இரண்டு கோயில்களையும் தரிசனம் செய்துவிட்டு, அங்கு நிறைய சிற்பங்களைப் பார்த்துப் படங்கள் எடுத்துக்கொண்ட பிறகு, வெளியில் வந்தோம். ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு வெளியே தூரத்தில் பெரிய இராஜகோபுரம் போன்ற அமைப்பைப் பார்த்தேன்.
முழு ராஜகோபுரமாகக் கட்டப்பட்டு (பொதுவா அடித்தளம் கருங்கற்களாலும் பிறகு மேற்தளங்கள் செங்கற்களாலும் கட்டப்பெறும். இப்படிச் செங்கற்களை உபயோகித்து ராஜகோபுரம் கட்டப்பட்டால், அது நாளடைவில் உருக்குலைய ஏதுவாகும். அப்படித்தான் இந்த ராஜகோபுரம் அழிந்திருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. கட்ட ஆரம்பித்துப் பிறகு விட்டுவிட்டது போல எனக்குத் தோன்றவில்லை. அல்லது குலோத்துங்கச் சோழன் காலத்திலேயே மிகப் பெரிய கோயிலுக்கான அடித்தளம் இடப்பட்டிருந்திருக்குமோ?
சரி.. இப்போது நாம் வரலாறைத் தொடர்வோம். முதலாம் குலோத்துங்கச் சோழனைப்பற்றிப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ஒட்டக்கூத்தர் குலோத்துங்கச் சோழன் உலாவில்,
புவிராசர் ராசர் மனு முதலோர் நாளில்
தவிராத சுங்கம் தவிர்த்தோன்”
என்று இந்த குலோத்துங்கச் சோழனைப் பற்றிப் பாடுகிறார். சோழ நாட்டிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கும், பிற நாடுகளிலிருந்து சோழ நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் (அல்லது வெளி நாடுகளிலிருந்து சோழ நாட்டுத் துறைமுகங்களுக்கு வரும் பொருட்களுக்கு) பொருட்களுக்கு சுங்கம் வசூலிக்கும் முறை இருந்தது. அதனை குலோத்துங்கன் முற்றிலும் நீக்கியதால், சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்பட்டான். இது குலோத்துங்கச் சோழனின் பெருமை.
ராஜராஜ சோழன் காலத்திலேயே நாட்டிலுள்ள நிலங்கள் அளக்கப்பட்டு, அதற்கேற்றவாறு வரி/திறை வசூலிக்கப்பட்டது. குலோத்துங்கன் காலத்தில், விளை நிலங்களுக்கு மாத்திரம் வரி வசூலிக்கப்பட்டது. இதுவும் இவனது பெருமை.
இவனுடைய மனைவியரில் முக்கியமானவர் இவனது மாமாவான இரண்டாம் இராஜேந்திர சோழனின் மகள் மதுராந்தகி. இவனது மகள் சுத்தமல்லி ஆழ்வார் என்பாளை, இலங்கை மன்னன் வீரபாகுவுக்குத் திருமணம் செய்துவித்தான். (பெண்களை, நாற்று நடுவதுபோல வேறிடத்திற்குத் திருமணம் செய்து கொடுத்துவிடுகிறார்கள். அதிலும் வேற்று நாட்டரசன், வெளிநாட்டு அரசன் என்றால் அவர்களுக்கு வாழ்வு எவ்வளவு கடினமானதாகிவிடும். அங்கும் நிலைத்திருந்து வாரிசுகளைப் பெற்று, நலமுடன் வாழ்வது மிகப் பெரிய செயலாகும். அதனால்தான் பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்று சொல்லுவதில் ஆழ்ந்த அர்த்தம் இருப்பதாகத் தோன்றுகிறது)
இராஜகேசரி முதலாம் குலோத்துங்கன் கிபி 1070லிருந்து 1120வரை அரசாண்டான் என்பதைப் பார்த்தோம். இவன் சாளுக்கிய சோழர் மரபில் முதல் மன்னன். இவன், 1093ல் தன்னுடைய மகன் விக்கிரம சோழனை வேங்கி நாட்டு அரசப் பிரதிநிதியாக அமர்த்தினான். 1118 வரை விக்கிரம சோழன் வேங்கிநாட்டில் ஆண்டுகொண்டிருந்தான். அவன் வேங்கியில் அரசப் பிரதிநிதியாக ஆண்டு கொண்டிருந்த காலம் வரை மாற்றரசர்களால் வேங்கி நாட்டை வெற்றிகொள்ள இயலவில்லை. குலோத்துங்கச் சோழன், 1118ல் இவனை கங்கைகொண்ட சோழபுரத்திற்கே திரும்ப அழைத்து, இளவரசனாக்கினான். இவன் ஜுன் 1118ல் இளவரசனாக்கப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
முதலாம் குலோத்துங்கச் சோழன் மறைவுக்குப் பின்னர், விக்கிரமச் சோழன் பரகேசரி பட்டம் பெற்று 17 வருடங்கள் ஆட்சி செய்தான். இவன் காலத்தில் தில்லை கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்தான். கனகசபையைச் சுற்றியிருக்கும் திருச்சுற்றுக்கு விக்கிரமசோழன் திருச்சுற்று மாளிகை என்றே பெயர். திருத்தேரையும் செம்பொன்னால் வேய்ந்தான். முதலாம் பராந்தகச் சோழன் காலத்திலிருந்தே தில்லை நடராஜர் கோயிலுக்கு சோழ அரசர்கள் திருப்பணிகள் செய்வது நடைமுறையில் இருந்தது என்றாலும், ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழன், கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டது முதல், தில்லை கோயிலுக்குத் திருப்பணிகள் செய்வது அதிகரித்தது, அதேசமயம் திருவாரூர் கோயிலும் தஞ்சை பெரிய கோயிலும் சிறப்பை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்தன. விக்கிரமச் சோழனுக்கு அகளங்கன் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இவனே திருவரங்கம் கோயிலின் ஐந்தாம் திருச்சுற்றை அமைத்தவன் (அகளங்கன் திருச்சுற்று).
விக்கிரம சோழன், பழையாறை, சிதம்பரத்திலிருந்த அரண்மனை, காட்டுமன்னார் கோயில் போன்ற பல இடங்களிலும் தங்கியிருந்தான் என்று கல்வெட்டுச் செய்திகள் குறிப்பதால், நாட்டின் பல இடங்களிலும் தங்கி மக்கள் குறையைக் கேட்டறிந்தான் என்று கொள்வது பொருந்தும்.
கவிச்சக்கரவர்த்தி என்று சொல்லப்படும் ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழன் அரசவைப் புலவராக இருந்தார். இவரே அவனுடைய மகன் இரண்டாம் குலோத்துங்கனுக்கு ஆசிரியராகவும், அவனுடைய மகன் இரண்டாம் இராஜராஜ சோழனுக்கு அவைக்களப் புலவராகவும் இருந்தார். இவரே கலிங்கத்துப் பரணி, தக்கயாகப் பரணி, குலோத்துங்கச் சோழனுலா போன்ற நூல்களை இயற்றியவர்.
