6.12.25

டெங்கு காய்ச்சலை தடுக்க ஒற்றை டோஸ் தடுப்பூசி - மற்றும் நான் படிச்ச கதை

 

டெங்கு காய்ச்சலை தடுக்க சிங்கிள் டோஸ் தடுப்பூசி: பிரேசில் அரசு ஒப்புதல்

பிரேசிலியா: டெங்கு காய்ச்சலை தடுக்க பிரேசில் நிறுவனம் தயாரித்துள்ள ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெங்குவுக்கு எதிரான போராட்டத்தில் இந்த தடுப்பூசியானது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  கொசுக்கடியால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். முந்தைய காலங்களை விட தற்போது டெங்குக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கடந்த 2023ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து இருந்தது. உலக மக்கள் தொகையில் பாதி பேர் இந்த நோயால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. டெங்கு காய்ச்சலைதடுக்க ஜப்பானின் இரண்டு டோஸ் TAK-003தடுப்பூசியும், 3 டோஸ் போடப்படும் தடுப்பூசியும் உள்ளன.  இந்நிலையில், பிரேசிலின் பூடன்டன் நிறுவனம் ஒரு டோஸ் மட்டுமே போடப்படும் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. பூடன்டன் -டிவி என பெயரிடப்பட்டுள்ள து. 12 முதல் 59வயதுக்கு உட்பட்டோருக்கு செலுத்தப்படும் இந்த தடுப்பூசிக்கு பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.  பிரேசிலில் கடந்த 8 ஆண்டுகளாக பரிசோதனையில் இருந்த தடுப்பூசி தற்போது பயன்பாட்டுக்கு வருவது என்பது டெங்குவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  மருத்துவ பரிசோதனையில் 16 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் டெங்குவை தடுப்பதில் இந்த தடுப்பூசி 80 சதவீதம் திறன் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. டெங்குவால் பாதிக்கப்படாதவர்களுக்கு இது 74 சதவீதம் பாதுகாப்பையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு 89 சதவீதம் பாதுகாப்பையும் இந்த தடுப்பூசி வழங்கும் என பிரேசில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தடுப்பூசியானது 2- 6 வயதுள்ள குழந்தைகளுக்கு 80 சதவீத பாதுகாப்பையும், 7- 17 வயதுள்ளவர்களுக்கு78 சதவீத பாதுகாப்பையும், 59 வயதுள்ளவர்களுக்கு 90 சதவீத பாதுகாப்பையும் இந்த தடுப்பூசி வழங்கும் எனவும் அதேநேரத்தில் பக்கவிளைவாக லேசான காய்ச்சல் அல்லது தலைவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


===========================================================================================
பயின்ற அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டிக்கொடுத்த இஸ்ரோ பெண் விஞ்ஞானி

தென்காசி, கடந்த 2023-ம் ஆண்டு சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சார்பில் விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதன் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி. இவர் தனது சொந்த ஊரான தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தான் பயின்ற எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டி கொடுக்க ஏற்பாடு செய்தார். அதன்படி ‘நமக்கு 
நாமே’ திட்டத்தில் பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி வழங்கிய ரூ.8 லட்சத்துடன் சேர்த்து தமிழக அரசு சார்பில் ரூ.24 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது.  விழாவில் பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி, மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டித்தை திறந்து வைத்தனர்.  பின்னர் நிகர் ஷாஜி கூறியதாவது:- நான் பயின்ற பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டிக்கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இஸ்ரோவில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மதிப்புமிக்க விண்வெளி வீரர்களை பத்திரமாக விண்ணுக்கு கொண்டு சென்று, மீண்டும் அழைத்து வர பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.  ஒவ்வொரு திட்டத்தையும் வெற்றிகரமாக முடிக்க தீவிரமாக உழைத்து வருகிறோம். இஸ்ரோ மிகவும் மேம்பட்ட நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

- Thank you JKC Sir -

===========================================================================================

வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுக்கு முற்றுப்புள்ளி! ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது கமிஷன்

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் நடக்கும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் போலி வாக்காளர்கள், இரட்டை பதிவுகள், இறந்த வாக்காளர்கள் ஆகியோரை கண்டறிந்து நீக்க, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தேர்தல் கமிஷன் பயன்படுத்த உள்ளது.  வாக்காளர் பட்டியலில் போலி பதிவுகள் மற்றும் இரட்டை பதிவுகள் இடம் பெற்றிருப்பது, ஜனநாய கத்தின் அடித்தளத்தையே அசைப்பதுடன் பல குழப்பங்களையும், பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது.  வாக்காளர் பட்டியலில் போலி பெயர்கள் அதிகமாகச் சேரும்போது, உண்மையான வாக்காளரின் ஓட்டுக்கு மதிப்பு குறைகிறது.  இது, வேட்பாளரின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும். எனவே தேர்தல் கமிஷன், வாக்காளர் பட்டியலில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டு வந்துள்ளது.  போலி பதிவு இந்த ஆண்டு பீஹாரில், சட்டசபை தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதில், 60 லட்சம் போலி மற்றும் இறந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.  பீஹாரைத் தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம், சத்தீஸ்கர், கோவா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணி தீவிரமாக நடக்கிறது.  இதில், தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது.  மேற்கு வங்கத்தில் தற்போது நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தேர்தல் கமிஷன் பயன்படுத்த உள்ளது.  இதன் மூலம், ஒரே நபர் வாக்காளராகப் பல இடங்களில் பதிவு செய்திருந்தாலோ அல்லது ஒரே புகைப்படத்தை பயன்படுத்திப் பல போலி பதிவுகள் இருந்தாலோ, அந்தப் பதிவுகளை ஏ.ஐ., உதவியுடன் முகத்தை பொருத்தி பார்க்கும் தொழில்நுட்பம் அடையாளம் காண உதவும்.

இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:

புலம்பெயர்ந்த தொழி லாளர்களின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி, போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு அதிக புகார்கள் வந்துள்ளன.  அதே போல் இரண்டு இடங்களில் ஓட்டுகள் வைத்திருப்போர் அதிகரித்துள்ளதாகவும் புகார் உள்ளது.  உதவிக்காக மட்டுமே இதற்காக ஏ.ஐ., அம்சத்துடன் கூடிய முகத்தை பொருத்தி பார்க்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம்.  இருப்பினும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் உறுதி செய்த பின்னரே, ஏ.ஐ., கண்டறிந்த பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப் படும். உதவிக்காக மட்டுமே ஏ.ஐ., பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

=====================================================================================================================================================================


நான் வாசித்த கதை -  கீதா ஆர்

---------

சிறுமி கொண்டு வந்த மலர் -

விமலாதித்த மாமல்லன்

கதையின் சுட்டி


விமலாதித்த மாமமல்லன் அவருடைய வலைத்தளம் - https://www.maamallan.in/

இயற்பெயர்: சி. நரசிம்மன். மாத்வ குடும்பத்தைச் சார்ந்த கன்னட – மராத்திய தாய் தந்தையருக்கு, சென்னையில், திருவல்லிக்கேணியில் பிறந்தார். பிறப்பு: ஜூன் 19, 1960

படைப்புகள்: சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கிய விமர்சனம், கட்டுரைகள். அவரது படைப்புகள் அச்சு மற்றும் மின்னூல் வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

