14.10.25

பொக்கிஷம் - சிறுகதை : எழுத்தில் ஹிம்சை --- எஸ்.ரங்கராஜன் (சுஜாதா)

  

சுஜாதாவின் முதல் கதை.  முதன் முதலாக அவர் எழுதிய கதை உள்ளூர் சிறு பத்திரிகை ஒன்றில் வெளியான நாள் பற்றி அவர் 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் எழுதி இருப்பார்.  "உலகமே பளிச்சென துடைத்து விட்டார் போலிருந்தது.  அந்தப் பத்திரியாக் வந்த உடனே எல்லா காபியும் விற்றுப்போனது" என்றெல்லாம் கற்பனை செய்ததாக எழுதி இருப்பார்.  நீண்ட நாட்களாக அந்தக் கதை கிடைக்கவில்லை என்று சொல்லி இருந்தார்.  பின்னர் எப்போது கிடைத்ததோ, வாட்ஸாப்பில் வந்திருந்தது அந்த பத்திரிகையின் பக்கம்.   அவர் இருக்கும்போதே கிடைத்து, அவரும் பார்த்தாரோ, இல்லையோ...

மேலும் இந்தக் கதையின் இந்தப் பக்கம் இன்னொரு தளத்திலும் இருந்தது.  பெயர் மறந்து விட்டது.  ஜீவி சார் இந்த தளம் பற்றிக்குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்.  பாதி இருக்கும் இந்தக் கதையின் பக்கத்தின் தொடர்ச்சியை கீதா ரெங்கன்தான் தேடிக்கொடுத்தார்.


===========================                                                                  

சிறுகதை

எழுத்தில் ஹிம்சை

எஸ்.ரங்கராஜன்

 

சார்லஸ் லாம்ப், கட்டுரை, கவிதைகள் எல்லாம் இரவு வேளைகளில்தான். அதாவது இரவு 10, 11 மணிக்கு மேல்தான் எழுதுவாராம்.  எழுத்தாளர் வி நாகராஜன் அவர்களும் அப்படித்தான். இராத்திரி வேளையில் பயங்கர அணைப்பில்தான் அவர்கள் கற்பனைக்கு மூச்சு வரும். சர சர சரவென்று சாரைப்பாம்பு சீறுவது போல அவருடைய பேனா அந்த வேளைகளில் சீறும். அந்த "இரிடியம்" முனையில் எத்தனை துளிக் கண்ணீர், எத்தனை துளி ரத்தம், எத்தனை கனவுகள், எத்தனை காதல்கள், எத்தனை தந்திரங்கள்?

நாகராஜனின் புத்தகங்கள் அனேகம் வந்துவிட்டன. அவை யாவும் கொலைக்கதைகள், கொள்ளைக்கதைகள். கதைகள், 'கருணாநிதி பாங்க் கொள்ளை கொலை!' - 'வைரத்துக்காக நாலு உயிர்', 'பயங்கரம்....பயங்கரம்!', 'விலாப் புறத்தில் கத்தி' இவை அவரின் ஏராளமான நாவல்கள். சிலவற்றில் விநோதமான தலைப்புகள். கண்ணாடி முகமூடி அணிந்த ஒரு பெண். அவள், 'அடேயப்பா! எத்தனை சாகசங்கள் செய்கிறாள்? கடைசி அத்தியாயத்தில் அவள் தன் முகமூடியைத் திறந்ததும்...ஐயோ! அந்த அத்தியாயம் எத்தனைப் பேர்களை ஆச்சர்யத்தில் மடக்கியிருக்கிறது?...

