கங்கை கொண்ட சோழீச்வரப் படத் தொகுப்பின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். இந்த கங்கைகொண்ட சோழபுரம், மிகப் பெரிய நகரமாக, சோழப் பேரரசின் தலைநகரமாக இருந்தது, ஒரு நூற்றாண்டிற்கும் மேல். ஆனால் இப்போது பார்த்தால் சிறு சிறு கிராமங்களாகப் பிரிந்திருக்கின்றன. இடையில் நெடுஞ்சாலை வேறு. ஆனால் அந்தப் பகுதியில் உள்ள ஊர்ப்பெயர்களைப் பார்த்தால், அவை நகரத்தின் ஒரு பகுதியாக அமைந்திருந்தவை என்பது புரியும். உதாரணமாக, உட்கோட்டை, மாளிகைமேடு, ஆயிரக்கலம், வாணதரையன் குப்பம், கொல்லாபுரம், வீரசோழநல்லூர், மெய்க்காவல்புத்தூர், சுண்ணாம்புக்குழி போன்றவை.
வரலாற்றில் நாம் ராஜராஜன் மற்றும் ராஜேந்திரனைப் பற்றிப் பேசும் அளவு உத்தமச் சோழரைப் பற்றிப் பேசுவதில்லை. இந்த இடத்தில் மிகச் சுருக்கமாக எப்படி சோழ அரசு தஞ்சைப் பகுதியில் ஸ்தாபிதம் செய்யப்பட்ட து என்பதைப் பார்த்துவிடலாம். சிறிய பொறி போன்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு அரசு எப்படி பெரிய பேரரசாக மாறியது என்பது ஆச்சர்யமளிக்கும் (அவ்வப்போது பார்த்ததுதான். இருந்தாலும் சுருக்கமாகப் பார்க்கும்போது வரலாற்றை ஒரு தடவை புரட்டிப் பார்த்த எண்ணம் வரும்)
பிற்கால சோழ ஆட்சிக்கு முன்பு களப்பிரர் ஆட்சி சோழ பாண்டியப் பிரதேசங்களில் இருந்தது. இக் காலகட்டத்தில் உள்ள வரலாறு பொதுவாக தெரிவதில்லை. ஒரு சில நூல்கள், பெரியபுராணம், பிரபந்தங்கள் போன்றவற்றிலிருந்துதான் அனுமானம் செய்ய முடிகிறது. ஆனால் தெளிவான வரலாறு இல்லை. இதனை இருண்ட காலம் என்று சொல்கின்றனர்.
விஜயாலயச் சோழன் உறையூரை தலைநகராகக் கொண்ட சிறிய பகுதிக்கு, (உறையூர், திருவாரூர், பழையாறை, பல்லவர்களுக்கு அடங்கிய மன்னனாக இருந்தான். அப்போது தஞ்சைப் பகுதி அரசர்கள் முத்தரையர். (இவர்களை களப்பிரர்களாக வரலாறு சொல்கிறது). விஜயாலயச் சோழன் ஆட்சிக்கு வந்தது கிபி 850.
பாண்டிய மன்னன் ஸ்ரீவல்லபன், தெள்ளாறு வரை பல்லவர் பகுதியை வெற்றிகொண்டு வந்த போது, (தெள்ளாறு-திருவண்ணாமலை வந்தவாசி அருகில்), (அப்போது சோழர்களும் பாண்டியன் படைகளோடு சேர்ந்திருந்த னர் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்), பல்லவப் பேரரசன் மூன்றாம் நந்திவர்மன், இராட்டிரகூடப் படைகள், கங்கர்களுடன் சேர்ந்துகொண்டு, தெள்ளாற்றுப் போரில் வெற்றி பெற்றான். அது மட்டுமல்லாமல், வைகையாறு வரை பாண்டியப் படைகளை விரட்டிச் சென்று தோல்வியுறச் செய்தான். அதனால் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான். சில ஆண்டுகள் கழித்து, பாண்டிய மன்ன ன் மீண்டும் ஒரு படையுடன் வந்து இழந்த பகுதிகளை மீட்டதுமல்லாமல், பல்லவப் பேரரசனை, கும்பகோணத்தில் (அப்போது குடமூக்கு என்ற பெயர்) நடந்த போரில் தோல்வியுறச் செய்தான்.
சுமார் 879ல், பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுணன், பல்லவர்கள் மீது படையெடுத்தான். பல்லவ மன்னன் அபராஜிதன், தன் பாட்டனான கங்க மன்னன் பிருதிவீபதியுடன் சேர்ந்து பாண்டியனை எதிர்த்துப் போரிட்டான். இந்தப் போரில், சோழ அரசன் ஆதித்த சோழன் (விஜயாலயனின் மகன்) பல்லவர்கள் பக்கமும், தஞ்சை அரசரான முத்தரையர், பாண்டியர் பக்கமும் போரிட்டனர். இதில் கங்க மன்னன் பிருதிவீபதி இறந்தபோதும், அபராஜிதவர்மன் வெற்றிபெற்றான். பாண்டிய மன்னன் கடுமையாகத் தோல்வியுற்றான். இதுதான் திருப்புறம்பியம் போர் (கும்பகோணம் அருகில்). இந்தப் போர்தான் சோழப் பேரரசுக்கு வழி வகுத்தது என்று கொள்ளலாம்.
