ஏதோ ஒரு படத்துல (எதிரி?) மாதவன் (நம்ம maddy73 இல்லை) 'பாட்டில் மணி'யாக வந்து கலக்குவார். இன்றைய (நம்ம கலக்கல்) சமையல், பாட்டில் இட்லி.
இது, நான், டாபர் ஹனி தேன் (காலி) பாட்டில் மற்றும் மைக்ரோ வேவ் ஓவன் துணையோடு வாரத்தில் நான்கு நாட்களாவது செய்து சாப்பிடும் காலை உணவு.
இட்லி மாவு செய்யும் முறை : (சீரியசாகத்தான் எழுதியுள்ளோம்)
ஒரு கப் முழு வெள்ளை உளுந்து, நான்கு (அதே) கப் வெள்ளைப் புழுங்கல் அரிசி. இவைகளைத் தனித் தனியே, சுத்தமான நீரில் ஊறவைக்கவும். அரிசியோடு இரண்டு ஸ்பூன் வெந்தயமும் சேர்த்து ஊற வைப்போரும் உண்டு. (நாங்க எப்பவுமே அப்பிடித்தான் - வெந்தயத்தைக் கொஞ்சம் தாராளமாகவே போடுவோம். - அதாவது நான்கு ஸ்பூன் அளவு)
இந்த தானியங்கள் யாவும் குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் ஊறுவது நல்லது.
'மிக்சி' அரவை வேண்டாம் - முடிந்தவரையிலும் தவிருங்கள். வெட் கிரைண்டர்தான் இட்லி மாவரைக்க ஏற்ற சாதனம். வேறு வழி இல்லை என்றால், (மட்டும்தான்) மிக்சி.
முதலில் ஊறவைத்த அரிசி (வெந்தயக் கலவையை) கிரைண்டரிட்டு, பொறுமையாக, அதிகம் தண்ணி சேர்க்காமல், விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்து ஒரு சிலர், இட்லி மாவு அரைக்கும்போது, ஐஸ் கட்டிகள் போட்டு அரைப்போம் என்று சொன்னார்கள். மாவு அரைக்கும்போது அந்த மாவு சூடாகக் கூடாதாம். அப்பொழுதுதான் இட்லி மிருதுவாக இருக்கும் என்றார்கள். பிறகு ஊறிய உளுந்து அரைக்கப் படவேண்டும்.
அரிசி மாவையும், உளுந்து மாவையும், பிறகு ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்புப் போட்டு கலக்கி, ஒரு பாத்திரத்தில் அல்லது பல பாத்திரங்களில் - முக்கால் அளவுக்குக் கீழே வரும் வகையில் விட்டு, ஒரு இரவு முழுவதும் அப்படியே பாத்திரங்களை மூடி வைத்துவிட வேண்டும். சிலர் அரைத்த மாவை பாத்திரத்துடன், ஒரு குக்கருக்குள் வைத்து குக்கரை மூடி வைக்கலாம் என்கிறார்கள். அப்படிச் செய்தால், மாவு பொங்கும் என்று கூறுகிறார்கள். ஆனால், மாவு பொங்கவேண்டும் என்பதற்காக, ஆப்ப சோடா போன்ற விஷ(ய)ங்களை தயவு செய்து இட்லி மாவில் சேர்க்காதீர்கள்.
இவ்வளவு கஷ்டங்கள் வேண்டாம் என்றால் - கடைகளில் விற்கின்ற அரைத்த மாவை வாங்கலாம். சில பிராண்டுகள் சுமாராக உள்ளன. சில பிரயோஜனம் இல்லை. சிலர் உப்பு சேர்த்து மாவு விற்கிறார்கள். சிலர் உப்பு இல்லாத மாவு விற்கிறார்கள். நான் பயன்படுத்திய அரைத்த மாவு பிராண்டுகளில், குரோம்பேட்டை கடையில் காலை மணி எட்டு நாற்பத்தைந்து மணிக்கு டான் என்று பிரெஷ் ஆக வரும் 'உதயம்' இட்லி மாவு நன்றாக இருந்தது. அதில் உப்பு சேர்க்கப்பட்டுள்ளதாக, வெந்தயம் சேர்க்கப்பட்டுள்ளதாக மேலே கவரில் போட்டிருப்பார்கள். ஆனால் நான் இன்னும் கொஞ்சம் உப்பு சேர்த்துக் கலந்து விடுவேன்.
இட்லி தயாரிப்பில் இதுவரை நாம் பார்த்ததுதான் சற்றுக் கடினமான, சமாச்சாரங்கள். இனி இரண்டு நிமிட இட்லி தயாரிப்பு - இதோ :
நம்முடைய ஆஸ்தான டாபர் ஹனி பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். மூடியை கழற்றிவிடுங்கள். ஒரு கரண்டி இட்லி மாவை அதனுள் ஊற்றுங்கள். பிறகு, பொடியாக நறுக்கிய தக்காளி ஒன்று , நறுக்கிய சாம்பார் வெங்காயம் இரண்டு , அரை பச்சைமிளகாய் - நறுக்கியது, இஞ்சி ஒரு துண்டு, பச்சைப் பட்டாணி பதினான்கு , நிலக்கடலை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, என்று எதெல்லாம் தோன்றுகிறதோ அதை எல்லாம் (அல்லது இவற்றுள் ஏதேனும் ஒன்றிரண்டை மட்டும்) மாவின் மேல் போடுங்கள். அப்புறம் இன்னும் ஒரு கரண்டி மாவு ஊற்றவும். ஒரு ஸ்பூனால் இந்த மாவுக் கலவையை நன்றாகக் கலக்கவும். எல்லாமாகச் சேர்ந்து பாட்டிலின் பாதி அளவுக்குக் கீழே இருக்கவேண்டும். இது மிகவும் முக்கியம்.
இந்த பாட்டில் மாவை அப்படியே மைக்ரோ வேவ் ஓவனுக்குள் வைத்து, (பாட்டிலுக்கு மூடி போடக்கூடாது) அறுநூறு வாட் பவரில் இரண்டு நிமிடங்கள் ஓவனை இயக்கவும். ஓவனை ஆப் செய்யுமுன், பாட்டில் இட்லியின் மேல் பகுதி வெந்திருக்கிறதா - அல்லது ஈர மாவாக இருக்கிறதா என்பது, பார்த்தாலே தெரியும். மேல்பகுதி வேகாமல் இருந்தால், மேலும் அரை நிமிட நேரம் ஓவனில் வைத்து ஓட்டவும். பிறகு ஓவனை 'ஆப்' செய்து, பாட்டிலை வெளியே எடுத்து, மூடி போட்டு, ஐந்து நிமிடங்கள் ஆறவிடவும்.
அதற்கப்புறம்? ஒரு ஸ்பூன் கொண்டு பாட்டிலிலிருந்து அப்படியே - பாட்டில் இட்லியை சாப்பிட்டு மகிழுங்கள்.