  • காலச்சுவடு இதழில் வெளியான 'இணையமும் இலக்கியமும்' எனும் கட்டுரை கேரள அரசின் பதினோராம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் இடம்பெற்றுள்ளது.
  • 1981ல் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் இவரின் முதல் சிறுகதையான 'வலி' வெளிவந்தது. அதே ஆண்டில் கணையாழியில் வெளியான 'இலை' மற்றும் 'பெரியவர்கள்' குறுநாவல் வழியே தமிழ் இலக்கியச் சூழலில் கவனத்திற்கு வந்தார். ஷிலிக்கான் ஷெல்ஃப் ஆர் வி அவர்கள் 'வலி' மற்றும் 'இலை'  நல்ல கதைகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
  • எஸ் ரா அவர்கள் தொகுத்திருக்கும் ==> 100 சிறந்த கதைகளில்<=== இடம்பெற்றிருக்கிறது இக்கதை. 
  • கி. விட்டல் ராவ் தொகுத்த, இந்த நூற்றாண்டுச் சிறுகதைகளிலும் இவரது 'சிறுமி கொண்டுவந்த மலர்' சிறுகதை இடம்பெற்றிருக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையின் தலைவராகப் பணியாற்றிய வீ. அரசு தொகுத்த இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூலிலும் இடம் பெற்றுள்ளது.

சிலிகான் ஷெல்ஃப் ஆர் வி அவர்களின் தளத்தில் பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் ஷெல்ஃபில் விமலாதித்தன் மாமல்லன் பெயரைப் பார்த்ததும் உடனே உருவினேன், சிலிகான் ஷெல்ஃப் ஆர் வி அவர்களின் வரிகளில் - அவர் சில கதைகளே எழுதி இருந்தாலும், அவற்றில் வெகு சிலவற்றையே நான் படித்திருந்தாலும், படித்தவற்றிலும் சில புரியவே இல்லை (சிறுமி கொண்டு வந்த மலர்) என்றாலும், அவர் குறிப்பிடப்பட வேண்டிய தமிழ் எழுத்தாளர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை - சிலிகான் ஷெல்ஃப் ஆர் வி.

ஷெல்ஃபில் அவர் கொடுத்திருந்த சுட்டி அழியாச்சுடர்கள். சென்றேன். ஆனால் அங்கு கதை நீக்கப்பட்டிருந்தது. சிறுகதைகள்.காமில் கிடைத்திட உடனே எடுத்துக் கொண்டேன். நன்றி - சிலிகான் ஷெல்ஃப் ஆர் வி மற்றும் சிறுகதைகள்.காம்.

Voracious Reader ஆர் வி அவருக்கே ((2012ல்) புரியலைனா , நமக்குப் புரியுமோ என்றுதான் வாசித்தேன். அவருக்கு இப்போது புரிந்திருக்கலாம்.

சரி, நான் என்ன புரிந்து கொண்டேன்? கதைக்குக் கீழே.

ஸ்க்ரோலிங் பிடிஎஃப் கொடுத்திருக்கிறேன். அதில் வாசிக்க முடியவில்லை என்றால் இதோ கூகுள் ட்ரைவ் சுட்டி. சிறுமி கொண்டுவந்த மலர்

கதையின் முக்கிய கதாபாத்திரங்களான ஒரு சிறுமி மற்றும் சுகன்சந்த் ஜெய்ன் மூலம் ஆசிரியர் என்ன சொல்லவருகிறார்? முடிவு எதையும் அறுதியிட்டுச் சொல்லாமல் கதையின் போக்கிலேயே சென்று வாசகர்கள் யூகித்துக் கொள்ளட்டும் என்று இயல்பாக முடிவடைகிறது. அதனால் கதை பிடித்திருந்தது. கதையில் உள்ள விஷயத்தை உள்வாங்கி எழுதுவதற்காக மூன்று முறை வாசித்தேன்!

தூக்கமில்லாமல் தாமதமாக எழும் சுகன்சந்த் ஜெய்ன், ஏதோ அமானுஷ்யம் நடந்தது போன்ற ஒரு பிரமையில் இருக்கிறார், காரணம் முந்தைய நாள் நடந்த சம்பவம்.

முந்தைய நாள்  ஒரு சிறுமி வருகிறாள். அவருக்குக் குழப்பம். வழக்கமான வாடிக்கையாளர் அல்லாமல் ஒரு சிறுமி. லாலா மிட்டாய் கடை என்று நினைத்து வந்துவிட்டாளோ என்ற சந்தேகம். அவள் வந்திருப்பது ஒரு பூ வை விற்க. பூ? ஆம்! 

பூ என்றதும் //ஜெய்ன் சிரித்திருக்க வேண்டும் ஆனால் அவரால் ஏனோ அது முடியவில்லை.// காரணம் அச்சிறுமியின் தோற்றம், முகம், வயதுக்கு மீறிய மிடுக்கு அவரை வசீகரிக்கிறது. கட்டிப் போடுகிறது.

அவள் முகத்தை எங்கோ பார்த்தது போன்று தோன்றினாலும் பிடிகிட்டவில்லை. அவள் கையை விரிக்கிறாள், தங்க ரோஜா. //ரோஜாப்பூ சொக்கத் தங்கத்தில் தெரிகிறது அவர் கண்ணிற்கு// "அவர் கண்ணிற்கு" இது இங்கு முக்கியம். கண்கட்டு வித்தையோ? என்று நம்மை எண்ண வைக்கிறது.

பரம்பரைத் தொழிலை தாத்தா, அப்பாவிடமிருந்து கற்ற நுணுக்கங்களால் கில்லாடியாக இருக்கும் சுகன்சந் ஜெயினின் ரியாக்ஷன் அந்தத் தங்க ரோஜாவைப் பார்த்ததும் - //சந்தேகத்திற்கு இடமேயில்லை. அறுபத்து மூன்று வயதிலும் கண்ணாடியில்லாமல் பார்க்கிற கண் தவறாது.//

சொற்ப நேர பிரமிப்பிலிருந்து நடைமுறைக்கு வருகிறது மனம். ஆசிரியரின் இந்த வரி அழகான வரி. //கபாலத்தில் உமிழ் நீர் சுரப்பது கண்ணின் மணியில் பளபளத்தது.//

சேட்டின் மூளை போடும் கணக்கு புத்திசாலி சிறுமிக்குப் புரிகிறது. //கையைப் படக்கென்று மூடிக் கொண்டாள். கண்ணாடிப் பெட்டியின் மீதிருந்தும் கையை எடுத்துக் கொண்டவளாய் பின்னால் நகர்ந்தாள்.//

சேட்டிற்கு அப்போதும் உறைக்கவில்லை. எத்தனையோ வாலிப பசங்க கொண்டு வரும் செயின் போன்றவற்றை, அவர் தன், சாமர்த்தியத்தில் குறைந்த பணத்தில் பரிமாற்றம் செய்பவர். பொருள் மீட்கப்படவில்லை என்றால் அவருக்கு லாபம்!

ஏன், இந்தச் சிறுமி வந்து போன பிறகு கூட, மருத்துவச் செலவுக்காக அடகு வைக்க வரும் பெண்மணி கேட்கும் தொகையைக் கொடுக்காமல், அவள் கொடுக்கும் பொருட்களில் மூக்குத்தியை விற்கச் சொல்லிப் பேசி பணம் குறைவாகத்தான் கொடுக்கிறார். அப்புறம் அந்த மூக்குத்தியை அதிக விலையில் விற்பாராக இருக்கலாம். சாமர்த்திய கணக்கு.