இதற்கு முன்பு பாண்டிய மன்னர்கள், தெள்ளாறு, அரிசிலாறு பிறகு திருப்புறம்பியம் என்று தொடர்ந்த போர்களில் கடுமையாகத் தோல்வியுற்றனர். அதே சமயம் பல்லவர்களும் ஓயாது நடந்த போர்களால், பலவீனப்பட்ட னர். அதனால் அவர்கள் ஆட்சிப் பகுதியில், வடக்குப் பகுதியை இராட்டிரகூடர்கள் கைப்பற்றிக்கொண்டனர் (இது பற்றி விரிவாக பல்லவர் வரலாற்றில் பார்க்கலாம்). வடக்குப் பக்கம் இராட்டிரகூடர்களுடன் போர், தெற்குப் பக்கம் பாண்டியர்களுடன் போர் என்று தொடர்ந்த போரினால் பல்லவப் பேர ரசு நலிவடைய, விஜயாலயச் சோழனுக்கு அடுத்து வந்த ஆதித்த சோழன், தன் ஆட்சியின் பத்தாம் ஆண்டில், அபராஜித வர்மனைப் போரில் சந்தித்து, அவனை வென்று (போரில் கொன்று), தொண்டை மண்டலப் பகுதியைக் கைப்பற்றிக்கொண்டான். சுமார் 24 ஆண்டுகள் ஆட்சி செய்த ஆதித்த சோழன், சோழப் பேரரசை விரிவுபடுத்தினான், தலைக்காடு வரை. இவனே காவிரியின் கரைகளில் ஏகப்பட்ட சிவாலயங்களை எழுப்பினவன்.
இவனுடைய மகன் முதலாம் பராந்தகன். (907-953வரை ஆண்டவன்). இவனுடைய மகன்கள் இராஜாதித்தன், கண்டராதித்தன், அரிகுலகேசரி, உத்தமசீலன் மற்று அரிஞ்சயன். பராந்தகச் சோழனுக்கு சேர இளவரசி மனைவி.அதுபோல தன் மகளை கொடும்பாளூர் முத்தரையனுக்குக் கொடுத்து, அதுபோல இன்னொரு மகனுக்கு கொடும்பாளூர் அரசன் மகளை மணம் செய்வித்து என்று தன் அரசியல் பலத்தையும் பெருக்கினான். இவனுடைய ஆட்சியில் பாண்டிய நாடு முழுவதுமாக சோழனின் கீழ் வந்த து. (ஒரு வரியில் முடித்துவிட்டேன். பாண்டியன் இராஜசிம்மனுக்கு, ஈழ அரசன் படை உதவியது-கஸ்ஸபன். வெள்ளூர் போரில் இராஜசிம்மன் தோற்றோடி இலங்கைக்குத் தப்பியோடிவிட்டான். பிறகு, தன் மணிமுடி, ஆடையாபரணங்களை இலங்கை அரசனிடம் கொடுத்துவிட்டு தன் தாயின் நாடான சேர நாட்டுக்குச் சென்றுவிட்டான். பராந்தகனுக்கு, மதுரையில் தான் முடிசூட்டிக்கொள்ளவேண்டும் என்று ஆசை. ஆனால் மணிமுடி இலங்கை அரசனிடம் இருக்கிறதே. ஈழ அரசன அதனைக் கொடுக்கச் சம்மதிக்கவில்லை. அதனால் ஈழத்துக்கு 945ல் படையெடுத்துச் சென்றான். 7 ஆண்டுகள் அங்கு இருந்தும் மணிமுடி கிடைக்கவில்லை.
இதற்கிடையில் இராட்டிரகூட அரசன் மூன்றாம் கிருஷ்ணனுக்கும், பராந்தகனுக்கும் தக்கோலத்தில் 849ல் போர் ஏற்பட்டது. இதில் பராந்தகன் சார்பாக மகன் இராஜாதித்தன் மற்றும் அரிகுலகேசரி கலந்துகொண்டார்கள். சோழர்கள் வெற்றி பெற்ற போதிலும், கடைசி நேரத்தில் இராட்டிரகூடர் பக்கம் போர் புரிந்த கங்க அரசன் இரண்டாம் பூதுகன், யானைமீது இருந்து போரிட்ட இராஜாதித்தனை, அவன் வெற்றிபெறும் தருவாயில், எதிர்பாராத விதமாக தாக்கி மரணமடையச் செய்தான். அதனால் முதலாம் பராந்தகன் தொண்டை நாடு மற்றும் பல பகுதிகளை இராட்டிரகூடர்களிடம் இழந்தான்.
