12.5.26

சிறுகதை : ஸாலா... - ஸ்ரீராம்

ஸாலா...
ஸ்ரீராம் 

சாலமன் கைகளைப் பிடித்துக் கொண்டு ​"ஸாலா..."  என்றான் ராகவ் உணர்ச்சியுடன். 

ஸாஜன் புன்னகைத்தான்.  "அதுக்கு அர்த்தம் தெரியும்தானே மாமு?"

"மாலும்டா மாமு கே பச்சே.." என்று கண்களில் நீருடன் சிரித்தான் ராகவ்,

மூவருமே உணர்ந்து சிரித்தார்கள்.  ஷண்முகம் முகத்திலும் புன்னகை அரும்பியது.

பல வருடங்களுக்குப் பின் நண்பர்களுக்குள் நிகழ்ந்த சிரிப்பு!

ல்லூரிக் காலத்திலிருந்து ராகவ், சாலமன், ஸாஜன் (அவன் பெயரை ஸாஜன் என்று சொல்ல வேண்டுமா,  ஸஜ்ஜன் என்று சொல்ல வேண்டுமா என்று விவாதம் நடக்கும் நண்பர்களுக்குள்! தன் பெயர் பற்றி அவன் சொல்வதை கேட்டாலும் மதிக்காதது போலவே நடந்து கொள்வார்கள் மற்ற நண்பர்கள்), சாமுவேல், ஷண்முகம், குமார்  என்று ஆறு பேர் ஒரு குழுவாகவே இருப்பார்கள்.  ரொம்ப நெருக்கம்.  ஒருவரை ஒருவர் விட்டு இருக்க மாட்டார்கள்.  கிண்டலும் கேலியுமாக  திட்டுவது போலவும் பேசிக் கொள்வார்கள்.  ஆனால் ஒருவரை ஒருவர் யாரிடத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

ரொம்ப நெருக்கமான நண்பர்கள்.

நன்றி கீதா 

'ரங் தே பசந்தி' படம் பார்த்ததிலிருந்து சாலமனை 'ஸாலா' என்றுதான் அழைப்பான் ராகவ்.  

ஸாஜன் "ஸாலா என்றால் அர்த்தம் தெரியுமா?" என்று சிரிப்பான்.  

"தெரியும் மச்சான்" என்பான் ராகவ்!

நிகழ்காலம் முடிந்து எதிர்காலம் என்று ஒன்று வரும், காலம் மாறும் எல்லோரும் ஒவ்வொரு திசையில் பிரிவோம் என்றெல்லாம் யோசிக்காமல் காலம் கழிந்தது.  கடந்த காலம், எதிர்காலம் என்று யோசிக்காமல் சந்தோஷமாக இருக்கும் காலம்.  கல்லூரிக் காலம் முடிவுக்கு வரும்போது நண்பர்கள் எல்லோருமே கலங்கினார்கள்.  வழக்கம்போல ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள்.  

"நாம மத்தவங்க மாதிரி இல்ல..   தொடர்ந்து டச்லயே இருக்கணும் மச்சான்" என்று உறுதி எடுத்துக் கொண்டார்கள்.

"போன் நம்பர் மாத்தினாலும், அட்ரஸ் மாத்தினாலும் உடனே உடனே அப்டேட் பண்ணிடணும்டா" என்றான் குமார்.

"கல்யாணம் பண்ணி, பொண்டாட்டி பேச்சைக் கேட்டு பிரெண்ட்ஸை மறக்கக் கூடாது மச்சான்ஸ்" என்றான் ஸாஜன்.

இப்படியாகப் பேசிப் பிரிந்து கொஞ்ச காலம் இதை எல்லாம் கடைப்பிடிக்கவும் செய்தார்கள்.  பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி விழத் தொடங்கியது.  இடையிலேயே குமார் எதிர்பாராவிதமாக ஒரு விபத்தில் மறைந்தான்.  அந்த செய்தியே  காலம் கடந்துதான் நண்பர்களை எட்டியது. 

அந்த அதிர்ச்சியைத் தொடர்ந்து கொஞ்ச காலம் மறுபடி தகவல் தொடர்பு சுறுசுறுப்பாக இருந்தாலும் அப்புறம் பழைய குருடி கதவைத் திறந்தாள்!

அதிலும் மற்ற ஐந்து நண்பர்களில் ராகவுக்கு ஸாஜன் தவிர மற்ற நண்பர்களுக்கிடையில் ஒரு இடைவெளி விழுந்தது போலிருந்தது.  ஏதோ ஒரு திரை மூடியது போல இருந்தது.  குறிப்பாக சாலமனுடன்.  ஷண்முகமாவது எதிலும் ரொம்பப் பட்டுக்கொள்ள மாட்டான்.

சாலமனைக்க் பொறுத்த வரை எல்லாமே சம்பிரதாயத்துக்கு பேசுவது போல ஒரு உணர்வு மனதினுள்.  குடும்பம், தொழில், அரசியல், மதம் எல்லாம் சேர்ந்து தங்களுக்குள் ஏதோ பிரிவு ஏற்பட்டு விட்டது போல தோன்றும் ராகவுக்கு.

