4.3.26

Dejavu அனுபவங்கள் உண்டா?

 

கேள்வி பதில்கள் : 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

விஜய்,சங்கீதா மண முறிவு த.வெ.க. வின் ஓட்டு வங்கியை பாதிக்குமா?

# வோட்டு வங்கி இருக்குமானால் பாதிக்காது.  ( ம.மு தெரிந்த விஷயம்தானே)

Dejavu அனுபவங்கள் உண்டா?

# உண்டு. ஆனால் அற்பமான முக்கியத்துவம் இல்லாதவை.‌

பொதுவாக பெண்களுக்கு குயிலைப் பழிக்கும் குரல்தான் அழகு என்பார்கள். அதற்கு மாற்றாக கரகர வென்றிருக்கும் ராணி முகர்ஜியின் குரலை ரசிப்பதுண்டா? 'சர்வம் மாயா' பட ஹீரோயின் குரல் கூட சற்று கனம்தான் ஆனாலும் இனிமை என்றுதான் எனக்குத் தோன்றியது.

பி.கு.: சமீப காலங்களில் நடிகைகளின் படங்களை வெளியிடுவதில்லை என்னும் குறையைத் தீர்க்கலாம்.


# அதிகம் படம் பார்ப்பதில்லை. ராணி முகர்ஜி குரல் நினைவில்லை. அவர் படமும் பார்த்ததில்லை என்றே நினைக்கிறேன். ஒருவரது குரல் நம்மைக் கவர்வதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

நெல்லைத்தமிழன் : 

1. பார்வைக் குறைவு, கேட்கும் தன்மைக் குறைவு, ருசி அறியாத தன்மை, பல் பிரச்சனை போன்று பலவும் மனிதனுக்கு வயது ஆக ஆக வரும் பிரச்சனைகள். இவற்றில் எது பெரிய பிரச்சனை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?  

# பெரியது,  சிறியது என்று பாகுபாடு செய்து பார்க்க முடியாத அளவுக்கு, வயது அதிகமாவதால் ஏற்படும் எல்லாப் பிரச்சனைகளுமே மிகுந்த சிரமங்களை அளிக்கத்தான் செய்கின்றன.எனினும் கண்-காது மந்தம் , மறதி இவற்றின் விளைவாக மிக அதிக சங்கடங்கள் வரும் என்று நான் நினைக்கிறேன்.

2.  கத்தரிக்காயை பலரும் விரும்பாததன் காரணம் என்ன? ஏன் அலர்ஜிக்கு கத்திரிக்காய் காரணமாக அமைந்துவிடுகிறது?  

# கத்தரிக்காயில் பலவகை உண்டு என்பது ஒரு காரணமாக இருக்கலாம். பொய்யூர் கத்தரி, வேலூர் முள் கத்தரி இவை மிகவும் சுவை மிக்கவை.‌

கத்தரி சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்படுத்தும் என்பதால் இதைத் தவிர்ப்பதுண்டு.

3. குழந்தைகளைக் கடத்துவது அல்லது அவர்களை இச்சைக்கு உபயோகிப்பது போன்ற குற்றங்களைச் செய்பவர்களை சக கைதிகளே விரும்பாததன் காரணம் என்னவாயிருக்கும்?  

# குழந்தை என்பது தெய்வாம்சம் என்பது நமது பாரம்பரிய நம்பிக்கை. இதனால் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மிகவும் கொடூரமானவர்களால் கூட மன்னிக்க முடியாதவை ஆகிவிடுகின்றன.

4.  வாக்களிக்காதவர்களுக்கு ரேஷன் போன்ற அரசு உதவிகள் கிடையாது, தேசத் துரோகக் குற்றம் செய்தால் குடும்பத்தின் சொத்து பறிக்கப்படும் என்றெல்லாம் அவசியமான சட்டங்களை ஏன் ஜனநாயக நாடு கொண்டுவருவதில்லை?  யோகியின் புல்டோசர், சில நேரங்களில் நம்மூர் போலிஸின் மாவுக்கட்டு போன்றவை என்னைக் கவருவதால் இந்தக் கேள்வி  

# நீங்கள் குறிப்பிடும் தண்டனைகள் வாக்களிக்காத குற்றத்திற்கு அளிக்கப்படுவதற்குத்  தகுதியானவை அல்ல என்பது மட்டுமல்ல அதை சரி பார்த்து தண்டனை வழங்குவதிலும் பல சிரமங்கள் ஏற்பட வழி இருக்கிறது.‌ ஒரு தவறை இன்னொரு தவறு கொண்டு திருத்த இயலாது.

5.  செரிமானக் கோளாறுகளுக்கு என்ன காரணம்? சுலபமாக அதனை எப்படிச் சரி செய்வது? பாட்டி வைத்தியம் அல்லது தாத்தா வைத்தியம்.

# சரியான நேரத்தில் சரியான அளவில் சரியான உணவு உட்கொண்டால் பிரச்சனைகள் வருவது அபூர்வம்.‌ அதையும் மீறி ஏதாவது ஜீரணக் கோளாறு ஏற்படுமானால் சுக்குப்பொடி வெல்லம் கலந்து எடுத்துக் கொள்ளலாம். அஷ்ட சூரணம் என்பது ஆயுர்வேத மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும் ஜீரணத்திற்கான மருந்து.‌ ஒன்று அல்லது இரண்டு வேளை பட்டினி கிடத்தலும், இரண்டொரு நாட்கள் தொடர்ந்து  சாத்வீகமான உணவு ( மோர் சாதம்-சின்ன வெங்காயம் )  உட்கொள்ளுதலும் பெரும்பாலான ஜீரணக் கோளாறுகளை சரி செய்துவிடும்.

= = = = = = = = =

படமும், பதமும்: 

நெல்லைத்தமிழன் :


அட... கல்லாலான குளியல் தொட்டியா? பார்க்க அழகா இருக்கேன்னு நினைப்பவர்களுக்கு. இது மம்மியை வைக்கும் பெட்டி. இறந்தவரை செழுமைப்படுத்தி பதனப்படுத்தி வைத்தால் அது 'மம்மி'. 


இதோ...மூடி வைத்தாகிவிட்டது.  அட என்னப்பா... அவனவன் தங்கத்துல பெட்டி செஞ்சு வைப்பாங்க, தங்க கிரீடம் முகமூடிலாம் இருக்கும்னு சொல்றாங்க. நீ என்னடான்னா கல்லுல உள்ளதைக் காண்பித்து மம்மியை வைக்கும் பெட்டின்றயே என நினைக்கிறீர்களா? எல்லோரும் பணக்காரங்க இல்லையே. ஆளுக்கேத்த ஜாடி. அவ்ளோதான். அது சரி மம்மியைப் பார்க்கணுமா?


அது பக்கத்துல நின்னுக்கிட்டு ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு நினைச்சேன்.. என்னவோ வேண்டாம்னு தோன்றிவிட்டது.  உடலை லினன் துணிகொண்டு மூடியிருப்பதைப் பார்த்தீர்களா?  அது சரி... "மம்மிகளை பக்கத்திலிருந்து பார்த்திருக்க. வீட்டுக்கு வந்து குளிச்சயா" என்று கேட்டீர்களானால் நீங்க பூமர் அங்கிள்/பூமர் ஆண்டி.  இந்தக் கேள்வி உங்க மனசுல எழவில்லை என்றால் நீங்களும் GenZதான்!


பாரதச் சிந்தனையில் நாம் எப்போதும் ஆன்மாவிற்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். உடலுக்கு (உருவத்துக்கு) அல்ல என்று நினைக்கிறேன். அதனால்தான் கோயிலில் உள்ள சிற்பங்களிலோ இல்லை சிலைகளிலோ, இதுதான் இந்த அரசர் என்று சொல்ல இயலாது. அதாவது அந்த அரசர் போல நாம் உருவத்தைச் செதுக்குவதில்லை.  எந்த அரசரை எடுத்துக்கொண்டாலும், தெய்வச் சிலைகளைச் செதுக்கும் பாணியில் சிற்பிகள் செய்துவிடுவார்கள். நீங்க இராஜராஜன், உலோகமாதேவி (உலோகம் னா மெட்டல் இல்லை. உலக மகா தேவி) சிலைகள்ல கூட இதனைப் பார்க்கலாம். ஆனால் கிரேக்க எகிப்திய ரோமப் பேரரசுகளின் சிற்பிகள் ஆள் எப்படி இருக்கானோ அதேபோலத்தான் சிலையையும் செதுக்குவார்கள். நீங்கள் மேலே பார்ப்பது, உடலை உள்ளே வைத்துப் புதைக்கும் பெட்டிதான். ஆனால் அதன் மேலே அவர் எப்படி இருந்திருப்பாரோ அதேபோலச் செதுக்கியுள்ளார்கள். உங்களுக்கு பாரதீயச் சிந்தனை பிடித்திருக்கிறதா இல்லை மேற்கத்தைய சிந்தனை பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன். 