அவனுக்கு அடுத்தது பட்டத்திற்கு வந்தது கண்டராதித்தன். அவன் மழவரையர் குலப் பெண்ணான செம்பியன் மாதேவியைத் திருமணம் செய்துகொண்டான். 7 வருடங்கள் ஆட்சி செய்தான். அவனுக்கு உத்தமச் சோழன் என்று அழைக்கப்பட்ட மதுராந்தகன் பிறந்தான். ஆனால் 957ல் கண்டராதித்தன் மறையும்போது மதுராந்தகன் சிறு குழந்தை. அதனால் கண்டராதித்தன் தம்பி அரிஞ்சயன் சோழ அரசனானான். ஆனால் ஒரு வருட காலமே ஆட்சி புரிந்து மறைந்தான். அப்போதும் மதுராந்தகன் சிறு குழந்தை என்பதால், அரிஞ்சயனின் மகன் இரண்டாம் பராந்தகன் 959ல் சோழ அரசனானான். இவனே சுந்தரச் சோழன் என்று அவனுடைய அழகால் பெயர் பெற்றவன். அரசனான பிறகு 14 ஆண்டுகள் வாழ்ந்தான். இவன் தன்னுடைய மகனான ஆதித்தனை இளவரசனாக்கினான். ஆதித்தனும் தன்னுடைய வீரத்தால் பல போர்களில் கலந்துகொண்டான். ஆட்சி தனக்கு உரியது என்று நம்பிய மதுராந்தகன் (ஆதித்தனது சிற்றப்பன்) சூழ்ச்சியால் ஆதித்தனைக் கொன்றுவிட்டான் என்றே வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். மக்களுக்கும் அந்த எண்ணம் இருந்ததால், ஆதித்த சோழன் தம்பி அருண்மொழி பட்டமேற்கவேண்டும் என்று ஆசைப்பட, அருண்மொழி, சுந்தரச் சோழர் முன்னிலையில் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, மதுராந்தகனை சோழ அரசனாக்கினார். மதுராந்தகனுக்குப் பிறகு அருண்மொழி சோழ அரசனாவான் என்ற ஒப்பந்தம்.
இது எல்லாமே நாம் அறிந்த வரலாறுதான். ஆனால் இவற்றில் பல்வேறு பகுதிகளைக் கூர்ந்து படிக்கும்போது, யார் யாருடைய பையன் என்பதிலும் சூட்சுமம் இருக்கிறது. எல்லோரும் தசரதனுக்குப் பிறந்த மகன்கள் இல்லையே (வெவ்வேறு தாயார்). அதனால் சேர இளவரசிக்குப் பிறந்தவன் என்றால் சேரர்களின் ஆதரவு-அடுத்த அரசனாக வர வாய்ப்பிருக்கும்போது, கொடும்பாளூர் கலத் தொடர்பு இருந்தால் அவனுக்கு ஆதரவு என்று பல்வேறு சிற்றரசர்கள் மறைமுகமாக அடுத்த அரச பதவி கேள்விக்குறியாகும்போது தங்கள் ஆதரவை மறைமுகமாகத் தெரிவிக்கிறார்கள். இதனாலேயே, பல்வேறு சிற்றரசர்களுடன் பெண் கொடுத்து பெண் எடுத்து என்று தங்கள் அரசுக்கு அவர்களின் இரத்த சம்பந்தத்தைக் கொணர்ந்து தங்கள் ஆதரவாளர்களாக பேரரசர்கள் வைத்திருந்தார்கள். சிற்றரசர்கள் மட்டுமல்லாது, வென்ற நாட்டின் இளவரசிகளை மணம் செய்துகொள்வதும், தங்கள் மகளை அந்த நாட்டு இளவரசனுக்கு மணம் செய்து கொடுப்பதும் என பல அரசியல் திருமணங்களைப் பார்க்க முடிகிறது.
சுருக்கமாகச் சொல்கிறேன் என்று நீட்டிவிட்டேனா? நாம இராஜராஜ சோழனை, அவன் செய்த செயல்களுக்காக ரொம்பவே பாராட்டுகிறோம். சமயத்திற்கு நிறையச் செய்திருக்கிறான். ஆனால் மதுராந்தகனின் (உத்தமச் சோழனின்) மகனான மதுராந்தகன் கண்டராதித்தன் என்பவன், இராஜராஜன் ஆட்சியில் கோயில்களை மேற்பார்வை பார்த்து வந்தான் எனவும், ஒரு சமயத்தில் அவன் மீது குற்றச்சாட்டு வந்து அவனது பதவி பறிக்கப்பட்ட து என்றும் படிக்கும்போது, வேறு போட்டியாளர்கள் வந்துவிடக் கூடாது என்று இதைச் செய்தார்களா என்ற எண்ணம் தோன்றுகிறது. அல்லது நேர்மறையாகச் சிந்தித்தால், பேரரசின் தலைவன், அரசன் என்பவன், பேரரசைக் கட்டியாளக்கூடிய திறமை பெற்றவனாக, போர்த்திறன் கொண்டவனாக இருந்திருக்கவேண்டும் என்று நினைத்திருப்பார்களே ஒழிய, இவன் மகன், இந்த வரிசை என்பது ஒரு பெரிய விஷயமாக இருந்திருக்காது என்று நினைக்கிறேன்.
