27.8.26

ஏன் சிரித்தாள் என்னைப் பார்த்து...

 

ஓர் இளைஞன் வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ளப்போவதைப்பற்றி - அதுவும் மேஜர் சுந்தரராஜன் மன்னிக்கவும், மேஜர் ஸர்ஜரி செய்து கொள்ளப்போவது பற்றி கவலையே படாமல் உலகம் அதுபாட்டுக்கு இயங்கத்தொடங்கியது!  நோ பிரேக்கிங் நியூஸ். 

நான்காவது நபர்தான் நான் என்பதால் எப்படியும் என்னை அழைக்க பத்து மணிக்கு மேல் ஆகும் என்று தப்புக் கணக்கு போட்டிருந்தேன்.  எனக்கு தெரியாத இன்னொன்று காலை நாலரை மணி முதலே அறுவை சிகிச்சை தொடங்கி விட்டது என்பது!  மற்றவர்கள் விஷயத்தில் அவ்வப்போது இந்த அதிகாலை பூஜை..  ச்சே..  அதிகாலை அறுவை பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் ஒரு அரசு ஊழியனாக எனக்கு காலை ஒன்பது மணிக்கு மேல்தான் தொடங்குவார்கள் என்கிற குருட்டு எண்ணம் இருந்தது என்பதை நான் சொல்லிக் கொள்ள வெட்கப்படப் போவதில்லை.  ஏனெனில் வெட்கப்பட வேறு விஷயங்கள் இருந்தன.  

ஆம்.  கவுன்!

எட்டு மணிக்கே என்னை ஸ்ட்ரிப்டீஸ் செய்ய விரைந்து வந்தனர் வார்டு செவிலியரும், ஸ்ட்ரெச்சர்வுமனும்.  

"அதற்குள்ளா?" என்று அவர்களை வெளியே அனுப்பி உடைகளைந்து கவுனணிந்து தயாரானேன்.  மறுபடியும் இன்னர் விஷயத்தில் ஒரு விவாதம் வைக்கலாமா என்று ஒரு சபலம்.  நினைவோடிருந்தால் கையால் மானம் மறைக்கலாம்.  நினைவு வேறு இருக்காது.  ஆனால் இவர்களிடம் கேட்டும் பயனிருக்காது.    என்ன சொல்வார்கள் என்று....    எனவே உலகமகா சோகத்துடனும் வெறுப்புடனும் எரிச்சலுடனும் நானே அதைத் துறந்தேன்.  படுக்கையில் இருந்த வெண்போர்வையை எடுத்து மேலே போர்த்திக் கொண்டு ஸ்ட்ரெச்சரில் படுத்தேன்.

என்னைப் பார்த்து பாஸுக்கு சிரிப்பு வந்தது.   காரணமும் இருந்தது.  அது -

ஸர்ஜரிக்கு முன்னால் செய்ய வேண்டிய முக்கிய கடமை ஒன்று உண்டு.  வபனம்!  எனவே மதியம் முதல் 'எப்போ வருவாரோ..  எந்தன் முடி தீர்க்க' என்று காத்திருந்தபின் நிதானமாக எனக்கு அறிவிக்கப்பட்டிருந்த முனியன் உள்ளே நுழைந்தபோது இரவு பத்தரை மணி!   யாரோ கூட வருவது போல பேசிக்கொண்டே உள்ளே வந்தார் முனியன்.   அதாவது கதவு திருக்கும் முன்னரே அவர் பேச்சு உள்ளே கேட்டது.   அவர் தனக்குத்தானே பேசிக்கொள்வது போல தோன்றினாலும் அதன்மூலம் எனக்கு சில செய்திகள் சொல்லிக்கொண்டிருந்தார்.  

முன்னர் இவர் ஒருவர்தான் அங்கு சவரத்தொழிலாளி.  நோயாளிகளும் கம்மி.  காசும் ஓரளவுக்கு வரும்படி வந்து கட்டுப்படியானது.  இப்போது ஆட்கள் பெருகி விட்டதால் ஒரு தொழிலாளிக்கு தினசரி இரண்டு நோயாளிகள் கிடைத்தாலே பெரிது என்கிற நிலை.  'அதென்ன ஆசுபத்திரிக்கு வர்றவங்க எல்லோரும் ஆபரேஷன் செய்துக்கறாங்களா என்ன?' என்று சலித்துக் கொண்டார்.  அந்த மறைமுகத் தகவலில்  'ஆவன செய்யுங்கள்' வார்த்தை மறைந்திருந்தது.

'இதை மட்டுமா நம்பி இருப்பீங்க? வெளியிலேயும் கடையோ தனியாவோ பார்ப்பீங்க இல்ல?" என்றேன்.

"பின்னே?" என்று அவர் பேசிக்கொண்டே இருந்தாலும் கைகள் பையைத் திறந்து உபகரணங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தன.  பாஸை வெளியே இருக்கச் சொன்னார்.

"முகம் மட்டும்தானே?" என்றேன் சந்தேகத்துடன்.  இழவு இன்னார் ரூல்ஸ் என்னென்ன வைத்திருக்கிறார்களோ என்கிற பயமும் சேர்த்து.