விக்கிரமசோழன், 1133ல் தன்னுடைய மகன் குலோத்துங்கனுக்கு இளவரசுப் பட்டம் கட்டினான். விக்கிரமச் சோழனின் 17ம் ஆண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அதற்குப் பிறகான கல்வெட்டுகள் இல்லை என்பதால் 1135ல் இவன் மரணமெய்தியிருக்கவேண்டும் என்று அனுமானிக்கிறார்கள்.
விக்கிரம சோழனுக்குப் பின்னர் இராஜகேசரி இரண்டாம் குலோத்துங்கச் சோழன் பட்டத்திற்கு வந்தான். (1135)
இரண்டாம் குலோத்துங்கச் சோழன் 1133லிருந்து 1150 வரை ஆட்சி புரிந்தான். (17 அல்லது 15 ஆண்டுகள்). இவனுடைய 17 ஆண்டுகால ஆட்சி பெரும்பாலும் அமைதியாகவே நடந்தது. இவன் கங்கைகொண்ட சோழபுரத்தையே தலைநகராகக் கொண்டிருந்தான். இவன் தில்லை நடராஜர் கோயிலில் திருமுடி சூடினான் என்று ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.
இந்த மன்னன் தில்லையம்பதியில் பல்வேறு திருப்பணிகளைச் செய்தான். அவற்றை சேக்கிழாரும் குறிப்பிட்டிருக்கிறார்.
இவன் தில்லையம்பதியில் திருப்பணிகள் செய்துவருங்கால், சிற்றம்பலத்தின் திருமுற்றத்தை விரிவுபடுத்த எண்ணினான். ஆனால் திருமுற்றத்தின் ஒரு பகுதியில் கிபி எட்டாம் நூற்றாண்டில், நந்திவர்ம பல்லவனால் நிறுவப்பெற்றிருந்த கோவிந்தராஜர் சன்னிதியும் மிகப் பெரிய கோவிந்தராஜர் மூர்த்தமும் இருந்தது.
தில்லை கோவிந்தராஜப் பெருமாள் சயன திருக்கோலம்
திருப்பணி செய்வதற்கு இந்த மூர்த்தம் இருந்த பகுதி இடைஞ்சலாக இருப்பதாகக் கருதிய மன்னன், அதனை வேறொரு இடத்திற்கு மாற்றப் பணித்தான். இது கண்டு வைணவர்கள் கோபம் அடைந்து, திருப்பணிகளுக்கு இடையூறு செய்தனர். அதனால் பெரும் கோபம் அடைந்த மன்னன், தில்லை கோவிந்தராஜர் மூர்த்தத்தை அலைகடல் நடுவில் புகவைத்தான் (கடலில் கொண்டு போட்டுவிட்டான்). இந்தக் கோயிலில் பிற்பாடு 1570களில் நாயக்க மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கரால் அந்த மூர்த்தம் திரும்பவும் கொணரப்பட்டு வைக்கப்பட்டது (அல்லது புதிய மூலவரா என்பது தெரியவில்லை. ஆனால் இராமானுஜர் காலத்தில்தான் திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் கோவிந்தராஜப் பெருமாள் ஸ்தாபிதம் செய்யப்பட்டார்..1130-1150. ஆனால் அதற்கு முன்பே அங்கு வேறொரு விஷ்ணு சன்னிதி இருந்தது என்று அங்கிருக்கும் கல்வெட்டுகள் கூறுகின்றன).
இதனைத் தொடர்ந்து, இந்த வைணவர்கள் மீது கொண்ட கோபத்தினால், அப்போது வைணவத்திற்கு தலைவராக இருந்த இராமானுசரை வரவழைத்து, அவரையே சிவனே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொள்ள வைத்தால், வைணவர்களால் ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்கு வரும் என்று நினைத்து, அவரை அழைத்ததும், அரசனைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் சொன்ன தகவல்களாலும், தன் சீடர் கூரத்தாழ்வான் சொன்ன ஆலோசனையாலும், தான் கூரத்தாழ்வான் உடையணிந்து சோழ நாட்டை விட்டு வெளியேறி ஹொய்சாள தேசம் புகுந்ததும், கூரத்தாழ்வான் காஷாய உடையணிந்து, பெரிய நம்பியுடன் சோழ அரசனின் அரசவைக்குச் சென்று, பிறகு சோழனால் கண்கள் பிடுங்கப்பட்ட நிகழ்வும் நடந்தன. (திவ்யசூரி சரிதம், கோயிலொழுகு இதனை மிக விரிவாகச் சொல்லும்)
முன்றில் கிடந்த கருங்கடல் போய்
முன்னைக் கடல் புகப் பின்னை தில்லை
மன்றிர்க்கு இடம் கண்ட கொண்டல் மைந்தன்
என்று குலோத்துங்கச் சோழனின் ஆசிரியரும் அவைப்புலவருமான ஒட்டக்கூத்தர் தன் தக்கயாகப் பரணியில் நயம்படத் தெரிவிக்கிறார். இருந்தாலும் தன் தாத்தா முதலாம் குலோத்துங்கச் சோழன், மன்னார்குடியில் வைணவத் திருக்கோயிலைத் திருத்திப் பெயர் பெற்றதை, அவனது பேரனான இந்த மன்னன் இழந்தான் என்றே சொல்லவேண்டும்.
திவ்யசூரி சரிதம், இவனது கழுத்தில் புண் தோன்றி, கிருமி பெருகி மறைந்தான் என்று சொல்கிறது. இவனே கிருமி கண்ட சோழன் என்ற பழிக்கு ஆளானவன். ஆனாலும் இவனது செயலால் இராமானுஜர் ஹொய்சாள நாட்டிற்குச் சென்றதும் ஒருவித நன்மையையே செய்தது. தற்போது கர்நாடகா என்று அழைக்கப்படும் பகுதியில் பலரையும் வைணவ மதத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட வைத்ததும், அரசர்களும் வைணவத்தை மேற்கொண்டதும் நிகழ்ந்தது.
இரண்டாம் குலோத்துங்கச் சோழன் மிகுந்த சிவபக்தி கொண்டவனாகத் திகழ்ந்தான். திருநீற்றுச் சோழன் என்ற பெயரும் பெற்றான். ஆனால் தில்லை கோவிந்தராஜர் மூர்த்தத்தை கடலில் விட்டதன் மூலம் வரலாற்றில் தீரா அவப்பெயர் பெற்றான்.
நம்மை வரவேற்க நினைக்கும் வாசல்கள்
அதிலும் சிற்பங்கள் உள்ளன. இவை முடிந்த கோபுரங்களா இல்லை பாதியில் கைவிடப்பட்டவைகளா? முடிந்த கோபுரங்கள் ஆனால் அழிந்துபட்டவை என்றே தோன்றுகிறது.
இந்த இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் மகன் பரகேசரி இரண்டாம் இராஜராஜ சோழன் என்ற பெயருடன் 1146லிருந்து 1163 வரை சோழ மன்னனாக அரசாண்டான். அதில் 1146-1150 வரை தன் தந்தைக்குத் துணையாக நின்றான். இந்த இரண்டாம் இராஜராஜ சோழன் காலத்தில்தான் நாம் இதுவரை பார்த்துவந்த தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலும் தெய்வநாயகி அம்மன் கோவிலும் சமைக்கப்பெற்றன.
