19.5.26

ப பொ சிறுகதை : ராகேஷ் குரு - கீதா ரெங்கன்

 

 


இன்று 50 வது மணநாள் விழா காணும் திரு ஜெயக்குமார் சந்திரசேகர் தம்பதியருக்கு வணக்கங்கள், வாழ்த்துகள்.

==============================================================

பஹல்காம் போலாமா?

"குரு, இந்த நியூ இயர்ல ஃபர்ஸ்ட் ட்ரிப் ஃபிப்ரவரில போகலாமான்னு....." சந்தோஷமாகச் சொல்லிக் கொண்டே வந்த ஷானு குருவின் முகத்தைப் பார்த்ததும் அமைதியானான். குருவும் ஷானுவும் சாஃப்ட்வேர் துறை. தங்கியிருப்பது ஒரே அறை.

"எங்க? யாரோட ப்ளான்?" மொபைலைப் பார்த்துக் கொண்டே சுவாரசியம் காட்டாமல் கேட்டான் குரு

"சித்தார்த்...." சித்தார்த் மீடியாவில் கேமராவும் கையுமாக இருப்பவன். துடிப்பானவன்.

"அதென்ன? சித்தார்த் நம்ம வாட்ஸப் க்ரூப்ல போடாம உங்கிட்ட மட்டும்? ராகேஷ், வருணுக்குத் தெரியுமா?" ராகேஷ் ஏர்ஃபோர்ஸ். ஃப்ளைட் லெஃப்டினன்ட்.  ஆப்பரேஷன் சிந்தூர் ஹீரோ.  வருண் சொந்தத் தொழில்.

"இல்லைடா நீ 'நோ' சொல்லிடுவியோன்னு.... உங்கிட்ட பேசாம எப்படி? நீ ஓகே சொன்னாதான் ட்ரிப்பே"

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே பிரபலமான இந்த பஞ்சபாண்டவர் நட்புக் குழு. Squad, Crew என்று கல்லூரியில் பேசப்பட்ட குழு இப்போது பணியில் சேர்ந்த பிறகும் தொடர்ந்து கொண்டிருந்தது.

டூர் என்றாலே, முன்னின்று திட்டமிடுபவனே குருதான். அவனோடு சித்தார்த்தும் சேர்ந்து கொள்வான். சென்ற வருடம் கஷ்மீருக்குத் திட்டமிட்டது குருவும், சித்தார்த்தும்தான். ராகேஷ் மட்டும் ட்யூட்டியில் இருந்ததால் கலந்துகொள்ளமுடியவில்லை.


"திரும்பவும் பஹல்காம் ப்ளானா? என்னடா எல்லாம் மறந்துட்டீங்களா?"

"இல்லை மாமு.... குல்மார்க், சோனாமார்க்....போனவருஷம் மிஸ்ஸாகிடுச்சே"

"சத்தமில்லாம நைஸா வந்திருக்கான் பாரு...  இந்த சித்தார்த் பய"

"குல்மார்கும் சோனாமார்கும் கூட வல்னரபிள் தான்டா. எனக்குப் பயமா இருக்கு"

சென்ற வருடம் பஹல்காம் பைசரண் பள்ளத்தாக்கைச் சென்றடையும் நேரத்தில் தாக்குதல் நடக்க, அந்தக் காட்சிகளும், அந்த இடத்திலிருந்து அடித்துப் பிடித்து தப்பித்து வந்த அந்த பயமும் இன்னும் விலகியிருக்கவில்லை குருவிற்கு.

ஆப்பரேஷன் சிந்தூர் சமயம் நண்பர்கள் நால்வரும் ராகேஷிற்காகத் தவித்து அவன் குடும்பத்திற்கும் ஆதரவாக இருந்த தருணங்கள் நிழலாடின. என்னதான் ஆப்பரேஷன் சிந்தூர் ஹீரோவாக ராகேஷ் கொண்டாடப்பட்டாலும், குருவின் மனதில் அந்தப் போர் பயம் குல்மார்க் பனியை விட ஆழமாக உறைந்திருந்தது.

"இப்ப செக்யூரிட்டி எல்லாம் டைட். சேஃப்தானாம். இப்ப எல்லாரும் போய்ட்டுதானே இருக்காங்க...கமான் குரு. லைஃப் எப்பவுமே த்ரில்லர்தான். இட் ஷுட் பி எஞ்சாய்ட்." வருண் குருவைத் தட்டிக் கொடுத்தான்.

"ஓசி ஹீரோ (ஆப்பரேஷன் சிந்தூர்) கிட்ட கன்ஃபெர்ம் பண்ணீங்களா?"

"கன்ஃபார்ம் பண்ணியாச்சு. இப்ப லீவுலதானே இருக்கான், ஆனா அவன் வைஃப் இப்ப கன்சீவ்ட். அவன் லீவுல வரதே ரேர். அவன் வருவானா!" - சித்தார்த்

"வெயிட்....முதல்ல நீ உன் வீட்டுல பெர்மிஷன் வாங்கிட்டியா?"

"டேய் பயமுறுத்தாத மச்சான்.... அது எப்படியாச்சும் மெதுவா வாங்கிடலாம்...."

" 'குல்மார்க்லருந்து என் ஸ்வீட்டிக்கு ஒரு சாக்கு ஃபுல்லும் பனி அள்ளிக் கொண்டுவரேன்..  ஓகேயா' ன்னு சொல்லு....  உருகிடும் எங்க தங்கச்சி....." - ஷானு.

"மொக்கைக்கு அளவே இல்லை... தாங்கலை" தலையில் அடித்து கொண்டே சமையலறையிலிருந்து கொரிப்பதற்கு நொறுக்குத்தீனியை எடுத்து வந்தான்  வருண்.

குழுவில் ராகேஷ், சித்தார்த் தவிர மற்றவர்கள் எந்தக் கட்டிலும் சிக்காதவர்கள். 

"லீவுல இருந்தாலும் ஏர்ஃபோர்ஸ்ல இருக்கறவங்களுக்குச் சில ப்ரோட்டகால்ஸ் உண்டு. அவன் வர முடியுமான்னு நான் கேட்டுகிட்டதுக்கு அப்புறம்தான்...அவன் வந்தாதான் நான் வருவேன்" என்றான் குரு.

"ஹான் அதெல்லாம் அவன் பார்த்துப்பாண்டா! அவனுக்குத் தெரியாதா என்ன? அவனே வரேன்னு சொல்லிட்டானே!"

ராகேஷ் குருவிற்குத் தைரியமளிக்க குருவும் கால் மனதோடு யெஸ் சொல்லிவிட்டான். நால்வரும் உற்சாகமானார்கள்.

தில்லியில் ராகேஷ் இணைந்து கொண்டான்.

பிப்ரவரியில் பயணம் என்பதால் குல்மார்கில் 3 நாட்கள் தங்கி, பனியில் மலையேற்றம், பனிச்சறுக்கு விளையாடலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள்.  ஸ்ரீநகரை அடைந்தார்கள்.

"பசங்களா, நாம அங்க போயாச்சுனா மொபைல் நெட்வொர்க் கிடைக்கறது கஷ்டம்டா. ஸோ வாடகைக்கு வாக்கிடாக்கி எடுத்து வைச்சுக்கிட்டா நல்லது." - ராகேஷ்.

பனிக்கான உடைகள், ஷூக்கள் க்ராம்பான்ஸோடு புறப்பட்டார்கள்.

ஸ்ரீநகரில் இருந்து குல்மார்க்கிற்குச் செல்லும் வழியெங்கும் இயற்கைக் காட்சிகளைக் கண்டு வியந்தார்கள்.

"இத்தனை அழகிருந்தா ஆபத்துன்னு சும்மாவா சொல்றாங்க! அதான் பொறாமைல பக்கத்துவீட்டான் சண்டை போடுறான்" ராகேஷ் உடன் இருந்ததால் குருவின் பயம் கொஞ்சம் குறைந்திருந்தது என்றாலும் எல்லா தெய்வங்களையும் அழைத்துப் பார்த்தான்!  