அப்படி இந்த தங்க ரோஜாவுக்கும் கணக்குப் போட்டிருப்பார் என்பதைத்தான் அந்த வரி சொல்வதாக என் சிற்றறிவிற்கு எட்டியது.

//தேர்ந்த ஜாலவித்தை நிபுணனைப் போல மூடியிருந்த வலது கையை விரல்கள் மெல்லப் பிரிய விரித்தாள். அவர் முகத்திலிருந்து கண்களை எடுக்காமலே இதைச் செய்தாள். இதழ்களை நமுட்டிச் சிரிப்பது போலிருந்தது. அசட்டுத் தனமாய் ஆச்சரியப்படப் போகிறாய் என்று சொல்லாமல் சொன்னது அவள் செய்கை. //

தன்னிடம் அடகு வைக்க வருபவரின் வீக்னெஸைப் படிக்கும்  அளவிற்குக் கில்லாடியான அவருக்கு இச்சிறுமியிடம் முடியவில்லை. அப்போதும் அவருக்கு மண்டையில் உறைக்கவில்லை. காரணம் அவர் மனம் முழுவதும் அந்த தங்க ரோஜா.

1000 ரூ கேட்கிறாள். சேட் முடியாது என்கிறார்.

அச்சிறுமி வேறு கடையைப் பார்த்துக் கொள்கிறேன் என்று திரும்பும் போது, அத்தங்கப் பூவை உரசிப்பார்க்க வேண்டும் என்கிறார் சேட்.

//பூவை நான்தான் பிடிச்சிப்பேன். கல்லை எடுத்து நீ ஒரசிக்கணும்.//

அப்போதும் சாமர்த்தியக்காரரின் மண்டைக்குள் பளிச்சிடவில்லை. இரண்டு மூன்று முறை உரசிப் பார்த்து தான் நினைத்தது சரிதான் என்று தோன்றினாலும் //இன்னொருமுறை சோதித்துவிடலாம் என்றது உள்மனம். ஒழுங்காய்க் கழுவிக் கொள்ளக்கூடத் தெரியாத குழந்தையிடம் போய் பதினெட்டு யோசனையா? வலிய வரும் அதிர்ஷ்டத்தை நழுவ விடாதேயென அதட்டியது மூளை.//

இங்கும் அவர் விழித்துக் கொள்ளவில்லை. தங்கம், பணம், மட்டுமே ஆக்ரமித்திருக்கும் மூளை. வலிய வரும் அதிர்ஷ்டம் என்று சந்தோஷப்படுகிறார். வின் வின் சிச்சுவேஷன்தானே? யாரும் ஏமாறவில்லை என்று தனக்குத் தானே நியாயம் செய்து கொள்கிறார். சிறுமி கேட்கும் ரூபாயை கொடுத்துவிடுகிறார்.

அவள் சென்றதும்தான் அவருக்குத் தெரிகிறது, எல்லோரிடமும் விலாசம் வாங்குபவர் அவளிடம் தவறவிட்டிருப்பது! அப்போதும் அவருக்கு உறைக்கவில்லை தான் ஏன் எப்படித் தவறவிட்டோம் என்று.

சாலையில் சென்று, தேடுகிறார். சிறுமியை காணவில்லை. முகவரி இல்லைனா இன்னும் நல்லதாப் போச்சு! அப்போதும் அந்த தங்க ரோஜாவின் மதிப்பைக் கணக்குப் போடுகிறது அவர் மனம். லாபம்!! சந்தோஷம்.

ஓய்வெடுத்துவிட்டு வந்தவர் மேசையை திறந்து பார்த்தால், அங்குதான் அவருக்கு ஆப்பு! அந்த ரோஜா மலர் அவரைப் பார்த்து சிரிக்கிறது. எவ்வளவு தேடினாலும் தங்கரோஜாவைக் காணவில்லை. வெளியில் சென்று சிறுமியை கோவில் பக்கம் எல்லாம் தேடுகிறார். ம்ஹூம் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

//அவருடைய மனவுலகில் ஒரு சிறுமி. அவள் கையில் ஒரு தங்க மலர். அதை ஆவலுடன் கையில் எடுக்கிறார். மறுகணம் அது வெறும் மலராகி கையைத் தீயாய்ச் சுடுகிறது.//

யாரிடமும் சொல்ல முடியாத அவஸ்தை. நம்பமாட்டார்களே! ஒரு சிறு பெண் தன்னை ஏமாற்றிவிட்டதாகவே நினைக்கிறார். அப்போதும் அவருக்கு மண்டையில் உறைக்கவில்லை.

பிரமையிலிருந்து விழித்தெழுந்து வந்து மகாவீரரைப் பிரார்த்தித்துக் கொண்டு //கீழ் டிராயரைத் திறந்தார். அப்போதுதான் கொய்யப்பட்டது போல் ரோஜா மலர் நிர்மலமாய் காட்சியளித்தது. மேசையைத் திறந்தவரைப் பார்த்து//

அந்த மலர் கொஞ்சம் கூட வாடியிருக்கவில்லையே என்றும் கூட அவருக்கு உறைக்கவில்லை. ஆற்றாமையுடன், அந்த மலருக்குள் இருக்கும் 'பெரிய விஷயத்தைப்' புரியாதவராய் தூக்கி எறிகிறார் அது சாக்கடை ஓரத்தில் விழுகிறது! எறிந்துவிட்டுத் தன் வேலையில் மூழ்கிவிடுகிறார். கதை முடிந்துவிடுகிறது.

கதையில் வரும் சிறுமியை நாம் எப்படி வேண்டுமானாலும் யூகித்துக் கொள்ளலாம். தெய்வ ரூபமாகவோ, இல்லை கண்கட்டு வித்தைக்காரியாகவோ, அமானுஷ்யம் என்றோ எப்படி வேண்டுமானாலும்...

எனக்குத் தோன்றியது இதுதான். எத்தனை அறிவுரைகள் கேட்டாலும் நம் வாழ்க்கையில் நடக்கும் அனுபவங்கள்தான் சிறந்த ஆசிரியர். அதனை நம் செயல்களோடு சம்பந்தப்படுத்திப் பார்த்து உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே அதன் பாடம் அறிவிற்கு எட்டும்.

வேறொரு இடத்தில் வரும் மாமல்லனின் வரிகளை இங்கு பொருத்திப் பார்க்கலாம் என்று தோன்றியது.

“மனிதனுக்கு மிக அத்தியாவசியமான தேவைகளில் ஒன்று நம்பிக்கை. கடவுள் அல்லது லட்சியம். முன்னதில் நம்பிக்கையற்றவன் பின்னதை மிகத் தீவிரமாய் நம்புகிறான். எதையேனும் ஒன்றை நம்புவதால்தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாய்த் தோன்றுகிறது.” ― விமலாதித்த மாமல்லன்

தன் எளிய வாடிக்கையாளர்களை உருட்டெல்லாம் உருட்டி, கலவரப்படுத்தி குறைவான பணமாற்றம் செய்யும் சுகன்சந்த் ஜெயினுக்கு அதைச் சுட்டிக் காட்டுவது போன்று கண்கட்டு வித்தையாக அதாவது மனரீதியான அனுபவம் அந்தச் சிறுமி மூலம். //அவர் முகத்திலிருந்து கண்களை எடுக்காமலே இதைச் செய்தாள். இதழ்களை நமுட்டிச் சிரிப்பது போலிருந்தது. அசட்டுத் தனமாய் ஆச்சரியப்படப் போகிறாய் என்று சொல்லாமல் சொன்னது அவள் செய்கை.// ஜெயினுக்கு உறைக்கவில்லை. ஏனென்றால் அவருக்கு தங்கம், பணம்தான் லட்சியம்! அதுதான் அர்த்தமுள்ளதாய் அவருக்குப்படுகிறது. அனுபவப் பாடங்கள் அல்ல!

