தேவையான பொருட்கள்:
கடலை மாவு : இரண்டு கப்
அரிசிமாவு : ஒரு கப்.
உப்பு, மிளகாய்த்தூள் : தேவையான அளவு. (அரைத் தேக்கரண்டி என்று சொன்னால் கீதா மேடம் சண்டைக்கு வருவார்கள்)
சிலர் மிளகுத் தூள் சேர்ப்பார்கள். (மிளகாய்த்தூளுக்கு பதிலாக)
சன்டிராப் ஆயில் : அரை லிட்டர்.
நிலக்கடலை ஐம்பது கிராம்.
கறிவேப்பிலை ஒரு ஈர்க்கு.
செய்முறை:
கடலை மாவு, அரிசிமாவு இரண்டுக்கும் கலப்புமணம் செய்யவும். சாட்சியாக, எடுத்துக்கொண்ட உப்பில், பாதியைச் சேர்க்கவும். (மீதி உப்பு, காரத்தூள் இவை எல்லாம், காரபூந்தி தயாரானதும், கலக்குவதற்கு தேவைப்படும்) மாவுக்கலவையில், தண்ணீர் விட்டு, பஜ்ஜி மாவு பதத்திற்குக் கரைக்கவும்.
வாணலியில் எண்ணெயை விட்டுக் காயவைக்கவும். வீடியோவில், காரபூந்தி செய் முறையைப் பார்த்துக்கொள்ளுங்கள்.
காரபூந்தியை செய்ததும், சுத்தமான டிஸ்யூ பேப்பரில் போட்டு, சிறிது நேரம் வைத்திருந்தால், எண்ணெய் நன்றாக நீங்கிவிடும்.
காசு மிஞ்சி இருந்தால், முந்திரிப்பருப்பை வாங்கி, கால் பருப்புகளாக ஒடித்து, நெய்யில் வறுத்து, காரபூந்தியில் போடலாம். கறிவேப்பிலையைக் கூட, நெய்யில் பொறித்துப் பொடித்துப் போடலாம்!
இந்த தீபாவளிக்கு காரபூந்தி செய்யுங்கள்!
==========================================
ஏழு நாள் தொடர்:
அன்புள்ள ஆறுமுகம் - ஒன்று
ஆறுமுகத்தின் பத்தினி, அஞ்சலை வெளியிலிருந்து, தன வீட்டிற்குள் வருகின்றாள்.
ஆறுமுகம் மும்முரமாக புத்தகம் படித்துக் (பார்த்துக்?) கொண்டிருக்கின்றார்.
அஞ்சு : "என்னங்க தீபாவளி போனஸ் வந்துடுச்சாமே. பங்கஜம் சொன்னா. பங்கஜம் புருஷன் பரந்தாமனும் உங்க ஆபீஸ்தானே? "
ஆறு: (புத்தகத்திலேயே கவனமாக ...) "உம் .... உம்."
அஞ்சு : :எனக்கு இந்த தீபாவளிக்கு ஜிமிக்கி வாங்கித் தருவீங்களா?"
ஆறு: "ஜிமிக்கி ? ஜிமிக்கி!! ஓ சரி! அப்புறம்?
அஞ்சலைக்கு ஒரே மகிழ்ச்சி. 'ஆஹா இவர் சந்தோஷ மூடில் இருக்கார். இன்னும் வேண்டியவைகளை நிறைய பட்டியல் போடலாம் போலிருக்கே!'
(தொடரும்)