குல்மார்க் சென்றதும் மலையேற்றம்.

"இவன் நாட்டுப் பற்றுக்கு எல்லையே இல்லை. பாரேன், நம்ம கொடிய பார்க்கற இடத்துல எல்லாம் சல்யூட் அடிச்சிட்டே வரான்!" ராகேஷை கலாய்த்தார்கள். கலாய்த்தாலும் அவர்களுக்கும் அப்பழக்கம் தொற்றிக் கொண்டது.

பிப்ரவரி மாதத்துக் கடும் குளிர், அந்தப் பகுதியையே ஒரு வெள்ளைப் போர்வையால் மூடியிருந்தது. கண் எட்டும் தூரம் வரை வெள்ளைதான்.

இரண்டாம் நாள் பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்த போது, சற்று தூரத்தில் பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனின் நடவடிக்கை ஒரு சந்தேகத்தைக் கொடுத்தது ராகேஷுக்கு.

நட்புகள் எல்லோருடனும் வாக்கி டாக்கியில் தொடர்பில் இருந்துகொண்டே இருந்தவனுக்குத் திடீரென்று குருவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.  

ராகேஷ் மற்றவர்களுக்குத் தகவல் கொடுத்ததும் கூடினார்கள். தொடர்ந்து முயற்சித்தும் வாக்கி டாக்கியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. கண்ணெட்டும் தூரம் வரையில் அவனைக் காண முடியவில்லை.

எல்லோருக்கும் பீதி கிளம்பியது. பதற்றம் தொற்றிக் கொண்டது.

ராகேஷ் தன்னிடம் இருந்த பைனாகுலர் வழி சுற்றிலும் நோக்கினான். எங்கும் தென்படவில்லை. டக்கென்று அவன் கண்கள் அந்த சந்தேகப் பேர்வழியைத் தேடின. அவனையும் காணவில்லை, அவன் அனுபவ மனது தீவிரமாக வேலை செய்தது. மீண்டும் ராகேஷின் கண்கள் பைனாகுலர் வழியாக குருவைத் தீவிரமாகத் தேடின .

திடீரென ஒரு சரிவின் ஓரத்தில், பனிப்பாறை பிளந்திருந்த ஒரு குறுகிய பகுதியின் அருகில் ஏதோ அசைவதை ராகேஷ் கவனித்தான்.

"ஹேய்! அங்கதான்! லெஃப்ட்ல அந்தப் பெரிய பாறைக்குப் பின்னாடி ஒரு குறுகலான பகுதி அங்கேதான் குரு சிக்கியிருக்கணும்!" பைனாக்குலர் வழியாகப் பார்த்துக் கொண்டே சொன்னவன்.... எல்லோரையும் பார்க்கச் சொன்னான்.

"மச்சான், இப்ப வேற யாரோவும் அங்க வராப்ல இருக்கு புள்ளியா நகருது.....பாருங்கடா நீங்களும்"

"யெஸ்... ஏதோ ஒரு நடமாட்டம் தெரியுது...  ப்ளீஸ் யாரும் சத்தமா பேசாதீங்க" என்று ராகேஷ் ரகசியமாகச் சொல்லி, மின்னல் வேகத்தில் அந்தத்  திசையை நோக்கிப் பனியில் சறுக்கத் தொடங்கியவன் மீண்டும் நின்று பைனாக்குலர் வழி பார்த்த போது பனியில் கிடந்தவன் குரு போலத் தெரிந்தது. 'குருவாகத்தான் இருக்கும்' என்று மனதுள் நினைத்துக் கொண்டே மீண்டும் பைனாகுலரைச் சுழற்றிய போது சற்று தூரத்தில் ஓர் உருவம் வருவது தெரிந்திட அலர்ட் ஆனான்.

ராகேஷின் செயல்பாடுகள் மாறியதைக் கண்டதும், *குருவை இதே போன்று ப்ராங்க் செய்ய நினைத்திருந்த ஷானுவும், கேமராவில் அதைப் படம் பிடிக்க நினைத்திருந்த சித்தார்த்தும், "மச்சி, அதே போல நடக்குதே, ஓ மை காட்" என்று சொல்லிக் கொண்டவர்களின் மனம் திக் திக் ஆனது.* நிலைமை சீரியஸ் என்று  உணர்ந்தார்கள்.

"ராகேஷ் வாக்கி டாக்கில மிலிட்டரி பாயின்டை கான்டாக்ட் பண்ணலாமா?"

"நோ! இந்த வாக்கி டாக்கில பண்ண முடியாது அது வேற வகை ஹை ஃப்ரீக்வென்சி.....ஸோ... ஷானு, வருண்... ஓடுங்க! ரைட் சைட். நேரா 1  கிலோமீட்டர் தூரத்துல ஆர்மி பாயின்ட் பார்த்தம்ல  அங்க போய் விவரம் சொல்லி, என்னைப் பத்தியும் சொல்லி ஹெல்ப் கூட்டிட்டு வாங்க. க்விக்! நான் ஏற்கனவே அப்பப்ப எங்கங்க போறேன்னு அப்டேட் பண்ணிருக்கேன். ஸோ நோ வொர்ரிஸ்... " என்று கட்டளையிட்டான்.

"சித்தார்த், நீ என்னை ஃபாலோ பண்ணு ஆனா நல்ல கேப் விட்டு ஃபாலோ பண்ணு......இடப்பக்கம் போயிடாத. வலப்பக்கமா பனி சுத்தின பாறை லேசா தெரியுது பாரு அங்க இரு. கேமராவ ரெடியா வைச்சுக்க..." என்று சொல்லிக் கொண்டே சறுக்கத் தொடங்கினான்.

எப்போதும் கேமராவை ஸ்டெடியாக இயக்கும் சித்தாத்தின் நடுங்காத கைகள் நடுங்கத் தொடங்கின.

---------

னிப் பாறையின் குறுகலான இடத்தில் விழுந்திருந்த குருவிற்குத் தலை வலித்தது. அருகில் லேசாக வெளியில் தெரிந்த பாறையைப் பிடித்து எழுந்திருக்க முயன்றான் ஆனால் பனித்தூள் கண்களில் புகுந்து உருகியதில் கண்கள் எரிச்சலாக இருந்தன. வாக்கி டாக்கியை காணவில்லை. கையுறை நழுவியிருந்தது.  காலை அசைத்து வெளியே எடுக்க முயன்றவனுக்கு வலியுடன் கனமாகவும் இருந்தது. 

"ராகேஷ்...." என்று கத்த நினைத்தாலும் சத்தம் தொண்டைக்குள்ளேயே அமுங்கியது.

யாரோ அருகில் வருவது போலத் தெரிந்திட "ராகேஷ் நான் இங்க இருக்கேன்" என்று கத்த முயன்றான். முடியவில்லை. அந்த உருவம் அவனை நெருங்கியதும்  இந்திய ராணுவ உடை அணிந்திருந்தது தெரிந்தது. குருவிற்கு ஒரு கணம் நிம்மதி பிறந்தது. தன்னை அறியாமல் "ஜெய்ஹிந்" என்று தீனமான குரலில் சொல்லி சல்யூட் அடிக்க முயன்றான்.

"ப்ளீஸ் ஸேவ் மீ. என்னால எழுந்திருக்க முடியலை.... மை ஃப்ரென்ட் ராகேஷ்..... " என்று ஆங்கிலத்தில் சொல்லத் தொடங்கியவன் அந்த உருவம் பதில் பேசாததைக் கண்டு சற்றுக் கலவரமடைந்தான்.