சாமுவேல் அப்பா மறைவின்போது எல்லோரும்  ஒன்றுகூடும் சந்தர்ப்பம் வந்தபோதும் ஒரு பழைய ஜோஷ் அவர்களுக்குள் இல்லாதது போல Feel ஆனது ராகவ்வுக்கு.  ஸாஜனிடம் சொன்னான்.  'அப்படியெல்லாம் இருக்காது ராக்' என்றான் அவன்.

ப்படியே சில வருடங்கள் கழிய ஒரு பயணத்துக்கு ஏற்பாடு செய்தான் ஸாஜன்.  நண்பர்களை அழைத்தான்.  பனி மூடிய மலை ஏறும் பயணம். 

அங்குதான் இப்போது இருக்கிறார்கள்.   சாமுவேல் இந்தப் பயணத்துக்கு வரமுடியவில்லை என்று சொல்லி விட்டான். 

நால்வருமே, குறிப்பாக சாலமனும் ராகவும் ஏதோ அலுவலகத்தில் ஒன்றாக பணிபுரிந்து பழகியவர்கள் போலதான் பேசிக் கொண்டிருந்தார்கள்.  பழைய நெருக்கமோ, சௌஜன்யமோ..  ஏதோ ஒன்று குறைவது போல உணர்ந்தார்கள்.

பேசிக்கொண்டே மலை ஏறியபோது மெல்ல ஜோக் அடித்துக் கொண்டும், பழைய ப்ரொபஸர்கள், தோழிகள் பற்றியும் பேசிக்கொண்டு ஏறியபோது கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றியது.

எவ்வளவோ முன்னெச்சரிக்கைகள் செய்துகொண்டு ஏறியும் ஒரு பனி நிறைந்த அபாயகரமான இடத்தில் எல்லோருக்கும் கொஞ்சம் முன்னால் ஏறிக்கொண்டிருந்த ராகவுக்கு கையில் வைத்திருந்த கம்பு நழுவி விழ, கால் அப்படியே வழுக்கியது.  

சமாளிக்கப் பார்த்தும் முடியாமல், கட்டுப்பாடு இல்லாமல்  முடியாமல் வழுக்கிக் கொண்டு வந்தவனை காப்பாற்ற நினைத்து தடுப்பவர்களும் அவனுடனே மலைச் சரிவில் விழும் நிலை.  

'தான் அவ்வளவுதான் என்று முடிவு கட்டி விட்டான் ராகவ்.  

கணநேரத்தில் யோசிக்கவே இல்லை சாலமன்.  சட்டென கையைப் பிடித்து நிறுத்தி அவனை அணைத்து, கூடவே கொஞ்சம் சறுக்கி, கால்களால் போராடி இருவரும் உயிர் பிழைத்தார்கள்.   

அந்த பிடிப்பில் வெறும் உடல் வலிமை மட்டும் இல்லை. பல ஆண்டுகளாக சொல்லப்படாமல் இருந்த பாசம், மௌனமாக மறைந்திருந்த நட்பு, மனக்கசப்புகளை மீறிய மனிதநேயம் அனைத்தும் இருந்தன.    

ஸாஜன் பிரமை பிடித்து நின்றிருந்தான்.   

பாதுகாப்பாக மேலே வந்தவ ராகவ் சில நொடிகள் பேச முடியாமல் நின்றான்.  தன்னைக் காப்பாற்றிய நண்பனை பார்த்தான். இருவரின் கண்களிலும் சொல்லப்படாத உணர்வுகள் தெரிந்தன.  

இந்நிலையில்தான் மேலே சொன்னபடி சாலமன் கைகளை பிடித்தபடி ராகவ் உணர்ச்சியுடன் "ஸாலா.." என்றான் கண்கள் நனைய.

"அப்படி விட்டுடுவேனாடா.."  என்ற சாலமன் ஸாஜனைப் பார்த்தபடி  "விட்டுடுவோமா" என்று திருத்திக் கொண்டான். 

அந்த வார்த்தைகள் பனியைக் காட்டிலும் குளிர்ந்திருந்த உறவின் மீது சூரிய ஒளி விழுந்ததுபோல் இருந்தது.  

“நாம் தூரமானது உண்மைதான். ஆனால் உன்னை இழக்க நான் தயாரில்லை,” என்றான் சாலமன் மெதுவாக.

"ஸஜ்ஜா..  அதை ஃபோட்டோ புடிச்சியா?" என்று கேட்டான் ராகவ்,

"வீடியோவே எடுத்திருப்பாண்டா.." என்றான் சாலமன்.

"ஏண்டா..  கத்தக் கூட முடியாமல் நான் Freeze ஆயிட்டேன்..  போட்டோவாம்...   வீடியோவாம்..  போங்கடா..."  ஸாஜன் குரல் நடுங்கியது.

"அதனால என்ன...  இப்போ ஒரு வீடியோ மீம்ஸ் க்கு எடுத்துடுவோம்"

"சரியான ஐடியா" என்ற ராகவ், அருகில் இருந்த பனி போர்த்திய சரிவில் படுத்துக் கொண்டு கைகளை உதவிக்கு அசைப்பது போல அசைத்தான்.

