திங்கள், 12 ஆகஸ்ட், 2019

"திங்க"க்கிழமை : பால் கொழுக்கட்டை - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி


பால் கொழுக்கட்டை 


தேவையான பொருள்கள்:

அரிசி மாவு       -  1 கப் 
வெல்லம்          -   1/4 கிலோ 
பால்                    -  1/2 கப் 
தேங்காய் பால் - 1/2 கப் 
ஏலக்காய்           -  ஒரு சிட்டிகை 

தயாரிப்பு முறை:

அரிசி மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டுக்கொண்டு, கொதிக்க வைத்த நீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையவும்.  



விண்னென்று இருக்க கூடாது, ரொம்பவும் தளர்வாகவும் இருக்கக்கூடாது. பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். 




இளம் தேங்காயை துருவி மிக்சியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டினால் தேங்காய் பால் கிடைக்கும். முதல் முறை கிடைக்கும் பால் கெட்டியாக இருக்கும். அந்த சக்கையை மீண்டும் மிக்சியில் இட்டு அரைத்து, வடிகட்டினால் கிடைக்கும் பால் சற்று நீர்த்து இருக்கும். மீண்டும் அந்த சக்கையை கொஞ்சமாக நீர் சேர்த்து அரைத்து பால் எடுத்துக்  கொள்ள முடியும்.  இப்படி மூன்று பால் எடுத்துக் கொள்ளுங்கள். 



வெல்லத்தை பொடி செய்து மூன்று கப் தண்ணீர் விட்டு கரைய விடவும். வெல்லம் கரைந்ததும், வடிகட்டினால் கல், மண் போன்றவை தங்கி விடும். 



பாத்திரத்தை கழுவி விட்டு, மீண்டும் அதிலேயே கரைந்த வெல்ல ஜலத்தை விட்டு அடுப்பை மிதமாக எரிய விடவும். 



வெல்ல ஜலம் கொதிக்க தொடங்கியதும் உருட்டி வைத்திருந்த மாவு உருண்டைகளை மூன்றாக பிரித்துக்கொண்டு, ஒரு பகுதி உருண்டைகளை கொதித்துக் கொண்டிருக்கும் வெல்ல ஜலத்தில் போடவும். சிறிது நேரத்தில் வெல்ல ஜலத்தில் போட்ட மாவு உருண்டைகள் மேலே எழும்பி வரும். 



அப்போது இன்னொரு பகுதி மாவு உருண்டைகளை போடவும். அதுவும் எழும்பி வந்ததும், அடுத்த பகுதியையும் போட்டு வேகா விடவும். எச்சரிக்கை! மாவு உருண்டைகள் வெல்ல நீரில் கொதிக்கும் பொழுது அதிகம் கிளறக் கூடாது. எல்லா உருண்டைகளும்  நன்கு வெந்ததும் கீழே இறக்கி, கொஞ்சம் ஆற விடவும். ஆறியவுடன் பால், தேங்காய் பால் இரண்டையும் சேர்த்து, ஏலப்பொடியையும் சேர்த்து விட்டால் சுவையான பால் கொழுக்கட்டை ரெடி. 



இதை புளிக்காத மாவு தோசைக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.    

நான் உருட்டிய மாவு உருண்டைகளை நேராக கொதித்துக் கொண்டிருக்கும் வெல்ல தண்ணீரில் போட்டேன். சிலர் அதை ஆவியில் வேக வைத்து விட்டு பின்னர் வெல்ல ஜலத்தில் சேர்ப்பார்கள். அது சற்று விண்ணென்று இருக்கும். 

வேறு சிலர் பாலில் அந்த கொழுக்கட்டைகளை வேக வைத்து விட்டு, பின்னர் கொதிக்க வைத்த வெல்ல ஜலத்தை வெந்த கொழுக்கட்டைகள் இருக்கும் பாலோடு சேர்த்து, தேங்காய் பாலும் சேர்ப்பார்கள். 

தேங்காய் பால் சேர்ப்பதால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் சரியாகும். சுவைத்துப் பாருங்கள். 

57 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா/ கீதா, வல்லியம்மா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழிமொழிகிறேன்,
      வரவேற்கிறேன்.