குருவை நெருங்கி வந்து குனிந்தது அந்த உருவம். அப்போதுதான் குரு கவனித்தான், அந்த முகம் நம் வீரரின் முகம் போலவோ ராகேஷின் முகம் போலவோ  இல்லை. அதில் நட்பிற்குப் பதில் ஒரு குரூரமான அந்நியத்தன்மை தெரிந்தது. வெறி பிடித்த கண்கள். ஏதோ ஒரு வஸ்துவின் வேண்டாத வாடை. அந்த அந்நியன் குருவை வேட்டையாடும் விலங்கைப் போலப் பார்த்தான். அவன் கையில் உயர் ரகத் துப்பாக்கி. குருவின் இதயம் ஒரு நிமிடம் நின்று வேகமாகத் துடித்தது.

'நம்ம உயிர் அவ்வளவுதான்... வந்தது வரட்டும்' பார்த்திருந்த பல படங்களின் காட்சிகள் மனதில் ஓடின.

"என்ன?  என்னைக் கொல்லப் போறியா?  கமான்... ஷூட் மி....  ஜெய்ஹிந்...."

"ஜெய்ஹிந்" என்பதைக் கேட்டதும் வெறியேறிய அந்த உருவம் குருவின் சட்டையைப் பிடித்துக் குரூரமாகத் தூக்கியது.

"இந்த இடத்துல என்ன பண்ணிட்டிருக்க?" உருது, ஹிந்தி, ஆங்கிலம் கலந்த மொழி.

அவன் அணிந்திருந்தது பழைய ராணுவ ஜாக்கெட், அவன் முழங்கையில் ஏதோ ஒரு அந்நிய அடையாளம் இருப்பது தெரிந்தது.

குருவிற்குத் தான் ஏமாந்து போனோமே உடையைப் பார்த்து என்று மனதில் தோன்றிட, கால்களால் அவன் கால்களை இடற எத்தனிக்க, கால்கள் எதிலோ சிக்கியிருந்தது போல் தோன்றியது. நிலைதடுமாறினான்.

"ஏதாவது சாகசம் செய்ய நினைச்ச, ஆன் த ஸ்பாட் ஷூட்.   ஆனா உன்னை சுட மாட்டேன் இப்ப... நீ சிக்கின வசமா. உன்னை வைச்சுதான் நாங்க விளையாடப் போறோம்.... " என்று சொல்லிக் கொண்டே குருவின் கைகளைக் கட்டினான். பனிமூடியிருந்த பாறையின் இடுக்கிற்குள் கையை விட்டான், எதையோ தேடுவது போல...

குல்மார்க் பனிக்கும் மேலாக உறைந்தது குருவின் சப்த நாடியும். அதே சமயம் குருவின் உள்மனம் ஏதோ உணர்த்தியது. அவன் காதுகள் கூர்மையாகின.

ஆயுதமில்லாமல் சண்டை மற்றும் தற்காப்புக் கலைப் பயிற்சி அனுபவம் பெற்றிருந்த ராகேஷ், தன் ஸ்கீயிங்க் பேடைக் கழற்றிக் கொண்டு, சத்தமில்லாமல் அந்த நபரின் பின்னால் பாய்ந்தான். எதையோ பனி இடுக்கில் தேடிக் கொண்டிருந்த அந்த நபர், சுதாரிக்கும் முன்பே ராகேஷின் முழங்கை அவன் கழுத்தைப் பின்னால் இருந்து இறுக்கியது.. ஸ்கீயிங்க் பேடை வைத்து அறைந்தான்.

இருவரும் பனியில் உருண்டனர். அவனும் ராகேஷின் முகத்தைப் பிடித்து எதையோ வைத்துக் கீறினான். ரத்தம் வடிந்தாலும் ராகேஷ் பொருட்படுத்தாமல் அவனைத் தாக்கினான்.

தூரத்தில் பனிப்பாறையின் மறைவில் நின்றிருந்த சித்தார்த்துக்குக் கை கால்கள் நடுங்கின. கேமரா இன்று அவன் கையில் ஆடிக்கொண்டிருந்தது. ஆனாலும், பதற்றத்துடன் அந்த உயிர்ப்போரட்டத்தை ஜூம் செய்து வீடியோ எடுக்கத் தொடங்கினான். குரு ஒரு பக்கம் கிடக்க, ராகேஷ்  விரோதியுடன் மல்லுக்கட்டுவதை அவனால் நம்பவே முடியவில்லை.

ராகேஷ், தான் மறைவாக ஷூவில் வைத்திருந்த ரிவால்வரை டக்கென்று உருவி, தீவிரவாதியின் முழங்கால்களில் சுட்டு அவனை நிலைகுலையச் செய்தான்.

பனிச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள அந்தப் பகுதியில், இன்னும் சிலரின் நடமாட்டம் இருப்பது போன்றும் உணர்ந்ததால் ராகேஷ் இன்னும் அலர்ட் ஆனான்.

"குரு, கமான், மெதுவா எழுந்து மேலே போ. அங்க சித்தார்த் இருப்பான்....க்விக்"

ராணுவ வீரர்கள் ஜீப்பிலும், ஹெலிகாப்டரிலும் வருவது தெரிந்தது.

ராகேஷ் சற்றும் தாமதிக்காமல் வாக்கி-டாக்கியின் நீண்ட ஒயரைச் சட்டென உருவி, அந்த நபரின் கழுத்தையும் கைகளையும் சேர்த்துக் கட்டி அவனை அசைய முடியாமல் செய்தான்.

வந்திறங்கிய ராணுவத்தினரிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட ராகேஷை அவர்களுக்கும் அடையாளம் கண்டுகொண்டனர்.

அந்த நபரைத் தீவிரமான பாதுகாப்புடன் கைதுசெய்தனர்.

குரு பனிக்குள் புதைந்திருந்த கால்களை மேலே  இழுத்துக்கொண்டு நகர முயன்ற போது, அவனது பனிச்சறுக்குக் காலணிகளில் இருந்த இரும்புச் சங்கிலியில் ஏதோ கனமான பொருள் மாட்டிக் கொண்டு பனிக்குள் அவனை இழுப்பது போல இருந்தது.

"ராகேஷ்... இங்கே பாரு! என் கால்ல கனமா இருக்கு" குரு மூச்சிரைக்கச் சொன்னதும், ராகேஷ் அவசரமாக பனியை விலக்கி குருவின் கால்களை மெதுவாக பிடித்த போது க்ராம்ப் ஆனில் ஒரு பெட்டி சிக்கியிருப்பது தெரிந்தது. எடுத்துப் பார்த்தான்.

மிக நவீனமான, நீர் புகாத 'ஹை-டெக்' பெட்டி. ராகேஷ் அந்தப் பெட்டியின் குறியீடுகளைப் பார்த்ததும் திடுக்கிட்டான். அப்பெட்டியில் இந்தியாவின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி மற்றும் ராணுவ முகாம்களின் மிகத் துல்லியமான வரைபடங்கள், அதிநவீன 'மைக்ரோ-அசால்ட்' ரகத் துப்பாக்கிகள், சில டிஜிட்டல் உபகரணங்கள். ராணுவத்தினரிடம் ஒப்படைத்தான்.

"இந்தாள் இங்கே புதைச்சு ஒளிச்சு வைச்சிருந்து அதை எடுத்துக் கைமாற்ற வந்திருக்கான். நீ தற்செயலா விழுந்த இடத்துலதான் இந்த ரகசியப் பெட்டி இருந்திருக்கு. அதைத்தான் அவன் தேடியிருக்கான். நீ மட்டும் இன்னைக்கு இங்க விழாம போயிருந்தா, நினைச்சே பார்க்க முடியலை. பெரிய விபரீதம் நடந்திருக்கும்டா!" என்றான் ராகேஷ் வியப்புடன்.

சித்தார்த் தன் கேமராவில் பதிவு செய்துகொண்டே ஓடி வந்தான்.

