பேராசைக் கதைகள் அனுபவம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேராசைக் கதைகள் அனுபவம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29.7.15

ஏமாந்த அனுபவம்



பிரபாகரனுக்கு அன்று சம்பளம்.  முதலாளி ரப்பர் பேன்டால் சுற்றப்பட்ட ஐம்பது ரூபாய் நோட்டாக ஒரு கட்டு அப்படியே கையில் கொடுத்திருந்தார். உண்மையில் சென்ற மாதம் வரவேண்டிய பணமும் சேர்ந்த சம்பளம் அது.
 

இப்படிப் புது நோட்டுகளாக பிரபா பார்த்ததில்லை.  அவ்வப்போது அதை எடுத்து, எடுத்துப் பார்த்துக் கொண்டான்.
 

பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டான்.  டிக்கெட் எடுத்துக் கொண்டு சீட்டில் அமர்ந்தவன் கனவுக்குப் போன நேரம்..

 

கோடம்பாக்கம் பாலத்தில் ஏறிக் கொண்டிருந்தது பஸ்.
 

கூட்டத்தில் அந்தப் பொன்னான நேரத்துக்காகக் காத்திருந்த இரண்டு விரல்கள் பிரபாவின் பைக்குள் லாவகமாக நுழைந்தன. இரண்டு விரல்களில் மாட்டிய பணக்கட்டு,  பையை விட்டு வெளியேறும் நேரம் பிரபாவின் கைகள் தன்னிச்சையாக மறுபடியும் தொட்டுப் பார்க்க வந்தது, அதைச் சட்டெனப் பற்றிக் கொள்ள,  கட்டில் பாதி அந்தத் திருடன் கைகளுக்குச் சென்றது.
 

சட்டெனக் கூட்டத்திலிருந்து நழுவிய அந்த மனிதன், ஓடும் பஸ்ஸிலிருந்து லாவகமாகக் குதித்தான்.  இவனும் பின்னாலேயே துரத்திக் கொண்டு கீழே குதித்தான்.

 
முன்னால் ஓடியவன் பாலத்தின் நடுவிலிருந்த படிக்கட்டுகளில் விரைந்து இறங்கியவன், எதிர்த் திசையில் ஓடினான்.
 
"ஓடறான்...பிடிங்க... பிடிங்க..."  என்று கத்திக் கொண்டே பின்னால் ஓடினான் பிரபா.


கொஞ்ச நேரம் இங்கும் அங்கும், திரும்பித் திரும்பி, வளைந்து நெளிந்து ஓட்டம்... 

 
துரத்திக் கொண்டு ஓடியவன் அவனை ஓரிடத்தில் அவனை
எட்டிப் பிடித்து விட்டான்.
 
தோளை எட்டிப் பிடித்தவன், சட்டைக் காலரைப் பற்றிக் கொண்டான்.
 
பின்னாலேயே வேகமாக வந்த ஒருவன் "யே...என்னப்பா... ஓடி ஓடி அடிச்சுக்கறீங்க.." என்றான்.
 
அவன் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடியதை பிரபா சொல்லத் தொடங்குமுன் அவன் முந்திக் கொண்டான்.
 
"ஐயா... நல்ல நேரத்துல வந்தீங்க... சம்பளம் வாங்கிகிட்டு பஸ்ல வந்து இறங்கினேனுங்க..  இவனும் இன்னொருத்தனும் பின்னாடியே வந்து மடக்கினாங்க..  அந்த இன்னொருத்தன் கத்தியைக் காட்டி 'பாக்கெட்ல வச்சிருக்கற பணத்த எடு' ன்னு மிரட்டினான்.  நான் பயந்துபோய் பணத்தை எடுத்துக் கொடுக்கற மாதிரிக் காமிச்சுத் தப்பிச்சு ஓடி வந்தேன்.  அப்படியும் கட்டுல பாதி அவன் கைல மாட்டிடுச்சு ஐயா..  அவன் சட்டைப் பைல பாருங்க..  அதை உள்ளே வச்சுகிட்டிருக்கான்.   மிச்சத்தைப் பிடுங்க 
இவன் என்  பின்னாலேயே துரத்திகிட்டு வர்றான்..   கேக்க ஆளே இல்லையா...  காப்பாத்துங்கையா...." என்றவன், பிரபாவைப் பார்த்து

 
 "டேய்! ஏழைங்க பாவம் உன்னைச் சும்மா விடாதுடா..  இரு! போலீசைக் கூப்பிடறேன்?" என்றான்.
 
அயர்ந்துபோய் நின்றிருந்த பிரபாவின் பாக்கெட்டில் 'சட்'டெனக்
கைவிட்ட புதியவன்,  பாக்கி இருந்த ரூபாய்க் கட்டை எடுத்துப் பார்த்தவன், எதிர்பாராமல் ஒரு காரியம் செய்தான்.

 
திரும்பி ஒரே ஓட்டமாய்....  ஓடியே போனான்!!!
 
திடுக்கிட்டு அவனைப் பார்த்துக் கத்திய பிரபாவின் கையிலிருந்து திமிறி விடுபட்ட இந்தத் திருடன் இந்தப் பக்கமாய் ஓடி மறைந்தான்.
 

காலியாய் இருந்த அந்தத் தெருவின் நடுவே பிரமை பிடித்தது போல
நின்றிருந்தான் பிரபாகர்.

இதற்கு என்ன நியாயம் சொல்வீர்கள்?