      நீக்கு
    2. வரவேற்ற துரைக்கும், வந்திருக்கும் ஸ்ரீராம் மற்றும் நண்பர்களுக்கும் இனி வரப்போகும் நண்பர்களுக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

      நீக்கு
    3. வாங்க கீதா அக்கா...

      நல்வரவும்,வணக்கமும், நன்றிகளும்.

      நீக்கு
  2. பாரம்பரிய பால் கொழுக்கட்டை...

    எளிமையான குறிப்புகள்....
    அருமை.. அருமை..

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, பானுக்கா அடுத்து வர இருக்கும் அனைவருக்கும்

    ஹை! பால் கொழுக்கட்டை...மிகவும் பிடிக்கும் நம் வீட்டில்....பானுக்கா செமையா அழகா சொல்லிருக்கீங்க..இதே தான் நம் வீட்டிலும் செய் முறை...

    நான் கொஞ்சம் மாற்றி மாற்றியும் செய்வதுண்டு...மற்றொரு முறையிலும் செய்வேன்..சொல்கிறேன்..வந்து...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. பாரம்பரிய முறை. ஆனால் எங்க வீட்டில் தேங்காய்ப் பால் தான் விடுவோம். பால் சேர்ப்பதில்லை. சர்க்கரை போட்டுப் பால் விட்டும் பண்ணுவோம். அதில் தான் பால் சேர்ப்போம். அரிசியைத் தேங்காயோடு அரைத்துக் கொண்டு அதைக் கிளறி எடுத்துக் கொண்டு உருண்டைகளை வெல்லப்பாகில் போட்டும் பண்ணுவோம். கடைசியில் அந்தப் பால் எடுத்த தேங்காய்த் துருவலை நெய்யில் வதக்கி அதிலேயே போடுவதும் உண்டு. ஏலக்காயும் சேர்ப்போம்.

    பதிலளிநீக்கு
  5. இன்று ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்.

    விடுமுறை தினம். ஆனால் எனக்கு வேலை உண்டே. என்றாலும் இன்று வீட்டிலிருந்து வேலை பண்ணலாமா என்று கேட்க நினைத்திருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. இப்போல்லாம் இனிப்புப் பண்ணுவதே அரிதாகி விட்டது. அதிலும் கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை எல்லாம் பண்ணுவது மிக மிக அரிதாகி விட்டது. முன்பெல்லாம் மாலை டிஃபனுக்குக் கூடப் பண்ணுவோம். தோசைக்கெல்லாம் தொட்டுக் கொண்டதில்லை. அன்றே அரைத்து அன்றே வார்க்கும் புளியா தோசைக்குக் கொத்துமல்லிச் சட்னி, தக்காளிச் சட்னி, புளி மிளகாய் எனக் காரமாகத் தான் வேண்டி இருக்கும். :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டில் எல்லோரும் இனிப்பு பட்டர்கள். அரிசி உப்புமாவிற்கு தொட்டுக்கொள்ள வெல்லம், அடைக்கும் அஃதே. சப்பாத்திக்கு ஜாம். புளியா தோசைக்கு பால் கொழுக்கட்டை.

      நீக்கு
    2. ஹாஹாஹா! இங்கே புக்ககத்திலும் இனிப் புப் பிரியர்கள் தான். காஃபிக்குச் சர்க்கரை கூடக் கரண்டியில் தான்! ஆனாலும் தோசைக்குத் தொட்டுக் கொண்டு பார்த்ததில்லை. மாங்காய்ப் பச்சடியை வத்தக்குழம்புக்குத் தொட்டுப்பாங்க. பெரிய கல்சட்டி நிறைய மாங்காய்ப் பச்சடி பண்ணினாலும் கடைசியில் சாப்பிடறவங்க சுரண்டித் தான் போட்டுக்கணும்! :)))))

      நீக்கு
  7. பானுக்கா நான் மூன்றாவது பாலில் கொழுக்கட்டைகளை வேக விட்டு மற்றொரு பாத்திரத்தில் தனியாக வெல்லத்தைக் கொதிக்க விட்டு கொஞ்சம் ஒட்டும் பருவம் வந்ததும் கொழுக்கட்டை வெந்ததும் விட்டு அப்புறம் நீங்கள் சொல்லிய விதம் தான்...

