சனி, 27 ஜூலை, 2019

மொடக்குறிச்சி சாமியாத்தாள்



1)  மொடக்குறிச்சியில் வசிக்கும் மூலிகை தாய்' என்றழைக்கப்படும் சாமியாத்தாள் என்பவருக்கு, ஜெர்மனி நாட்டின் சர்வதேச அமைதி பல்கலைக்கழகம், 'வைத்ய பூஷன் விருது' வழங்கி கவுரவித்துள்ளது.





=============================================================================================


கடந்த வார பதிவுகளின்விமர்சனம்.  இந்த வாரம் அந்தப்பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார் ஜீவி ஸார்.


தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி என்கிற தலைப்போடு  கரூர் மாவட்ட ஜெகதாபி என்ற ஊரின் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றின் செயல்பாடுகளை  படங்களுடன் விவரிக்கிற செய்தி சென்ற சனிக்கிழமை எ.பி.யில் பகிரப் பட்டிருக்கிறது.  காஸ் இணைப்பு, அறிவியல் ஆய்வகம், எல்.இ.டி. திரையுடன் ஸ்மார்ட் வகுப்புகள், அவற்றில்  ஸ்பீக்கர் வசதி,  பள்ளியைச் சூழ்ந்து 23 சி.சி.டிவி கேமாராக்கள் என்று படங்களுடன் செய்தியைப் படித்ததில்  இந்த வசதிகள் எல்லாம் தனியார் பள்ளிகளில் இன்று பரவலாக இருக்கின்றனவா என்பதே மனதில் கேள்வியாக நின்றது.   ஒருவகையில் பார்க்கப் போனால் மாதிரிகள் எல்லாம் ஒருவகைத்தான  கனவுகள் தாம்.  கனவுகளே  மானிலம் பூராவும்  எதிர்கால நனவுகளாகி விட்ட மாதிரி திருபதி அடைந்து விட முடியாது தான்.   அதனால் தான் சம்பந்தப்பட்டவர்களும் இதை வைத்துக் கொண்டு அதை அடைந்து விட்ட மாதிரி கற்பனையை வளர்த்திக் கொள்ள வழிகோலுகிறார்கள்.

நெல்லைத் தமிழன் எனக்கு முன்னோடியாய் சென்ற வார எ.பி.- பகுதியைச் சுடச்சுட புதுமாதிரியில் தனி மாதிரியாய் விமரிசித்திருந்தார்.   சென்ற வார திங்கள், செவ்வாய் பகுதிகள் அவர் சமைத்தவை என்பதால் அது பற்றி விமரிசனததைத் தவிர்த்திருந்தார்.  வேறு யாராவது அது  பற்றி விமரிசன ரீதியாகக் குறிப்ப்டுவாரோ என்ற எண்ணம் அவருக்கு இருந்தாலும் வரக்கூடிய திங்கள் வேறு இதே மாதிர்யான ஒரு திங்கற கிழமை என்பதினால் சென்ற திங்கள்  பகுதியை நானும் தவிர்த்து விட்டேன்.  

'அவன் அறிவானா' என்ற நெல்லையின் கதைக்கான விமரிசன ஆய்வுகளுக்கான விடுப்பட்ட குறிப்புகளை சென்ற வார தனது விமரிசனப் பகுதியில் கிடைத்த வாய்ப்பாக நெல்லை உபயோகித்துக் கொண்டது உருப்படியான காரியம்.  ஒரு படம் கொடுத்து அதற்கேற்பவான கதை எழுதச் சொல்லலாம்,  அல்லது ஒரு கருத்தைக் கொடுத்து அதற்கேற்பவான கதை-- என்று இரண்டு புது யோசனைகளை நெல்லை இந்த செவ்வாய் கதைப் பகுதிக்கு ஆலோசனையாகச் சொல்லியிருக்கிறார்.  எழுத்தாளர்களை இப்படி எழுது, அப்படி எழுது என்ற வட்டங்களுக்குள் அடைக்காமல்  இப்பொழுது நடைமுறையில்  இருக்கிற மாதிரியான  'அவர் நினைப்பதை அவர் எழுதுகிற'  சுதந்தர முறை தான் ஊக்குவிக்கப் படவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இன்னும் நிறைய எழுத்துத் துறையில் எ.பி. நினைத்தால் செய்யலாம்.  வாரத்திற்கு பத்து நாட்கள் இருந்தாலும் எ.பி..க்குப் பத்தாது.   அதனால் இப்பொழுது புழக்கத்தில் இருக்கும் பழசாகிப்  போன ஏதாவது ஒரு பகுதியை  எடுத்து விட்டு,  அந்த நளை வாசகர் எழுதுகிற கட்டுரைகளுக்கு அர்ப்பணிக்கலாம்.  சந்திரயான்-2,  சமீபத்திய  தமிழக அகழ்வாராய்ச்சிகள் பற்றி , புதிய கல்வித்திட்டம் என்று வாசகர் விரும்புகிற  ஏதாவது டாபிக்கில்  நேரடி அரசியல் கலக்காமல்  எழுதலாம்.  அப்படியான கட்டுரை  வாசகர்களுக்கு இதுவரை பரவலாகத் தெரியாத புதுப்புது தகவல்களைத் தொட்டுச் செல்வதாய்  இருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு கண்டிஷன் போதும். ஆரம்பத்தில்  மாதத்திற்கு ஒரு நாள்,  அல்லது இரண்டு  நாட்களாவது  இந்த மாதிரி கட்டுரைப் பகுதிக்கு ஒதுக்குங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.  ஏனென்றால் கட்டுரைகளும் எழுத்துத் துறையில்  இருக்கிற ஒரு முக்கியமான பகுதி தான்.  சுயாமாக, கோர்வையாக கட்டுரைகளை அமைக்கிற ஆற்றல் நம்மிடையே வளர எ.பி-யும் தன் பங்குக்கு ஆவன செய்த மாதிரி இருக்கும்.
  
இப்போதைக்கு ஞாயிற்றுக் கிழமை கே.ஜி. யின் மனவண்ணம்.  ஷில்லாங் சுற்றுப்பயணம்.   இந்தப் பதிவு கொத்தாக பூத்திருக்கும் மலர்களுக்காக  தத்தம் செய்யப்பட்டிருக்கிறது போன்ற தோற்றம்  கொண்டிருக்கிறது.   அந்த மலர்க் கூட்டத்தைப் பார்த்ததும் தான் என்னன்னவோ நினைப்புகள் மேலோங்கின.

எதற்கு இப்படி க்யூ வரிசையாய் மலர்ச் செடிகளை தொட்டிகளில் நிரப்பி சிறைப்படுத்தியிருக்கிறார்கள்? என்ற வேதனை ஏற்பட்டது.  ஊட்டி போன்ற இடங்களில் நடக்கும் மலர்க் காட்சிகளில் கூட இப்படித் தான். 

இயற்கையின் எல்லா படைப்புகளையும்  மனிதன் தனக்காகத் தான் என்று நினைப்பது தான் இதெற்கெல்லாம் அடிப்படை காரணம் என்று தோன்றுகிறது.   நதி இவனுக்குத் தான்;  மலைகள் இவனுக்குத் தான்.  மலர்கள் இவனுக்காகத் தான். இயற்கை அன்னை   மடியை விரித்திருப்பதும் இவனுக்காகத் தான் என்று எண்ணும் ஏகத்துக்குமான ஆதிப்பத்திய உணர்வு தான் இத்தனை அனர்த்தங்களுக்கும் காரணம்.  

மரங்கள் செழித்தோங்கி கொப்பும் கிளையுமாய் வளர்ந்து பரவுவது மழைக்காக என்ற உண்மை  மறந்து,  தான் வெட்டிச் சாய்த்து பணம் பண்ணுவதற்காக என்ற தன்னலம் மேலோங்கியதால் தான்  வனம் பூராவும் காங்கிரீட் காடுகளாகியிருக்கின்றன.   

கொல்லென்று செடி, கொடிகளில் பூத்திருக்கும்  மலர்கள் பூத்திருக்கிற மாதிரியே செடி கொடிகளிலேயே விட்டு வைத்திருப்போமாயின்  அவற்றின் உயிர்ப்பை மதித்தவர்களாகவும் அவற்றின் ஜனனத்திற்கு மரியாதை கொடுத்தவர்களாகவும் ஆவோம் அல்லவா?  பூக்களின் புலம்பல் என்று தெலுங்குக் கவிஞனின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.  

மொட்டு அரும்பி மலர்ந்து விரியும் தருணத்திலேயே  அவற்றின் குரல் வளையை நெறித்துப் பறிப்பது யார்  கொடுத்த உரிமை என்று தெரியவில்லை.   ஆலமரம்  அதன்  அடர்ந்த  அட்டகாச பரந்து விரிந்த  வளர்ச்சிக்குப்  பெயர்  போனது.. அதைக் கூட தொட்டிகளில் வளர்த்து போன்சாய் கலாச்சாரம் இது என்று பெயரிட்டால் அது எவ்வளவு  பெரிய பாதகச் செயல்?  ஆலமரத்தை குறுக்கி  குமுறச் செய்ய உனக்கு  யார் கொடுத்த அதிகாரம் இது?..  இவனைக் கவராதவை காட்டுப் பூக்களாம்!..   ரோஜா, மல்லிகை, ஜவந்தி,  அரளி என்று இன்ன பிற இவர்  சூட விழையும் மலர்களெல்லாம் நாட்டுப் பூக்களாம்!..  என்னடா, ஒங்க நியாயம்  என்று  பொங்கி எழத்தான் மனசு கொதிக்கிறது.  

திங்கள் கிழமை திங்கற கிழமையா மாறிப் போனது எ.பி. வாசகர்களுக்கு என்றாலும் என்னைப் பொருத்த மட்டில் நான் பெரும்பாலும் இந்தக் கிழமை எ.பி.-யை மிஸ் பண்னி விடுவேன்.  வாசிக்கக் கூடாது என்றில்லை. எல்லாம் சொந்தக் காரணங்கள் தான்.  பசிக்கு ஏதோ ஒன்று  என்று  தட்டில் இடப்படுவதை  சாப்பிடும் ரகம் நான்.  சின்ன  வெங்காய  வத்தக் குழம்புன்னா கொஞ்சம் கூட இஷ்டம் எண்ணையில் இட்ட அப்பளாம், ஜவ்வரிசி வடாம் போல இருந்தால் இன்னும் இரண்டு  கரண்டி கூட குழம்புக் கலவை உள்ளே போகும்.   எங்கள் வீட்டு ரச பாணி பிடிக்கும்.   எந்தக் கறிகாயும் விலக்கில்லை.  கோவைக்காயைத் தவிர.-- கயாவில் விட்டு விலகி விட்டதினால்.  எங்கள் வீட்டு  மோர்  நீர்க்க இருக்காமல் குழம்பு  கணக்கா  கெட்டியாக இருக்கும். அதில் ஒரு கல் உப்பு கூடப் போட்டுக் கொண்டால் ஊறுகாயெல்லாம் தேவைப்படாது. தேவாமிர்தமாக இருக்கும்.   விசேஷ பண்டிகை நாட்களில் அந்தந்த பண்டிகைக்கு என்று வாய்த்திருக்கிற அயிட்டங்கள்  ஒன்றைக் கூட விட்டு விடாமல் எல்லாம் நிறைந்து இருக்கும்.  சாப்பாடு விஷயத்தில் எந்தக் குறையும் வைத்ததில்லை.  என்ன இருந்தாலும் அதே இயந்திர கதி தான்.   சாப்பிட்டாச்சா, அடுத்த வேலை என்ன என்று போய் கவனம் கொள்கிற ஆசாமி,  ஏன் இந்த திங்கள் கிழமை எபியை மிஸ் பண்ணுகிறான் என்ற காரணம் இப்போது உங்களுக்கு மிக லேசாகப் புரிந்திருக்கும். .அதனால் இந்த திங்கட்கிழமை மெனுவுக்கு பின்னூட்ட வாசகர் ரசனையையே அருள்  கூர்ந்து விமர்சனமாகக் கொள்ளுங்கள்..   