படத்தைத் திருடியது வெங்கட்டின் "சந்தித்ததும் சிந்தித்ததும்" தளத்திலிருந்து!   நன்றி வெங்கட்.  படத்தைப் பார்த்து எழுதிய கதை.

சாலமன் கையில் பிடிமானத்துக்கு வைத்திருந்த இரும்பு தடியால் அவனை குத்துவது போல ஆக்ஷன் செய்தான்.  ஸாஜன் இதைக் கண்டு ஓடுவது போல நடித்தான்.  ஷண்முகம் அதை படம் பிடித்தான்.

"ஏண்டா காப்பாத்தறது போல ஆக்ஷன் கொடுடான்னா கொலை செய்வது போல பண்றே"  என்று ராகவ் கிண்டலாக அலறினான்.

"நீ மட்டும் விழறது போலவா ஆக்ஷன் கொடுக்கறே...   எம் ஜி ஆர் கைகளை ஆட்டி பாடுவது போல ஆக்ட் கொடுக்கறே" என்றான் சாலன் சிரிப்புக்கு நடுவே.

அங்கே நிறைந்த சிரிப்பு கும்மாளத்தில் நடுவில் தோன்றியிருந்த பனிச்சுவர் உடைந்து பழைய நெருக்கம் கூடி இருந்தது.

========================================================================================

அடுத்தவன் காசு...  கோராவிலிருந்து JKC அனுப்பியது..

லக் அடிச்சா இப்படி அடிக்கணும்....

ஆஸ்திரேலியாவையே ஒரு நிமிஷம் ஆடிப்போக வச்ச இந்த "லூக் மூர்" கதையை, சொல்றேன் கேளுங்க.

நம்ம கதையோட ஹீரோ லூக் மூர், ஆஸ்திரேலியாவுல இருக்குற ஒரு சாதாரண மிடில் கிளாஸ் பையன். 2010-ல அவனுக்கு 22 வயசுதான். கையில ஒரு வேலையும் கிடையாது, கவர்மெண்ட் தர்ற வேலையில்லா பட்டதாரி உதவித்தொகையை வச்சுதான் காலத்தை ஓட்டிக்கிட்டு இருந்தான்.

இவனுக்கு சிட்னில இருக்குற செயின்ட் ஜார்ஜ் (St. George) பேங்க்ல ஒரு அக்கவுண்ட் இருந்துச்சு. அதுல ஒரு சின்ன தப்பு நடந்துச்சு பாருங்க, அங்கதான் கதையே ஆரம்பிக்குது

லூக் தன்னோட அக்கவுண்ட்ல இருந்து காசு எடுக்கும்போது கவனிச்சான், அவன் அக்கவுண்ட்ல பேலன்ஸே இல்லைனாலும் ஏடிஎம் மெஷின் காசை கக்கிகிட்டே இருந்துச்சு.

என்னடா இது வம்பா போச்சுன்னு ஒருநாள் ஒரு சின்ன டெஸ்ட் பண்ணான். ஒரு 5000 டாலர் லோன் கட்ட வேண்டி இருந்துச்சு, சரி வருதான்னு பார்த்தா... "டக்"குன்னு பேமெண்ட் ஆயிடுச்சு

பேங்க் அக்கவுண்ட் மைனஸ்ல போனாலும், பேங்க் அதை தடுத்து நிறுத்தவே இல்லை.

ராஜா......ராஜாதி ராஜா.. இந்த லூக் மூர் ராஜா

"கையில காசு.. வாயில தோசை"ன்ற கதையா, லூக் தன்னோட அன்லிமிடெட் ஆட்டத்தை ஆரம்பிச்சான். அந்த 22 வயசுப் பையனுக்கு அப்போ தலைகால் புரியல.

எடுத்த உடனே ஜேம்ஸ் பாண்ட் படத்துல வர்ற ஆஸ்டன் மார்ட்டின் (Aston Martin) கார் ஒன்னு, மஸராட்டி (Maserati) கார் ஒன்னு, அப்புறம் ஒரு ஹூண்டாய் கார்னு விதவிதமா வாங்கிக் குவிச்சான்.

ஊர் சுத்துறதுல இவனுக்கு ஒரு தனி ஆர்வம். தாய்லாந்துக்கு பிளைட் ஏறிப் போய், அங்க இருக்குற விலை உயர்ந்த ஹோட்டல்ல தங்கி, ஒவ்வொரு நைட்டும் கிளப், பார்ட்டின்னு பணத்தை தண்ணியா செலவு பண்ணான்.

மைக்கேல் ஜோர்டான் கையெழுத்துப் போட்ட டீ-ஷர்ட், உலகப் புகழ்பெற்ற பிக்காஸோவோட டிராயிங்ஸ், பாப் மார்லியோட அரிய பொருட்கள்னு எதையும் விட்டு வைக்கல. அவனோட வீடு ஒரு "அதிசய பொருட்காட்சி சாலை" மாதிரியே மாறிடுச்சு.

சந்தேகம் வரலையா?