    மற்றொன்று ஜீனியில். பாலை (தேங்காய்ப் பால் அல்ல) குறுக்கி கொஞ்சம் பாலில் வெந்த கொழுக்கட்டையைப் போடுவது...

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  9. பால் கொழுக்கட்டை செய்முறை படங்களுடன் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கம்.அனைவருக்கும் இந்நாள் இனிதாக பிரார்த்தனைகளும் செய்கிறேன்.

    நேற்று முழுவதும் என்னால் வலைத்தளம் வர இயலவில்லை. மன்னிக்கவும்.

    சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் செய்முறையான பால் கொழுக்கட்டை செய்முறை, படங்களுடன் மிகவும் அருமையாக இருக்கிறது. இதெல்லாம் எப்போதோ செய்தது.அடிக்கடி செய்ய சந்தர்ப்பங்கள் வாய்ப்பதில்லை. பார்க்கும் போதே நாவில் நீருற வைக்கிறது. விளக்கமாக செய்முறையை படித்து தெரிந்து கொண்டேன். இனி இது போல் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. மற்றொன்று பால் + வெல்லம் சேர்த்து...அதில் கொழுக்கட்டை

    கீதா

    பதிலளிநீக்கு
  12. நீங்களே சொல்லிருக்கீங்க அக்கா நான் சொன்ன ஒரு முறை...பாலில் வேக வைத்து அப்புறம் சேர்ப்பது பற்றி. காலையில் அந்தப் பகுதி வரவே இல்லை ஹிஹி படத்தோடு நின்றது...இப்பத்தான் பார்க்கிறேன்.

    அக்கா நானும் ஆவியில் வேக வைத்துப் போடுவதில்லை..ஆமால் அது கொஞ்சம் விரைப்பாக இருக்கும். இப்படி வேக வைப்பது நல்ல சாஃப்டாக அதே சமையும் சுவையும் இறங்கி இருக்கும்..

    புளிக்காத மாவு தோசைக்குத் தொட்டுக் கொண்டதில்லை இதுவரை.

    ரொம்ப நன்றாக வந்திருக்கிறது கொழுக்கட்டை. சரி நான் எடுத்துக் கொண்டுவிட்டேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  13. எனக்கு பிடித்தமானது அம்மா அடிக்கடி செய்வாங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பால் கொழுக்கட்டைசெட்டிநாட்டு பிரபலமான உணவாயிற்றே?

      நீக்கு
  14. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பால் கொழுக்கட்டை - நல்ல குறிப்பு. செய்து பார்க்கும் அளவு பொறுமை இல்லை :) சாப்பிடக் கிடைத்தால் மகிழ்வேன்! ஹாஹா...

    வீட்டில் யாரும் செய்ததாக நினைவில்லை. சுட்டி அனுப்பி விட்டேன்! :)

    பதிலளிநீக்கு
  15. அவங்க தளத்துல கீசா மேடம் 'நான் செய்து அனுப்பியதற்கு முன் நெ.த செய்து அனுப்பிட்டார்' என்று புலம்பின மாதிரி, நான் எ.பிக்காக எடுத்து வைத்திருக்கும் ரெசிப்பியை நீங்க செய்து அனுப்பிட்டீங்க. இது அநியாயமில்லையோ? ஹா ஹா

    நல்லாவே வந்திருக்கு. அருமையா கொழுக்கட்டை உருட்டியிருக்கீங்க.

    இதைச் செய்யணும்னு நான் ரொம்ப நாட்களாகவே (வருஷமாகவே) நினைத்துக்கொண்டிருக்கிறேன். சந்தர்ப்பம்தான் அமையலை. இந்தத் தடவை என் பையனுக்குச் செய்து போடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர், நெ.த. இதுவும் காத்திருப்புப் பட்டியலில் வைச்சிருக்கேன். பானுமதி முந்திட்டாங்க! :)))))

      நீக்கு
    2. https://geetha-sambasivam.blogspot.com/2010/09/blog-post_3990.html இங்கே பார்க்கவும். 2009 ஆம் வருடம் எழுதியதில் பால் கொழுக்கட்டைக்கான குறிப்பும் இருக்கும். 2010 ஆம் ஆண்டில் இருந்து தான் ரங்க்ஸுக்குச் சர்க்கரை என்பதைக் கண்டு பிடித்துப் பின்னர் சர்க்கரை, வெல்லம் என்று சேர்க்க முடியாமல் போனது! :(

      நீக்கு
    3. வாங்க நெல்லை. கோவில் உலாக்கள் முடிந்ததா? மகனுக்கு செய்து கொடுங்கள், ரசிப்பார்.