இந்த வாரம்   சகோதரி கீதா ரெங்கன்  புனித ரமலான் நோன்புக் கஞ்சியை மலபார் பகுதி பக்குவத்தில்   நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.  பார்லி கஞ்சி, அரிசி கஞ்சி போல இதுவும் ஒரு கஞ்சியாக்கும் என்று தான் இத்தனை நாள் நினைத்திருந்தேன்.  இது நட்சத்திர ஓட்டல்களில் சாப்பாட்டிற்கு முன் வழங்கப்படும்  அபிடைட் (Appetite) போலவான ஒன்று என்று இப்பொழுது தான் தெரிந்தது. 

1. சத்தான உணவுக்கான ரெஸிபி
2. எளிதான ஜீரணத்திற்கு உதவும் கஞ்சி 

-- மொத்தத்தில் இவ்வளவு தான்  வந்திருந்த பின்னூட்டங்களிலிருந்து  தெரிந்து கொள்ள முடிந்தது. இவ்வளவுக்கும் 50 பின்னூட்டங்கள் இந்தப் பகுதிக்கு.  பின்னூட்டங்கள் எல்லாம் என்ன சொல்கின்றன என்ற இன்னொரு ஆராய்ச்சிக்கு இப்போ போகவேண்டாம். :)
கடைசியில் ஸ்ரீராமும்  கீதா ரெங்கனுமே வந்து சாப்பாட்டுக் கடையை ஏறக் கட்டி விடுகிறார்கள்.  எனக்கோ இந்த   நோன்பு கஞ்சி   தயாரிப்பு பற்றி நன்கு தெரிந்த யாராவது வந்து கீதா ரெங்கன்   தயாரித்திருந்தது பற்றி தப்போ ரைட்டோ ஏதுவும் சொல்லலையேன்னு ஒரு குறை தான்.

அது எப்படின்னு தெரிலே.  சில விஷயங்கள்லே நம்ம எதிர்ப்பார்ப்பு  தான் காரணம் என்று நினைக்கிறேன்.

திங்கட்கிழமை சாயந்தரமே நாளைக்கு எங்கள் பிளாக்கிலே யாரோட கதையோன்னு எதிர்பார்ர்பு வந்து விடுகிறது.

இந்த செவ்வாய் துரை செல்வராஜூ சார்.   எதைப் பற்றிய கதையோ என்று பெயரைப் பார்க்கையிலேயே ஆர்வம் மேலிட்டது.

தேங்காக் கடை கோவிந்தன் மகன் நடத்தும் கோயில் சுற்றுலாவில் கலந்து கொள்ளவோர் அதற்கு ரெடியாகும் அதிகாலை பரபரப்புடன் கதை ஆரம்பிக்கிறது.

தொடர்ந்து கோவிந்தன் மகன் சுற்றுலா பிரதாபங்களை ஒட்டிய கிச்சு கிச்சுகளில் மூழ்கி புன்னகையுடன் தொடரும் பொழுது.. மகன் ஆனந்த் என்ற  பெயர் வரும் பொழுது நமக்கோ ஆனந்த் யாருக்கு மகன்,  தேங்காக் கடை கோவிந்தன் மகனுக்கு மகனோ  என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள மறுபடியும் ஆரம்பப் பகுதியிலிருந்து வாசிக்க ஆரம்பிக்கிறோம்.. அப்பவும் ஆனந்த் யார் என்று புரிபடவில்லை.  மேற்கொண்டு தொடராலாம் என்று தொடரும் பொழுது, சங்கீதா - மருமகள்.. யாருக்கு மருமகள்?..    அடுத்து காமாட்சி-- சுந்தரத்தின் மனைவி-- எந்த சுந்தரத்தின் மனைவி?..  ஆக, சங்கீதா, காமாட்சி, சுந்தரம் இவர்கள் எல்லாம் யார் என்று தெரிந்து கொள்ளாமலேயே கதையை மேலே தொடர்கிறோம்.   அடுத்து பேத்தி அவந்திகா..  காமட்சி- சுந்தரத்தின் பேத்தியாகத் தான் இருக்கும் என்ற அவதானிப்பில் தொடர்கிறோம்..

இந்த இடத்தில் சுந்தரம் யார் என்று சரிவர தெரியாமலேயே ஆசிரியரின் இயல்பான சொற்கோர்வைகளில்  சுந்தரத்தின் மேல் ஒரு பரிதாப உணர்வு நமக்கு மேலோங்குகிறது.  பின்னே?..  சம்பந்தி வீட்டு  வயசான பெரிசுகள்,  குஞ்சு குளுவான்கள் அத்தனையும் இந்த கோயில் சுற்றுலாவில் இவர்களுடன் சேர்ந்து கொள்ள இருக்கையில் சுந்தரத்தை மட்டும் வீட்டிலேயே விட்டு விட்டுப் போகப் போகிறார்களாம்!  போதாக்குறைக்கு பால்காரன் வரும் போது மாலைப்  பால் வேறு இவர் வாங்கி வைக்க வேண்டிய பொறுப்பும் சேர்ந்து கொள்கிறது!

சுந்தரத்தின் மனைவி காமாட்சியாவது போகாமல் வீட்டில் தங்கக் கூடாது?... அவளோட ஒட்டிக் கொண்டிருக்கும்    பேரன் வருண் இவளது பாதுகாப்பில் தான் இருப்பான் என்று அவளுக்கும் ஒரு சுகமான சுமை சேர்ந்து கொள்கிறது.

'இருந்தாலும் என்னைய இன்னும் கூப்பிடலையே.. நானும் வந்தா ஒரு ஓரமா  இருந்துக்குவேன்.. ல்ல!  பட்டீச்சரட்த்தாளைப் பார்த்து ஆறேழு மாசமாகுது..' என்று சுந்தரம் வெளிப்படையாகவே வருத்தம் மேலிடச் சொல்லும் பொழுது, நம் மனமும் அவர் கூடச் சேர்ந்து புழுங்குகிறது..  அடப்பாவமே!  இவரை மட்டும் வீட்டிலேயே விட்டு விட்டுப் போவானேன்?..  என்ற ஆற்றாமை நமக்கும் தொற்றிக் கொள்கிறது.

ஆமாம், அது  ஏனாம்?.. அத்தனை பேரும் பேசிக் கலகலத்தபடி கோயில் சுற்றுலா செல்லும் பொழுது வீட்டில் ஓய்ந்து கிடக்க, சுந்தரம் மட்டும் என்ன பாவம் செய்தார்?-- 

கதையை மேற்கொண்டு மேயும் பொழுது தான் காரணம் தெரிகிறது...  பொல்லாத காரணம்!..

கோயில் என்று புறப்பட்டோமானால்,  சுந்தரத்திற்கென்று புரிபட்ட நியதிகள் உண்டு..

கோயிலுக்குள்ளே திடுதிடுன்னு  நடக்கக் கூடாது.
சந்நதிகளில் குருக்கு மறுக்கா விழுந்து கும்பிடக் கூடாது
விபூதியை தரித்த பின், ப்பூ!.. என்று ஊதக்கூடாது.
அம்மன் சந்நிதியில் வாங்கிய குங்குமத்தை அங்கிருக்கும் நந்தி தலையில் போடக்கூடாது..
நந்தி காதுலே சேதி சொல்றேன்னு நந்தி காதைப் பிடிச்சுத் தொங்கக் கூடாது.
வாங்கிய பிரசாதத்தை தரையில் இரைக்கக் கூடாது!..

இதெல்லாம் தான், இது போன்ற இன்னும் சிலவும் தான் சுந்தரத்தின் மனசில் தேங்கிய  நியதிகள்.. தன் குடும்பம் என்றில்லை, அவர் கண்ணுக்கு முன்னால் மேலே குறிப்பிட்டிருக்கும் தவறுகளை யார் செய்தாலும் அவரால் சும்மா இருக்க முடியாது!  அவர்கள் தவறுகளைத் திருத்த முற்படுவார்..  இதுவே அந்தக் குடும்பத்திற்கு பெரும் இம்சையாகப் போய்விடுகிறது... அதனால் தான் இவரை வீட்டிலேயே விட்டு விட்டுப் போய்விட்டார்கள் என்று வாசித்து அறியும் போது...  சுந்தரத்தின் மீதான பரிதாபம் மேலும்  கூடியது!   நான் கூட,  இந்த சுந்தரம்  நாத்திக மனோபாவம் கொண்டவராயிருக்கும் போலிருக்கு; அதனால் அவருக்குப்  பிடிக்காத இடத்திற்கு கூட்டிப் போவானேன் என்று நினைத்து வீட்டிலேயே விட்டு விட்டுப் போகிறார்களாக்கும்-- என்று நினைத்தால்,..

சுத்தமான ஆத்திக சிந்தனைகளைக் கொண்டிருப்பவருக்கும் இந்த நிலை தானா?..

அப்படியானா,  வரிந்து கட்டிக் கொண்டு இந்தக் காலத்தில் கோயில்களுக்கு போவதை ஒரு பழக்கமாகவே கொண்டிருக்கும் பக்திமான்கள்,  அதிகபட்ச ஆத்திக சிந்தனைகளோடும் இல்லாமல்,  அறவே நாத்திகராயும் இல்லாத  நடுப்பட்ட ஒரு ஆளாகத் தான் இருக்க வேண்டும் என்ற நிலை தான் அவர்களுக்கு ஒத்து வரக் கூடியதாக இருக்கிறது என்ற யோசனையே மேலோங்கியது.  ஆமாம்,
கோயிலுக்குப் போவதும் ஒரு ஃபாஷனாக மாறிப் போய் விட்ட காலத்தில் சுந்தரம் போன்றவர்களின்  தேவைகள் தேவைப்படுகிற சூழ்நிலையில் அவர்கள் தேவையில்லாத எக்ஸ்ட்ரா லக்கேஜாக இருப்பது தான் ஒரு ஐரனியான விஷயம்.

அப்படி ஒரேயடியாக சுந்தரத்தை புறக்கணித்து விடும் முடிவுக்கு வந்து விடாதீர்கள் என்று  சுந்தரம் போன்றவர்களின் தேவையை உணர்ந்தவர்களுக்கு அவரின் இருப்பு தேவையாக இருப்பதை எடுத்துக் காட்டி கதையை முடித்து வைத்ததில் கதாசிரியர் கைதட்டலைப் பெறுகிறார்.    

துரை செல்வராஜூ சார்!  இப்பொழுது தான் புரிகிறது.. ஆனந்த்,  சங்கீதா,  காமாட்சி,  சுந்தரம் -- இவர்களெல்லாம் யார், யார்?  இவர்களுக்கான உறவுகள் என்ன-- என்று ஆரமபத்தில் குழம்பியதெற்கெல்லாம் அர்த்தமில்லாமலேயே போய் விட்டது என்பதை ஒப்புக் கொள்கிறேன்..  கோயில் சுற்றுலா என்று  ஆரம்பித்து கோயிலில் கடைபிடிக்க வேண்டிய  நியதிகளை வாசகர்களுக்கும் சொல்லி கதையை அற்புதமாக நடத்தி சென்றிருக்கிறீர்கள்,   

'சாயங்காலம் வந்துடலாம்  இல்லையா".. ஏன்னு கேட்டா சாயங்காலம் பால் வாங்கி வைக்கணும்' என்று கடமையுணர்வாக,  வீட்டார் அவரை விட்டு விட்டு வெளியே சென்றாலும்,  தனக்கு  அவர்கள் விட்டு விட்டுச் சென்ற பணியின் நினைவு நீங்காமல் 'சாயங்காலம் வந்துடலாம் இல்லையா?' என்ற கேள்வியை அவர் போடும் பொழுது,  துரை செல்வராஜூ சார் மீண்டும் மனத்தில் பதிகிறார்.
  

சுந்தரம் என்று இவனோ, அவனோ என்று நினைத்து விடாமல்  பெரியவர் சுந்தரம் என்று ஆரம்பத்திலிருந்தே குறிப்பிட ஆரம்பித்திருக்கலாம் என்பதே இத்தனை புரிதலையும் பிளந்து கொண்டு வெளிப்படும் மனக்குறை.   கதையைச் சொல்லிச் சென்ற விதம் பிரமாதம்.. வாழ்த்துக்கள், ஐயா!