பொட்டிக்குள்ள ஒண்ணும் இருக்காதுன்னு நம்பி பக்கத்துல நின்னு போட்டோ பிடித்துக்கொண்டேன்!

நெல்லை பகிர்ந்திருக்கும் படங்கள் பார்த்ததும் என் பழைய கவிதைகளிலிருந்து இரண்டை இங்கு பகிர்கிறேன்!

முழுவதும்
மூடி விடாதீர்கள்
கொஞ்சமாவது
காற்று வேண்டும்
எனக்கு...

தினம் தினம்
எழுந்து வருவதே
சிரமமாயிருக்கிறது.
யாரோ
என் கல்லறையை
மறுபடி மறுபடி
மூடி விடுகிறார்கள்.

= = = = = = = = = =


சென்னை திநகர் பரபரப்பான வியாபார தெரு ஒன்றில் காலை முதல் மதியம் வரையும், மறுபடியும் அதே நாள் இரவு பத்து மணி போலவும் இருக்க நேரிட்டது.  அப்போது எடுத்த படங்கள்..  காலை பரபரப்பாகவும், இரவு அமைதியாக, காலியாகவும்!

 


***************************************************






1801... 

தூக்குக்கயிறுகள் புனிதம் அடைந்த ஆண்டு. மருது
சகோதரர்கள், மருதுவின் மகன்களான சிவஞானம், உடையான். சிவத்தையாவுடன் கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையையும் வெள்ளையர் ஆட்சி தூக்கில் போட்ட ஆண்டு அது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார். தூக்கில் போடுவது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பிறவித் தொழிலாக மாறிப்போனது. இந்த வரலாறுகள் அறியா மக்கள்தான், 1857-ம் ஆண்டை முதலாவது இந்தியச் சுதந்திரப் போர் ஆண்டாகச் சொல்வார்கள்: நம்புவார்கள்; படிப்பார்கள்.

அந்தப் புரட்சிகரமான 1801-ம் ஆண்டை மீட்டுக் கொண்டு வருகிறார் டாக்டர் ராஜேந்திரன். இனப்பற்றும், மொழிப்பற்றும், வரலாற்று அறிவும் ஒரு தேர்ந்த நிர்வாகிக்கு இருந்தால், எத்தகைய படைப்பைக் கொடுப்பார் என்பதற்கு உதாரணமாகவே ராஜேந்திரனின் ஆய்வுகள் அமையும். இந்த நூலும் அப்படித்தான் அமைந்திருக்கிறது.

ஒருவிதத்தில் பார்த்தால் இது மருதுபாண்டியர் வரலாறு. மருதுபாண்டியர் வழியாக தென்னிந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாறு. இந்த வரலாற்றை டாக்டர் ராஜய்யன், எஸ்.எம்.கமால், மீ.மனோகரன் போன்றவர்கள் செறிவான ஆதாரங்களுடன் எழுதி இருக்கிறார்கள். ராஜேந்திரன் வேறொரு பாணியைக் கையில் எடுத்துள்ளார். அதுதான் வரலாற்றைப் புனைவுக்கான நடையில் வழங்குவது. இது புனைவு அல்ல. அத்தனைக்கும் ஆதாரங்கள் உள்ளன. ஆனால், படிக்கச் சுவையான நடையில் தர இதுவே வசதியான பாணி.அதில்ராஜேந்திரன்வென்றிருப்பதுதான் இந்தப் புத்தகத்தின் வெற்றி.

பிரிட்டிஷ் கவர்னர்கள், கலெக்டர்களின் வாழ்க்கையையும், சுதந்திரப் போராளிகளின் வாழ்க்கையையும் ஆவணங்களில் இருந்து எடுத்துக் கோத்துள்ளதால் நேரடி வர்ணனையாகவே இருக்கின்றன பல்வேறு பக்கங்கள்
அதுவும் தூக்குக் காட்சிகள் மனதை ரணம் ஆக்குகின்றன.

 "அதிகார வெறியில் சுருக்குக் கயிறுகளைத் தொங்கவிட்டுக் காத்திருந்த வெள்ளைக் கழுகுகளின் காதுகள் மட்டுமல்ல... ஐம்புலன்களும் மரத்துப் போயிருந்தன. வெட்டப்பட்ட பனை மரங்களில் இருந்த ஈரம்கூட, அங்கிருந்த மனிதர்களின் மனங்களில் இல்லை” என்கிறார். பிரிட்டிஷ் அதிகாரிகளுடன். பெரிய மருதுவும் சின்ன மருதுவும் செய்யும் வாதங்கள் விறுவிறுப்பானவை. வேலு நாச்சியாருக்கும் மருது சகோதரர்களுக்குமான நட்பும் உறவும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன.

வரலாறு சொல்ல இது புதிய பாணி. வரலாறு புரிய இது புதிய ஏணி!

******************************************************

KGG பக்கம் : அடுத்த வாரம் பார்ப்போம். இந்த வாரம் கே ஜி ஜி ரொம்ப பிசி !!

= = = = = = = = = = == = = = = == = = = = = = = = = = = = = = = = = = =

மாம்லா லீகல் ஹை - தமிழ் வசனங்களில் பார்த்தேன்!


NetFlix ல் நான் பார்த்த தொடர்.  ஒரு மாதிரி சுவாரஸ்யமாகவே இருந்தது. ரவி கிஷன் முக்கிய பாத்திரத்தில்.  நிதி பிஷ்ட், யஷ்பால் ஷர்மா என்று நடிகர்கள்.  ஒரு கோர்ட்டில் நடக்கும் நிகழ்வுகளை நகைச்வையாக சொல்லி இருக்கிறார்கள்.  உண்மை சம்பவங்கள்.  சின்னச் சின்ன செய்தித் துணுக்குகளை சம்பவங்களாக்கி கதை புனைந்திருக்கிறார்கள்.  உதாரணமாக சிறைக் கைதிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஸெக்ஸ் அனுமதிக்கபபடவேண்டும் என்று ஒரு தீர்ப்பு.  அதை வைத்து ஒரு கதை.  2024ல் வந்த பழைய கதைதான்.

ரவி கிஷன் தியாகி என்கிற கதாபாத்திரத்தில் முக்கிய வக்கீல்.  அவர் தன் தந்தை ஒரு நீதிபதி என்பதை ஏன் மறைக்கிறார் என்பது ஒரு செண்டிமெண்ட் கதை.  கடைசியில் அது விடுபடும்.  நெகிழ்வாகவும் ரசிக்கும்படியும் இருக்கும்.

மேல்நாட்டில் பி எல் - LLB  படித்து வரும் ஒரு பெண் கோர்ட்டில் தன்னைப் பொருத்திக் கொள்ளும் கதை.  நிறைய வக்கீல்கள் இருப்பதால் சீனியர் வக்கீல்களுக்கு ஆள் பிடித்துக் கொடுத்து கமிஷனிலேயே சம்பாதிக்க நினைக்கிறார்கள், அங்கிருக்கும் ஜூனியர் வக்கீல்கள். 

தியாகியின் அடிப்பொடிகளில் இவருக்கும் ஒரு சீனியர் வக்கீல் ஒரு பிரச்னையில் தியாகி தடுமாறிக் கொண்டிருக்கும்போது நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு சொல்வது போல ஒரு கதை சொல்கிறார்.  உள்ளிருந்து தானும் அதைக் கேட்கும் தியாகி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கிறார்.  அந்தக் கதை...

ஒரு நீதிபதி தன் இரு மகன்களுக்குச் சொன்ன கதை. இருவரையும் ஒரு அறையில் வைத்து பூட்டினாராம் அந்த நீதிபதி.   எப்படியாவது வெளியில் வரவேண்டும் என்பது அவர் தன் மகன்களுக்கு சொல்வது.  கதவுக்கு பாத்ரூம் கிடையாது.  ஜன்னல்கள் கிடையாது. ஒரு மகன் பெயர் புராண்.  இன்னொரு மகன் பெயர் சனாதன்! சனாதன் வெளியில் வந்து விடுகிறார்.  எப்படி வெளிவந்தார் என்றால் கதவு தாழிடப்படவே இல்லையாம். பொதுவாக கதவு தாழிடப்பட்டிருக்கும் என்றே மற்ற முயற்சிகளை செய்வார்கள். எல்லா கதவும் திறந்து தான் இருக்கும் வித்தியாசமாக யோசிக்க வேண்டும் என்று சொல்வார்.