"மூஞ்சி மட்டும்தான்...   மூஞ்சி மட்டும்தான்..  பின்ன உடம்பு பூராவா செய்வாங்க..  அதுவும் இவங்க கொடுக்கற காசுக்கு.." என்று கத்தியை ஒரு தோல்பட்டையில்  தீட்டினார்.

"பின்ன அவங்களை ஏன் வெளில போகச் சொன்னீங்க?"

"லேடீஸு...  கொஞ்சம் சங்கடம் இல்ல?"

"அவங்களுக்கு அதெல்லாம் சங்கடம் இல்ல"

அவங்களுக்கு இல்ல..  எனக்கு...   எனக்கு வெதுவெதுன்னு பேசிக்கிட்டே வேலை செய்யணும்..    அதான்"

பாஸை உள்ளேயே இருக்கச் சொல்லி விட்டேன்.  எழுந்து பாத்ரூம் பக்கம் போவது போல சென்று மீசை தாடியுடன் சில போட்டோக்கள் எடுத்துக் கொண்டேன்!

வந்து அமர்ந்ததும் முகத்தை வாகாகத் திருப்பி வழிக்க ஆரம்பித்து பத்து நிமிடங்களில் முடித்தார்.  அப்போதே பாஸ் முகத்தில் புன்னகை ஏற ஆரம்பித்திருந்ததை கவனித்தேன்.

உபகரணங்களை எடுத்து பையில் வைத்துக் கொண்டே "கட்டாயமில்லே.. வேலை முடிந்ததும் ஏதாவது தருவாங்க" என்றார்.

தயாராய் கையில் வைத்திருந்த ஐம்பது ரூபாயை நீட்டினேன்.

"சிலர் இருநூறு தருவாங்க...  முன்னூறு தருவாங்க...  உங்க இஷ்டம்"

"அதான் என் இஷ்டமா ஐம்பது கொடுத்திருக்கேன்.."

"பார்த்து கொடுக்கலாம்"

என் கையில் ப்ளேடு கொடுத்திருந்தால் நானே செய்து கொண்டிருப்பேன்" என்றேன்.

வெறுப்புடன் என்னைப் பார்த்தபடி எழுந்தார்.   

"இதுவே நர்சம்மா மெனக்கெட்டு வந்து காசு எதுவும் கொடுக்காதீங்க...  தப்பு" ன்னு சொல்லிப்போனாங்க..   வேணா அவங்களையும் கேட்டுடுவோம்" என்றேன்.

கறுப்புப் பையை அக்குளில் சொருகிக் கொண்டு ஏதோ பேசிக்கொண்டே வெளியே சென்று விட்டார்.

மொழுமொழு என்று ஆன முகத்தை சிலபல போட்டோக்கள் எடுத்து குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தேன்!

இப்போது கவுனுடன், மீசை தாடி இல்லாமல், நிறைய தலைமுடியுடன் படுத்துக் கொண்டிருந்த என்னைப்  பார்த்து பாஸ் சிரித்த காரணம் உங்களுக்கு புரிந்திருக்கும்!
அறையை விட்டு வெளியே வந்து ஸ்ட்ரெச்சர் நர்சஸ் டேபிள் அருகே நிறுத்தி வைக்கப்பட்டது.  ஏதேதோ பேசி, சில பேப்பர்களை எடுத்துக் கொண்டு ஒரு செவிலி கூட நடக்க, என் பயணம் தொங்கியது.  அய்யகோ..  ஹாலில் நான் மீண்டும் நிறுத்தி வைக்கபப்ட்டேன்.  செவிலி எதையோ மறந்து விட்டு எடுத்து வர சென்றார்.  கண்ணை மூடிக் கொண்டேன்.  இந்த மயக்க நிபுணர் என்னை எப்படி மயக்குவார்?  அதற்குதான் கவுன் போட்டிருக்கிறார்களோ என்று அபத்த ஜோக் மனதில் ஓடியது.  

நான் மிகுந்த மனஉறுதி உடையவன்.  என்னை அவ்வளவு சீக்கிரத்தில் மயக்க மருந்து கொடுத்து மயக்கத்துக்கு கொண்டு செல்ல முடியுமா?  என் மனோவலிமை காரணமாக சரியாக மயக்கம் அடையாமல் இருந்தால் வலித்தால் என்ன செய்வது..

எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, திரும்பி வந்த செவிலி ஸ்ட்ரெச்சரில் ஒரு ஜெர்க் கொடுத்து சிக்னல் செய்ய, வண்டி நகர்ந்தது.  பாஸும் பெரியவனும் பின் தொடர்ந்தனர்.  ஏதோ போருக்கு செல்பவனை வழி அனுப்புவது போல சின்னவனுக்கு வேறு கால் செய்தனர்.

"டேய்..   அப்பாவை அழைச்சிக்கிட்டுப்போறாங்கடா...    தியேட்டருக்குக்குள்ள அழைச்சுட்டு போக போறாங்க.."

அவன் என்ன சொன்னானோ,  பெரியவன் ஸ்ட்ரெச்சரிடம் வந்து "கொஞ்சம் ஸ்லோவா போறீங்களா..   தம்பி வந்துக்கிட்டிருக்கான்..."