புதன் கிழமை சமாச்சாரமே பொதுவா ஜாலி அரட்டைக்காகவே ஆரம்பிக்கப்பட்ட பதிவு போலத் தெரிகிறது.  கேள்விகள் பதிலை எதிர்பாக்காத கேள்விகள் போலவும், பதில்களோ கேள்விகளுக்கான பதில்களாக தோற்றம் கொள்ளாத பதில்களாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.  இந்த மாதிரியான ஒரு கேள்விக்கும், ஒரு பதிலுக்கும் யாராவது முயற்சி செய்து தான் பாருங்களேன். வேடிக்கையாக இருக்கும்.

அடர் சிவப்பு நிறம் என்னைப் பொருத்த மட்டில் கிளர்ச்சியின் நிறம்.  சும்மா சோம்பி கிடப்பவனையும்  உற்சாகமூட்டி எழுந்து நடக்கச் செய்யும் நிறம்.  உலகத்தில் நடந்த அத்தனை புரட்சிகளுக்கும் (இந்த இடத்தில் மாற்றங்களுக்கும்) காரணமாக இருந்தவர்கள் இந்த நிறத்தைக் காதலித்திருக்கிறார்கள்.  சொல்லப் போனால் இந்த நிறம் அவர்களை வசப்படுத்தி தன்னைக் காதலிக்க வைத்திருக்கிறது! 

இப்போ PAC  விவகாரத்துக்கு வரலாம்.  

குழந்தைக்கு 5 வயது வரை  பெற்றோர்  மனநிலையும் குழந்தை மனநிலையும் ஆழ்மனத்தில்  பதிவாகிறது என்கிறார் இந்தப் பகுதியை எழுதியவர்.. அது எப்படின்னு சொல்லியிருக்கலாம்.

நாமே அது  எப்படியாயிருக்கும் என்று யோசிக்கலாம்.  அந்த வயதில் குழந்தைக்கு நெருக்கமாக இருக்கிறவர்கள் பெற்றோர்கள் தான் என்ற ஹோதாவிலா?..

குழந்தை மனமும் பெற்றோர் மனமும் எதிர் எதிர் சமாச்சாரங்கள்.   அதாவது ஒன்றுக்கு ஒன்று அடிப்படையிலேயே மாறுபட்டது..  குழந்தையாய் குழந்தை இருக்கும் பொழுது அதற்கு குழந்தை மனம் இருக்காது.. குழந்தைத் தன்மை இருக்கும்.  அதாவது க்ளீன்  சிலேட் நிலமை.  இதில் பெற்றோர் மனம் என்பது பதிந்தால் அது ஆபத்தானது.  பெற்றோர் மனம் என்பது  ஒரு வளர்ச்சியடைந்த ஸ்டேஜை பிரதிநித்துவப் படுத்துவது.   4 வயது குழந்தை மனத்தில் 40 வயதை திணிக்கற சமாச்சாரம்.  அப்படிச் செய்தால் குழந்தையின் குழந்தைத் தன்மையான மூளையில் மூச்சுத் திணறல் மாதிரி ஒரு குழப்பம் தான் உருவாகும்.  வேண்டுமானால்  குழந்தை எதுவும் புரியாமல் நீங்கள் செய்வதையே குரங்குகள் மாதிரி திருப்பிச் செய்யலாம். அவ்வளவே.

இந்தப் பகுதியை எழுதியவர்,  child ego -- parent ego என்ற நிலைகளை மனத்தில் வைத்துக் கொண்டு சொல்லியிருப்பாரோ என்று  தோன்றுகிறது.  ego  வேறே;  மனம் வேறே.  40 வயதிலும் ஒருவர் child ego நிலையில் இருக்கலாம் என்பது தான் ego பற்றிய சரியான புரிதல்.

அடுத்து  ஐந்திலிருந்து பதினெட்டு வரை.  எது? என்ன? எதனால் என்று தெரிந்து கொள்ள (முயற்சிக்கிற) வயசு தான்.  அதுவும் தெரிந்து கொள்கிற வயசு இல்லை.  சும்மா  படிப்பது, கேட்பது, பார்ப்பது மனத்தில் அப்படி அப்படியே படிகிற வயசு என்று வேண்டுமானால் சொல்லலாம்.  அவற்றை பரிசோதனை பண்ணாத,  தெரிந்ததை தெரிந்தபடியே எடுத்துக் கொள்கிற வயசு என்று வேண்டுமானால் கொள்ளலாம்.  அதனால்  இந்த வயசு  1 டு 5 வயசு நிலையில் எதையும் மாற்றப் போவதில்லை.
அந்த ஐந்தின் அடுத்த கட்ட வளர்ச்சி என்று வேண்டுமானால் கொள்ளலாம்.  

பதினெட்டு வயசு வரை எதையெல்லாம் value உள்ளவை என்று நினைக்கிறானோ-- என்ற வரி உறுத்துகிறது   value  என்பது  ரொம்ப பெரிய வார்த்தை.  60 வயசுக்காரன் கூட இந்த value -வைத் தீர்மானமாகத்  தெரிந்து கொள்ளாமல் இருக்கிறான் என்பது தான்  என் அபிப்ராயம்.  மனிதன் இறந்து போகிற வரைகும் இந்த value பலருக்குப் புரிபடாமல் போயிருக்கிறது..   அவன்  எப்படிப்பட்ட சமுதாயத்தில் புழங்குகிறானோ அந்த சமூக வாழ்க்கை தான்  ஒவ்வொருத்தனுக்கும்  ஒவ்வொரு மாதிரி இந்த value -வைப் புகட்டுகிறது.  இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் ஒருவனுக்கு value-வாக இருப்பது இன்னொருவனுக்கு value இல்லாமலும்,  ஒருவனுக்கு value வாக இல்லாமல் இருப்பது இன்னொருவனுக்கு value வாகவும்  இருக்கிற மாதிரி அவனவை வார்த்தெடுப்பது அவனவன் சந்திக்கிற வாழ்க்கை போராட்டம் தான்!

ழக்கமாக வியாழன் எ.பி. பதிவுகள் நன்றாக இருக்கின்றன என்பது வாசகர்களின்  ஏகோபித்த அபிப்ராயமாகத் தெரிகிறது.  பெரும்பாலும் வெளியிட்டு  முற்பகலிலேயே பின்னூட்டப் பெட்டி நிறைந்து விடும்.

'நீரின்றி அமையாது உலகு'  என்பது வள்ளுவர் வாக்கு.  அந்த வாக்கின் உயர்ந்த பட்ச அர்த்ததில்  என்றும் வற்றாத ஜீவ நதியான  கங்கை நம் தேசத்தின் தாய்த் தெய்வமாகவே போற்றப்பட்டு வருகிறது.  தினமும் கங்கைத் தாயை தீப ஜோதியின் துணையுடன் வழிபடும் வழக்கம் காசியின் கங்கைக் கரையில்  தினமும் உண்டு.  அந்த வழிபாட்டை தொலைக்காட்சியில் பார்த்தாலே உடலம் சிலிர்க்கும்.  அந்த வழிபாட்டுப் பாடலும், பாடலுக்கான இசையும்,  தீபச் சுடரின் ஒளிபட்டு கங்கை பளபளவென்று மலர்ந்து தளும்பித் துள்ளி மிளிரும் காட்சி அழகும்  ஜென்ம சாபல்யமே நிறைவான நிறைவு அடைந்த அற்புதமாக இருக்கும்.  அந்த தரிசனத்தை நேரடியாகவே பார்க்கும் பொழுது சொல்லவே வேண்டாம்.  'அம்மா, கங்கைத் தாயே!  இதற்காகத் தான் உயிரும் தந்து அது உறைய உடலும் தந்து என்னைப் படைத்தாயோ' என்று  மெய்மறந்து உருகி நிற்கும் நிலையை அனுபவ பூர்வமாகவே உணரும் பேறு பெற்றவர்களாவோம்.

பிரயாகையில் ஆரம்பித்தால்  காசி, கயா என்று முன்னோர் வழிபாட்டு யக்ஞம் ஒரு தொடர்ச்சியையும் நிறைவையும் கொண்டுள்ளது.  இந்தப் பதிவில் இந்த வழிபாடு பூர்த்தி அடையும்  கயா பயண விவரங்கள்.    காசி பித்ரு பூமி என்றால் கயா பிண்ட பூமி.   காசியின் கங்கை நதி தீரத்தில் பித்ரு காரியங்களை முடித்து விட்டு  கயாவில் பிண்டம் வைத்து அதை பல்குனி  நதியில் கரைக்கும் காரியம் நடக்கிறது.

கயாவில் நமக்குத் தெரியவந்த விஷயங்களை இட்டு நிரப்பினால் ஏதானும் விடுபட்டு, அல்லது தவறாகப் போய்விடும் சாத்திய கூறுகள் இருப்பதால்  திரு. ரமேஷ் ஜம்புநாதன்  முழு உரையை அப்படியே பதிவிட்டு விட்டது உத்தமமான காரியம். அதுவும்  பிரமாதமாக அமைந்து விட்டது.  இதற்கு மேல்  சொல்வதற்கு ஏதுமில்லை.

இந்த வியாழன் பகுதி தலைப்புக்கான விஷயம் கவிதையாகப் பிறந்திருக்கிறது.   சிலருக்கு இந்தப் பகுதிக்காக தலைப்பு புருவங்களை உயர்தியதற்கு  காரணம் உண்டு.  எனக்கோ அந்தக் கவிதைக்கான தலைப்பையே மாற்றியிருக்கலாமோ என்று தோன்றியது.

காது கேளாத  பாட்டி
கடந்த கால நினைவுகள்
கண்களில்; வெறித்த பார்வை 
தனக்குத் தானே கேள்வி;
பதிலும் தனக்குத் தானே  தான்
சூழ்ந்திருக்கும் உறவுகள்.
சோதனை என்னவென்றால்
பாட்டி மட்டும் தனியாகத் தான்;
தனக்குள் தானேயான தனிமையது
பாட்டி பாவம்
அவளென்ன
கன்னிப் பெண்ணா
கட்டில் சாம்ராஜ்யமாவதற்கு?..
முதுகு வலிக்கு
முட்டுக் கொடுக்கவல்லவோ
அந்தக்  கட்டில்?...

பாட்டி பற்றிய  கவிதையைப் படித்த பலருக்கு தங்களின் பாட்டி,  தங்களுக்குத் தெரிந்த பாட்டிமார்கள் என்று நினைவுகள்  கிளர்ந்தெழுந்திருக்கின்றன.   அந்தக் கவிதைக்காக ஒரு புகைப்படம் போடப் போய் அது இன்னொரு கதைக்கான அழைப்பாகவும் அமைந்திருக்கிறது..  இதெல்லாம்  தான் நம்மை அறியாது கிடைக்கும் வழிகாட்டல்கள்.  வழி காட்டல்கள் எதுவும் வழி தெரியாது போனதில்லை.  என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.  அது மட்டுமே நம்மால் செய்ய முடிந்தது.

இந்தத் தடவையும் சுகி சிவம் தனது இன்னொரு முகத்தைக் காட்டுகிறார்.

பரிகாரங்கள் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு உட்பட்டதா என்று எனக்குத் தெரியாது.  ஆனால் பரிகாரங்கள் ஒருவன் கொள்ளும் மன வியாகூலங்களுக்கு  மருந்து போலவான ஒன்று என்பதை நம்மால் நியாயப்படுத்த முடியும்.

எந்த கோணத்தில் ஆய்ந்தாலும்  இதுவே பதிலாகிப் போகும்.

இந்த மனம் ஆக்கவும், அழிக்கவும் அல்லது அழித்து அக்கவும், ஆக்கி அழிக்கவுமான சர்வ வல்லமை படைத்த ஒன்று.  எந்த நேரத்திலும்
ஏதாவது ஒரு யோசிப்பு.  ஏன் இப்படி?-- என்று தொய்தல்.  இதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற தீர்வுக்கான எதிர்பார்ப்புகள்.

இதைச் செய்தால் இதிலிருந்து மீளாலாம்;  அல்லது  இதை  அடையலாம் என்று யாராவது சொல்லி விட்டால்,  அதைச் செய்து பார்க்கலாமே என்று அதற்குத் தான் காத்திருந்த மாதிரி செயல்படத் துடிக்கும்.  அப்படி செய்து  பார்ப்பது தான் பரிகாரம்.