சற்று நேரத்திற்கு முன்னான பதற்றமும், பயமும் இப்போது ஒரு பெரும் சாதனை உணர்வாக மாறியிருந்தன. தான் எடுத்த வீடியோவை ராணுவத்திடம் ஒப்படைத்தான் சித்தார்த்.

ராகேஷிற்கும் அவனது நண்பர்களுக்கும் நன்றி கூறினர்.

விடுமுறையில் இருந்த ராகேஷ் தன் துப்பாக்கியை ஆபத்து சமயத்தில் பயன்படுத்தியிருந்தாலும் அதற்கான சம்பிரதாயங்களை முடித்தான்.

குருவின் தோளைத் தட்டினான். "பயந்துட்டு இருந்த குரு. இன்னைக்கு உன்னை அறியாமலேயே ஒரு பெரிய ஆபத்தைத் தடுத்துட்ட பாருடா!"

"வாழ்க்கையில இந்த ட்ரிப் இவ்வளவு திரில்லரா இருக்கும்னு நினைக்கல மாமு!" என்று மரண பயத்திலும் குருவைச் சிரிக்க வைக்க முயன்றான் ஷானு.

"ஸாரி குரு. அன்னிக்கு உன்னை என்கரேஜ் பண்ண, 'லைஃப் எப்பவுமே த்ரில்லர்தான். இட் ஷுட் பி எஞ்சாய்ட்' னு சொன்னேண்டா. ஆனா இப்படி சீரியஸா நினைக்கவே இல்லடா." வருண் அவனைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.

"மரணத்தை நேரில் சந்திச்சிட்டேண்டா. உன்னால தப்பிச்சிருக்கேண்டா, ராகேஷ்! நோ மோர் ஃபியர். பஹல்காம் போலாமா?"

"ஹேய் குரு...  யு?  வாட் எ சர்ப்ரைஸ்!!!"

நண்பர்கள் "ஹே" என்று ஆர்பரித்து குருவைக் கட்டிக் கொண்டனர், அவன் பயம் நீங்கிய மகிழ்ச்சியில்!

'பஹல்காம் போலாமா?' என்ற குருவின் கேள்வியில், பழைய பயம் நீங்கிப் புதிய தன்னம்பிக்கை ஒளிர்ந்தது.

=========================================================================================

கி.பி., 5ம் நுாற்றாண்டு பாய்மர கப்பல்; குஜராத் - ஓமனுக்கு வரலாற்று பயணம்


புதுடில்லி: இந்தியாவில் இருந்து ஓமனுக்கு பயணிக்க இருக்கும் இன்ஜின் இல்லாத 'ஐ.என்.எஸ்.வி., கவுண்டின்யா' கப்பல் குழுவினருக்கு, பிரதமர் நரேந்திர மோடி தன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  பண்டைய காலங்களில் கப்பல் கட்டும் முறை வியக்கத்தக்க வகையில் இருந்தது. குறிப்பாக இந்தியா, அரேபியா, கிழக்கு ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் 'தையல் முறை' கப்பல்கள் அப்போது பிரபலமாக இருந்தன. இவை பாய்மரக் கப்பல்கள் என அழைக்கப்பட்டன.கி.பி., 5ம் நுாற்றாண்டில் பயன்பாட்டில் இருந்த பாய்மரக் கப்பலின் வரலாற்று சிறப்பை இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில், அதே பண்டைய தொழில்நுட்பத்துடன் ஒரு பாய்மரக் கப்பலை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

தொழில்நுட்பம்:


ஐ.என்.எஸ்.வி., கவுண்டின்யா என பெயரிடப்பட்ட இந்த கப்பலில் நவீன காலத்து கப்பலில் இருக்கும் எந்த அம்சங்களும் இல்லை. இன்ஜின் இல்லாமல் முழுக்க முழுக்க பாய்மர தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலின் சிறப்பு என்னவெனில் மரப்பலகைகளை ஆணிகள் மூலம் இணைக்காமல், தேங்காய் நார் மற்றும் இயற்கை இழைகளால் இணைத்துள்ளனர்.

அஜந்தா குகை ஓவியங்களில் காணப்படும் பாய்மரக் கப்பலை போலவே, இந்த கப்பலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பண்டைய கால நுால்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் எழுதி வைத்த குறிப்புகளையும் பின்பற்றி இந்தக் கப்பலை உருவாக்கியுள்ளனர். அதாவது 1,500 ஆண்டுகளுக்கு முன் இருந்த கப்பல் கட்டுமான தொழில்நுட்பத்தை அப்படியே இந்த காலத்திற்கு நகல் எடுத்துள்ளனர்.

நாகரிகம்:


இத்தகைய சிறப்பு வாய்ந்த ஐ.என்.எஸ்.வி., கவுண்டின்யா பாய்மரக் கப்பல் நம் நாட்டின் பண்டைய வர்த்தக நாகரிகத்தை பறைசாற்றும் வகையில், குஜராத்தின் போர்பந்தரில் இருந்து மேற்காசிய நாடான ஓமன் கடற்கரை வரை தன் பயணத்தை துவக்கியுள்ளது.

இந்தியாவுக்கான ஓமன் துாதர் இசா சலே அல் ஷிபானி முன்னிலையில், நம் மேற்கு கடற்படை தளபதி துணை அட்மிரடல் கிருஷ்ணா சுவாமிநாதன் கொடியசைத்து பயணத்தை துவக்கி வைத்தார். பண்டைய கால நாகரிகத்துடன் பயணிக்கும் பாய்மரக் கப்பல் குழுவினருக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 


பாய்மர கப்பலின் சிறப்புகள்  * கி.பி., 5ம் நுாற்றாண்டில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தையல் பாய்மரக் கப்பல் தான் ஐ.என்.எஸ்.வி., கவுண்டின்யா  * கப்பலுக்குள் தண்ணீர் புகாமல் இருக்க இயற்கை பிசின்கள், பருத்தி மற்றும் எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது இந்திய கடற்படையைச் சேர்ந்தது என்றாலும் போர்க்கப்பல் அல்ல  * இக்கப்பல் 64 அடி நீளமும், 21 அடி அகலமும் கொண்டது. உலோகத்தை தவிர்க்கும் 'டன்காய்' எனும் பாரம்பரிய இந்திய முறையை பின்பற்றுகிறது  * இதை, கேரளாவைச் சேர்ந்த முதன்மை கப்பல் கட்டும் வல்லுநர் பாபு சங்கரன் தலைமையிலான பாரம்பரிய கைவினைஞர்கள் குழு உருவாக்கியுள்ளது. இதன் நிலைத்தன்மையை உறுதிசெய்ய சென்னை ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையத்தால் ஆய்வுகள் நடத்தப்பட்டன  * இக்கப்பலில் கடம்ப வம்சத்தின் இருதலை பறவையான கண்டபெருண்டா, பாய் மரங்களில் சூரியன் சின்னங்கள், கப்பலின் முகப்பில் சிம்ம யாழி சிலை, ஹரப்பா காலத்து கல் நங்கூரம் போன்ற இந்தியாவின் கடல்சார் வரலாற்றைக் குறிக்கும் பல்வேறு சின்னங்கள் இடம் பெற்றுள்ளன  * இக்கப்பல் கட்டும் திட்டம், இந்திய கடற்படை மற்றும் 'ஹோடி இன்னோவேஷன்ஸ்' அமைப்பு ஆகியவற்றின் கூட்டு ஒப்பந்தத்தின் வாயிலாக, கலாசார அமைச்சகத்தின் நிதியுதவியுடன் 2023ல் துவங்கியது  * கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட இக்கப்பல், மே மாதம் கர்நாடகாவின் கார்வாரில் கடற்படையில் முறையாக இணைக்கப்பட்டது. 