இராஜேந்திர சோழனின் கங்கைகொண்ட சோழீச்வரத்தைவிட்டு நாம் செல்லப் போவதால், கடைசிப் பகுதியாக கோயிலில் எடுத்த படங்கள்.
சிலைகள் எல்லாம் கான்க்ரீட்டில் புதைந்துகிடக்கின்றன.
இன்றைய பகுதியாக நான் எழுத நினைத்தது, இரண்டு பக்கங்களில் விஜயாலயச் சோழனிடம் ஆரம்பித்த சோழப் பேரரசு, எப்படி இராஜேந்திர சோழனின் மகன்களுடன் முடிவடைந்தது என்பதை. ஆனால் சோழர் வரலாறு மிகவும் சுவாரசியமானது, நிறைய OPEN END என்று சொல்லப்படும் கிளைகளை உடையது. அதனால் அப்படி எழுத முடியவில்லை.
கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் பறவைப் பார்வை
தஞ்சை பெரிய கோயிலின் பறவைப் பார்வை.
தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் (மூன்று படங்களுமே இணையத்திலிருந்து)
இந்த இரண்டு கோயில்களையும் பார்த்த பிறகு, எனக்கு அடிப்படைக் கட்டுமானத்தில் பெரிய வேறுபாடுகள் தெரியவில்லை. ஆனால் தஞ்சை பெரிய கோயிலில் கல்வெட்டுகள் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை தலைநகரமாக பிற்காலத்தில் (நாயக்கர், மராத்தியர், ஆங்கிலேயர்) இருந்தமையால், அதற்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இடங்களும் சீரமைக்கப்பட்டு பொலிவுபெற்றிருக்கின்றன. ஆனால் கங்கைகொண்ட சோழபுரம், சீரமைக்கப்படாது, நகரை விட்டுத் தள்ளி இருப்பதால் கவனிப்பு இல்லாமல் இருக்கிறது. அதனை இன்னும் நன்கு சீரமைத்து முக்கியச் சுற்றுலாத் தளமாக ஆக்குவதில் அரசு முனைய வேண்டும். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்..இம்மூன்றும் ஒன்றுக்கொன்று சளைத்த தல்ல. மூன்றுமே சோழர் காலப் பெருமையைக் காலம் காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.
கங்கைகொண்ட சோழபுரத்தை முதல் முறையாக நான் சென்று பார்த்தேன். வேறு கோயில்களுக்குச் சென்றுவிட்டு கும்பகோணம் திரும்பும் வழியில் இந்தக் கோயிலுக்குச் சென்றோம். ஆனால் திட்டமிட்டுச் சென்றிருந்தால், முதலாம் இராஜேந்திர சோழன் உருவாக்கியிருந்த சோழகங்கம் ஏரி, சோழமன்னர்களின் அரண்மனை இருந்த மாளிகைமேடு போன்றவற்றையும் அந்த ஊரில் (சுற்றுப்புறத்தில்) இருக்கும் சில சோழர் காலக் கோயில்களையும் பார்த்திருந்திருக்கலாம். காலம் இன்னொரு வாய்ப்பை வழங்காதா என்ன? (இப்படி நான் எழுதியிருந்தேன். 2026 ஃபெப்ருவரியில் மீண்டும் இந்த இடங்களுக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது)
இதைத்
தொடர்ந்து கும்பகோணத்தில் இருக்கும் இரண்டு கோயில்களை நாம் தரிசிக்கப்போகிறோம். ஒன்று இராமருக்கானது. இரண்டாவது வைணவத்தின் மிக
முக்கியமான கோயிலான சார்ங்கபாணி கோயில். (அப்படித்தான் நினைத்திருந்தேன்
இந்தப் பகுதியை எழுதியபோது). சில மாதங்களுக்கு முன்பு காஞ்சீபுரம் செல்லும்
சந்தர்ப்பம் நேர்ந்தது.
இதுவரை
நான் பார்த்திராத,
எல்லோரும்
இராஜராஜ சோழனுக்கு தஞ்சை பெரிய கோயிலை அமைக்க உத்வேகமாக இருந்தது, காஞ்சி கைலாசநாதர் கோயில்
என்பதால், அதனைக் காணச் சென்றேன். இந்தக் கோயிலையும், பரமேச்வர விண்ணகரம் என்று
அழைக்கப்படும் வைகுந்தப் பெருமாள் கோயிலையும் ஒருசேரக் காணவேண்டும். அப்போதுதான் பல்லவர்களின்
மகோன்னதம் தெரியும்.
அதனால்
இந்தக் கோயில்களைப் பார்த்த பிறகு கும்பகோணம் சாரங்கபாணி கோயில் மற்றும்
இராமஸ்வாமி கோயிலைப் பார்ப்போம்.