தொடரில் வந்த சில வாசகங்கள் கவர்ந்தன.  அதில் ஒன்று,

"குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் போது பெத்தவங்க கைய புடிச்சு கற்றுக் கொடுக்கலைன்னா குழந்தைகள் நடக்காம கூட போகலாம் ஆனால் அதே சமயம்அப்பா அம்மா கைய விட மறுத்துட்டாங்கனா அவங்களுக்கு ஓடறதே மறந்து போகலாம்.  அந்தக் குழந்தைங்க வாழ்க்கையில் ஓடுறது எப்படின்னு கத்துக்க மாட்டாங்க.."

இன்னொன்று..நீதிபதி ஆனால் வக்கீல் அளவு காசு வருமா, பெருமையா என்று கேள்வி வருகிறது தியாகிக்கு.  அப்போது அவர் சந்திக்கும் ஒரு நீதிபதி பதவி ஏத்துக்காதே என்கிறார்.  அதற்கு அவர் சொல்லும் காரணம்,

"சிக்னல்ல மாட்னவன் எங்க அப்பா போலீஸ்டா அப்படின்னு சொல்லுவான் எங்க அப்பா கலெக்டர் டா அப்படின்னு சொல்லுவான் எவனாவது எங்க அப்பா ஜட்ஜ்ன்னு சொல்வானா"

ஜட்ஜ் ஆக தயங்கும்  லீடிங் லாயரை - தியாகியை -  இன்னொரு நீதிபதி நீதிமன்றத்துக்குள் அழைத்துச் சென்று காட்டுகிறார். 

"நான் என்ன பார்க்க வேண்டும்?" என்று கேட்கிறார் தியாகி. 

"லாயர்ஸ் எல்லாம் யாரை பார்க்கிறார்கள்" 
"நீதிபதி எல்லாருடைய பார்வையும் யார் மேல் இருக்கிறது?"

"நீதிபதியின் மேல்"

"நீதிபதி யாரை பார்க்கிறார்"
"வக்கீல்களை பார்க்கிறார்."

" குற்றவாளி யாரை பார்க்கிறார்?"
 குற்றவாளி லாயர்களிடம் உதவி கேட்டு வந்திருந்தாலும் நீதிபதியின் கருணையை எதிர்பார்த்து நிற்கிறார்.  அவர் வாழ்க்கை இப்போது நீதிபதியின் கையில் இருக்கிறது.  தீர்ப்புக்காக வழக்கறிஞர்களும் நீதிபதியை பார்க்கிறார்கள்.  தீர்ப்பு முடிந்ததும் குற்றவாளியின் கண்களை நன்றி, எதிர்பார்ப்பு, கருணை...  எத்தனை விதமான எமோஷன்கள் தெரிகின்றன...   ஜட்ஜ் கிட்ட இருந்து கருணை எதிர்பார்க்கிறாங்க... இன்னும் சில நிமிடங்கள்ல இந்த நீதிபதி தான் என் வாழ்க்கையை முடிவெடுக்க போற ஒரே ஆள்.  குற்றவாளியின் கண்களில் ஒருவிதமான உணர்வுகளை பார்க்கலாம் கொஞ்சம் நிம்மதி, கொஞ்சம் நன்றி உணர்வு, கொஞ்சம் நம்பிக்கை, கொஞ்சம் பெருமை,...   தீர்ப்பு வாசித்து முடித்ததும் நீதிபதி குற்றவாளியின் கண்களை பார்க்கிறார்.  ஒரு நிம்மதி, ஒரு நன்றி உணர்வை அதில் பார்க்கிறார்.  இதுதான் ஒரு நீதிபதியின் பெருமை. அவரால் ஒரு வாழ்வை தீர்மானிக்க முடிகிறது. ஒரு மனிதனின் நம்பிக்கையை உணர்வுகளை காப்பாற்ற முடிகிறது"
என்னை மாதிரி ஒரு பாவியால நல்ல நீதிபதியாக இருக்க முடியுமா என்று கேட்கிறார் தியாகி.

"ஒரு வக்கீலாக நான் எவ்வளவோ பாவங்கள் செய்திருக்கிறேன்.  என்னால் நீதிபதியாக நியாயமாக நடக்க முடியுமா?"


"யாராயிருந்தாலும் கான்ஸ்டிடியூஷன் மேல கைவைத்து உறுதிமொழி எடுத்த பிறகு தானாக ஒரு மாற்றம் வரும் அவர்களால் தப்பு பண்ண முடியாது"

ஒரு நேரத்தில் முதலில் வெளிநாட்டில் படித்துவிட்டு பெரும் கனவுகளுடன் வந்த பெண் சொல்கிறாள்...

"நீதிக்கும் சட்டத்துக்கும் இவ்வளவு பெரிய தூரம் வித்தியாசம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை"

ஒருமுறை பார்க்கலாம்.

109 கருத்துகள்:

  1. அக்கா நீங்க எந்த Dejavu பத்தி கேக்கறீங்கன்னு தெரியலையே!!!! ஹாஹா ஏனென்றால் மார்க்கெட் analysis chart ஒன்றும் உண்டு!!!!

    இருந்தாலும் நீங்க கேட்பது என்னன்னு புரியுது!! சிறிய வயதில் நாங்கள் தம்பி தங்கைகள் சேர்ந்து இரவு படிக்கிறோம் என்று இருக்கும் நேரத்தில் பரீட்சித்துப் பார்த்து, அதில் நான் தான் கண்ணை மூடிக் கொண்டு வரவழைக்கும் கதாபாத்திரம்! ஒரு டம்ளரை கவிழ்த்து வைத்துக் கொண்டு கையை அதன் மேல் வைத்துக் கொண்டு நாம் கேட்கும் கேள்விக்கு ஆம் இல்லை பதிலை அது நகர்ந்து சொல்லும் என்று. அதன் பின் காயினை வைத்தும் பரீட்சித்தோம். நகர்ந்தது என்று மத்தவங்க சொன்னாங்க. முகம் எல்லாம் அவர்களுக்கு வியர்த்து ....நான் கண்ணைத் திறந்து பார்த்தப்ப எனக்கு ஒன்றும் தெரியலை. மத்தவங்க ரொம்பவே பயந்து போய் போது போதும் என்று சொன்னார்கள். ஆனால் கொஞ்ச நேரம் ஒருவித அமைதி நிலைக்குப் போயிருந்தேன் என்று மட்டும் தெரிந்தது எனக்கு....எனக்கு மிகவும் பிடித்தமான என் மனதிற்கு நெருங்கிய என்னிடம் அத்தனை பாசமாக இருந்த என் அத்தையின் மரணம் என்னை பாதித்திருந்ததால் அவர்களை மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொல்றது ஊர்ஜா போர்ட் இல்லையோ? தேஜாவூ என்பதன் அர்த்தம் வேறேனு நினைக்கிறேன். என்றாலும் இதுவும் ஆவிகளுடன் ஓரளவு சம்பந்தப்பட்டது தான்.

      நீக்கு
    2. ஆமாம் கீதாக்கா நான் அர்த்தம் வேற புரிஞ்சுகிட்டு சொல்லிருக்கிறேன் என்று கீழே ஸ்ரீராம் கருத்தைப் பார்த்தும் இப்ப உங்க கருத்தும் பார்த்துப் புரிந்து கொண்டேன். கீதாக்கா.

      கீதா

      நீக்கு
  2. பெண்களுக்குக் கர கர குரல் கூட அழகுதான். சிலரின் குரலில் கம்பீரமும் தெரியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை யாராவது ஆண் சொன்னாத் தேவலை. சரோஜ் நாராயணசாமி மாதிரி

      நீக்கு
    2. ஹாஹாஹா நெல்லை சரோஜ் நாராயணசாமி குரல் என்ன ஒரு ரீச் தெரியுமில்லையா...எனக்கு ரொம்பப் பிடிக்கும்

      கீதா

      நீக்கு
  3. என்னென்னவோ படங்கள் போட்டிருக்கீங்க கௌ அண்ணா. இவங்கலாம் யாருங்க?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் தெரியாது. ஸ்ரீ யைக் கேட்போம்!

      நீக்கு
    2. வாங்க கீதா... தேஜாவு என்றால் அப்போது நீங்கள் பார்க்கும் பொருள் ஏற்கனவே பார்த்தது போலவோ, அப்போது நடக்கும் ஒரு சம்பவம் ஏற்கனவே எப்போதோ நடந்தது போலவோ உணரும் நேரம் . அதற்கு தேஜாவு என்று பெயர்.

      அந்தப் பெண்.... கீழே உள்ள பெரிய படத்தில் கீழ் அவர் பெயர் இருக்கிறது பாருங்கள். சர்வம் மாயா கதாநாயகி

      நீக்கு
    3. ஓ! தேஜாவு னா அதுவா....

      ஏதோ ஒரு படம் கூட வந்திருக்கு போல அது இப்படியானதா...ஓகே ஒகே....