அவருக்கு புதிராக இருந்திருக்கும்!  'இது ஒரு ஸர்ஜரி..  இதற்கு இவங்க இவ்வளவு...'  

"த்தோ இருக்கு கண்ணு தியேட்டர்...  என்ன இன்னா செய்யச் சொல்றே.. அடுத்த கேஸு இவுருதான்..."

பெரியவன் என்னோடு நடந்தபடி ஒரு செல்பி எடுத்தான்!    பின்னால் வந்து கொண்டிருந்த பாஸும் சற்று வேகமாக முன்னேறி வந்து செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார்.

டிராஃபிக் கான்ஸ்டபிள் அத்து மீறும் வண்டியை ஓரம் கட்டுவது போல ஒரு செவிலியரோ, கண்காணிப்பாளரோ வண்டியை நிறுத்தினார்.   ஓரம் கட்டச் சொல்லி கைகாட்டினார்.

வண்டி ஓரம் கட்டப்பட்டது. 

==============================================================================================

செய்தி...

இத்தனை லட்சம் வைத்திருந்தும் என்ன பயன் கண்டீர்?  நாய் பெற்ற தெங்கம்பழம்!.



கர்நாடக மாநிலம், மாண்டியா நகர் குதலு பகுதியைச் சேர்ந்தவர் நுார் உன்னிசா, 70. இவரும், இவரது சகோதரியும் தனியே வசித்து வந்தனர்; திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர்களது இரு சகோதரர்கள் திருமணம் செய்து, தனித்தனியாக வசித்து வருகின்றனர். சகோதரிகள் இருவரும், அங்கிருந்த மசூதி முன் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், நுாரின் சகோதரி உயிரிழந்தார். வாடகை வீட்டில் தனியே வசித்த நுார், உடல்நலம் பாதிக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு முன் உயிரிழந்தார். அக்கம் பக்கம் வசித்தவர்கள், அவருக்கு இறுதி சடங்கு செய்தனர். காரியங்கள் முடிந்ததும், அவரின் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். இதில், பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து சேமித்து வைத்த பணம், 30க்கும் மேற்பட்ட மூட்டைகளில் ரொக்கமாகவும், சில்லரையாகவும் இருந்தது.

இந்த பணத்தை கடந்த 23ம் தேதி எண்ணினர். அன்று இரவு வரை, 8 லட்சம் ரூபாய் வரை இருப்பது தெரிந்தது. பெரும்பாலும் சில்லரை காசுகளாக இருந்ததால் அடுத்தடுத்த நாட்களிலும் எண்ணும் பணி நடந்தது. நேற்று முன்தினம் இரவு இப்பணி முடிந்தபோது, மொத்தமாக 30 லட்சத்து, 12,000 ரூபாய் இருந்தது. இது தொடர்பாக அவரின் சகோதரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிலர், 'மசூதி முன் நுார் பிச்சை எடுத்ததால், அந்த பணத்தை மசூதிக்கு நன்கொடையாக எடுத்து கொள்ளலாம்' என கூறினர். இதை ஏற்க மறுத்த மசூதி நிர்வாகிகள், முறைப்படி உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர். நுாரின் ஒரு சகோதரர், வசதியாக இருப்பதால், தனக்கு அந்த பணம் வேண்டாம் என்று கூறிவிட்டார். மற்றொரு சகோதரர், மசூதி நிர்வாகிகளிடம் பேசி, பணத்தை பெற்றுக்கொண்டார்.


=============================================================================

பாடல் ஒன்று...


அன்னக்கிளியைத் தொடர்ந்து இளையராஜாவுக்கு ஒப்பந்தமான இரண்டு முக்கியமான படங்கள் பத்ரகாளி, இன்னொன்று   .பத்ரகாளியில் யேசுதாஸ் சுசீலா பாடல் எவ்வளவு ஹிட்டோ அதே அளவு  படத்திலும் யேஸுதாஸ் சுசீலா பாடல் ஹிட்.  அதாவது கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடல் போலவே 'செல்லப்பிள்ளை சரவணன்' பாடலும்  இனிமை. எத்தனை பேர் கேட்டிருப்பீர்களோ, தெரியாது.

ஏ ஸி திருலோகசந்தர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் முத்துராமன் ஜெயசித்ரா நடித்திருந்தனர்.  வாலியின் பாடலுக்கு இசை இளையராஜா.


=====================================================================================

பார்க்கும்போதே இந்தக் குதிரையின்  பிடித்திருந்தது.


=======================================================================================

கவிதை முயற்சி..

சொல்லி விட்டு உதிரக்கூடாதா 
கடவுள்மேல் 
சாத்தியிருக்கும் மலர்.. 
ஏதும் வேண்டிக் கொண்டிருந்திருப்பேனே...

*******

காட்சி தரப்போகிறோம் 
கற்பூர ஒளியில் 
என்று தெரிந்தும் 
ஒருபோதும் கவலைப்பட்டதில்லை 
கடவுள் தன் உடை, தலை 
அலங்காரங்கள் பற்றி 

********

தனக்கென 
ஒருமுழம் பூ 
எடுத்து வைத்திருப்பாளா 
பூ விற்கும் சிறுமி?  
ஒரு நாளாவது 
தலை முழுவதும் 
பூச்சூடி 
கண்ணாடி பார்த்திருப்பாளா?

