உலகெங்கிலும் தற்சமயம் உள்ள நெருக்கடி நிலைமை அசாதாரணமானது. இதற்கு முன் இது போல நிலைமை இருந்ததே இல்லை. சமுதாய ரீதியாக, தேசிய ரீதியாக, அரசியல் ரீதியாக பல்வேறு நெருக்கடி நிலைமைகள் வரலாறின் பல கால கட்டங்களில் ஏற்பட்டிருக்கிறது.
பிரச்னைகள் ஏற்படும், பின் மறையும். பொருளாதார நலிவு, மந்தம் ஏற்படும், பின்பு மாறுபட்டு வேறு விதத்தில் தொடரும். அதை நாம் அறிவோம். அது நமக்குத் தெரிந்த இயக்கம். நிச்சயம் தற்போதய நிலை வேறுபட்டதல்லவா? அது முதலில் மாறுபட்டது ஏனெனில், நாம் பணத்தையோ, பொருளையோ கையாளவில்லை, கருத்துகளைக் கையாள்கிறோம். இந்நெருக்கடி நிலை அசாதாரணமான ஒன்று. ஏனெனில் அது கருத்துக்கள் என்ற வெளியில் நடைபெறுகிறது.
நாம் கருத்துக்களால் சண்டையிடுகிறோம். கொலையை நியாயப் படுத்துகிறோம். உலகெங்கிலும், நியாயமான முடிவிற்குக் கொல்வதை நியாயப் படுத்துகிறோம். இதுவே இதற்கு முன் நடந்ததில்லை. முன்பு தீயதை தீயது என்று நாம் ஒத்துக் கொண்டோம்; கொலையைக் கொலை என்று கூறினோம். ஆனால் தற்போது உயர் நோக்கத்தை அடைய கொலை ஒரு கருவியாகப் பயன் படுத்தப் படுகிறது.
ஒரு மனிதனைக் கொலை செய்வதோ, ஒரு குழுவைக் கொலை செய்வதோ நியாயப் படுத்தப் படுகிறது. ஏனெனில், அக்கொலை மனித சமுதாயத்துக்கு நன்மை பயக்கும் என்று கொலையாளியாலும், அவன் கூட்டத்தினாலும் நியாயப்படுத்தப்படுகிறது. எனவே நிகழ்காலத்தை எதிர்காலத்துக்கு பலியிடுகிறோம்.
மனிதனுக்குப் பயனுள்ளது என்று நாம் கருதும் நம் நோக்கத்தை நிறைவேற்றுவதாக இருப்பின் எவ்வித வழிமுறையை நம் நோக்கத்திற்கு நாம் பயன்படுத்துகிறோம் என்பது நமக்கு முக்கியமல்ல. தவறான வழியினால் சரியான முடிவை உருவாக்குதல் என்பதே இதன் பொருளாகும். நாம் அத்தவறான வழிமுறையை கருத்துக்களால் நியாயப் படுத்துகிறோம். தீயதை, நியாயப்படுத்த கருத்துக்கள் என்ற பிரம்மாண்டமான அமைப்பு நம்மிடம் உள்ளது. நிச்சயம் இதுபோல முன்பு நடைபெற்றதே இல்லை. தீயது எப்போதும் தீயதுதான். அது நன்மையை அளிக்காது. போர் அமைதிக்கான வழியல்ல.
(The Book of Life)