ஊர்க்காரங்க எல்லாம் "டேய், ஏதுடா இவ்வளவு காசு?"ன்னு கேட்டப்போ, "மச்சான், எனக்கு லாட்டரில பல கோடி அடிச்சிருக்குடா"ன்னு சொல்லி எல்லாத்தையும் நம்ப வச்சுட்டான். இப்படியே ரெண்டு வருஷத்துல சுமார் 2.1 மில்லியன் டாலரை (இந்திய மதிப்புல கிட்டத்தட்ட 17 கோடி!) காலி பண்ணான்.

2012, டிசம்பர் 12-ஆம் தேதி. லூக் தன் வீட்டுல ஜாலியா இருக்கும்போது ஜன்னல்ல யாரோ தட்டுற சத்தம் கேட்டுச்சு. பார்த்தா.. போலீஸ் "கதவைத் திற, இல்லன்னா உடைப்போம்"னு கத்துனாங்க.

அப்போதான் லூக்குக்கு புரிஞ்சது, "சிங்கம் சிக்கிக்கிச்சு"ன்னு.

பேங்க் காரங்க ரெண்டு வருஷம் கழிச்சு கணக்கை செக் பண்ணப்போதான், ஒருத்தன் நம்மள வச்சு செஞ்சுருக்கான்னு கண்டுபிடிச்சிருக்காங்க.

கிளைமாக்ஸ்

முதல்ல கோர்ட் இவனுக்கு 4 வருஷம் ஜெயில் தண்டனை கொடுத்துச்சு. அஞ்சு மாசம் உள்ளேயும் இருந்தான். ஆனா, நம்ம ஆளு அங்கயும் ஒரு புத்திசாலித்தனம் பண்ணான். மேல்முறையீடு செஞ்சப்போ, அவனோட வக்கீல் ஒரு பாயிண்ட்டை சொன்னாரு: "அவன் ஒன்னும் பேங்க்ல கொள்ளையடிக்கல, இல்ல யாருடைய அக்கவுண்ட்டையும் ஹேக் பண்ணல. பேங்க் தான் தப்பா பணத்தை எடுக்க வழி கொடுத்துச்சு, இவன் அதைப் பயன்படுத்திக்கிட்டான்.

இதுல என்ன தப்பு?"ன்னு வாதிட்டாங்க.

சட்டத்துல இருந்த அந்த ஒரு சின்ன ஓட்டையால, கோர்ட் அவனை விடுவிச்சிருச்சு

ஆனா, அரசாங்கம் அவன் வாங்குன எல்லா கார், பெயிண்டிங்ஸ் எல்லாத்தையும் பறிமுதல் பண்ணிடுச்சு.

இப்போ என்ன பண்றாரு?

தன்னோட கேஸ்ல ஜெயிச்சதுக்கு அப்புறம், இப்போ லூக் மூர் ஒரு கிரிமினல் லாயர் (Criminal Lawyer) ஆகுறதுக்காக படிச்சுக்கிட்டு இருக்காரு.

"அந்த ரெண்டு வருஷம் ராஜா மாதிரி வாழ்ந்ததை என்னால மறக்க முடியாது, ஆனா இப்போ நிம்மதியா தூங்குறேன்"னு சொல்றாரு.

நீதி:

அடுத்தவன் காசுக்கு ஆசைப்பட்டா ஆப்பு கன்பார்ம்

ஆனா லூக் மூர் மாதிரி அதிர்ஷ்டமும், அறிவும் இருந்தா தப்பிச்சும் வரலாம். ஆனா எல்லாரும் லூக் மூர் ஆக முடியாதுல்ல


பாலாஜி ஸ்ரீனிவாசன் 

58 கருத்துகள்:

  1. லுக் மூர் கதை அதிர்ஷ்டம்தான். அதுக்காக இரண்டு தடவை வெளியிடணுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...   பாருங்க..  அதிலும் அவருக்கு அதிருஷ்டம்!!!

      நீக்கு
  2. கடைசி வரை 'ஸாலா..'க்கு என்ன அர்த்தம்ன்னு தெரியப்படுத்தவே இல்லை, பாருங்கள்.. ஹிந்தித் திணிப்பு எரிச்சலில் புரியாதும் போயிருக்கலாம். அந்த AI படம் தத் ரூப்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தத்ரூபம். கற்பனையில் சிறுகதை அட்டகாசமாக் உருவாகி கொண்டிருந்த நேர்த்தியிலேயே கெடுக்கப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

      நீக்கு
    2. வாங்க ஜீவி ஸார்...   ஸாலாவுக்கு அர்த்தம் எனக்குத் தெரியும்!

      // சிறுகதை அட்டகாசமாக் உருவாகி கொண்டிருந்த நேர்த்தியிலேயே கெடுக்கப்பட்டிருப்பது //

      கெடுக்கப்பட்டிருப்பது எதில்?  புரியவில்லை ஜீவி ஸார்.

      நீக்கு
    3. ​இந்தி சாலா சென்னை தமிழில் ..த்தா

      நீக்கு
    4. பொதுவாக இது மனைவியின் சகோதரர்களைக் குறிப்பிட்டாலும் திட்டுவதற்கு அதுவும் கெட்ட வார்த்தையில் திட்டவும் பயன்படும்.