தாராசுரம் கோயில் பற்றிய தொடரில், முடிக்கும் பகுதியில்தான் அதனைக் கட்டிய மன்னனின் வரலாற்றிற்கு வருகிறோம். முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்திற்குப் பிறகே நாட்டில் அமைதி திகழ்ந்தது என்றாலும், போர்கள் இல்லையென்றால் நாட்டின் எல்லையை நோக்கி எதிரி ராஜ்ஜியங்கள் படையெடுத்து வரும். பொதுவாக ராஜ்ஜியத்திற்கு உள்ளே இருக்கும் சிற்றரசர்களும் கொஞ்சம் தைரியம் பெற்றுவிடுவார்கள். அரசனின் புகழ் மங்கும். அதனால் சோழப் பேரரசு, கொஞ்சம் கொஞ்சமாக அதன் முடிவுரையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது என்று கொள்ளலாம்.
இரண்டாம் ராஜராஜ சோழன், ஆரம்ப கால ஆட்சியை கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து நடத்தினான் என்றாலும் பிற்காலதில் தன் முன்னோர்களின் தலைநகரான பழையாறைக்கு வந்து அங்கிருந்த அரண்மனையில் தங்கி ஆட்சி புரிந்தான். அப்போதுதான் நகரின் பகுதிகளைச் சீர் செய்து அதன் வட பகுதிக்கு இராசராசபுரம் என்று பெயர் வைத்தான். அதுவே பின்பு மருவி தாராசுரம் என்றாகிய கதை.
தாராசுரம் கோயிலை விட்டு வெளியில் வந்தபோது தூரத்தில் ஒரு பாயும் காளையையும் அருகில் ஒரு மனிதனையும் காண முடிந்தது. நிஜமான காளையொன்று அங்கு நிற்பதாக நினைத்ததால், அருகில் சென்றோம். பார்த்தால் அது ஒரு சிற்பம். ரொம்பவே ஆச்சர்யமாக இருந்தது. அந்தச் சிற்பக்கூடத்தில் இருந்த சிற்பியைக் கூப்பிட்டு வெகுவாகப் பாராட்டினேன். அருகிலேயே அவர் செய்திருந்த சில பல சிற்பங்களைக் காண்பித்தார். அருகிலேயே பாருங்கள், கோபுர மாடல் ஒன்று.
தாராசுரம் ஐராவதீஸ்வரர் மற்றும் தெய்வநாயகி அம்மன் கோயில்களுக்குச் சென்று சாளுக்கியச் சோழர்களின் கைவண்ணத்தைப் பார்த்த பிறகு, எனக்கு சோழர்களின் ஆரம்பத் தலைநகரமாகவும் பிறகு அவர்களின் அரண்மனை, படைவீடுகள் அமைந்த இடமாகவும் இருந்த பழையாறையைப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. அந்தக் காலகட்டங்கள் 300 ஆண்டுகள் இடைவெளி உள்ளவை. பெரும் அளவில் கோயில் அமைப்பு, சிற்பங்கள் போன்றவை மாறுபட்டிருக்காமல் இருந்தாலும், பழையாறை வடதளி என்று சொல்லப்படுகின்ற கோயில், காலத்தால் முற்பட்டது.
பழையாறை வடதளி
பழையாறை முன்பு நான்கு ஊர்கள் கொண்தாக இருந்தது. வடதளி, தென் தளி, மேல் தளி, கீழ் தளி என்பவையே அவை. இவை அந்த ஊரில் பாய்ந்த முடிகொண்டான் ஆற்றின் (இது அந்தக் காலத்தில் பழையாறு என்று அழைக்கப்பட்டது) நான்கு பக்கங்களில் அமைந்திருந்தன. வடக்குப் பகுதியில் அமைந்திருந்த சோமேஸ்வரர் கோயில்தான் பழையாறை வட தளி என்று அழைக்கப்படுகிறது. அதனைத்தான் நாம் பார்க்கப்போகிறோம்.
ஆனால் இந்தக் கோயிலுக்கும் அப்பருக்கும் (திருநாவுக்கரசர்) சம்பந்தம் உண்டு. அதற்கு முன்பு நமக்கு அன்றைய காலகட்டம் (7ம் நூற்றாண்டு) பிடிபடவேண்டும். அதற்கு நமக்குத் துணையிருப்பது தேவாரப் பதிகங்களும், திவ்யப் பிரபந்தங்களும். இது தவிர இருக்கவே இருக்கிறது கல்வெட்டுகள் மற்றும் செப்புப் பட்டயங்கள்.
பௌத்த மற்றும் சமண மதங்கள் மிகவும் கோலோச்சிய காலம் அது. ஆளும் அரசரின் ஆதரவைப் பெற்றிருந்தன இரு மதங்களும். சில அரசர்கள் சமயப்பொறை உடையவர்களாக இருந்த போதிலும், அரசனுடைய மதம் அபரிமித செல்வாக்கு பெற்றிருந்தது.
ஏற்கனவே இன்றைய பதிவில் நிறைய வரலாற்றுச் செய்திகள் இருக்கின்றன. இப்போது இன்னொரு வரலாறா என்று எண்ணுவதற்கு முன், இதனை அடுத்த பகுதியில் எழுதுகிறேன்.
திருமங்கையாழ்வார் காலம் (சரித்திரச் சான்றுகள்படி) கிபி 731-796ஆக இருக்கலாம். (வைணவ குருபரம்பரையில் சொல்லப்படுவதை இங்கு நான் கொள்ளவில்லை.) திருநாவுக்கரசரின் காலம் கிபி 7ம் நூற்றாண்டின் பிற்பகுதி. அந்தச் சமயத்தில் தஞ்சை தரணிப் பகுதி பல்லவர் கட்டுப்பாட்டில் (அதாவது ஆங்காங்கே சிற்றரசர்கள் இருந்தனர்.) இருந்தது. பழையாறை பகுதி சோழச் சிற்றரசர்களாலும் (இவர்கள் சங்க காலச் சோழர் பரம்பரையினர், ஆனால் பழம் பெருமை தொலைத்தவர்கள்), தஞ்சைப் பகுதி முத்தரையர்களாலும் ஆளப்பட்டுக்கொண்டிருந்தன. பல்லவர்களோ 3ம் நூற்றாண்டிலிருந்து தொண்டை மண்டலத்தை ஆள ஆரம்பித்தனர். அவர்கள் வடக்குப் பகுதியிலிருந்த வந்தவர்கள். இந்த விவரம் இந்த வாரத்திற்குப் போதும்.
பழையாறை
வட தளியின் சில படங்களைப் பார்க்கலாம்.
சோமநாதஸ்வாமி திருக்கோயிலின் ராஜகோபுரம் (பழையாறை வட தளி)
காவிரி (பொன்னி ஆறு) மற்றும் அரசலாறு போன்றவை ஓடும் பரப்பின் அருகில், தாராசுரம், திருவலஞ்சுழி, சோழன் மாளிகை, மணப்படை வீடு, ஆரியப்படைவீடு, புதுப்படை வீடு, பம்பைப் படைவீடு, திருச்சத்திமுற்றம், பட்டீஸ்வரம், நாதன் கோயில், கீழைப்பழையாறை, மேலைப் பழையாறை, உடையாளூர் போன்றவை சேர்ந்த ஒரு நகரமாக சோழப்பேரரசின் தலைநகரம் இருந்துவந்தது. இதில் கீழ்ப் பழையாறையில்தான் இந்தக் கோயில் அமைந்துள்ளது. அதனை பழையாறை வட தளி என்கின்றனர்.
