4.6.26

கொஞ்சம் மாற்றிச் சொன்னேன் சொல்லக்கூடாதோ?

பாயா, கோலா உருண்டை, என்று அசைவத்தில் கண்ணில் படும் பெயர்கள் எல்லாம் சைவ ஹோட்டல்களில் கண்ணில் பட ஆரம்பித்திருக்கின்றன என்பதை முன்னரே பார்த்தோம்.  குறிப்பாக VB World ல்.

​இரண்டு நாட்களுக்கு முன் அட்சயம் ஹோட்டலுக்கு சென்றோம்.  அங்கேயும் பாயாவும், குருமாவும், பட்டன் பரோட்டாவும் மெனுகார்டில் கண்ணில் பட்டன.  அதோடு புதுசாக 'மினி இட்லி வித் வெஜ் மீன் குழம்பு' என்று ஒன்று இருந்தது!

அதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தோம்.  எங்கள் டிரைவர் ஸ்ரீலங்கா கொத்து பரோட்டா ஆர்டர் செய்து ஆவலுடன் காத்திருந்தார்.

என் கண்ணுக்கு அவல் உப்புமா போலவும், என் மகன் கண்ணுக்கு முட்டைகோஸ் ரைஸ் போலவும் இருந்த ஒரு வஸ்துவை அவருக்குக் கொண்டு வந்து வைத்தார்கள்.

நான் மேலே சொன்ன வெஜ் மீன் குழம்பு இட்லி சொல்லி விட்டு விரல்களைக் கோர்த்துக் காத்திருந்தேன்.

வாழைக்காய் போட்டு குழம்பு வைத்திருப்பார்கள் என்றேன். என்றான் மகன்.  மீனை கடல் வாழைக்காய் என்பார்களே..

நான் மகனிடம் சொன்னேன் "வீட்டில் நான் வெங்காயம் பூண்டு காரக் குழம்பு செய்வேனே..  அதுபோல ஒரு குழம்பில் இட்லி போட்டுக் கொண்டு வருவர்களாயிருக்கும்.  அதில் எந்த வடிவத்தில் வாழைக்காய் இருக்குமோ?" என்றேன்.

"ஸார் மீன் குழம்பு சாப்பிட்டிருக்கார் போல" என்றார் டிரைவர்.  இவர் வேற டிரைவர். நம் வழக்கமானவர் இல்லை.

"இல்லை மோகன்..  நான் இந்தக் குழம்பு நல்லா செய்வேன்னு எங்க வீட்ல அடிக்கடி சொன்னதால எங்க ஆபீஸ்ல என்னை செய்து கொண்டு வரச் சொல்லி சுவைத்துப் பார்த்தார்கள்.  அப்போது அவர்கள் சொன்னது 'மீன் குழம்பு மாதிரி இருக்கு'.   நான் அப்போதுதான் மீன் குழம்பு அப்படிதான் இருக்கும் என்று தெரிந்து கொண்டேன்" என்றேன்.

ஒருவழியாய் கொண்டு வந்து வைத்தார்கள்.  புளிப்....ப்பான குழம்பில் சில மினி இட்லிகளை போட்டுக் கொண்டு வந்திருந்தார்கள்.  வாயில் வைக்க முடியாத அளவு புளிப்பு.  இவ்வளவு புளிப்பாக நான் குழம்பு செய்ய மாட்டேன்.  அதில் வாழைக்காய் இல்லை.  ஆனால் அவர்கள் போட்டிருந்தது வாழைப்பூ...   என்ன காம்பினேஷனோ..

சென்னையில் கீதம் ஹோட்டலுக்கு சங்கீதா ஹோட்டலுக்கு ஒரு போட்டி நடந்து வருகிறது.  யார் நிறைய கிளைகள் திறக்கிறார்கள் என்று போட்டி போல..  கிடைக்கும் சந்தில் எல்லாம் மாறி மாறி ஹோட்டல் திறக்கிறார்கள்.   கீதம் ஹோட்டல் நயினார் நாகேந்தினுடையது என்று சொன்னார்கள்.  அது எனக்குத் தெரியாது.  ஆனால் அதன் புதிய நிறம் அப்படிதான் இருக்கிறது!  ஒருவேளை நிறத்தை வைத்துதான் அப்படி கதை அடிக்கிறார்களோ என்னவோ..    கீதம் சற்று முன்னணியில் இருந்தது, சுவையிலும் ஆம்பியன்சிலும்.  
இப்போது சமீபத்தில் போரூரில் திறக்கப்பட்ட ஒரு சங்கீதா அழகான ஆம்பியன்சில் புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.  இதை அந்த மனேஜரிடமே கேட்டு அறிந்தேன்.  நித்ய அமிர்தம் ஹோட்டலில் கொடுத்த பென்னே தோசையைவிட சங்கீதாவில் தந்த பென்னே தோசை நன்றாக இருந்தது. ஒரு ஸ்டார்ட்டர், வறுத்த மீன் உருவில் ஒன்று கொடுத்தார்கள்.  சோயாவில் செய்ததாம்.  



நீண்ட நாட்களுக்குப் பிறகு சோளே பட்டுரா ஆர்டர் செய்து சாப்பிட்டேன்!

மகன் சாப்பிட்ட ஃபில்டர் காபி ஐஸ்க்ரீம்.

அட்சயம் போன அன்று மொபைலை வீட்டில் மறந்து விட்டு விட்டுப் போய்விட்டேன்.  எனவே நோ படம்!


==================================================================================================

கண்டா வரச்சொல்லுங்க...


ஏனோ வருவதில்லை
என் நண்பர்
இப்போதெல்லாம்
என் வீடுதேடி.
அனுதினமும் வருவார்
கதைகள் நூறு பேசுவார்
அளவளாவுவோம்
கவிதை சில எழுதத் தொடங்கி
அவரிடமும் அதைப் பகிரத்
தொடங்கிய சில நாட்களில்
காணாமல் போனார்.
என் ஒரே ரசிகர் அவர்
பார்த்தால் வரச் சொல்லுங்கள்.
போனை எடுக்க மாட்டேனென்கிறார் 
கவிதை இனி சொல்ல மாட்டேன்
என்பதையும் அவரிடம்
கட்டாயம் சொல்லுங்கள்
தெருவில் நடக்கும்போது
எதிரில் வந்தால் கூட
பளிச்சென்று பக்கத்து சந்தில்
மறைந்து விடுகிறார்.