      Here it is used as an abused language. Some are using it to express their frustration. The time of the usage and the person of the usage will decide it.

      நீக்கு
    5. கெட்ட வார்த்தை என்று சொல்ல முடியாது.  பொறுக்கி என்று சொல்லலாம்,  மிஸ்ச்சிவியஸ் என்று சொல்லலாம்.  வாங்க கீதா அக்கா, 

      நீக்கு
    6. ஸாலா... என்பதை தவறான வார்த்தை என்று சொல்லக்கூடாது. அயோக்கியப் பயலே... ராஸ்கல் என்றெல்லாம் நாம் சொல்லும்போது அது தவறான அர்த்தத்தில் கிடையாது (நண்பர்களுக்கிடையிலான பேச்சில்). என்னுடன் துபாயில் வேலை பார்த்த மஹாராஷ்டிர பையன் என்னை, ஸாலா என்று பேசும்போது சொல்வான்.

      நீக்கு
    7. OK. I give up. You two please refer Hindi--English--Tamil dictionary. :))))

      நீக்கு
  3. நட்பு என்பது தனி... அந்த உணர்வு மனதில் எப்போதும் இருக்கும்.

    குடும்பச் சூழ்நிலையால் காட்டிக்கொள்ளும் சந்தர்ப்பம் இல்லாமல் இருந்தாலும், வெளிப்படவேண்டிய சமயத்தில் பீறிட்டெழும்.

    கதை நன்றாக இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை.. ஆமாம்.. நிறைய சொல்லலாம்.

      நீக்கு
  4. ஸ்‌ரீராம் முதலில் ரொம்ப ஸாரி சொல்லிக் கொள்கிறேன். நீங்க நேத்து மாலையில் இப்படத்திற்குக் கதை கேட்டதால், மனதில் தோன்றினாலும் உடனே எழுதிக் கொடுக்க முடியவில்லை. கால அவகாசம் எனக்குக் கொஞ்சம் வேண்டும். அதுவும் தற்போது மனம் மிகவும் மெதுவாக வேலை செய்கிறது எனவே....வீட்டு வேலை, வீடியோ மேக்கிங், வலைப்பக்கம் கருத்துகள், என்/எங்கள் பதிவுகள்எல்லாவற்றையும் சமாளிக்க முடியவில்லை. மனம் மெதுவாகிவிட்டதால். அதைச் சரி செய்து கொண்டு வலைப்பக்கம் வரலாம் என்ற எண்ணம்.

    என்னால் கொடுக்க முடியவில்லையே என்னாச்சு என்று பார்க்க வந்தால் உங்கள் படைப்பு. டக்குனு உங்களுக்கு எழுத வந்ததற்குப் பாராட்டுகள் ஸ்ரீராம். கதை நன்றாக இருக்கிறது. குறுகிய கால அவகாசத்தில் எழுதுவது என்பது மிகப் பெரிய கலை. எனக்குக் கைவராத கலை. அதுவும் தற்போது.

    Positive end தற்போதைய நிலவரத்தை வைத்து. நானும் கிட்டத்தட்ட இது போலதான் யோசித்தது.

    ஒர் ஆண் எழுதுவதற்கும் பெண் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடிகிறது.

    இடையில் நீங்க ஒரு படம் பத்தி எழுதிய நினைவு, இமயமலைக்குப் போவாங்களே வயதான பிறகு நட்புகள் சந்திப்பை ஏற்படுத்திக் கொண்டு...ஒரு நட்புக் குழு அமிதாப்பச்சன் ஹீரோ...அது கொஞ்சம் நினைவுக்கு வந்தது

    ரொம்ப அலசிக் காயப் போடலை ஓகேவா ஸ்ரீராம்.

    கோரா பார்ட் இரு முறை வந்திருக்கு. நான் அதை இன்னும் வாசிக்கவில்லை.

    மீண்டும் ஒரு ஸாரி சொல்லிக் கொள்கிறேன் ஸ்ரீராம். எனக்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது. நேரமேலாண்மையைச் சரி செய்ய...இல்லைனா ரொம்ப அழுத்தம் உருவாகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...   பரவாயில்லை...
      நேற்று வெங்கட் தளத்தில் அந்தப் படம் பார்த்ததுமே இதற்கு ஒரு கதை எழுதினால் என்ன என்று தோன்றியது.  எடுத்து வைத்து மாலையே அதற்கு வேளை வரும் என்று எதிர்பார்க்கவில்லை!  உங்களைக் கேட்டதும், உங்கள் வேலைகள் பற்றி அறிந்ததும் உங்களை தொந்தரவு செய்ய மனம் வரவில்லை.  எனவே நானே எழுதி விட்டு உங்களுக்கும் தகவல் கொடுத்தேன்.

      நான் சொல்லி இருந்ததாக நீங்கள் சொல்லி இருக்கும் படம் நான் ரொம்ப ரசித்த 'ஊஞ்சாயி' என்னும் அமிதாப் படம்.  அமித் ஸ்ரீவத்ஸாவ் என்பதை அதில் அமிதாப் பெயர்.

      கோரா இரண்டாவதை எடுத்து விட்டேன்.  நன்றி.