அப்போது கூட அவர் 'ஏழரைக் கொலைகள்' என்ற ஒரு நாவலைத்தான் பாதி எழுதிக் கொண்டிருந்தார். அவரது துப்பறிபவன் (டாயிலுக்கு ஷெர்லக் ஹோம்ஸ் போல இவருக்கு துரைமூர்த்தி) ஆறாவது பிணத்தை ஒரு 'ஹை பவர் லென்ஸ்' வைத்து ஆராய்ந்து கொண்டிருந்தான். பக்கங்கள் பறந்துகொண்டிருந்தன. ஏழாவது கொலைக்கான செட்டிங்குகள் எல்லாம் சேர்த்து ஜோடித்தாகிவிட்டது. மயிர்க்கூச்செறியும்படியாக அந்தக் கொலை துரைமூர்த்தியையே  ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டு நடக்கப் போகிறது...

வதனராஜ், 'ஓப்பன் ஹீம்' நாவல் ஒன்று படித்துக் கொண்டிருந்தான். அதிபயங்கரமான நாவல் அது. நெற்றிப்புருவத்துக்குக் கொஞ்சம் மேலே முத்து வரிசையாக வியர்வைத் துளிகள் படிந்து இருந்தன. திடீரென வதனராஜன் தன் மேல் ஏதோ நிழல் படிவதை உணர்ந்தான்.

இப்படி எழுதினதும் 'நாகன்' (இதுதான் அவர் புனைபெயர்) தண்ணீர் குடிக்கக் கண்ணாடி டம்ளரை எடுக்க...

என்ன ஆச்சர்யம்...கிளாஸ் டம்ளர், (பக்கத்தில் மேஜையில் இருந்தது) மெள்ள மெள்ளக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. சுமார் ஐந்து அடி உயரம் வரை பிரயாணம் செய்து நின்றது. அப்புறம் லேசான சிரிப்புக் கேட்டது. 'நாகனுக்கு' பயம் ஜிலீர் எனப் பரவியது உடம்பு பூராவுமாக.

"சார் நாகராஜன்!"

"யாரு?"

"சார், நீங்க துளி கூடப் பயப்பட வேண்டாம். மரவட்டையைப் போல நான் ரொம்ப ஹாம்லெஸ். (Harmless)."

"நீ யாரு முதல்லே!"

"என் பேர் பரந்தாமன். நான் ஒரு கிராஜுவேட்."

"நீ எங்கப்பா இருக்கே...தெரியல்லையே?"

"இங்கேதான் சார். நான் ஆவி!"

"ஹாவ்!" நாகன் எழுந்தார். அவர் தோளை இரண்டு கரங்கள் மெல்லிதாக அழுத்தம் கொடுத்து நாற்காலியில் மீண்டும் உட்கார வைத்தன. நாகராஜன் அசந்துவிட்டார்.

"சார், என்னைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. நான் ஒன்றும் செய்யமாட்டேன் சார். வீணாகக் கலவரப்பட்டாத்தான் அப்புறம் கேவலமாப் போய்விடும்."

"அப்பா பரந்தாமா, நான் என்னப்பா ஏதாவது டெலிகைனஸிஸ், ப்ளான்ச் செட்ரைடிங், டெலிபதி இதுகள்ல ஏதாவது படிச்சுபுட்டு உன்னை வரவழைச்சேனா? இல்லையே! ஏன் என்கிட்ட வந்தே பயப்படுத்துறதுக்கு!"

"சார், அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை சார். உங்க நாவல்களை நான் எப்பவாவது இந்த முனிசிபாலிட்டி கருணாமூர்த்திகள் வெச்சு நடத்துற பார்க்குகளிலே மஞ்சள் வெளிச்சத்தில் படிக்கிறது உண்டு சார். எங்களோட லோகத்திலேயும் உங்களுக்கு நல்ல மார்க்கெட் உண்டு சார்.  பஞ்சாமி, உங்க நாவல்னா உசிரைவிடுவான். ராஜிக்குப் பொழுது போக்கே அதான் சார்"

பஞ்சாமி, ராஜி இவர்கள் ஆவி உலகவாசிகள் என்று ரொம்ப சஞ்சலத்துடன் புரிந்து கொண்டார் நாகன். "அப்பா, நான் மனுஷன்தாம்பா. தயவு செய்து நல்ல வேளையா போய்விடு. எனக்கு என்னமோ எலும்பெல்லாம் ஐஸ்கட்டி வைத்து ஒத்தடம் கொடுக்கிறாப்போல இருக்கே."