63 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை வணக்கம். திரில்லர் கதை எழுதிய கீதாவுக்கு வாழ்த்துகள். என்றும் அங்கே பணி புரியும் வீரர்களுக்கு மனப் பூர்வமான வாழ்த்துகள். ஜாலியாக டூர் கிளம்பிய இளைக்னர்களுக்கு இப்படி ஒரு சோதனை. அதிலிருந்து அவர்கள் மீண்ட வேகம். தீரம் எல்லாமே ஆச்சரியம்.
    கீதாவின் எழுத்தாற்றல் பிரமிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி வல்லிசிம்ஹன் அவர்களுக்கும் காலை வணக்கம். உங்களுக்கு இது மாலையாக இருக்கலாம். முன்பு போல் தங்கள் வருகை மகிழ்வை தருகிறது. இனி தொடர்ந்து வாருங்கள். நன்றி சகோதரி.

      நீக்கு
    2. வாங்க வல்லிம்மா. உங்களை இங்கு பார்க்க மிகவும் சந்தோஷம். நீங்க திருக்குறுங்குடி பற்றிஎ ழுதி வருவது தெரிந்தது. வாசிக்கவும் வருகிறேன்.

      திரில்லர் கதை எழுதிய கீதாவுக்கு வாழ்த்துகள்.//

      நன்றி வல்லிம்மா.

      //அதிலிருந்து அவர்கள் மீண்ட வேகம். தீரம் எல்லாமே ஆச்சரியம்.
      கீதாவின் எழுத்தாற்றல் பிரமிக்க வைக்கிறது.//

      ரொம்ப நன்றி வல்லிம்மா.

      பனிக்கடியில் ஆயுதங்கள் இருந்து அது சிக்கியது ஓர் உண்மைச் சம்பவம். சில வருடங்களுக்கு முன் நடந்த ஓர் சம்பவம். அதை படத்தோடு இணைத்து எழுதியதுதான்.

      நன்றி வல்லிம்மா

      கீதா

      நீக்கு
    3. In late 2024, reports indicated that terrorists involved in a Gulmarg ambush had hidden in the snow-clad ranges for approximately eight weeks prior to their attack.Past Arms Recoveries: A significant cache was recovered in July 2020 in the Marpathri forest area of upper Gulmarg, which included a Dragunov sniper rifle, 194 rounds for AK-47s, and IED circuits.Current Security Posture: The Gulmarg Sector remains a high-alert zone due to its strategic position on the Line of Control (LoC), with constant patrolling by the Army and BSF through rugged, snow-covered terrain.

      இப்படியான சம்பவங்களை வாசித்தது நினைவுக்கு வந்து எழுதியதுதான்.

      கீதா

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    சகோதரர் வெங்கட்நாகராஜ் நாகராஜ் அவர்களின் தொடர் பதிவில் வந்த பனிச்சறுக்கு படத்திற்கு சகோதரி கீதாரெங்கன் எழுதிய கதை அட்டகாசமாக உள்ளது. அருமையாக எழுதியுள்ளார். நல்ல திறமையான எழுத்து. திரில்ங்கான கதை மிக ஸ்வாரஸ்யமாக இருந்தது. மனமார்ந்த பாராட்டுக்கள்.

    இதே படத்திற்கு சென்ற வாரம் நீங்கள் எழுதிய கதையையும் படித்தேன். அதுவும் மிக நன்றாக இருந்தது. சென்ற வார கருத்துக்களின் நடுவில் சொல்ல நினைத்து விடுபட்டு விட்டது. மன்னிக்கவும்.

    போட்டி போட்டு கொண்டு எழுதும் உங்களின் இருவரின் திறமைக்கும், ஆர்வத்திற்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    சென்ற வார தங்களுடைய கதையை படித்து வரும் போதே சகோதரர் வெங்கட்நாகராஜ் அவர்கள் பதிவில் படத்தை பார்த்த நினைவு வந்தது. நான் தொடர்ச்சியாக அவர் பதிவை என் சூழ்நிலைகளினால் படிக்கவில்லை. அப்போது அந்தப்படத்திற்கான பகுதி மட்டும் படித்திருந்தேன் . இனிதான் அவர் பதிவை முழுமையாக படிக்க வேண்டும். அவரின் எழுத்தும், பனிசூழ்ந்த மலைப்பயணங்களின் படங்களும் மனதிற்கும், கண்களுக்கும் இனிமையானவை. அவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கமலாக்கா.

      மேலே வல்லிம்மா கருத்தின் கீழ் ஆங்கிலத்தில் கொடுத்திருக்கும் செய்திகளின் அடிப்படையில் நம்ம கற்பனையைத் தட்டிவிட்டு இப்படத்திற்கு எழுதியதுதான் அக்கா.

      கீதா

      நீக்கு
  4. உறவுமுறையில் பெரிய காரியம்...
    சில நாட்கள் ஆகலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா பார்த்துக்கோங்க. எப்போது வர முடிகிறதோ வாருங்கள்

      கீதா

      நீக்கு
    2. தம்பி துரை அவர்கள் உறவு முறை சம்பிரதாயங்கள் முடிந்து கண்களும் நலமாகி வரப் பிரார்த்தனைகள். இன்னிக்கு இங்கேயும் எனக்கும் அப்படி ஒரு செய்தி. அதனால் இன்னிக்கு வேலைகளும் கொஞ்சம் தாமதம்.

      நீக்கு
    3. சகோ துரை செல்வராஜூ உறவினர் வீட்டில் நடந்த பெரிய காரியத்திற்கு அஞ்சலிகள் . உறவினர் அனைவருக்கும் இறைவன் ஆறுதலை தர பிரார்த்தனைகள்.

      நீக்கு
    4. ஆழ்ந்த இரங்கல்.

      நீக்கு
  5. அருமையான action கதையை வழங்கியிருக்கும் கீதா ரங்கனுக்கு பாராட்டுகள்! one more feather on her cap!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! பானுக்கா, நிஜமாகவா!! மிக்க நன்றி பானுக்கா.

      கீதா

      நீக்கு
  6. ஜெ கே அண்ணா, உங்களுக்கும் அக்காவுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளுடன் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருந்திட பிரார்த்தனைகளும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. பழங்கால முறையில் கட்டமைக்கப்பட்டுள்ள கப்பலில் ஏன் பயணிக்க வேண்டும்? எனக்கு புரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுக்கா, அதுக்கான காரணம் அந்தச் செய்தியிலேயே இருக்கிறதே.

      கீதா

      நீக்கு
  8. பாய்மரக்கப்பல் ஆஹா! செமையா இருக்கும்ல ஸ்ரீராம். நேரடியாகக் கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டே பயணிப்பது ஆனால் மழை பெய்தால் வெயில் அதிகமாக இருந்தால் மேலே டார்பாலின் போல ஏதாவது விரித்திக் கொள்வார்களோ?

    பாய்மரக்கப்பல்களைப் படத்தில் பார்த்து இதில் பயணித்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையில் - அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் இந்தோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் என்று சிறடிப்பதுண்டு.

    இதை வாசித்ததும் ஆஹா என்று சொல்ல வைத்தது. மெதுவாகக் கடலில் பயணிப்பது என்பது அது ஒரு தனி அனுபவம்.

    இது சுற்றுலாப்பயணிகளுக்கும் உண்டா? எவ்வளவு ஆகும் போன்ற விவரங்கள் பார்க்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய சரித்திர நினைவுகளுடன் பயணிக்கலாம்!

      நீக்கு
  9. அலிஸ்டர் மெக்லீன் எழுதிய ஐஸ் ஸ்டேஷன் ஜீப்ரா கதை அளவுக்கு திரில் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் முதலாக அலிஸ்டர் மக்லீன் 74 ஆம் வருடம் முதல் முறை ராஜஸ்தான் போனப்போப் படிக்க ஆரம்பித்தேன். முதல் தரம் படிச்சதும் இது தானோ என நினைவு. ஆனால் இப்போது இந்தப் புத்தகம் என்னிடம் இருக்கு. ஸ்ரீரங்கத்தில். அடிக்கடி இதையும் அக்தா க்றிஸ்டீயின் இன்னொரு புத்தகமும் அடிக்கடி படிப்பவைகளில் ஒன்று. இத்தோடு (ஆர்ச்சி(ஆர்க்கி?) காமிக்ஸ் தொடர் புத்தகங்களும்.