பரிகாரங்கள் செய்வதின் தாத்பரியம் ஒருவன் கொள்ளும் மன வியாகூலங்களிலிருந்து விடுபட்டு நிம்மதி அடைய.  'இதைச் செய்து விட்டோம்;  அதனால் இனிமேல் அதைப் பற்றிக் கவலையில்லை' என்று ஒரு மனிதன் கொள்ளும் மன நிம்மதி தான் பரிகாரங்கள் என்று சொல்லப்படும் கழிவிடைகளைச் செய்வதன் பலனாகிறது.

'எந்தக் கலி தீர என்ன செய்ய வேண்டுமோ,'  அதைச் செய்தால் தான் பரிகாரங்களை நம்புவோருக்கு  அவரைப் பொருத்த மட்டில் மன நிம்மதி  ஏற்படும்.  அந்த திருப்தியும் மன நிம்மதியும்  ஏற்படுவ்தே அதற்கான பலன்.  பரிகாரம் என்பது ஸ்துலமாக அந்த திருப்தி ஏற்படுவதற்கு மனத்தளவில் உதவுகிறது.  அவ்வளவு தான்.  ஆக, மனத் திருப்தி தான் முக்கியம்.   அந்த திருப்தி அடைதலுக்கு  அதன் மீதான முழு நம்பிக்கை முக்கியம்.  'நாம் இதைச் செய்து விட்டோம்;  அதனால் அந்தத் துன்பத்திலிருந்து விடுபட்டு விட்டோம்'  என்ற தீர்மானமான எண்ணம் மனதில் பதிய வேண்டும். அந்த எண்ணத்தின் ஆற்றல் தான் அவனுக்கு  உதவுகிறது;  செயல்படுகிறது. அந்த திருப்தி  அடைதலுக்கான க்ரியா ஊக்கி தான் பரிகாரம் என்று சொல்லப்படுபவை.

சுகி சிவம் சொல்கிற மாதிரியான பரிகாரத்தைச் செய்பவனுக்கு அந்த பரிகாரத்திற்கு பலனான திருப்தி ஏற்படுமாயின் ஓக்கே.  இல்லையெனில் பிரயோஜமில்லை.  அவலை நினைத்து உரலை இடித்த கதை தான்.

சில் பிரகிருதிகள்  இதையும் செய்வோம்; அதையும்  செய்வோம். இரண்டையும் செய்து  தான் செய்து பார்ப்போமே; எப்படியாயினும்  கலி தீர்ந்தால் சரி' என்றும் காரியத்தில் இறங்குவது உண்டு.  இந்த மாதிரியான ஆட்களுக்கு எந்த பரிகாரமும் உதவாது.

சுகி சிவம்களுக்கோ  எதிலும் ஆற்றிலும் ஒரு கால்;  சேற்றிலும் ஒரு கால்.  பரிகாரத்தையும் நம்ப வேண்டும்.  அதையும்  முற்போக்காக சொல்வது மாதிரி பாவ்லாவும் காட்ட வேண்டும்.  

திருப்தி அடைவது இன்னொருத்தன் சம்பந்தப்பட்ட விஷயம் ஆதலால்  அதற்காக செயல்பாடு, அது சம்பந்தப்பட்ட நம்பிக்கை எல்லாமே இன்னொருத்தர் சம்பந்தப்பட்டதாகி விடுகிறது.  அதனால் நாமாகத் தீர்மானிப்பதற்கு எதுவுமில்லை.

'நூறு பேருக்கானும் இப்படிப்பட்ட பரிகாரங்கள் சொல்லு;  அது தான்  உனக்கான பரிகாரம்' என்று யாரேனும் குருமார்கள் இவருக்குச் சொல்லியிருப்பார்களோ!..

இன்னொன்று.  பரிகாரங்களை நம்புவனுக்குத் தான் பரிகாரங்கள் வேலை செய்து விட்டதாக நம்பிக்கை பிறக்கும்.  பரிகாரங்களை நம்பாதவனுக்கு இந்த பரிகாரங்கள் எல்லாம் உதவாது என்பது அடிப்படை உண்மை.

அதனால் எதிலும் நம்பிக்கை தான் முக்கியமாகிப் போகிறது.

மேல் சாவனிஸ்ட் விஷயமெல்லாம் சரி.

புருஷ லட்சணம்  என்று  காலாதிகாலமாக நம் இலக்கியங்களில் பதியப்பட்டு  வருகின்றனவே,  அது என்னவாம்?..  புருஷ லட்சணத்திற்கான இலக்கணத்தை எ.பி.  மகளிர்  குழுவினர் யாராவது விளக்கிச் சொன்னால் தேவலை.  மேல் சாவனிஸ்ட்டுக்கும், புருஷ லட்சணத்திற்கும் வித்தியாசம்  காட்டினால் இன்னும் தேவலை. 

அவர்கள் மேல் சாவனிஸ்ட்  விஷயத்தில் நம்பிக்கையிருப்பவராக இருந்தால் இன்னும் நல்லது.

நிக்கோலஸ் சவ்வின் படம் கிடைக்கலை போலிருக்கு;  ஸ்ரீராம்,
நெப்போலியன் போனபார்ட் படத்தையே போட்டு விட்டார்.  

வெள்ளி;  அதுவும் ஆடி  வெள்ளி பதிவுகள்...     

அம்மன் பாடல்களாக  இருக்குமோ?..  யூகம் பொய்த்தது..

நான் தமிழ்ப் படங்கள் பார்த்து பல வருஷங்கள் ஆகி விட்டன.  தொலைக் காட்சியில் திரைப்படங்கள் பார்ப்பது அறவே இல்லை. 
அதனால் கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தது.
கண்  எதற்கு?..  காது போதாதா,  பாடல் ஓசையைக் கேட்பதற்கு என்று ஸ்ரீராம் கேட்ட மாதிரி இருந்தது.   ஆக, விடியோவை கிளிக்கினேன்.

Ek  pyar ka  nagma hai --  நக்மா  என்றால்  என்ன அர்த்தம்?..  

இசை அவ்வளவாகக் கவரவில்லையே.  சாரி..   ஏதோ தப்பு செஞ்சட்ட மாதிரி அடக்கி ஒலிக்கற பாவனை.  ஆனால், இந்த இசையில் எத்தனை தமிழ் படப்பாடல்கள் வந்து விட்டன என்ற ஒத்தி எடுக்கற ரகசியம் மட்டும் புரிந்தது...

'ஓரு பாடல் நான் கேட்டேன்.. '  அதையானும் கேட்டுப் பாக்கலாம் என்றால்....  ஹை!  மோகன் இருந்த விடியோ  திறந்தது...  அமைதியான நதியில் போகிற ஓடம் போல  இசை.  

அட!  நான்  கடவுள்..  (என்றே நினைக்கிறேன்)..   காசி.. அஹோரி.....  ஓம்... சிவஹோம்...  எல்லாமே முந்தைய பதிவுகளுக்கு சம்பந்தப்பட்டவை.   நெல்லை, செலக்ஷன், இல்லையா?..

'ஓம்.. சிவஹோம்'  பாடலில்  ஏன் ஒரிஜனல்  'ருத்ர ஜபம்'  மந்திரத்தை
கலந்து கட்டியிருக்கிறார்கள்.?..  .  நிஜத்தில் நிழலை அடக்குகிற சாமர்த்தியமா?......

பிச்சைப்  பாத்திரம்... மனிதனே இறைவன் பிரபஞ்சத்தில் விசிறி அடித்த பிச்சைப் பாத்திரம் தானே?.

95 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்

    அட! விமர்சனம் ஜீவி அண்ணாவா சூப்பர்.

    பணிகள். ஒரு அஃபிஷியல் கெஸ்ட் வருவதால்...

    பின்னர் வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      ஆமாம். அவரேதான்.

      நீக்கு
    2. காலை வணக்கம் அனைவருக்கும்.

      அட.... //அஃபிஷியல் கெஸ்ட் // - இதுக்கு என்ன அர்த்தம்?

      நீக்கு
    3. துரை செல்வராஜூ சார், ஸ்ரீராம், கீதா ரெங்கன், நெல்லைத் தமிழன் அனைவருக்கும் வணக்கம்.

      நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம்,
    கீதாக்கா/ கீதா, வல்லியம்மா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
  3. இயற்கையின் எல்லா படைப்புகளையும் மனிதன் தனக்காகத் தான் என்று நினைப்பது தான் இதெற்கெல்லாம் அடிப்படை காரணம் என்று தோன்றுகிறது. //

    அருமையான அட்டகாசமான வரி. இதை அப்படியே கன்னாபின்னா வென்று ஆதரிக்கிறேன். என் மன எண்ணம் அப்படியே!! இதை நான் ஒரு கதையில் கூட கேரக்டர் சொல்லும் வசனமாக எழுதியும் இருக்கிறேன்...

    கணினி ஸ்க்ரோல் ஆகி வரும் போது இந்த வரி என் கண்ணில் பட்டுவிட்டது எனவே இதை மட்டும்...

    கீதா

    லிவிட்டுச் செல்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க... அப்புறமா வாங்க...

      நீக்கு
    2. சகோதரி கீதா,

      அந்தக் கன்னா பின்னா உணர்வுபூர்வமாக இருக்கிறது. நன்றி

      நீக்கு
  4. ஸ்ரீமதி சாமியாத்தாள் அவர்களைப் பற்றிய செய்தியை தினமலரில் வாசித்தேன்... மீண்டும் இங்கே... உற்சாகம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வாரம் வேறு செய்திகள் கிடைக்காதது வருத்தம். ஒற்றைச் செய்தியோடு நின்று விட்டது.

      நீக்கு
    2. அன்பின் எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்.
      ஜீவி சார் விமரிசனமா.
      வரவேற்பும் வணக்கமும்.
      //
      கொல்லென்று செடி, கொடிகளில் பூத்திருக்கும் மலர்கள் பூத்திருக்கிற மாதிரியே செடி கொடிகளிலேயே விட்டு வைத்திருப்போமாயின் அவற்றின் உயிர்ப்பை மதித்தவர்களாகவும் அவற்றின் ஜனனத்திற்கு மரியாதை கொடுத்தவர்களாகவும் ஆவோம் அல்லவா?//
      எங்க சிங்கம் பாலிசி.

      விளக்கமான விமரிசனம். கட்டுரைகளும் அவசியமே.
      அவரவர் வலைப்பதிவில் பதிவதற்கு முன் இங்கே பதியலாம்.
      நல்ல யோசனை சார்.

      ஆனால் ஸ்ரீராமுக்கு அவர் கதையை வெளியிடவே ஸ்லாட்
      கிடைப்பதில்லை.
      அவ்வளவு வெல் ஆர்கனைஸ்டாகச் செல்கிறது எங்கள் ப்ளாக்.

      அன்பு துரை, ஸ்ரீராம்,கீதா ரங்கன் அனைவருக்கும் இன்னாள் இனிய நாளாகட்டும்.

      நீக்கு
    3. இந்த வார சாதனை மனுஷியாக அப்துல் கலாம்
      பரிசுபெற்றவரே அப்துல் கலாம் நினைவு நாளில்
      வந்திருப்பது அருமை.
      மூலிகைத் தொண்டாற்றி இன்னும் நீண்ட நாட்கள்
      ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
      திருமதி சாமியாத்தாளுக்கு வாழ்த்துகள்

      நீக்கு
    4. வாங்க வல்லிம்மா... இனிய காலை வணக்கம்.

      கதை எழுதினால் வெளியிடலாம். சமீபத்தில் நான் எழுதவே இல்லை வல்லிம்மா. ஓரிரு கதைகள் வியாழனில் வெளியிட்டிருக்கிறேன்!

      கட்டுரை நல்ல ஐடியா.. எதைப் பற்றி எப்படி என்று யோசிக்கவேண்டும். ஸ்லாட்டுக்கா பஞ்சம்? பார்த்துடலாம். ஒரே ஒரு சிக்கலைத் தவிர வேறு பிரச்னை இல்லை.

      நீக்கு
    5. //அப்துல் கலாம்
      பரிசுபெற்றவரே அப்துல் கலாம் நினைவு நாளில்
      வந்திருப்பது அருமை.​//

      ஓ... கிரேட். நான் இதை கவனிக்கவில்லை.