(தொடரும்)
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய ஞாயிறு கோவில் பதிவு எப்போதும் போல் அருமையாக உள்ளது. (பதிவை இன்னமும் முழுமையாக படிக்கவில்லை.பிறகு படித்து விட்டு வருகிறேன். ) படங்களைப்பார்த்து ரசித்தேன். அனைத்துப் படங்களும் அழகாக உள்ளது. கீழிருந்து நாலாவது படம் மிக அருமையாக உள்ளது. பறவைப் பார்வை படங்கள் மூன்றும் அழகாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மெதுவா வாங்க. இன்று ஞாயிறு வேறு. வேலைகளும் பயணங்களும் இருக்கலாம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநம் எ. பி குடும்ப சகோதரிகளுக்கு என் அன்பான அன்னையர் தின நல்வாழ்த்துகள். அனைவரும் எந்நாளும் நலமாக இருக்க வேண்டுமாய் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் என் நன்றிகளும் கூட. 🙏.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாழ்த்துகள். ஆமாம் அன்னையர் தினம், பெண்கள் தினம் என்று போனால் போகிறது என யார் நிர்ணயித்திருப்பார்கள்? மத்த நாட்கள்ல அவங்களுடைய சேவைகளை நினைத்துப் பார்க்க வேண்டாமா?
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சண்முகா. நலமா துரை செல்வராஜு சார்?
நீக்குசிறப்பான படங்கள்... அழகு..
பதிலளிநீக்குமிக்க நன்றி துரை செல்வராஜு சார்.
நீக்கு
பதிலளிநீக்குவரலாற்றுத்
தரவுகள் அருமை...
இந்த வாரத்துடன் கங்கை கொண்ட சோழபுரம் முடிந்தது
நீக்குகலைப் பொக்கிஷமாக இன்றைய
பதிலளிநீக்குபதிவு..
எல்லாம் சோழ அரசுகளின் திறமை. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் தங்கள் முத்திரையை பதித்துச் சென்றுள்ளனர்.
நீக்குஇன்று எனது பதிவு ஒன்று வெளியாகி
பதிலளிநீக்குஉள்ளது...
ஶ்ரீராம் தொலைதூர பயணம். நாளைதான் பார்ப்பார் என நினைக்கிறேன்.
நீக்குஇங்கு தகவல் சுருளில் காணப்படவில்லை..
பதிலளிநீக்குதகவல் சுருள் பல வாரங்களாக ஒழுங்காக வேலை செய்யவில்லை. பலரின் பதிவுகளை அதில் பார்ப்பதற்கே நேரமாகிவிடுகிறது. பேசாமல் ஶ்ரீராம், முதல் பக்கத்திலேயே இருபது தளங்கள் தெரியும்படியாக மாற்றினால் நல்லது
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அரசு மேடம்.. வாழ்க வளமுடன்.
நீக்குவரலாறு அருமை. நீண்ட பெரிய வரலாறுதான். தெளிவாக சொன்னீர்கள்.
பதிலளிநீக்கு//சிற்றரசர்களுடன் பெண் கொடுத்து பெண் எடுத்து என்று தங்கள் அரசுக்கு அவர்களின் இரத்த சம்பந்தத்தைக் கொணர்ந்து தங்கள் ஆதரவாளர்களாக பேரரசர்கள் வைத்திருந்தார்கள்.//
பல அரசியல் திருமணங்கள் தான் எல்லாம் இராஜ்ஜியத்தை பிடிக்க, தக்கவைத்து கொள்ள , படைபலம் தேவை என்று நடத்தப்படும்.
பெண்களின் விருப்பத்திற்கே இடம் இல்லை.
சில வரலாற்று கதைகளில் நாட்டுக்காக தங்கள் காதலை தியாகங்கள் செய்யும் பெண்கள், ஆண்களை காணமுடியும்.
ஆண்கள் கொஞ்சம் அபூர்வம். பெரும்பாலும் அரச கு மகளிர்கள் அரசியலுக்காக திருமணம் செய்துகொள்வர்.
நீக்குஇத்தனை வாரங்களாக கலைப் படைப்புகளை
பதிலளிநீக்குநல்கிய நெல்லை அவர்களுக்கு நன்றி...
மிக்க நன்றி துரை செல்வராஜு சார். தங்கள் உடல்நலம் மேம்பட்டிருந்தால் செவ்வாய் கதைகள் பல எழுதியிருப்பீங்க. எங்களுக்கும் தாவணி அணிந்த பெண்கள், குடும்ப உறவுகள், கிராமத்தின் மென்மை எல்லாம் படிக்கக் கிடைத்திருக்கும்.
நீக்கு//இராஜேந்திர சோழனின் கங்கைகொண்ட சோழீச்வரத்தைவிட்டு நாம் செல்லப் போவதால், கடைசிப் பகுதியாக கோயிலில் எடுத்த படங்கள்.//
பதிலளிநீக்குஅனைத்து படங்களும் அழகாய் இருக்கிறது.
கொடிமரம், மற்றும் நந்தி முன் நீங்கள் இருக்கும் படமும் அருமை.
பறவைப் பார்வையாக இணையத்திலிருந்து பகிர்ந்த மூன்று படங்களும் அருமை.
மூன்று கோயில்களுக்கும் ஒற்றுமை வேற்றுமை காணத் தோன்றியதால் இந்த ஒப்பீட்டுப் படங்களைப் பகிர்ந்தேன் கோமதி அரசு மேடம்.