      அப்படினாக்க இந்த அனுபவம் உண்டு பொருளும் சரி, சம்பவமும் சரி. அது ஏன் அப்படி வருதுன்றதுக்கு சில காரணங்களும் சொல்லப்படுவதுண்டு. அறிவியல் ரீதியாக, மன ரீதியாக.

      நான் தேஜாவுன்னதும் ஒரு சார்ட் போட்டு சின்ன வயசுல செய்வோமே அதை நினைத்துவிட்டேன், ஸ்ரீராம்

      சாத்யா! பார்க்க கொஞ்சம் த்ரிஷா போல இருக்காங்களோ? சர்வம் மாய (மலையாளத்தில்) நு புரிந்து கொண்டேன் ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    4. நீங்கள் சொல்வது ஓஜோ போர்ட்.

      நீக்கு
    5. தேஜோவூ என்பதை கீதா தவறாக புரிந்து கொண்டிருக்கிறாரே விளக்க வேண்டுமோ என்று நினைத்த பொழுது, ஸ்ரீராம் விளக்கி விட்டார். நன்றி. யாருடனோ பேசிக்கொண்டிருப்போம், அப்போது அவர் சொல்லும் ஒரு விஷயம் "இதை முன்பே கேட்டிருக்கிறோமே?" என்று தோன்றும். நான் முதன்முதலாக மைசூருக்குச் சென்ற பொழுது ஒரு ரவுண்டாணாவை பஸ் அடந்த பொழுது எனக்கு,"நான் இந்த இடத்தில் இருந்திருக்கிறேன், இந்த இடம் எனக்குத் தெரியும்" என்று தோன்றியது. இப்படிப்பட்ட நிகழ்வுகள்தான் தேஜேவூ.

      நீக்கு
    6. ஹிஹி, நீங்க எல்லாரும் சொல்லி இருப்பதைக் கவனிக்காமல் முதல்லே நாம தான் சொல்றோமோனு நினைச்சுட்டேன். அ.வ.சி.

      நீக்கு
    7. எனக்கும் முன்னரே நிகழ்ந்திருக்கோ என்னும் இத்தகைய உணர்வுகள் பல விஷயங்களில் ஏற்பட்டிருக்கின்றன. முக்கியமாய்க் கல்யாணம் ஆனதும் கருவிலி வீடு முன்னர் எங்கோ பார்த்திருப்பதாகத் தோன்றியது. பின்னர் மாமியார் வீட்டிலும் சொன்னாங்க, என் அப்பாவும் சொன்னார். ஜாதகப் பொருத்தம் பார்க்கையில் 3, 4 ஜோசியர்கள் நாங்க பூர்வஜன்மத்துத் தம்பதிகள்னு சொன்னாங்களாம். என் புக்ககத்துப் பேர் முக்கியமா என் மாமனார் அவர் பாட்டி தான் மறு பிறவி எடுத்து வந்திருப்பதாகச் சொல்லுவார். வேடிக்கை என்னன்னா அவரோட தாத்தா பெயர் சாம்பசிவம். பாட்டி பெயர் சீதாலக்ஷ்மி. எனக்கும் அந்தப் பெயர் தான் என்பதால் அவங்களுக்கு இப்படி ஒரு நம்பிக்கை. கூப்பிடும் பெயராக இருந்த "கீதா" பின்னர் நிலைத்து விட்டது. அம்மாவைப் பெற்ற தாத்தா, அப்பாவைப் பெற்ற தாத்தா (இவர் மனைவியான எங்கள் பாட்டி பெயர் சீதாலக்ஷ்மி) இருவருமே என்னை சீதாக்குட்டி என்றே கூப்பிடுவாங்க.

      நீக்கு
  4. நெல்லை நீங்க கேட்டிருப்பதில் எல்லாமே வயதானால்தான் வரும் என்றில்லை பிறவியிலிருந்து அல்லது சின்ன வயசிலேயே கூட வருமே.

    ருசி அறியாத தன்மை//

    இது வருவதற்குக் காரணம் மணம் அறியும் தன்மை போவதால். இது சில சமயம் தலையில் அடிபட்டால் கூடப் போகும் வாய்ப்பு உண்டு

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இந்தப் பிரச்சனைகளில் ருசி அறியும் தன்மையை விட மற்றவை எல்லாம்...சங்கடங்கள்....ஆனா நீங்க முக்கியமான ஒன்றை விட்டுட்டீங்க நெல்லை. மறதி. அது இன்னும் மோசம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னைப் பொறுத்த வரையில் நான் காது கேளாமை முக்கியப் பிரச்சனை. கண் தெரியாமையும். மறதி பெரிதல்ல, அது கையை விட்டு அளவுக்கு மீறிப் போனாலொழிய (அதாவது பாத்ரூமிற்கும் வேறு அறைகளுக்கும் வித்தியாசம் தெரியாதது என்பது போன்று). மற்றபடி நீ யாரு என்ற கேள்விகளை நான் சந்தித்திருக்கிறேன். பாவமாக இருக்கும் ஆனால் அது கொடுமையல்ல.

      நீக்கு
  6. நெல்லை, செரிமானக் கோளாறுக்குக் காரணம் நம் உணவுப் பழக்கம்தான். வயதாகும் போது ஒரு சில உணவுகளைத் தவிர்த்தல் நலம் நம்மை நாமே அறிந்து கொண்டால் இதைத் தவிர்க்கலாமே.

    வேறு காரணங்கள் என்றால் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை தேவைப்படும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஆசிரியரின் பதில்கள் நன்று!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. நெல்லை, அந்தக் கல்லாலான தொட்டி போன்ற வடிவத்தைப் பார்த்ததும் தோன்றியது நீங்க சொல்லியிருபப்துதான் கல்லறை போன்றுதான் தோன்றியது. அதான் மம்மி!!!! குளியல் தொட்டி போல படலை!!!! காரணம் நெட்டில் பார்த்திருக்கிறேன். கிட்டத்தட்ட நம்மூர் தாழி போன்ற ஒன்று என்று சொல்லலாமோ?

    //இந்தக் கேள்வி உங்க மனசுல எழவில்லை என்றால் நீங்களும் GenZதான்!//

    ம்ஹூம் இந்தக் கேள்வியே இங்க வாசிச்சப்புறம்தான் ஓ இப்படி ஒன்னு கேப்பாங்கல்ல? என்று தோன்றியது. ஸோ நான் இப்போதைய குழந்தை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நம்மூர் தாழி போன்ற ஒன்று// ஹலோ.. நம்ம ஊர்ல தாழியை, இரண்டு நாள் சாப்பாடு, தண்ணீர் வச்சு, மிக வயதான ஆனால் போய்த்தொலையாத முதியவரை வைத்து கண் காணாத இடத்தில் விட்டுவிட்டு வர. இதை நினைத்தாலே மனது பதறுது.

      நீக்கு
  9. பாரதச் சிந்தனையில் நாம் எப்போதும் ஆன்மாவிற்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். //

    நெல்லை பிற தத்துவங்களிலும் கூட soul, spirit என்று சொல்லப்படுவதுண்டே. மேலை நாட்டு உளவியலில் soul என்று நிறைய சொல்லப்படுவதுண்டு.

    //அது பக்கத்துல நின்னுக்கிட்டு ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு நினைச்சேன்.. என்னவோ வேண்டாம்னு தோன்றிவிட்டது. //

    என்னாது? அப்ப அடுத்தாப்ல உள்ள ஃபோட்டோ என்னவாம்!!??? அதான் ஒரு ஃபோட்டோ புடிச்சிட்டீங்களே!!!!! ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது சடலம். அது வெறும் டப்பா.

      பிற தத்துவம் Soul, Sprit எல்லாம் ஆவிகள் பேய்க்கதை சமாச்சாரம். அங்கதான் கல்லறைகளில் ஆவிகள் நடமாட்டம் உண்டு. அதையும் Soul, Spirit லாம் போட்டுக் குழப்பிக்காதீங்க. நம்ம Soul என்ன, நம்மை மாதிரியே இருக்கும்னு நினைச்சீங்களா?

      நீக்கு
  10. ஸ்ரீராம் கவிதைகளை மீண்டும் ரசித்தேன். வாசித்த நினைவு இருக்கே! பொ எ வை - ஆல்!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. ஸ்ரீராம், படங்கள் நல்லாருக்கு. இரண்டிற்கும் கவிதை பிறந்திருக்குமே!

    காலையில் களையுடன்
    ஆரவாரத்தில் நான்!
    இரவில் அமைதியால்
    பொலிவுடன்.

    இது கவிதை இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. ஶ்ரீராம்... இரண்டு கவிதைகளும் நல்லா இருந்தது.