      நீக்கு
    6. வணக்கம் சகோதரி

      /அப்துல் கலாம்
      பரிசுபெற்றவரே அப்துல் கலாம் நினைவு நாளில்
      வந்திருப்பது அருமை./

      பொருத்தமான செய்தியை தக்க தருணத்தில் நினைவூட்டி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    7. வல்லிம்மா, சிம்ஹன் சார் பாலிசியும் இதே தான் என்று அறிய ரொம்பவும் சந்தோஷம்.
      எங்கள் பிளாக்கும் விதவிதமான சப்ஜெக்டில் மூழ்கி எழுந்தால் ஒரு புத்துணார்ச்சி ஏற்படும். ஏழு நாட்களுக்கும் இதே மாதிரி ஏழு தான் என்கிற மாதிரி இல்லாமல் புதுபுது விஷயங்களில் புகுந்து வெளிவருவது. இந்தக் காலத்து பத்திரிகைகளுக்குத் தேவையாக இருப்பது தான் பிளாக்குகளுக்கும். எங்கள் பிளாக்குக்கு வாசகர்கள் அதிகம் இருப்பதால் இந்தக் கோரிக்கையை வைக்கிறோம். பரந்து பட்ட வெளிகளில் விவாதிக்கிற மாதிரி உருப்படியான விஷயம் ஏதாவது. அது போதும்.

      நீக்கு
  5. இன்றைய விமர்சனம்
    ஐயா ஜீவி அவர்களுடையது....

    எல்லா நாட்களையும் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து அலசி விட்டார்கள்...

    தனது விமர்சனத்தின் மூலம் எல்லா நாட்களையும் பட்டை தீட்டிக் கொடுத்திருக்கின்றார்..

    ஊன்றி கவனிக்க ஒவ்வொரு சொல்லும் ஒளி சிந்துகின்றன....

    பதிலளிநீக்கு
  6. செவ்வாய்ச் சிறுகதை நாளில் எங்கே ஜீவி ஐயா அவர்களைக் காணோம்... என்று வருந்தியிருந்தேன்....

    அது தீரும் வண்ணமாக அவர்களது விமர்சனம்...

    இத்தனை விஷயங்கள் எனது சிறுகதைக்குள் இருந்தனவா?...

    பெரியவர் சுந்தரம் என்று சொல்லாமல் விட்டதையும் குறித்துக் கொண்டேன்...

    தனித்துவமான விமர்சனம்..

    மகிழ்ச்சி.. நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செவ்வாய் அன்றே கை துருதுருதது. ஸ்ரீராம் ஏற்கனவே நீங்கள் தான் விமர்சனம் எழுதப் போகிறீர்கள் என்று சொல்லி விட்டதாலும் ஒட்டு மொத்த விமரிசனக் கட்டுரையில் என்றால் விகரமாக எழுதலாமே என்ற ஆர்வத்திலும் அந்த துருதுருப்பை அடக்கிக் கொண்டேன். நன்றி, சார்.

      நீக்கு
    2. விகரமாக -- விவரமாக என்று வாசிக்க வேண்டுகிறேன்.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்தி நன்றாக இருந்தது. இயற்கை வைத்தியம் தீங்கில்லா தது. மூலிகைகளின் பலன் தெரிந்து அனைவருக்கும் பயனுள்ளதாக பரிந்துரைத்து செய்த செயலுக்கு பலனாக ஜெர்மனி நாட்டின் விருது கிடைத்த அந்த தாய்க்கு வாழ்த்துகளுடன் பாராட்டுகள்.

    இன்றைய விமர்சனம் மிக அருமையாக உள்ளது. சகோதரர் ஜீவி அவர்கள் ஒவ்வொரு நாட்களையும் ஊன்றி கவனித்து மிக சிறப்பாக விமர்சனம் செய்திருக்கிறார். அற்புதமான பல யோசனைகளையும் கூறியுள்ளார். அவரது எண்ணங்கள், சிறந்த கருத்துகளை அலசிய ஆழ்ந்த சொற்கள் படிக்க படிக்க ஆச்சரியம் ஊட்டுகின்றன. மிகவும் நன்றாக விமர்சனம் செய்து விமர்சள பகுதியை சிறப்பாக்கிய அவரை பாராட்டவோ, வாழ்த்தவோ எனக்கு தகுதி இல்லையாததால், அவர் இங்கு தந்திருக்கும் ஒவ்வொரு வரியும் மிகவும் சிறப்புடையது என ஆத்மார்த்தமாக கூறுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலாக்கா... காலை வணக்கம்.

      நன்றி.

      நீக்கு
    2. சகோதரி கமலா ஹரிஹரனுக்கு நன்றி.
      எழுதுவது அத்தனையும் சான்றோர் அரங்கில் விவாதித்து அதனை இன்னும் எப்படியெல்லாம் மேம்படுத்தலாம் என்பதான அடுத்த கட்டத்திற்கு நகர்வது தான். சில விஷயங்களைச் சொல்லி நாம் நினைப்பது சரி தானா என்று சரிபார்த்துக் கொள்ளவே இவ்வளவு தூரம் மெனக்கிடுகிறோம் என்பதும் தங்களுக்கு தெரிந்தது தான். தங்கள் வருகைக்கும் ஆசிகளுக்கும் நன்றிம்மா.

      நீக்கு
  8. ஜீவி சார்... ஆச்சர்யம்..விமர்சனம் பகுதியில். அருமையா விமர்சனம் செய்திருக்கிறீர்கள் (கதை வரை வந்துவிட்டேன்).

    //சுத்தமான ஆத்திக சிந்தனைகளைக் கொண்டிருப்பவருக்கும் இந்த நிலை தானா?..// இந்த இடம் படித்ததும் எனக்கு மனதில் தோன்றியதை எழுதணும்னு நினைக்கிறேன்.

    எனக்கு சுற்றுலா அல்லது யாத்திரை என்று எதுவாக இருந்தாலும் (சென்னைக்கு விடுமுறைக்கு பஹ்ரைனிலிருந்து வந்தபோதும் அல்லது எந்தப் பயணத்தின்போதும்) அன்றன்று என்ன செய்யணும், எங்க சாப்பிடப்போகிறோம், என்ன மாதிரி உணவு, எந்த இடத்துக்குப் போகிறோம், என்ன என்ன இந்த சுற்றுலா பயணத்தில் கவர் பண்ணணும், ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு நேரம் இருக்கணும் என்றெல்லாம் தனியாக எழுதிவைத்துக்கொள்வேன்.

    உதாரணமா, தஞ்சை பெரிய கோவிலுக்கு 1 மணி நேரம்தான் ஒதுக்கியிருந்தேன்னா, அதற்குள் என்ன என்ன பார்க்கணும் என்று எழுதிவைத்துக்கொள்வேன். அதனால் சட் என அவசரப்படுத்தி அடுத்த இடத்துக்குக் கூட்டிச் செல்வேன்.

    ஆனா பாருங்க..என் பசங்க இதனை விரும்புவதில்லை. சுற்றுலான்னா ரிலாக்ஸ்டா இருக்கணும்பா. கொடைக்கானலுக்கு வந்துட்டு 7 மணிக்கு ரெடியாகுங்க, டாக்சி வருதுன்னு சொன்னீங்கன்னா எப்படி என்றெல்லாம் சொல்லுவாங்க. எனக்கு இருக்கின்ற நேரத்தில் முடிந்த வரை எல்லா இடங்களுக்கும் கூட்டிச் செல்லணும் என்று எண்ணம்.

    25,000 ஒருவருக்கு செலவழித்து ஒரு இடம் போகிறோம்னா, சும்மா போய், அங்க தங்கியிருக்கும் ஹோட்டல்ல ரிலாக்ஸ்டாக தூங்கிக் கழிப்பது எனக்குப் பிடிக்காது. அதுக்கு இந்த ஊர்லயே தூங்கலாமே என்பேன்.

    அதனால ஊரோடு (அதாவது மத்தவங்க மெஜாரிட்டி என்ன சொல்றாங்களோ அதன்படி) ஒத்துவாழலைனா கஷ்டம்தான். ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுத்தமான ஆத்திக சிந்தனைகளைக் கொண்டிருப்பவருக்கும் இந்த நிலை தானா?-- என்று நான் சொன்னது அந்த கதாபாத்திரம் பெரியவர் சுந்தரம் அவர் சுற்றத்தார் மத்தியில் உருவாக்கப் பட்டிருக்கும் நிலை பற்றி.
      கோயில்களில் எப்படி நாம் நடந்து கொள்ள வேண்டும் என்று அவருக்குத் தெரிந்ததை சொல்ல முற்படுகிறார். ஆனால் இவர்கள் போகும் இடத்திற்கு தேவையாக இருக்கக் கூடிய செய்திகளைக் கேட்டுக் கொள்ள இவர்களுக்கே விருப்பமில்லை.
      அவர் சொல்ல முற்படுவது தொணதொணப்பாகவும், வேண்டாத வேலையாகவும் இருக்கிறது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நம்மவர் காரியம் பிடிக்காமலிருக்கிறது. அதைத் தான் சொன்னேன்.
      இன்றைக்கு இறைவழிபாடு என்பது காலையில் எழுந்ததும் பல் விளக்குகிற மாதிரி பத்தில் ஒன்றாகி விட்டது. அது ஒரு அனிச்சை செயல் மாதிரி. இறைவன் சன்னதி போனதும், கும்பிடு- வேண்டிக்கொள், தீபம் ஒற்றிக்கொள், வீபுதி தரி, முடிந்தால் ஏதாவது மந்திரம் முணுமுணுத்துக் கொண்டே பிரகாரத்தைச் சுற்றி வா, நவகிரக சன்நதியில் முடிந்தால் ஒன்பது இல்லை மூன்று சுற்றி வா. வெளியே வந்து செருப்பை மாட்டு.
      அது போதும். அதுவே பெரிய வேலை. எதற்காக இதைச் செய்கிறோம், ஏன் இதைச் செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் -- என்பதற்கெல்லாம் சுந்தரம் ஐயா போன்றவர்கள் காரணம் தெரிந்து வைத்திருப்பார்கள். அதையெல்லாம் தெரிந்து கொள்வது வேண்டாத வேலையாகி விட்டது. அதுவும்
      இறை வழிபாடு தவறாமல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு. இறை வழிபாடு, இறைவனை நெருங்குதல்
      போன்றவை எல்லாம் ரொம்ப ஈஸியான காரியம் மாதிரி சுருங்கிப் போய் விட்டது. அதான் இதிலிருக்கிற பரிதாபம்.

      நீக்கு
  9. //பார்ப்பது மனத்தில் அப்படி அப்படியே படிகிற வயசு // - அப்படிச் சொல்வதில் அனைத்தும் அடங்குது அல்லவா ஜீவி சார். அப்பா அம்மா சண்டை போடுவது, அல்லது குழந்தைக்கு முன்னால் செய்யக்கூடாததைச் செய்வது, சத்தமாகப் பேசுவது, கடு கடு முகம் காண்பிப்பது....போன்ற எல்லா செய்கையையும் குழந்தை கவனிக்கும் அல்லவா? என்ன ஒன்று குழந்தைக்கு 7 வயது வரை இதையெல்லாம் கவனித்து மனதில் பதிந்துவைத்துக்கொள்ளும் சுபாவம் உண்டு. அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார் என நினைக்கிறேன்.

    எங்கள் வழக்கப்படி 7 வயதானாலே உபநயனம் செய்யணும். அதுபோல 7 வயதுக்கு மேல், பையனை பள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்ல ஆரம்பிப்பார்கள். இதிலிருந்து 7 வயது என்பது ஒரு கட்.ஆஃப் வயது என்பது என் அனுமானம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா--அப்பா செயல்களை குழந்தை கவனிக்கும் தான். அவை மனதில் நிழல் போல லேசாக தோற்றம் கொடுக்கும் தான். அம்மா-- அப்பா சரசம் எல்லாம் அவர்களின் விளையாட்டு போல தோன்றும் அதற்கு. ஏனென்றால் விளையாட்டுப் பருவம் அதற்கு. அதற்கு மேல் ஒன்றுமில்லை. நீரில் எழுதுவது போல அழியும்.
      பதியும் பிற்காலத்தில் நினைவுக்கு வரும் என்பதெல்லாம் அதீத கற்பனை. இத்வே ஒரு ஆக்ஸிடெண்ட் என்றால், நில நடுக்கம் பெரிய களேபரம் என்றால் லேசாக நினைவில் பதிந்து நினைவுக்கு வரும்.