********


நிலவொளியின் 
மெல்லிய வெளிச்சத்தில் 
நீள்சாலையை 
ரசித்துக் கொண்டிருக்கும்போதே 
பாலாறு வருவது போல் 
படர ஆரம்பித்தது 
சூரிய ஒளி 

=========================================================================================

 பேஸ்புக்கில் படித்து ரசித்தது...

இப்படியும் உதவலாம்....


புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காலை சிற்றுண்டி முடித்துவிட்டு, கோட்டைக்கு கிளம்ப ஆயுத்தமாகிறார். அப்பொழுது புரட்சித்தலைவருக்கு அறிமுகமான ஒருவர் தன்னுடன் முருகேசன் (பெயர் உறுதியாக தெரியவில்லை) என்பவரையும் அழைத்துகொண்டு புரட்சித்தலைவரை காண வருகிறார். அவர்களை பார்த்த புரட்சித்தலைவர், "முதலில் சாப்பிடுங்கள். பின்னர் எதுவானாலும் பேசிக் கொள்ளலாம்" என்கிறார். 🔥
அவர்கள் உணவருந்தி முடித்தபின் "சரி இப்ப சொல்லுங்கள். என்ன விசயமாக என்னை பார்க்க வந்தீர்கள். என்னால் ஏதாவது காரியம் ஆகவேண்டுமா?" என வினவுகிறார். வந்தவர் "அண்ணே இவர் பெயர் முருகேசன். தேனாம்பேட்டை சிக்னல் அருகே பீடா கடை வச்சிருக்காரு. அதில் ஒரு சிக்கல், கடை சற்று நடை பாதையை ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டுள்ளது.!
இதை காரணமாக வைத்துக்கொண்டு, இவருக்கு ஆகாத சிலர் அதிகாரிகளை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் . இந்த கடையை நம்பி தான் இவரது குடும்பமும் உள்ளது. வேறுவழியில்லாமல் உங்களிடம் அழைத்துவந்தேன்" என்கிறார் தயங்கியபடி.
புரட்சித்தலைவர் சில நொடி யோசித்துவிட்டு புன்னகையுடன் "என்னால் முடிந்ததை செய்கிறேன்" என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார். இந்த பதிலை கேட்டு வந்தவர்களின் முகம் வாடிப்போகிறது. அதன் பின் மூன்று நாட்கள் கோட்டையில் இருந்து வீட்டிற்கும், வீட்டிலிருந்து கோட்டைக்கும் தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே செல்கிறார். போகும் போழுதும், வரும் போதும் அந்த பீடா கடையை கவனித்துக்கொண்டே செல்கிறார்.! 🙏
ஆக்கிரமிப்பு இருந்தாலும் பீடா கடையினால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை என்று அறிந்த புரட்சித்தலைவர் முதல்வராக இருந்து கொண்டு ஆக்கிரமிப்பு செய்தவருக்கு ஆதரவாக அதிகாரிகளுக்கு உத்தரவு எப்படி போடமுடியும் என்பதையும் உணர்ந்தவர்தானே அவர்.
அடுத்த நாளும் தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் செல்கிறார். பீடா கடை அருகே வந்ததும், பத்து மீட்டர் தொலைவிலேயே காரை நிறுத்த சொல்கிறார். அதிகாரிகளுக்கோ குழப்பம். திடீரென்று நிறுத்த சொல்கிறாரே என்று. பின் காரின் கதவை தானே திறந்துகொண்டு, பீடா கடையை நோக்கி வேகமாக தனக்கே உரித்தான அந்த கம்பீர நடையில் நடக்கிறார் .புரட்சித்தலைவர் நம்ம கடையை நோக்கி வருகிறாரே என்று முருகேசனுக்கு பதற்றம், குழப்பம், பயம்...!!!.செய்வதறியாது திகைத்து நிற்கிறார்....???
பீடா கடையை அடைந்த புரட்சித்தலைவர், "என்ன முருகேசா இப்போல்லாம் தோட்டத்து பக்கம் ஆளையே காணோம். தொழில் எப்படி போகுது?" என்று ரொம்ப நாள் பழகிய நண்பர் போல் முருகேசனுடன் உரையாடுகிறார். முருகேசன் எந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் திருத்திருவென முழிக்கிறார். "சரி ஏதாவது உதவி வேணும்ன்னா தோட்டத்துக்கு வா" என்று சொல்லிவிட்டு மீண்டும் காரில் ஏறி கோட்டைக்கு சென்றுவிடுகிறார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர் சென்ற அடுத்த நொடியே விஷயம் காட்டுத்தீ போல் பரவுகிறது.
"முருகேசன் தலைவருக்கு வேண்டப்பட்டவரா?"
"அவரே இறங்கி வந்து முருகேசன்கிட்ட பேசுனாரா?"
"சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேரும் நண்பர்களாம்"...
என்று ஆளாளுக்கு தாங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். தொல்லை கொடுத்த அதிகாரிகள் பலருக்கும் பயம் தலைக்கேறியது. வேண்டாதவர்கள் என்று சொல்லப்பட்ட பலரும் முருகேசனை பார்த்து சலாம் போட்டதுடன், பின்னாளில் அவர் கிட்டேயே சிபாரிசுக்கு வந்த கதையெல்லாம் நடந்தது. ‪புரட்சித்தலைவர்‬ எம்.ஜி.ஆர் நினைத்திருந்தால் தொல்லை கொடுத்தவர்களை போனில் அழைத்து சொல்லியிருக்கலாம், அதெல்லாம் ஒரு முதல்வருக்கோ, தலைவருக்கோ தகுதியான குணமல்ல. வேறு யாராக இருந்திருந்தால், இதெல்லாம் ஒரு விஷயமா என்று மறந்தே போயிருப்பார்கள். இல்லையெனில் போனில் மிரட்டியிருப்பார்கள்.!
அதிகாரிகளுக்கும் சொல்லாமல் , ஆக்கிரமிப்பை அகற்றவும் சொல்லாமல் அந்த பீடா கடைக்காரருக்கு உதவிய வல்லமை இவரை தவிர யாருக்கு வரும்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும் அவரின் பெயர் தான் தமிழ்நாட்டை ஆளும். என்பதில் சிறிதும் ஐய்யமில்லை.!! 😇
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் புத்தி கூர்மையை பறைசாட்டும் சிறிய நிகழ்வு தான் இது. ஆனால் இதுதான் மிகப்பெரிய எடுத்துக்காட்டு.
வாழ்க! பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் புகழ்.
©️spanbarasan
Entertainment company facebook