==========================================================================================

தினமலர் வாரமலர் நான் சுவாசிக்கும் சிவாஜியிலிருந்து....:
பாசமலர் மற்றும் புதியபறவை படங்களில், ஏதோ, 'ட்ரினிட்டி காலேஜ் ஆப் மியூசி'க்கில் படித்து, டிப்ளமோ வாங்கியவர் போல, நேர்த்தியாக பியானோ வாசித்திருப்பார் சிவாஜி.
தில்லானா மோகனம்மாள் படத்தில், சிக்கல் சண்முகசுந்தரம் பாத்திரத்தில், சிவாஜி நாதஸ்வரம் வாசித்த அழகை மறக்க முடியாது. ஆனால், அதற்கு பின், எத்தகைய உழைப்பு இருந்துள்ளது என்பதை, அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
எங்கள் குழுவின் கதாசிரியரும், குடும்ப நண்பருமான, பி.வி.ஒய். ராமன் அன்று பிரபலமாக இருந்த, 'தி மெயில்' பத்திரிகைக்காக, சிவாஜியை பேட்டி காணச் சென்றிருந்தார்.
'ராமா, பேட்டி எல்லாம் அப்புறம் வச்சுக்கலாம். முதலில், ஒரு கச்சேரி கேட்போம், வா...' என்று, தன் வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கே, சிறுமேடையில், மதுரை என்.பி.என். சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள், நாதஸ்வரம் இசைக்க தயாராக இருந்தனர். அவர்களிடம், 'என் வீட்டில் வாசிக்கிறதாலே அடக்கம், ஒடுக்கமாக வாசிக்கணும்கிற அவசியம் இல்லை, நீங்க தான், இப்போ சிக்கல் சண்முக சுந்தரம் குழுவினர். அதனால், நாதஸ்வரத்தை உறையிலேயிருந்து எடுக்கிறதிலேயிருந்து, சிவாலியை ஊதிப் பார்க்கிறது, ஒருத் தருக்கு ஒருத்தர், 'ரியாக்ட்' செய்யறது எல்லாம், ஒரு பெரிய கச்சேரியில எப்படி செய்வீங்களோ, அதை, நான் பார்க்கணும்...' என்றார் சிவாஜி.
இரண்டு மணி நேரம், அவர்கள் வாசித்ததை, கண் கொட்டாமல் கவனித்திருக்கிறார் சிவாஜி. கச்சேரி முடிந்ததும், அவர்களை சாப்பிடச் சொல்லி, சன்மானம் கொடுத்து, அனுப்பி வைத்தார். பின், இயக்குனர் ஏ.பி.நாகராஜனிடம், 'நாதஸ்வர கச்சேரி காட்சிக்கு நான் தயார்...' என்று சொன்னாராம்.
இதை, நேரில் பார்த்த ராமன், இன்றும், இது குறித்து பேசும் போது, ஒரு வியப்பு கலந்த மரியாதையோடு தான் பேசுவார்.
இந்தப் படத்தில், 'நலம் தானா...' பாடல் காட்சியைப் பற்றி, சிவாஜி என்னிடம் பேசிய போது, 'நடிப்புக்கு கண் ரொம்ப முக்கியம்டா... இக்காட்சியில், பத்மினி, தன்னுடைய அபிநயம், அங்க அசைவுகள் மூலம் வெளிப்படுத்திவிட முடியும். ஆனால், என் நிலைமையை பார்... கையில், நாதஸ்வரம். அதை வாசிக்கும் போது, பாதி முகம் மறைந்து விடும். அதனால தான், ரியாக்ஷன் பூராவும், கண்களிலே கொடுத்தேன்...' என்றார்.
'நலம் தானா...' என்று பத்மினி கேட்கும் போது, இவர் கண்ணை சிமிட்டுவதும், 'கண்பட்டதால் உன் மேனியில்...' என்ற வரிகளுக்கு, சிவாஜியின் கண்கள் சிவந்து, நீர் கொட்டும் காட்சியை மறக்க முடியுமா?

2013 என்னுடைய பேஸ்புக்

======================================================================================

விசு எழுதி முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் 1980 ல் வெளியான படம் 'அவன் அவள் அது'  சிவசங்கரி எழுதிய ஒரு சிங்கம் முயலாகிறது கதையைத்தழுவி வாடகைத் தாய் பிரச்னையை கையாண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சிவகுமார், லட்சுமி, ஸ்ரீப்ரியா நடித்திருந்தனர்.  இந்தப் படத்திலிருந்து இன்று ஒரு இனிமையான பாடல்.  S P . பாலசுப்ரமணியம் - வாணி ஜெயராம் குரலில் கண்ணதாசன் பாடல்.  M S விஸ்வநாதன் இசை.

பாடலில் வரும் "ஏதோ உண்மை சொன்னேன் கோபம் வந்தததோ" என்று வாணிஜெயராம் பாட, "கொஞ்சம் மாற்றிச் சொன்னேன் சொல்லக்கூடாதோ?" என்று  பாடுவது அழகு.   அதாவது எல்லாம் பெண்ணாலே என்று முன்னோர் சொன்னார்கள்.  அந்த பெண்மை என்றும் மேன்மை அல்லவோ" என்று லட்சுமி பாடுவது போலவும்,  'பேதை என்றாலும் மங்கை மேதை என்றாலும் அந்த பெண்மை என்றும் உண்மை அல்லவோ?" என்று சிவகுமார் பதில் சொல்வது போலவும் வந்த பிறகு அந்த சமாதானம்!


=====================================================================================

கொஞ்சம் பழைய கலெக்ஷனிலிருந்து...


நடிகர் மோகன் வைத்யா, 'மார்க் ஆண்டனி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தனது கர்நாடக இசை மற்றும் வயலின் வாசிப்பிற்காக அறியப்பட்ட இவர், ஒரு பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமாகவும் திகழ்கிறார். பிக் பாஸ் தமிழ் சீசன் 3 இல் பங்கேற்றதன் மூலம் இவர் அனைவராலும் அறியப்பட்டார்.
சமீபத்தில் இண்டியாக்ளிட்ஸ்க்கு அளித்த நேர்காணலில், தனது சோகமான வாழ்க்கைக் கதையைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார். அவரது மனைவிக்கு காது கேட்காது மற்றும் பேச முடியாது. எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது, ரயில் வருவதை கேட்க முடியாமல் ரயில் மோதி இறந்து போனார். அப்போது அவர் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார். பிரேதப் பரிசோதனையின்போதுதான் இந்த சோகமான உண்மை தெரிய வந்தது. இந்தக் காரணத்தாலேயே அவருக்கு பெண் குழந்தைகள் மீது அதிகப் பாசம் உருவானது. இந்தக் சோகமான நிகழ்வு அவரது மனதில் ஒரு அழியாத வடுவை ஏற்படுத்தியது.
அவர் தனது மனைவி இறந்த பிறகு, அவளது நினைவில் தினமும் இரவில் தூங்காமல் கஷ்டப்படுவதாகக் கூறினார். இருப்பினும், அவர் தனது மனைவியுடனான வாழ்க்கையை அன்புடன் நினைவு கூர்ந்தார், மேலும் சண்டைகள் இருந்தாலும் அவர்கள் அவற்றைத் தீர்க்க ஒரு வழியைக் கண்டதாக கூறினார். அவர் தனது மனைவியை அலங்கரித்ததையும், அவளுக்காக நகைகளைத் தேர்ந்தெடுத்ததையும் நினைவுகூர்ந்தார்.
மோகன் வைத்யா தனது மனைவிக்கு சமையல் கற்றுக்கொடுத்தது பற்றியும், ஒரு முறை அவரது மனைவி தவறுதலாக தண்ணீர் போன்ற சட்னியை தயாரித்தபோது, அதை அவர்கள் தோசையாக மாற்றி ஒன்றாக சாப்பிட்டது பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
அவரது மகன், தாயைப் போலவே காது கேட்காத மற்றும் பேச முடியாதவர். தனது மகன், தனது தாயைப் போலவே ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்ததையும், பின்னர் காது கேட்காத மற்றும் பேச முடியாத ஒரு பெண்ணை மணந்ததையும் கூறினார்.
இந்த நேர்காணல், மோகன் வைத்தியாவின் வாழ்க்கையில் இருந்த வலிகளையும், இழப்புகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதே சமயம், தனது சோகமான வாழ்க்கையையும், மனைவியின் நினைவுகளையும் தாண்டி, அவர் ஒரு கலைஞராக தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேறுகிறார்.
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்

==============================================================================


மழலைப்பட்டாளம்.  அதே 1980 ல் அதே விசுவின் எழுத்தில் வந்த படம்.  கே பாலச்சந்தர் மேற்பார்வையில் லஷ்மி முதன்முதலாக இயக்கிய படம்.  
நான் முன்பு எங்கோ படித்த ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.