      நீங்கள் கல்யாணப்பரிசு படம் பார்த்திருக்கிறீர்களா?.. அதில் தங்கவேலு-- எம். சரோஜா கிட்டே சொல்லுவார். ( வசனம் கோபு) "ஏண்டி, இதுக்குத் தான் குழந்தைங்க முன்னாடி அதெல்லாம் வாண்டாம் என்றேன்.. இப்போ பார் அம்மா--அப்பா விளையாட்டு விலையாடுதுங்களாம்.." என்பார்.

      அம்மா--அப்பா சரசம் குழந்தைகளுக்கு அம்மா--அப்பா விளையாட்டாக இருந்திருக்கிறது. குழந்தைகளுக்கு அது விளையாட்டு பருவம் இல்லையா?.. அதனால் எல்லாவற்றையும் ஏதோ விளையாட்டு போல நினைத்து மறந்து போகும். அவ்வளவு தான்.

      நீக்கு
  10. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  11. //மேல் சாவனிஸ்ட்டுக்கும், புருஷ லட்சணத்திற்கும் வித்தியாசம் காட்டினால் இன்னும் தேவலை. // - மேல் சாவனிசம் என்பது பெண்மையை மதிக்காத, ஆணுக்குத்தான் எல்லாம் தெரியும், பெண் என்பவள் ஆண் சொல்வதைக் கேட்டு அதன்படியே ஒழுகணும் என்ற தன்மை. தன் பெண்ணைவிடத் தன் மகனுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் சுபாவம். பெண் என்ன சொன்னாலும் அலட்சியம் செய்து, அதையே ஆண் சொன்னால் 'ஓஹோ அப்படியா' என்று எடுத்துக்கொள்ளும் தன்மை.

    புருஷ லட்சணம் என்பது, நான் இருக்கிறேன், கவலைப்பட வேண்டாம், எந்தப் பிரச்சனைனாலும் என்னை நம்பி என்னிடம் கொண்டுவாருங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன் என்ற அஷ்யூரன்ஸை தன் வீட்டு மகளிர்க்குத் தருவது. அடுத்த வீட்டிலுள்ளவரோடு மனைவி ஏதோ தகராறில் ஈடுபட்டாலோ இல்லை அவர்கள் ஆரம்பித்த தகராறோ, 'நான் இருக்கிறேன்' என்று அதனை தீர்த்துவிட்டு, பிறகு தனியாக மனைவியிடம், 'நீ ஏன் இந்த வம்புக்குப் போகிற' என்பதுபோல அவளை ஆற்றுப்படுத்துவது புருஷ லட்சணம். மொத்தத்தில், தான் குடும்பத்தலைவன், தான் எல்லோருக்கும் அதிலும் மகளிருக்கு ஆதரவாக இருப்பவன் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும்படி நடந்துகொள்வது புருஷ லட்சணம் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பர் நெல்லை! மிகவும் சரியாக மேல் ஷாவனிஸ்ட் என்பதற்கும், புருஷ லட்சணம் என்பதற்கும் வித்தியாசம் கூறியிருக்கிறீர்கள். பெண்கள் இதைப் பற்றி பேச வரும் பொழுது, கொஞ்சம் சார்பு நிலை வருவதற்கும், தவறாக புரிந்து கொள்ளப் படுவதற்கும் வாய்ப்பு உண்டு.
      நம் நாட்டைப் பொறுத்தவரை சிறு வயதிலிருந்தே வழங்கப்படும் அதிகபட்ச சலுகைகளாலும், டபுள் ஸ்டாண்டர்டாலும் புருஷ லட்சணம் பொருந்திய ஆண் கூட கொஞ்சம் மேல் ஷாவனிஸ்டாக மாறி விடுகிறான்.

      நீக்கு
    2. ஆனா பாருங்க.. பதிலை வைத்து சொல்லியிருக்கவருடைய கேரக்டரை எடை போட்டுடாதீங்க. நான் மேல் ஷாவனிஷம்லேர்ந்து வெளியே வர முயற்சிக்கறவன்.

      நீக்கு
    3. இந்த மேல் சாவனிஸ்ட் பற்றி மகளிர் என்ன நினைக்கிறார்கள் என்பது தான் முக்கியம். ஏனென்றால் இது பற்றி ஆண்கள் நினைத்துக் கொண்டிருப்பது வேறு. பெண்கள் உணர்வது வேறு.
      ஆண்கள் கற்பனையாக இது தானாக்கும் மேல் சாவனிஸம் என்று அனுமானிக்கிறார்கள். ஆனால் பெண்களோ அதை உணர்கிறார்கள். அதனால் தான் அவர்களிடம் இது பற்றி எதிர் பார்த்தேன். ஆனால் வெகுவாக புருஷ லட்சணம் பற்றி தான் பின்வரும் அவர்கள் பின்னூட்டங்கள் ஓரளவு சொல்கின்றன.
      இது தான் மேல் சாவனிஸம் என்று யாராவது குறிப்பிட்டுச் சொல்ல மாட்டார்களா என்று எதிர்பார்க்கிறேன்.

      நீக்கு
    4. மேல் ஷாவ்னிசம் என்பது பெண்களைச் சற்றும் மதிக்காத ஆண் என்று சொல்லலாம்! முக்கியமாய்ப் பெண்ணின் உணர்வுகளை, அவர்கள் மனப் பாதிப்பை, அவர்கள் மன வருத்தத்தில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள், அவர்களுக்கெனத் தனி விருப்பங்கள் உண்டு என உணராத ஆண்கள்! இன்னும் சிலர் தன் வீட்டு மனிதர்கள் வந்து விட்டால் அவர்கள் எதிரில் மனைவியை அவமதிப்பதில் இன்பம் அடைவார்கள். அப்படிப் பட்ட ஆண்களும் ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர்களே!

      நீக்கு
    5. நெல்லை.. சாதாரணமான ஒரு காட்சி பாருங்கள்.

      வீட்டின் வெளியே எதையோ விற்பவன் நின்று "அம்மா.. அம்மா" என்று கூப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.

      மனைவி: எவனோ எதுக்கோ வீட்டு வாசல்லே கூவிண்டு நிக்கறான் பாருங்க... ஒரு ஆம்பளையா லட்சணமா வாசப் பக்கம் போய் என்ன ஏதுன்னு பார்த்தாத்தான் என்ன?.. எல்லாத்துக்கும் நான் தான் போய் ஆகணும்ங்கற தலை எழுத்து.. காலம்பற எழுந்ததிலேந்து எதுக்குத் தான் நான் அல்லாடறதுன்னு தெரியலே..! -- இது ஒரு பெண்ணில் குமுறல். ரொம்ப சிம்பிளாச் சொல்லணும்னா, இவ்வளவே அந்தப் பெண் எதிர்பார்க்கிற புருஷ லட்சணம்!

      நீக்கு
    6. இப்போ மேல் சாவனிசத்திற்கு வருவோம்:

      அதே போலவான இன்னொரு காட்சி:

      பூக்காரி: நாலு முழம் போதுங்களா?..

      ஆண்: நாலு முழம் எதுக்கு??.. வெறுமனே சாமிக்கு சாத்தறதுக்குத் தானே ஒரு முழம் கொடு. அதுவே எதேஷ்டம்.

      பூக்காரி: அம்மா நாலு முழம் தான் கேப்பாங்க..

      ஆண்: அம்மா ஆட்டுக்குட்டி கதைலாம் வாண்டாம். நீ ஒரு முழம் கொடு. போதும்.

      ஒரு முழம் பூவை வாங்கிக் கொண்டு உள்ளே வருகிறான்.

      பெண்: வாசல்லே என்ன? பூக்காரி வந்துட்டாளா?

      ஆண்: அதான் வாங்கிண்டு வர்றேனே! கண்ணா தெரிலே?

      பெண்: தெரிலே தான்! தெரியாமத்தானே கேக்கறேன். அதுக்கு நேரடியா பதில் சொன்னா என்ன?

      ஆண்: என்ன சொல்லணும்ங்கறே?

      பெண்: எவ்வளவு வாங்கினீங்க?

      ஆண்: ஏன்? ஒரு முழம். எதுக்குக் கேக்கறே?

      பெண்: எதுக்கா?.. எதுக்குக் கேக்கறேன்னு கூடவா தெரியாது?
      நாளைக்கு வெள்ளிக் கிழமை.. ஒரு முழம் வாங்கிண்டு வந்து நிக்கறீங்களே.. பத்து சாமி படம் இருக்கு.. நான் இந்த ஒரு முழத்தை எந்தப் படத்துக்குப் போடறதுன்னு நெனைக்கிறீர்ங்கண்க..? வீட்லே ஒரு பொம்பளை இருக்கா
      கேட்டுச் செய்யணும்ன்னு கூடவா தெரியாது?..

      ஆண்: எல்லாம் ஒரு முழம் போதும். அதை வைச்சு நீ பண்ற பூஜை போதும்.

      பெண்: இதாங்க.. ஆம்பளை சவடால். பூ, பூஜை எல்லாம் என் விஷயம்.. எங்கிட்டே கேட்டாத் தான் என்ன? அதான் நீங்க செய்ய மாட்டீங்க.. இவ பொம்பளை தானே-- இவ கிட்டே என்ன கேட்டுச் செய்யறதுன்னு ஒரு ஆண் அகம்பாவம்! அப்படித் தானே? இப்படித் தானே ஒவ்வொரு விஷயத்திலேயும் தாலி இந்த கழுத்துக்கு ஏறினதிலேந்து பார்த்துக்கிட்டிருக்கேனே?
      ஓங்க அழும்பு மனசு எனக்காத் தெரியாது.. எல்லாம் நான்
      கொடுத்து வைச்சது அவ்வளவு தான்!

      நீக்கு
    7. அச்சோ பாவம் அந்த அம்மா. நல்ல வேளை, இவர் இப்படி எல்லாம்
      தலையிட மாட்டார். ரேவ், பூக்காரி வந்திருக்கா.//அத்தோடு தீர்ந்தது. அவருக்கு அவள் பேச உட்காருவாள் என்று தெரியும். ஹாஹ்ஹா.

      நீக்கு
    8. ஆக, மேலே சொன்ன இரண்டு பெண்களின் மனநிலைகளைப் பார்த்தால், புருஷ லட்சணம், மேல் சாவனிசம் இரண்டையும் தீர்மானிப்பது அவ்வப்போது தாங்கள் இருக்கும் மனநிலைகளுக்கு ஏற்ப பெண்களே என்று தெரிகிறது.

      நீக்கு
    9. ஆணும், பெண்ணும் வேலைக்குப் போகும் சமூக சூழலில் இன்றைய காலகட்டத்தில் மேல் சாவனிசம் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று தெரிகிறது. இரண்டாவது அது மேல் நாட்டு
      அனுபவம். ப்ராய்ட் ஆராய்சிகளின் அணுகலில் மேல் சாவனிஸ நடவடிக்கைகளை மிக நேசிக்கும், விரும்பும் பெண்களும் இருப்பார்கள். ஆண் தன்னை ஒவ்வொரு நிமிடமும் அடக்கி ஆள வேண்டும் என்று விரும்பும் பெண்கள்.

      மனித மனம் என்பது விசித்திரமான ஒன்று. கெட்டது என்றாலும் இல்லாததை விரும்பும். நல்லது என்றாலும் இருப்பதை அலட்சியம் செய்யும்.

      நீக்கு
    10. ஜீவி சார்... மேல் ஷாவனிசம் வேறு... 'அடக்கி ஆள வேண்டும்' என்ற சில பெண்களின் விருப்பம் வேறு. குடும்பத் தலைவன் என்ற பொறுப்பில் கணவன் இருக்கணும் என்பதுதான் 'அடக்கி ஆள வேண்டும்' என்பதற்கு அர்த்தம்.