மெல்லிசான சிரிப்புச் சத்தம் கேட்டது.

"சார், நீங்க பெரிய ஹ்யூமரிஸ்ட் (Humourist!) சார். உங்க மாஸ்டர் பீஸ் 'விலாப்புறத்தில் கத்தி' யிலே துரைமூர்த்தி அந்த..."

"என்கிட்ட என்ன காரியமா வந்தே? அதையாவது சொல்லேன்! எனக்கோ பதின்மூறாம் தேதிக்குள் இந்த நாவலை முடித்துவிட வேணும். பப்ளிஷர், இல்லாட்டா நாயா விழுவான்!"

"சார், நான் வந்தது ஒரே ஒரு 'ஹெல்ப்'புக்காக சார்!"

"...."

"நல்ல பிசாசு" என்று ஒரு நாவல் படிச்சிருக்கீங்களா சார்!"

"ஆமா!"

"அதைப் போல உங்களுக்கு 'ஸ்கொயர் வேர்ட்ஸ்'க்கு ஆன்சர் கொண்டு வந்து கொடுத்து அப்படியே உங்களைப் பணத்தாலேயே அபிஷேகம் பண்ணுவேன் சார்! ஒண்ணும் மட்டும் நீங்க செய்தீங்கன்னா..."

"என்னப்பா செய்யணும்?" 'நாகனின்' குரல் கலிஃபோர்னியாவிலிருந்து கேட்பது போல் இருந்தது.

"சிம்பிள் சார். ஒரே ஒரு கொலை செய்யணும்!"

"என்ன!" தமிழ்நாட்டு எட்கர்வாலேஸுக்குச் சிறுகுடலில் பாம்பு  நெளிந்தது. இருதயத்தை நாய் கவ்வியது. (எல்லாம் அவர் வர்ணனைதான்.)

அந்த ஆவி மிச்சம் தண்ணீரில் பாதியை உறிஞ்சிக் குடித்து டம்ளரைக் கீழே வைத்துவிட்டது.

"அப்பா, என்கிட்ட ரிவால்வர் கூட இல்லை உன்னைச் சுடுறதுக்கு!"

"சுட்டாக்கூட என்னைத் தாண்டிண்டுதான் குண்டு போகும் சார்!"

"நீ போ. எனக்குத் தலை கிறுகிறுன்னு வரது."

"சார், இதுவரைக்கும் நீங்க நாவல்களிலே என்ன அழகாக எத்தனை கொலைகளை வர்ணித்திருக்கீங்க"

"ஐயோ...ஐயோ!"

"நான் என்ன ஆயிரம் பேரைக் கொலை பண்ணச் சொன்னேனா? சும்மா ஒரே கொலை! சிம்பிள்... ஒரு கிச்சன் கத்தி, டொமேடோ நறுக்கிற கத்தி! இதை சிம்பிளா பக்கவாட்டிலே செருகிவிடவேண்டியது. பெண் பிள்ளைகள் விலாப்பாகமெல்லாம் சும்மா புது ரொட்டியாட்டம்தான் இருக்கும்.”

“ஆ” மேலே நாகனின் தொண்டையில் ஒரு மேட்டூர் அணை எழும்பிவிட்டது. மண்டையில் பிரபஞ்சக் கிரகங்கள் அனைத்தும் சுற்றிவந்தன.

"சார்... சார்... சார், மயக்கமா என்ன? பரபரப்புடன் ஒரு கண்ணுக்குத் தெரியாத கை அவரைத் தாங்கிப்பிடித்தது.

“வேண்டாம் என்னைத் தொடாதே! என் எலும்பு பூரா கண்ணாடிபோல உடைந்துவிடும்” சினிமா வசன பாணியில் உளறிக்கொட்டினார்.

“சார், நான் என்ன சார் செய்தேன் உங்களுக்கு மயக்கம் வரதுக்கு?''