உன்னுடைய  குழந்தைகளும் 
என்னுடைய குழந்தைகளும் 
நம்முடைய குழந்தைகளுடன் 
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்!

1968 ல் ல் வெளியான Yours, Mine and Ours என்கிற ஆங்கிலப்படத்தைத் தழுவி தமிழி எழுதிக் கொடு என்று KB விசுவைக் கேட்க, விசு தைரியமாக தான் பார்த்துக் கொண்டிருந்த டிராவல் ஏஜென்ஸி வேலையை விட்டு விட்டு வந்து எழுதிக் கொடுத்ததுடன், அப்புறம் KB யுடன் சேர்ந்து பணிபுரிய ஆரம்பித்தாராம்.

இந்தப் படத்திலிருந்து அதே S P பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் பாடிய இனிமையான பாடல்..  "கௌரிமனோஹரியைக் கண்டேன்.."

அதே கண்ணதாசன் பாடலுக்கு அதே M S விஸ்வநாதன்.

"மலைமீது அடித்தாலும் காற்று..  அது கடல் மீது தவழ்ந்தாலும் காற்று" சரணம் எனக்குப் பிடித்த வரிகள்.



==========================================================================================

துப்பறியும் சாம்பு எப்படி இருப்பார் என்று தேவன் வர்ணனை!

"நாற்பதாவது வயதில் எவனொருவன் முட்டாளாக இருக்கிறானோ அவன் ஆயுள் முழுதும் முட்டாளாகவே இருப்பான்" என்று யாரோ-முட்டாள் தனமாக அல்ல-சொல்லி வைத்தார். சாம்புவுக்கு நாற்பது வயது சரியாக ஆகியிருந்தது. அவனை எல்லாரும் பார்த்த மாத்திரத்தில் முட்டாள் என்று சொன்னார்கள். வழக்கமாக அவன் ஆபீஸ் மானேஜர் மகர பூஷண ராவ் சாம்புவைக் கூப்பிடுவதென்றால், "அந்த முட்டாளை வரச் சொல்" என்றுதான் ஆபீஸ் பையனிடம் சொல்லுவார். ஆபீஸ் பையன் மறு பேச்சுப் பேசாமல் சாம்புவிடம் வந்து நிற்பான்.

விளாம்பழம் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? கொஞ்சம் பெரிய விளாம்பழத்தை நினைத்துக் கொள்ளுங்கள்; அது தான் சாம்புவின் தலை. கன்றுக் குட்டிகள் அழகாகக் காதுகளை முன்புறம் வளைத்துக் கொண்டு பார்க்கும் அல்லவா? அந்த மாதிரிக் காதுகள் - குடலைபோல் - ஜாடிக் காதுகள் போல், துருத்திக் கொண்டிருக்கும். கண்கள் ஒரு மாதிரியாக அரைத் தூக்கத்தைத் தேக்கிக் கொண்டிருக்கும். இந்த லக்ஷணங்களுடன் ஒரு பித்தானில்லாத சட்டை, ஒரு பழைய கோட்டு, கிழிசல் குடை இவைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இதோ சாம்பு பிரத்தியக்ஷமாகிவிட்டான்.

ஸ்ரீ திரிபுராந்தகா பாங்கியில் கணக்கு வைத்துக் கொண்டிருந்தவர்கள் சாம்புவைக் கவனிக்காமல் இருக்க முடியாது. பாங்கியின் 'கௌண்ட'ரில் அவர்கள் காத்திருக்கும்போது, உள்ளே ஒரு மூலையில் மேஜையில் பரபரப்பாக எழுதுவதும், சற்று நின்று யோசிப்பதும், மறுபடியும் எழுதுவதுமாகச் சாம்பு பதினேழு வருஷ காலம் வேலை பார்த்து விட்டான். இந்தப் பதினேழு வருஷத்தில் அவன் பாங்கியில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டு விட்டன. பாங்கி முதலாளி லக்ஷாதிகாரியாகிவிட்டார். எத்தனையோ குமாஸ்தாக்கள் வந்து எத்தனையோ குமாஸ்தாக்கள் போய் போய் விட்டார்கள். ​ஆனால் சாம்பு மட்டும்...

======================================================================================



காடுகளுக்கு சென்று திரும்பி வரும் போது நினைவுகள் தவிர எதையும் எடுத்து வரக்கூடாது.  காட்டுயிர்களை ரசிக்கிறோம் என்பதைத் தாண்டி அவற்றை காக்க வேண்டிய பொறுப்பு மனிதனுக்கு அதிகம் இருக்கிறது,'' என்கிறார் காட்டுயிர் புகைப்படக்கலைஞர் சி.ஏ.ஏ.கிருஷ்ணமூர்த்தி.  மதுரை திருமங்கலம் ராயபாளையம் கிராமத்தை சேர்ந்த இந்த பல்லுயிர் புகைப்படக் கலைஞர், படித்தது முதுகலைப் பொருளாதாரம்; ஆனால் காட்டில் கண்முன் பார்க்கும் காட்சிகளை புகைப்படங்களாக மாற்றுவதில் கை தேர்ந்தவர்; பனை விதை நடுதல், காடுகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துபவர், 

பசுமை ஆர்வலர் என இவருக்கு பல முகங்கள்.  காட்டுயிர்களை புகைப்படம் எடுக்கும் அனுபவங்கள் குறித்து இவரிடம் கேட்ட போது...  கல்யாண வீட்டில் புகைப்படம் எடுப்பது எளிது; காடுகளில் படம் எடுப்பது படுகஷ்டம். காடுகளை கணிக்கவே முடியாது. நீங்கள் புகைப்படம் எடுக்கும் போது பின்பக்கமாய் பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருக்கும். நாம் தேடும் விலங்கை ஒருமுறை மிஸ் செய்து விட்டால், அடுத்த வாய்ப்பு கிடைக்க ஆண்டுக்கணக்கில் கூட ஆகும்.  

பயணத்திற்கு முன் எத்தனை நாள் பயணம், உணவு, மழைக்கான வாய்ப்பு, அட்டைப்பூச்சிகள் இருக்குமா என ஆராய்ந்தே திட்டம் வகுக்க வேண்டும். காடுகளில் பயணம் செல்லும்போது தங்குவதற்கு அனுமதி, அங்குள்ள பறவை, விலங்கினங்கள் பற்றிய தகவல்கள் என முன்கூட்டியே தயாராக செல்ல வேண்டும்.  மதுரையில் புள்ளி மான்கள் புள்ளிமான்களை தேடி திருமங்கலம் கரிசல் காட்டிற்கு ஒருநாள் சென்றபோது, தனியாக புள்ளிமானை காண நேரிட்டது. உடனே கேமராவில் படம் பிடித்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, எடுத்த 3 படமும் தெளிவில்லாமல் இருந்தது; அந்த வருத்தத்தில் அன்று சாப்பிடவே இல்லை. ஆனாலும் புள்ளிமான்களைத் தேடும் முயற்சியை தொடர்ந்தேன்.  கண்மாய்க்கரையில் மூச்சு கூட விடாமல் பதுங்கி புள்ளிமான் கூட்டத்தை படம் பிடித்தேன். 