இரண்டு பக்கமும் நிறைய நாட்டிய மங்கைகள் விதவிதமான அபிநயத்தில்.
இராஜகோபுரத்தைக் கடந்த பிறகு நாம் பார்ப்பது பலிபீடம் மற்றும் கோயிலின் நுழைவாயில். வலதுபுறத்தில் இருப்பது அம்மன் கோவில் (இதுவும் அப்போதைய காலத்தது)
அடுத்த
வாரம் தொடரலாம்.
அதுவரை
மேலே உள்ள அம்மன் கோயிலின் கீழ்த்தளத்தில் உள்ள நரசிம்மர் சிற்பங்களைப்
பார்த்துவிடுங்கள்.
(தொடரும்)
காக்க காக்க
பதிலளிநீக்குகனகவேல் காக்க..
நோக்க நோக்க நொடியில் நோக்க
நீக்குஒட்டக்கூத்தர் காலத்தில்தான் சோழன் மணந்த பாண்டிய ராணிக்கு துணையாக அவர்கள் அரசவைப்புலவர் புகழேந்தி .சோழநாடு வந்தார்.
பதிலளிநீக்குஇவை எல்லாமே சரித்திரத்தில் பதிவாயிருக்குன்றன ஶ்ரீராம். அது சரி.. ராணிக்புத் துணையாக சேடிகள் வரலாம், புலவர் ஏன் வந்தார்?
நீக்குஅந்த ராணி ஒரு தமிழ்க் காதலராம். புகழ் புலவர் மீது தந்தை போல எண்ணி பக்தி கொண்டவராம். அதனால் 'அரசவைப் புலவர், பிரியாமல் தன்னொடு வரவேண்டும்' என்று விரும்பினாராம்.
நீக்குஏதோ கோல்மால் செய்து ஒட்டக்கூத்தர் புகழேந்தியை சிறையில் வைத்து விடுவார். ராணி கடுப்பாகி அந்தப்புர அறைக் கதவை மூடிவிடுவாள். ஒட்டக்கூத்தர் வந்து ஏதோ செய்யுள் படி கதைவைத் திறக்கச் சொல்வார்.
இந்தக் காட்சியில்தான் "ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு ரெட்டை தாழ்ப்பாள்"
'எங்காளு இப்ப இங்க வரணும்' என்பார் அரசி.
அப்புறம் புகழேந்தி புலவர் வந்து பாடி, கதவைத் திறக்கச் செய்வார்.
அப்புறம் ஓ.கூத்தரும் புகழும் ஒற்றுமையாக இருப்பார்கள்!
முடிவுறாத அல்லது சிதைந்த அந்த வாசல்கள் எனக்கு பெரும் காட்சியாக இருந்ததை என்றாலும் நீங்கள் எடுத்திருப்பது போல அதன் அருகில் சென்று பார்க்கவில்லை, படம் எடுக்கவில்லை. தூரத்திலிருந்தே பார்த்து க்ளிக்கி விட்டு கிளம்பினோம். அதில் என்ன இருக்கப் போகிறது என்று அப்போது மனதில் விழுந்து விட்டது போலும்!
பதிலளிநீக்குநான் அதன் பழைமையை அறிவதற்காக ஒவ்வொரு முறையும் அருகில் சென்று பார்ப்பேன். இது கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட ஆரம்பித்ததோ என்னவோ
நீக்குசோமேஸ்வரர் கோவில் நான் பார்க்கவில்லை. இதன் ராஜகோபுரத்தின் தலையில் கட்டுமானம் இருக்கிறது. அது அங்கே தாராசுரத்தில் மிஸ்ஸிங். ஒரே மாதிரி கட்டுமானங்கலை.
பதிலளிநீக்குகோபுரம் வர்ணம் பூசப்பட்டிருப்பதால் பழமையைத் தொலைத்திருக்கிறது என்று தோன்றுகிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் கோவில் என்று மனதில் நினைத்தாலே சிலிர்க்கிறது.
இந்தக் கோயில் வரலாற்றில் மிக முக்கியமானது. அப்பர் காலத்தையது. கோயிலின் ராஜகோபுரம் சிதைந்து பழைமையைப் பறைசாற்றினாலும், உட்பகுதியில் தளங்களைச் சரி செய்து, கோபுரம் எழுப்பி, குடமுழுக்கின்போது சீர் செய்திருக்கிறார்கள். ஆனால் பக்தர்கள் கூட்டத்தைத்தான் காணவில்லை.
நீக்குஅப்பர் சரித்திரம், அவரோடு இந்தக் கோயிலுக்கு என்ன தொடர்பு என்றெல்லாம் பிறகு வரும் (7ம் நூற்றாண்டு). கோயிலில் உள்ள சிவனை சோழ மன்னர்கள் அவர்களின் அரசியார்கள் வழிபட்டிருப்பர். அந்த மண்ணில் கால் வைத்தாலே நமக்கு அந்த எண்ணம் வரும்.
நீக்குபோய்ப் பார்க்க வேண்டும்.
நீக்குநானும் நினைத்துக்கொண்டே, திட்டமிட்டுக் கொண்டே இருக்கிறேன்.
எங்கே?!
கடவுள் கொடுத்த வாய்ப்பு ஸ்ரீராம்... கும்பகோணத் தொடர்பு. அதனால் அங்கு செல்லும்போது, ஏதோ பலப்பல அர்ஜண்ட் வேலைகள் சென்னையில் இருப்பதாக நினைத்துக்கொள்ளாமல், இரண்டு மூன்று நாட்கள் தங்கி, கும்பகோணம் சுற்றியுள்ள மிகப் பழைமையான கோவில்கள் பலவற்றை தரிசனம் செய்துவாருங்கள். திருவிடமருதூர் உட்பட.
நீக்குமிக மிக சுவாரஸ்யமான தகவல்கள். ஒட்டக்கூத்தரும், கம்பரும் சமகாலத்தவர்கள்தானே? ஏன் கம்பரைப்பற்றி எந்த தகவலும்இல்லை? அம்பிகாபதி,அமராவதி காதல் கதை உண்மையா?
பதிலளிநீக்குவாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம். கம்பர் பற்றி வரலாற்றுத் தகவல்கள் இருக்கின்றன. அமராவதி எந்த அரசரின் மகள் என்றெல்லாம் நான் இந்தத் தொடரின்போது கவனம் செலுத்தவில்லை. பார்க்கிறேன்.
நீக்குபழையாறை புகைப்படம் வெகு அழகு. பழையாறைக்குச் செல்ல ஆசை வருகிறது.
பதிலளிநீக்குபழையாறைப் பகுதிக்குச் செல்லும்போதெல்லாம் பலவித எண்ணங்கள் எனக்குள் எழும்.
