக்குக்
      கருத்து சொல்வது கூட கடினம் தான்.
      ஞாயீறு படங்கள் பற்றி உங்கள் கருத்துதான் எனக்கும்.

      ஆகக் கூடி அருமையான ,மனத்திலிருந்து வெளிப்படையாகக்
      கருத்துகளைச் சொல்லி இருக்கிறீர்கள் முரளி மா.
      மனம் நிறைந்த பாராட்டுகள். எங்கள் ப்ளாகின் வளர்ச்சி பெருகட்டும்.

      நீக்கு
    2. //நல்லதொரு ஜர்னலிஸ்டாக ஸ்ரீராம் பரிமளிக்கிறார்.

      எப்போதுமே ஒருவருக்குப் பிடித்த பாடல்கள் எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்பதில்லை.//

      நன்றி அம்மா. உண்மை.

      நீக்கு
    3. அம்மா... விமர்சனம் செய்ய ஆழ்ந்த கருத்துகள் இருந்தால்தான் சரியா? இல்லை நீங்கள் சொல்வதெல்லாம் ஆழ்ந்த கருத்துகள் இல்லை என்று அர்த்தமா? அன்றைய பதிவுகள் பற்றிய அல்லது அந்த வார்த்தையை எங்கள் பிளாக் தளம் பற்றிய உங்கள் பார்வை... மனசிலிருந்து வரும் எதுவுமே கவர்ந்து விடும்தானே? அதற்கு உங்கள் பதிவுகளே சாட்சி.

      நீக்கு
    4. //அந்த வார்த்தையை //

      *அந்த வாரத்தைய அல்லது அந்த வாரத்தின்

      நீக்கு
    5. @வல்லிம்மா //அந்த அம்மாவுக்கு நல்ல மகிழ்ச்சி கிடைக்கவில்லையே // - அந்தப் பகுதியை இன்னும் நல்லா நான் எழுதியிருக்கலாம். சமைத்த பிறகு, குழம்பில் இதைச் செய்திருக்கலாம், கொஞ்சம் முன்னமே இறக்கியிருக்கலாம் என்று சொல்வதில் என்ன பயன்?

      //எனக்குக் கேள்விகள் தோன்றுவதில்லை.// - அது எப்படித் தோன்றாதுபோகும்? அத்திவரதர் வைபவத்தையும் அதை ஹேண்டில் பண்ணும் விதத்தையும் நினைத்தாலே பத்து கேள்விகள் கேட்கலாமே

      //சங்கீத ஞான சூன்யங்களுக்குக்// - ஹா.ஹா.. நம்மைப்போல் பலர் இருக்கிறார்கள். நம்மில் எக்செப்ஷன், இந்த கீதா ரங்கன் அவர்கள்தாம். அவர்தான், இந்தப் பாடலில் பைரவியும், ஆபோகியும் கலந்து செஞ்சுருட்டியில் பாடியிருக்காங்கன்னு சொல்லி, நம்மை 'அட..இவருக்கு எவ்வளவு தெரிகிறது.. நமக்குத் தெரிந்ததெல்லாம் பைரவர், போகிப் பண்டிகை, சுருட்டுவது.. இவர் சங்கீத மேதையா யிருக்கிறாரே என்று நினைத்து... நமக்கு ஒண்ணும் தெரியலைன்னு நினைச்சுக்கறோம்... அவ்ளோதான். (இதை கீதா ரங்கன் படித்தால் அவ்ளோதான்)

      //எங்கள் ப்ளாகின் வளர்ச்சி பெருகட்டும்.//= நம் எல்லோரின் எண்ணமும் அதுவேதான் வல்லிம்மா

      நீக்கு
    6. ஹா ஹா ஹா ஹா....ஹலோ இங்க அதாரது எனைய்ப் பத்தி இப்படி சொல்றது !! நெல்லைதானே நினைத்தேன்...அவருக்கு என் காலை இழுத்து வாரலைனா தூக்கம் வராதே!!!!!!!
      //இவர் சங்கீத மேதையா யிருக்கிறாரே என்று நினைத்து... நமக்கு ஒண்ணும் தெரியலைன்னு நினைச்சுக்கறோம்..//

      மீ லேட்டா ஜம்பினதுனால நெல்லைய நல்லா திட்டிவிட்டு ஓடிடலாம்..ஹிஹிஹி...பின்ன நான் என்ன உங்களை அப்படி நினைக்கச் சொன்னேனா...ஸ்ரீராம் இன்று எனக்குக் கை கொடுக்க வரமாட்டார்....நெல்லை இன்று அவருக்குக் கை கொடுத்ததால் ஹா ஹா ஹாஹ் ஆஹ் ஆஹாஹா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நீங்களா நினைச்சுப் போட்டு!! நல்லா நாலு குட்டு வைக்கணும் உங்களுக்கு!

      ஹா ஹா ஹா அதே அதே நெல்லை நானும் அதையேதான் நினைத்துக் கொள்கிறேன்...நீங்கதான் என்னவோ என்னை மேதை அது இதுனு சொல்றீங்க...நேக்கும் ஒன்னும் தெரியாதாக்கும்...இப்ப ஃபேமஸா இருக்க அந்த அத்தி வரதர் சாட்சி அதுக்கு!!

      ஜோக்ஸ் அபார்ட் நெல்லை சீரியசாகவே சொல்லறேன் எனக்கு சங்கீதத்துல ஜீரோதான். சூனியம்தான்! அதுதான் உண்மை நெல்லை. இங்க ராகம் சும்மா அடிச்சு விடுவதை வைச்சு தப்புக் கணக்கு போட்டுடாதீங்க!!!

      சிந்துபைரவில அந்த பைரவி (அவங்க பேர் மறந்து போச்!!) பாட்டுக் கத்துக்கும் போது மாடில துணி? காயப் போட்டுருக்கேன் எடுக்கணும் கேஸ் மூடிருக்கானு என்று சொல்வது போலத்தான் நானும். அதனாலதான் என்னால சங்கீதம் உருப்படியாகக் கற்றுக் கொள்ள முடியவில்லை. ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    7. ராகங்கள் பற்றி சொல்றது, அதைப் பற்றிப் பேசறதுலாம் நீங்கதான் கீதா ரங்கன். பத்தாக் குறைக்கு, ஸ்ரீராம் வேற அதற்கு மறுமொழி தரும்போது, உங்களை 'ஆஹா ஓஹோ ராக எக்ஸ்பர்ட்' என்றெல்லாம் சொல்லிடறாரா..எங்களுக்கு நீங்கதான் நிச்சயமா டி.கே.பட்டம்மாளின் சிஷ்யையா இருந்திருக்கணும், கொஞ்சம் வாய்ப்பு போயிடுத்து என்று நினைத்துக்கொள்கிறேன். மீதி அப்புறமா வருகிறேன்.