அதை மதுரை இயற்கை பேரவையில் பகிர்ந்த போது, 'மதுரையில் புள்ளிமான்கள்' என நாளிதழ்களில் செய்தி வெளியாகின.  
சலீம் அலியின் புத்தகத்தில் இந்தியா முழுக்க வெள்ளை வல்லுாறு உள்ளது என எழுதி இருக்கிறார்; ஆனாலும் தென் இந்தியாவில் 40 ஆண்டுகளாக வெள்ளை வல்லுாறு பதிவில் இல்லை. எங்கள் தன்னார்வலர்கள் குழுதான் முதன்முதலில் அரிட்டாபட்டி மலையில் வெள்ளை வல்லுாறு உள்ளதை வெளி உலகிற்கு படம்பிடித்து காட்டியது. பின்னர் பல்வேறு ஆய்வுக்குழுக்கள் அரிட்டாபட்டியில் நுாற்றுக்கணக்கான அரிய பறவை இனங்கள் உள்ளதை கண்டறிந்தன.  ஸ்ரீவில்லிபுத்துார் காடுகளில் யானை சாணத்தின் அருகிலேயே உடைந்த பீர் பாட்டில் கிடந்தது; அதன் மீது மிதித்திருந்தால் யானைக்கு என்ன ஆகியிருக்கும் என மக்கள் உணருவதில்லை. ஸ்ரீவில்லிபுத்துாரில் பறவைகள் கணக்கெடுப்பிற்கு செல்லும் போது ௫0க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் ஆற்று ஓரங்களில் இறந்து கிடந்தன; எல்லைப்பகுதிகளில் நாட்டு மாடுகளில் இருந்து ஆந்த்ராக்ஸ் பரவியது தான் காரணம் என அறியும்போது அதிர்ச்சியாக இருந்தது.  புலிக்கறி சாப்பிட்டால்... புலிக்கறி சாப்பிட்டால் ஆண்மை விருத்தி அடையும் என்ற தவறான கருத்து சீனாவில் நிலவுகிறது. 

உலகில் வேட்டையாடப்படும் அரிய வகை உயிரினங்களும் சீனாவிற்கு தான் சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றன. சீன மருத்துவத்தை தடை செய்தாலே உலகின் 50 சதவீத உயிர்கள் காப்பாற்றப்படும்.  மசினக்குடி காட்டில் வன விலங்கு கணக்கெடுப்பிற்காக சென்றபோது, ஐநுாற்றுக்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் எங்களை நோக்கி வந்தன; 'செந்நாய் கூட்டம் தான் துரத்தி வந்திருக்கும்' என அந்த பகுதியை சேர்ந்தவர் கூறினார். திரும்பி வரும்போது நாங்கள் வந்த பாதையில் புலித்தடம் உள்ளதை கண்டு அதிர்ந்தோம். புலி தான் துரத்தியிருக்கிறது. பின்னர் புகைப்படம் எடுத்து ஜி.பி.எஸ்., உதவியுடன் புலியின் இடத்தை குறித்து வைத்துக் கொண்டோம்.  சேலம் பகுதியில் காடுகள், 10 ஏக்கர் காடு பின்னர் எஸ்டேட்டுகள் என மாறி மாறி வரும்; பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் அங்கு விலங்குகள் கணக்கெடுப்பிற்கு சென்றோம். அங்கு சிறிய வகை பாம்பு இறந்து கிடந்தது. அதன் இடத்தை ஜி.பி.எஸ்., வைத்து குறித்துக் கொண்டு வழக்கம் போல புகைப்படம் எடுத்து வந்து விட்டோம். பின்னர் கிடைத்த தகவல் குழுவை திக்குமுக்காட வைத்துவிட்டது; உலகில் சேர்வராயன் மலையில் மட்டுமே வாழும் கவசவால் பாம்பு, கல்வராயன் மலையிலும் இருந்துள்ளது. இதை முதலில் வெளியுலகிற்கு சொன்ன குழுவில் நானும் ஒருவன் என்று நினைக்கும்போது பிரமிப்பாக உள்ளது என்றார்.

இவருடன் பேச 75986 74611

==========================================================================================

பொக்கிஷம் :  ஓவியர்கள் 

தந்தையும் மகனும்  5 ; 3










90 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. இந்தத் தடவை ஒரு விசேஷத்துக்கு நாட்டுக்கோட்டை செட்டியார் வீட்டிற்குச் சென்றிருந்தோம். நாங்கள் இருபது பேர், பிரபந்த குழு. அதனால் எங்களுக்கு ஜெயின் உணவு (வெங் பூண்டு இல்லாமல்). மதிய உணவில் சைவ மீன் என்று ஒன்று கொண்டுவந்தார்கள். பெயரில் மீன் இருந்ததால் நாங்கள் எல்லோரும் மறுத்துவிட்டோம்.

    காலம் மாறி வருகிறது. மக்களுக்கு நான் வெஜ் சுவைக்கணும் என்ற ஆசையை இப்படி நிறைவேற்றிக்கொள்கிறார்கள் போலிருக்கு. அல்லது விரத நாட்களில் அல்லது நான் வெஜ் சாப்பிட்டுப் பழகியவர்கள் விரத்த்தின்கோது இந்தமாதிரி நான் வெஜ் முறையில் சமைக்கப்பட்ட சைவ உணவுகள் சாப்பிடுகிறார்களாக இருக்கும். டிமான்ட் இருப்பதால் சப்ளை போலிருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழைக்காயை மீன் என்று சொல்வோர் உண்டு.  அதனால் வாழைக்காய் சாப்பிடுவதை நிறுத்தி விட முடியுமா!  சைவ ஹோட்டலில் கிடைப்பதை சுவைத்துப் பார்க்கும்போது நான் வெஜ் சாப்பிட ஆசை என்று அர்த்தமாகுமா!!  வினோதமான வாதங்கள்!

      நீக்கு
    2. பூண்டு வெங்காயத்தை விட 'அது' உத்தமமாகி விட்டதா, என்ன?
      பிரபந்தம் சொல்ல வந்த கோஷ்டி என்று மரியாதை வேண்டாம்?

      நீக்கு
    3. அந்த கேடர்ர்களுக்கு அது தெரிந்திருக்கவில்லை. நாங்கள் சொன்ன உடனேயே அதை எடுத்துக்கொண்டு போய்விட்டனர். இப்போதான் திருமணங்களில் இத்தகைய ஐட்டங்கள் மெனுவில் வர ஆரம்பித்துவிட்டதே. எங்களுக்குத்தான் அந்தப் பெயர் அலர்ஜி இப்போதும் வெங்காயம் உபயோகிப்பதே (வீட்டில்) கொஞ்சம் கௌரவக் குறைவுதான்..

      நீக்கு
    4. வாழைக்காயை மீன் என்று ஶ்ரீராம் தவிர வேறு யார் சொல்லியிருக்கா? வங்கத்தில் (மற்றும் கோவா), பிராமணர்கள் மீன் உண்கின்றனர். அதனைக் கடல் வாழைக்காய் என்று சொல்கின்றனர் எனப் படித்திருக்கிறேன்.