அவருடைய அதீத ஆசையே அவருடைய (அறிவுக்) கண்ணைக் கட்டிவிடுகிறது. கண்கட்டுவித்தை!!! கதையை வாசித்த போது என் மனதில் பட்டது இதுதான்.

இக்கதையில், எழுதுபவர் தன் நம்பிக்கைகளை, எண்ணங்களை எளிதாகத் திணிக்க வாய்ப்புகள், இடங்கள் அதிகம். படிப்பினைசொல்லும் கதையாகவோ, இல்லை இறைவனை தொடர்புபடுத்தியோ. ஆனால், ஆசிரியர் அதை எதையும் தொடாமல் கதையைக் கதையாகவே கொண்டு சென்று வாசகர்களின் யூகத்திற்கு விட்ட அந்த எழுத்து என்னைக் கவர்ந்தது. ஆழமான, நுட்பமான கதை. எழுதப்பட்டவிதம் அருமை. எழுத்து நடையும்.

கதையை வாசிப்பதோடு, கதையைப் பற்றி எழுதுபவர்களின்  விமர்சனம் பற்றியும் (அது யாராக இருந்தாலும்)   தயவாய் சொல்லிவிட்டுப் போங்களேன்!


70 கருத்துகள்:

  1. நான் படிச்ச கதை என்னுடைய பதிவு என்பதால் இதுவரை யாரும் வரவில்லை போல....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா... நீங்களுமா?!!

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா....வந்திருக்கக் கூடாதுதான். எனக்கே தெரிகிறாது ஆனால் சமீபத்தில் இப்படி சில சமயங்களில் இந்த உணர்வு வருகிறது ஸ்ரீராம்....அதுவும் இரண்டு நாட்களாக, சிலருடைய சாதனைகளைக் குறிப்பாகப் பெண்களின் சாதனைகளை எழுத்தை வாசிக்கும் போது பிரமிப்பும் கூடவே ஒரு சிறிய ஏக்கமும் ....

      அத்தனை வேலைப்பளுகள்...வேலைப்பளுகள் என்பதை விட மனதில் ஆக்ரமிக்கும் பல விஷயங்கள்...வாசிப்பையும் எழுத்தையும் பின்னுக்குத் தள்ளுகிறது. எது priority என்ற கேள்விகள் எழுப்பப்படும் போது...

      கீதா

      நீக்கு
    3. /நான் படிச்ச கதை என்னுடைய பதிவு என்பதால் இதுவரை யாரும் வரவில்லை போல..../

      பதுவுலகில் அனைவருக்கும் ஆறுதலாக பல கருத்துகளை கூறி உற்சாகமூட்டும் உங்களுக்கும் இந்த நினைப்பா சகோதரி... மன்னிக்கவும். உண்மையில் 5.30,6 மணியளவில் நான் கதையை பல சுட்டிகளிலும் சென்று படித்து வந்து விட்டேன். ஆனால், கைப்பேசியில் அவ்வேளை ஏனோ இன்று தட்டச்சு செய்ய ஒரு சனிக்கிழமை சோம்பல் வந்து விட்டது. இப்போது சற்று தெளிவு பெற்று வந்து விட்டேன். மறுபடியும் மன்னிக்கவும் உங்களின் உற்சாகமின்மையான எண்ணங்களையும் தோற்றுவித்ததற்கு. கதை விமர்சனம் அருமையாக உள்ளது. நன்றி சகோதரி.

      நீக்கு
    4. காலைலயே தளத்தைப் படித்துவிட்டேன். உங்கள் கதைச் சுருக்கத்தைக் கண்டு குழம்பினேன்.

      ஐபேடில் ஸ்க்ரோலிங்கும் வரலை, கூகுள் டிரைவும் வேலைக்காகவை. அதனால் அப்புறமாத்தான் படிக்கணும்.

      நீக்கு
    5. கமலாக்கா, அதனால் பரவாயில்லை. நான் சும்மா போட்டு வைத்தேன்.

      //மறுபடியும் மன்னிக்கவும் உங்களின் உற்சாகமின்மையான எண்ணங்களையும் தோற்றுவித்ததற்கு.//

      கமலாக்கா, இதுக்கு எதுக்கு மன்னிப்பு ஒன்னும் பிரச்சனை இல்லை.

      எல்லோருக்குமே அவ்வப்போது சுணக்கம் வரும்தான்.

      கதை விமர்சனம் அருமையாக உள்ளது. நன்றி சகோதரி.//

      நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
    6. உங்கள் கதைச் சுருக்கத்தைக் கண்டு குழம்பினேன்.//

      ஆ! நெல்லை கதைச்சுருக்கமா?!!!!!!!!!!! ஆஆஆஆஅ..

      குழம்பும் வகையிலா எழுதியிருக்கிறேன்? கடவுளே! அந்த அளவு மோசமாக எழுதியிருக்கேனா.

      கூகுள் ட்ரைவ் லிங்க் போகிறதே நெல்லை. அது போல மேலே தலைப்பின் கீழ் கொடுத்திருக்கும் லிங்கும் போகிறது சிறுகதைகள்.காம் சுட்டிக்குப் போகிறது.

      நீங்க சொன்னதால் செக் செய்தேன்.

      கீதா



      நீக்கு
  2. அட! டெங்குவிற்கு தடுப்பூசி! மிகவும் நல்ல விஷயம்.

    //12 முதல் 59வயதுக்கு உட்பட்டோருக்கு செலுத்தப்படும் இந்த தடுப்பூசிக்கு //

    ஓ அப்ப சீனியர்களுக்கு இது போட முடியாதா. ஒரு வேளை கொசு அவங்களைக் கடிக்காதோ!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவேளை இம்யூனிட்டி வளருமா என்னவோ!

      நீக்கு
    2. ஹாஹாஹா இருக்கலாம்....இல்லை சீனியர்களுக்கு ஒரு வேளை இந்தத் தடுப்பூசி கொஞ்சம் மெதுவாக அல்லது வேலை செய்யாதோ...நீங்க சொல்வது போல் இம்யூனிட்டியினால்.

      கீதா

      நீக்கு
    3. 55க்கு மேல டெங்கு வந்தால் என்ன வராவிட்டால் என்ன என்று நினைத்துவிட்டார்களோ?

      நீக்கு
    4. பாருங்க நெல்லை, ஊசி உங்களுக்குப் போடலைனா நீங்க சீனியர்!!!!!!

      கீதா

      நீக்கு
  3. இதன் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி. //

    வியக்க வைக்கும் பெண் விஞ்ஞானிகள், நிறைய இருக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது.

    //இவர் தனது சொந்த ஊரான தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தான் பயின்ற எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டி கொடுக்க ஏற்பாடு செய்தார். //

    பாராட்டுகள் வாழ்த்துகள்.

