எங்கள் ப்ளாக்கின் 'இந்த வார கேட்டு வாங்கிப் போடும் கதை'
பகுதியில் இடம்பெறும் படைப்பு சகோதரி கீதா மதிவாணன் (கீதமஞ்சரி) அவர்களின்
சிறுகதை.
என்றாவது ஒருநாள் என்கிற தலைப்பில் அருமையான புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஆஸ்திரேலிய காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக் கதைகள். ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஹென்றி லாசன் எழுதிருப்பதன் மொழிபெயர்ப்பு. அவற்றை அவரது தளத்தில் படித்து ரசித்திருக்கிறேன். இவர் ஆஸ்திரேலிய தமிழ் கூட்டுத்தாபனம் இணைய வானொலியில் பங்காற்றுகிறார் என்பது கூடுதல் தகவல்.
இந்தக் கதை பற்றிய அவரது வரிகளுக்குப் பின்னர் அவர் படைப்பு தொடர்கிறது...
===================================================================
வணக்கம் ஸ்ரீராம்..

எங்கள் ப்ளாக்கில்
வரும் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். கேட்டுவாங்கிப்
போடும் கதை வரிசையில் என்னுடையதையும் பரிசீலித்திருப்பதற்கு நன்றி.
தினமலர்
பெண்கள் மலரில் கற்பூரம் என்னும் கதை வெளியானது. அதற்கு முன் யூத்ஃபுல்
விகடனில் சிவப்பி என்னும் கதை வெளியானது. சிவப்பி கதை எனக்கு மிகவும்
பிடித்த கதை என்பதால் அந்தக் கதையை இத்துடன் அனுப்புகிறேன். என்
புகைப்படத்தையும் இணைத்துள்ளேன்.
இப்படியொரு வாய்ப்பின் வழி எங்கள் ப்ளாக் வாசகர்களுக்கு என் கதை சென்றடைவதில் மிகுந்த மகிழ்ச்சி. தங்களுக்கென் மனமார்ந்த நன்றி.

சிவப்பிஉருவானகதை
எனக்கு அப்போது பத்துப்
பன்னிரண்டு வயதிருக்கும். கோடை விடுமுறைக்காக பெரியம்மாவின் கிராமத்துக்குப்
போயிருந்தேன். பெரியம்மாவின் வீடு ஒரு குளத்தை ஒட்டியிருந்தது. அந்தக் குளத்தில்
நான் பார்க்கும்போதெல்லாம் ஒரு வயதான அம்மா கழுத்து மட்டும் மேலே தெரியும்படி
நீரில் ஊறிக்கொண்டே இருப்பார். யாருடனும் எதுவும் பேசமாட்டார். ஆனால் தனக்குத்தானே
பேசி சிரித்துக்கொள்வார்.
சில சமயம் கோபமாய் யாரையோ வைவார். பெரிய வீட்டுப் பாட்டியம்மா என்றார்கள். மனநிலை
சரியில்லை என்றார்கள். காரணம் யாருக்கும் தெரியவில்லை. இருட்டத் துவங்கும்
வேளையில் அந்தம்மா குளத்தை விட்டு வெளியேறி வீட்டுக்கு செல்வார், முழு நிர்வாணமாக.
மற்றொரு நிகழ்வும்
பெரியம்மாவின் ஊரில் நடந்ததுதான்.
ஊருக்குள் திரிந்துகொண்டிருந்த மனநிலை தவறிய பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருந்தது. இந்த
சம்பவமும் என்னை பாதித்தது. அன்று என்னை பாதித்த இரு சம்பவங்களையும் இணைத்து ஒரு
கதையாக்கிவிட்டேன். இதுவே சிவப்பி உருவான கதை.