      நீக்கு
    5. நெல்லையை முழு மனதுடன் கன்னாபின்னாவென ஆதரிக்கிறேன். நான் நினைச்சதை எனக்கு முன்னாடியே சொல்லிட்டார். ஒரு வேளை எங்களுக்கெல்லாம் வயசு ஆயிடுத்தோ? :) ஹிஹிஹி உலகம் சுற்றும் வாலிபர் நெல்லையையும் சேர்த்துத் தான் சொல்றேன். :P

      நீக்கு
  3. கீதம் அழகாக இருந்தாலும் சங்கீதா சுவை மற்றும் அழகான ஆம்பியன்ஸ். சமீபத்தில் அங்கு தயிர்வடை சாப்பிட்டேன். மனைவி மினி டிபன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதம் ஒரு ரகம்.. சங்கீதா ஒரு ரகம்...!

      நீக்கு
    2. சென்னையில் சங்கீதா தொடர் ஓட்டல்கள் பிரபலம். என் ஓர்ப்படி அடையாறு சங்கீதாவில் உணவு நல்லா இருக்கும்னு சொன்னதாலே எங்க பெண் வந்திருந்தப்போ ஓர்ப்படியையும் சேர்த்து அங்கே அழைத்துப் போனோம். உணவு சுமார் தான். முன்னால் எல்லாம் பட்ஸ் ரெஸ்டாரன்ட் தொடர் ஓட்டல்கள் நிறையப் பார்க்கலாம். அதில் பெரம்பூர் பட்ஸும், தி.நகர் உஸ்மான் ரோடு பட்ஸும், (சித்தப்பா வீடு இருக்கும் தெருவுக்கு நேர் எதிரே அந்த ஓட்டல் இருந்தது.) நன்றாக இருக்கும். பின்னர் பட்ஸ் ஓட்டல்களே இல்லாமல் போய்த் தாம்பரத்தில் மட்டும் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு எனப் பேருந்து நிலையத்தில் இருந்தது. பரவாக்கரை, கருவிலி போய்ட்டுப் பேருந்தில் திரும்பினால் தாம்பரத்தில் இறங்கி அங்கே சாப்பிட்டுவிட்டு அம்பத்தூர் பேருந்து பிடிச்சு வீட்டுக்குப் போவோம். பின்னர் வந்த நாட்கள் வாடகைக்கார் என மாறியதால் அந்த ஓட்டல் இருக்கா என்னன்னே தெரியாது. எழும்பூர் ரயில் நிலையம் முக்கிய வாசல் எதிரே இருந்தது முதலில் ஃப்ரான்சைஸாக இருந்தவரை நன்றாகச் செயல்பட்டது. பின்னர் மோசம். இப்போப் பல வருஷங்கள் ஆகிவிட்டன சென்னை/அம்பத்தூர் போயோ ஓட்டல்களில் சாப்பிட்டோ.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. மனிதர்கள் எதற்காக அசைவத்தின் பெயர் சொல்லி, சைவத்தை சாப்பிட்டு திருப்தியடைகிறார்கள்.. மனதின் ஏக்கமா? முன்பு கத்திரிக்காய் கறியை அசைவமாக நினைத்துப் பார்த்தோம். இந்த சேனைக்கிழங்கை எப்படிச் செய்தாலும், சில சமயங்களில் அசைவத்தை நினைவூட்டும் தன்மை கொண்டது. இப்படி பல காய்கள் அதை நினைவூட்டினாலும், நாம் அதை விரும்பி உணபதை போல உணவின் பெயர்களையும் அப்படியே வைக்க வேண்டுமா என நினைக்க வைக்கிறது

    நீலகிரி எக்ஸ்பிரஸ் என்ற பழைய படத்தில் சோ அவர்களின் "பாயா, பாயா" என்ற நகைச்சுவை காட்சி நினைவுக்கு வந்தது.

    உணவகத்தில் நீங்கள் உண்ட படங்கள் நன்றாக உள்ளது. ஐஸ்க்ரீம் காப்பி பார்க்கவே நன்றாக உள்ளது. படத்தைப் பார்த்ததும், காப்பியின் வாசனை மனதுக்குள் வருகிறது.

    ஜில்லென்ற காப்பியின் விலையும், சாதாரண காப்பியை விட விலை அதிகமாக உள்ளது. முன்பு எங்கள் வீட்டில் வெளியில் உணவகத்திற்கு சென்றால்,எங்கள் குழந்தைகள் (மகன், மருமகள்) வாங்கி அருந்துவார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மனதின் ஏக்கமா? //
      இது வியாபாரம் கமலா அக்கா.  சைவம் சாப்பிடுபவர்கள் சைவ ஹோட்டலுக்கு மட்டும்தான் செல்வார்கள்.  அசைவம் சாப்பிடுபவர்கள் இரண்டு ஹோட்டலுக்கும் செல்வார்கள்.  அப்படி செல்லும் அசைவர்களை இந்த ஹோட்டலுக்கு அதிகப்படி வரவழைக்க ஹோட்டல்காரர்கள் செய்யும் வியாபார தந்திரம்.  இது நேயர் விருப்பத்தில் நடப்பதல்ல!

      நீக்கு
    2. எனக்கு ஐஸ் காஃபி பிடிக்காது.  அதன் பக்கம் கூட செல்ல மாட்டேன்.  அதேபோல இந்த ஐஸ்க்ரீமும்!  எனக்கு காஃபி சூடாகத்தான் குடிக்க வேண்டும்..

      நீக்கு
  5. ஒரு வேலையைச் செய்தால் அதில் டெடிகேஷன் சிவாஜியின் தனிச் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  6. சென்னா பட்டூரா எனக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் பிகானீர்வாலாவில் சாப்பிட்டது பிடிக்கலை. பட்டூராவில் உருளை சிப்ஸ் போல மாவில் நிறைய உருளை சேர்த்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோளே பூரி, சென்னா படூரா, சோளே பட்டூரா   எத்தனை பெயர் இதற்கு!  இதற்கு சைட் டிஷ் சன்னா மசாலா என்று அமைத்த புண்ணியவான் யார்?

      நீக்கு
  7. டயட் செய்து இளைத்தவரைப் போல சிக்கென்று இருக்கிறது இன்றைய பதிவு.

    பதிலளிநீக்கு
  8. சைவ மீன் பற்றி முன்பு ஒரு முறை வெங்கட் எழுதி, அதை சாப்பிடப் பிடிக்கவில்லை என்று எழுதியிருந்தார். நானும் இப்படி அசைவ உணவின் பெயர்களில் சைவ உணவுகள் வருவது பற்றி எழுதியிருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓரளவுக்கு ஒரு ஹோட்டலைப் பார்த்து எல்லா ஹோட்டல்களுமே இதை காப்பியடிக்க ஆரம்பித்து விட்டன.  எனக்குத் தெரிந்து VB World தான் முதலில் இதைத் தொடங்கியது.

      நீக்கு
    2. ஹோட்டல்கள் மட்டும் இல்லை, கல்யாண விருந்துகளில் கூட

      நீக்கு
    3. அப்படியா.. இதுவரை என் கண்ணில் பட்டதில்லை!

      நீக்கு
    4. ஸ்ரீராமே :இதடு முறை ஏற்கனவே குறிப்பிட்டு விட்டார்.
      இன்னும் நான்கு முறை வரும் வி.கிழமைகளில் எழுதுவார் போலிருக்கு.
      .