    என் அப்பாவின் சடலத்தைச் சுற்றிவிட்டு பானையை உடைக்கும் சமயத்தில் இவ்வளவு சப்தம் அப்பாவுக்கு ஆகாதே எனத் திடுக்கிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை, மனம் நெகிழ்ந்துவிட்டது! இப்படி நாம் உணர்வு பூர்வமாக ஒன்றி இருப்பதே நாம் நம் உறவுகளுடன் எவ்வளவு நெருக்கமாக பிணைப்புடன் அதாவது மன ஆழத்தில் இருந்திருக்கிறோம் என்று தெரிந்துவிடும்.

      கீதா

      நீக்கு
    2. திகில் கவிதைகள் என்று ஏழெட்டு கவிதைகள் முன்பு எழுதி இருந்தேன்.  அவற்றிலிருந்து இரண்டு நீங்கள் பகிர்ந்திருந்த படங்கள் பார்த்ததும் எடுத்துக் பகிர்ந்தேன்.  இதை தளத்தில் பகிர்ந்தபோது கீதா அக்கா இந்த வரிகளுக்குத் தக்கவாறு ஜோக் அடித்தார்

      நீங்கள் சொல்லி இருப்பதால் நானும் சொல்கிறேன்.  அவ்வளவு பெரிய ஃபர்னேசுக்குள் அப்பாவை அனுப்பியபோது மனம் நின்று விட்டது.  நின்று பார்த்துக் கொண்டிருந்தேன், 'ஸ்ரீராம் வெளியே இழுத்து விடுடா' என்று சொல்வாரோ என்று..  அங்கிருந்தவர் என்னை நெட்டித்தள்ளி வெளியே அனுப்பினார்.

      நீக்கு
    3. ஸ்ரீராம்......உங்கள் வரிகளும் மனதை நெகிழச் செய்துவிட்டன.

      நான் சின்ன வயசில் என்ன இப்பவுமே என் அத்தைகளையும் பாட்டியையும் அம்மாவையும் மேகங்களில் தேடுவதுண்டு.

      கீதா

      நீக்கு
    4. நானும் பழைய வீட்டின் மொட்டை மாடியின் அருகே உள்ள மரத்தில் அம்மாவோ அப்பாவோ இருந்து பார்ப்பதாக நினைத்துக் கொள்வதுண்டு.  அவர்களை ஏன் மரத்தில் எதிர்பார்த்தேன் என்று தெரியாது.  ஆனால் மனத்திலும் இருந்தார்கள்.  வீட்டுக்குள் நானே சேர்க்கவில்லை போல..

      நீக்கு
    5. ஸ்ரீராம் இப்படி யோசிச்சுப் பாருங்க.... அதாவது வீட்டுக்குள் சேர்க்கவில்லை என்பதை விட.. மனதிற்கு உண்மை தெரிகிறது ஆனால் எப்போதுமே சில ஆசைகளில், நம்மோடு ஒன்றிப் போனவர்களை நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனம் அப்படி நினைத்துப் பார்க்கிறது. அதை விடமனதிற்குள் இன்னும் பொக்கிஷமாக...

      கீதா

      நீக்கு
    6. //அவ்வளவு பெரிய ஃபர்னேசுக்குள் அப்பாவை அனுப்பியபோது மனம் நின்று விட்டது. நின்று பார்த்துக் கொண்டிருந்தேன், 'ஸ்ரீராம் வெளியே இழுத்து விடுடா' என்று சொல்வாரோ என்று.. அங்கிருந்தவர் என்னை நெட்டித்தள்ளி வெளியே அனுப்பினார்.// எங்கள் அம்மா இறந்தபொழுது உடலை பெண்கள் குளிப்பாட்ட வேண்டும். வயதில் பெரியவர் முதலில் பாதத்திலிருந்து தொடங்க வேண்டும். என அக்காக்கள் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி விட்டு நான் கடைசி என்பதால் கடைசியாக என்னிடம் கொடுத்தார்கள். முகத்தில் தண்ணீர் விட வேண்டியது என் வேலை. கொஞ்சம் விட்டு விட்டு வைத்து விடலாம் என்றால் மிச்சம் வைக்கக் கூடாது என்கிறார்கள். எவ்வளவு தண்ணீரை அம்மாவின் முகத்தில் விடுவது? அம்மாவுக்கு மூச்சுத் திணராதா?என்று தோன்றியது.

      நீக்கு
  13. மூன்று பெண்களில் இரண்டாவது படம் யாருடையது? ஏன் ஶ்ரீராமின் ரசனை இவ்வளவு மோசமாகி விட்டது? இதுக்கு மூணு படத்துக்குப் பதில் அனுஷ்காவின் அந்தக் காலப் படங்களையே பகிர்ந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானு அக்காவின் கேள்வியைப் பார்த்தால் உண்மை விளங்கும்.     மேலும் ஸாத்யா நன்றாகத்தானே இருக்கிறார்...  நல்லவேளை உங்களுக்குத் பிடிக்கவில்லை.   போட்டி இல்லை!!!  மணல்கயிறு எஸ் வி சேகர் ஜோக் நினைவுக்கு வருகிறது.

      நீக்கு
    2. அந்தப் பெண் நல்லாருக்கா ஸ்ரீராம் பரிந்துரைக்கிறேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      அதாவது இங்க அடிக்கடிப் போட!!!! வேறு ஏதாச்சும் நினைச்சுக்கக் கூடாது கேட்டேளா

      கீதா

      நீக்கு
  14. அழகிய பெண்ணை நல்லா முறைச்சுப் பார்த்மு, சண்டைக்கு வந்தால், தேஜாவு மா.. எங்கேயோ எப்போவோ உன்னைப் பார்த்திருப்பது போலத் தோன்றியது.. முன் ஜென்மமாக்க்கூட இருக்கலாம்னு சொன்னால் அடிக்காமல் போவாளா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊஹூம்..  "எனக்கும் அப்போது உங்களை உதைத்தது போலதான் இருக்கிறது" என்று சொல்லி விட்டு உதைப்பாள்.

      நீக்கு
    2. ஹஹஹ! நெல்லை, நெல்லை. இப்படி யாரிடமாவது சொல்லி அப்புறம் என்ன ஆச்சு? என்று எ.பி.யில் எழுதுங்கள்.

      நீக்கு
    3. பா.வெ.மேடம் எனக்கு அறிவுரை சொல்லுவாங்கன்னு பார்த்தால்.... குடும்பத்தில் பிரச்சனை வரவைக்கிறார் போலிருக்கே.

      நீக்கு
  15. வரலாற்றையும் புனைவு போன்று கொடுத்தால் அதுவும் ஆதாரங்கள் விலகாமல் கொடுத்தால் படிக்க சுவாரசியமாகவே இருக்கும் என்பது மிகவும் சரியே,.

    //"அதிகார வெறியில் சுருக்குக் கயிறுகளைத் தொங்கவிட்டுக் காத்திருந்த வெள்ளைக் கழுகுகளின் காதுகள் மட்டுமல்ல... ஐம்புலன்களும் மரத்துப் போயிருந்தன. வெட்டப்பட்ட பனை மரங்களில் இருந்த ஈரம்கூட, அங்கிருந்த மனிதர்களின் மனங்களில் இல்லை”//

    அழகாகச் சொல்லப்பட்டிருக்கும் வரிகள். வரிகளே ஈர்க்கின்றன. வாசிப்பதற்கு நிறைய இருக்கின்றன ஸ்ரீராம். இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னர் "இழுக்க இழுக்க இன்பம்" என்று ஒரு சிகரெட் விளம்பரம் வரும். அது நினைவுக்கு வருகிறது. "படிக்கப் படிக்க இன்பம்"

      நீக்கு
    2. 'இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை..'

      நீக்கு
  16. அத்தனைக் கதைகளும் ஒரு தொடரிலா...

    குழந்தை - அந்த வரிகள் சூப்பர். உண்மைதானே

    குழந்தைகளைப் பறக்க விட வேண்டும் நல்ல வழியில் அவங்க கனவைப் பூர்த்தி செய்து கொள்ளத் தடையாக இல்லாமல்...

    //"சிக்னல்ல மாட்னவன் எங்க அப்பா போலீஸ்டா அப்படின்னு சொல்லுவான் எங்க அப்பா கலெக்டர் டா அப்படின்னு சொல்லுவான் எவனாவது எங்க அப்பா ஜட்ஜ்ன்னு சொல்வானா"//

    அதானே!!!! சூப்பர்ல நல்லா யோசிச்சிருக்காங்கப்பா.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  18. என்னை மாதிரி ஒரு பாவியால நல்ல நீதிபதியாக இருக்க முடியுமா என்று கேட்கிறார் தியாகி.

    "ஒரு வக்கீலாக நான் எவ்வளவோ பாவங்கள் செய்திருக்கிறேன். என்னால் நீதிபதியாக நியாயமாக நடக்க முடியுமா?"//

    நல்ல கேள்விகள் ஸ்ரீராம்.

