Beggars are not choosers - donors may be. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Beggars are not choosers - donors may be. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5.8.11

அதிகாலை நேரமே... நடக்கும் நினைவுகள்... 2


                             
நெருங்கி எனனை மடக்கிய அவர் "சார்...டீ குடிக்க ஒரு அஞ்சு ரூவாக் கொடுங்க" என்றார். என்ன உரிமை..! பாக்கெட்டைத் தொட்டுக் காட்டி ஒன்றுமில்லை என்று சைகை செய்து, நிற்காமல் நடந்தேன். கொஞ்ச தூரம் பின்னால் தொடர்ந்து விட்டுத் திரும்பி விட்டார் அந்த அதிகாரப் பிச்சை! முதல் இரண்டு மூன்று நாள் கையில் வாட்சுடன் வந்து, தூரமும் நேரமும் குறித்து, அடுத்த நாளிலிருந்து வாட்ச், காசு இல்லாமல்தான் நடை. எனவே பிரச்னை இல்லை.
           
இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவர் ஓரமாக ரெஸ்ட் எடுக்கும் டிராவல்ஸ் வண்டியினுள் அமர்ந்திருந்த டிரைவரிடம் அஞ்சு ரூபாய் கேட்டுக் கொண்டிருக்க, அவர் சாமி பூசாரி என்று ஏதோ சொல்லி மறுத்துக் கொண்டிருந்தார்! அப்புறமும் அவ்வப்போது அவரைப் பார்ப்பதுண்டு. அப்புறம் என்னிடம் அவர் ஏதும் கேட்பதில்லை!
                      
இந்த சம்பவத்தைப் பற்றி நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவர்கள் அவர்களது அனுபவத்தைச் சொன்னார்கள். மின்வண்டியில் வரும் ஒருவர் அங்கு தொந்தரவு செய்யும் ஒரு பெரியவரிடம் தினமும் தொந்தரவு செய்யக் கூடாது என்ற கண்டிஷனோடு மாதம் பத்து ரூபாய் கொடுத்து விடுவாராம். மின்வண்டியில் சும்மா தட்டை நீட்டுபவர்களை விட, பாட்டுப் பாடி (சில பேர் நன்றாகப் பாடுகிறார்கள். ஸ்பீக்கர், மைக்கெல்லாம் வைத்துப் பாடுவார்கள். பெரும்பாலும் இவர்கள் பாடல் கிறித்துவ பாடல்கள், இறைவனிடம் கையேந்துங்கள், தரை மேல் பிறக்க வைத்தான் போன்றவை. சமயங்களில் பழைய காதல் பாடல்கள் அற்புதமாகப் பாடுவோர் உண்டு!) 

                    
கை நீட்டுபவர்கள் அதிகம்!  இன்னொருவர் சொன்னது 'அட' என்றிருந்தது. இவர் ஒரு கடை வாசலில் நின்றிருந்தாராம். அங்கு நின்றிருந்த யாசகர் ஒன்றும் பேசவில்லை என்றாலும் அவ்வப்போது தன்னைத் தாண்டி செல்வோரிடம் தட்டை மட்டும் நீட்டியவண்ணம் இருந்ததைப் பார்த்திருக்கிறார். அந்த அவரின் குணத்துக்காக அவருக்கு ஐந்து ரூபாய் கொடுத்திருக்கிறார். அதை எடுத்துக் கொண்டு கல்லாவுக்குச் சென்ற அவர் 'ஐந்து ரூபாய்க்கு சாப்பாடு கொடுங்க' என்று கேட்க, கடைக்காரர் ஐந்து ரூபாய்க்கு சாப்பாடு கிடையாது என்று மறுத்து விட்டாராம். பார்த்துக் கொண்டிருந்த நண்பர் மனம் உருகி, ஒரு பொங்கல் பார்சல் வாங்கி அவரிடம் தந்தாராம். அடுத்ததுதான் ஆச்சர்யம். யாசகர் அந்தப் பொங்கல் பாக்கட்டை வாங்கியவர், இவர் முதலில் கொடுத்த ஐந்து ரூபாயை எடுத்து இவரிடமே நீட்டினாராம்! "வாங்கிக் கொண்டீர்களா" என்று நாக்கு வரை வந்த கேள்வியை அவர் முகத்திலிருந்த உருக்கம் கண்டு அடக்கிக் கொண்டு விட்டேன். 
                       
இப்போதெல்லாம் யாரும் ஒரு ரூபாய்க்குக் குறைந்து வாங்குவதில்லை! பல வருடங்களுக்கு முன் தஞ்சையில் டிராயர் போட்ட குண்டு வாலிபர் மேரிஸ் கார்னர் பகுதியில் 'இட்லி சாப்பிட பத்து பைசா கொடுங்க சார்' என்று கையேந்துவார். அவ்வப்போது கொடுத்ததுண்டு. ஒருமுறை தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது முன் வரிசையில் அமர்ந்திருந்த அவர் எழுந்து வெளியில் நடப்பதைப் பார்த்த பின், அவருக்கு பத்து பைசா தருவதில்லை.
                      
அப்போதெல்லாம் ராப்பிச்சை என்று வருவார்கள். ஒருவித ராகத்துடன் இழுத்தபடி இரவு நேரங்களில் அவர்கள் வருவது பழகி விட்டிருந்தது. இப்போதெல்லாம் ராப்பிச்சை இல்லை. வீடு வீடாக வந்து பிச்சை எடுப்போரும் இப்போது இல்லை. எலெக்ட்ரிக் டிரெயின்களில், ஸ்டேஷன் வாசல்களில், கோவில் வாசல்களில் சிக்னல்களில் மட்டும் கண்ணில் படுகிறார்கள்!
                                    
இன்று மெகா டிவியில் ஏதோ ஒரு ஏலத்துக்கு பத்தாயிரம் முன்பணம் கட்டியும் தட்டில் ஒரு லட்சத்து இருபதாயிரம் ஏலத் தொகை கேட்டும் நான்கைந்து பிச்சைக் காரர்கள் வந்திருந்ததைக் காட்டினார்கள். ஏலதாரர்கள் அவர்களைக் கலந்து கொள்ள விடவில்லையாம். பத்திரிகை ஜோக் உண்மையானது கண்டு சிரிப்பு வந்தது. இப்போதைக்கு இந்த பிச்சைக்கார நினைவுகளை முடிக்கிறேன்! வேறு ஏதும் சம்பவம் நடந்தால், நினைவு வந்தால் மறுபடி ப்ளேடு போடுகிறேன்!  
                                    
(முதல் பதிவின் தொடர்ச்சிதான் - ஆனால் என்ன ஒரு எதிர்பாராத திருப்பம்! மர்மக் கதை ரேஞ்சுக்குப் போய்விட்டு - இப்படிப் பிச்சைக்கார நினைவுகளாக முடித்துவிட்டாரே பதிவாசிரியர்! - இப்படிக்கு பப்ளிஷர் )