      நீக்கு
    8. @கீதா ரங்கன் - //அதனாலதான் என்னால சங்கீதம் உருப்படியாகக் கற்றுக் கொள்ள முடியவில்லை.// எதுலயும் பெரிய ஆளாகணும்னா அசுர உழைப்பு வேண்டும். என் பெண் சின்ன வயசுலேர்ந்து ரொம்ப நல்லா பாடுவா. என் அம்மா, தன் வீட்டுக் குரல் அவளுக்கு இருக்கு, அவளை ரொம்ப டெவலப் செய்யணும் என்றாள். ஆண்டவன் ஆஸ்ரமத்துல, ஆண்டவன் முன்னிலையில் அவள் பாடியபோது (+2?) அங்கிருந்த பலர், இவளை விஜய் தொலைக்காட்சி அனந்த் வைத்தியநாதனிடம் கொண்டு சென்றால், பெரிய அளவில் கொண்டுவந்துவிடுவார் என்றார்கள். என் பெண், ஸ்டிரெய்ட் ஃபார்வர்ட். என்னிடம், அவ்வளவுலாம் என்னால அதுக்கு நேரம் ஒதுக்க முடியாதுன்னு சொல்லிட்டா. எனக்கு எங்க வீட்டுல பாட்டு சொல்லிக்கொடுக்கலை, ஆனால் குரல் இருந்தது (கடந்த காலம் ஹா ஹா).

      நீக்கு
  5. நெல்லை உங்கள் விமர்சனத்தைக் கொஞ்சம் தான் வாசித்தேன் அப்புறம் வருகிறேன். நேரம் கிடைப்பதே அரிதாகி வருகிறது.

    இரண்டு விஷயங்கள் கண்ணில் பட்டது. அருமை, நன்று ரசித்தேன் என்பது நிஜமாகவே ஆஜர் கமென்ட்ஸ் தான்.

    நாம் எழுதுவதற்கு பதில், ப்ளஸ் நாம் அதற்குக் கொடுக்கும் பின்னூட்டம் கருத்திற்குப் பதில்கள் என்று யெஸ் கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்து யெஸ் யெஸ்...அதே

    ஞாயிறு பற்றிய பதிவுக்கு நானும் நீங்கள் சொல்லுவதையேதான் நினைத்து சொல்லியிருக்கிறேன் இங்கு.

    நல்ல படங்களாக வெளியிடுதல்.....ப்ளஸ் நம் படங்களைத் தவிர சென்ற இடங்களின் முக்கியத்துவம் வாய்ந்த நல்ல படங்களை மட்டும்....

    திங்கவுக்கு மட்டும் நான் வந்துருவேன் போல ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

    உங்கள் கதை (நானே நீளமாக எழுதுவதால் எனக்கு நீளம் பற்றிச் சொல்ல முடியாது ஹிஹிஹிஹிஹி) எனக்குப் பிடித்திருந்தது நெல்லை. செம்போத்து லிங்க் மட்டும் இன்னும் கொஞ்சம் உணர்வுபூர்வமாக இருந்திருக்கலமஓ என்று...

    இப்போதெல்லாம் பகுதி பகுதியாகத்தான் ஆழ்ந்து வாசிக்க முடிகிறது அதனால் எனக்குக் கருத்து இடுவதிலும் ஒரு சுரத்து கம்மியாவது தெரிகிறது. மீண்டும் என்னை உத்வேகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    எனக்கே நேரப்பற்றாக்குறை எனும் போது பல பதிவுகள் வாசிக்கும் பலருக்கும் எல்லாத் தளங்களுக்கும் சென்று விரிவான கருத்து இடுவது என்பது கடினம் நெல்லை..ஓரிரு தளங்களில் மட்டுமே இட முடியும் என்று தோன்றுகிறது

    பானுக்கா, ஜீவி அண்ணா, கீதாக்கா எல்லோரும் நல்ல வாசகர்கள் எனவே கதைக்கான அவர்களது கருத்துகள் வேலிட்டாக ஆழ்ந்த கருத்துகளாக இருக்கும்...

    மீதிக்கு அப்புறம் வருகிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @கீதா ரங்கன் - நீளமாக எழுதுவது ஒரு குறை இல்லை. குறள் மாதிரி எழுதும் திறமை பெற்றவர்கள் அப்படி எழுதட்டும். சிலர் நாலடியார், சிலர் கொச்சக்கலிப்பா, சிலர் காவியம் மாதிரி. எழுத்து படிக்கும்படி இருக்கா என்பதுதான் அளவுகோல். அதுனால 'வள வள' எழுத்தைப் பற்றி நான் கவலைப்பட்டதில்லை. நீங்களும் கவலைப்படத் தேவையில்லை.

      நல்ல வாசகர்களிடமிருந்த நல்ல கருத்து வரும். கோமதி அரசு மேடமும் முழுமையாகப் படித்துவிட்டுத்தான் கருத்தெழுதுவார். அவரது பின்னூட்டங்களிலும் இது தெரியும். இந்த மாதிரி ஆழ்ந்த கருத்துள்ளவர்கள் எழுதுவது எல்லோருக்கும் பயனுள்ளதுதான்.

      சனிக் கிழமையும் நீங்க பிஸி என்று சொல்றீங்க. (ஆனால் 2 வேளை சமைப்பதே பெரிய வேலை என்று எனக்குத் தோன்றும். ஹா ஹா)

      நீக்கு
    2. ஆமம நெல்லை கிச்சன் வேலை வீட்டு வேலை வெளிப் பணி என்று...ரொம்பவே டைம் டைட்.

      நாளை ஒருநாள் தான் லீவு வேலைக்கு. வீட்டு வேலைக்கு என்றுமே லீவு கிடையாதே.

      கீதா

      நீக்கு
    3. //வீட்டு வேலைக்கு என்றுமே லீவு கிடையாதே.// - இது பெரிய பணி கீதா ரங்கன். I appreciate people who do this without even thinking about their difficulties. நான் இங்க, ஞாயிறு மதியம் 2 மணிக்குமேல் கிச்சன் வரமாட்டேன், நீங்களே ஏதாவது சாப்பிட்டுக்கணும்னு சொல்லிடுவேன். (ரெண்டு வேளை செய்வதற்கே இந்தப் பாடு ஹா ஹா).

      சிலர் எனக்கு இது வேணும், எனக்கு சாதம் குழையக்கூடாது, எனக்கு இந்தக் காய் பிடிக்காது, கூட்டு பண்ணு என்றெல்லாம் ஒவ்வொருவரும் சொல்ல ஆரம்பித்தால்... சமையல் செய்பவர்கள் பாடு திண்டாட்டம்தான்.

      நீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  8. பழமையை மாற்றி புதுமையை ஏற்படுத்தினால்தான் மக்களை கவர முடிகிறது. நல் ஆசிரியர்கள் இணைந்து தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை நடத்தி வருவது மகிழ்ச்சி தருகிறது.
    பள்ளியில் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவது மகிழ்ச்சி.அரசு மேல்நிலை பள்ளிக்கு வாழ்த்துக்கள்.
    நல்ல செய்திக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை ஸ்ரீராம் கவனிக்க விட்டுவிட்டார்.

      அரசுப் பள்ளிகள் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும், ஆசிரியர்கள் மனதுவைக்கணும். அப்படி நடந்தால், உள்ளூர் மக்கள் அவர்களுக்கு மிகவும் ஆதரவாக இருப்பார்கள் கோமதி அரசு மேடம்.