      மனைவி - ஏங்க..என்னோட அப்பா அம்மா, ரெண்டு மாசம் அவங்களுக்கு உதவியா வரச் சொல்றாங்க.
      கணவன் - அதெல்லாம் இப்போ வேண்டாம். பசங்க எக்சாம் வருது. அதுவும்தவிர அங்க உனக்கு வேலை ஜாஸ்தியாயிடும். ஏற்கனவே நோஞ்சான் உடம்பு உனக்கு. அப்புறம் பார்த்துக்கலாம். (ஏன்..உங்க அப்பா அம்மாவைப் பாத்துக்க அவங்க பசங்க இருக்காங்க. உன் அண்ணன் தம்பிக்கு வேற என்ன வேலை? உன்னைத்தான் வேற குடும்பத்துல கட்டிக்கொடுத்தாச்சே. அப்புறம் என்ன. உன் வேலை என் பெற்றோரையும், என் சகோதர சகோதரிகளையும் பார்த்துக்கறதுதான். நல்லாக் கேட்க வந்துட்டா)
      மனைவி - இந்த தீபாவளிக்கு பச்சைக்கல் நெக்லஸ் வேண்டும்.
      கணவன் - இப்போ கம்பெனி நிலைமையும் சரியில்லை. போனஸ் இந்தத் தடவை கிடைக்காது. பின்னால பாத்துக்கலாம். (அதெல்லாம் முடியாது. என் தம்பி அவன் வீடு ஒழுகுதுன்னு சொன்னான். அதுனால கூரையைச் சரி பண்ண இந்தத் தடவை பணம் அனுப்பணும். சும்மா நகை நட்டுன்னு உசிரை எடுக்காதே)
      மனைவி : சாப்பிட வாங்க. நேரமாகுது. பண்ணி 15 நிமிஷத்துக்கு மேல் ஆயிடுச்சு
      கணவன் : இல்லம்மா. இந்தக் கதை பாதில நிறுத்திட்டு வரமுடியாது. கொஞ்சமாவது எழுதி முடிச்சுட்டு வர்றேன். நீ ஏன் எனக்காகக் காத்திருக்க. எத்தனை தடவை சொல்லியிருக்கேன். நீ சாப்பிட்டு முடி. எனக்கு எடுத்து வச்சிட்டு, பாத்திரம் அலம்பறது மத்த வேலையை முடி. (இரு இரு... என்ன அப்படி தலைபோற அவசரம். கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன். நான் வர்றதுக்குள்ள நீ சாப்பிட்டுடாதே)

      இது மாதிரிச் செய்தால் 'அடக்கி ஆள்வது'. அதே சமயம், அடைப்புக்குள் கொடுத்திருப்பது மேல் ஷாவனிசம் என்று நினைக்கிறேன்.

      கீசா மேடம்..வல்லிம்மா.. பா.வெ. மேடம்.. ஓடிக் கம்மோன்.

      நீக்கு
    11. நெல்லை.. நான் ப்ராய்டைப் பற்றி சொல்லியிருக்கிறேனே. கவனிக்கவில்லையா? இது வேறு விஷதம்.

      நீக்கு
    12. நெல்லை. இது ப்ராய்டு சொன்ன வேற விஷ்யம்.

      நீக்கு
  12. மொத்தத்தில் இன்றைய ஜீவி சாரின் விமர்சனம் வித்தியாசமாகவும் ரசிக்கும்படியும் இருந்தது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  13. அழகான விமர்சனம், ரசிக்க வைத்தது சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்து வாசித்தீர்களா?.. நன்றி, தேவ கோட்டையாரே!

      நீக்கு
  14. படிப்பறிவு இல்லாமல், கிராமத்திலிருந்து கொண்டு இப்படிப்பட்ட செயல்களை செய்யும் மொடக்குறிச்சி சாமியாத்தாள் போன்றவர்களைப் பற்றி படிக்கும் பொழுது, எல்லா வசதிகளும் இருந்தும் நாம் என்ன செய்கிறோம்? என்று கேள்வி எழுந்து வெட்கப்பட வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. சிறப்பான விமர்சனம்! ஜீ.வி.சாரின் அனுபவமும், ஆற்றலும் அருமையாக வெளிப்பட்டிருக்கின்றன. செல்வராஜ் சாரின் சிறுகதையை அவர் அணுகியிருக்கும் விதம், அடடா! சிறுகதை எழுதும் முன் எல்லோரும் இந்த விமர்சனத்தை ஒரு முறை படித்தால் ஒரு நல்ல வழிகாட்டல் கிடைக்கும்.

    எழுந்து நின்று, வணங்கி வரவேற்கிறேன் ஜீ.வி. சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மங்கையர் மலர் சமீபத்திய சிறுகதைப் போட்டியைப் பார்த்த பொழுது உங்கள் நினைவு தான் வந்தது. தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளும் அனுபவங்களும் தங்களுக்கு பெருமை சேர்ப்பவை. அந்த பின்னணியில் தங்கள் வரிகள் நெகிழ்ச்சி ஏற்படுத்தின. பரஸ்பரம் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும்
      உணர்வு தான் முக்கியமாகிப் போகிறது. நன்றி, சகோதரி!

      நீக்கு
  16. பதில்கள்
    1. நன்றி, கரந்தையாரே! துரை சார் உலவ விட்ட சுந்தரம் கதாபாத்திரமே என் மனத்தில் நிற்கிறார்.

      நீக்கு
  17. //கேள்விகள் பதிலை எதிர்பாக்காத கேள்விகள் போலவும், பதில்களோ கேள்விகளுக்கான பதில்களாக தோற்றம் கொள்ளாத பதில்களாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.//
    உதாரணத்தோடு விளக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  18. பெரும்பாலும் கேள்விகள் கேட்கும் பொழுது, கேட்பவர்களுக்கு ஒரு அபிப்ராயம் இருக்கும், அது சரியா? பதில் சொல்பவர் என்ன நினைக்கிறார்? மற்றவர்கள் கருத்து என்ன? என்பவைகளை தெரிந்து கொள்ளும் நோக்கத்தோடுதான் கேள்விகள் கேட்கப்படுகின்றன என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனக்குத் தெரிந்த பதில்களில் அடிப்படையில் தான் யாருக்கும் கேள்விகள் உருவாகின்றன. பதில் சொல்ல வேண்டியவர் கேள்விக்கான நேரடியான பதில்களுக்கு முயற்சி செய்யாமல் துணைக் கேள்விகள் போட்டு மூலக் கேள்வியையே மறக்கடிக்கலாம் அல்லது திசை திருப்பலாம். அதனால் கேள்விகளுக்கான முன் கூட்டிய தயாரிப்புகள் எல்லாம் மாறி, பதிலளிப்போர் தனக்கான கேள்விகளைத் தீர்மானிக்கலாம். அதான் பதிலுக்கான கேள்விகள்.

      நீக்கு
  19. போற்றத்தக்கவரைப் பற்றிய பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  20. ஜீவி விமர்சனம் ரசித்துப்படித்தேன். இவ்வாறாக படித்து எழுதுவதற்கு மிகவும் பொறுமை வேண்டும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அனுபவமும் அது தானே! மொழிபெயர்ப்பு நேரங்களில்
      ஆழ்ந்த ஈடுபாடும் பொறுமையும் தானே கை கொடுக்கின்றன.
      விளைவைப் பார்க்கும் திருப்தியை நோக்கியே எல்லா முயற்சியக்ளும் பயணிப்பதால் பொறுமை அதயாவசிய அவசியமாகிறது என்று நினைக்கிறேன். நன்றி.

      நீக்கு
  21. மூலிகை தாய்க்கு வணக்கங்கள்...

    விரிவான விமர்சனம்... அட அதில் கூட ஏழு "கலாம்..!"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரியலையே, டி.டி. ???????

      நீக்கு
    2. தங்களின் ஆதங்கம் (ஆலோசனை அல்லது அறிவுரை) பலவற்றை கவனியுங்கள்... அதில் பலவற்றில் "கலாம்" என்று முடியும்... சில நல்ல யோசனைகளை, தெரிந்தோ தெரியாமலோ சொல்லி உள்ளீர்கள்... அதை நான் கவனித்தேன்... யாருக்கும் வலிக்கக்கூடாது - என்கிற அளவில் தான் தங்களின் விமர்சனம்...

      வேறு ஒன்றுமில்லை... எனது சில பதிவுகள் என்னையே படிக்க வைக்கும் சூழ்நிலை இப்போது...

      அது போல தங்களின் விமர்சனத்தை விமர்சிக்க நினைத்தேன்... அவ்வளவே...

      தவறாக நினைக்க வேண்டாம்...

      Continue...

      நீக்கு
  22. சாமியாத்தாள் சிறந்தசேவகி வாழ்துவோம்.

    சிறந்த விமர்சனம் விரிவாக தந்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதேவி பின்னூட்டம் சுருக்கமாகத் தந்திருக்கிறார். :}

      நீக்கு
  23. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு

  24. மொடக்குறிச்சியில் வசிக்கும் மூலிகை தாய்' என்றழைக்கப்படும் சாமியாத்தாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    அவர்கள் மகிழ்ச்சியான முகமே பாதி நோயை ஓட்டி விடும்.
    அவர்கள் உற்சாகம் மற்றவர்களை பற்றிக் கொள்ளும்.
    அதுவே பாதி வைத்தியம், அதன் பின் அவர்கள் மூலிகை வைத்தியம் மீதியை பார்த்துக் கொள்ளும்.

    நிறைய பேருக்கு மூலிகை செடிகளின் பயன், அதன் பயன் தெரிவது இல்லை.
    இன்றைய நல்ல செய்திக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. சாமியாத்தாள் பற்றி அறிந்திருந்தேன். இங்கேயும் பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. வித்தியாசமான முறையில் ஜீவி சாரின் விமரிசனம். "திங்க"ற கிழமை பற்றி விமரிசிக்க என்ன இருக்குனு சொன்னாலும் தி/கீதாவின் நோன்புக் கஞ்சி பற்றிய விமரிசனம் நிறைவு. துரையின் கதையில் கதாபாத்திரங்களின் உறவு முறைகளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. என்றாலும் வீட்டுக்குப் பெரியவர் சுந்தரம் என்பதை வலியுறுத்தி இருக்கலாம் என்பதை ஏற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. பிஏசி பற்றி ஜீவி அவர்கள் தன் கோணத்தில் நன்கு அலசி இருக்கிறார். ஆனால் அவருடைய இந்தக் கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். ""//குழந்தையாய் குழந்தை இருக்கும் பொழுது அதற்கு குழந்தை மனம் இருக்காது.. குழந்தைத் தன்மை இருக்கும். அதாவது க்ளீன் சிலேட் நிலமை. இதில் பெற்றோர் மனம் என்பது பதிந்தால் அது ஆபத்தானது. பெற்றோர் மனம் என்பது ஒரு வளர்ச்சியடைந்த ஸ்டேஜை பிரதிநித்துவப் படுத்துவது."// இந்தக் கருத்து ஏற்புடையது. விவாதத்துக்கும் உரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விவாதம்?.. மனவியல் தெரிந்தவர் யாராவது ஆரம்பித்து வைக்க்லாம். நான் ரெடி.

      நீக்கு
  27. ஜீவி சாரின் விமர்சனம் அருமை.
    விரிவான விமர்சனம் இதற்கு வரும் பதிகளை படிக்க ஆவலாக இருக்கிறேன்.


    //புருஷ லட்சணம் என்பது, நான் இருக்கிறேன், கவலைப்பட வேண்டாம், எந்தப் பிரச்சனைனாலும் என்னை நம்பி என்னிடம் கொண்டுவாருங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன் என்ற அஷ்யூரன்ஸை தன் வீட்டு மகளிர்க்குத் தருவது//

    நெல்லை சொன்ன புருஷ லட்சணம் அர்த்தம் அருமை. இதைதான் பெண்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை சொன்ன புருஷ லட்சணத்தை ஒத்துக் கொண்டால் அது மேல் சாவனிசத்தில் கொண்டு போய் விடுமே, கோமதிம்மா. பரவாயில்லையா?..

      நீக்கு
  28. சுகி சிவம் சொல்வதை எல்லாம் கேட்பது என்பதை நிறுத்தி எவ்வளவோ காலம் ஆச்சு! மற்றபடி நல்லதொரு விமரிசனம். நுணுக்கமாக ஆராய்ந்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. மற்றபடி நல்லதொரு விமரிசனம்.. நன்றி.