நீக்குநாம் இருக்கும் பகுதி ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட பகுதி. அரசனின் குடும்பங்கள், இளவரசர்கள் வளர்ந்த பகுதி. கடுமையான காவல், நாலாவிதப் படைகள் சூழ்ந்து இருந்த பகுதி.எந்தச் சமயத்தில் படைவீர்ர்களின் மைதானமாக இருந்த பகுதிகள் குடியிருப்புகளானது? அப்போதிருந்த படைவீர்ர்களின் வாரிசுகளின் ரத்தம் இப்போதுவரை இருக்குமல்லவா? அப்போதிருந்த சிறந்த படைவீர்ர்கள், புகழ்பெற்றவர்களுன் வாரிசு எங்கே போனார்கள்? என்றெல்லாம் எண்ணம் தோன்றும். அங்கு நான்கு படைவீடுகள் தற்போது சிறிய கிராமங்களாக உள்ளன.
போக்குவரத்து என்பது அதிகம் விரிவடையாத காலத்தில் கால் நடையே கோயில்களுக்கு செல்லும் முறையாக இருந்தது. கடலூரில் எனது தாத்தா சனி தோறும் மதியம் 3 மணி அளவில் உண்டுவிட்டு லாந்தர், கைக்கோல், சால்வை சகிதம் 5 கி மீ தூரத்தில் இருந்த திருவஹீந்திரபுரம் நடந்து சென்று தொழுது வந்தார்.
பதிலளிநீக்குநாங்கள் வளர்ந்தபின் 1960 களில் திருப்பதி செல்ல உத்தேசித்து ஸ்டவ், மண் எண்ணெய் கேன், சகிதம் போகும் வழியில், வரும் வழியில் சில, பல கோயில்கள் (காஞ்சிபுரம், மாமல்லபுரம், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம்) தரிசித்து பாண்டி வழி வீட்டிற்கு வந்தது நினைவில் உள்ளது. தங்கியது கோயில் சத்திரங்களில்.
அதன் பின் குறிப்பிட்ட கோயில்களை மாத்திரம் தரிசிக்க, வேண்டுதல் செய்ய/செலுத்த செல்லும் பக்தி யாத்திரைகள் அமைந்தன. (உ-ம்.குலதெய்வம் கோயில், நவகிருஹ வழிபாடு, திருமணஞ்சேரி, ) தங்குமிடம் லாட்ஜ், உணவு ஹோட்டல்.
தற்போது பக்தி+உல்லாச ஊர் சுற்றல் என்ற முறையில் குறைந்த நாட்கள், நிறைய இடங்கள், செலவு கம்மி என்ற முறையில் டூர் அமைக்கப்பட்டு பிரபலம் ஆகி வருகின்றன. இந்த மாதிரி டூர்களில் உண்மையான பக்தி மறைந்து பல இடங்களைக் கண்ட திருப்தி மட்டுமே மிஞ்சி நிற்கிறது.
சொல்ல வந்தது என்னவென்றால் நீங்களும் பல புகைப்படங்கள் நிறைய எடுப்பதற்காகவே எல்லா டூர்களிலும் கலந்து கொள்வது போல் எனக்கு தோன்றியது. உங்களுடைய ஆர்வம் சேவை, பக்தி என்பதில் இருந்து சும்மா சுற்றி வருவோம் என்ற போக்கிற்கு திரும்புவது போல் எனக்கு தோன்றுகிறது.
கருத்துரை இடித்துரையாக தோன்றலாம். உண்மையான பக்தி குறைந்து வருகிறது. அதே சமயம் பக்தியின் பெயரால் வெறுப்பு, காழ்ப்பு கூடி வருகிறது என்பதே இக்குமுறல்.
சோழர்களின் அழிவுக்கு காரணம் சோழ பரம்பரையில் சாளுக்கிய பரம்பரை கலந்தமையே என்ற முடிவு சரி எனக்கொள்ளலாம்.
தாராசுரம் சென்றிருந்தாலும் இந்தக்கோயிலுக்கு சென்றதில்லை. நானும் மேலே குறிப்பிடபடி ஒரே நாளில் கும்பகோணம் கோயில்கள் சுற்றிப்பார்க்க விரும்பி ஒரு கோவிலையையும் அனுபவித்து பார்க்கவில்லை.
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார்... உங்களின் நெடிக கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி
நீக்குபோக்குவரத்து இருந்த காலத்திலும், எங்கள் (மற்றும் பல) ஆச்சார்யர்கள், நடந்து சென்றே பல கோயில்களை தரிசனம் செய்திருக்கிறார்கள். உண்மையில் ஒவ்வொரு திவ்யதேசத்திலும் மூன்று நாட்கள் தங்கியிருந்து வழிபடுதலே சரியான முறை. என்னுடைய ஆச்சாரியருக்கு முந்தைய ஆச்சார்யார், பாரதம் முழுவதும் 50,000 கிமீ தூரத்திற்கு நடந்து சென்றுதான் எல்லாக் கோயில்களையும் தரிசனம் செய்தார் (1980 வரை). அதன் பிறகு வந்தவர்கள், தெய்வீக அனுமதி பெற்று வாகனங்களை உபயோகப்படுத்த ஆரம்பித்தார்கள். பரமாச்சார்யாரும் நடந்துதான் ஒவ்வொரு இடத்திற்கும் சென்றிருந்திருக்கிறார் (1990வரை)
என்னுடைய மற்றும் மனைவியின் தாத்தா காலங்களில் அவர்கள் பத்ரி வரை சென்றிருந்தாலும், ஆங்காங்கே தங்கி உணவு தயாரித்து உண்டு , தங்கள் தினப்படி வழக்கங்களை விடாமல் கோயில் தரிசனம் செய்திருக்கின்றனர். அந்தக் காலம் போல வராது.
பக்தி யாத்திரைகள், கோயில் தரிசன யாத்திரைகள் என்று ஏற்பாடு செய்யப்படும்போது ஒரே நாளில் 4-5 கோயில்களுக்கு மேல் தரிசனம் செய்வது என்றாகிவிட்டபோது, தரிசனத்தின் மகிமை நீர்த்துவிடுகிறது என்பது உண்மைதான்.
இரண்டு மூன்று கோயில்களுக்கு மேல், ஒரு நாளில் செல்ல நேர்ந்தால், நிச்சயம் மனம் பக்தியில் ஈடுபடாது, என்னைப்போன்ற சாதாரணர்களுக்கு. அதே சமயம் கோயில்களுக்குச் செல்லும்போது, அவை பற்றி ஒரு நாள் எழுதுவேன் என்று எண்ணுவதால், படங்கள் எடுக்கிறேன். படங்கள் எடுப்பதற்காக ஒரு கோயிலுக்குச் செல்வது என்பது நடைமுறை அல்ல.
நீக்கு//நிறைய இடங்கள், செலவு கம்மி// - கோயில் உலா என்பது செலவு பிடிக்கும் வேலை. கோயில் தரிசனம் செய்யவேண்டும் என்ற ஆர்வமே நம்மை உந்துகிறது. உதாரணமாக, கும்பகோணம் பகுதியில் 5 கோயில்களை தரிசனம் செய்யவேண்டும் என்று நினைத்தால், கார் ஒரு நாளைக்கு 3300 ஆகும், இது தவிர கும்பகோணம் சென்றுவரும் செலவு (தமிழகத்துக்குள் நாங்கள் 3 ஏசியில் செல்லுவோம்), தங்குமிடம் மற்ற செலவுகள். இதுவே பஞ்சதுவாரகா யாத்திரை என்றால் ஒருவருக்கு குறைந்தபட்சம் 35,000 ரூபாய்க்கு மேல் செலவாகும். இத்தனைக்கும் அந்த யாத்திரையில் மூன்று திவ்யதேசங்களை மாத்திரமே சேவிக்க இயலும்.