“அப்பா (பெருமூச்சு) இந்தக் கதைகளை எல்லாம் நம்பாதே. கைபோகிற போக்கில் எழுதினது எல்லாம்...”

"ஒண்ணுமில்லை சார், ஒரு பெண்பிள்ளை... தெற்கு ராமநாதபுரத்தில் 18-ம் நம்பர் வீடு! பேசாம கத்தியை ஆப்பிள் பழத்திலே அழுத்தறாப்பலே அழுத்திவிட்டு வந்திடுங்க.''

“அப்பா, நான் சொல்றதைக் கேட்காம நீபாட்டுக்கு உன் கதையையே சொல்லிண்டு போராயே, என்னாலே இப்ப...”

“பெயர்கூட நளினி. ஸார் நான் செத்துப்போய் இந்த ரூபத்துக்கு வந்ததே அவளாலேதான் சார்!”

“எனக்கு என்னமோ எல்லாம் பதர்றது. நீ சத்தமில்லாம வந்த வழியே போய்டு.

“சார், அவ்வளவு லேசுல விட மாட்டேன் சார். நான் சொல்றதையாவது கேளுங்களேன்.”

“நான் இந்தப் பெண்ணையே சுத்தி (ஆவியா இருக்கிறபோது இல்லை) இருந்தேன். ஒருநாள் டிஸ்டிரிக் போர்டு, ஆபீஸ் ரோடிலே தனியாய்ப் போயிண்டிருக்கிறபோது எதிர்ப்பட்டு ‘`ஏன் என்னையே சுத்திண்டு? கண்டபடி கலாட்டா பண்ணிண்டு இருக்கே”னு கேட்டாள் சார். நான் சிகரெட் புகையை அவள் மூஞ்சியிலேயே ஊதினேன். அவள் ரொம்ப கோபம் வந்து, கையில் இருந்த பேனாக்கத்தியை விரித்து விலாவிலே குத்திவிட்டாள். அங்கேயே செத்து விழுந்துட்டேன். ஒரு டிரெய்னேஜ் மூடியைத் திறந்து என் பிணத்தை உள்ளே போட்டு மூடிவிட்டாள் சார்! அந்த இடம் அமானுஷ்யமான இடம் சார். அதனாலே என் பிணம் டீகம்போஸ் ஆகி வெளுத்து அடையாளமே தெரியாம மாறினப்புறம்தான் சார் இழுத்துப் போட்டாங்க. அதுவும் ஏதோ நார்றதேன்னு! பூ பூன்னு சங்கை ஊதிக் கடைசியிலே அநாதைப் பிணங்களைப் புதைக்கிற இடத்திலே புதைச்சுட்டாங்க. அங்கேதான் தற்போதைக்கு ஜாகை!

ஆவியா மாறின பிற்பாடு, அவளை விடாம அவள் வீட்டைச் சுத்தினேன்! ஆனா, அதுக்கும் அஞ்சாம யாரோ ஒரு மலையாளத்துக்காரனைக் கூப்பிட்டு மந்திரிச்சுட்டா! இப்ப அங்கே போனா சுளீர் சுளீர்னு ‘ஷாக்’ அடிக்கிறது! ஹும் நீங்கதான் சார் என் மனசுப் பழியைத் தீர்க்கணும்.”

“அப்பா, கிராஜுவேட். கதையே மக்னீஷியம் சல்பேட்டை முழுங்கிறாப்பலே பண்ணிடுத்தே, இனிமே எனக்கு ஏதப்பா சக்தி? என்னை விட்டுடுப்பா! உனக்குப் புண்ணியம் உண்டு. நீ நூறு வருஷம்...”