      நீக்கு
    2. நான் ரொம்ப ரசித்துப் பார்த்த படம் அது. எல்லோருமே அருமையாக நடிச்சிருப்பாங்க.

      நீக்கு
    3. ஊஞ்சாயி படமா?  அடடே  ஆச்சர்யக்குறி.

      நீக்கு
  5. லக் அடிக்கறது கூட ஒரே நேரத்தில் மாற்றி மாற்றி இரண்டு தடவை அடிக்குமா, என்ன?... :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருக்கு தொடர்ந்து அடித்திருக்கிறதே...

      நீக்கு
    2. 1+1=2-1=1.
      அந்த இரண்டாவது கதை இரு தடவைகள் பிரசுரமாகியிருந்தன.
      அதைச் சொன்னேன்.

      நீக்கு
  6. நட்புகளுக்கும் ...ப்ளீஸ் உங்க பதிவுகளுக்கு வரலைன்னு என்னைத் தப்பா எடுத்துக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன். நம்புகிறேன்.

    உறவுகள் வருகை. அவங்க என்னை ப்ளாக் அது இதுன்னு இருக்கக் கூடாது நாங்க வரப்ப என்று என்னிடம் சொல்லி. ஏற்கனவே நான் எழுதலை, வலைப்பக்கம் வரலை ....

    மனம் கொஞ்சம் மெதுவாகச் செயல்பட்டால் ஓரிரு வேலைகளில்தான் கவனம் செலுத்த முடிகிறது. எல்லாம் மெனேஜ் செய்வது கடினமாகிவிடும். குறைகள் மேலோங்கும். நேர்மறைகள் கண்ணில் படாது, எல்லாமே எதிர்மறையாகத் தோன்றும். குறைகளே வரும் போது எண்ணங்கள் தாறுமாறாகும். மனம் புலம்பத் தொடங்கும்.. அது வெளிப்படத் தொடங்கும் எண்ணங்களில் நம் செயல்களில். எனவே சின்ன சோர்வு வந்தாலும் உடனே அதைச் சரி செய்ய வேண்டும். எப்படி நம் உடல் நலனைக் கவனிக்க வேண்டுமோ அப்படி மன நலனும். அது நன்றாக இருந்தால் உடலும் நன்றாக இருக்கும். அந்த ப்ராஸஸில்தான் நான் இருக்கிறேன். எனவே கொஞ்சம் எனக்கு அவகாசம் தேவைப்படுகிறது. கொஞ்சம் பொருத்துக்கோங்க ப்ளீஸ் ஓகேவா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நட்புகள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. எனக்கு இந்தச் சோர்வு, மற்ற எதிர்மறையான விஷயங்கள் எல்லாம் ஒரு பக்கம் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் வெளிவேலைகளில், இப்போ மாதிரி வலைப்பக்கங்களில் கருத்தைச் செலுத்தினால் அதிலேயும் ஈடுபாடு ஏற்படுகிறது. என்றாலும் உள்ளே ஓர் இயக்கம் ஓடிக்கொண்டே இருக்கு. அது ஏன் அப்படி? எனக்கு மட்டுமா? எல்லோருக்குமேவா? இங்கே பதிவுகளைப் படிச்சுக் கருத்துக்களையும் படிச்சுப் பதில் கொடுத்தாலும் உள்ளே ஏதோ ஓடிக்கொண்டே தான் இருக்கு. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. போதும் எனத் தோன்றும்வரை நேரம் எடுத்துக் கொண்டு மெதுவாக வாங்க தி/கீதா.

      நீக்கு
    5. ஆமாம். இன்னும் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்... நாளை மறுநாள் வியாழக்கிழமை வந்தால் போதும்.

      நீக்கு
    6. //அப்படி மன நலனும். அது நன்றாக இருந்தால் உடலும் நன்றாக இருக்கும்.// மன நிலைக்கு என்ன வந்தது? ரொம்பவே இவங்க திங்க் பண்ணறாங்கன்னு நினைக்கிறேன்.

      வாழ்க்கைல ரொம்பவே சென்சிடிவ் ஆக இருக்கக்கூடாது. அப்புறம் தேவையில்லாமல் கற்பனையும் பண்ணக்கூடாது.

      நீக்கு
  7. ​தில்லைஅகத்து துளசி மணாலி பயணம் பதிவிட்டிருக்கிறார். நீங்கள் மலை ஏற்ற கதை பதிவிட்டிருக்கிறீர்கள். தற்செயலா?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப தற்செயல்.  கதையை நான் சென்னையில் மாலை ஏழு மணிக்கு கற்பனை செய்கிறேன்.  கீதா அந்தப் பதிவை இரண்டு நாட்களாய் தயார் செய்திருப்பார். வாங்க JKC ஸார்.

      நீக்கு
  8. @ நட்பு என்பது தனி... அந்த உணர்வு மனதில்
    எப்போதும் இருக்கும்...

    இப்படித் தான் நட்பு ஒன்று
    காலசூழ்நிலையில் இரு வேறு
    நாடுகளுக்கு பயணப்பட்டு தகவல் தொடர்பு
    இன்மையால் அர்த்தங்கள் வேறாகி விட்டன..