      நீக்கு
  9. அன்பின் நெல்லை அவர்களது விமர்சனம்...

    விடியற்காலையில் வீர கர்ஜனை..
    பல விஷயங்களை அலசியிருக்கின்றீர்கள்.. ஏற்புடைய கருத்துகள்...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துரை செல்வராஜு சார்.... சில சமயம் மனசில் ஒன்று வைத்துக்கொண்டு, விமர்சிக்கும்போது வேறு மாதிரி எழுதினால் மனதில் திருப்தி வருவதில்லை. முடிந்த அளவு புண்படுத்தாமல் விமர்சனம் எழுத முயற்சிக்கிறேன்.

      நீக்கு
  10. கைப்பேசி வழியாகக் கருத்துரை செய்வதே நமது உற்சாகத்தைக் கெடுக்கிறது...

    ஆயினும் வேறு வழியும் இல்லை... மாலையில் அறைக்குத் திரும்பியதும் கணினியில் இணைய இணைப்பு குதிரைக் கொம்பாக இருக்கிறது....

    எல்லோருடைய பதிவுகளிலும் நிறைய சொல்வதற்கு ஆசைதான்...

    ஆனாலும் வெகு சிரமமாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீப காலமாக உங்களுக்கு இணையப் பிரச்சனை, நேரப் பிரச்சனை. அதனால் நிறைய கருத்துக்களை உங்களிடமிருந்து பார்க்க முடிவதில்லை.

      எனக்குக்கூட, நெல்லைப் பயணத்தை அனுப்ப ஆசை. 3 இடுகையே, படங்களுடன் 17 MB வந்துவிட்டது. உங்கள் இணையப் பிரச்சனையில் இது வேறயா என்று மனதில் தோன்றுகிறது.

      நீக்கு
    2. ஆகா..

      நான் அதற்காகத் தான் காத்திருக்கிறேன்..
      தாமதிக்காமல் அனுப்பி விடுங்கள்... நான் என்னப்டியும் தரவிறக்கம் செய்து கொள்கிறேன்...

      நீக்கு
  11. இன்று விமர்சன பகுதி இடம்பெற்றது மகிழ்ச்சி. முதலில் ஆரம்பித்த நெல்லைத்தமிழனே மீண்டும் ஆரம்பித்து வைத்து இருக்கிறார். (கைகொடுத்த நெல்லை!)

    //என்னைப் பொருத்தவரையில், ஒருவர் தன் நேரத்தைச் செலவழித்து கருத்திடறாங்கன்னா, அதற்கு ஏற்ற மறுமொழி கொடுப்பதுதான் அவர்களது அன்பை மதிக்கும் செயல்னு நினைக்கிறேன்.//

    நன்றாக சொன்னீர்கள்.

    பதிவு எழுதியவர்களுக்கு பின்னூடங்கள் மகிழ்ச்சி, மீண்டும் எழுத உற்சாகம் கிடைக்கும். பின்னூடங்களுக்கு பதில் அளித்தால் பின்னூட்டம் அளிதவர்களுக்கு மகிழ்ச்சி. இரு தரப்புக்கும் கிடைக்கும் மகிழ்ச்சி.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி அரசு மேடம். நீங்களும் எல்லா பின்னூட்டங்களுக்கும் முழுமையான பதில் அளிப்பீர்கள். அது நிறைவாக இருக்கும். நானும், எத்தனை வாரங்களுக்குப் பின் வரும் கருத்துக்களானாலும் பதில் மறுமொழி அளிக்க மறக்கமாட்டேன்.

      நீக்கு
  12. அழகிய தெளிந்த நீரோடை போல நிறைகுறைகளைப்பற்றி விமர்சித்த விதம் அழகு.

    நான் கணினியில் உட்கார்ந்து இரண்டு மாதமாகிறது எனது சூழல் அப்படி.

    ஆகவே அலைபேசி வழியாக கருத்துரை விரிவாக சொல்ல இயலவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி.. உங்கள் வருகையும் கருத்துமே மகிழ்ச்சி தருகிறது.

      நீக்கு
    2. கணினியில் அமரும்போது சொல்லுங்கள் கில்லர்ஜி.

      நீக்கு
  13. நல்ல விஷயங்களை quantityஐ வைத்து மதிப்பிட முடியாது, qualityயைத்தான் பார்க்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பாசிட்டிவ் செய்தி ஒன்றேதான் என்றாலும் நிறைவு. அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்து நல்ல விஷயம்.

    பதிலளிநீக்கு
  14. வாழும் கலை வகுப்பில், பொறுப்பு வழங்கப்பட வேண்டியது அல்ல, எடுத்துக் கொள்ள வேண்டியது என்பார்கள். அதன்படி எங்கள் ப்ளாகில் சுவையான பகுதியான விமர்சனம் தடைபட்ட பொழுது தயங்காமல் முன்வந்து விமர்சனம் எழுதியிருக்கும் நெல்லை தமிழனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பாரபட்சமில்லாமல், நேர்மையான விமர்சனத்திற்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பானுமதி வெங்கடேச்வரன் மேடம்... நான் கூறிய கருத்துக்கள் அல்லது விமர்சனம், தவறு என்று இதுவரை யாரும் சொல்லாததே, நான் என் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறேன் என்று தோன்ற வைக்கிறது.

      நீக்கு
    2. அதையும் எடுக்க வேண்டிய நேரத்தில் சரியாக எடுத்தது...

      நீக்கு
  15. தமிழ் படித்த பேராசிரியர்கள் விமர்சனங்களுக்கு மாற்றான இந்த மாதிரியான வாசிப்போருடன் நெருங்கி தோளில் கைபோட்டுக் கொண்டு பேசும் விமர்சனங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். தமிழின் எழுத்து நடை பாட புத்தக வாசிப்பு போல இல்லாமல் இந்த மாதிரி புதுமையான போக்கில் புதுப்புனல் புறப்பட்டாற் போல வேகப்பாய்ச்சல் காட்ட வேண்டும். வாழ்த்துக்கள் நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவி சார்... எழுத எழ்தத்தான் எழுத்து வரும். நான் அலிபிரியில் இருக்கேன். நீங்க திருமலையில் இருக்கீங்க. நான் இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம். நீங்களெல்லாம் 'வாராய் நீ வாராய்..போகுமிடம் வெகு தூரமில்லை' என்று உற்சாகப்படுத்துவதால் இன்னும் பயணப்படுகிறேன்.

      நீக்கு
    2. பொங்கும் பூம்புனல். தமிழ் வாழ்க.

      நீக்கு
  16. வணக்கம் எல்லோருக்கும். இன்று சனிக்கிழமை. பிறகுதான் வர முடியும்.

    ஸ்ரீராம் மாதிரி தன் உருவம் வெளிக்காட்டாமல் இருக்கக்கூடாது என்பதற்காக இன்று என்னுடைய புகைப்படம் (சில வருடங்களுக்கு முன்பு ஒல்லியாக இருந்தபோது...2012ஆ..பார்க்கணும்) வெளியிட்டிருக்கிறேன். இது இந்தோநேஷியாவில் கடலுக்கு அடியில் எடுத்த புகைப்படம்.