நீக்கு//காஞ்சி கைலாசநாதர் கோயில் என்பதால், அதனைக் காணச் சென்றேன். இந்தக் கோயிலையும், பரமேச்வர விண்ணகரம் என்று அழைக்கப்படும் வைகுந்தப் பெருமாள் கோயிலையும் ஒருசேரக் காணவேண்டும். அப்போதுதான் பல்லவர்களின் மகோன்னதம் தெரியும். அதனால் இந்தக் கோயில்களைப் பார்த்த பிறகு கும்பகோணம் சாரங்கபாணி கோயில் மற்றும் இராமஸ்வாமி கோயிலைப் பார்ப்போம்.//
பதிலளிநீக்குகாஞ்சி கைலாசநாதர் கோயில்,பரமேச்வர விண்ணகரம் என்று அழைக்கப்படும் வைகுந்தப் பெருமாள் கோயிலையும் ஒரு சேர காண ஆவலுடன்.
காலம்பரயே படிச்சேன். படங்களும் பார்த்தேன். ஆனால் கருத்துச் சொல்ல முடியலை. சோழர்களின் சரித்திரத்தை நல்லா எழுதி இருக்கார் நெல்லை. ஆனால் வரகுண பாண்டியனா என்பதில் கொஞ்சம் சந்தேகம் இருக்கு. இவனுக்குத் தானே சிவலோகம் காட்டுவார் ஈசன்? பாட்டில் கூட வருமே, "வரகுண பாண்டியனுக்கு சிவலோகம் காட்டி"ம்ம்ம்? மதுரை வீரன் படமோ? அவன் தானே இங்கேயும்?
நீக்குகோமதி அரசு மேடம்... இந்த இரண்டு கோயிலைப் பற்றித்தான் படங்கள் கோர்த்திருந்தேன், ஆனால் வரலாறு எதையும் எழுதலை. பிறகு சில சோழர் கோயில்களை முடித்துவிடுவோம் என்று நினைத்ததால், இந்த இரண்டு கோயில்களும் பிற்பாடுதான் வரும். இதற்கிடையில் வெறும்ன சரித்திரம் சரித்திரம் என்று போரடிக்கிறேனோ என்று மனதில் தோன்றிவிட்டது. அதற்கான மெனெக்கிடலும் ரொம்பவே அதிகமாக இருக்கிறது. அதனால் சாதாரண படங்கள் தொடர் ஒரு எட்டு வாரம் எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்.
நீக்கு//ஆனால் வரகுண பாண்டியனா என்பதில் கொஞ்சம் சந்தேகம் இருக்கு.// எங்க இப்படி எழுதியிருக்கேன்னு தெரியலையே கீசா மேடம்?
நீக்கு//சுமார் 879ல், பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுணன், பல்லவர்கள் மீது படையெடுத்தான். //
நீக்குஆறாம் பத்தி ஆரம்ப வாக்கியங்கள். வரகுண பாண்டியனுக்கு ஈசன் காட்டிய சிவலோகம் அதில் வரும் வரகுணன் இவன் தானோ?
இவனுக்கு வரகுண வர்மன், சடையவர்மன் என்ற பெயர்களும் உண்டு. அந்த வரகுணன் இவனா என்று தெரியவில்லை கீசா மேடம். அவனைப் பற்றிய செய்திகளிலும் இந்த விஷயம் இல்லை.
நீக்குபறவைப் பார்வையில் மற்ற இரு ஊர்களை விடவும் கங்கை கொண்ட சோழபுரம் பசுமை நிறைந்ததாக இருக்கு. ஆனால் அதைத் தான் வறண்ட பூமி என்பார்கள். இந்தப் படம் எப்போ எடுத்ததோ அதுவும் இருக்கே.
பதிலளிநீக்குராமஸ்வாமி கோயிலின் பிராகாரத்தின் சுற்றுச்சுவரில் வரைந்திருந்த ஓவியத்தைப் படம் பிடித்தேன். பாதியில் கோயில் ஊழியர் வந்து காமிராவைப் பிடுங்கிப் படங்களை அழித்துட்டார். அவருக்குத் தெரியாமல் எடுத்த சில படங்கள் மட்டும் இருந்தன. அவற்றை மட்டும் பதிவுகளில் அல்லது மின் தமிழில் பகிர்ந்த நினைவு.
பதிலளிநீக்குஉங்களுக்கு மாத்திரம் இப்படி ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை கீசா மேடம்... நான் பல முறைகள் சென்றிருக்கிறேன். ஒவ்வொரு தடவையும் நிறைய படங்கள் எடுத்திருக்கிறேன். யாருமே என்னை படங்கள் எடுக்கக்கூடாது என்று சொன்னதில்லை.
நீக்கு//உங்களுக்கு மாத்திரம் இப்படி ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை கீசா மேடம்... // கீதா அக்காவுக்கு மட்டுமல்ல, எனக்கும் அதேஅனுபவம்தான். ராமசாமி கோவிலில் படங்கள் எடுத்த பொழுது ஒருவர் வந்து,அங்கிருந்த ஊழியரிடம் "யாரெல்லாமோ வந்து ஃபோட்டோ எடுக்கறாங்க.. நீங்க பேசாம இருக்கீங்க" என்று சத்தம் போட்டார். நான் அதற்கு மேல் எடுக்கவில்லை.