================================================================================================== 

பாடல் இரண்டு...

 படம் பெரிய வெற்றி பெறாவிட்டாலும்  நிறைய பேர்களை புருவம் உயர்த்த வைத்த படம் 'அவள் அப்படிதான்'.  கமல், ரஜினி ஸ்ரீப்ரியா நடித்த திரைப்படத்தை இயக்கியிருந்தவர் ருத்ரய்யா.  இது இயக்குனராக அவர் முதல் படம்.  ஆர்ட் பட வகையறா.

கங்கை அமரன் பாடல்.  இளையராஜா இசை.


=====================================================================================

முன்னுரைத்த காதலையே உந்தன் முடிவுரையாய் தருக என்பது அழகான கண்ணதாசன் வரி,.

அதையே முன்னுரையாக எழுதிக் கொடுங்கள்

அமரர் வாசன், தம் சொந்தப் பொறுப்பில் ஆனந்த விகடனை வாங்கி
நடத்தத் தொடங்கியிருந்த நேரம்.

அப்போது வாசனின் 'இல்வாழ்க்கையின் ரகசியங்கள்' என்ற நூல் எழுதி விற்பனையாகிக் கொண்டிருந்தது.

ஆண்-பெண் உடல் உறவு கொள்ள வேண்டிய முறைகளைப் பற்றியும், கணவன்-மனைவி இருவரும் தேக ஆரோக்கியத்துடன், நோயற்ற நல்ல குழந்தைகளைப் பெறுவது குறித்தும் விஞ்ஞான ரீதியில் எழுதப்பட்ட நூல்

இந்த நூலை வெளியிடும் முன்பாக, அதற்கு முன்னுரை எழுதித் தரும்படி தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கத்தைச் சந்தித்து, வாசன் கேட்டுக் கொண்டார்.

"வாசன்! நீங்கள் எழுதிய புத்தகத்தைப் படித்துப் பார்த்தேன். மிக ஆபாசமாக எழுதப்பட்டிருக்கிறது..." என்றார் ராய. சொ.

"இந்த வாசகத்தை அப்படியே எழுதிக்கொடுங்கள். இதையே உங்கள் முன்னுரையாகப் பெருமையுடன் வெளியிடுகிறேன்..." என்றார் வாசன், ராய. சொ. சற்றும் எதிர்பாராத பதிலாக!

ஆதாரம்  வ ரா எழுதிய தமிழ்ப் பெரியார்கள் 

======================================================================================







53 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    பதிவின் தலைப்புப் பாடல் காதில் இனிதே ஒலிக்க தங்களின் ஆபரேஷன் நிலவரங்கள் மறுபடியும் தொடர்கிறது. நீங்கள் நகைச்சுவையாக அதைக்குறித்து எழுதினாலும், ஆபரேஷன் என்றால் ஒருவிதமான பயம் நெஞ்சை நெருடுகிறது.

    உங்கள் பாஸ் சிரித்த காரணம் புரிந்தது. அப்போதும் விடாமல் செல்ஃபி புகைப்படங்களா? இன்றைக்கு நீங்களும், Ai இடமிருந்து எங்களுக்காக ஒரு புகைப்படம் அதேப் போலவே தேர்வு செய்திருக்கலாம்.! அடுத்த வாரம் இதே நேரம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்திருக்குமென நினைக்கறேன். இனி அந்த பிரச்சனைகள் உங்களுக்கு தொடர்ந்து வந்திருக்காது எனவும் நம்புகிறேன்.

    கவிதைகள் நான்கும் மனம் கவர்ந்தது.