உண்மையான பக்தி குறைந்துவருகிறது என்பது என்னைப் பொறுத்தவரையில் உண்மைதான். மனதில் நல்ல பக்தி உணர்வு அதிகரிக்கவேண்டும் என்றால், வேண்டாத, அதற்கு உதவாத எதிலும் நம் கவனம் செல்லக்கூடாது, அதனால் நமக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. செய்தித்தாள்கள் படிப்பது, தொலைக்காட்சி, இணையம், அலைபேசி என்று எல்லாமே, பக்தி உணர்வைக் குறைப்பவை, காரணம் நம் கவனம் உலக விஷயங்களில் சிதறி, அதன் காரணமாக மனதில் காழ்ப்பு உணர்ச்சிகள் வருவதால். பக்தி அதிகரிக்கவேண்டும் என்றால் நம் ஆன்மீக முன்னேற்றத்தைத் தவிர வேறு எதிலும் கவனமே செலுத்தக்கூடாது. இது என்னைப் பொறுத்தவரையில் சாத்தியமாவதில்லை.
நீக்குபக்தியின் பெயரால் வெறுப்பு காழ்ப்பு கூடாது. தன்னுடைய அடுத்த சந்ததியினரும் நம் வழியிலேயே ஒழுக வேண்டுமே என்ற கவலையால், கவனச் சிதறல்கள், நம் வழியைச் சிதைக்கும் செயல்கள் மீது வெறுப்பு கோபம் வருவது இயற்கையே
சோழர்களின் அழிவுக்குக் காரணம் சாளுக்கிய பரம்பரை கலந்ததனால் அல்ல. எந்த ஒரு இராஜ்ஜியமும் சில பல நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்ந்திருத்தல் இயலாது. ஏழு தலைமுறையாகத் தாழ்ந்தவனும் இல்லை, ஏழு தலைமுறைகள் வாழ்ந்தவனும் இல்லை என்பதுதான் உலக இயற்கை. சோழர்களின் வலிமை குன்றியதும், எதிரிகளின் வலிமை அதிகரித்ததும்தான் சோழர் சகாப்தம் முடிவுக்கு வந்ததன் காரணம்.
நீக்குஒரு நாளில் காலையில் ஒரு கோயில், மாலையில் ஒரு கோயில் என்று சென்றுவந்தாலொழிய, அனுபவித்து, பக்தி உணர்வோடு கோயில் தரிசனம் அமைவது கடினம் (உயர்நிலை ஆன்மீக அன்பர்கள் தவிர).
உங்கள் நெடிய கருத்துக்கு நன்றி
என்னுடைய பசங்க, அப்பா... போதும் கோயில் உலாக்கள், கோயில் இல்லாத பயணங்களை மேற்கொள்ளுங்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். அதனால் என்னுடைய சென்ற பயணம் (சில நாட்கள் முன்பு), பாரதத்தின் வடகிழக்குப் பகுதிக்கு 9 நாட்கள் சென்றதுதான். அதற்கு முன்பு மூணாறு 4 நாட்கள் பயணமாகச் சென்றிருந்தோம். இனி கூர்க், ஆலப்புழை போன்ற பயணங்களையும் மேற்கொள்ள இருக்கிறோம்.
நீக்குஇது போன்ற விரிவான விளக்கங்களுக்கு நன்றி. மனம் குமுறிய பின்னூட்டத்திற்கு பொறுமையுடன் மனம் திறந்த பதில் தந்தமைக்கு நன்றி. எதுவானாலும் காழ்ப்புணர்வு குறையவேண்டும். குறைந்தால் மகிழ்ச்சியே. மீண்டும் நன்றி, வணக்கம்.
நீக்குJayakumar
//எதுவானாலும் காழ்ப்புணர்வு குறையவேண்டும்.// இது சுலபம் கிடையாது. சொல்வது எழுதுவது சுலபம். ஆனால் இதனைக் கடைபிடிப்பது கஷ்டம். ஒரு கோயிலைப்பற்றி, மாற்று மதத்தினர் செய்வதைப் பற்றி, தற்போது நடந்துகொள்ளும் முறையைப் பற்றிப் படிக்கும்போது, பார்க்கும்போது மனதில் எரிச்சல் வரத்தான் செய்யும். அவங்க அப்படித்தான் என்று விட்டேத்தியாக இருக்க மனம் ஒவ்வாது ஜெயகுமார் சார்.
நீக்குகோன்ற//
பதிலளிநீக்குமுதல் பாரா....கௌ அண்ணா அல்லது ஸ்ரீராம் இத பாருங்க. போன்ற என்று வர வேண்டும் இல்லையா?
கீதா
வாங்க நக்கீரி.... கீதா ரங்கன் அக்கா. நிறைய தட்டச்சு செய்யவேண்டிவருவதாலும், தமிழ் எழுத்துருக்களின் software mistakeஆலும் (உதாரணம் நந்தகுமாரன் என்று வேர்டில் தட்டச்சு செய்வது கடினம் ந ந் தகுமாரன் என்று தட்டச்சு செய்து பிறகு இடைவெளியைக் குறைக்கணும்), எழுத்துப் பிழையைச் சரிபார்க்க எனக்கு நேரம் கிடைப்பதில்லை. என்ன செய்ய?
நீக்குஇடைவெளி இருக்கும் வார்த்தைகளையும், பிழைகளையும் நான் படிக்கும்போது கூடுமானவரை சரி செய்து விடுகிறேன். இன்று இது விடுபட்டுப் போய் இருக்கிறது போல... இதை சரி செய்து விட்டேன்.
நீக்குசுங்கம் தவிர்த்த சோழன்//
பதிலளிநீக்குபடித்திருக்கிறோம்.
பெண்களை, நாற்று நடுவதுபோல வேறிடத்திற்குத் திருமணம் செய்து கொடுத்துவிடுகிறார்கள்.//
அதே எனக்கு இது அடிக்கடித் தோன்றும். அடுத்த வரிகள் உட்பட
கீதா
இலங்கைத் தமிழர்களிடம் உள்ள பழக்கமான, மாப்பிள்ளை, பெண் வீட்டுக்குக் குடிபெயர்ந்துவிடுவதில், சில நன்மைகள் இருப்பதாகவும் எனக்குத் தோன்றும். உதாரணம், பெற்றோர் உடன் இருப்பதால், பெண்ணை நன்கு நடத்துவார், மாப்பிள்ளையின் பழக்க வழக்கங்களும் ஓரளவு கண்காணிப்பில் இருக்கும். நீங்க என்ன நினைக்கறீங்க? அதாவது பெண், புகுந்த வீடு செல்வது நல்லதா இல்லை பையன் புகுந்தவீடு செல்வது நல்லதா?
நீக்குநான் சொல்லிடுவேன். ஆனால் வேண்டாம் விவாதம். எனக்கும் என் தங்கைக்கும் நேரம் சரியில்லையாம் என் தங்கை சொல்றா ஹாஹாஹாஹாஹா...நான் கேட்டேன் என்னிக்குதான் எனக்கு நேரம் சரியாயிருக்குனு நீ சொல்லிருக்கன்னு? நான் இதை எல்லாம் பார்ப்பவளோ இதைப் பற்றி யோசிப்பவளோ இல்லை என்பது வேறு விஷயம்.