      நீக்கு
    5. VB World பற்றிச் சொல்லும்போது குறிப்பிட்டிருக்கிறேன்.  இப்போது சங்கீதா.  இன்னும் கண்ணில்பட்டு நானும் அதை சுவைத்தாள் இன்னமும் ஒருமுறையும் சொல்ல வேண்டி வரலாம்!!!

      நீக்கு
    6. நல்லவேளையாக இப்போதெல்லாம் கல்யாண விருந்துகளோ, இம்மாதிரி ஓட்டல்களிலோ சாப்பிடுவதில்லை. சுத்தமாக வெளியே போவதே நின்னு போயாச்சு! :) ஸ்ரீராம் போட்டிருக்கும் ஓட்டல் உணவுகளின் படங்கள் நன்றாக இருக்கின்றன. எனக்குத் தெரிந்து பட்டுரா ஒன்றே ஒன்று தான் ரொம்பப் பெரிதாக ஓட்டல்களில் கொடுத்துப் பார்த்திருக்கேன். இந்த ஓட்டலில் சின்னதாக இருப்பதால் போல இரண்டு கொடுத்திருக்காங்க. ஐஸ்க்ரீம் காஃபி கொஞ்சமானும் சுவைத்துப் பார்த்தால் தான் தெரியும்.

      நீக்கு
  9. கவிதையை ரசித்தேன். உங்கள் நண்பரிடம் நீங்கள் கடன் கேட்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  ஏற்கனவே சந்தில் மறைகிறார்..

      நீக்கு
    2. கவிதை சொல்றேன்னு ஆரம்பிச்சுடுவீங்களோனு ஒரு பயம் கலந்த மரியாதை தான். :)))

      நீக்கு
  10. பதில்கள்
    1. ஸ்ரீராமின் கவிதை நன்றாக இருக்கிறது. ஆனால் நண்பரை ஏன் இப்படிப்பயமுறுத்திட்டீங்க? பாவம் அவர். :)) ஜிவாஜி பற்றிய இந்தத்தில்லானா மோகனாம்பாள் பற்றிய தகவல்கள் ஏற்கெனவே படிச்சிருக்கேன். சேதுராமன்/பொன்னுச்சாமி சகோதரர்களும் சொல்லி இருக்காங்க. எங்க மேலாவணி மூலவீதி வீட்டில் இருந்து வலப்பக்கம் போனால் வரும் வடக்குக் கிருஷ்ணன் கோயில் தெருவில் (சந்து தான்) கொஞ்ச தூரம் போய் இடப்பக்கம் திரும்பினால் வரும் சங்கீத விநாயகர் கோயில் தெரு அதைச் சார்ந்த வித்வான் பொன்னுசாமிப் பிள்ளைத் தெருவில் தான் அவங்க வீடு. காலம்பர அந்தப் பக்கம் போனால் இரண்டு பேரும் பிள்ளையார் கோயிலில் இசைப்பயிற்சி பண்ணிக் கொண்டும் சிறுவர்களுக்கு நாதஸ்வரம் வாசிக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருப்பாங்க. நான் அந்த வழியாத் தான் எங்க ஸ்கூல் போகப் பஸ் ஸ்டான்டுக்குப் போவேன். நேரே அந்தத் தெருவில் போனால் சிம்மக்கல் வரும். அங்கே தான் பஸ் ஏறுவேன். சாயந்திரம் நடை. அதில் ஒரு ரகசியம் உண்டு.

      நீக்கு
  11. சிவகுமாரோடு அதிகப் படங்களில் ஜோடியாக நடித்தது லட்சுமிதானாம். நேற்று ஜெய்சங்கரின் நிறைய படங்களில் எல்.விஜயலட்சுமி அவருக்கு ஜோடியாக நடித்ததாக ஜீ.வீ. சார் எழுதியிருந்தார். உண்மையில் ஜெய்சங்கரோடு அதிகப் படங்களில் நடித்தது யார் தெரியுமா? சொன்னால் ஆச்சர்யப்படலாம்.. முன்னாள் முதலமைச்சர்! நான் லட்சுமி என்று நினைத்தேன். அவருக்கு இரண்டாம் இடம் கூட கிடையாது. அந்த இடத்தை ஸ்ரீப்ரியா பிடித்து விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்
      என் மஹராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

      நீக்கு
    2. இதுமாதிரி கணக்கெடுப்புகள் எப்போதுமே சற்று வியப்பைக் கொடுக்கும்.

      நீக்கு
    3. மு.மு.வின் நடிப்பு பற்றிய இந்தச் செய்தி ஆச்சரியத்தைக் கொடுக்கலை. ஆனால் அவர் நினைச்சது மட்டும் நடக்கலை! பாவம்.

      அவன், அவள், அது படம் விசுவா எடுத்தார்? இந்தக் கதை ராணி முத்து வெளியீடாக சிவசங்கரி எழுதி வெளிவந்து படிச்சிருக்கேன். நினைவில் இருக்கு. கதையில் அந்த கர்ப்பத்தைச் சுமக்கும் பெண்ணாக வருபவருடன் கதாநாயகர் சேர்ந்துவிடுவார் என்று நினைவு. ஆனால் திரைப்படத்தில் பிறந்த குழந்தையைக் கொடுத்துட்டு ஸ்ரீப்ரியா தியாகி ஆவாரோனு நினைக்கிறேன். மறந்து போச்சு. ஆனால் எண்பதுகளில் இந்தப் படம் வந்தது. அம்பத்தூரில் அப்போ நாங்க ஸ்டெட்ஃபோர்ட் மருத்துவமனைக்குப் பின்னால் இருந்தோம். சென்னை/திருவள்ளூர் ரோடில் அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகே இருந்த டூரிங் தியேட்டரில் இந்தப் படம் மாலைக்காட்சியாகப் போட்டார்கள். ஆனால் தினமும் ஓடியதுனு நினைக்கிறேன். நாங்க இருந்த ராம்நகரில் இருந்து நடக்கும் தூரம் தான். எங்க வீட்டுக்கு அப்போ லீவுக்கு வந்திருந்த என் பெரிய நாத்தனார் வீட்டில் அனைவரையும் அழைத்துப் போனார். நான், ரங்க்ஸ், மாமனார், மாமியார் மட்டுமே வீட்டில் இருந்தோம். படம் போட்டு ஒரு அரைமணியாவது ஆகி இருக்கும். என் மைத்துனன் வந்து விடாப்பிடியாக சமைச்சுட்டு இருந்த என்னைப் படத்துக்கு அழைத்துப் போனார். அதுக்குள்ளாக லக்ஷ்மியும், சிவகுமாரும் வாடகைத் தாயைப்பார்த்துப் பேசி எல்லாம் ஆகி இருந்தது. மற்றவை எழுதினால் ரொம்பப் பெரிசா ஆயிடும். பின்னூட்டம் மாதிரி ஏற்கெனவே இருப்பதில்லை. இப்போ எழுதினால் பதிவாயிடும்.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இன்றைய கவிதை நன்றாக உள்ளது "கண்டால் கண்டிப்பாக வரச்சொல்கிறோம்" உங்கள் கவிதையை இங்கு கண்ட பின்னும் வராமல் போய் விடுவாரா என்ன.? நண்பரைத் தேடும் உள்ளத்தை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    நடிகர் திலகத்தின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. "நலந்தானா" பாடலை மறக்க முடியுமா.? இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு வருவதில்லை.