“சார்... கதையிலே என்ன அநாயாசமாகக் கொலை பண்றீங்க? துளிக்கூட தேகத்திலே காயம் இல்லாத உள்ளுக்கும் மருந்து கொடுக்காம நடந்த கொலையை எல்லாம்... வர்ணிக்கிறீங்க! சும்மா இவளை அப்படி கழுத்தை மடக்கி வாய்க்காய்லே தள்ளிப்பிடுங்க. உங்களுக்கும் இவளுக்கும் ஸ்நானப்ராப்திகூடக் கிடையாது. எப்படியோ உங்க நாவல் சாமர்த்தியத்திலே 786-ல ஒரு பங்கு காட்டினாலே போதும் சார்.''

‘நாக’னுக்கு மேலே அந்த ஆவி பேசினது கனவில்போல் கேட்டது. அப்புறம் நினைவு தப்பித் தலை தொங்கவிட்டுப்போய் வாயில் நுரைபடிந்துவிட்டது.

அந்த ஆவி டம்ளரில் மிச்சம் இருந்த கொஞ்சத் தண்ணீரை அவர் முகத்தில் மோதியடித்துவிட்டு அதைக் கீழே போட்டுவிட்டு ரொம்பப் பெரிய ஹாஸ்யத்தை ரசிப்பதுபோல சிரியோ சிரி என்று சிரித்துக்கொண்டே புறப்பட்டுவிட்டது. அதன் சிரிப்பொலி காற்றில் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி மறைந்தது.

நாகன் இப்போது அந்தக் கொலைக் கதைகளை விட்டுவிட்டார்... புருஷன்-பெண்ஜாதி மனக்கசப்பு மாமியார் சண்டை இத்யாதி விஷயங்களையே சுற்றி வந்தன அவர் கதைகள்... ஓர் எறும்புகூட செத்துப்போனது என்று சொல்லவில்லை.

***


பின்குறிப்பு  :  இந்தக் கதையை நானும் இப்போது மிக சமீபத்தில்தான் படித்தேன்.  ஆனால் கிட்டத்தட்ட இந்த பாணியில் நான் ஒரு கதை எழுதி இங்கு வெளியிட்டிருக்கிறேன்!

44 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஓம் முருகா...

      வாங்க செல்வாண்ணா..  வணக்கம்.

      நீக்கு
  2. சுஜாதா நினைவாக குமுதம் சிறுகதைப் போட்டி அறிவித்திருக்கிறது.
    முதல் பரிசு தங்க மோதிரம். எபி நண்பர்கள் வாய்ப்பை நழுவ விடாது போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுங்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே..  விவரங்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.  வாட்ஸாப்புக்கு அனுப்புங்களேன்.  இங்கு தளத்திலும் வெளியிடுகிறேன்.

      நீக்கு
    2. நான் நெட்டில் தேடினேன். அப்படி எதுவும் இல்லைன்னு து கூகுள்!

      கீதா

      நீக்கு
  3. சார்லஸ்ம் லாம்ப், நாகராஜன், ஷெர்லக் ஹோம்ஸ், துரைமூர்த்தி
    வதனராஜ். பரந்தாமன், பஞ்சாமி, ராஜி, நாகன் (தமிழ் நாட்டு எட்கர் வேலஸ்) நளினி -- -- எல்லோரையும் சுஜாதா ஸார் எழுதி பிரசுரமான அவரது இந்த முதல் கதையில் சந்தியுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  விளையும் பயிர்!  எனக்கும் இதே தோன்றியது.

      நீக்கு
  4. சுஜாதாவின் கதை சிறப்பு! சிவாஜி என்னும் பத்திரிகையில் வெளியான இந்தக் கதை கிடைக்கவில்லை என்றும், அதை தேடி கண்டுபிடித்து தருபவருக்கு தன் ராஜ்ஜியத்தில் பாதியும், தன் மகளையும் தருவதாக அறிவித்திருந்தார். இரண்டுமே அவருக்கு கிடையாது என்பது வேறு விஷயம். ஒரு வேளை யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா...
         
      எவ்வளவு டெஸ்பரேட்டாக இருக்கிறார் என்று சொல்ல அப்படி சொல்லி இருக்கிறார்.  தேடித்தாருங்கள் என்று நேரடியாக கேட்க முடியாது அல்லவா?  நாகரீகம்!

