அமானுஷ்யம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமானுஷ்யம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29.9.16

முன்னூறு வருடங்களுக்குப் பின் கண்திறந்து பார்த்த சிறுமியும், 96 ஆண்டுகளாகத் தூங்கும் அழகியும்.


தெற்கு இத்தாலி.  பாலெர்மோ சிசிலி என்கிற இடம்.






இங்கு இருக்கிறது தனிமுகமூடி அணிந்த ஒருவகைத் துறவுக் குழுவினரின் நிலவறைக் கல்லறை.





உலகிலேயே மிக அழகான மம்மி என்று சொல்லப்படும் ரோசாலியோ லோம்பார்டோ என்கிற 12 வயதுச் சிறுமியின் உடல் இங்குதான் வைக்கப்பட்டிருக்கிறது. 










அங்கு வைக்கப் பட்டிருக்கும் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட மம்மிகளில் இதுதான் அழகு மட்டுமல்ல, அப்படியே தூங்குவது போலவும் இருக்கிறதாம்.



1920 டிசம்பர் 6 இல் நிமோனியாவால் இறந்துபோன இந்தப் பெண்ணின் பிரிவைத் தாங்க முடியாத அவள் தந்தை, அப்போதைய புகழ் பெற்ற, இறந்த உடல்களை பாடம் (embalm) செய்யும் Alfredo Salafiaவை அணுகி, மகள் உடலைப் பாடம் செய்யச் சொல்கிறார்.





இவர்தான் Alfredo Salafia. 





அரிதான இந்த வழியைக் கண்டுபிடித்தவர்.  முதலில் விலங்குகள் மீதும் பின்னர் மனிதர்கள் உடல் மீதும் சோதனை நிகழ்த்தியிருக்கிறார். தனது தந்தையின் உடலைக்கூட அவர் இப்படி பாடம் செய்து வைத்திருந்திருக்கிறார்.  



 


யு எஸ் வந்து தனது கண்டுபிடிப்பை விற்றுக் கொண்டிருந்திருக்கிறார்.  அப்புறம் என்ன காரணத்தினாலோ தனது நாட்டுக்கே திரும்பி விட்டார்.  அவர் சாகும்வரை தந்து கண்டுபிடிப்பின் தயாரிப்பு ரகசியத்தை வெளியிடவில்லை.



கல்லறையில் கண்ணாடியால் மூடப்பட்ட சவப்பெட்டியில் ஒரு மரப்பலகையில் மீது வைக்கப்பட்டிருக்கிறது இந்தப் பெண்ணின் உடல்.அந்த உடம்பை எக்ஸ்ரே எடுத்துக் பார்த்தபோது இத்தனை வருடங்கள் கழித்தும் அதன் உறுப்புகள் பிரியாமல், சிதையாமல் ஒன்றோடொன்று இணைந்தே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.




சலாஃபியாவால் இறந்த உடம்பைப் பாடம் செய்யப் பயன்படுத்தப்பட்ட முறை சமீபத்தில் ஒரு பேப்பரில் எழுதப்பட்டுக் கிடைத்துள்ளது. அவர் அந்தப்பெண்ணின் ரத்தத்தை எடுத்துவிட்டு  பார்மலின் கலந்த திரவத்தை உள்ளே செலுத்தியுள்ளார்.  அது பாக்டீரியாவை அழிக்க வல்லது.  மேலும் ஆல்கஹால், கிளிசரின், சாலிசிலிக் ஆஸிட் ஆகியவற்றையும் உபயோகப்படுத்தி உள்ளார்.




தலைமுடியில் கட்டப்பட்ட ரிப்பனுடன் இரண்டு வயதுக்கு குழந்தை போலக் காட்சியளிக்கும் இந்தப் பெண்ணின் மம்மியில் ஆச்சர்யம் என்னவென்றால் குறிப்பிட்ட இடைவெளியில் அது கண்ணைத் திறந்து பார்க்கிறதாம்.  





தொடர் படமெடுக்கும் முறையில் படம் எடுத்தபோது இது தெரிந்ததாம்.  சில வருடங்களுக்கு எல்லோரையும் வியப்புக்குள்ளாக்கி, கேள்விக்குறிகளை எழுப்பியது இந்தத் தகவல்.






ஆனாலும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் இப்போது அதற்கு ஒரு பதிலை வைத்திருக்கிறார்களாம்.





அந்த ஹாலில் இருக்கும் ஜன்னல்களிலிருந்து வரும் வெளிச்சத்தால் ஏற்படும் காட்சிப்பிழை என்று சொல்லியிருக்கிறார்கள்.ரோசாலியாவின் உடலை அங்கிருந்து நகர்த்தி வேறு இடத்தில் வைத்து, அவள் கண்ணிமைகளை நன்றாகக் பார்க்கும் வகையில் வைத்தபோது இது தெரியவில்லை.