      நீக்கு
    2. ஆஹா! கௌ அண்ணா, நிஜமாகவா! மிக்க நன்றி கௌ அண்ணா.

      இப்ப நீங்க சொன்னதும் அந்தக் கதையை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டது.

      கீதா

      நீக்கு
    3. // அலிஸ்டர் மெக்லீன் //

      யார் அது?  அந்தக் கால ஆஸ்திரேலிய பௌலரா?!

      நீக்கு
    4. கௌ அண்ணா இந்த ஐஸ் ஸ்டேஷன் ஜீரோ கதை படமாகவும் வந்ததோ கூகுளில் போட்டதும் படம் யுட்யூபில் இருக்குன்னு வருது. அது ஸ்பை திரில்லர் கதையோ?

      கீதா

      நீக்கு
    5. ஐஸ் ஸ்டேஷன் ஜீப்ரா - internet archives la இருக்கிறது கதை ஆனால் யுட்யூபில் இருக்கும் சினிமா வர மாட்டேங்குது அது ஏதோ ஒரு புரியாத லிங். சின்ன க்ளிப்பிங்ஸ் இருக்கு முழு சினிமா இல்லை

      கீதா

      நீக்கு
    6. அலிஸ்டர் மக்லீன் அநேகமாக எல்லாக் கதைகளுமே கதாநாயகன் பார்வையிலேயே வர்ணித்திருப்பார். வர்ணனைகள் நிறையவும் சம்பாஷணைகள் குறைவாகவும் இருக்கும். ஆனால் அகதா க்றிஸ்டியின் மிஸ் மார்ப்பிளை விட ஹெர்குல் போய்ரோ(Hercule Poirot) ரொம்பப் பிடிக்கும். ஹெரால்ட் ராபின்ஸோ அதிகம் யூதர்களின் வாழ்க்கை, குடும்பம் பற்றியே எழுதுவார். அவருடைய ஸ்டோன் ஃபார் டானி ஃபிஷர் A stone for Danny Fisher படிச்சுட்டும் அழுதிருக்கேன். ஹெரால்ட் ராபின்ஸ் இதை நான் பிறந்தப்போவோ அல்லது அதுக்கும் முன்னரே எழுதி இருப்பதாக முன்னுரையில் படிச்சேன். சரியா எப்போனு தெரியலை.

      நீக்கு
  10. இந்தியாவின் இந்தப் பாய்மரக்கப்பல் பற்றிய செய்தியையும் படத்தையும் அதன் விபரங்களையும் இப்போது தான் அறிந்து கொண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கப்பல் பயணமெல்லாம் என்னால் போக முடியுமா என்றெல்லாம் தெரியாது. ஆனால் ஹூஸ்டனில் இருந்தப்போ ஒரு தரம் கடல் பயணம் அங்கே இருந்த ஒரு சின்னக் கப்பல் சுற்றுலாவுக்கானது பயணிகளை அழைத்துச் செல்லும் கப்பல் ஆனால் பெரிதல்ல. அதில் போனோம். படகுப் பயணங்கள் எல்லாமும் போயிருக்கோம். முதல் தரம் கன்யாகுமரி போனப்போக் குழந்தைகளுக்காக விவேகானந்தர் நினைவிடம் படகில் போனோம்.. காசியில் அநேகமாகத் தினமும் படகில் போயிருக்கோம். ஒரு நாள் முழுக்கப் படகிலேயே எல்லாக் கட்டங்களுக்கும் சென்று பிண்டப் பிரதானம் செய்திருக்கோம். நாங்க போன ஆகஸ்ட் மாதம் கங்கை பரிபூரணப் பிரவாஹத்தில் இருந்தாள். போகும்போது நீருக்கடியிலிருந்து வெளியே வந்திருந்த கோயில்களைச் சடங்குகளை முடித்துக் கொண்டு திரும்புகையில் வெள்ளநீர் வந்து மூடிக் கொண்டு விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாரஸ்யம்தான் இல்லை?  சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள்.

      நீக்கு
  11. தி/கீதாவின் கதையை இனிமேல் தான் படிக்கணும். எல்லோரும் பாராட்டி இருப்பதைப் பார்த்தால் கதை மிகவும் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

    திரு ஜேகேசி அவர்களுக்கும் அவர் மனைவிக்கும் இனிய மணநாள் வாழ்த்துகள். நானெல்லாம் இதிலே சீனியர். வல்லி என்னை விட சீனியர். போன வருடம் ரங்க்ஸ் கல்யாண நாளன்று ஆஸ்பத்திரியில் இருந்தார். பையர் அன்னிக்குத் தான் தோஹாவிலிருந்து ஸ்ரீரங்கம் வந்திருந்தார். அப்பாவுக்கு நினைவெல்லாம் தடுமாற்றம் இல்லாமல் இருக்கா என்பதற்கு இன்னிக்கு என்ன விசேஷம் தெரியுமா எனக் கேட்டார். அவரும் சொன்னார் 55 ஆவது திருமண நாள் என்று. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்ற வருடத்து நினைவுகள் இல்லையாக்கா...

      //அவரும் சொன்னார் 55 ஆவது திருமண நாள் என்று. :(//

      ஓஹ் அக்கா! இந்த வரி தான் என் மனதில் இன்று காலை ஒடியது. இன்று ஜெ கே அண்ணாவின் 50 வது திருமண நாள் என்று அறிந்ததும்....டக்கென்று ஒரு கதை மனதில் வந்ததற்கு ஒன்லைன் என்று சொல்வது போல இந்த லைன் தான் முதலில் மனதுள் வந்து கதை உருவானது. ஆனால் மணநாள் நம்பர்தான் வேறு! எழுதலை இன்னும் ஹிஹிஹி....இப்படி மனசுல கதைகள் வந்து ஒரு 3 எண்ணம் இருக்கு இப்ப

      கீதா

      நீக்கு
    2. //சென்ற வருடத்து நினைவுகள் இல்லையாக்கா...

      //அவரும் சொன்னார் 55 ஆவது திருமண நாள் என்று. :(////

      ஞாயிற்றுக் கிழமை அன்னிக்குத் தான் மே 17 அன்று 55 முடிந்து 56 ஆரம்பம். இந்தத் திருமண நாள் தான் மாமா இல்லாமல் நான் மட்டுமே இருக்கேன். பெண் மட்டும் நினைவு கூர்ந்தாள். பையர் தெரியும். ஆனாலும் வாயே திறக்கலை! அன்னிக்கு முழுதும் மனம் காரணம் புரியாமலும் மேலும் இனம் தெரியாமலும் கலக்கமாக இருந்தது.

      மத்யமரில் சில மாதங்கள் முன்னர் (நம்ம ரங்க்ஸ் பிரிஞ்ச சில நாட்களில்னு நினைக்கிறேன்.) சீலம் ஜானகிராமன்னு ஒருத்தர் ஒரு நிகழ்வைக் கற்பனையோ/ உண்மையோ எழுதி இருந்தார். கணவனுக்கு உடல்நிலை மோசம். இருதய நோய் முற்றி இருக்கு. கணவன் மனைவிக்குத் தெரியக் கூடாதுனு மறைச்சு வைக்க மனைவியோ அது தெரிந்தும் தைரியமாகக் கணவன் உயிருக்குப் போராடுகிறாள். கணவனோ இது ஒரு பைத்தியம். எதுவுமே புரியாமல் இப்படி அசடா இருக்கே, நான் இல்லாமல் எப்படி வாழப் போகிறது! இதுக்கு எப்படி நான் இப்படி இருப்பதைச் சொல்லுவது? திடீரென எனக்கு ஏதானும் ஆகிவிட்டால்? இவ என்ன செய்வா? யாரைக் கூப்பிடுவா என்றெல்லாம் யோசனைகள் போகத் தற்செயலாக அதை உணர்ந்த மனைவி கணவனிடம் பேசுவாள். மாமாவின் கடைசி மணிகளில் நாங்க பேசினது தான் அந்த சீலம் ஜானகிராமன் கிட்டே இருந்து கேட்டாரோனு எனக்குத் தோணியது. படிக்கும்போதே கண்ணை மறைச்சுக் கண்ணீர் பொங்க ஆரம்பிச்சது. இப்போவும் தான்!

