JK on listening. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
JK on listening. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22.3.10

ஜே கே 03

கேட்பது குறித்து ஜேகே என்ன சொல்கிறார் என்பது சுவாரசியமானது.
உங்களிடம் ஒருவர் எதையோ சொல்கிறார்.  அதை நீங்கள் எப்படிக் கேட்கிறீர்கள்?  உங்கள் கவனம் அங்கும் இங்கும் அலை பாய்ந்தவாறிருக்க சொற்களைக் காதில் வாங்கிக் கொள்கிறீர்களா?  அல்லது, 'நான் இதை ஒப்புக் கொள்கிறேன்', 'நான் இதை ஏற்க முடியாது', 'ஆமாம், புனிதப் புத்தகங்களில் கூட இதேதான் சொல்லப் பட்டிருக்கிறது', "இன்னொருவர் கூட இதையேதான் சொல்லியிருக்கிறார்' என்பது மாதிரியான எண்ணங்கள் அலைமோதுகின்றனவா? இப்படி மனம் எதையோ ஒன்றைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது உண்மையான கேட்டல் அங்கு நிகழ்வதில்லை.

கேட்பது என்றால் காதுகளைப் பயன்படுத்தி சொற்களை உள்வாங்கிக் கொள்வது மட்டும் அன்று.  உங்கள் முழு ஆளுமையுடனும் நீங்கள் கேட்க வேண்டும். உங்கள் எல்லாப் புலன்களும் மனமும் அதில் பங்கு பெற வேண்டும்.  அப்போது தெளிவு பிறக்கும்.  பேசுபவர், கேட்பவர் இடையே ஒரு நிஜமான பங்குபெறுதல் நடக்க வேண்டும்.  அவ்ரும் நீங்களுமாகச் சேர்ந்து பேசப் படும் விஷயத்துக்குள்ளாகச் சென்று உண்மைகளைக் காண வேண்டும்.  இம்மாதிரியான செயல் உங்கள் அபிப்பிராயங்கள் உங்கள் கேட்டலைத் தடை செய்யும் போது நிகழ்வதற்கில்லை. சொல்பவர், கேட்பவர் என்ற பாகுபாடு அற்றுப் போய் எல்லாம் ஒன்றிய ஒரு முழுமை அந்த சம்பாஷணையில் இருப்பின் கேட்டல் சாத்தியமாகும்.

சம்பாஷணைகள் நடைபெறும் போது ஜேகே வழக்கமாகக் கூறுவது: “பேசுபவருக்குத் தெரியும் - அவர் உங்களுக்குச் சொல்கிறார் என்ற பாணியில் நாம் இங்கே இல்லை.  ஒரு நண்பர் உங்களுடன், உங்கள் கைகளைப் பற்றிக் கொண்டு உங்களுடன் ஒன்றைப் பகிர்ந்து கொள்கிறார். இருவரும் கை கோத்துக் கொண்டு ஒரு புதுப் பிரதேசத்தில் நடக்கிறோம். அங்கே முழு விழிப்புணர்வுடன் பார்த்து அறிகிறோம். இது போன்ற சூழ் நிலைதான் உண்மையான சம்பாஷணைகளில் காணப் பட வேண்டும். ஆமோதித்துக் கொண்டோ, ஆட்சேபித்துக் கொண்டோ மறுத்துக் கொண்டோ இருக்கும் நபர் உண்மையில் எதையும் கேட்பதில்லை.”

 (மேலே கொடுக்கப் பட்டிருப்பது நேரடியான மொழிபெயர்ப்பு அல்ல)

இதைப் படித்த பின் நம் கேட்டல் எவ்வாறிருக்கிறது என்று பார்க்க வேண்டும்.  தான் கூறுவதை சரியாகக் கேட்கும் ஒரு பத்து நபர்கள் கிடைப்பார்களேயானால், சமுதாயம் பலமான மாற்றம் அடையும் என்று அவர் ஒரு சந்தர்ப்பத்தில் 1928.29 வாக்கில் சொல்லி இருப்பது நினைவு கூரத்தக்கது.