    ஒரே ஒரு சந்தேகம். யதார்த்தத்தில் வக்கீலாக இருந்துதானே நீதிபதி பதவிக்கு வருவாங்க? ஸோ நீதிபதியாகப் பதவி ஏற்பவர் வக்கீலாக இருந்தப்பச் சில வாதங்கள் குற்றவாளி தரப்பிலும் வாதிட்டு விடுதலை வாங்கிக் கொடுத்திருப்பார் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஒரே ஒரு சந்தேகம். யதார்த்தத்தில் வக்கீலாக இருந்துதானே நீதிபதி பதவிக்கு வருவாங்க? ஸோ நீதிபதியாகப் பதவி ஏற்பவர் வக்கீலாக இருந்தப்பச் சில வாதங்கள் குற்றவாளி தரப்பிலும் வாதிட்டு விடுதலை வாங்கிக் கொடுத்திருப்பார் இல்லையா?//

      அதைதான் எம் ஆர் ராதா சொல்வார்.  ரொம்ப பிரபலமான வசனம்.  தனியாக பொதுக்கூட்டத்தில் பேசியது என்று நினைக்கிறேன்.  நீங்கள் கேட்டிருக்கும் சந்தேகம் எல்லோருக்கும் வரும் என்றுதான் அந்த கடைசி முத்தாய்ப்பு கான்ஸ்டிடியூஷன் புத்தக சத்தியம்.  ஆனால் அதெல்லாம் வி இ நீ என்பது இப்போது நடைமுறையில் உ நெ க ஆகபார்க்கிறோம். 

      நீக்கு
    2. ஆனால் அதெல்லாம் வி இ நீ என்பது இப்போது நடைமுறையில் உ நெ க ஆகபார்க்கிறோம். //

      யெஸ்ஸூ

      கீதா

      நீக்கு
    3. எனக்குத் தெரிந்த இருவர். இருவருமே நேர்மையான ஆட்கள். ஒருவர் மிக மிக சீனியர். உயர்நீதிமன்ற நீதிபதிக்கு நிறைய முறை ஆஃபர் வந்தும் போகலை. தவறு செய்வதற்கோ அரசியலுக்காக தவறு செய்ய வாய்ப்பு வந்துவிடும் என்றும். இன்னொருவர் தற்போது நீதிபதி. அவரைப்பற்றி என் உறவினர்-வக்கீல் சொல்வது, அவர் நாணல் போல இருக்கமாட்டேங்கிறார். பென்சில் போல இருக்கிறார். அது சரியில்லை என்று. பாத்தீங்களா.. வக்கீல்களில் எதிர்பார்ப்பை.

      நீக்கு
    4. நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் படுவதற்கும் தனியாகத் தேர்வுகள் எல்லாமும் உண்டு, தெரிந்திருக்கும்னு நினைக்கிறேன்.

      நீக்கு
  19. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.

    //வயது அதிகமாவதால் ஏற்படும் எல்லாப் பிரச்சனைகளுமே மிகுந்த சிரமங்களை அளிக்கத்தான் செய்கின்றன.//

    நல்ல பதில்.
    நெல்லையின் 3 வது கேள்விக்கும் பதில் நன்று.
    கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்.

    5 வது கேள்விக்கு பதிலும் பயனுள்ளது சில நேரங்களில் "பட்டினியே சிறந்த மருந்து"

    பதிலளிநீக்கு
  20. பதில்கள்
    1. அனேகமா கௌதமன் சார், சென்னையிலிருந்து பெங்களூருக்கு பஸ்ஸிலோ இல்லை காரிலோ பயணித்திருப்பார். பார்க்கும் ரெஸ்டாரண்டுகள் பெயர் அவன் மனதில் இருந்திருக்கும்.

      நீக்கு
  21. "யாராயிருந்தாலும் கான்ஸ்டிடியூஷன் மேல கைவைத்து உறுதிமொழி எடுத்த பிறகு தானாக ஒரு மாற்றம் வரும் அவர்களால் தப்பு பண்ண முடியாது"//

    இது வக்கீல் உட்படத்தானே இல்லையா?

    //"நீதிக்கும் சட்டத்துக்கும் இவ்வளவு பெரிய தூரம் வித்தியாசம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை"//

    உண்மை. ரொம்பவே உண்மை. இல்லைனா இத்தனகி குற்றவாளிகள் அதுவும் உலகின் கண்களுக்கே பட்டவர்த்தனமாகத் தெரியும் குற்றவாளிகள் ரொம்ப ஜாலியாக உலாவுவாங்களா சமூகத்தில்? என் வழக்குல சொல்றேன் 'லாந்துவாங்களா" ஹாஹாஹா....

    நான் அடிக்கடி சொல்வதும், படைப்பில் பயன்படுத்தியிருப்பதும்...
    சட்டத்தில் உணர்வுகளுக்கு அதுவும் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பு கிடையாது. வெறும் வாதங்கள்தான் அது எப்படிப்பட்ட வல்லுனரால் வாதிடப்படுகிறது இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி...என்பதைப் பொருத்துதான். நீதிபதியும் வாதங்களின் அடிப்படையில்தானே நீதி வழங்குவார் இல்லையா? அலல்து அவராகவே வாதங்களின் உள்ளில் இருக்கும் உண்மைத்தன்மையை அவதானித்திருந்தால் ஒழிய...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வக்கீல்கள் சுத்தமாகச் சரியில்லை. நீதிபதிகளும் நீதிமன்றங்களும் அபூர்வமாகத்தான் செயல்படுகின்றன. நூத்துக்கு ஐந்து தேறுவதே கஷ்டம். அந்த ஐந்துக்கும் மேல் முறையீட்டுக்குச் சென்றால் சுத்தம்.

      ஏமாந்தவனுக்கு மிகச் சரியான நீதியை வழங்குகின்றன நம் இந்திய நீதிமன்றங்கள்.

      எனக்குத் தெரிந்து துபாய்/எமிரேட்ஸ் நீதிமன்றங்கள்தாம் சூப்பர். உலகத்திலேயே பெஸ்ட் என்றும் சொல்லலாம்.

      நீக்கு
  22. கேள்வி பதில் பகுதி சிறப்பு...

    பதிலளிநீக்கு
  23. படமும், பதமும் நெல்லைத்தமிழன் பகிர்ந்த படங்களுக்கு ஸ்ரீராமின் கவிதைகள் முன்பு படித்த நினைவு இருக்கிறது.
    நெல்லைத் தமிழன் தன் அப்பாவை பற்றி பகிர்ந்து கொண்ட பகிர்வு , ஸ்ரீராம்அப்பாவை பற்றி பகிர்ந்து கொண்ட பகிர்வு மனதை நெகிழ வைத்து விட்டது.

    தன் அப்பாவின் இறுதி காரியம் முடித்து வந்து மகன் இரண்டு மூன்று நாள் திக்பிரமை பிடித்தது போல இருந்தான், மருத்துவரிடம் போய் காட்டினார்கள். நன்கு தூங்கி எழுந்தால் சரியாகி விடும் என்று தூக்க மாத்திரை கொடுத்தார். அவன் பெரியப்பா ஆதரவாக பக்கத்தில் படுத்து பார்த்து கொண்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது பற்றி விரைவில் ஒரு தொடரில் எழுதறேன் கோமதி அரசு மேடம். அப்பா, போகும் வயதாக இருந்து, விரைவில் போக வாய்ப்பு இருக்கு என்ற நிலையில் இருந்தால் ரொம்பவே பாதிக்காது. ஆனால் சட்னு போனாங்கன்னா, அதிலும் தன் துக்கத்தை வெளியில் பகிர்ந்துகொள்ள சரியான ஆட்கள் இல்லைனா, ரொம்பவே கஷ்டமாக இருக்கும்.

      நீக்கு
    2. நீங்கள் சொல்வது சரிதான்.

      நீக்கு
  24. காலை பரபரப்பாகவும், இரவு அமைதியாக, காலியாகவும் உள்ள சாலை படம் அருமை.

    பதிலளிநீக்கு
  25. தூக்கில் போடுவதும் வெட்டிக் கொல்வதும் அன்றைய
    ஐரோப்பிய ஆப்கானிய
    ஆட்சியாளர்களின் பிறவித் தொழிலாக மாறிப்போனது.

