சங்கீதா பாணி மோர்க்குழம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்கீதா பாணி மோர்க்குழம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12.9.16

"திங்க"க்கிழமை பதிவு – சங்கீதா பாணி மோர்க்குழம்பு - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி






          கவர்ச்சியான வண்ணத்தில் மோர்க்குழம்பு செய்து காட்டியிருக்கிறார் நெல்லைத்தமிழன்.



     எனக்கு ஒருவர் இந்தக் குழம்பைக் கற்றுக்கொடுத்தார். எனக்குப் பொதுவாகவே மோர்க்குழம்பும், புது மாங்காய் ஊறுகாயும், பருப்பு உசிலியும் மெனுவில் இருந்தால் (எது ஒன்று இருந்தாலும்) சாப்பிடப்பிடிக்கும். 




     நான் 11,12ம் வகுப்பு ஹாஸ்டலில் (St. Britto hostel, தூய சவேரியார் மேல் நிலைப்பள்ளியுடன் கூடியது) தங்கி இருந்தபோது, புதன் தோறும் அங்கு மோர்க்குழம்பு. 





     அதனால் அன்றைக்கும், திங்கள் கிழமை மதியம் அவர்கள் ஸ்டைலில் எலுமிச்சை சாதம் + தயிர் சாதம் இதையும் தவறவிட மாட்டேன். அதெல்லாம் 70களின் இறுதி. இப்போ மோர்க்குழம்பை எப்படிப் பண்ணுவது என்று பார்ப்போம். 






      தேங்காய்த் துருவல் 3 மேசைக்கரண்டி (1/4 மூடித் தேங்காய்), ஜீரகம் ¼ ஸ்பூன், பச்சை மிளகாய் 3, கொஞ்சம் இஞ்சி. இவற்றைக் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு வழுமூன (இது எங்கள் சொல். மைய அரைக்கவும் என்றும் சொல்லலாம். தூய தமிழில், நைஸா அரைச்சுக்கணும்) மிக்சியில் அரைக்கவும்.







     தயிரையும் மோரையும் கலந்து ஓரளவு ரொம்ப நீர்க்க இல்லாமல் தயார் செய்யவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.




       4 வெண்டைக்காயை, பொடியாக நறுக்கி, தேங்காய் எண்ணைவிட்டு வறுத்துக்கொள்ளவும். வெண்டை இல்லாமல், தளிகைப்பண்ணின பூசணியும் சேர்க்கலாம்.




     அடுப்பை SIMல வைத்து, ¼ ஸ்பூன் மஞ்சப்பொடி, கொஞ்சம் பெருங்காயப் பவுடர், மோர், தேங்காய் பேஸ்ட், தேவையான உப்பு இதைக் கலந்து, கரண்டியால் கிண்டிக்கொண்டே இருக்கவேண்டும். 





     கொஞ்சம் அனல் பாத்திரத்தில் ஒரு இடத்தில் பட்டாலும் திரிந்துவிடும். அவ்வப்போது விரல் வைத்துப்பார்த்து, விரல் பொறுக்கும் சூட்டைவிடக் கொஞ்சம் அதிகமானவுடன் அடுப்பை அணைக்கவும்.  இப்போது வெண்டைக்காய் தானைச் சேர்க்கவும்.
     தேங்காய் எண்ணெயில், கடுகு, உளுத்தம்பருப்பு, கொஞ்சம் ஜாஸ்தி வெந்தயம், 2 சிவப்பு மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளித்து, குழம்பில் சேர்க்கவேண்டியதுதான்.

அன்புடன்,

நெல்லைத்தமிழன்