      நீக்கு
  5. அந்த கதை வெளியாகியிருக்கும் பக்கத்தில் கீழே பி.ஆர்.நாராயணசாமி அய்யர்,ஜவுளி வியாபாரம் என்று ஒரு விளம்பரம் வெளியாகியிருக்கிறதே, அது மிகவும் பாரம்பரியமான ஒரு கடை. எங்கள் வீட்டு திருமணங்களுக்கு அங்குதான் ஜவுளி வாங்குவோம். இப்போது இருக்கிறதா? என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுதான்....  இதுதான் ஆழ்ந்த கவனிப்பு என்பது. 

      மேம்போக்காக படித்தும் படிக்காமலும் கருத்து சொல்பவர்கள் இருக்கிறார்கள்.  அதில் வேறென்ன இருக்கிறது என்று பார்த்தது சிறப்பு.  எனக்கும் இப்படி கிடைத்ததுண்டு காகிதங்களில் வேறு விவரம் இருந்தால் நானும் அதை எடுத்து முகநூலிலும் இங்கும் பகிர்ந்திருக்கிறேன்.

      நீக்கு
  6. நெருக்கடியான தட்டச்சு.. வாசிக்க இயலவில்லை..
    வருத்தமாக இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..  மொபைலில் அப்படி தெரிகிறதோ...   நான் முடிந்தால் தனியாக உங்களுக்கு வாட்ஸாப்பில் அனுப்புகிறேன்.

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    நலமா.? அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா..  நான் நலமே...   நீங்களும் நலம்தானே?  வணக்கம்.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    தாங்கள் நலமாக இருப்பதற்கு மகிழ்ச்சி. இன்றைய கதை அருமை. இன்று வெளியிடும் நேரம் தாமதமோ? தாமதமானாலும், தடங்கலின்றி படித்து ரசித்தேன். திரு சுஜாதா அவர்கள் தன் முதல் கதையிலேயே தன் முத்திரையை ஆழமாக பதித்து விட்டார். அவரின் நகைச்சுவை கலந்த எழுத்துக்களை மிக ரசித்துப் படித்தேன். எல்லாம் இறையருள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. ​பொக்கிஷம் அல்ல. புதையல். பொக்கிஷம் என்பது நாம் சேமித்து வைத்தது. புதையல் யாரோ சேமித்ததைத் தோண்டி எடுப்பது.
    கதை கொஞ்சம் "கதை" யாகத் தோன்றினாலும் அக்காலகட்டத்தில் சுஜாதா பாணி என்ற ஒரு தனி பாணியை தோற்றுவித்தது எனலாம்.

    சில குசும்புகள் "786", "நாகன்" ,"மெக்னீசியம் சல்பெட்" போன்றவை அவருக்கு மட்டுமே சாத்தியம்.

    பகிர்வுக்கு நன்றி, வாழ்த்துக்கள. இன்றைய பகிர்வு எழுத்தாளர் சுஜாதா தேசிகன் வாசிப்பார் என்று நம்புகிறேன்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC  ஸார்...   சுஜாதா தேசிகன் ஏற்கனவே இதைப் படித்திருப்பார்.  அவரிடம் இல்லாததா?  மேலும் அவரெல்லாம் எங்கே இங்கு வந்து படிக்கப் போகிறார்?!!

      பொக்கிஷம் புதையல் வித்தியாச விளக்கம் ஓகே.  ஆனால் புதையலாகக் கிடைத்ததை பொக்கிஷமாக வைத்திருக்கிறோம்!