    திரு. மணியம் அவர்களின் ஓவியங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அவர் மகன் மணியம் செல்வன் அவர்கள் வரைந்த ஓவியங்களையும் ரசித்தேன். இருவருமே நல்ல திறமை வாய்ந்தவர்கள். எல்லாம் இறைவனின் ஆசிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாவின் குரல் போல மகனுக்கு இருக்கும். அப்பாவின் கையெழுத்து கூட மகனுக்கு இருக்கும். அதேபோல ஏன் ஓவியத்தில் ஒரே மாதிரி இல்லை?!

      நீக்கு
    2. சில ஆழ்மனதின் பாதிப்பிலிருந்து வரும். மணியம் ஓவியங்கள் வரையும் முன்னர் சில கோயில்கள், சரித்திரப் பிரசித்தி பெற்ற இடங்கள்னு போய்ப் பார்ப்பாராம். அப்படி அவர் பார்த்த அஜந்த ஓவியங்களின் ஜாடையை அவருடைய கதாநாயக, கதாநாயகிகளிடம் பார்க்கலாம். மணியம் செல்வனுக்கு வேறே மாதிரி அனுபவமாக் இருந்திருக்கலாம்.

      நீக்கு
    3. சமையலில் கூட அம்மா சமையல் மாதிரிப் பண்ணுவதில்லைனு கணவன்மார்கள் மனைவிகளிடம் சொல்லுவாங்க. அது எப்படி அதே மாதிரிப்பண்ண முடியும்? ஒரு ரசம் வைச்சால் கூட அவங்க பண்ணுவது ஒரு ருசியிலும் மனைவி பண்ணுவது ஒரு ருசியிலும் தான் இருக்கும். ஒரே மாதிரிப் பண்ண முடியுமா? அப்படியே பண்ணினாலும் அது காப்பி அடிப்பதைப் போல் இல்லையோ? நானெல்லாம் முடியாதுனு சொல்லிடுவேன். :)

      நீக்கு
  13. தில்லானா மோகனாம்பாளுக்காக எம்.பி.எம் சகோதர்களை நாதஸ்வரம் வாசிக்கச் சொல்லி கேட்ட விவரங்கள் ஏற்கனவே படித்திருக்கிறோம். பாலையாவும் தவில் வாசிக்க பயிற்ச்சி செய்தாராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலையா அட்டகாசம்! அந்த முக பாவங்களும், தவிலடிகளும், மார் குலுங்கலும்....

      நீக்கு
    2. அந்தக் காலத்து நடிகர்கள் அந்தக்காலத்து நடிகர்கள்தான்!

      நீக்கு
  14. ஆனால் சிவாஜி பியானோ வாசிப்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. புதிய பறவை விஷயம் தெரியாது, எங்க மாமாவில் அந்த கட்டைகளை போட்டு அழுத்து அழுத்தென்று அழுத்துவார். மிருதங்க சக்ரவர்த்திக்கு யாரிடமாவது பயிற்ச்சி எடுத்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மி.ச. கடைசியில் மிருதங்கம் வாசிக்கும்போதே வாய் வழியாக ரத்தம் க்க்குவதை யாரிடம் பயிற்சி எடுத்திருப்பார்?

      நீக்கு
    2. மெஜாரின் இயக்கம்.  பாவம் சிவாஜி.  மேஜர் சொல்லக்கேட்டு இப்படி நடித்தபோது பலபேர் கிண்டலுக்கு ஆளாவோம் என்று தெரிந்திருக்க நியாயமில்லை!

      நீக்கு
    3. இஃகி,இஃகி,இஃகி, மிருதங்கச்சக்கரவர்த்தியில் அந்தக் காட்சியின் போது சிரிப்புத் தாங்காது. இப்போ நினைச்சால் கூட! எம்.பி.என். சகோதரர்கள் அதுக்கப்புறமா எந்தக் கச்சேரி என்றாலும் நலம் தானா பாட்டு இல்லாமல் கச்சேரி செய்தது இல்லை. :))

      நீக்கு
  15. மணியன் செல்வன் வரைந்த ஓவியங்கள் அவர் ஆரம்ப காலத்தில் வரைந்தவையோ? இந்துமதி எழுதிய மணல் வீடுகளுக்கு அவர் வரைந்த ஓவியங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னர் எளிமையான கோட்டோவியங்களுக்கு மாறினார்.

      நீக்கு
  16. /வாழைக்காயை மீன் என்று சொல்வோர் உண்டு. அதனால் வாழைக்காய் சாப்பிடுவதை நிறுத்தி விட முடியுமா! /

    அதானே..! அமாவாசைதோறும், இந்த வாழைக்காயைதானே சிலாக்கியமான உணவென சமைத்து உணர்கிறோம்.

    பதிலளிநீக்கு
  17. துப்பறியும் சாம்புவின் வர்ணனையில் அவருக்கே உரித்தான அந்த மூக்கை வர்ணிக்க மறந்து விட்டாரா? அது ஓவியரின் கற்பனையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது வேறு பகுதியில் இருந்தது.  அதை பல நாட்கள் முன்னரே பகிர்ந்திருந்தேன்.  கோபுலுவின் ஓவியத்தில் சாம்புவும் சுதர்சனமும் கொஞ்சம் குழப்புவார்கள்!

      நீக்கு
  18. காட்டுயிர் புகைப்பட கலைஞர் கிருஷ்ணமூர்த்தியின் அனுபவங்கள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கின்றன. மிகவும் சவாலான துறை அது.

    பதிலளிநீக்கு
  19. சாதாரணமாக வாழைப்பூவில் கள்ளனை எடுத்துவிட்டு அதை கடலை மாவில் தோய்த்து பஜ்ஜியாக பொரித்து முருங்கை புளிக்குழம்பு போல் சைவ அயிரை மீன் குழம்பு செய்வர். அயிரை மீன் சின்னதாக இருக்கும், கண்மாயில் இருக்கும். வீட்டில் செய்த்து பாருங்கள். யூடியூபில் செடிமுறை உண்டு.
    நல்ல கவிதை எது?
    கேட்பவர்
    இதை எழுதியது நீங்களா
    என்று கேட்கும்போது,

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி கேட்டுவிட்டு பேப்பரை தூக்கி ஓரமாக போட்டு விட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றோரும் உண்டு!

      நீக்கு
  20. ​இந்த ஊர் வாழைக்காய் பேயன் காய் என்று சொல்லப்படும் சிறிய வகை. அதை ஓவல் ஷேப்பில் துண்டுகளாக்கி தீயல் செய்வார்கள்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பார்த்ததில்லை. எனவே சாப்பிட்டதில்லை!!

      நீக்கு
  21. இட்லி சைவ மீன் குழம்பு என்றதும் ஒரு வேளை கத்தரிக்காய் போய், மீன் குழம்பிற்கு அரைத்துவிட்டுச் செய்வது போன்று செஞ்சுருப்பாங்களோ என்று நினைத்தேன். கடைசில பார்த்தா வாழைப்பூ!

    ட்ரைவர் மோகனிடம் கொடுத்து கொஞ்சம் டேஸ்ட் பார்க்கச் சொல்லிருந்தால் அது அப்படியான ஒன்றான்னு சொல்லிருப்பாரோ என்னமோ!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கத்தரிக்காயை கூட மீன் என்று சொல்வோர் உண்டு.