    மக்கள் திலகத்தின் நல்லதொரு செயலை ஏற்கனவே படித்திருக்கிறேன். (இங்குதான் என்று நினைக்கிறேன்.) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு முறையும் ஒரு விஷயத்தை வெளியிடும் முன்னர் அது ஏற்கனவே இங்கு வெளியாகி இருக்கிறதா என்று தேடுபொறியில் தேடி விட்டுதான் வெளியிடுகிறேன்.  சமயங்களில் தவறி விடும்.  நன்றி கமலா அக்கா. AI ஓவியம் வெளியிட்டிருக்கலாம்தான்.  தோன்றாமல் போச்சே...

      நீக்கு
    2. /ஒவ்வொரு முறையும் ஒரு விஷயத்தை வெளியிடும் முன்னர் அது ஏற்கனவே இங்கு வெளியாகி இருக்கிறதா என்று தேடுபொறியில் தேடி விட்டுதான் வெளியிடுகிறேன். /

      பரவாயில்லை. அலுப்பு தராத நல்ல விஷயங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம்.

      அனைவருக்கும் (புதுப் பூணூல் மாற்றிக் கொள்ளும் அனைவருக்கும்) ஆவணி அவிட்டம் நல்வாழ்த்துக்கள். இன்று எங்கள் பெரிய மகனுக்கு நட்சத்திர பிறந்தநாளும் கூட.. வீட்டு வேலைகள் முடிந்ததும்.பதிவின் பிற பகுதிகளை படித்து விட்டு, பாடல்களையும் கேட்டு விட்டு வருகிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. உங்கள் மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
      என் கணவருக்கும் நடசத்திர பிறந்த நாள்.

      நீக்கு
    4. எங்கள் தாமதமான வாழ்த்தையும் உங்கள் மகனுக்கு சொல்லி விடுங்கள் கமலா அக்கா.

      கோமதி அக்கா... அரசு சாரை அவரைச் சந்தித்த நேரத்தை நானும் நினைவுகூர்கிறேன்.

      நீக்கு
    5. பிறந்த நாள் கொண்டாடும் கமலா ஹரிஹரன் மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அரசு சாருக்கு மானசீகமான நமஸ்காரங்கள்.

      நீக்கு
    6. உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி. நான் நேற்று இங்கு வராததால், இன்று தாமதமாக வந்து படித்து உங்கள் அனைவரின் வாழ்த்துகளை கண்டு மகிழ்வெய்தினேன். எங்கள் மகனிடம் உங்களனைவரின் அன்பான வாழ்த்துக்களைச் சொல்கிறேன். அவரும் மகிழ்வார். மிக்க நன்றி. 🙏.

      நீக்கு
  3. பார்க்கும் பொழுதே இந்தக் குதிரையின் எது.பிடித்திருந்தது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த உயரம், அந்த வாளிப்பு  குதிநடை, பிடரிமயிர், கம்பீரம்...

      நீக்கு
    2. ஆம். அதன் உயரம் கம்பீரம் கவர்ந்தது.

      நீக்கு
  4. ​இன்னும் எத்தனை வாரம் வைத்தியசாலை அனுபவங்கள் தொடரும்.? கொஞ்சம் ஜவ்வு போல் இருக்கிறது.
    செய்திகள் மீள் பதிவாக தோன்றுகின்றன.
    கவிதைகள் கவிதைகளாக இல்லை.
    கடைசி ஜோக் டாப். ரூபாய்க்கு 3 படி.

    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று பார்த்த செய்திகள் எப்படி மீள்பதிவாகும் JKC ஸார்? 

      உங்கள் கருத்தைப் பார்த்து (எனக்கேயும் தோன்றியதால்) அறுவை அறுவையை நிறுத்தி விடலாம் என்று நினைத்தேன்.  ஆனால் அதை ரசிப்பதாக பானு அக்கா, கீதா அக்கா சொல்லி இருக்கிறார்கள்.  இதகொ!

      // கவிதைகள் கவிதைகளாக இல்லை. //

      ஆக பதிவே பதிவாய் இல்லை என்கிறீர்கள்!!  ஹா..  ஹா..  ஹா...

      நீக்கு
  5. மாநிலத்திற்கு மாநிலம்
    தன் உடையழகைத் திருத்தம் செய்யும்
    அரசியல்வாதி போல.அல்ல இறைவன்

    என் அலாதி ரசனை:
    காட்சிதரப் போகிறோம் --
    என்று ஆரம்பிக்கும் கவிதைக்கு முதல் மூன்று வரிகள் மேலே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுள் மேல் சாத்தியிருக்கும் மலரா?

      நீக்கு
  6. ஆஸ்பத்திரி அனுபவங்களை நீங்கள் ரசித்தீர்களா எரிச்சல் பட்டீர்களா என்று தெரியவில்லை, ஆனால் ரசிக்கும்படி எழுதுகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா..  தவிர்க்க முடியாத அந்த நேரங்களை சீக்கிரம் கடக்க வேண்டுமே என்று பல்கலைக் கடித்து பொறுத்துக் கொண்டு இருந்தேன்!