      நீக்கு
    2. மெக்னீசியம் சல்ஃபேட் இல்லை; அம்மோனியம் பாஸ்பேட்

      நீக்கு
    3. ​//கதையே மக்னீஷியம் சல்பேட்டை முழுங்கிறாப்பலே பண்ணிடுத்தே,//
      epsom salt laxative.
      786 is a unique sacred number for .....
      //‘நாக’னுக்கு மேலே அந்த ஆவி பேசினது கனவில்போல் கேட்டது. அப்புறம் நினைவு தப்பித் தலை தொங்கவிட்டுப்போய் வாயில் நுரைபடிந்துவிட்டது//
      நாகம் விஷம்

      Jayakumar

      நீக்கு
  10. வருத்தமாக இருக்கின்றது.. என்பது எனது சூழ்நிலையை நினைத்துத் தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருத்தப்படாதீர்கள்.  நிலைமை சீக்கிரமே சீராகும்.

      நீக்கு
  11. இளம் வயதில் திரு. சுஜாதா அவர்களது தீவிர வாசகன்..

    பதிலளிநீக்கு
  12. சுஜாதாவின் முதல் கதையே அதுவும் அவர் எழுதிய வருடத்தைப் பாருங்கள். 1953. என்ன வயதிருந்திருக்கும்? அந்த வயதிற்கு அசாத்தியமான கதை என்பேன்.

    அதுவும் அப்போதே அந்த வயதிலேயே அவரது வாசிப்பு அறிவியல் அறிவு என்று அத்தனையும் வெளிப்படுகிறது கதையில். எத்தனை புத்தக விஷயங்களைச் சொல்கிறார் பாருங்க., கூடவே அவருக்கே உரித்தான நையாண்டி நகைச்சுவை!

    ரசித்து வாசித்தேன்.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா..   அப்போதே அவர் டச் தெரிகிறது!

      நீக்கு
    2. ஆமாம்!

      தன் புகழை தலைக்கு எடுத்துச் செல்லாதவர். நாகரீகம் தெரிந்தவர். Authentic!

      அதனால்தான் பலருக்கும் ஆதர்ச எழுத்தாளராக இருக்கிறார் இப்ப வரை.

      கீதா

      நீக்கு
  13. மேலும் இந்தக் கதையின் இந்தப் பக்கம் இன்னொரு தளத்திலும் இருந்தது. பெயர் மறந்து விட்டது. //

    ஸ்ரீராம், அது பசுபதி அவர்களின் தளத்தில்.

    //https://s-pasupathy.blogspot.com/search?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE//

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், காலையே உங்களிடமிருந்து தெரிந்து கொண்டேத்தான்.  ஆனால் பதிவில் சேர்க்கவில்லை.

      நீக்கு
  14. இன்றைய பகிர்வு பொக்கிசம்.

    சுஜாத்தா கதைகள் அறிவியலையும் கலந்து நகர்ந்து செல்லும். அவரின் எழுத்து திறமை அது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் முதல் படைப்பிலிருந்தே....

      நன்றி மாதேவி.

      நீக்கு
  15. சுஜாதா எழுதினதுனு முதல்லே நம்ப முடியல. ஆனால் இதுக்கு வந்திருக்கும் கருத்துகளை எல்லாம் படிச்சுட்டுப் பின்னர் நம்பும்படி ஆயிடுச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...   கதையிலும் அவர் டச் தெரிகிறது.  நிரூபணமும் இணைத்திருக்கிறேன்.   நம்ப முடியாமல் என்ன!

      நீக்கு
  16. நீங்க சேர்த்திருக்கும் பக்கத்தைப்படிப்பது ரொம்பக் கஷ்டமாய் இருக்கு. அதைப் படிக்கலை. ரொம்பப் பொடி எழுத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது நிரூபணத்துக்காகத்தான்,  அதைத்தான் கதையாக டெக்ஸ்டில் கொடுத்திருக்கிறேன்.

      நீக்கு
  17. ஸ்ரீராம், உங்க கதை லிங்க் கொடுத்திருக்கலாமே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வாரம் அந்தக் கதையையே பதிவிட்டு விடுகிறேன்.

      நீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  19. பொக்கிஷ பகிர்வு கதை நன்றாக இருக்கிறது. முதல் கதையிலேயே அறிவியல் கொஞ்சம் ,
    பேய் கொஞ்சம் என்று நகைச்சுவையாக எழுதி இருக்கிறார் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!