    இப்படி, பலர் தங்கள் ஆர்வத்தில், நன்றி உணர்ச்சியில் கட்டிக் கொடுப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் கூடவே மனதிற்கு வருத்தமும் வருகிறது. அரசுகையிலெடுக்க வேண்டிய கல்வித் துறை, பொதுநல ஆரோக்கியம், மருத்துவம் இவற்றில் எல்லாம் இப்படி சமூக ஆர்வலர்கள், தனியார்களின் பங்கு பல கேள்விகளை எழுப்புகிறது. அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது என்ற கேள்வி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்வது நாம் தேர்ந்தெடுத்து வேலை செய்ய அனுப்பும்  வேலையாட்கள் அப்படி.  அவர்களை வேலையை விட்டு நீக்காமல் நாம் அவர்களுக்கு வேலை செய்கிறோம்.

      நீக்கு
    2. காமராஜர் ஏராளமாகப் பள்ளிகளைக் கட்டினார், கல்வி எல்லோருக்கும் கிடைக்கணும் என்று. ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் கொண்டுவந்தார். விவசாயிகளுக்காக அணைகளைக் கட்டினார். மக்கள் என்ன செஞ்சாங்க? நல்லா அவரைத் தோற்கடித்தார்கள்.

      மக்களுக்கு டாஸ்மாக், ஓட்டுக்கு நோட்டு இவைகளில்தான் விருப்பம். ஆளுகிறவன் கொள்ளையடிக்காமல் என்ன செய்வான் என்பது அவர்களின் எண்ணம். அரசுக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு, பள்ளிகளை மேம்படுத்த, மக்களுக்கு நன்மை செய்ய.

      நீக்கு
    3. ஸ்ரீராம் அதைச் சொல்லுங்க....

      //ஆளுகிறவன் கொள்ளையடிக்காமல் என்ன செய்வான் என்பது அவர்களின் எண்ணம். அரசுக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு, பள்ளிகளை மேம்படுத்த, மக்களுக்கு நன்மை செய்ய.//

      நெல்லை, மக்களும் இதுக்கு ஒருவகையில் காரணம் கேள்வி கேட்பதே இல்லையே....பணம் கொடுத்தா வாக்கு

      கீதா

      நீக்கு
    4. //மக்களும் இதுக்கு ஒருவகையில் காரணம்// மக்கள்தான் இதற்குக் காரணம். எடப்பாடி ஆட்சியில் என்ன பெரிதான குறை இருந்தது? இந்த ஆட்சியில் குறை தவிர வேறு என்ன இருக்கிறது? வாக்களித்த மக்களுக்கு நிச்சயம் இது வேண்டும். அவங்க தண்ணீரில் தத்தளிக்கும்போது, ஓட்டுப் போட்டாய் அல்லவா...நீஞ்சு என்றுதான் சொல்லத் தோன்றுகிறது

      நீக்கு
    5. ஆமாம் நெல்ல நீங்க சொல்றது சரியே.

      ஆள்பவர்கள் எப்படியோ அப்படித்தானே மக்களும். இன்னொன்று மக்களுக்கு எதிர்மறைதான் சட்டென்று பிடித்துக் கொள்ளும் அது மாஸ் சைகாலஜி. ஆட்டுமந்தை. எனவே மூளைச்சலவை செய்வது எளிது. செய்யாமலேயே செய்தேன் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லும் போது அது மக்களின் மனதில் பதிந்துவிடும் மனப்பாடம் செய்வது போல. மனதில் பதிந்ததுதானே இயக்கும் அவர்களை. சுய சிந்தனை இருந்தால் ஆட்சியே மாறிவிடும்.

      கீதா

      நீக்கு
  4. போலி வாக்காளர் செய்தியை வாசித்தேன். மிக நல்ல முன்னெடுப்பு. அதுவும் தொழில்நுட்பத்துடன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான்...  இத்தனை எதிர்ப்புகளுக்கிடையேயும் தமிழகத்தில் இறந்து போன வாக்காளர்கள் பெயர் நீக்கம்,  இரண்டு இடங்களுக்கும் மேல் பெயர் இருக்கும் வாக்காளர்கள் பெயர் நீக்கம் என்று ஐம்பது லட்சத்துக்கும் மேல் பெயர் நீக்கமாமே 

      நீக்கு
    2. எல்லோரும், என்னைப்போல, புலம் பெயர்ந்ததும் வாக்காளர் பட்டியலில் பெயரை எடுக்கவும்னு மனு கொடுப்பாங்களா?

      நீக்கு
    3. நெல்லை, தமிழ்நாட்டில், எங்க பெயர் எடுக்கணுமே என்று அணுகினால்....என்னத்தை சொல்ல நாங்க இருந்தப்பவே எங்க பெயர் இல்லை லிஸ்டில்!!!!!!

      சேர்க்கக் கொடுத்தும் சேர்க்கலை. ஒரு வேளை இருக்குமோன்னு நீக்கக் கோரி அணுகினா பெயரே இல்லை இப்போது அந்த வீட்டில் இருப்பவர்களின் பெயர்கள் என்று தெரிந்துவிட்டது.

      கீதா

      நீக்கு
  5. பாலாம்பிகை, அவளை அறியவும், தன்னை திருத்திக்கொள்ளவும், ஒரு அரிய வாய்ப்பை அளிக்கின்றாள். கோயில் வாசல் வரை போனவருக்கு, யானையும் மொட்டை தலைகளும், பிரசாத விற்பனையும் மட்டுமே மனதில் புலனாகின்றன. கர்பகிருஹத்தில் இருக்கும் அன்னை நினைவுக்கு வரவில்லை. (ஜைனர்களுக்கும், அம்பிகை, சரஸ்வதி, ஜவாலமாலினி, பத்மாவதி என்று பெண் தெய்வங்கள் உண்டு). மூக்குத்தி, தோடு கொண்டு வந்தவர்களிடம் வழக்கமான அடாவடி பண்ணாமல் இருந்திருந்தால், இன்னமும் அது அபூர்வ தங்க மலராய் இருந்திருக்கக்கூடுமோ? கடவுள் நமக்கு கற்பித்த பாடம் என்பது கடைசி வரை மண்டையில் உறைக்கவில்லை. பழைய குருடி கதவை திறடி என்று, திருந்தாத உள்ளமாகவே தொடர்கிறார்.

    காம , க்ரோத, லோப, மத, மோஹ, மாச்சர்யங்களில் உழலும் நமக்கு, கதை புரிகிறது. ஆனால், அது நம் கதைதான் என்பதுதான் புரிவதில்லை! கடவுள், நாம் திருந்துவதற்கும் அவரை அறிந்துகொள்வதற்கும் கொடுத்த எத்தனை வாய்ப்புகளை இது வரை இழந்திருப்போம்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுள், நாம் திருந்துவதற்கும் அவரை அறிந்துகொள்வதற்கும் கொடுத்த எத்தனை வாய்ப்புகளை இது வரை இழந்திருப்போம்?!//

      அதேதான்.

      தேவி என்றோ அல்லது அனுபவம் என்றோ...நமக்கு இறைவன், இயற்கை, அனுபவம் - நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. எச்சரிக்கை உட்பட. அதை உணர்ந்து கொள்வது உட்பட. ஆனால் நாம் அதை நுட்பமாகக் கவனித்து ஆராய்ந்தால் மட்டுமே உண்மை புலப்படும். நம் சிந்தை வேறு எதிலேனும் குறிப்பாக உலக விஷயங்களில் ஊறியிருந்தால், மனக்கண் மூடியிருந்தால் அந்த நுட்ப எச்சரிக்கையை பாடத்தைக் கற்க விட்டுவிடுவோம். அதனாலேயே கூட நம் வாழ்க்கை திசைமாறிப் போகவும் வாய்ப்புண்டு.