      நீக்கு
  12. படத்துக்கு ஏற்ற பொருத்தமான கதையைச் சற்றும் தொய்வில்லாமல் கோர்வையாகக் கொடுத்திருக்கும் தி/கீதாவுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். தொடர்ந்து நீங்கள் அனைவரும் ஒவ்வொரு வாரமும் இதே போல் செவ்வாய்க்கிழமைகளைச் சிறப்பிக்கக் கேட்டுக் கொள்கிறேன். ஸ்ரீராம் வழக்கம் போல் கல்யாண வேலைகளில் பிசியா? ஜேகேசி சார் திருமண நாள் கொண்டாடிட்டு இருப்பார். மத்தவங்க மெதுவா வருவாங்கனு நினைக்கிறேன். நெல்லை சென்னையில் எந்த ஓட்டலில் தோசை சாப்பிட்டுட்டு இருக்காரோ? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா மிக்க நன்றி கீதாக்கா பாராட்டிற்கு

      ஜெ கே அண்ணா பிஸி. இன்று அவர்கள் வீட்டில் விருந்து.

      நெல்லை பாண்டிபஜாரில் என்னோட கஃபேல சாப்பிட்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்! (ஹப்பா அவரை இழுத்தாச்சு!!!!)

      கிடிதா

      நீக்கு
    2. தட்டச்சும் போது கீ ஸ் துள்ளுவதால்...கீதா என்று வர வேண்டியது கிடிதான்னு ஹிஹிஹி !!

      அட! இந்தப் பெயர் வித்தியாசமா இருக்கேன்னும் தோன்றியது!!

      கீதா

      நீக்கு
    3. நெல்லை சாதாரணமாகவே முதலில் இரண்டு கமெண்ட் போட்டு விட்டு காணாமல் போய்விடுவார்!  அப்புறம் பதிவைவிட கமெண்ட்ஸுக்கு பதில் சொல்வார்.  இப்போ கீதா சொல்வதைப் பார்த்தால் அவர் சென்னையில் ஏதோ பயணத்தில் இருக்கிறார் என்று தெரிகிறது.  கதை அவர் படிக்க மாட்டாரே.  ஜஸ்ட் பத்து வரிகள் என்றால் படிப்பார்.  இல்லை நெல்லை?

      நீக்கு
    4. அன்புள்ள கிடிதா..  கிடிதா கேஃபில் ..  ச்சே...     கீதா கேஃபில் மதியான நேரமா இருந்தா கூட தோசைதான் சாப்பிடுவார் நெல்லை என்பது உங்கள் கருத்தா?

      நீக்கு
    5. ஹாஹாஹாஹா.....ஸ்ரீராம் சிரித்துவிட்டேன். இல்லை அவர் காலைல டிஃபன்...இப்ப எங்க சாப்பிடுகிறாரோ!!!! அது அப்ப உள்ள நியூஸ்...இப்ப சீன் மாறிருக்கும்.

      பாருங்க நாம அவர் தலைய உருட்டிட்டு இருக்கோம்!!!!

      கீதா

      நீக்கு
    6. நெல்லை ஏற்கெனவே பல முறை தான் சாதம் அதாவது நெல்லுச்சோறு சாப்பிடுவதில்லைனு சொல்லி இருக்கார். மறந்துடறீங்க போல ரெண்டு பேருமே. என்னவோ போங்க. அவர் கீதா கஃபேயில் என்றால் மசால் தோசை சாப்பிடலாம். மத்தியானம் என்றால் 2 மணிக்கு மேல் பாண்டி பஜார் கீதா கபேயில் அடை, அவியல் முன்னெல்லாம் கிடைக்கும். அடை மேலே வெண்ணெய், வெல்லம் வைச்சுக் கொடுப்பாங்க, பாருங்க. அந்தச் சுவையே தனி. அவியலும் சூடா இருக்கும். அதெல்லாம் ஒரு காலம். காஃபி ஃபில்டர் காஃபி ஒரிஜினலா இருக்கும்.

      நீக்கு
    7. ஆனால் நெல்லை காஃபி குடிக்க மாட்டார். இது தெரியாம நான் எங்க வீட்டில் அவர் வரச்சே எல்லாம் 2,3 தரம் காஃபி கொடுத்திருக்கேன். வாயே திறக்காமல் (காபிக்கு மட்டும் திறப்பார்) காஃபியைக் குடிச்சுடுவார். :))) காலை டிஃபனெல்லாம் சாப்பிடறதில்லை. ஒரேயடியாக பனிரண்டு வரை ஏதும் சாப்பிடாமல் இருந்துட்டு (இளைக்கிறதுக்காம். இன்னும் கூடத் தான் வெயிட் ஏறும். க்ர்ர்ர்ர்)பின்னர் சாப்பிடுவார். அதுவும் டிஃபன் வகையறா தான். பலமுறை இதைச் சொல்லிட்டார். ஆனா நீங்க ரெண்டு பேருமே மறந்துடறது எப்படினு தான் புரியலை. :))))

      நீக்கு
    8. கீதாக்கா அவர் சாதம் சாப்பிட மாட்டார் என்றும் அதுவும் ஹோட்டலில் என்பதும் தெரியும். அவர் என்னென்ன சாப்பிடுவார்ன்னு லிஸ்டே ரொம்பச் சின்னது எனக்கு மனப்பாடம்!!!!! அதனால அதெல்லாம் மறக்காது ஹாஹாஹா...நான் சொன்னது காலைல அவர் சாப்பிட்டது....தோசை என்றே நினைக்கிறேன். சாம்பார் நல்லாருக்கும் நல்லாருக்கு இங்கனு சொல்லி உங்க வீட்டுக்கு வரப்ப இப்படி சாம்பார் கிடைக்குமா என்றுவழக்கம் போல் கலாய்த்தால் நான் அவரைக் கலாய்க்க.... நான் சொன்னேன்...ஹாஹாஹா என் கஃபேலயே சாப்பிட்டுட்டு என் ரெசிப்பிலதான் அவங்க செய்யறாங்க என்று பிட் போட்டு....

      கீதா கஃபேல அடை நல்லாருக்கும் முன்னதான்.

      கீதா

      நீக்கு
    9. நான் தினமும் கருத்தளிப்பது அவ்வப்போது கிடைக்கும் நேரம், அதுவரை படித்துமுடித்தது பொறுத்தது.