300 வருடங்களுக்குப் பின் இந்தச் சிறுமி கண்திறந்து பார்த்தாள் என்று சமீபத்தில் கூட ஒரு பரபரப்பு தோன்றியது.  அதுவும் இது போன்ற ஒரு காட்சிப் பிழையாகத்தான் இருக்க வேண்டும்!
 


31.3.15

நினைவுகள் 1946 : நாளச்சேரிப் பாட்டி


நாளச்சேரிப் பாட்டி அடிக்கடி வந்து அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பார்.  90 வயது.  பருத்த உடம்பு.  ரவிக்கை அணியாமல் மேல்பக்கம் காத்தாடிக் கொண்டிருக்கும்.  கால்களை நீட்டியபடி முன்தொடை வரை புடைவையை வழித்து விட்டுக்கொண்டு உட்காருவது அவருக்குச் சௌகர்யம்.





அப்போதெல்லாம் ரேடியோவே பார்த்ததில்லை.  பொழுது போக வேண்டுமே...  மின்சாரமே சில வீடுகளில்தான் இருக்கும். பாட்டியின் விசேஷம் பேய்க்கதைகள்.  




என் அம்மாவும் பதிலுக்கு பயம் காட்டுவார்.  " வெளக்கு வச்சப்புறம் கொல்லைக் கதவைத் தற்செயலாத் தெறந்தேனா? சரசரன்னு புடைவைச் சத்தம்.  கோடி வீட்டு மங்களம் - குளத்துல விழுந்து செத்தாளே - அவ... சரேல்னு முள் வேலிக்குக் குறுக்கேப் பாஞ்சா பாரு... வேலி படபடன்னு முறியற சத்தம்... ஒரு பலத்த சிரிப்பு... போயிட்டா...!"



அதிலிருந்து எனக்குக் கொல்லைக் கதவைத் திறக்கவே பயம்.  திறந்ததும் யாரோ மூட முடியாதபடி கதவை உட்பக்கம் தள்ளுவது போலத் தோன்றும்.  பகலில் கூட அந்தக் கதவுப் பக்கம் போவதில்லை.


பாட்டி சர்வ சாதாரணமாகக் கேட்டாள்.. "கொள்ளிவாய்ப் பிசாசு பாத்திருக்கியா நீ?"


'நல்லவாய்ப் பிசாசையே பார்த்ததில்லை... இதுல இது வேற...  அம்மாவிடம் சொல்லி வைக்க வேண்டும்..  இனி இந்தப் பாட்டி வந்தால் உள்ளே விடாதேன்னு'  என்று நினைத்துக் கொண்டே,  "ரொம்பக் கேள்விப் பட்டிருக்கேனே.."


"நேத்து கூட நான் பாத்தேன்.  கொத்தூர் சாலை வரப்புல நின்னு நின்னு நகருது..  வாயை அடிக்கடித் தொறந்து தொறந்து 'பக்பக்'குனு நெருப்பா கக்கும்.  யாரும் எதிர்ப்பட்டா பளார்னு ஒரே அறையில தீத்துப்புடும்"


பாட்டியிடம் இன்னும் கதை பாக்கி இருந்தது.


"நேத்து ராத்திரி வயிறு உப்புசமா இருந்துதா..  ஒரு சுருட்டு பத்த வச்சுகிட்டு வயப்பக்கம் வந்தேன்.  பாத்தா அந்த வரப்பு மேல அது மெதுவா வந்துகிட்டிருக்கு...  நெருப்பா கொட்டுது, அணையுது...  கொட்டுது, அணையுது...   குளத்தாண்டைத் திரும்பி வேகமா இந்தப் பக்கம் நகர்ந்தது பார்...  ஓட்டமா வீட்டுக்குள்ற ஓடி வந்துட்டேன்."


நான் இன்னும் நெருங்கி அம்மாவுடன் ஒட்டிக் கொண்டேன்.


"பாட்டி... நீ நெஜமா அதப் பாத்தியா...?"





"பின்ன...? ஒனக்கும் பாக்கணுமா?"


அம்மா பேச்சை மாற்றினார்.  இதுமாதிரி எவ்வளவோ கதைகள் கேட்டவர் அவர்.  பாட்டி அடுத்த சப்ஜெக்டுக்குப் போய்விட்டார்.  எதிர் வீட்டுப்பெண் வாசல்ல வந்து நின்னு 'பசங்கள'ப் பார்க்கும் செய்தி தொடங்கியது.


இப்படி ஏழு, ஏழரை வரை பேசிக் கொண்டிருந்தால் மெல்ல இரவு உணவு நேரம் வந்து விடும்.  இங்கேயே 'ரெண்டு வாய்' போட்டுக் கொண்டு பாட்டி கையை ஊன்றி அலுப்புடன் எழுந்து நடந்தால், அடுத்து நாலைந்து நாள் ஆகும் மறுபடி ரொடேஷனில் அவர் எங்கள் வீட்டுப்பக்கம் வர!






பாஹே  -





படங்கள்  :  இணையம்!