      நன்றி திருவாழிமார்பன், நல்ல கருத்தை முன்வைத்தமைக்கு

      கீதா

      நீக்கு
    2. (ஜைனர்களுக்கும், அம்பிகை, சரஸ்வதி, ஜவாலமாலினி, பத்மாவதி என்று பெண் தெய்வங்கள் உண்டு).//

      ஆமாம், அறிந்திருக்கிறேன். இங்கு பழைய வீட்டு அருகில் இருந்த ஒரு குடும்பத்திடம் அறிந்திருக்கிறேன்.

      அதுவும் சிந்திக்கத் தெரியாத அலல்து மனக்கண் மூடப்பட்ட அந்த சேட் கடைசியில் அந்த மலரைத் தூக்கிப் போடுகிறார் பாருங்கள் அது வாடாமல் இருப்பது கூட தங்கத்தை உரைத்து உரைத்துப் பார்க்கும் அவருக்கு மண்டையில் உறைக்காமல்...

      கீதா

      நீக்கு
    3. மாபெரும் அந்த பிரபஞ்ச சக்தியை உணர்ந்தால் மட்டுமே நமக்கு பல கண்கட்டு வித்தை போன்று வருவதை அவிழ்க்க முடியும்.

      கீதா

      நீக்கு
  6. //நான் வாசித்த கதை - கீதா ஆர்// கீதா ஆர் என்று கேட்பானேன்? அவரை அறியாதார் ஆர்?

    BTW, அற்புதமான கதைத்தேர்வு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி திருவாழிமார்பன்! மிக நல்ல கதை. உண்மையிலேயே.

      கீதா ஆர் என்று கேட்பானேன்? அவரை அறியாதார் ஆர்?//

      சிரித்துவிட்டேன்.

      மீண்டும் நன்றி. எதுக்குத் தெரியுமா? தினமும் எங்கள் ஊர் சுவாமியின் பெயரைச் சொல்ல வைத்துவிடுவதற்கு!

      கீதா

      நீக்கு
    2. critical analysis உழைப்பைக் கோரும் விஷயம். அருமையாய் செய்திருக்கிறீர்கள்!

      அவர் நிஜ வாழ்க்கையில் மிகவும் நொந்துபோயிருந்தபோது அகஸ்மாத்தாக ஒரு முஸ்லீம் சாதுவின் ஆசி பெற்றதையும் அதன் பின் வாழ்வில் திருப்பு முனையாக ஏற்றம் கண்டதையும் எப்போதோ படித்த நினைவு. தேடி ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள இப்போது அவகாசம் இல்லை.

      நீக்கு
    3. நன்றி, நன்றி, திருவாழிமார்பரே!

      நிறைய ஊக்கம் பெறுகிறேன்.

      கீதா

      நீக்கு
    4. அவர் நிஜ வாழ்க்கையில் மிகவும் நொந்துபோயிருந்தபோது அகஸ்மாத்தாக ஒரு முஸ்லீம் சாதுவின் ஆசி பெற்றதையும் அதன் பின் வாழ்வில் திருப்பு முனையாக ஏற்றம் கண்டதையும் எப்போதோ படித்த நினைவு. தேடி ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள இப்போது அவகாசம் இல்லை.//

      ஓ அப்படியா! தேடிப் பார்க்கிறேன்.

      அல்லது ஏகாந்தன் அண்ணாவிடம் கேட்டால் தெரிந்துவிடும்.

      கீதா

      நீக்கு
    5. விமலாதித்தன் அவர்கள் 'உயிர்த்தெழுதல்' எனும் சிறுகதையில் ஒரு முஸ்லிம் பாவா வைக் கொண்டு வருகிறார் என்பதை ஆபுதீன் பக்கங்களில் தெரியவருகிறது. ஒரு வேளை தன் அனுபவத்தை அதில் கொண்டுவருகிறாரோ?

      கீதா

      நீக்கு
    6. இருக்கலாம். Thanks for following up.

      நீக்கு
    7. //கீதா ஆர் என்று கேட்பானேன்? அவரை அறியாதார் ஆர்?// கீதா ஜி என்று குறிப்பிடுவதை ஏன் விட்டு விட்டீர்கள்? அசந்தால் உங்களை அண்ணா என்று அழைக்க ஆரம்பித்து விடுவார், ஜாக்கிரதை!

      நீக்கு
    8. சிரித்துவிட்டேன் பானுக்கா.

      உண்மையிலேயே திவாமா வை அப்படி அழைக்கத்தான் இருந்தேன்!!!!

      அக்கா எதுக்கு அவருக்கு எச்சரிக்கை. அண்ணா ன்னு கூப்பிட்ட அது எவ்வளவு பெரிய கௌரவம்!!!!! நிச்சயமாக அவர் என்னைவிடப் பெரியவராகத்தான் இருப்பார்!!!!

      ஜெ கே அண்ணா அவரை அண்ணான்னு நான் கூப்பிடுவதை ரொம்ப சந்தோஷமாகச் சொல்வாராக்கும்!

      கீதா

      நீக்கு
  7. பதில்கள்
    1. முடியாது முடியாது. அதெல்லாம் ஏற்கெனவே 1000 டெஸ்ட், எக்ஸாம்லாம் வாழ்க்கைல எழுதி களைச்சுப்போச்சு. நோ மோர் டெஸ்ட் ;-)

      நீக்கு
    2. test பாஸாகிட்டீங்க ஸ்ரீராம்.

      திருவாழிமார்பன் - உங்கள் கருத்தைப் பார்த்து சிரித்துவிட்டேன்

      கீதா

      நீக்கு
    3. அது தனி கதை, அவஸ்ட்ஜ்ஹே TVM...  அப்புறம் சொல்கிறேன்.  சேலம் புறப்பட்டு கொண்டிருக்கிறேன்!  வெள்ளி பதிவுக்கு பதில்கள் கொடுத்து விடலாம் என்று வந்தால் அதுவும் தடை பட்டுப் போய் விட்டது.  முடிந்த வரை முயற்சிக்கிறேன்...

      கூகுள் சாமி..  இந்த விளக்கத்தை எப்படியாவது வலையேற்றி விடு...   ஏற்றி விடப்பா...  தூக்கி விடப்பா...

      நீக்கு
    4. கூகுள் சாமி கண்ணைத் திறந்துவிட்டார் ஸ்ரீராம். வந்துவிட்டதே!

      கீதா

      நீக்கு
  8. ​வந்துட்டேன்.
    இன்றைய கதை சமுத்திரம் எழுதிய, நான் படிச்ச கதையில் ஒன்றாக இடம் பெற்ற 'ரசவாதம்' என்ற கதையை நினைவூட்டியது. அதில் ரசவாதத்தால் பொன்னாக மாறிய பித்தளை நகைகள் ஒரே நாளில் மீண்டும் சாதாரணமான பித்தளை நகைகளாக மாறிவிட்டன என்று முடியும். "பேராசை பெருநஷ்டம்" என்பதே விதி.