    இந்த வரலாறுகள் அறியாமல் தான் இன்னும் அவர்களுக்கு அடிவருடல் நடக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாஞ்சி நாதனா பிராமின். காமராஜா நாடாரு முத்துராமலிங்கத் தேவரா ஓட்டு விழும் மருது பாண்டியரா ஓட்டு விழும் வவுசிதம்பரம் பிள்ளையா? யாரு ஓட்டுப் போடுவா? கொமேனியா? கொலையை கண்டிப்போம் ஓட்டு விழும் என்று தமிழ்நாடு போகுது. இதுல துரை செல்வராஜ் சார் சொல்றது யார் காதிலும் விழாது

      நீக்கு
    2. அட? துரை வந்திருக்கார். நான் தான் கவனிக்கலை. :(

      நீக்கு
  26. குழந்தைகளைக் கடத்துவது அல்லது அவர்களை இச்சைக்கு உபயோகிப்பது போன்ற குற்றங்களைச் செய்பவர்களை//

    குழந்தைகள் என்றில்லை, எந்தக் குற்றமானாலும், சில வளைகுடா நாடுகளைப் போன்று சட்டங்கள் இங்கும் வலிமையாக இருக்க வேண்டும்.

    எனக்கு இன்னொன்றும் தோன்றும், இங்க நம்ம ஊர்ல சும்மா கொஞ்சம் மீடியா புகழ் பெற்றதும் ரொம்பக் கேவலமாகக் கன்னாபின்னான்னு உடை அணிபவர்களை எல்லாம் வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என்று தோன்றும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்க பர்தாவிற்குள் இதே உடைதான். நான் அந்த ஊர்களில் குப்பை கொட்டியிருக்கிறேன்.

      நீக்கு
  27. ஜூ .வி நூலக வரலாறு பகிர்வு படித்தேன்.


    "//சிக்னல்ல மாட்னவன் எங்க அப்பா போலீஸ்டா அப்படின்னு சொல்லுவான் எங்க அப்பா கலெக்டர் டா அப்படின்னு சொல்லுவான் எவனாவது எங்க அப்பா ஜட்ஜ்ன்னு சொல்வானா"//

    ரசித்தேன். விவேக் நகைச்சுவை நினைவுக்கு வந்தது.
    "அவரை எனக்குத் தெரியும் அவருக்கு என்னை தெரியாது"

    //"நீதிக்கும் சட்டத்துக்கும் இவ்வளவு பெரிய தூரம் வித்தியாசம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை"//

    நன்றாக இருக்கிறது வசனம்.

    பதிலளிநீக்கு
  28. கேள்வி பதில்கள் நன்று.

    ராணி முகர்ஜி குரலில் ஒரு வித ஈர்ப்பு இருக்கும். அவரது சில படங்கள் நன்றாகவே இருக்கும். பார்த்திருக்கிறேன். சர்வம் மாயா படம் குறித்து அறிந்திலேன்.

    மம்மி உடன் படம்! :) சில இடங்களில் படம் எடுக்கத் தோன்றுவதில்லை.

    மற்ற விஷயங்களும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Lakshmi's voice. And another one Lakshmi Ramakrishnan.

      நீக்கு
    2. வெங்கட் நாகராஜ் கருத்து படித்ததும் சில நினைவுக்கு வந்தன. அலஹாபாத் நெருங்கும் சமயம் பேருந்து கங்கை வழியா (திரிவேணி சங்கமம்) போனபோது கரையில் நிறைய..... எரிக்க வெள்ளைத்துணி சுற்றி இருந்தது. படம் எடுக்க மொபைலைத் தூக்கினவுடன் மனைவி கர்ர்ர்ர்னு தடுத்துட்டா. சமீபத்தில் கங்கை கொண்ட சோழபுரம் ஊரில் ஒரு கோயிலில் அழகிய பெருமாள் இரு தாயார்களுடன். கோவிலில் யாருமே இல்லை. (மூலவர் இல்லை). நெருங்கி படம் எடுத்துக்கொண்டேன். பகிர மனம் வரவில்லை

      நீக்கு
  29. எ.பி.க்கு எப்போதாவது கதைகள் அனுப்புவாரே சியாமளா வெங்கட்ராமன் மாமி அவருக்கு ஏதோ அறுவை சிகிச்சையினாலோ என்னவோ வாசனை, ருசி இவ்விரண்டையும் அறியும் திரன் போய் விட்டதாம். வாசனை தெரியாததால் ஒரு முறை அடுப்பில் பாலை வைத்து விட்டு மறந்து விட்டிருக்கிறார். பால் பொங்கி வழிந்து, அடி பிடித்து, அந்த தீசல் வாசனையை உணர்ந்த அவர் கணவர் உள்ளேசென்று பார்த்து, அடுப்பை நிறுத்தினாராம். அதுகூட பரவாயில்லை, ஒரு முறை சமையல் காஸ்(gas) லீக்காகி இருக்கிறது. இவருக்கு அந்த வாடை தெரியவில்லை, வேறு யாரோ சொல்லி, பிறகு கதவையெல்லாம் திறந்து வைத்தாராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு நாளாக எனக்கு ஜலதோஷப் பிரச்சனை (மருந்து எடுத்துக்கொள்ளவில்லை. ரொம்ப மாதங்கள் கழித்து வருவதால் அதுவாகவே சரியாகட்டும் என்று விட்டுவிட்டேன்). இன்று வாசனை சுத்தமாகத் தெரியலை. அதுனால சாப்பிட்ட உணவு ருசியாகவோ பிடித்தமாகவோ இல்லை. அப்போதுதான் தெரிந்தது உணவின் மணம், அதன் ருசியில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று.

      நீக்கு
  30. மம்மிகளை வைக்கும் பெட்டி நன்றாக இருக்கிறது. கவிதைகளும்.
    நெட் ஃப்லிக்ஸ் சீரியல் பற்றிய விமர்சனம் வளவள.
    ஜுவி நூலகம் என்பதை ஜீவி நூலகம் என்று படித்து, நம் ஜீவி சார்தான் எழுதியிருக்கிறார் என்று நினைத்து விட்டேன். ஹி ஹி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மம்மிகளை வைக்கும் பெட்டி// அதுல ஒரே ஒரு பிரச்சனை, செத்துப் போறவன்/வள் தனக்கு எந்த மாதிரி பெட்டியை செலக்ட் பண்ணியிருக்காங்க என்பதைத் தெரிந்துகொள்ள முடியாது.

      நீக்கு
  31. @கௌதமன் சார், உடல் நலமில்லையா? இன்னிக்குக் கேள்விகளுக்குக் கூட நீங்க பதில் சொல்லலை போலிருக்கு. ஆனாலும் பதில்கள் சுவாரசியம். ஆனால் கத்திரிக்காய் எனக்குப் பிடித்த காய்களில் ஒன்று. கத்திரிக்காயை எப்படிச் சமைச்சாலும் ஆவலுடனும் ஆசையுடனும் சாப்பிடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமாக உள்ளேன். வங்கி நெட் பேங்கிங் பிரச்சனை.

      நீக்கு
  32. கடவுள் புண்ணியத்தில் எனக்கு ஜீரணக்கோளாறு அவ்வப்போது ஏற்படும் என்பதைத் தவிர்த்து முக்கியமான இந்தப் பிரச்னைகள் இல்லை. ஆனால் பார்வையில் அவ்வப்போது பிரச்னை வரும். போகும். நீண்ட நேரம் புத்தகம் படித்தாலோ அல்லது நீண்ட நேரம் கணினியில் வேலை செய்தாலோ, அல்லது ஏதேனும் பார்த்தாலோ கொஞ்ச நேரத்துக்குக் கண்கள் மற்றும் அவற்றைச் சுற்றி ஒரே வெளிச்சமாகத் தெரியும். சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டிருந்து விட்டுப் பின்னர் திறந்து மூடி கண்களைச் சுழற்றினு பண்ணிப்பேன். கொஞ்சம் கொஞ்சமாகச் சரி ஆகும். எதையும் பார்க்காமலோ படிக்காமலோ சும்மா உட்கார முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்கு (ஜீரணக்கோளாறுக்கு) என்னா சொல்யூஷனு? 'பாட்டி வைத்தியம்' என்று கேட்டதற்குப் பதிலா 'மாமி வைத்தியம்'னு கேட்டிருந்தால் பதில் தந்திருப்பீர்களோ கீசா மேடம்?

      நீக்கு
  33. மம்மிகளுடன் படம் எடுத்துக் கொண்டு அசத்திட்டார் நெல்லை. நெட்ஃப்ளிக்ஸே பார்ப்பது இல்லை. விமரிசனம் படிச்சால் சுவாரசியமா இருந்தது. மருது சகோதரர்களைப் பற்றி நிறையப் படிச்சாச்சு. ஜூ.வி. எல்லாம் படிச்சோ அல்லது பார்த்தோ எத்தனையோ காலம். இன்னும் சொல்லப் போனால் வாராந்தரி/மாதாந்தரி புத்தகங்கள் படிச்சே 20 வருஷங்கள் போல் ஆகி விட்டன. அவற்றைப் பார்த்தாலும் ஏதோ அந்நிய நாட்டுப் புத்தகங்களைப் பார்ப்பது போல் எண்ணம்.