    மற்ற புகைப்படங்கள் தாய்லாந்து கோ ஸாமுய் தீவில் எடுத்தவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கழுவுகிற மீனில் நழுவிகிற மீனை இன்று பார்த்து விட்டேன்...! ஹா... ஹா...

      நீக்கு
    2. திண்டுக்கல் தனபாலன் - அது ஒரு தனி அனுபவம். கடலுக்குள்.. பவளப் பாறைகள், கலர் கலர் பெரிய பெரிய மீன்கள். நம்மை நோக்கி வர வைக்க, கையில் ஒரு பாட்டிலில் அதுகளுக்கான உணவு. பாட்டிலை அமுக்கினால், உணவு வெளியே வரும். அதை நோக்கி இன்னும் அதிகமாக பெரிய மீன்கள் வரும்.

      இதனை அந்த டூர் ஆர்கனைசர்கள் காணொளியாகவும் படங்களாகவும் எடுத்துத் தந்தார்கள். இது நான் தனியாக அஃபீஷியலாகச் சென்றிருந்தது.

      தாய்லாந்தின் அனுபவும் வித்தியாசமானது.

      சமயம் கிடைக்கும்போது அந்த அனுபவங்களை எழுதுகிறேன். ஒரு சில, எனக்கு மன அதிர்ச்சியைத் தந்தவை. ஹா ஹா. ஒரு சில, என் மனதில் இருந்த ஆசையைத் தீர்த்துக்கொள்ள வாய்த்தவை (என் மனைவியோடு சென்றிருந்தேன். அதனால் கற்பனை திசை திரும்பாதிருக்கட்டும். ஹா ஹா)

      நீக்கு
    3. தாய்லாந்து அனுபவங்களா? ஆ... காத்திருக்கிறேன்!

      நீக்கு
    4. //ரீராம் மாதிரி தன் உருவம் வெளிக்காட்டாமல் இருக்கக்கூடாது என்பதற்காக //

      grrrrrrrr.... சமீபத்தில் கூட என் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தேன். அதிராவுக்குக் கூட தெரியும்!

      நீக்கு
  17. புகைப்படமா?

    எங்கே? எங்கே?.. எங்கே? (என்று பைரவியைக் கேட்பாளைக் காண்மின்.. கான்மின்..) -- கலிங்கத்துப் பரணி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்தீங்களா ஜீவி சார்... அழகிய தமிழ் மொழி பற்றி எழுத ஆரம்பித்த உடனேயே எழுத்திலும் அழகிய தமிழ் மொழி வந்து விழுகிறது...

      நீக்கு
    2. ஜீவி ஸார்... நெல்லை...

      நானும் ஓடிச் சென்று ஒருமுறை புகைப்படத்தைப் பார்த்து வந்தேன்.

      நீக்கு
  18. இது போல பல பள்ளிகள் மாற வேண்டும்...

    நெ. த. ஐயா... உங்கள் விமர்சனம் தானா...? சிலவற்றை "பட்பட்" என்று சொல்லி விட்டர்கள்...

    பக்தியைக் காசாக்கும் வியாபாரம் தற்போது ஜோராக நடந்து கொண்டிருக்கிறது...

    என்னது காதல் பித்து என்பதா...? அது அனுஷ் பித்து...! நேற்றைய பதிவின் தலைப்பை வாசித்தவுடன் தெரிந்திருக்க வேண்டாமோ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @திண்டுக்கல் தனபாலன் - //சிலவற்றை "பட்பட்" என்று சொல்லி விட்டர்கள்... // - இப்போது சந்தேகம் தீர்ந்ததா? பிறர் எழுத்தை ஸ்ரீராம் எடிட் செய்வதில்லை, எழுத்து பிரசுரிக்கும் தரம் இருக்குமென்றால். மனசுக்குத் தோன்றியதை கடகடவென எழுதினேன்.

      ஒரு தடவை அரசியல் சம்பந்தப்பட்ட கதை அனுப்பியிருந்தேன். ஸ்ரீராம், அதை எபியில் பிரசுரிக்கமுடியாது என்றார். கேஜிஜி சார் அவருடைய தளத்தில் பிரசுரம் செய்தார்.

      //பக்தியைக் காசாக்கும் வியாபாரம் தற்போது // - இது கடந்த 50 வருடங்களாக ஜரூராக நடந்துகொண்டுவருகிறது.

      //அது அனுஷ் பித்து...// - அடக் கடவுளே... இப்படியா புரிந்துகொண்டீர்கள்?

      நீக்கு
    2. //என்னது காதல் பித்து என்பதா...? அது அனுஷ் பித்து...! நேற்றைய பதிவின் தலைப்பை வாசித்தவுடன் தெரிந்திருக்க வேண்டாமோ...?//

      DD ...

      நீங்களும் விளையாட்டாய்தான் சொல்லியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனினும்...

      கோவை ஆவியை நினைவிருக்கிறதா? அவர் நஸ்ரியா மேல் மானஸீகக் காதல்கொண்டு ஒரு புத்தகமே போட்டார் நினைவிருக்கிறதா? அப்போது விளையாட்டாய் போட்டிக்கு ஆரம்பித்தது அனுஷ் விஷயம். அப்புறம் பேஸ்புக்கில் போட்டிக்குப் போட்டி போட்டு அது பிரபலமானது. அவ்வளவுதானே தவிர பித்தெல்லாம் இல்லை. இங்கு போடுவது உட்பட இவை எல்லாமே ஒருஜாலி.. சும்மா பொழுது போக்கு. நாம் அந்த வயதைக் கடந்து விட்டோம் என்று எனக்குத் தெரியும்!

      நேற்றைய பதிவிலும் வழக்கம்போல பாடலின் ஒரு வரியை தலைப்பாக்கி இருந்தேன்.. நான் சொல்வதற்குதான் நான் பொறுப்பு. நீங்கள் எடுத்துக்கொள்ளும் அர்த்தத்துக்கு நான் பொறுப்பல்ல...!!!

      நீக்கு
    3. ஸ்ரீராம் சார்... சும்மா ஜாலிக்குத்தான்...

      நீக்கு
    4. ஓகே ஓகே DD... விளக்கம் சொல்லிவிடுவது நல்லது என்று நானும் நினைத்தேன். நன்றி.

      நீக்கு
    5. திண்டுக்கல் தனபாலன் - நானும் 'தமன்னா' என்று சொல்வதை வைத்து, அவளது ரசிகன் என்று நினைத்துவிடாதீர்கள். இதெல்லாம் சும்மா ஜாலிக்காக எழுதுவது. அதுக்கு வம்பு வளக்க மத்தவங்க 'அனுஷ்கா', 'பாவனா' என்று சொல்வார்கள். அவ்ளோதான். எல்லோருக்கும் வாழ்க்கையின் பிரையாரிட்டி வெவ்வேறு இருந்தாலும், இங்க தளத்துல ரிலாக்ஸ் மூடுல இந்த மாதிரி கலாய்ப்பது, போலியா ரசிகர்கள் என்பதுபோல் சப்போர்ட் செய்வது..அவ்ளோதான்.