அன்புடன்
கீதா மதிவாணன்
=====================================================================
சிவப்பி
கீதமஞ்சரி
குளம் சிவப்பியின்
குற்றச்சாட்டுகளுக்குக் காதுகொடுத்தபடி சலனமற்று இருந்தது.சிவப்பி குளத்தை
அமைதியாய் இருக்கவிடுவதே இல்லை. நீருக்கு மேலிருந்த தன் கழுத்தை சற்றே உள்ளிழுத்து
வாய் கொள்ளா நீரை உறிஞ்சி தலையைத் தூக்கி எட்டிய வரைக்கும் வேகமாய்க் கொப்பளித்துத்
துப்பினாள். அவளுள் இருபது வருட கோபமும் இன்னும் அடங்கியபாடில்லை. குளம்
வழக்கம்போல் பொறுமையாய் இருந்தது.
முன்னெல்லாம் குளமும்
பதில் சொல்லிக்கொண்டிருந்தது. 'என்னை நம்பு, உன்னைபோலவே நானும் ஒரு பெண், நான் அப்படிச் செய்வேனா?' என்றெல்லாம் அவளுக்குப்
புரியவைக்க முயன்றது. ஆனால் சிவப்பி அதன் பேச்சுக்கு செவிசாய்க்கவே இல்லை. குளத்து
நீரைக் கோழை என்றாள். கொலைகாரி என்று அழுதாள். அவளுக்காகப் பரிதாபப்பட்டு குளமும்
அழுதது. அதன் கண்ணீர் வெளித்தெரியாக் காரணத்தால் சிவப்பிக்குக் குளத்தின் துயரம்
புரியவில்லை. யாருமற்றப் பொழுதுகளில் குளத்துடன் ஆவேசமாய் சண்டையிடும் அவள், குளக்கரையில் எவருடைய நடமாட்டமாவது தென்பட்டால்
அமைதியாகிவிடுவாள்.
இன்றும் சிவப்பி, தன் மனக்குமுறலைக்
குளத்தில் கொட்டிக்கொண்டிருந்த வேளை, கொலுசுச்சத்தம் கேட்கவும் அமைதியானாள். ஒரு
இளம்பெண் அழுக்குத் துணிகள் அடைத்த அலுமினிய அன்னக்கூடையை இடுப்பில் அணைத்துப்
பிடித்தபடி படிகளில் இறங்கிக்கொண்டிருந்தாள்.
தண்ணீரில் பூத்துநிற்கும்
தாமரை போல் சிவப்பியின் தலை மட்டும் நீருக்கு மேலே தெரிந்தது. வெள்ளத்தனைய
மலர்நீட்டம் என்பதுபோல் தண்ணீர் முழந்தாளளவு இருந்தாலும் சரி, ஆளை மூழ்கடிக்கும் அளவு
இருந்தாலும் சரி, சிவப்பிக்கு எல்லாமே கழுத்தளவுதான்.
அந்தப்பெண் சிவப்பியைப்
பார்த்து சிநேகமாய்ச் சிரித்தாள். அவளுக்கு நினைவு தெரிந்தநாளிலிருந்தே இந்தக்
குளமும் சிவப்பியும் பரிச்சயம். பாவாடையை மார்புவரை ஏற்றிக் கட்டிவிட்டு மற்ற உடைகளைக்
களைந்து, கொண்டுவந்த துணிகளோடு
துவைத்துவிட்டு பின் குளத்துநீரில் மிதந்த சோப்புநுரைகளைக் கைகளால் விலக்கியபடி
நீரில் இறங்கினாள்.
அவளுக்கு வயது பதினெட்டு
முதல் இருபதுக்குள் இருக்கலாம். சிவப்பி அவளைப் பார்த்தால் சற்று இளகித்தான்
போவாள். சிவப்பிக்கு தன் வயது தெரியாது. குளத்துக்கும் அதன் வயது தெரியவில்லை.
ஊற்றெடுக்கத் துவங்கிய நாளைப் பற்றிய எந்தக் குறிப்பும் அதன் நினைவேட்டில் இல்லை.
