"உடம்பைப் பார்த்துக்குங்க"
"உடம்பைப் பார்த்துக்குங்க"
"உடம்பைப் பார்த்துக்குங்க"
வீட்டுக்குப் பார்க்கவரும் ஒவ்வொருவரும் திரும்பிப் போகும்போது என்னிடம் சொல்லிச் செல்லும் வார்த்தை இது.
என் மீது தனக்குள்ள அக்கறையைக் காட்டிக் கொள்ளும் முயற்சியா அல்லது வெறும் உபச்சார மொழி மட்டுமா?
என்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. ஒரு கட்டத்திற்குமேல் இதைக் கேட்கும்போதெல்லாம் எனக்கே அலுப்பாக இருக்கும். ஓரிரண்டு தடவை நான் இப்படி குறுக்கு வெட்டுவதும் உண்டு.
"பார்த்துட்டேங்க...! அடிவயிறு, தோள்பட்டை, கைகள், கால்கள், முழங்கால், பாதங்கள், விரல்கள் எல்லாமே கரெக்டா இருக்குங்க - ஆனா..."
வந்தவர் முகத்தில் வியப்பு கலந்த கேள்விக்குறி - ஏதோ பயங்கர வியாதி பற்றிச் சொல்லப் போகிறேனோ என்ற எதிர்பார்ப்பு -
"தலையை மட்டும் காணோங்க... எங்கே போயிருக்கும்?"
முறைக்க முடிவதே அவர் காட்ட முடிகிற அதிகபட்ச எரிச்சல்.
'எனக்கு மட்டும் சொல்லப்படும் வார்த்தை இது' என நான் நினைத்தது தவறு என்று பிறகு புரிந்தது.
யாரோ, யாரிடமெல்லாமோ, பேசிவிட்டுப் பிரியும்போது தவறாமல் இந்தத் தாரக மந்திரத்தை உதிர்த்துக் கொண்டே செல்கிறார்கள்.
யுனிவர்சல் ஹிப்பாகரசி.
பிறகு நானும் ஆரம்பித்தேன், முந்திக் கொண்டு -
"உடம்பைப் பார்த்துக்குங்க...."
ஒரு நேச உணர்வுடன் அவர்கள் "நன்றி" சொல்லி விட்டுப் புறப்படும்போது எனக்குத் தோன்றியது - "நான் இதிலும் பின்தங்கி இருக்கிறேனோ?"
============================== ===================
ரொம்ப நாளா சில சந்தேகங்கள்....
காகங்கள் என் கூட்டமாகவே பறந்து செல்கின்றன? ஒன்றுமட்டும் தனியாகப் பறப்பது ரொம்ப அபூர்வமாக எப்போதாவது என் பலகணிக் காட்சி. பழைய படப் பாட்டு வரிகள் நினைவுக்கு வருகிறது...
"காக்காக் கூட்டத்தைப் பாருங்க - அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க..."
"பட்சமா இருங்க, பகிர்ந்துண்டு வாழுங்க, பழக்கத்தை மாத்தாதீங்க..."
***********************
(முன்பே ஒரு பதிவில் கேட்டிருந்தோம்)
நாய்கள் தெருவில் நடந்து செல்வதே இல்லை. அவை எப்போதும் ஓடிக் கொண்டேதான் இருக்கின்றன இலக்கின்றி. ஏன்?
நாய்கள் தெருவில் நடந்து செல்வதே இல்லை. அவை எப்போதும் ஓடிக் கொண்டேதான் இருக்கின்றன இலக்கின்றி. ஏன்?
என் மனைவி அவ்வப்போது சொல்லும் பழமொழி இது -
"நாய்க்கு வேலை இல்லே, நிக்க நேரம் இல்லே.."
நாமும் இப்படிதான் இருக்கிறோமோ நமக்கே தெரியாமல்? எதிலும் ஒரு அவசரம், விரைவு காட்டிக் கொண்டு, ஏதோ வெட்டி முறிக்கிறாற்போல...!