      நீக்கு
  19. ஜெகதாபி? அபுதாபிக்குப் பக்கத்தில் தேட நினைத்தேன். கரூர் மாவட்டம் என்கிறதே செய்தி!

    அரசுப்பள்ளியை ஒரு ’மாதிரி மேல்நிலைப் பள்ளி’யாக மாற்ற அரசின் முதலீடு 1.36 கோடி ரூ. இதில் பாதி எந்தப்பக்கமாவது ‘கழன்று’சென்றுவிடாமல் இருக்க, தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி அருள்வாராக!

    மற்றபடி பள்ளியில் நல்ல மாறுதல்கள், வசதிகள் முறையாக செய்துகொடுக்கப்பட்டால், அரசுப்பள்ளிகள் தழைக்கும். படிப்பு/ பயிற்சியின் தரம் வெகுவாக உயரும். இப்படி ஒரு பள்ளியோடு நிறுத்திவிடாமல் மேற்கொண்டு மற்ற பள்ளிகளுக்கும் இது தொடரப்படவேண்டும் அரசினால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு ஆரம்பம் இருந்தால்போதும் ஏகாந்தன் ஸார்.

      நீக்கு
  20. நல்ல விமரிசனத்திற்கு நன்றி நெல்லைத்தமிழன் சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கெளதமன் சார்...தளத்தை இன்னும் பரிமளிக்கச் செய்ய உதவும் என்று நம்புகிறேன்.

      நீக்கு
  21. பின்னூட்டங்காளுக்கு மறு மொழி எழுதும்போது அந்தப்பின்னூட்டமே பதிவைப்பற்றி இல்லாமல் வேறொருவரின் பின்னூட்டம்பற்றி இருக்கும் போது அவ்வ;ளவாக ரசிப்பதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி.எம்.பி சார்... பலதடவைகள் இந்த மாதிரித்தான் நிகழும். இங்கு முன்னர் வந்த 'புதிர்' இடுகைகளுக்கான பின்னூட்டம் பார்த்தீர்கள் என்றால், பதிவை விட்டுவிட்டு, சிலர் கொடுத்த பின்னூட்டத்திலிருந்து மறுமொழி, அதற்கு மறுமொழி என்று வளரும். அப்படி இருப்பதால்தான் நிறைய பின்னூட்டங்கள் இங்கு எபியில் பல இடுகைகளுக்கு வருகின்றன என்று நினைக்கிறேன்.

      அதைக் கலந்துரையாடல் என்ற கோணத்தில்தான் பார்க்கணும். ஏனென்றால், அந்த கலந்துரையாடலுக்கான ஆரம்பப் புள்ளி, இடுகையிலிருந்து வந்திருக்கும்.

      நீக்கு
    2. >>> சிலர் கொடுத்த பின்னூட்டத்திலிருந்து மறுமொழி, அதற்கு மறுமொழி.. <<<

      இந்த மாதிரியான கருத்துப் பரிமாற்றம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று...

      ஆனால் இதை எல்லாரும் விரும்புவதில்லை என்பதும் எனக்குத் தெரியும்...

      நீக்கு
    3. 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊அதே அதே சபாபதே. அன்பு துரை,
      இது எங்கள் ப்ளாகின் புது வடிவ வட்ட மேஜை. உற்சாகமாகச் செல்கிறது.
      நன்மையே.

      நீக்கு
    4. ஜி எம் பி ஸார்.. பின்னூட்டங்கள் பதிவைப் பற்றிதான் இருக்க வேண்டும் என்று நானும் நினைக்கவில்லை. ஒரு விஷயத்திலிருந்து இன்னொரு விஷயம், அதிலிருந்து இன்னொரு புதிய விஷயம் என்று போய்க்கொண்டே இருக்கலாம். அதுதான் சுவாரஸ்யம்.

      நெல்லை சொல்லியிருப்பதுதான் என் கருத்தும்.

      துரை செல்வராஜூ ஸார்..

      //ஆனால் இதை எல்லாரும் விரும்புவதில்லை என்பதும் எனக்குத் தெரியும்...//

      விரும்பாதவர்கள் மிகக்குறைவு என்றே நினைக்கிறேன். அப்படிப் பேசாது போனால் பல விஷயங்களையும் அறியும், பேசும் வாய்ப்பு இல்லாமல் போர் அடிக்கும்!

      அதே அதே வல்லிம்மா... எங்கள் பிளாக்கின் விருப்பமும் அதுவே...

      நீக்கு
    5. ஜி.எம்.பி சார்.. இன்னொன்றும் என் மனதில் தோன்றியது.

      இப்போ உங்களை வந்து பார்த்தால், நீங்கள் ஏதேனும் சொல்வீர்கள். அதற்கு நான் பதிலாக, 'ஆமாம்', 'சரிதான்' என்று சொன்னால் உரையாடல் எப்படி வளரும்? நீங்க ஒண்ணு சொல்ல, நான் என் அனுபவத்தில் வேறொன்று சொல்ல..இப்படி உரையாடல்கள் செல்லும்போதுதான் ரசிக்கும்னு நினைக்கிறேன்.

      பாருங்க..இப்போ உங்க வீட்டுக்கு (அதாவது எபி வாசகர்களில் எவர் வீட்டுக்கும்) நான் வந்தாலோ அல்லது சந்தித்தாலோ, நான் புது விருந்தினனாக இருக்கமாட்டேன். உங்களைப் பற்றி எனக்கும், என்னைப் பற்றி உங்களுக்கும் ஓரளவு புரிதல் இருக்கும். நம் உரையாடல் அதைத் தொடர்ந்து செல்லும்.

      வெறும்ன, இடுகை, அதற்கு கருத்து, அதன் மறுமொழி, 'மிக்க நன்றி' என்று இருந்துவிட்டால், அது வெறும், தளம், வாசகன் என்ற நிலையில் நின்றுவிடும் என்பது என் எண்ணம்.

      நீக்கு
    6. இந்தப் பின்னூட்டத்திற்குப் பின்னூட்டாம் என்று செல்வதுதானே பலம்...பல விஷயங்கள் வரும். அறிய முடியும். எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இப்படிக் கும்மி அடிப்பதும் அதில் விஷயம் அறிவதும் என்று.

      ரசிப்பதும் அதுவே...இல்லை என்றால் போர்தான்...

      அப்புறம் க்ளாஸ்ரூம் போல ஆகிவிடும். நாங்கலாம் இங்க வகுப்புல கடைசி பெஞ்சுக் கூட்டமாக்கும்...ஹா ஹாஹ் ஹா ஹா ஹா..