      நீக்கு
  29. பெண்கள் எதிர்பார்க்கும் புருஷ லக்ஷணத்தை "நெல்லை" சொல்லி இருந்தாலும் அவரால் அப்படி இருக்க முடியுமா என்பது சந்தேகமே என்பதை அவரே சொல்லி விடுகிறார்! :P:P:P:P:P:P பிரச்னைகளைத் தீர்க்காமல் வளர்க்கும் ஆண்களும் உண்டு! :( அவர்களை ஆணாதிக்கம் நிறைந்தவர்கள் எனச் சொல்லலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா...எவ்வளவு சந்தோஷம் இந்த கீசா மேடத்துக்கு. உடல் வலி எல்லாம் 'காக்கா ஊஷ்' போயி ஜம்முனு ஃபார்முக்கு வந்துட்டார். தப்பித் தவறி நான் அதை எழுதியிருக்கலைனா, இன்னைக்கு என்னை உண்டு இல்லைனு ஆக்கியிருப்பார். ஹா ஹா

      நீக்கு
    2. பிரச்னைகளைத் தீர்க்காமல் வளர்க்கும் ஆண்களும் உண்டு! :( அவர்களை ஆணாதிக்கம் நிறைந்தவர்கள் எனச் சொல்லலாமோ?//

      கீதாக்கா ஹைஃபைவ்!!!

      அதுதானே ஈகோவின் உச்சம் இல்லையா?!!!!!!!!!!!!!!! பிரச்சனைகளைத் தீர்க்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஈகோ முக்கியக் காரணமாக அமைகிறது என்று தோன்றுவதுண்டு எனக்கு. தீர்வு அப்பட்டமாகச் சரியில்லை என்று நமக்குத் தோன்றினாலும் அதைச் சொனாலும்....மாற்று வழிகள் சஜஷன்ஸ் சொன்னாலும்....கேட்காமல் நான் சொல்வதுதான் சரி. அதைத்தான் செய்யணும் என்று சொல்லி கையில் சூடு பட்டுக் கொண்ட பிறகும் கூட மீசையில் மண் ஒட்டாத.....ஹிஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    3. சும்மா ஒரு ஃபார்மாலிட்டிக்கு பெண்கள்ட மேல் சாவனிசம்னா என்னன்னு கேட்டா..உடனே ஆம்பிளைகளைக் குறை சொல்ல வந்துடறாங்க. இவங்களுக்கு சமூகத்துல பெரிய ஆட்கள்னு நினைப்பு. நாங்கள்லாம் இல்லைனா வண்டி எப்படி ஓடும். இதுகூடத் தெரியாமல். ஆம்பிளைகளுக்கு ஈகோவாம்....பிரச்சனையை வளர்க்கறாங்களாம். பெண்கள் இல்லைனா அந்த இடத்துல பிரச்சனை ஏது? ம்ஹும். இவங்களைப் போய் கருத்துச் சொல்லச் சொல்றாங்களே..


      இதுதான் மேல் ஷாவனிசம்.. ஹா ஹா

      நீக்கு
  30. // எதிலும் நம்பிக்கை தான் முக்கியமாகிப் போகிறது.//

    பரிகாரமோ, பிரார்த்தனையோ ஜீவி சார் சொல்வது போல் நம்பிக்கை இல்லாமல் செய்வது பயனில்லைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிம்மா, நம்பிக்கையில்லாதவர் பாக்கியசாலிகள். அவர்கள் பரிகாரமோ, பிரார்த்தனையோ-- அந்தப் பக்கமே வராது எந்தக் குழம்பமும் இல்லாமல் இருப்பார்களே!

      நீக்கு
  31. சாமியாத்தாள் சூப்பர் தாய்! அப்துல்கலாம் அவர்களிடம் இருந்து மூலிகைத்தாய் என்ற பட்டம் பெற்று இப்போது ஜெர்மனியிலிருந்தும் விருது வந்திருக்கிறது! பெருமைப்பட வேண்டிய விஷயம். பாராட்டுகள் வாழ்த்துகள் அத்தாய்க்கு!

    கீதா

    பதிலளிநீக்கு
  32. ஜீவி அண்ணாவின் விமர்சனம் அட்டகாசம். ஒரு விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு உதாரணமாகவும் எடுத்துக் கொள்ளலாம். நுணுக்கமான விமர்சனம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பின்னூட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணமாகவும் எடுத்துக் கொள்லலாமா?.. சும்மா... :}

      நீக்கு
  33. துரை அண்ணாவின் கதையை அருமையாக நுணுக்கமாக அலசியிருக்கிறார். அண்ணா கதை எழுதுவதில் அனுபவஸ்தராயிற்றே. அது விமர்சனத்திலும் தெரிகிறது. கதை நன்றாகப் படைக்கத் தெரிந்தால்தான் ஒரு கதையை விமர்சிக்க முடியுமோ? அப்படித்தான் தெரிகிறது. நாங்கள் விமர்சனம் என்று கூறும் கருத்துகள் எல்லாம் கதை பற்றி அல்ல பொதுவானது என்றே தோன்றுகிறது.

    ஜீவி அண்ணா தன் தளத்தில்சொல்லியிருந்த நினைவு என்று நினைக்கிறேன்..எங்கு என்று தெரியவில்லை..அந்த வரிகள் அப்படியே நினைவில்லை ஆனால் அதன் கருத்து நினைவில் உள்ளது...

    .ஒரு கதையை எழுதியதும் ஓட்டைகள், கேள்விகள் தொக்கி நிற்கிறதா என்று பார்த்து அதைச் சரி செய்ய வேண்டும்...ஆனால் சரியாகச் செய்ய வேண்டும்... நாமே சில கேள்விகள் கேட்க வேண்டும் வாசகராய்.... என்று சொல்லியிருந்த நினைவு. ...அதை நான் இப்போதும் கதை எழுதும் போது கடைபிடிக்க முயற்சி செய்கிறேன். நன்றி அண்ணா.

    அது போல இங்கும் கதையை அலசிய விதத்தில் நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு கதை எப்படி இருக்க வேண்டும் என்பது உட்பட. இப்படிப் பல அனுபவஸ்தர்கள்/எழுத்தாளர்கள் சொல்வதைக் கூர்ந்து கவனித்தால் நல்ல படைப்புகளைப் படைக்கலாம் என்றும் விளங்குகிறது. அதற்கும் மிக்க நன்றி அண்ணா.

    ஆனால் என்னதான் எல்லாம் விளங்கினாலும் கதை சரியாக எழுத வேண்டுமே அங்குதான் சறுக்கல் ஏற்படுகிறது. முயற்சி செய்ய வேண்டும். இக்கருத்துகளை மனதில்கொண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைகள் எழுதப் பழகியவர் தான் விமரிசிக்கும் எது பற்றிய விமரிசனத்தையும் கதை போல வாசிப்பவர் சலிப்பில்லாம் வாசிக்கும் படி அமைக்கலாம். அவ்வளவு தான்.
      அது நான் எழுதிய விமரிசனக் குறிப்பு மாதிரி நினைவில்லயே, சகோதரி?..
      இப்பொழுதெல்லாம் கதை எழுதுவதற்கு எந்த சட்ட திட்டமும் இல்லை. எழுதுவதில் கதையும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எழுதுவதை சுவாரஸ்யமாக எழுத வேண்டும். அவ்வளவு தான்.
      சறுக்கல் ஏற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
      அதுவும் உங்கள் கற்பனையாக இருக்கலாம்.

      நீக்கு
  34. பரிகாரம் என்பதெல்லாம் அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது. எல்லாவற்றையும் விட நம்பிக்கை அதுதான் மிக மிக முக்கியம்.

    நேற்று? அல்லது முந்தைய தினம்? நெல்லை கூட எபி வாட்சப்பில் ஒரு கதை பகிர்ந்திருந்தார்....அதுதான் நினைவுக்கு வந்தது. பிலிஃப், ஃபெயித் (தமிழில் இரண்டுமே நம்பிக்க என்று வருவதால் இரு சொற்களையும் தங்கிலிஷில்) இரண்டிற்கும் உள்ள வித்தியாசம். மிக மிக மிக அழகான செய்தி அது. இதைத்தான் நம் தத்துவங்கள் சொல்கிறது சரணாகதித் தத்துவம்! ஆனால் மனித மனம் எப்போதுமே அதன் பிலிஃபோடு நின்று விட்டு உயர் நிலையான ஃபெயித்/சரணாகதி இதற்குள் செல்லத் தயங்குகிறது. அதனால்தான் பரிகாரங்களின் பின் மனம் செல்கிறது.

    அந்த டோட்டல் ஃபெயித்/சரணாகதி மனம் வந்துவிட்டால் இந்தப் பரிகாரங்கள் எதற்கும் அவசியமே இருக்காது இல்லையோ?!! ஆனால் அது கடினம் என்றும் தெரியும்.

    பரிகாரம் எல்லாம் வியாபாரம் ஆக்கப்பட்டுள்ளதுதான் உறுத்தல்.

    சுகிசிவத்தின் எல்லாக் கருத்துகளிலும் உடன்பாடு கிடையாது. ஈர்ப்பவரும் இல்லை. எதற்காக வேண்டுமென்றாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அதை அவரே பின்பற்றுகிறாரா இல்லையா என்பதெல்லாம் அவசியம் எல்லை..இவர் என்றில்லை. அப்படிப் பார்த்தால் நம் பெற்றோர், பெரியோர் நமக்கு அறிவுரை சொல்வது வழக்கம். அந்த அறிவுரைகளை அவர்கள் மீதே திருப்பிவிட்டு நீ இப்படி இருந்தியா செய்தியா? அப்ப உனக்கு என்ன அருகதை என்று கேட்பது சரியல்லதானே அப்படி எடுத்துக் கொள்லலாமே என்று தோன்றும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1. நம்பிக்கை முக்கியம் என்று பொத்தாம் போக்கில் சொல்லும் பொழுது எதற்காக அது முக்கியம் என்று தெளிவு பெற வேண்டியிருக்கிறது.
      2. பக்தி நூல்களில் இருக்கும் சில வார்த்தைகளின் (உதாரணாம்: சரணாகதி போன்றவை) முழுப் பொருளை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. யாரோ எப்பொழுதோ தன் அனுபவத்தில் சொன்னது. அனுபவங்கள் ஆளுக்கு ஆள் மாறுபடும் எனப்தால் நமக்கான அனுபவங்கள் பெற முயற்சிக்க வேண்டும்.

      3. டோட்டல் சரணாகதி என்பது கேள்வியற்று போகும் நிலை.
      கேள்விகளில் ஆரம்பித்துத் தான் கேள்வியற்ற நிலையை அடைய முடியும்.

      4. கேள்வி இல்லையென்றால் எதற்கு சரணாகதி என்பதே புரியாது போகும். இன்னொருவருக்கும் ஆற்றுப் படுத்த முடியாது. அப்போ சுயநலம் முக்கியமாகிப் போகும்.

      -- இந்த இழைகளில் யோசித்துப் பர்ப்பதர்குக் கூட இன்றைய ஞானம் இல்லை.

      நீக்கு
  35. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழில் சில தவறுகள்... + பயண நேரம்...

      மன்னிக்கவும்...

      நன்றி...

      நீக்கு
  36. தவறாக நினைக்க வேண்டாம்...

    Here continue...

    ஸ்ரீராம் சார்... இந்த நாளில் இந்த பதிவை குறித்து, எனது விமர்சனம்:-

    1) விமர்சனம் - ஞாயிறு அன்று மாற்றுங்கள்...

    2) சனிக்கிழமை என்றால் positive news....? ஏன்...? நல்லது அவ்வாறே தொடரட்டும்... ஆனால்...

    எல்லோரும் எதிர்ப்பார்க்க வேண்டும் :-

    3) அய்யய்யோ... நாளைக்கு எங்கள் ப்ளாக்கில் இது வருமே... என்ன சொல்வது...? ப்ளஸ் செய்தி என்றால் இரண்டு பேர் (find two keys) போதுமே...!

    மற்றவை பிறகு... ஊருக்கு செல்ல வேண்டும்... நன்றி ஸ்ரீராம் சார்...

    பதிலளிநீக்கு
  37. தட்டச்சு செய்யும் பொழுது விரல் எழுத்தில் தவறாகப் பதிவதால் எழுத்துப் பிழை ஏற்படுகிறது. நான் 76 வயசுக் காரன். ஒரு கண் பார்வையில் சமாளித்து வருகிறேன். அதனால் சில எழுத்துப் பிழைகளை நீங்களே சரிபடுத்தி வாசித்துக் கொள்ள வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!