    இக்கதையில் அம்பாளே சிறுமியாய் வந்து பாடம் புகட்டுகிறாள் என்பதே நீதி. அதனால் தான் சிறுமியின் நடத்தைகள் சிறுமிக்கு உரியனவாக இல்லாமல் ஒரு மாஜிக் நிபணனுடையது போல் இருப்பதாக எழுதுகிறார் ஆசிரியர்.
    1. மூடிய கைகளுக்குள் தங்க ரோஜாவை அடக்க முடியுமா?
    2. பூவை உரசிப்பார்க்க கொடுக்காமல் பிடித்து கல்லை உரசிப்பார் என்று கூறுவது எதனால்?
    3. மைதாஸ் தொட்டதெல்லாம் பொன் என்பது போல் சிறுமியின் கையில் தங்க ரோஜா. மற்றவர் கையில் சாதா ரோஜா
    4. விலாசம் தராமல் போனது தன்னிடத்திற்கு வழைக்கவே தான். சேட் தன்னிச்சையாக கோயிலுக்கு சென்றது ஏன்?
    5. இவ்வளவு படிப்பினைகள் தந்தும் அவருடைய பேரன் வழியாக குறிப்பால் உணர்த்தியும் சேட்டுக்கு உறைக்கவில்லை.
    கதை நவீனத்துவ பாணி கதை. ஆனைக்கும் அடி சறுக்கும். ஏமாற்றுபவனும் ஒரு நாள் ஏமாறுவான்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெ கே அண்ணா, உங்க பகுதியில் இப்ப நாங்களும் கொஞ்சம் புகுந்துவிட்டோம். உங்களுக்கும் சின்ன ஓய்வு வேண்டாமா.

      சமுத்திரம் அவர்களின் கதையை நீங்க இங்கு பகிர்ந்திருந்தது நினைவுக்கு வந்தது.

      பதிவு பெரிதாகிக் கொண்டே போனது கருத்தில் சொல்லலாம் என்று விட்டேன்.

      விரிவான கருத்திற்கு மிக்க நன்றி, ஜெ கே அண்ணா

      //கதை நவீனத்துவ பாணி கதை. ஆனைக்கும் அடி சறுக்கும். ஏமாற்றுபவனும் ஒரு நாள் ஏமாறுவான்.//

      அதேதான்.

      கீதா

      நீக்கு
    2. விலாசம் தராமல் போனது தன்னிடத்திற்கு வழைக்கவே தான். சேட் தன்னிச்சையாக கோயிலுக்கு சென்றது ஏன்?//

      அப்பவும் புரியலையே அந்த சேட்டுக்கு!!!

      திருவாழிமார்பன் சொல்லிருப்பது போல அவர் கண்களில் பிரசாதக்கடையும் மொட்டைகளும்தான் படுகிறார்கள்.

      அதான் அறிவுக்கண் கட்டுண்டு கிடக்குதே கண்கட்டு வித்தை போன்று!! தங்கமே மனதில்...

      கீதா

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.
    கதை பகிர்வும் சகோதரி கீதாரெங்கன் அவர்களின் பாணியில் நன்றாக உள்ளது. இந்தக்கதை நான் ஏற்கனவே 100 சிறந்த கதைகளில் ஒன்றாக படித்திருக்கிறேன். இப்போதும் படிக்க படிக்க அது நினைவுக்கு வந்தது.

    கதையில் வரும் சிறுமி அம்பாளை நினைவுபடுத்தி நம்மையும் சிலிர்க்க வைக்கிறாள். கதாசிரியரின் எழுத்து நடை அற்புதமாக உள்ளது. படிக்கப் படிக்க தெவிட்டாத நடை. சகோதரி கீதா ரெங்கன் கதையை அருமையாக விமர்சித்துள்ளார். கதையின் பால் அவர் ஈடுபாடு கொண்டு அலசியதற்கும், இங்கு கதையை பகிர்ந்ததற்கும், அவருக்கு மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா நீங்க ஏற்கனவே படித்திருக்கிறீர்கள் என்பதே மகிழ்ச்சி.

      சகோதரி கீதா ரெங்கன் கதையை அருமையாக விமர்சித்துள்ளார். கதையின் பால் அவர் ஈடுபாடு கொண்டு அலசியதற்கும், இங்கு கதையை பகிர்ந்ததற்கும், அவருக்கு மனமார்ந்த நன்றி.//

      மிக்க நன்றி கமலாக்கா.

      கதை ரொம்ப நல்ல நடை. அது ஈர்க்கும்

      கீதா

      நீக்கு
  11. வாசல் கதவு தட்டப்பட்டது.
    'செலவுக்கு இன்னும் பணம் வேண்டுமே, என்ன செய்வது' என்று திகைத்து
    செய்வதறியாமல் உட்கார்ந்திருந்த கிழவியும் பெண்ணும் யாராக இருக்கும் என்று யோசித்தபடி, வாசல் கதவைத் திறந்தனர்.
    ஒரு சிறுமி அந்தப் பெண்ணின் கையில் ஆயிரம் ரூபாயைக் கொடுத்து,
    சேட் கடைப்பக்கம் கையைக் காட்டி, " சேட்டு கொடுக்கச் சொல்லிச்சு" என்று சொல்லிவிட்டு சிட்டாக ஓடிச் சென்றுவிட்டாள் !
    கிழவியும் அந்தப் பெண்ணும் உடனடியாக மருத்துவமனை நோக்கி கிளம்பினார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! கௌ அண்ணா சூப்பர் சூப்பர்!!!!

      என் மனதில் கதையை வாசித்த போது , இச்சிறுமி ஒரு வேளை அந்த ரூபாயை அவர்களுக்குக் கொடுத்திருப்பாளோ என்று யோசித்தேன். சக்தியின் விளையாட்டே அப்படித்தானே!!

      நீங்க அதை இங்கே சொல்லிவிட்டீர்கள்.

      கீதா

      நீக்கு
    2. சார் சொல்லும் கதையும் நன்றாக இருக்கிறதே!

      நீக்கு
    3. கேஜிஜி சார் எழுதியதுதான், கதையை முழுமையாக்குகிறது. நமக்கே அந்த ஏழைகளுக்கு உரிய பணத்தைக் கொடுக்கிறான் இல்லே இந்த சேட்டு என்று தோன்றியது. இப்படி கதை அமைந்தால்தான் சிறுமி கொடுத்த மலருக்கு அர்த்தம் இருக்கும்.

      நீக்கு
    4. நெல்லை, எல்லாத்தையும் விளக்க முடியாது கதையில்

      சுஜாதா சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது. கதையில் எல்லாம் சொல்லக் கூடாது... மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்வார்....

      இரண்டாவது ஆசிரியர் கதையில் தன் விருப்பு வெறுப்பு எண்ணங்கள் எதையும் திணிக்கவில்லை. அப்படியே கொண்டு செல்கிறார். இப்படிச் சொல்லிவிட்டால் கதையின் முக்கிய அம்சம் விட்டுப் போய்விடுகிறது....கதையில் மறைந்திருக்கும் அந்தப் பாடம்.

      கீதா

      நீக்கு
  12. தான் படித்த பள்ளிக்கு கட்டிடம் கட்டித் தந்த பெண் விஞ்ஞானியை வணங்குகிறேன்.
    டெங்குவிற்கு ஒற்றை தடுப்பூசி - வரவேற்கலாம்.
    //வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுக்கு முற்றுப்புள்ளி! ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது கமிஷன்// நல்ல முன்னெடுப்பு!.