    இன்று நான் நட்பில் பரிதவித்தாலும் எதிர் தரப்பில் நடப்பு
    ஏனோ தானோ என்று... ஏதோ ஒன்று
    விட்டுப் போயிற்று...

    என் மனம் மிகவும் வருந்துகின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "நட்பு என்பது தனிக்கதை.  நான் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கும் சில நட்புகள் போல என்னை நினைத்துக் கொண்டிருக்கும் நட்புகளும் எங்கோ இருப்பார்கள்" என்கிற பொருளில் சில வருடங்களுக்கு முன் ஒரு கவிதை எழுதி இருந்தேன்.   அது நினைவுக்கு வருகிறது.

      நீக்கு
  9. நட்பின் ஆழம் பற்றிய ஸ்ரீராமின் கதை நன்று. ஒருத்தர் இறந்து போனாலும் மற்றவர்கள் இன்னமும் அதே ஆழ்ந்த நட்பில் இருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் ஆண்களுக்குள்ளே ஏற்படும் இத்தகை நட்பு திருமணம் ஆன பெண்களுக்கு இடையே ஏன் ஏற்படுவதில்லை? எனக்குத் தெரிந்து பெண் திருமணம் ஆனதுமே உறவுகளையே துண்டிக்க வேண்டி இருக்கு. திருமணத்துக்கு முன் இருந்த நெருங்கிய உறவுகள் எல்லாம் திருமணம் ஆன பின்னர் என்றோ வரும் விருந்தாளிகளாக ஆகிவிடுகின்றனர். ஒரு வேளை வீட்டில் சகோதரிகள் இருந்தால் அவங்களுக்குள்ளே நட்பு விரியாமல் இருக்கலாமோ? ஆனால் எனக்குத் தெரிந்து என் அம்மாவின் சகோதரிகளுக்குள்ளே நட்பு என்பது குறிப்பிட்டுச் சொல்லும்படி எல்லாம் இருந்தது இல்லை. பெண்களுக்கு எப்போவும் தன் குடும்பம், கணவன், குழந்தைகளுக்குப் பின்னரே மத்தவங்க. அவங்க அப்பா, அம்மாவாக இருந்தாலும் சரி. எங்கானும் ஓரிரு நபர்கள் இப்படி இல்லாமல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் பெண்கள் உலகமே வேறே. ஆண்கள் உலகமே வேறே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிர்ர்ர்..  கதையை ரசிக்காமல், கருத்து சொல்லாமல் ஆண் பெண் என்று போய்விட்டீர்கள்!  பாஸின் நட்புகள் இன்னும் தொடர்பில்தான் இருக்கிறார்கள்.  சொல்லப்போனால் இளையவன் திருமணத்துக்கு கூட மூன்று நட்புகள் வருகிறார்கள்.

      நீக்கு
    2. //நட்பின் ஆழம் பற்றிய ஸ்ரீராமின் கதை நன்று.// இது என்னவாம்?

      அதோடு இல்லாமல் வெகு சிலரால் உறவுகளைப் பராமரிக்க முடியும். முடிகிறது. எல்லோராலும் முடியறதில்லை. எங்க வீட்டிலேயே மாமாவுக்கு அடுத்த தம்பி உறவுகளோடு தொடர்பை மிக அருமையாகக் கையாளுவார். அதே மாமாவுக்கோ கடைசித் தம்பிக்கோ அது கைவரலை. :))) உங்க பாஸ் இந்த விஷயத்தில் தனி ரகம். :))

      நீக்கு
  10. நல்லவேளையாக அந்த ஆஸ்திரேலியப் பையர் விடுதலை ஆனதும் நல்ல வழியில் போய்ப் படித்து லாயர் ஆவதற்கு முயற்சி செய்வதைப் பாராட்டலாம். ஒரு சிலருக்கே இத்தகைய அதிர்ஷ்டங்கள் ஏற்படும். நானெல்லாம் அதிகம் ஏடிஎம்மில் பணம் எடுக்க மாட்டேன். அதிலே எப்போதுமே ஏதோ சிக்கல் இருப்பதாகத் தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அலர்ஜி.  அதேபோல இதுபோன்ற அதிருஷ்டங்களும் (நல்லவேளையாக) வாய்த்ததில்லை.

      நீக்கு
  11. எனக்கென்னமோ இந்த ஏ1 படங்களில் ஏதேனும் உயிர்ப்பு இருப்பதாகத் தெரியலை. அதாவது ஒரிஜினாலிடினு சொன்னாச் சரியா இருக்குமா? எல்லாம் ஏதோ அளவெடுத்து வரைஞ்சாற்போல் வண்ணக்கலவை முதற்கொண்டு செயற்கையாக இருப்பதாகவே தோன்றுகிறது. முக்கியமாக இந்தப் படங்களில் வரும் நபர்களின் கண்கள்! ரொம்பவே நொடிக்கிறேனோ? என்னவோ போங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம்.  ஆனால் இந்தக் கதையின் உயிர்நாடியான அந்த நட்பை அந்தப் படம் நன்றாகவே சொல்கிறது.

      நீக்கு
  12. மாற்றங்களை ஏற்காத மனம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த மாற்றங்களை?  விளக்கம் ப்ளீஸ்...