      கீதா

      நீக்கு
    7. பாருங்க..இப்போ உங்க வீட்டுக்கு (அதாவது எபி வாசகர்களில் எவர் வீட்டுக்கும்) நான் வந்தாலோ அல்லது சந்தித்தாலோ, நான் புது விருந்தினனாக இருக்கமாட்டேன். உங்களைப் பற்றி எனக்கும், என்னைப் பற்றி உங்களுக்கும் ஓரளவு புரிதல் இருக்கும். //

      ஹா ஹா ஹா ஹா நெல்லை ஜி எம் பி சார் யாரும் வெளிப்படையாகவே இல்லைனு இல்லையா சொல்கிறார்...மனதில் தோன்றுவதைச் சொல்லவில்லை என்று...உண்மையானது இல்லை என்று...அப்படி இருக்க ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...ஹையோ ஸ்ரீராம் அங்கு மழைனா இதைக் கப்பல் விட்டுருங்க....இல்லைனா கிழிச்சு சென்னை தேம்ஸ்ல போட்டுருங்க...ஹா ஹாஹ் ...மீ வேகமாக ஓடிப் போகிறேன்....

      கீதா

      நீக்கு
    8. @கீதா ரங்கன் - //ஜி எம் பி சார் யாரும் வெளிப்படையாகவே இல்லைனு இல்லையா சொல்கிறார்..// - உலகத்துல யாருமே வெளிப்படையா இருக்க முடியாது. அப்படி இருக்கேன்னு நினைக்கறவங்க, தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள். அதுபோல எல்லோரிடமும் ஒரே முகத்தோடு இருக்கவே முடியாது. மனதில் தோன்றுவதை ஃபில்டர் பண்ணாமல், நகாசு வேலைகள் செய்யாமல் யாருமே சொல்ல முடியாது.

      இல்லை...நான் ரொம்ப வெளிப்படையானவன். மனதில் நினைப்பதைச் சொல்வேன். என் மனதுக்கு சரி என்று பட்டதை மட்டும்தான் செய்வேன் என்று சொல்பவர்கள் ஹிப்போக்ரேட்ஸ். எதையும் செய்துவிட்டு, மனதுக்குச் சமாதானம் சொல்லிக்கொள்வார்கள்.

      யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இது உலக இயல்பு. இந்த இயல்பை மீறுபவர்கள் இரண்டே இரண்டு பேர்தான். ஒருத்தர் இறந்துவிட்டார். இன்னொருவர் இன்னும் பிறக்கவில்லை.

      நீக்கு
    9. என் அனுபவத்தில் நெல்லை, உங்கள் முதல் பாராவை பயங்கரமாக ஆதரிக்கிறேன்.

      நீக்கு
    10. கீதா ரங்கன் - ஒரு சாதாரண உதாரணம். நீங்க புளி உப்புமாவுக்கு அரிசி ரவைதான் போட்டுச் செய்யணும் என்று சொல்வீங்க. நான் அப்படிக் கிடையாது, எப்போதும் எங்கள் வீட்டில் கோதுமை ரவையில்தான் புளி உப்புமா செய்வோம், அதுக்கு கொத்தமல்லி விரையும் அரைத்துப் போடுவோம் என்று பிடிவாதமாகச் சொன்னால் நீங்க என்ன சொல்வீங்க? மனசுல, 'பாவம்..புளி உப்புமான்னா என்னன்னே தெரியலையே இவருக்கு' என்று நினைத்தாலும், 'அப்படியா... எங்க வீட்டுல இதுதான் வழக்கம். நீங்க சொல்ற மாதிரியும் செய்வாங்க போலிருக்கு' என்று சொல்வீங்க. சாதாரண விஷயத்துக்கே நாம மனசுல நினைப்பதை வெளிப்படையாச் சொல்ல மாட்டோம். இதுல வெளிப்படை, மனதில் தோன்றுவைதைச் சொல்வது என்றெல்லாம் பேசினால்?

      எனக்குத் தெரிந்து வெளிப்படையாக தைரியமாக பல விஷயங்கள்ல கருத்து சொல்றது கீதா சாம்பசிவம் மேடம். அதே சமயம், சண்டைக்கு வர மாட்டாங்க. நான் சொல்வது என் கருத்து, உங்க கருத்து உங்களுக்கு என்று இருந்திடுவாங்க.

      நீக்கு
    11. @கீதா ரங்கன் - //நாங்கலாம் இங்க வகுப்புல கடைசி பெஞ்சுக் கூட்டமாக்கும்..// - இதை நான் கடுமையாக ஆதரிக்கிறேன். சமீபகாலமாக, அதாவது 3-4 வாரங்களாக, நீங்க முதல்ல வருவதில்லை, எப்போதும்போல் நிறைய கருத்துகள் சொல்வதில்லை, பல நாட்கள் அப்புறம் வருகிறேன் என்று சொல்லிடறீங்க. (ஆனா அதுக்கு தகுந்த காரணம் இருக்கு, வேலை மற்றும் மற்ற வகையில் நீங்க பிஸி என்று தெரிந்தாலும்). ஹா ஹா.

      தைரியமாத்தான் கலாய்க்கறேன். மனசுல கோபத்தை வச்சுக்கிட்டு, வீட்டுக்கு வரும்போது, பாயசத்துல பெருங்காயம் கரைச்சுக் கொடுத்துட மாட்டீங்க என்ற நம்பிக்கைதான்.

      நீக்கு
  22. அரசுப் பள்ளி மிகமகிழ்சி தருகிறது.

    பதிலளிநீக்கு
  23. இனிய மாலை வணக்கம் ஸ்ரீராம்....

    அரசுப் பள்ளி மகிழ்ச்சி தருகிறது.

    விமர்சனம் இந்த வாரம் மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி. நெல்லைத் தமிழன் அவர்களின் எழுத்திற்குக் கேட்க வேண்டுமா? அசத்துகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் ... உங்கள் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் அதற்கு அவ்வளவு தகுதியுள்ளவன் அல்லேன்.

      அதிருக்கட்டும்...ஷீலா தீக்‌ஷித் - உங்களுக்கு விடுமுறை உண்டா?

      நீக்கு
    2. ஷீலா தீக்ஷித் - உங்கள் மூலமே தகவல் அறிந்தேன். தில்லி அரசின் முன்னாள் முதல் மந்திரி - தில்லியில் காங்கிரஸ் அரசாக இருந்திருந்தால் விடுமுறை அளித்திருக்க்லாம் - தில்லி அரசு அலுவலகங்களுக்கு! எங்களுடையது மத்திய அரசு - விடுமுறை இருக்காது. சனி, ஞாயிறு பொதுவாகவே விடுமுறை தான்.

      நீக்கு
    3. சில அரசியல்வாதிகள் மறக்க முடியாதவர்கள் - இவரும்... நல்லது கெட்டது என இரண்டிலும். முதல் மந்திரியாக இருந்த போது நிறைய நல்லதும் செய்திருக்கிறார். சுலபமாகச் சந்திக்க முடியும் முதல் மந்திரி. பல நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கிறார் - தமிழர்கள் நடத்திய நிகழ்ச்சிகளுக்கும், கோவில் விழாக்களுக்கும்.

      நீக்கு
    4. //உங்கள் மூலமே தகவல் அறிந்தேன்.// - ஓ...அலுவலக வேலைச் சுழலில்... செய்திகளை மேய இரவு 10 மணி ஆகிடும்னு நினைக்கிறேன் (வந்த உடன் உணவைத்தானே தயார் செய்யணும்).