      நீக்கு
  7. பூ விற்கும் சிறுமி பற்றிய கவிதை நெகிழ்ச்சி! பேக்கரிகளில் வேலை பார்க்கும் சிறுவர்களை பார்க்கும் பொழுதும் அந்த சிறுவர்கள் தங்கள் பிறந்த நாளுக்கு கேக் கட் பண்ணுவார்களா என்று தோன்றும். அதைப்போல புகைப்பட கலைஞர்கள் எப்போதாவது புகைப்படம் எடுத்துக் கொள்வார்களா என்றும் தோன்றும். செல்ஃபி எடுத்துக் கொள்வார்கள் என்று சொல்லக் கூடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..  இது போல நிறைய சொல்லலாம் இல்லை?

      நீக்கு
  8. எம்.ஜி.ஆர். பற்றிய செய்தி ஏற்கனவே வந்து விட்டது என்று ஏற்கனவே கமலா கூறி விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கனவே கமலா அக்கா கூறி விட்டதையும் படித்து விட்டேன்.  நீங்கள் கூறியிருப்பதையும் படித்து விட்டேன்.  கமலா அக்காவுக்கு நான் தந்திருக்கும் பதிலை நீங்கள் படித்திருப்பீகள் என்று நம்புகிறேன்.

      நீக்கு
  9. //இரண்டு முக்கியமான படங்கள் பத்ரகாளி, இன்னொன்று .// இன்னொன்று எது என்று குறிப்பிடவில்லையே? பெண் ஜென்மமா? பாடல் நிறைய கேட்டிருக்கிறேன். 'உறவுகள் தொடர்கதை..' பாடலும் அதிகம் கேட்டிருக்கிறோம். மீண்டும் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  10. பல்லவன் பச்சில் சீசன் டிக்கெட்...இன்றுதான் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்ய பெண்களுக்கு இலவசம் என்று கேள்விப்பட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். என்ன ஆகப்போகிறதோ போக்குவரத்துத் துறை?!!

      நீக்கு
  11. சாதாரணமாக OT நிரம்புவது C section கேஸ்களால். மழுங்க சவரம் செய்து கவுனை மாட்டி கொண்டு போகும்போது மற்றுமொரு பிரசவ கேஸ் என்று பாஸ் நினைத்து விட்டாரோ என்னவோ. புன்னகை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  12. ஆஸ்பத்திரி அனுபவங்கள் ஓகே. கொஞ்சம் அதிகமாகவே வர்ணனைகள் இருக்கோனு தோணுகிறது. விடுங்க. ஆபரேஷன் செய்துக்கிறவங்களை விட வெளியே காத்திருப்பவங்களுக்குத் தான் அதிகம் மன அழுத்தம்.
    வைக்கப் போரின் கீழே நாய் என்பார்கள்.. இந்தப் பிச்சைக்கார மூதாட்டி அந்த ரகம். ஆனாலும் சொந்தங்களுக்கே போய்ச் சேர்ந்ததில் சந்தோஷம் தான்.

    பாடல் குறிப்பில் அந்த இன்னொரு படம் பெயர் விடுபட்டிருப்பதை பானுமதி சொல்லிட்டார். நான் வீடியோவில் பார்த்துத் தெரிந்து கொண்டேன், படம் பெயர் "பெண் ஜென்மம்" என்பதை. இப்போல்லாம் இப்படிப் பெயர் வைக்க முடியாது. பிச்சுடுவாங்க பிச்சு.

    குதிரை நன்றாக இருந்தாலும் அந்தக்குதிரையின் "எது" பிடிச்சிருந்தது? அதைச் சொல்ல வேண்டாமோ?



    கடவுள் மேல் சார்த்தும் மலர்கள் உதிரியாக இருந்தால் தான் உதிரும். தொடுத்த பூக்களிலிருந்து அதிகம் உதிர வாய்ப்பு இல்லை. கடவுள் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்பதால் தன் அலங்காரங்களைப் பத்தி எந்தவிதக் கவலையும் படுவதில்லை. :)

    எங்க வீட்டில் வேலை செய்த சின்னப் பெண் பூவியாபாரமும் செய்தாலும் தினமும் பூ வைச்சுக்காமல் வேலைக்கு வந்ததில்லை. சூரிய ஒளி பாலாறு போலவா வருது? ம்ம்ம்ம்? இங்கே பார்க்க முடியாது. வெளிர் மஞ்சளாக அல்லவோ வருது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிவு செய்து விட்டேன்.  ஆஸ்பத்திரி அனுபவங்கள் அங்கேயே அப்படியே நிறுத்தப் படுகிறது.  வாங்க கீதா அக்கா...

      அந்தக் குருதியிடம் பிடித்த அம்சத்தை மேலே சொல்லி இருக்கேன்!
      உதிரும் பூ கவிதைக்கு இவ்வளவு சீரியஸா ​விளக்கம் கொடுப்பீர்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை!!!

      நீக்கு
    2. // சூரிய ஒளி பாலாறு போலவா வருது? ம்ம்ம்ம்? //

      இருள் கரிய நிறம். பால் வெண்மை நிறம். நிறவேற்றுமைக்காக சொன்னேன்!

      நீக்கு
  13. எம்ஜிஆர் பல வருடங்களாகச் சுத்திண்டு இருக்காரே? அவள் அப்படித்தான் பிரபலமான படம் இல்லையா? பார்த்தாப்போலவும் இருக்கு. இல்லை போலவும் இருக்கு.