************************
சிங்கம் புலி போன்றவை மான் முயல் ஆகியவற்றைப் பிடித்துக் குதற, நாலுகால் பாய்ச்சலில் விரட்டுவதும், அவை தப்பிக்க வளைந்து வளைந்து ஓடுவதும் டிஸ்கவரி சேனலில் பார்த்துப் பார்த்துப் பதறி இருக்கிறோம். ஒரு நண்பர் சொல்கிறார், "பசி இருந்தால்தான் சிங்கம், புலி எல்லாம் அவற்றைப் பாய்ந்து கவ்வும். பசி தீர்ந்துபோன சமயங்களில் அவை அவற்றிற்கு வெகு அருகில் வந்து விளையாடினாலும் தீண்டவே தீண்டாது"
தினமணி பாஷையில் 'மெய்யாலுமா'? யாராவது டெஸ்ட் பண்ணிப் பார்த்துச் சொல்லுங்களேன்.
**********************
நம் தமிழ் சினிமாக்களில் இருவர் காரசாரமாய்ப் பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று ஒருவர் மற்றவரை ஓங்கி அறைந்து விடுவார். அடிபட்டவர் கன்னத்தைத் தடவிக் கொண்டு பரிதாபமாக பதில் சொல்வார்.
இன்னொரு விதம். பேசிக் கொண்டே இருக்கும்போது ஒருவர் மற்றவரைத் துப்பாக்கியை எடுத்துச் சுட்டு விடுவார், அல்லது கத்தியால் குத்தி விடுவார். பாக்கெட்டில் தயாராக வைத்துள்ள சிவப்பு மையில் நனைந்த பச்சைச் சட்டையில் அழுத்தியபடி அவர் கீழே விழுந்து சாவார்.
நம்பவே முடியாத அருவருப்பான காட்சிகளும் நிறைய.
நாயக, நாயகியர் ஆர்கெஸ்டிராவுடன் பாடிக் கொண்டே ஓடிப் பிடிப்பார்கள். நாயகன் முழு பேண்ட், முழுக்கைச் சட்டை, பூட்ஸ், தலையில் தொப்பி இத்தியாதி போர்த்தியிருக்க, நாயகிக்கு ரெண்டு கைக்குட்டைதான் கிடைத்திருக்கும். பெரும்பாலும் மேல்பக்கம் மூட வேண்டிய பகுதி பாதிக்கு மேல் திறந்தும், பாக்கிப் பிரதேசம் அநாவசியமாகக் கவராகியும் இருக்கும். நிஜத்தில் எந்தக் குடும்பத்தில் கணவன்-மனைவியர் இப்படி நடந்து கொள்கிறார்கள்?
வில்லன் கூட்டம் பத்துப் பேர் வந்து நாயகியை டீஸ் செய்ய நாயகன் தனி ஒருவனாக அந்தப் பத்துப் பேரையும் அடித்து வீழ்த்துவான். நாயகி அவன் அணைப்பில் பயந்த மாதிரி நடிக்க வேண்டும். சில படங்களில் நாயகி வெட்கப் படுவது போல முகத்தை மூடிக் கொள்வாள். இதுதான் அசல் நடிப்பு - உண்மைக்கு நேர் எதிராக.
பி யு. சின்னப்பா காலம் முதல் இன்றுவரை இந்த அலங்கோலங்கள்..... கேட்க நாதியின்றி, நம் இளைய சமுதாயம் ஓட்டு மொத்தமும் இந்த சினிமா மாயையில் விழுந்து கிடக்கிறது. சுதந்திரப் போராட்டம் பற்றியோ அதில் சர்வபரித் தியாகம் செய்தவர்கள் பற்றியோ விஞ்ஞானிகள், இலக்கிய ஆசிரியர்கள், கவிஞர்கள் பற்றியோ இவர்கள் ஏதும் அறியார்கள்.
இதில் கொடுமை. சில வீடுகளில் பெற்றோரும் இதே மாதிரி கூத்தடித்து தம் மக்களைத் தவறான பாதையில் திசை திருப்பி விடுவதுதான்.
நம் செய்தி ஊடகங்களும் இதில் மிகமிக மோசமாகவே நடந்து கொள்கின்றன. பேட்டிகள் என்ற பெயரில் பக்கம் பக்கமாகவும், நடிகையின் முக்கால் நிர்வாணப் படங்களுடனும் நம் பத்திரிக்கைகள் பிரசுரிப்பதைக் காணும்போது 'ஆஹா வென்பதோ யுகபோ புரட்சி' என்றே வயிற்றெரிச்சல் பட வேண்டியிருக்கிறது. நம்மால் முடிந்தது அவ்வளவுதானே!