    பதிலளிநீக்கு
  13. கதையை சிறப்பாக அலசியிருக்கிறார் கீதா. ஆனாலும் கதையை படித்த பிறகுதான் கருத்து கூற முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பானுக்கா.

      கதையை வாசித்துவிட்டு வாங்க.

      கீதா

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. கதையைப் படித்தேன். எங்கு தங்க மலர், சாதாரண மலராக ஆனது என்பதில் தெளிவில்லை. மனக்கண்ணில் என்றுதான் கதாசிரியர் சொல்கிறார். வெறும் பொன்னை உரசிப் பார்ப்பவனுக்கு அந்தத் தெய்வம் கொடுத்த மலரின் பெறுமானம் தெரியவில்லையோ.

    கதைக்கான விமர்சனம் நல்லா இருந்தது கீதா ரங்கன். ஆனால் இவ்வளவு போஸ்ட்மார்ட்டம் செய்தால் கதையின் ஜீவன் கெட்டுவிடாது? சிலவற்றை மனதுதான் புரிந்துகொள்ளவேண்டும். விளக்கமாக அதனை விமர்சனம் செய்யும்போது நம் புரிதல் தடைபடும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் நீங்க நல்லா ஆழமா அலசியிருக்கீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை, அது அவர் கண்ணுக்குத் தங்கமலர் ஆகிறது பாருங்க..அவர் மூளை உடனே கணக்கிடுகிறது.அங்குதான் விஷயமே தொடங்குது.

      உலக சக்தி நமக்குப் பல சமயங்களில் அறிவுறுத்திக் கொண்டே இருக்கும் ஆனால் நம் அகக் கண்கள் வேறு விஷயங்களில் கண்கட்டுவித்தை போன்று கட்டுண்டுவிடுகிறது பாருங்க அதுதான் இங்கு.

      இதில் போஸ்ட் மார்ட்டம் சரியான ட்ராக்கில் இருந்தால் கேஸில் பல உண்மைகள் வெளிவரும் என்பது போல கதையிலும் ஹிஹிஹிஹி...

      இது வெளிவந்த போது சரியாகப் புரியலைன்னு கருத்துகள் இருந்தது என்று தெரியவருகிறது.

      பாருங்க அங்கயும் வாசிக்கும் போது reading in between the lines விட்டுவிட்டால் புரியாது. எனவே தான் நான் புரிந்து கொண்டதை எடுத்தாண்டேன் அவ்வளவே, நெல்லை. அதையும் சொல்லிவிட்ட்டேன் அவரவர் புரிதலுக்கு ஏற்பதான் ஆசிரியர் விட்டிருக்கிறார் என்பதையும். அதைக் கண்கட்டு வித்தை எனலாம். தெய்வம் எனலாம் அமானுஷ்யம் எனலாம்.....அனுபவம் எனலாம்...

      இருந்தாலும் நீங்க நல்லா ஆழமா அலசியிருக்கீங்க//

      நன்றி நெல்லை.

      கீதா

      நீக்கு
  16. பாஸிடிவ் செய்திகள் அருமை.
    கீதா ரெங்கனின் கதை பகிர்வு அருமை.
    நகை அடகு வைக்கும் சேட் கடை பற்றி அவரின் மன உணர்வுகளை அழகாய் கதை சொல்கிறது.

    சேட் காலையில் படுக்கையை விட்டு எழுந்து கொள்ளும் போதே குழப்பமாக எழுந்து கொள்கிறார், காபி யாரொ குடித்தாக நினைக்கிறார்.
    முந்தின நாள் நிகழந்த கடைநினைவு மனதில் ஓட கடைக்கு போகிறார். தங்கமலரை கொடுத்த சிறுமி பாடம் புகட்ட வந்த பாலா திரிபுர சுந்தரியோ!

    லாசாரா கதை போல இருக்கிறது.
    ஆசிரியர் குறிப்பு படித்தேன் இவர் கதைகள் படித்து இருப்பேன் ஆனால் நினைவில் இல்லை.

    உங்கள் கதை அலசல் எல்லாம் நன்றாக இருக்கிறது கீதா.
    கதையை மீண்டும் படிக்க தூண்டும் விமர்சனம்.
    கதை பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லாசாரா கதை போல இருக்கிறது.//

      அக்கா எனக்கும் சில இடங்களில் தோன்றியது. அவரும் இப்படித்தான் எழுதுவார் இல்லையா?

      //நகை அடகு வைக்கும் சேட் கடை பற்றி அவரின் மன உணர்வுகளை அழகாய் கதை சொல்கிறது.//

      ஆமாம்.

      //உங்கள் கதை அலசல் எல்லாம் நன்றாக இருக்கிறது கீதா.
      கதையை மீண்டும் படிக்க தூண்டும் விமர்சனம்.//

      மிக்க நன்றி கோமதிக்கா.

      கீதா

      நீக்கு
  17. மலர் தங்கம் ஆகி விடாதா என்று பேராசை இருக்கிறது அன்று பூத்த மலராக இருப்பது எரிச்சலை தர கசக்கி தூக்கி எறிகிறார் சாக்கடை ஓரம் விழுகிறது. சிறுமியை ஏமாற்ற நினைத்தது ஏமாந்து போனது கோபமாக மட்டுமே இருக்கிறது பாடம் கற்றுக் கொள்ளவில்லை அவர் என தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலர் தங்கம் ஆகி விடாதா என்று பேராசை இருக்கிறது அன்று பூத்த மலராக இருப்பது எரிச்சலை தர கசக்கி தூக்கி எறிகிறார் சாக்கடை ஓரம் விழுகிறது//

      சூப்பர். அதேதான்...ஆமாம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை அப்படியே தன் வேலையில் மூழ்கிவிடுகிறார்.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  18. தடுப்பூசி வரவேற்போம்.

    கதை விமர்சனம் நன்றாக உள்ளது.


    பதிலளிநீக்கு
  19. பெரும்பாலும் சிறுகதைகளாகவும், இலக்கிய விமர்சனங்களாகவும் இதுகாறும் எழுதிவரும் விமலாதித்த மாமல்லனின் கதை ஒன்று இங்கே அலசலுக்கு வந்திருப்பது நன்று. தொடர்பான வாசகர் கமெண்ட்கள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கின்றன.கீதா அவருக்கே உரித்தான வகையில் படைப்பிற்குள் புகுந்து வெளிப்பட்டிருக்கிறார். தன் பார்வையை இங்கு முன் வைக்கிறார். இந்த முயற்சியானது, மேலும் இவரது ஆக்கங்களைத் தேடி வாசிக்க சிலரை தூண்டக்கூடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி, ஏகாந்தன் அண்ணா.

      நான் சரியாக எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன், ஏகாந்தன் அண்ணா.

      நிஜமாகவே இந்தச் சிறு கதையே மேலும் அவரது படைப்புகளைத் தேட வைத்தது.

      நன்றி அண்ணா

      கீதா

      நீக்கு
  20. விமலாதித்த மாமல்லனின் 'ஆபீஸ்' என்கிற நாவல் ஒன்றின் முதல் தொகுதி விரைவில் வெளியாகவிருக்கிறது. ('மெட்ராஸ் பேப்பர்'-இல் தொடராக வெளிவந்து கவனம்பெற்ற நாவல் ) வரவிருக்கும் சென்னை தமிழ்ப் புத்தகக் கண்காட்சியில் இது தென்படலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவலுக்கும் மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா.

      கீதா

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!