      நல்லது கெட்டது இரண்டிலும் - ஹா ஹா.... அதிலும் தலைமைப் பொறுப்புக்கு வந்தால், இரண்டும் இல்லாமல் எப்படி காலம் தள்ளுவது?

      நீக்கு
  24. படங்கள் எல்லாம் செமையா இருக்கு நெல்லை.

    என்ன மச்ய அவதார ஃபேன்சிட்ரெஸ்!!!!!!!!!!!! அது நீங்களா அல்லது உங்க பையனா!! ஹா ஹா ஹாஅ ஹா ஹா..

    எங்கே நெல்லை எங்கே நெல்லை நு தேடினா மச்ய....ஹா ஹா ஹா ஹாஹ் ஆ..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களைப் பற்றியும் இன்று எழதறேன். நானா அல்லது என் பையனா? பாருங்க.. 6 வருடங்களின் என்ன மாதிரியான மாற்றம்னு..ஹா ஹா.

      நீக்கு
  25. விமர்சனம் நல்லாருக்கு நெல்லை. நீங்களே முன்வந்து செய்ததற்குப் பாராட்டுகள்.

    நெல்லை கதை எழுதுவதற்கு நீங்க சொல்லிருக்கும் சஜஷன் நல்லாருக்கு.

    அதுல ஒரு சின்ன கேள்வி.. டாப்பிக் கொடுப்பது பத்தி சொல்லிருக்கீங்கல்லியா இப்ப சீதை ராமனை மன்னித்தாள் என்பதற்கும் மன்னிப்பு அல்லது மன்னித்தாள் என்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லையே நெல்லை. கரு என்று ஸ்பெசிஃபிக்கா கொடுத்தால் தானே அது டெய்லர்டு என்று இல்லையோ?

    சீராம வில் கூட வேறு வேறு கதைகள் வந்தனவே. அதில் மன்னிப்பு என்பதுதானே மெயின் கதை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமே..இல்லையோ..

    உங்களின் பார்வையில் கருத்துகளை அழகா சொல்லிருக்கீங்க நெல்லை

    கீதா

    நானும் கதையின் நீளம் பற்றிக் கவலைப்படுவதில்லை நெல்லை.

    நானும் கதைகள் என்றில்லை பதிவுகள் எல்லாவற்றையும் முழுவதும் எப்படியாவது வாசித்துவிடுகிறேன். என்ன இப்போது கருத்து இடுவதில்தான் முழுமை இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். இப்போ 'சீதை ராமனை மன்னித்தாள்' என்று சொல்லும்போதே கதை மாந்தர் பெயர் படிக்கும்போதே நமக்கு அந்த கடைசி வரிகளிலேயே கண் இருக்கும். அதுனால சம்பவங்களை அடுக்கினாலும் ரசிப்பது குறைந்துவிடும். 'மன்னிப்பு' என்று சொன்னால், யார் யாரிடம் மன்னிப்பு கேட்கப்போறா, இல்லை கேட்கவே மாட்டாங்களா, இல்லை தவறு செய்தவன்(ள்), போய்த் தொலையுது இவனை(ளை) திருத்த முடியாது என்று தானே மன்னிப்பு கேட்பாங்களா என்பதை அனுமானிக்க முடியாது.

      அடிக்கடி வாங்க. காணாமல் போறிங்க. (ஒருவேளை, பெண்கள் இணையத்தில் காணாமல் போகும் சீசனா? அதிரா, ஏஞ்சலின், நீங்க, கீசா மேடம்.....)

      நீக்கு
  26. கரூர் அரசு மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள் .யூகேஜி மாணவர்களுக்கு சீருடை இல்லையா அங்கே ??
    பலவருஷமாச்சு வெளிநாடு வந்து அதனால் ஒரு சின்ன டவுட் அது என்ன ? அரசுப்பள்ளிகள் ,மீல்ஸ் கவர்ன்மென்ட் aided பள்ளிகளா அலல்து மாநகராட்சி பள்ளிகளா ? எல்லா ஸ்டேட் போர்ட் ஸ்கூல்சும் அரசு பள்ளிகள்தானே ??

    எங்க இங்கிலாந்தில் 4 வகை இருக்கு
    1, சர்ச் of இங்கிலாண்ட் பள்ளிகள்
    2, கத்தோலிக்க பள்ளிகள்
    3, faith ஸ்கூல்ஸ் ( இது சீக்கியர் யூத , இஸ்லாமியருக்கு )
    மூன்றிலும் அரசு நடத்துவது ஒரே கட்டணம் அதாவது fees கிடையாதது இங்கே 13 ஆம் வகுப்பு வரை ,இலவச எஜுகேஷன் .


    4, பிரைவேட் பள்ளிகள் இங்கு வருடாந்திர 12,000 பவுண்ட்ஸ் -17 ,000 பவுண்ட்ஸ் வரை கட்டணம் அநேகமா நம் நாட்டு பெருந்தலைகளின் :) அமிதாப் பேரபுள்ளைங்க ஷரனுக்கன் பிள்ளைங்களாம் இங்கே தான் படிக்கிறாங்கன்னு நினைக்கிறன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சல் அரசு சார்ந்தவை என்று சொல்லப்படுபவை வேறு அதாற்கு மேனேஜ்மென்டும் உண்டு. ஆசிரியர்கள் மேனேஜ்மென்ட் மூலமாகத்தான் வேலையில் அமர்த்தப்படுவாங்க ஆனால் அரசு நிர்ணயித்த சம்பளம். பி எஃப் எல்லாம் உண்டு. தனியார்பள்ளிக்கும் அரசுப் பள்ளிக்கும் இடைப்பட்டவை. இப்பள்ளிகளில் பலவற்றில் ஆசிரியர்கள் பணிக்குச் சேரும் போது ஒரு தொகை கட்ட வேண்டியிருக்கும்.

      பொதுவாகவே அரசு பள்ளிகளுக்கு அரசு ஒவ்வொரு வருடமும் நிதி ஒதுக்க்ம். அதுதான் இது. ஆசிரியர்கள் அரசினால் அமர்த்தப்படுவார்கள்.

      கீதா

      நீக்கு
  27. இன்று நெல்லைத்தமிழன் விமரிசனத்துக்கு முதலில் கதையையும் ரெசிபியையும் படிச்சிட்டு வந்து பின்னூட்டமளிக்கின்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏஞ்சலின்... எல்லாவற்றிர்க்கும் மறுமொழி கொடுப்பேன். இன்று கொஞ்சம் வேலை. மாலையில் மறுமொழி கொடுப்பேன்.