      நீக்கு
  16. தின்னத்தின்ன திகட்டாதது. சூடாக ஒரு ருசி. ஆறியபின் ஒரு ருசி. இதனை ரசித்து உண்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொல்லியிருக்கிறீர்கள். எப்படியானாலும் ரசிக்கக் கூடியதுதான். நன்றி ஐயா.

      நீக்கு
  17. // சிலர் அதை ஆவியில் வேக வைத்து விட்டு பின்னர் வெல்ல ஜலத்தில் சேர்ப்பார்கள்... //

    இன்று காலை தங்களின் செய்முறைப்படியே... (வெல்லம் சேர்க்காமல்) மென்மையாக இருந்தது... நன்றி...

    பதிலளிநீக்கு
  18. //இப்படி மூன்று பால் எடுத்துக் கொள்ளுங்கள். //

    இங்கே கூட முப்பால் தானா?.. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முப்பால் தான்...

      ஆனால்
      அதற்கு அப்பாலும் உண்டு...

      எப்பால் ஆனாலும் இணை
      இப்பாலுக்கு ஏதுமில்லை..

      நீக்கு
    2. உதவிக்கு வந்ததற்கு நன்றி துரை சார்.

      நீக்கு
  19. //தேங்காய் பால் சேர்ப்பதால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் சரியாகும். //

    அப்படியே நைஸாக கொலஸ்ட்ராலும் கூடும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேங்காய்ப் பாலில் கொலஸ்ட்ரால் என்பது நவீன மருத்துவம் கிளப்பி விட்ட புரளி...

      தேங்காயைப் பற்றிய ஆய்வுகள்
      இங்கிலாந்தில் ஒரு மாதிரியும்
      அமேரிக்காவில் ஒரு மாதிரியும்
      இருப்பதை இணையத்தில் காணலாம்...

      ஆய்வாளர்களிடத்தில்
      மாறுபட்ட கருத்துகள்....

      அதையெல்லாம் ஏற்றுக் கொள்ள
      நமக்கென்ன தலையெழுத்தா!...

      பட்டுக்கோட்டை, தம்பிக்கோட்டை, பேராவூரணி பக்கத்து தேங்காய்கள்
      அடர்த்தியானவை.. எண்ணெய் வளம் மிக்கவை...

      இந்தத் தேங்காய்களால் நோய்கள் வந்ததாக எவ்விதக் குறிப்பும் இல்லை....

      திருஅல்லிக்கேணி ஜாம்பஜார் பகுதிகளில் பட்டுக்கோட்டை தேங்காய்க்கடை, தம்பிக்கோட்டை தேங்காய்க்கடை என்றிருப்பதே சாட்சி...

      நீக்கு
    2. தேங்காய் சேர்ப்பதாலோ, தேங்காய் எண்ணெய் சேர்ப்பதாலோ கொழுப்பு/கொலஸ்ட்ரால் அதிகரிப்பதில்லை. நான் பல ஆண்டுகளாக நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்துகிறேன். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகளை வாங்கியதே இல்லை! சமையலுக்கு முழுக்க முழுக்க நல்லெண்ணெய் மட்டுமே! எப்போவானும் செய்யும் வடை, பஜ்ஜி, பகோடா போன்றவற்றுக்குக் கடலை எண்ணெய். முறுக்கு, தட்டை, சீடை, தேன்குழல் போன்றவற்றிற்குத் தேங்காய் எண்ணெய் மட்டுமே!

      நீக்கு
    3. அன்பின் அக்கா...

      நான் தான் மறந்து போனேன் என்றால் நீங்களும் மறந்து விட்டீர்களே...

      மருத்துவ குணங்கள் நிறைந்த இலுப்பை எண்ணெய்யை...

      நெய், தேங்காயெண்ணெய் போல இதுவும் உறையும் தன்மை கொண்டது....

