சிறுநீரகக் கல்லினால் பாதிக்கப் பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டிருந்த நண்பரைப் பார்க்கப் போனபோது பதட்டம் இன்னும் தணியாமல் இருந்தார் . பயம் முகத்தில் மிச்சம் இருந்தது. முதல் நாள் இரவின் வலியின் பிரமைகள் இன்னும் மனதில் ஓடுவதாகச் சொன்னது எனக்கும் புரியக் காரணம் நான் இரண்டு முறை இதனால் பாதிக்கப் பட்டிருப்பதால். பிரசவ வலி எப்படி இருக்கும் என்றே தெரியாது ஆண்களுக்கு. ஆனால் இவன் தன் வலி அதை விடக் கொடுமையானது என்றார்.. நல்ல வேளையாக கல்லின் அளவு 6mm அளவைத் தாண்டாததால் அறுவை சிகிச்சை தேவை இல்லை என்றானது.
உருவாகியிருக்கும் கல் எந்த இடத்தில் இருக்கிறது என்பதும் முக்கியமானது. பாதையிலா, சிறுநீரகத்திலா, உள்ளே என்றால் அதிலும் எந்த இடத்தில்...
இரவு தொடங்கும் வலி காலை வரை தொடர்வது கொடுமை. அந்தப் பாதையில் அது நகரும் வேதனை வலியின் இடத்தில் தெரியும். சுமாராகச் சிறுநீரகத்தின் அருகே தொடங்கும் வலி காலை வரை கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கும் அவஸ்தையை உணர முடியும். வாந்தி வருவது போல இருக்கும். டாய்லட் போகவேண்டும் போல அடிக்கடி உணரத் தூண்டும். நின்று உட்கார்ந்து படுத்து உருண்டு எந்த போஸிலும் வலி நிற்காமல் தொடர்ந்து அலற வைக்கும். நம்முடைய உணவுப் பழக்கங்களாலும் வேறு சில காரணங்களாலும் கற்கள் உண்டாகின்றன.
ஒரு பக்கம் தண்ணீர் தினசரி எட்டு லிட்டர் குடி என்பார்கள், ஒரு பக்கம் கிட்னிக்கு அதிக வேலை தரக் கூடாது வழக்கத்தை விட அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்பார்கள்.
வலி வந்து கொஞ்ச நாட்கள் வரை அந்த பீதி மனதிலிருந்து அகலாது. ஒரு வலி நிவாரணி மாத்திரையும் தண்ணீர் பாட்டிலும் எப்போதும் கையிலிருக்கும். அடுத்த இரண்டு மூன்று மாதங்கள் நடை பயிற்சி செய்வதென்ன, டயட் கண்டிஷன் என்று தூள் பறக்கும். கடந்து செல்லும் காலம் பயத்தை மனதிலிருந்து அகற்றியவுடன் இதெல்லாம் நின்று போகும்! அடுத்த அனுபவம் கிடைக்கும் வரை! விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பது போல் பயமும் டயட்டும் மூன்று மாதம்!
அந்த வலி அனுபவம் இனி வராமலிருக்க சில முறைகளை மருத்துவர்கள் கடைபிடிக்கச் சொல்கிறார்கள். தவிர்க்க வேண்டிய பொருட்கள், சேர்க்க வேண்டிய பொருட்கள் என்று ஒரு லிஸ்ட் தருகிறார்கள்.
Dr. Reddy's Laboratories Ltd., மருத்துவர்களிடம் தந்து விநியோகிக்கக் கொடுத்துள்ளத் துண்டுப் பிரசுரத்திலிருந்து...
முதலில் தவிர்க்க வேண்டியவை...
தக்காளி, (நாட்டுத் தக்காளி ரொம்ப மோசம். பெங்களூர் தக்காளி வகை தேவலாம். ஆனால் எதுவாக இருந்தாலும் தக்காளியை அரை வெந்நீரில் ஊரப் போட்டு மேல்தோல் உரித்து, பாதியாகப் பிளந்து விதைகளை அகற்றி, சதைப் பகுதியை மட்டும் உபயோகிக்க வேண்டும்) பாலக், கருந்திராட்சை, பூக்கோசு (cauliflower), சப்போட்டா, நெல்லிக்காய் முந்திரி மற்றும் வெள்ளரிக்காய், எள், (இதுவரை பட்டியலிட்டதில் கற்களை உருவாக்கும் ஆக்ஸலேட் அதிகம் இருப்பதால் தவிர்க்க வேண்டும்), பால், மீன், புலால், கத்தரிக்காய், பூசணிக்காய் மற்றும் காளான்களில் கற்களை உருவாக்குகின்ற யூரிக் அமிலம், மற்றும் பியூரின் உள்ளன.
பாகற்காய் - இதில் உள்ள மெக்னீசியம் பாஸ்பரஸ் மற்றும் சில விசேஷ பொருட்கள் கற்கள் உருவசகாமல் தடுக்கும். அது மட்டுமின்றி உடலில் யூரிக் அமிலம் அதிகரித்த நிலையில் பாகற்காய் அதைக் குறைப்பதில் உதவி செய்வதை கருதப் படுகிறது.
கேல்சியம் ஆக்ஸலேட் வகைக் கற்களுக்கு (CALCIUM OXALATE STONES) - பால் வெண்ணெய் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளையும் மற்றும் வேர்க்கடலை, சாக்லேட், கோலா பானங்களை மிக அளவுடன் உட்கொள்ள வேண்டும். வயிற்றின் எரிச்சலைக் குறைக்க உபயோகிக்கும் Antacid மருந்தை அளவுடன் உபயோகிக்க வேண்டும்.
யூரிக் அமிலக் கற்களுக்கு (URIC ACID STONES) - பியூரின் அதிகம் இருக்கும் புலால், காளான், மது, கத்தரிக்காய், பால் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளாமல், அளவுடன் உண்ண வேண்டும்.
ஸ்ட்ரூவைட் வகைக் கற்கள் (STRUVITE STONES) - இவ்வகை சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்று நோயால் உண்டாவதால் மருத்துவர் சொல்லும் ஆண்ட்டி பயாடிக் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
வாரத்துக்கு ஓரிருமுறை உணவில் நார்ச் சத்து மிகுந்த வாழைத்தண்டு சேர்ப்பது நல்லது. இது அதிகமானாலும் ஆபத்து. கிட்னிக்கு ஓவர்டைம், லோ பிபி என்று ஆகுமாம்.
வாழைத்தண்டு
வாழைத்தண்டு