      நீக்கு
  28. உத்தம் டடி பற்றி படித்து தெரிந்துகொண்டேன் ஏழ்மையிலும் மேன்மை குணம் .பாராட்டுக்கள் .
    துரை அண்ணாவிற்கு லேட்டானாலும் எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன் .
    படத்தில் இளநீர் கண்ணை கவருது .இப்போ இங்கும் கிடைக்குது ஆனால் சுவை மற்றும் கண்ணுக்குத்தெரியா அடிட்டிவ்ஸ் இருக்குமான்னு பயம் :)
    நீங்க இந்த இளநீர் சதையை எடுத்து தோசை அரைக்கும்போது சேர்த்து செய்து சொல்லுங்க :) கோவானீஸ் ரெசிப்பியாம்

    ///என்னைப் பொருத்தவரையில், ஒருவர் தன் நேரத்தைச் செலவழித்து கருத்திடறாங்கன்னா, அதற்கு ஏற்ற மறுமொழி கொடுப்பதுதான் அவர்களது அன்பை மதிக்கும் செயல்னு நினைக்கிறேன்.//

    எங்க தலைவி மேதகு மியாவ் கொள்கையும் இதுவே .அவரிடமிருந்து நான் கற்ற நல்ல பாடம் இது .
    உங்க ரெசிப்பி கதை இரண்டுக்கும் பின்னூட்டம் தந்துட்டேன் .கதையில் ஒரு குறை அத்தனை அருமையான தாயை பேரக்குழந்தை முகம் காணாம போனது அடுத்தது அட்லீஸ்ட் பறவையாகவாவது சந்தோஷ் வீட்டில் சிலகாலம் இருந்திருக்கலாம் .அதுமட்டுமே குறை .

    புதன் கிழமை எனக்கு இப்போல்லாம் வர இயலாததால் கேள்விகள் கேட்க முடியலை .
    அந்த பாறை படம் யானை நீரை குனிந்த்து குடிப்பது போலிருக்கு .

    அந்த cube பாறை செம அழகு .#

    கடலுக்கடியில் நீங்கள் ..அங்கே உங்கள் கையில் கோக் பாட்டில் எப்படி வந்தது ??
    நீங்கள் எடுத்த படங்களை இணைக்கும்போது அதில் எண்களை சேருங்கள் அப்போதான் தனித்தனியா சுட்டி காட்டி கருத்திட ஈஸி .கப்பல் வடிவ பாறை அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஏஞ்சல் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

      நீக்கு
    2. ஏஞ்சலின்..வருகைக்கு நன்றி. அந்த ரிசார்ட்டுல எத்தனை இளநீர் வேணும்னாலும் தருவாங்க. அழகா கட் பண்ணி ஸ்டிரா போட்டு.

      உங்க தலைவி மியாவின் இன்னொரு கொள்கையை நான் சரியா கடைபிடிக்கறதில்லை. அதை இனி செய்யணும். அவங்க, பின்னூட்ட வரிசைப் பிரகாரம்தான் மறுமொழி கொடுப்பாங்க. நான் 80வது பின்னூட்டம் என்றால் 79 முடிந்த பிறகுதான் என் கமெண்டுக்கு மறுமொழி கொடுப்பாங்க. அது ஒரு நல்ல வழிமுறை. அவங்க இப்போ கனடால கோவில் தீர்த்தவாரி (தண்ணீத் தொட்டில) எஞ்சாய் பண்ணறாங்களோ இல்லை ஏகப்பட்ட படங்கள் எடுத்து முதலில் ஆர்வமா இடுகை போட ஆரம்பித்து அப்புறம் சோம்பேறித்தனத்தினாலோ இல்லை படங்கள் மிஸ்ஸிங் என்று சொல்லியோ நிறுத்தப்போறாங்களோ தெரியலை.

      இன்னொரு பாறை, அப்படியே யானை இருப்பதுபோல இருந்தது. இன்னொரு பாறை (ரொம்ப ஃபேமஸ்) படம் எடுத்தேன், ஆனால் இங்கு போட முடியாது. கியூப் பாறை ரொம்ப அட்டஹாசம். 10 அடி உயரமாவது இருக்கும்.

      அடுத்த முறை படங்களுக்கு எண்ணைச் சேர்க்கிறேன்.

      நன்றி..

      நீக்கு
  29. //கையில் ஒரு பாட்டிலில் அதுகளுக்கான உணவு. பாட்டிலை அமுக்கினால், உணவு வெளியே வரும்.//

    ஸ்ஸ்ஸ் இப்போல்லாம் பின்னூட்டத்தை படிப்பதில்லை ..தெரிந்துகொண்டேன் அது உணவு பாட்டில் .பத்திரமா பிளாஸ்டிக்கை நீரை விட்டு வெளியே வரும் போது மறக்காம கொண்டுவந்திங்களா ??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சலின்...அதுல மீனுக்கான உணவும் தண்ணீரும் சேர்த்து கலக்கியிருக்கும். அதை அமுக்கினால் உணவு வெளியே வரும். அதை நோக்கி மீன்கள் வரும் (ஒருவேளை மீன்கள் நம்ம பக்கம் வந்து சுத்தும் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்காமல் போயிடக்கூடாது என்பதற்காக). கடைசியில் படகுக்கு வரும்போது அந்த பிளாஸ்டிக் பாட்டிலைக் கொடுத்துடணும்.

      நீக்கு
  30. வணக்கம் நெல்லைத்தமிழன் சகோதரரே.

    பாஸிடிவ் செய்தி வழக்கம் போல் அருமை.அரசு பள்ளி தனியார் பள்ளி மாதிரி செயல்பட்டு வருவதற்கு மிக்க மகிழ்ச்சி.

    இரண்டாவதாக தங்களது விமர்சனம் மிக அருமை. இந்த விமர்சன பகுதி சென்ற வாரம் இடம் பெறாமல்,ஒரு வித நிறைவின்மையுடன் மனக்குறையாக இருந்ததையும், இவ்வார தங்களது விமர்சனம் ஈடுகட்டிக் கொண்டு மிக அழகாக எங்கள் (எ. பியின் மனதும் நிரப்பியபடி) மனது நிறையும்படி வெளி வந்துள்ளது. ஒவ்வொரு வரிகளும் கல்லில் திறம்பட செதுக்கிய சிற்பமாய் பிரகாசிக்கிறது. இத்தனை அழகாக, ஆழமாக எழுதிய தங்களுக்கு முதலில் என் (தங்கள் அற்புதமான வார்த்தை வடிவமைப்புகளை பாராட்ட எனக்கு தகுதி அவ்வளவாக இல்லையெனினும்,) பாராட்டுகளுடன் வாழ்த்துக்கள்.

    கடந்த வாரத்தில் ஒவ்வொரு நாளையும், பாராட்டி, அதே சமயம் சிறு குறைகளை மனம் நோகாமல் எடுத்துச் சொல்லியதோடு மட்டுமின்றி, தானே மனமுவந்து வந்து விமர்சனத்தை தொகுத்தளித்து சிறப்புடன் தந்த பாங்கினுக்கும் மிக்க நன்றிகளும்.

    இடையிடையே படங்கள் மிக அழகாக இருக்கின்றன. ஒவ்வொரு படங்களும் ஒரு இயற்கை வனப்போடு கதை பேசுகின்றன.

    பகிர்வினுக்கு மனமுவந்த மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... அடுத்த வாரம் உங்களிடமிருந்து விமர்சனம் வருமா?

      உங்கள் தளத்தில் இடுகை போட்டு நாளாகிவிட்டதே...

      நன்றி

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!