சிவப்பி மட்டுமே இருபது வருடங்களாய் அதன் நினைவை, எண்ணத்தை, சிந்தனையை ஆக்கிரமித்திருந்தாள். அவளைக்
குளிர்விப்பது மட்டுமே குளத்தின் அன்றாடக் குறிக்கோளாக இருந்தது. செய்யாத
தவறுக்காக இப்படித் தன்னைப் பழி வாங்குகிறாளே என்று சிவப்பி மேல் அவ்வப்போது கோபம்
வந்தாலும் அவளது அறியாமையை எண்ணி இரங்கவும் செய்தது.
அந்தப் பெண்
சிவப்பியிடமிருந்து பாதுகாப்பான தூரத்திலேயே குளித்துக்கொண்டிருந்தாள். சிவப்பி
கண்களை எடுக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள். சிவப்பி இதுபோல் அமைதியாய்
இருக்கும் வேளைகளில்தான் குளம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடிகிறது. எதையும்
யோசிக்க முடிகிறது. இப்போதும் குளம் யோசித்தது. சிவப்பியின் மகளும் இன்று உயிரோடு
இருந்திருந்தால் இவள் வயதில் தானே இருப்பாள்? இருபது வருடங்களுக்கு
முந்தைய நிகழ்வுகளுக்குள் மூழ்கத்தொடங்கியிருந்தது.
சிவப்பிக்கும் இந்தக்
குளத்துக்கும் அப்படி என்ன உறவும் பகையும்? அதற்குமுன் சிவப்பியைப் பற்றிச் சொல்லவேண்டும்.
நதிமூலம் போல் சிவப்பியின் மூலமும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. சிவப்பியின்
மூலமாகவும் அது தெரியவரவில்லை.
கிட்டத்தட்ட இருபது
வருடங்களுக்கு முன் பருவ எழில்கள் பூத்துக்குலுங்கும் பூஞ்சோலையென ஊருக்குள்
தோன்றினாள். தெருக்களில் அரைகுறை ஆடையுடன் திரிந்துகொண்டிருந்த அவளைப் பார்த்தவுடனேயே பதைபதைத்தனர் பெண்கள்.
பல்லிளித்தனர் ஆண்கள். காட்டிய பற்களைப் பதம் பார்த்தன அவள் கைக்கற்கள்.
அசுரத்தனத்தோடு நின்றவளை மிருகத்தனத்தோடு தாக்கினர் மக்கள். மூர்க்கத்துடன்
திரிந்தவள், பசிக்கும்போது மட்டும் அமைதியடைந்தாள். இரவுநேரங்களில் குளக்கரைப்
படிக்கட்டுகளில் படுத்துக்கொண்டாள்.
அவள் நல்ல நிறமாக
இருந்தாள். நடையின் நளினம் மேல்தட்டுப் பெண்களை நினைவூட்டியது. அவள் பெரும்பாலும்
கடைவீதியின் முனையில் இருந்த டீக்கடை வாசலிலேயே நின்றுகொண்டிருந்தாள். அவளை
வேடிக்கை பார்க்கவென்றே ஒரு கூட்டம் கடைக்கு வரத் தொடங்கியது. டீக்கடைக்காரர் எத்தனை
விரட்டியும் இவள் நகரவில்லை. 'ஏ... சிவப்பி...இந்தா' டீக்கடைக்காரர் கொடுத்த ஒற்றை ரொட்டியோடு இவளுக்கு சிவப்பி என்ற நாமகரணமும்
சூட்டப்பட்டது.