      இலுப்பையின் பழங்கள் கிளிகளுக்குப் பிடித்தமானவை....

      இலுப்பையூர், இலுப்பைக் குடிகாடு என்றெல்லாம் ஊர்கள் இருக்கின்ற தமிழகத்தில்

      இலுப்பையை முற்றாக மறந்து விட்டோம்....

      நீக்கு
    4. இலுப்ப எண்ணெய், வேப்ப எண்ணெய் எதையும் மறக்கலை துரை. முன்னெல்லாம் திருக்கார்த்திகை தீபத்திருநாளுக்கு ஒரு வாரம் முன்னர் இருந்தே வாசலில் இலுப்ப எண்ணெய் கூவிக் கூவி விற்பார்கள். பின்னர் கல்யாணம் ஆனதும் எண்ணெய்க் கடைகளில் வாங்கி இருக்கேன். ஒரு சுற்று வட மாநிலங்கள் போயிட்டுத் தமிழ்நாடு வந்தால் இலுப்ப எண்ணெய் என்றாலே புரியலை! காலக் கொடுமை! :(((( இப்போவும் கொஞ்சம் விளக்கெண்ணெய், குளிர்காலத்தில் வேப்ப எண்ணெய் என வாங்கி வீட்டில் கையிருப்பில் இருக்கும். இலுப்ப எண்ணெய் தான் கிடைப்பதில்லை. :(

      நீக்கு
    5. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் சாப்பிட்டாலோ,சுட்ட எண்ணெயை மறுபடி சுட வைத்துச் சாப்பிட்டாலோ கொலஸ்ட்ரால் கட்டாயம் வரும். கொஞ்சமாக எண்ணெயை வைத்துப் பொரிப்பவைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுச் செய்வேன். சொல்லப் போனால் பார்க்கிறவங்க சிரிப்பாங்க! கொஞ்சமாக எண்ணெய் வைக்கிறேன் என்பதை. மிச்சம் ஒரு கரண்டிக்குள் தான் இருக்கும்படிப் பார்த்துப்பேன். அதையும் உடனே மறுநாளே செலவு செய்துவிடுவேன். இல்லை எனில் சுட்ட எண்ணெயைக் கொட்டி விடுவேன் நிர்தாக்ஷண்யமாக! பயன்படுத்துவதே இல்லை. சுட்ட எண்ணெயால் அசிடிடி வேறே வந்துடும்.

      நீக்கு
  20. பாமாயிலை இறக்குமதி செய்வதற்காக கட்டிவிடப்பட்ட புரளிதான் தேங்காய் எண்ணெயில் கொலஸ்ட்ரால் என்பது. இளம் தேங்காயில் கொலஸ்ட்ரால் கிடையாது. மேலும் தேங்காய் எண்ணெயில் இருக்கும் கொலஸ்ட்ரால் நல்ல கொலஸ்ட்ரால்.

    பதிலளிநீக்கு
  21. இன்று காலையிலிருந்து இணையம் ஒரே படுத்தல். இப்போது கூட கைபேசி வழியாகத்தான் அனுப்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  22. வெளியிட்ட எங்கள் ப்ளாகிற்கும், கருத்திட்டவர்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. ஆளுக்கு ஆள் இதெல்லாம் வித்தியாசப்படும். இளம் வயதிலிருந்து சாப்பிடுகிறவர்களைப் பற்றிக் கவலையில்லை. (உ-ம்) மலையாளக்கரை காரர்கள்.உ

    பதிலளிநீக்கு
  24. கொலஸ்ட்ராலைக் குத்தகைக்கு எடுத்தவர்கள் வெளித் தோற்றத்தில் ஆரோக்கியமாகக் காணப்படுவார்கள்.

    பதிலளிநீக்கு
  25. சுவையான உணவு ...

    எங்களுக்கு மிகவும் பிடித்ததும் ...

    ஆனால் நாங்கள் முறுக்கு குழாயில் பிழிந்து வேக வைப்போம் கடைசியாக வெல்லப் பாகு மற்றும் தேங்காய் துருவல் சேர்ப்போம் ..

    அடுத்த முறை தங்கள் குறிப்பு படி செய்து பார்க்கிறேன் ..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!