நீக்குஅந்தக் கோயிலின் நுழைவு மண்டபத்தில் முதல் முறையாக புகைம்படம் எடுத்தபோது கோயிலுக்கு டொனேஷன் தரலாமே என கோயில் ஊழியர் கேட்டார். நான் கொடுத்தேன். பல தடவைகள் சென்றிருக்கிறேன் படங்கள் எடுத்திருக்கிறேன்.
நீக்குஅநேகமாக எல்லாப் பெருமாள் கோயில்களிலும் சந்நிதிக்கு வெளியே இப்படி பட்டாசாரியார்கள் ஒரு ரசீது புத்தகத்தை வைத்துக் கொண்டு பணம் வசூல் செய்கின்றனர். ஸ்ரீரங்கத்திலும் பார்க்கலாம். நாங்க பொதுவாக அலுவலகம் சென்று அரசு ரசீதை வாங்கிக் கொண்டு முன்னெல்லாம் கொடுத்து வந்தோம். அதிலும் ஊழல் இருப்பதால் பின்னர் நிறுத்திட்டோம். நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கே கொடுப்பது தான் சரி.
நீக்குகாமிராவைப் பிடுங்கி அழிப்பது எனக்குச் சென்னையிலும் சில இடங்களில் நடந்திருக்கு. எங்க பையருக்கும், மாப்பிள்ளைக்கும் தஞ்சைப் பெரிய கோயிலிலும் இன்னும் சில கோயில்களிலும் நடந்தது. திருநெல்வேலியிலும் ஒரு கோயிலில் நடந்தது, செப்பறையில் அனுமதி வாங்கிட்டேன். அது சரி, நீங்க திருநெல்வேலி செப்பறை போயிருக்கீங்களோ? ஒரு தரம் போயிட்டு வாங்க. நான் சொல்லுவது செப்பறை என்னும் ஊர், தனியாக நடராஜர் மட்டும். தில்லையைப் போல். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலிலேயே இருக்கும் செம்பினால் ஆன மண்டபத்து நடராஜர் தரிசனம் இல்லை. முடிஞ்சால் என்னோட செப்பறைப் பதிவுகளைத் தேடிச் சுட்டி தரேன். :)))))
நீக்குஎன்ன்னா...கீசா மேடம்... திருநெல்வேலிக்கே அல்வாவா? ஹாஹாஹா. நாங்கள் செப்பறைக்குச் சென்றிருக்கிறோம். நான் 9ம் வகுப்பு படிக்கும்போது, நம்மாழ்வார் மோட்சம் கோயிலில் நடைபெறும் என்பதால், துளசி பறித்துவர பசங்கள்லாம் சேர்ந்து அந்தப் பக்கம் சென்றோம். அப்படியே செப்பறைக்கும் சென்றோம். சில வருடங்களுக்கு முன்பு அந்தக் கோயில் சென்றுவந்தேன். பதிவு போட்டேனா என்று நினைவு இல்லை. அருமையான தரிசனம். அந்த கிராமத்துக்குச் செல்லும் வழியில் வயல்கள் மயில்கள் என்று அருமையாக இருந்தது.
நீக்குகாஞ்சிபுரமே அம்பத்தூரில் இருந்தவரைக்கும் நினைச்சால் போயிட்டு வருவோம். மடத்திலேயே சாப்பிட்டு விடுவோம். ஆகவே சுத்துவதற்குப் பிரச்னை இருக்காது. கைலாசநாதர் கோயிலும் விண்ணகரமும் மட்டும் நாலைந்து முறை பார்த்திருப்போம். குழுவாக 3 முறையும் தனியாக நாங்க ரெண்டு பேர் மட்டும் ஒரு தரமும் போன நினைவு.
பதிலளிநீக்குகீசா மேடம்... எத்தனையோ தடவை காஞ்சீபுரம் சென்றிருந்தாலும் ஒரு தடவைதான் (நவம்பர்ல) கைலாசநாதர் கோயில் சென்றிருக்கிறேன். மிக அருமையான கோயில். மூலவரை படமெடுக்க வாய்ப்பு கிடைத்தும் படம் எடுக்கவில்லை.
நீக்குகங்கை கொண்ட சோழபுரம் சோழவரலாறுடன் மற்றைய கோவில்களையும் ஒப்பிட்டு முழுமையான சரித்திரமாக, பல படங்களுடன் தந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குதொடர்ந்து பல பதிவுகளைத் தந்து முழுமையடையச் செய்துள்ளீர்கள். நன்றி.
பறவைப்பார்வை படங்களும் அருமை.
ஏனைய கைலாசநாதர் கோவில்கள் சரித்திரங்கள் காண வருகிறோம்.
வாங்க மாதேவி அவர்கள். தொடர்ந்து வருகை தந்து கருத்துகளை எழுதுவதற்கு நன்றி.