    வாசன் புத்தகம் எழுதியதும் தெரியாது. இப்படி ஒரு உரையாடல் நடந்ததும் தெரியாது. புதிய செய்தி.



    கிரிக்கெட்டா இருந்தா என்ன/ அரசியல்வியாதிக்கு எப்போவும் இது தான்.

    சாப்பாடோடு இத்தனை பெரிய டிஃபன் காரியர்கள் தூக்க ரொம்பக் கனமா இருக்குமே? இவரைப்பார்த்தால் ரொம்பவே சுலபமாகத் தூக்கிண்டு போறாரே?

    அந்தக் காலத்திலேயே இந்த சீசன் டிக்கெட் கொடுப்பதெல்லாம் உண்டா? சுத்திப் பார்க்கத் தான் ஒருத்தருக்கு ஒரு டிக்கெட் எடுத்தால் அன்னிக்குப்பூராவும் சுத்திப்பார்க்கலாம்னு சொல்லுவாங்க. 63 இல் நாங்க அதாவது நான், அம்மா, அண்ணா, தம்பி, அம்மா வில் அப்பாவைத் தவிர்த்து நாங்க நாலு பேரும் முதல் தரமாச் சென்னை வந்தப்போ இப்படித் தான் டிக்கெட் எடுத்துக் கொண்டு சுத்திட்டு வந்தோம்.

    உண்மையாகவே அறுபதுகளில் சென்னையில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். எண்பதுகள் வரை தொடர்ந்தது எனலாம்.

    என்னத்தை வாக்குறுதி கொடுத்து என்னத்தை நிறைவேத்தறது? :( அந்த நாளில் இருந்து இந்த நாள் வரை எல்லாமும் பொய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எம் ஜி ஆர் விஷயம் மட்டுமா..  எல்லா விஷயங்களுமே விவேகானந்தர் ஸ்பீச் போல எல்லா இடங்களிலும் சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றது.  படிக்காத யாராவது ஒருவர் படித்து பயன் (!!!) பெறுவார் என்றுதான்!

      நீக்கு
  14. சென்ற வாரம் ஆஸ்பத்திரி அப்டேட்ஸ் ஏன் வெளி வரவில்லை என யோசித்தேன். கவிதைகள் யாவும் அருமை. தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடந்த ஒன்றரை வாரங்களாக "நானாக நானில்லை தாயே.."
      நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  15. பூ விற்கும் சிறுமி கவிதை மனதை தொட்டது.

    ஆஸ்பத்திரி அனுபவங்கள் தொடர் கண்டோம் .....தொடர்வோம்.

    பஞ்சப்பகுதிக்கு இரண்டு பெரிய டிபன் கரியர் எடுத்துச் செல்லும் மனிதர்...ஹா..ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி..  நன்றி.  ஆஸ்பத்திரி தொடர் பெரும்பான்மை வாசகர்களின்  வேண்டுகோளுக்கிணங்க நிறுத்தப் படுகிறது.

      நீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. ஆஸ்பத்திரி அனுபவங்களை சுவை பட சொல்லி கொண்டு இருக்கிறீர்கள்.
    :துன்பம் வரும் நேரத்திலே சிரிங்க" என்ற பாடலும் , இடுக்கண் வருங்கால் நகுக என்ற வள்ளுவர் குறளும் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.. ரசிக்கும் பக்கம் இன்னும் ஒருவர்! நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  18. பிச்சை எடுத்து பொருள் ஈட்டி இப்படி உடன்பிறப்புக்கு கொடுக்க வேண்டும் என்று இருந்து இருக்கிறது. நன்றாக வாழ்ந்து இருக்கலாம். பொன்பானை நிறைய வைக்க உழைத்து ஓடாய் போன கதைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலபேர் விதி.  கையில் ஊமனாய் போய்விடுகிறது.

      நீக்கு
  19. 'செல்லப்பிள்ளை சரவணன்' பாடலும் இனிமை. எத்தனை பேர் கேட்டிருப்பீர்களோ//

    இந்த பாடலும், அவள் அப்படிதான்'படப்பாடலும் அடிக்கடி கேட்டபாடல் வானொலியில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'செல்லப்பிள்ளை' பாடல் கேட்டிருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. யேசுதாஸின் இனிய குரலை ரசித்திருப்பீர்கள்.

      நீக்கு
  20. நிலவில் நடக்க ஆரம்பித்து சூரியன் உதிக்கும் வரை கவிதையை ரசித்தேன்.
    நகைச்சுவைகள் சிரிக்க வைக்க பார்த்து இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  21. //ஓர் இளைஞன் வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ளப்போவதைப்பற்றி //

    அது யாராக்கும் அந்த இளைஞன்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹிஹி... ரொம்ப ரொம்ப லேட் ரியாக்ஷன்!

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    இந்த வாரப் பாடல்கள் இரண்டும் நன்றாக இருந்தது. இவைகளையும் முன்பு வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். இப்போதும் கேட்டு ரசித்தேன். ஆனால், இந்தப்பாடல்கள் இடம் பெற்ற படங்களை இன்னமும் பார்த்ததில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!