பரிதாபப்பட்ட சிலரின்
தயவால் சிவப்பி வயிறு வளர்த்தாள். கூடவே ஒரு உயிரும் வளர்த்தாள். கற்பிழந்ததால்
சுயம் இழந்தாளா? சுயம் இழந்ததால் கற்பிழந்தாளா? என்று பட்டிமன்றம் வைத்துப் பார்த்தது ஊர். அவள் கர்ப்பத்திற்குக் காரணகர்த்தாவைக்
கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இறங்கியது. முடிவில் தன்னைத் தவிர எல்லோருமே
அயோக்கியர்கள் என்ற முடிவுக்குதான் ஒவ்வொருவரும்
வரவேண்டியிருந்தது.
வீங்கிய வயிறு
வெளித்தெரியும்படி சுற்றிய அவளைப் பார்த்த பார்வைகளில் பரிதாபம், இளக்காரம், அருவருப்பு, சமூகத்தின் மேலான கோபம், வெறுப்பு போன்ற பல
உணர்வுகள் தென்பட்டன. ஆனால் அவளுக்கு உதவும் குணம் எவரிடத்தும் தென்படவில்லை.
ஒருநாள் சிவப்பி
காணாமற்போனாள். சிலர் கவலைப் பட்டனர், சிலர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அவளைப்
பற்றிய பேச்சில்லாமல் மறந்திருந்த ஒருநாளில் கைப்பிள்ளையுடன் மீண்டும் ஊருக்குள்
பிரவேசமானாள். இம்முறை அவள் ஆங்காரத்தின் உச்சத்தில் இருந்தாள். பசிக்கு
வேண்டுவதையும் மிரட்டிக் கேட்டாள். குழந்தைகள் உண்ணுவதை பறித்து உண்டாள்.
கடைவீதியில் பலர் மத்தியில் திறந்த மார்பில் குழந்தைக்குப் பாலூட்டினாள். அதைப்
பார்த்த சில வக்கிரக் கண்கள் தங்கள் பசியாற்றிக்கொண்டன.
குட்டிக்குரங்கு தன் தாயை
இறுகப் பற்றியிருப்பதுபோல் குழந்தையை எந்நேரமும் இறுகப்பற்றியிருந்தாள் அவள்.
கொடிய உலகத்தில் பிறந்திருக்கும் உணர்வற்று குழந்தை அவ்வப்போது சிரித்தது. அழகிய
விக்கிரகம் மாதிரி ஒரு பெண்குழந்தையைப்
பைத்தியக்காரி ஒருத்தி
பெற்றிருப்பதைக் கண்டு, மலட்டுப்பட்டம் சுமத்தப்பட்டு தாய்வீடு விரட்டப்பட்ட
ஒருத்தி தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். குழந்தை அவளைப் பார்த்தும் சிரித்தது.
ஒரு விடியற்காலையில் ஊர்
சிவப்பியின் அலறலில் கண்விழித்தது. உரத்தக் குரலில் ஓலமிட்டபடி வாயிலும்
வயிற்றிலும் அடித்துக்கொண்டு வீதிகளில் வெறிபிடித்ததுபோல் ஓடிக்கொண்டிருந்தாள், சிவப்பி. கையில் குழந்தை
இல்லை, உடலில் ஒட்டுத்துணியில்லை.
நிர்வாணமாக.... நிராதரவாக.... ஓலமிட்டபடி ஓடியவளை நிர்தாட்சண்யமின்றி கல்லெறிந்து
விரட்டிக்கொண்டிருந்தன, சில கல்நெஞ்சங்கள்.
குழந்தை எங்கே? என்னவாயிற்று? ஏன் இந்த அலங்கோலம்? எழுப்பப்பட்ட
கேள்விகளுக்கு விடைகள் கொடுக்கப்படவில்லை.
விடைகள் தானாகவே கிடைத்தன. குட்டிகளோடு இருக்கும் பெண்மிருகங்களை தம்
இச்சைக்கு உட்படுத்த ஆண் மிருகங்கள் முதலில் செய்வது குட்டிகளைக்
கொல்வதுதானாமே.... இங்கேயும் ஒரு மிருகமோ... பல ஒன்றிணைந்தோ.... அந்தக் காரியத்தை
ஆற்றியிருக்கின்றன என்பது குளத்தில் மிதந்துவந்த குழந்தையின் சடலம்
உறுதிப்படுத்தியது.