நீக்குஉங்க கேள்விக்கான பதிலை ஏற்கனவே இங்கு கே வா போ க வில் நம்ம ரிஷபன் அண்ணா எழுதிய க்தைக்கான கருத்துகளில் சொல்லியிருந்தேன் என்பதால்...
கீதா
விக்கிரமச் சோழனுக்கு அகளங்கன் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இவனே திருவரங்கம் கோயிலின் ஐந்தாம் திருச்சுற்றை அமைத்தவன் (அகளங்கன் திருச்சுற்று).//
பதிலளிநீக்குதகவல்.
ஒட்டக்கூத்தர் பற்றி படித்திருக்கிறோம்.
கேசரி தான் குழப்புது!
கீதா
கேசரி இனிப்பும் சூப்பராக இருக்கும். 'கேசரி' என்ற பட்டமும் வரலாற்று ஆசிரியர்களுக்கு மிகவும் பிடித்தமானது. காரணம், அரசர்கள் இராஜகேசரி, பரகேசரி என்று அடுத்தடுத்து வைத்துக்கொள்வதால், பெயரையும் பட்டத்தையும் வைத்து இந்த அரசனுக்குப் பிறகு இந்த அரசன் என்று சரியாக அவர்களால் கணிக்க முடிகிறது. அதுபோல இரண்டு இராஜகேசரி மன்னர்கள் இருந்திருந்தால், இடையில் நிச்சயம் பரகேசரி மன்னன் இருந்திருக்கவேண்டும், ஒருவேளை மிகக் குறுகிய காலமே-மாதங்களே இருந்திருந்தால் அவன் பெயரில் கல்வெட்டுகள் இல்லாமல் இருந்திருக்கும், அல்லது கிடைத்திருக்காது என்று அனுமானிக்கிறார்கள்.
நீக்குஅது புரிகிறது. அதுக்கு இரண்டாம் குலோத்துங்கன் என்பதே ஓகேன்னு தோன்றியது!! ஹாஹாஹாஹா
நீக்குகீதா
உண்மைதான். ஒருவேளை நாங்கள் சோழ அரச பரம்பரைதான் என்பதை எல்லோருக்கும் உணர்த்துவதற்காக இந்த 'இராஜகேசரி/பரகேசரி' என்பதைத் தொடர்ந்திருப்பார்கள். இதுக்கும் 'காண்டி' 'காந்தியானதற்கும்' சம்பந்தம் கிடையாது
நீக்குஇராமாநுஜர், கூரத்தாழ்வான் இந்த நிகழ்வுகள் வாசித்ததுண்டு.
பதிலளிநீக்குமுடிந்த கோபுரங்கள் அழிந்தது போல்தான் இருக்கு. படங்கள் சூப்பரா இருக்கு நெல்லை
கீதா
எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனாலும் இந்த ராஜகோபுரம் பழமையின் எச்சம். மிக அழகாக இருக்கிறது (பழையாறை வடதளி)
நீக்குசிற்பக் கூடம் அந்தக் காளை செம்மையா இருக்கு.
பதிலளிநீக்குபழையாறை வட தளி கோவில் சிற்பங்கள் - நாட்டிய மங்கைகளின் வித வித அபிநயங்கள் சூப்பர் செதுக்கல்கள்.
அம்மன் கோவில் கீழ்த்தளத்தில் நரசிம்மர் சிற்பங்களையும் பார்த்துக் கொண்டாச்சு.
கீதா
// அந்தக் காளை செம்மையா இருக்கு. //
நீக்குஆம். அது சிற்பம் என்றே நம்ப முடியவில்லை. சிற்பியின் படம் இல்லாதது குறைதான்.
கடைசிப் படம் அதற்கு முந்தைய படம் சிற்பங்கள் சூப்பர்.
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா ரங்கன் உங்கள் கருத்துகளுக்கு
நீக்குசக்கரத்தில் செடி முளைத்திருக்கிறதே...நகராதே!
பதிலளிநீக்குகீதா
ஹாஹாஹா. எனக்கும் கோயில்கள் மற்றும் முக்கியமான கட்டிடங்களில் செடிகள் முளைத்திருப்பதைக் கண்டால், அடடா இது பில்டிங்கைக் குலைத்துவிடுமே, உடனே இதனை எடுக்கக்கூடாதா என்று தோன்றும். அதிலும் குறிப்பாக அரச மரம்தான்.
நீக்குஎனக்குக் காவிரி ஆற்றை பொன்னி ஆறு என்று சொல்வது ரொம்பப் பிடிக்கும் அப்பெயர்.
பதிலளிநீக்குகீதா
அந்தப் பெயருக்குக் காரணம் தெரியுமில்லையா? காவிரி நீர் சோழவளநாட்டைச் செழிப்புறச் செய்து, பொன்னைப் போன்று வயல்களை விளைவிக்கச் செய்வதால் பொன்னி ஆறு.
நீக்குஎனக்கும் பொன்னி என்ற பெயர் பிடிக்கும். ஆனால் பிரபந்தத்தில் காவிரி என்ற பெயர்தான் உபயோகித்திருக்கிறார்கள். (கங்கையில் புனிதமாய காவிரி நடுவுபாட்டு)
வரலாறு அருமை.
பதிலளிநீக்கு//(பெண்களை, நாற்று நடுவதுபோல வேறிடத்திற்குத் திருமணம் செய்து கொடுத்துவிடுகிறார்கள். அதிலும் வேற்று நாட்டரசன், வெளிநாட்டு அரசன் என்றால் அவர்களுக்கு வாழ்வு எவ்வளவு கடினமானதாகிவிடும். அங்கும் நிலைத்திருந்து வாரிசுகளைப் பெற்று, நலமுடன் வாழ்வது மிகப் பெரிய செயலாகும். அதனால்தான் பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்று சொல்லுவதில் ஆழ்ந்த அர்த்தம் இருப்பதாகத் தோன்றுகிறது)//
போர் சமயம் உதவி வந்து வெற்றிக்கு காரணமாகவும், நாட்டை விரிவாக்கவும் இப்படி வேறு நாட்டு பெண்களை திருமணம் முடித்தும்,
தங்கள் பெண்களை அவர்களுக்கு திருமணம் முடித்து விடுகிறார்கள்.
வேறு மொழி, வேறு கலாச்சாரத்தில் வாழ்வது கடினம் தான். இருந்தாலும் அவர்களும் நாட்டுப்பற்று காரணமாய் மணமுடித்து கொள்கிறார்கள். தன் குலபெருமையை காத்து நன்மக்களை பெற்று வாழ்கிறார்கள்.
‘’பெற்றோரைப் பிறந்தகத்தைப்
பிறந்த ஊரை விட்டுப்
பிரிந்து வந்து பெருநோக்கில்
கடமையறம் ஆற்றப்
பற்றற்ற துறவியென
குடும்பத் தொண்டேற்றுப்
பண்பாட்டின் அடிப்படையில்
எனைப் பதியாய்க் கொண்டாய்
நற்றவத்தால் என் வாழ்க்கைத்
துணையாகிப் பெண்மை
நலநோக்கில் அன்போடு
கருணையிவை கொண்டு
மற்றவர்க்கும் தொண்டாற்றும்
மாண்புமிக்க என்றன்
மனைவியை நான் மதிக்கின்றேன்
வாழ்த்தி மகிழ்கின்றேன்’’ (மனைவி நல வேட்பு நாள் கவிதை)
வேதாத்திரி மகரிஷி கவிதை.