நீக்குகங்கைகொண்ட சோழபுரம் இன்னும் கட்டிடங்கள் வர ஆரம்பிக்கலை. அதனால் தென்னம் தோப்பு போன்றவைகளால் பசுமையாக இருக்கிறது. இருந்தாலும் தோப்புகள் போன்றவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
பதிலளிநீக்குராஜேந்திர சோழனின் சிற்றன்னையார் பஞ்சவன் மாதேவி பற்றி குறிப்பு வரும் என்று எதிர்பார்தேன். அவர் இல்லை என்றால் ராஜேந்திரனுக்கு இந்தளவு கீர்த்தியே இல்லை என்பதால் இந்த எதிர்பார்ப்பு. ஆனால் கங்கை கொண்ட சோழபுரம் நிர்மாண்யம் தொடர்பான விவரமான விவரிப்பு விஷயங்களை நீங்கள் குறுக்கிக் கொண்டதால் இந்தளவில் போதும் என்று நானும் மனதை சமாதானப்படுத்திக் கொண்டேன்.
பதிலளிநீக்குசரித்திர பூர்வமான விஷயங்களில் உங்களிருக்கும் ஆர்வம் சிறப்பாக வெளிப்படும் தொடர் இது. தொடருங்கள் நெல்லை. தொடர்ந்து வாசிக்கிறேன்.
வாங்க ஜீவி சார்.... நான் இப்போது புதிதாக எழுதும் பகுதியில் ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறேன் (அது வெளிவர ஜூலை ஆகிவிடும், அல்லது ஆகஸ்டு). அதில் பஞ்சவன் மாதேவிக்கு ஒரு மகன் இருந்ததைக் குறிப்பிட்டிருக்கிறேன். அவர், பாண்டிய நாட்டு மன்னனாக சில வருடங்கள் இருந்திருக்கிறார். அவருடைய பையனும் நல்ல பதவியில் இருந்திருக்கிறான் (அப்பா பெயர் கங்கைகொண்டான், மகன் பெயர் ஆளவந்தான்)
நீக்கு//அவர் இல்லை என்றால் ராஜேந்திரனுக்கு இந்தளவு கீர்த்தியே இல்லை என்பதால் // நான் சமீபத்தில் படித்த ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை (50 வருடங்களுக்கு முன்பு வெளியானது, அல்லது அதற்கு முன்பேயோ). அனேகமாக அந்த சகோதரன் பஞ்சவன் மாதேவிக்குத்தான் பிறந்திருக்கணும். அதனால்தான் ராஜேந்திரன், தன் சிற்றன்னைக்கு பள்ளிப்படை எடுத்திருக்கிறான் (அவருடைய பையன், தன் தம்பி அரசுக்கட்டிலில் ஆசை வைக்கமாட்டேன் என்று ஒதுங்கியதால்)
நீக்குநீங்கள் படிக்கிறீர்கள் என்பதே எனக்கு சந்தோஷம். சில சமயம் எதற்கு இவ்வளவு முயற்சி எடுத்து சரித்திரத்தை எழுதுகிறோம் என்று தோன்றும் (உண்மையா). அவ்வப்போது போரடிக்காம எழுதறேனா என்று கௌதமன் சார் மற்றும் ஸ்ரீராம் அங்கிளிடம் கேட்டுக்கொள்வேன் ஹா ஹா ஹா.
நீக்குஎழுதுவது எதுவும் வீணில்லை, நெல்லை.
பதிலளிநீக்குமெளனி என்ற புனைப்பெயர் கொண்ட அந்நாளைய எழுத்தாளர் ஒருவர். ஒன்பதோ பத்தோ சிறுகதைகள் தாம் எழுதியிருக்கிறார்.அவர் எழுதிய காலத்தில் பலரால் அறியப்படாதவராகத் தான் இருந்தார்.
பிற்காலத்தில் ஜெயகாந்தன் "மொனியின் கதை ஒன்றை வாசித்து விட்டுத் தான் நான் எழுதவே உட்காருகிறேன்" என்று சொன்னதைப் படித்து விட்டு மொனி அவர்களின் ஏதாவது சிறுகதை வாசிக்கக் கிடைக்காதா என்று நான் தேடி அலைந்திருக்கிறேன்.
இது தான் எழுவதினாலான பயன், பெருமை எல்லாம். சரித்திரத்தில் எழுத்து என்பது பாறைகளில் செதுக்கிய மாதிரி. எந்தக் காலத்தில் எது கவனத்திற்கு வந்து எப்படிப் பாராட்டப்படும் என்று தெரியாது.
| (அமெரிக்காவிலிருந்து)
நீக்குநான் ஒரு கத்துக்குட்டி. இருந்தாலும் நீங்கள் சொல்லும் பாயின்ட் புரிகிறது. மிக்க நன்றி ஜீவி சார்
நீக்குமிகவும் சிறப்பான படங்கள். க.கொ.சோ. படங்களின் சுற்றுப்பகுதி AI என்று நினைத்தேன்.
பதிலளிநீக்குநன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். ஏஐ படங்களில் உயிர் இல்லை. ஏமாற்றும் நோக்கமே தெரிகிறது என்பது என் எண்ணம். சிறுகதைக்கான படங்களைச் சொல்லவில்லை
நீக்கு