      அபூர்வமா படித்த பகுதிக்கு கருத்தளிக்காமல் இருந்திருக்கிறேன். அன்றைய நிலவரம் அப்படி

      நீக்கு
    10. அபூர்வமா சாதம் சாப்பிடுவேன். ஹோட்டல், விசேஷங்களில் கண்டிப்பா சாதம் சாப்பிடுவதில்லை. பரிசேஷணத்துக்கு ஒரு ஸ்பூன் சாதம். ஆனால் நான் சாப்பிடுவதில்லை

      நீக்கு
    11. பா.பஜார் கீதா கஃபேயில் மினி டிபன் சாப்பிட்டேன். வெண்பொங்கல் நல்லா இருந்தது. எடை குறைக்கணும் என்பது இப்போல்லாம் மனசுல எப்போதும் இருக்கு (எடை குறையலை அது வேறு விஷயம்)

      நீக்கு
    12. கதையை மொபைலில் படிக்க இயலாது. எப்போ படிப்பேன்னு தெரியலை. நாளையிலிருந்து மூன்று நாட்கள் பிரபந்த பாராயணம். காலை யோகாவிற்குப் பிறகு எட்டு மணிக்கு கிளம்பணும். இரவுதான் வருவேன் வீட்டிற்கு

      நீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. கீதா உங்கள் கதை மிக அருமை.
    வெங்கட்நாகராஜ் பதிவின் படம் தந்த கற்பனை ஊற்று கதைகள் அருமை.
    நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

    //வாழ்க்கையில இந்த ட்ரிப் இவ்வளவு திரில்லரா இருக்கும்னு நினைக்கல மாமு!" என்று மரண பயத்திலும் குருவைச் சிரிக்க வைக்க முயன்றான் ஷானு.//

    இனிமையாக ஆரம்பித்த ட்ரிப் இப்படி திரில்லராவும் நாட்டுக்கு நன்மை செய்யும் விதமாகவும் இருந்தது அருமை.


    //"இவன் நாட்டுப் பற்றுக்கு எல்லையே இல்லை. பாரேன், நம்ம கொடிய பார்க்கற இடத்துல எல்லாம் சல்யூட் அடிச்சிட்டே வரான்!" ராகேஷை கலாய்த்தார்கள். கலாய்த்தாலும் அவர்களுக்கும் அப்பழக்கம் தொற்றிக் கொண்டது.//

    ராகேஷின் நாட்டுப்பற்று நாட்டுக்கு நல்லது செய்து விட்டது.

    //
    "ஸாரி குரு. அன்னிக்கு உன்னை என்கரேஜ் பண்ண, 'லைஃப் எப்பவுமே த்ரில்லர்தான். இட் ஷுட் பி எஞ்சாய்ட்' னு சொன்னேண்டா. ஆனா இப்படி சீரியஸா நினைக்கவே இல்லடா." வருண் அவனைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.//

    வருண் சொன்னது போல குரு த்ரில்லரை சந்தித்து விட்டார்.

    '//பஹல்காம் போலாமா?' என்ற குருவின் கேள்வியில், பழைய பயம் நீங்கிப் புதிய தன்னம்பிக்கை ஒளிர்ந்தது.//

    அனைவருக்கு தன்னம்பிக்கை ஒளிரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிக்கா....அந்த வரிகளைச் சுட்டி எழுதியதற்கும்.

      கீதா

      நீக்கு
    2. இங்கு சென்னையில் முகலிவாக்கம் அருகே செல்லும்போது பெரிய தேசியக்கொடி கண்ணில் படும்.  மனம் விம்மும்.  இங்கேயே அப்படி இருக்கும்போது இமயமலை மாதிரி இடங்களில் கொடி கண்ணில் பட்டால்...  சல்யுட்தான்.

      நீக்கு
    3. ஸ்ரீராம் தேசியக்கொடியை எங்கு பார்த்தாலும் மனம் ஒருவிதமாகப் புல்லரித்து மனம் புளகாங்கிதம் அடைந்து சல்யூட் சொல்லத் தோன்றும். நீங்கள் சொன்னது போல் நான் இமயமலையில் பார்த்த போதும் புல்லரித்து நம்மை அறியாமல் வந்துவிடும். நம் எல்லோருக்குமே உள்ளத்தில் ஊறிய ஒன்றில்லையா.

      கீதா

      நீக்கு
  15. 50 வது மணநாள் விழா காணும் திரு ஜெயக்குமார் சந்திரசேகர் தம்பதியருக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 50 தாவது மணநாள் காணும் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். இன்றும் போல் என்றும் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      காலையில் இந்த செய்தி இல்லை. அதனால் என்னால் ஒன்றும் சொல்ல இயலவில்லை. இப்போது சகோதரி கோமதி அரசுவுடன் சேர்ந்து வாழ்த்துகள் சொல்கிறேன். வாழ்க வளமுடன். அப்போது பார்த்து சொல்லியிருந்தாலும், எவர் கண்களிலும் படாமல் ஒளிந்திருக்கும். அதுதான் என் ராசி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      நீக்கு
  16. ஆறுதல் கூறியுள்ள அனைவருக்கும்
    நெஞ்சார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  17. ஜெகேஸி தம்பதியருக்கு வாழ்த்துக்கள். எல்லா நலன்களும் அவர்கள் வாழ்வில் இறைவன் கருணையில் பெருகட்டும்!

    பதிலளிநீக்கு
  18. தி.கீதா சகோ!
    கதைக்கு நீங்கள் கொடுத்த தலைப்பா இது? ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஜீவி அண்ணா, மேலே முதலில் இருப்பது ஸ்ரீராம் கொடுத்த தலைப்பு. படத்தின் கீழ் கதைக்கு மேலே இருப்பது நான் கொடுத்தது. நாங்கள் இருவரும் பேசிக் கொண்டுதான், பல யோசித்தும்....எதுவும் சரியாகலை என்று ஸ்ரீராம் மேலே உள்ள தலைப்பைக் கொடுத்தார்.

      கீதா

      நீக்கு
  19. ​வாழ்த்திய அனைவருக்கும் உளமார்ந்த நன்றி .வாழ்க வளமுடன்
    Jayakumar

    பதிலளிநீக்கு
  20. இன்றைக்கு திங்கட்கிழமை இல்லே தான். இருந்தாலும் இன்று வாசித்த கதை திங்கட்கிழமையை நினைவூட்டியது.
    கிண்ணம் கிண்ணமாக பார்த்துப் பார்த்து தட்டைச் சுற்றி வைத்த சைட் டிஷ்ஷில் மகா கவனம். எல்லாமே துல்லியமாக மகா பெர்ஃபெக்ட். ஆனா, மெயின் டிஷ்?.. நடுவே இருக்க வேண்டிய வயிராற சாப்பிட வேண்டிய அந்த சாப்பாடு அயிட்டம்? இன்னுமே சரியாப் பரிமாறப்படாத உணர்வு.
    அடுத்த தடவை பரிமாறும் பொழுது இதில் கவனம் கொள்ளுங்கள் சகோ.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவி அண்ணா.

      நீங்கள் சொன்னது புரியலை ஜீவி அண்ணா. யோசிக்கிறேன்.

      கீதா

      நீக்கு
    2. சறுக்கி விளையாடும் போது ஏற்படும் நிகழ்வை இன்னும் சரியாகச் சொல்லியிருக்கலாம் என்று இல்லையா?

      அது இன்னும் சொல்லலாம் ஆனால் என்னவோ இப்போது கதை பெரிதாகிவிடுமோ என்றும் ஒரு தயக்கம். நான் அனுப்பும் முன் கதையை இன்னும் மெருகேற்றலாம் குறிப்பாக அப்பகுதியை என்று நினைத்து ஸ்ரீராமிடமும் சொன்னேன். என்னவோ எனக்கு இன்னும் திருப்தி வரலை தட்டிக் கொட்டித் தருகிறேன் என்று. ஆனால் முடியவில்லை அதற்குள் எனக்கும் இங்கு பணிகள்...அப்படியே அனுப்பிவிட்டேன். பார்க்கப் போனால் அனுப்பிய பிறகு சில வரிகள் சேர்க்கச் சொல்லி ஸ்ரீராம் சேர்த்தார்.

      கதையைத் திருப்தியாக எழுத எனக்கு நிறைய நேரமெடுக்கிறது.

      புரிந்தது ஜீவி அண்ணா. அடுத்த முறை கண்டிப்பாகக் கவனம் கொள்கிறேன்.

      நன்றி ஜீவி அண்ணா

      கீதா

      நீக்கு
  21. கி.பி., 5ம் நுாற்றாண்டு பாய்மர கப்பல்; குஜராத் - ஓமனுக்கு வரலாற்று பயணம்//

    நன்றாக இருக்கிறது பாய்மர கப்பல்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!