    விஜய்/அவர் மனைவி பிரிவு அவங்க சொந்தப் பிரச்னை இல்லையோ? முகநூலில் தான் இதை அரசியலாக்குவதாக நினைச்சேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கருத்தை இப்போதுதான் பார்த்தேன் கீசா மேடம்.

      இன்றைக்கு திமுகவிற்கு அவர் சவாலாக இருக்கிறார் (கிறித்துவ, இளைஞர்களின் வாக்கைப் பிரிப்பதால்). அதனால் அவங்க வீட்டில் கக்கூஸ்ல தண்ணீர் போகலைனாக்கூட அதனை பூதாகாரமாக ஆக்கிவிடுவார்கள் இந்த காசு வாங்கிக்கொண்டு செய்திகளை அரசியலாக்கும் பத்திரிகைகள் ஊடகங்கள்

      நீக்கு
    2. என்னவோ! அவர் அம்மா சந்திரசேகரைத் திருமணம் செய்துக்கறச்சே மைனர் பெண் என்றொரு கருத்து உலவியது. இப்போது என்னன்னா வ்ஜயின் அப்பாவே ஷோபாவின் முதல் கணவர் எனவும் ஷோபா சந்திரசேகர் திருமணத்தின் போது விஜய் பிறந்து 3, 4 வருடங்கள் ஆனதாகவும் ஒரு வதந்தீ உலவுகிறது. எது பொய்யோ, எது நிஜமோ விஜயைத் திரைப்பட உலகில் முன்னுக்குக்கொண்டு வரவும் பிரபலம் அடையவும் சந்திரசேகர் மிகவும் உழைத்திருக்கார் என்பது என்னமோ உண்மை. ஆனாலும் ஷோபாவின் அப்பாவும் அவர் சகோதரர் சுரேந்திரரும் வறுமையில் உழல்வது மனதை வருத்தப்படுத்தத் தான் செய்கிறது. மோகன் நடித்துக் கொண்டிருந்த வரை சுரேந்திரருக்கு வாய்ப்புக்கள் வந்தன. பின்னாட்களில் மோகனே திரை உலகில் இல்லாமல் போய் விட்டார்.

      நீக்கு
  34. ஆறுமாதப் பெண் குழந்தையைக் கூட இந்த ஆண்கள் விட்டு வைப்பதில்லை. ஏனோ இவங்களின் மனப்போக்கு இப்படி இருக்கிறது. தண்டனை கடுமையாக ஆக, ஆக இவங்க மனப்போக்கும் இந்த விஷயத்தில் சிறிதும் மாறவே இல்லை என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அநேகமாக எங்கே பார்த்தாலும் பதினெட்டு வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், மாணவிகளே இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். அதுவும் தமிழகத்தில் இது அதிகமாகவே இருக்கு. கேட்கவே முடியாது. பெரிய அளவில் தண்டனையும் கிடைக்காது. பானுமதி என்னமோ இதை மிகைப்படுத்தல் என்கிறார். :(

      நீக்கு
  35. கேஜிஜி பக்கம் இல்லாமல் சுவாரசியம் இல்லை. அதோடு இன்னிக்கு இன்னமும் துரைத் தம்பி வரலை. ஜீவி சாரும் 2 நாட்களாய்க் காணோம். நேற்றே கதை விமரிசனத்தில் பங்கெடுப்பார்னு நினைச்சேன். காணவே இல்லை. மொத்தத்தில் ஏனோ தானோ புதன். :( ஸ்ரீராம் வேறே ஏதேனும் சுவாரசியமான பகிர்வைக் கொடுத்திருக்கலாமோ? நெட் ஃப்ளிக்ஸ் தவிர்த்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடத்துக்காக மம்மிக்களைக் காட்டினால், சுவாரசியமாக இல்லையாமே... அதுக்காக கட்டை அவிழ்த்தா போட்டோ எடுக்க முடியும்?

      நீக்கு
  36. கமலாவைக் காணோம்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      இதோ..! வந்து கொண்டதான் இருக்கிறேன் சகோதரி. இன்று காலையில் வர இயலவில்லை என் கைபேசியில் உறவுகளின் தொடர்புகள் வருவதால் அந்தப் பேச்சுகளில் போய் விடுகிறது. நேற்றும் எபிக்கு தாமதமாகத்தான் வந்தேன். எபியின் பதிவுகளுக்கு வரும் உங்கள் கருத்துக்களை மிகவும் ரசித்துப் படிக்கிறேன். இன்னமும் என்னை காணவில்லையே என்ற உங்களது அன்பிற்கு எப்போதும் என் நன்றிகள். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  37. பானுக்கா, த வெ கவுக்கு ஓட்டு வங்கில ஓட்டு நலல டெபாசிட் ஆகுமோ இல்லை அவர் டெபாசிட்டையே இழப்பாரோ.....இப்ப யுட்யூபர்ஸ் வங்கில நல்லா டெப்பாசிட் ஆகுது!

    கீதா

    பதிலளிநீக்கு
  38. //சாத்வீகமான உணவு ( மோர் சாதம்-சின்ன வெங்காயம் ) // யாருப்பா இந்த பதிலைச் சொன்ன புண்ணியவான்? சின்ன வெங்காயம் சாத்வீகமான உணவா? வீட்டில் இதைச் சொல்லி, யார் திட்டு வாங்கிக்கொள்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீப காலத்தில் சில மாத்திரைகள் சாப்பிட்டு வருவதால்
      எனக்கு ஜீரண கோளாறுகள் ஒவ்வொரு இரவும் வந்தன. ஓர் அனுபவஸ்தரின் வழியைப் பின்பற்றி தினமும் காலையில் நீரூற்றிய பழையது + சின்ன வெங்காயம் சில வாரங்களாக சாப்பிட்டு வருகிறேன். நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

      நீக்கு
  39. விஜய் சங்கீதா மணமுறிவுக்கும் வாக்கு வங்கிக்கும் என்ன தொடர்பு? மக்களில் பலர், நேர்மை, வாழ்க்கையில் தூய்மை, உண்மை, கற்பு நெறி இதுக்கெல்லாம் 0.00001 சதவிகிதம் மரியாதை கொடுத்திருந்தாங்கன்னா, திமுகவிற்கு என்றாவது வாக்களித்திருப்பார்களா? நான் சென்னை மின்சார இரயிலில் பயணித்தபோது, அங்கிருந்தவர்களுக்கு இந்த விஷயம் பற்றி பிரஸ்தாபித்து விவாதித்தபோது ஒரு பெண் சொல்றா, அவனுக்கு வக்கிருக்கு வச்சிருக்கான், உனக்கு இருந்தால் நீயும் நாலைந்து வச்சுக்கோ என்கிறாள். நீங்களே பக்கத்து வீட்டுல திருடி, இன்னொரு வீட்டிற்கு காசு கொடுத்தீங்கன்னா, அது திருடினது என்று தெரிந்தாலும், கொடுத்த வீட்டில் உங்களுக்கு வாக்களிப்பாங்க. அவங்கதான் தமிழர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹும் நாட்டு நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கு.

      நீக்கு
  40. //அதை சரி பார்த்து தண்டனை வழங்குவதிலும் பல சிரமங்கள் ஏற்பட வழி இருக்கிறது.‌// சரியான பதில் அல்ல. வாக்களிப்பது கடமை. கடமையைச் செய்யாமல் வீட்டில் பொழுதைப் போக்குவதால்தான் கொள்ளையர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதனால் அத்தகையவர்களுக்கு அரசு உதவி பெறும் யோக்கியதை கிடையாது.

    பதிலளிநீக்கு
  41. //ஒருவரது குரல் நம்மைக் கவர்வதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.// அதில் ஒரு முக்கியக் காரணம் நம் எதிர்பார்ப்பு. அழகான குரலில் ஒரு பெண் போனில் பேசினால், நாம் ஒரு உருவம் கற்பனை செய்து வைப்போம். நேரில் பார்க்கும்போது கவர்ச்சியே இல்லை என்றால் பிறகு அந்தக் குரல் பிடிக்காது என்பது என் அவதானிப்பு

    பதிலளிநீக்கு
  42. சியாமளா வெங்கட்ராமன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள
    சிக்கல் மனதை வருத்துகின்றது...

    விரைவில் நலமடைவதற்கு
    வேண்டிக் கொள்வோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்தனை செய்வோம், விரைவில் பூரண நலம் பெற.

      நீக்கு
  43. @ நெல்லைத் தமிழன்

    ///அங்க பர்தாவிற்குள் இதே உடைதான். நான் அந்த ஊர்களில் குப்பை கொட்டியிருக்கிறேன்... ///

    நானும் தான்...

    பதிலளிநீக்கு
  44. துபையில் கசமுசா ஆடைகளை சுற்றுலாத்
    தீவுகளில் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!