      நீக்கு
    2. என்னை நானே சொல்லிக் கொண்டேன். இந்த ஏ1, சாட்ஜிபிடி ஆகியவற்றை என் மனம் ஏற்பதில்லை.

      நீக்கு
  13. பிரியாத நட்பு கதை நன்றாக இருந்தது. உயிர்காத்த நட்பு கதையில் மெய்சிலிர்க்கின்றது. வாழ்க இத்தகைய நட்பு.

    Jkc அவர்கள் பக்கம் தவறு செய்து தண்டனை அனுபவித்தவன் திருந்தியவனாக இருக்க முற்படுவது நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் நலமாக இருக்கப் பிரார்த்தனை. இரண்டு மனம் வேண்டும் பாடல் நினைவுக்கு வந்தது பின்னூட்டங்களைப் பார்க்கும்போது. நட்பு மீண்டும் மலர்வது அழகு. என் மருமான் பெயர் சஜ்ஜன் ராகவன். நான் வைத்த பெயர். சஹஶ்ர நாமத்தில் விஷ்ணுவுக்கு சஜ்ஜன ஹ: என்று வரும். நன்றி ஶ்ரீராம். நான் ஏஐயில் தான் வாழ்கிறேன். இன்று கூட ஒரு பதிவுக்குப் படங்கள் உருவாக்கிக் கொடுக்கிறது:)

      நீக்கு
    2. வாங்க அம்மா...

      // என் மருமான் பெயர் சஜ்ஜன் ராகவன். நான் வைத்த பெயர். //

      அடடே..  இரண்டு பெயரும் வந்திருக்கிறதே...   என் மாமா ஜவர்லால் தினமும் AI படங்களுடன்தான் பேஸ்புக்கில் பதிவுகள் போடுகிறார்.

      நீக்கு
  14. நட்பில் தோன்றும் இயல்பான ஏற்றத் தாழ்வுகளையும், காலம் உருவாக்கும் இடைவெளிகளையும் உணர்வுப் பூர்வமாகச் சித்தரித்துள்ளீர்கள். காப்பாற்றிய நண்பனின் கையைப் பற்றித் தழுதழுக்கும் நெகிழ்வான தருணத்தில் ice breaking நிகழ்வதும், கலகலப்பாக பழைய நெருக்கத்தை நண்பர்கள் உணர்வதும் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. முடிவு இனிது. கதை நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முழுதும் உள்வாங்கி ரசித்ததற்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  15. கதை அருமையாக இருக்கிறது ஸ்ரீராம். பல வருடங்கள் பிரிந்து இருந்தாலும் அவர்களுக்குள் இருந்த நட்பின் நெருக்கம் உணர்ந்த போது பழைய நட்பு மீண்டும் துளிர்த்தது.
    அருமையாக நட்பை மீட்டு விட்டீர்கள்.

    உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு.
    கதையை படித்தவுடன் திருக்குறள் நினைவுக்கு வந்தது.

    படங்கள் அருமை. வெங்கட் பதிவு படம் பொருத்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா.. நன்றி.

      செவ்வாய்க்கு இப்போதெல்லாம் யாரும் கதைகள் அனுப்புவதில்லை.  பொக்கிஷங்கள் போட்டுக் கொண்டிருந்தேன்.  அதுவும் தொடர்ந்து வருவதால் ஒரு மாறுதலுக்கு இன்று நானே எழுதி விட்டேன்.  அழகியசிங்கர் தளத்தில் அவர் கொடுக்கும் படங்களுக்கு எழுதி எழுதி அந்தப் பழக்கத்தில் இந்தப் படத்தை எடுத்து அதற்கு ஒரு கதையை எழுதி நிரப்பி விட்டேன்!!

      சட்டென நல்ல குறள் ஒன்றும் நினைவுபடுத்தினீர்கள்.

      நீக்கு
  16. லூக் மூர் கதையும் நல்லா இருக்கிறது. அறிவை குறுக்கு வழியில் நன்றாக பயன்படுத்துகிறார்.

    //தன்னோட கேஸ்ல ஜெயிச்சதுக்கு அப்புறம், இப்போ லூக் மூர் ஒரு கிரிமினல் லாயர் (Criminal Lawyer) ஆகுறதுக்காக படிச்சுக்கிட்டு இருக்காரு.//

    தன்னைப்போல உள்ளவர்களை நன்றாக காப்பத்துவார்.

    பதிலளிநீக்கு
  17. சாலா என்று சொன்னால் சாலா பாம்பேயில் இருந்தபோது பொறுக்கி என்கிற அர்த்தம் சொல்வார்கள் லூசு என்றும் அர்த்தம் சொல்வார்கள் ஆனால் உங்கள் கதையில் உள்ள ஹீரோ மிகச் சாமர்த்தியமாக என்ஜாய் பண்ணுகிறார்

    அது எல்லாம் போகட்டும் எப்படியாவது எனக்குசிட்னில இருக்குற செயின்ட் ஜார்ஜ் (St. George) பேங்க்ல ஒரு அக்கவுண்ட்open பண்ணி கொடுங்கள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!