குழந்தையைக் கொன்றது
குளம்தான் என்று உறுதியாக நம்பினாள் சிவப்பி. அந்தக் குளத்து நீரைக் கால்களால்
மிதித்தாள், கைகளால் அறைந்தாள். கையில் குவித்து வாய் நிறைய உறிஞ்சி வேகமாய் உமிழ்ந்தாள்.
குழறிய வார்த்தைகளால் வசவுகளைக் கொட்டினாள். குமுறி அழுதாள். என்ன செய்தும் அவள்
உக்கிரம் தணியவில்லை. ஊர் வெறுமனே வேடிக்கைப் பார்த்தது. அவளது விம்மிய
மார்பகங்களின் வலியைத் தீர்க்க இயலாத வெறுமையை எண்ணி குளம் கலங்கியது.
சிவப்பி குளத்தினுள்
முங்கி முங்கி தன் சிசுவைத் தேடினாள். ஒவ்வொருமுறையும் எதையோ பற்றிபடி மேலே வந்து
ஆர்வம் தெறிக்கும் கண்களால் வெறித்தாள். அது பழந்துணியாகவோ.... பாறாங்கல்லாகவோதான்
இருந்தது. ஆனாலும் அவள் அசரவில்லை. அன்றிலிருந்து குளமே அவள் குடியிருப்பானது.
அவளுக்காக குளம் அழுதது. கொஞ்சநாள் சிவப்பிக்குப் பயந்து குளக்கரைப் பக்கம்
புழக்கம் தவிர்த்திருந்த ஊர், பிறகு அவளை அலட்சியப்படுத்தி மீண்டும்
புழங்கத்தொடங்கிவிட்டது.
அன்று கோரதாண்டவம்
ஆடியபடி குளத்தினுள் குதித்தவள்தான், இன்றுவரை குளத்தைத் தன் குழந்தையைக் கொன்ற
கொலைகாரியாகவே பார்த்து கொந்தளித்துக்கொண்டிருக்கிறாள். அவளைக் குளிர்விக்கத்தானோ என்னவோ
கோடையிலும் குறைந்த அளவு தண்ணீரையாவது தக்கவைத்துக்கொள்ளத் தொடங்கியது குளம்.
இருபது வருடத்துக்கு
மேலாகியும் இன்னும் அவள் சோகத்தைக் கரைக்க முடியவில்லை குளத்து நீரால். சிவப்பி
ஓய்ந்துவிட்டாள். முன்பு போல் இப்போது சிவப்பியால் முங்கியெழ முடியவில்லை. என்றாவது
தன் குழந்தையைக் கண்டுபிடிதுவிடுவோம் என்ற நம்பிக்கையும் அவளுள் தளரத் தொடங்கியது.
வெறுமனே குளத்திடம் சண்டையிட்டபடி தன் குழந்தையைத் திருப்பித் தரும்படி
வேண்டிக்கொண்டிருக்கிறாள்.
சலனம் கேட்டு குளம்
தன்னினைவுக்கு வந்தது. அந்தப்பெண் குளித்துமுடித்துவிட்டு மேற்படிக்கட்டில்
நின்றபடி உடைமாற்றிக்கொண்டிருந்தாள். கொண்டுவந்திருந்த பையிலிருந்து பொட்டலம்
ஒன்றை எடுத்து படிக்கட்டில் வைத்துவிட்டு சிவப்பியைப் பார்த்துப்
புன்னகைத்துவிட்டுப் போனாள்.
சிவப்பி ஆர்வத்துடன்
குளத்தினின்று வெளியேறி அதை நோக்கிப் போக... அவள் நிர்வாணத்தை தன் நீர்த்துளிகளால்
மறைக்க முயன்று தோற்றது குளம்.