      நீக்கு
  22. கீதாம் ஹோட்டல் நயினார் நாகேந்தினுடையது //

    Is it?!!!!!!!! அவர் பின் புலம் செம பணக்காரர் என்று தெரியவந்தது. கிராமத்து பணக்காரராமே. அவர் வீட்டுக்குப் போனா செம ஹெவி, அதை வெட்டி இதை வெட்டி அசைவ விருந்து 40 50 பேருக்குக் கூட வைப்பாங்களாமே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு எங்கள் டிரைவர்தான் சொன்னார். அவர் டிரைவராக போன ஒரு கஸ்டமர் பெரிய இடமாம்.  அவர் சொன்னாராம்.

      நீக்கு
  23. கீதம் கலர் அப்படியா இருக்கு? வேளச்சேரி கிளையா? ஃபோட்டோ எடுத்திருப்பீங்களே. அந்த ஃபோட்டோ காணலை?

    சரி விடுங்க....அது நயினாரோடது இல்லையாம். கூகுள் சொல்லிடுச்சு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பினாமியாஇருக்கும்.  கீதம் கலர் எல்லாம் ஒரே கலர்தான்.

      நீக்கு
  24. அட! அந்த சோயா வறுவல் பார்க்கவே அழகா இருக்கே

    ஆனால் Chole பட்டூரா ம்ஹூம். பட்டூரா புஸ் நு பந்து மாதிரி இருக்க வேண்டாமா...கலர் ஓகே... ஆனால் Chole இது அதற்கானது இல்லை. நான் நம்ம எபி ல இக்குறிப்பு போட்டிருக்கேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  25. ஃபில்டர் காஃபி ஐஸ்க்ரீம் ஈர்க்குது! ஆனா மீ இப்படி பார்த்துக் கொள்கிறேன். கிட்ட வரலை..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கருத்து : அப்படி ஒண்ணும் சுவையா இல்லை!

      நீக்கு
  26. கவிதை - சிரித்துவிட்டேன் ஸ்ரீராம்.

    பிடிச்சு தர தரன்னு நேர்லயே இழுத்துட்டு வந்துடறேன்!!! அடுத்த வாரம். 11. அன்னிக்கு நீங்க கவிதை சொல்ல மாட்டீங்கன்னு சொல்லி...ஹாஆஹாஹ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  ஆனா அப்படியும் உறுதியா சொல்ல முடியாது!

      நீக்கு
  27. சிவாஜி நாட்தஸ்வரம் வாசிக்கச் சொல்லி இந்த நிகழ்வு வாசித்திருக்கிறேன் ஸ்ரீராம் ஆனால் அதில் பேட்டி எடுக்கச் சென்றவர் நம்ம கேஜிவொய் அண்ணா என்பது எனக்குச் செய்தி! ஓ அப்ப பத்திரிகைத் துறையில் இருந்தாரா? சிவாஜி அவ்வளவு பழக்கமா அட!

    காட்சி வர்ணனை நீங்க சொல்லிருப்பது அப்படியே டிட்டோ, ஸ்ரீராம்.

    கீதா





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. OMG...   அது வேறு யாரோ ராமன்...  நம்ம கே ஜி ஒய்க்கு சினிமா அவ்வளவா பிடிக்காது!

      நீக்கு
  28. பாட்டு நிறைய கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். பாட்டு இடையிடையே ரொம்ப கட் ஆகி கட் ஆகிப் படுத்தியது. ஆடியோ சரியா இல்லையோ? பிடிச்ச பாடல் ஆனால் சரியா கேட்க முடியலை.

    "கொஞ்சம் மாற்றிச் சொன்னேன் சொல்லக்கூடாதோ?"//

    இது பாடல் வரியா...அட! இது முதல் பகுதிக்கும் பொருத்தமாகிடுச்சே!! ஸ்ரீராம்.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  கரெக்ட்.  இதை கமலா அக்கா சொல்வார்னு நினைச்சேன்.

      நீக்கு
  29. மோகன் வைத்யா அவருக்கு - Hats off! கொஞ்சம் கொஞ்சம் தெரியும வரது கதை என்றாலும் இன்றுதான் இத்தனை விவரமாகத் தெரிகிறது. அதுவும் அவர் மகன் பற்றியும்.

    என்ன ஒரு மனவலிமை...!

    கீதா

    பதிலளிநீக்கு
  30. அந்த ஃபேமஸ் கவிதை அடிக்கடி சொல்லப்படும் ஒன்று குறிப்பாக, விவாகரத்து ஆகி மீண்டும் குழந்தைகளுடன் திருமண பந்தத்தில் இணைபவர்கள் ....இது அயல்நாட்டு வாழ்க்கை பற்றி எழுதப்பட்ட கவிதை என்று எப்போதோ பார்த்த நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த ஆங்கில சினிமாவின் பாதிப்பாகவும் இருக்கலாம்!

      நீக்கு
  31. ஆஹா ரொம்ப ரொம்பப் பிடித்த பாடல் கௌரி மனோஹரியைக் கண்டேன்...பாடல் அது இந்தப்படத்தில் என்பது தகவல் எனக்கு!

    அதே ராகம் தான் பாடலும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  32. சாம்புவின் மூக்கைச் சொல்லாமல் போய்விட்டாரே, தேவன்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல்லயே வேறொரு வர்ணனையில் சொல்லி இருப்பார். அதையும் முன்னர் share செய்திருந்தேன்.

      நீக்கு
  33. அட! கல்வராயன் மலை! போயிருக்கிறேனே. ரொம்ப அழகாக இருக்கும். அது போல ஜவ்வாது மலையும்...

    படித்தது முதுகலைப் பொருளாதாரம்; ஆனால் காட்டில் கண்முன் பார்க்கும் காட்சிகளை புகைப்படங்களாக மாற்றுவதில்//

    ஹிஹிஹிஹி.....நம்ம டைப்...மு க பொ....பு ப....ஆனா பாருங்க ஸ்ரீராம், "மாற்றுவதில்" இதுக்கு அடுத்த சொல்லைக் கவனமாகத் தவிர்த்திருக்கிறேன்! இங்கு கோட் செய்ய!

    //காடுகளில் படம் எடுப்பது படுகஷ்டம். //

    டிட்டோ.

    பயணத்திற்கு முன் - இப்பாராவை ரசித்து வாசித்தேன் ஸ்ரீராம். வாசித்ததும் முன்பு கிடைத்த காட்டு பயணமும் அங்கு தங்கியதும் மீண்டும் எப்பபோது கிடைக்கும் என்று தோன்றத் தொடங்கிவிட்டது.

    இதை முதலில் வெளியுலகிற்கு சொன்ன குழுவில் நானும் ஒருவன் என்று நினைக்கும்போது பிரமிப்பாக உள்ளது என்றார்.//

    என்ன ஒரு அனுபவம்! வாவ்! சொல்ல வைத்தது. ரசித்து வாசித்த பகுதி இது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். 

      நம்ம அப்பாதுரை சில வருடங்களுக்கு முன் வரை வருடத்தில் 15 நாளோ ஒரு மாசமோ வனத்தில் எந்தவித மின் சாதனமுமின்று வசித்து விட்டு வருவார்.  சொல்லி இருக்கிறார்.

      நீக்கு
  34. ஒரு காலத்தில் ம செ வின் படங்கள் என்றால் ஒரு craze எனக்கு இருந்தது.

    அப்பாவின் படங்களும் மகனின் படங்களும்!! சின்ன ஒற்றுமை இருக்கோ?!! ஸ்ரீராம். ரசித்துப் பார்த்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் நான் ஒற்றுமை தேடி ஏமாந்ததாய் நினைத்தேன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!