வாங்க கோமதி அரசு மேடம். வேதாத்ரி மஹரிஷ்யின் கவிதை மிகுந்த அர்த்தம் பொதிந்ததுதான்.
நீக்குஆனால் அந்தப் பெண் மனத்தில் என்ன இருக்கும்? யார் அறிவர்? யாருக்கோ சந்ததி பெருக, நாட்டின் நலனுக்காக என்னை அனுப்பிவிட்டாரே என்று எண்ணுமோ?
//அந்தப் பெண் மனத்தில் என்ன இருக்கும்? யார் அறிவர்? யாருக்கோ சந்ததி பெருக, நாட்டின் நலனுக்காக என்னை அனுப்பிவிட்டாரே என்று எண்ணுமோ?//
நீக்குஇருக்கலாம் நிறைய கதைகள் இருக்கே! நாட்டு நலனுக்கு காதலை துறந்த அரசிகள், அரசர்கள் உண்டே!
பெண்கள் மனதில் என்ன இருக்கு என்று கேட்டால்தானே அவர்கள் சொல்வார்கள். அந்தக்காலத்தில் அது எல்லாம் கேட்டு இருக்கமாட்டார்கள்.
ஹாஹாஹா.. பெண்ணைக் கேட்டால் அவங்க உள்ளத்தைத் திறந்து சொல்லிடுவாங்களா? கேட்கிறவங்க, என்ன பதிலை எதிர்பார்த்துக் கேட்கிறாங்க என்று அனுமானித்து, அதுக்கு ஏத்தமாதிரி பதில் சொல்லுவாங்க என்பதுதான் என் எண்ணம். 'மாப்பிள்ளை பிடிச்சிருக்காடா', 'நல்லா வச்சிருக்காறா', 'அன்பா இருக்காரா' என்ற பெற்றோரிடமிருந்து, அதிலும் அப்பாவிடம் இருந்து வரும் கேள்விகளுக்கு 'ஆமாம்பா, பிடிச்சிருக்கு, நல்லா வச்சிருக்காரு, அன்பா இருக்காரு' போன்ற பதில்கள்தாம். அம்மா தனியாகக் கேட்டால் ஒருவேளை உண்மையைப் பகிரலாம். தாய்க்குத் தெரியாதா ஒரு பெண்ணின் நிலைமை?
நீக்குபாயும் காளை சிற்பம் மிக அழகாய் இருக்கிறது. சிற்பியை பாராட்டியது நல்ல செயல். அவருக்கு ஊக்கபரிசுகாக இருக்கும்.
பதிலளிநீக்குசோமநாதஸ்வாமி திருக்கோயிலின் ராஜகோபுரம் (பழையாறை வட தளி) படங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது.
சிற்பங்கள், கோபுரம் எல்லாம் அழகு. பார்த்து பல வருடம் ஆச்சு மறந்து போய் விட்டதை நினைவு படுத்தி கொண்டேன்.
சக்கரத்தை சுற்றி செடிகள் வளர்ந்து மறைத்து கொண்டு இருந்தாலும் சக்கரம் வெள்ளையாக அழகாய் எட்டிப்பார்க்கிறது.
நரசிம்மர், இரண்யகசிபு வரலாறு அழகாய் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.
படங்கள் விவரங்கள் எல்லாம் அருமை.
தொடர்கிறேன்.
அந்தச் சிற்பம் (காளை) நிஜமாகவே ஒரு காளை நிற்பதுபோலத்தான் எனக்கு அப்போது தெரிந்தது. என்ன ஒரு கைத்திறன்.
நீக்குநீங்கள் அந்தக் கோயிலுக்கு நிச்சயம் சென்றிருந்திருப்பீர்கள் சாருடன். சோழ அரசர்கள் காலத்தில் நம்மையெல்லாம் உள்ளே விட்டிருப்பார்களோ மாட்டார்களோ.
தில்லை கோவிந்தராஜப் பெருமாள் சயன திருக்கோலம் படங்கள் அழகாய் இருக்கிறது தரிசனம் செய்து கொண்டேன்.
பதிலளிநீக்குதிருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோயிலிலும் இந்த மாதிரி இருக்கும்.
நீக்குநேற்று கே எஸ் ரவிகுமார் அவர்களின் பேட்டி ஒன்று கண்டேன். அவர் சொன்னார், ஒரு படத்துக்குச் செலவு பண்ணும்போது ஆர்டிஸ்டுக்கு எவ்வளவு வியாபாரம் என்ற ஒரு கணக்கு உண்டு. கமலஹாசனின் வியாபாரத்தைவிட மிக அதிகமாக அந்தப் படத்திற்குச் செலவானது. அதனால் பெரும் தோல்வியை நான் எதிர்பார்த்தேன். நல்லவேளை படத்துக்கு (தசாவதாரம்) நல்ல வசூல் கிடைத்து லாபம் சம்பாதித்துக்கொடுத்தது என்றார். அதில்தானே தில்லை கோவிந்தராஜர் பற்றி முதல் பகுதி வரும்.
வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த வார கோவில், பகுதிகளைப்பற்றிய விபரங்களும், சோழ மன்னர்களின் ஆட்சியை பற்றிய விபரங்களும் அருமை. சரித்திரத்தை கரைத்து குடித்துவிட்டீர்கள் போலே.... நல்ல தெளிவான விளக்கங்கள். தாராசுரம் கோவிலையும், தெய்வநாயகி அம்மன் கோவிலையும் அழகுற கட்டிய சோழ மன்னர்களின் வரலாறுகளை தெரிந்து கொண்டேன்.
பழையாறை கோவிலின் இராஜ கோபுரமும், முடிவுறாத வரவேற்கும் வாசல் பகுதிகளைப் பற்றிய விபரமான செய்திகளையும் அறிந்து கொண்டேன். நடன மங்கைகளின் அபிநய சிற்பங்கள் அனைத்தும் அழகாக உள்ளன.
கோவில் வாசலில் உள்ள பாயும் காளைச்சிறபத்தையும், அதை அடக்கும் வண்ணம் தோற்றமளிக்கும் மனிதரையும், உருவாக்கிய சிற்பி உண்மையிலேயே பாராட்டப்படக் கூடியவர். நீங்களும் உடனே மனம் நிறைந்து அவரை பாராட்டி அவருக்கு ஊக்கமளித்தற்கு மகிழ்ச்சி. இன்னமும் வரும் சரித்திர வரலாற்றுகளையும், பழையாறு வடதளி கோவிலைப் பற்றிய செய்திகளையும் அறிய ஆவலுடன் உள்ளேன். தொடர்கிறேன்.
பதிவு வந்த அன்றும், முதல் நாளும் ஒரு சிறு பயணம் அலைச்சல். அதனால் உடன் வர இயலவில்லை. இன்றுதான் விடுபட்ட பதிவுகளை வாசித்து வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பயணங்கள் சிறப்பாக அமைந்தனவா?
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அன்று காணாதபோதே வெளியில் சென்றிருப்பீர்கள் என நினைத்தேன்