National Flag லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
National Flag லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25.1.10

தாயின் மணிக்கொடி பாரீர்...



நாட்டின் அறுபத்தோராவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. செங்கோட்டையிலும் ஜார்ஜ் கோட்டையிலும் இன்னும் பல இடங்களிலும் கொடி ஏற்றப் படும். கொடி ஏற்றுவதற்கு என்று சில விதிமுறைகள் உண்டு. Flag Code of India 2002 என்று சொல்லப் படும் இது சில விதிமுறைகளை பின்பற்றச் சொல்லி மக்களை கேட்டுக் கொள்கிறது. நமது தேசியக் குறியீட்டுக்கு ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டிய மரியாதைகளைப் பற்றி சொல்கிறது.


நடுவில் வெண்மை நிறத்துடன் மேல் பாகம் காவி நிறமும், கீழ் பாகம் கரும்பச்சை நிறமும் கொண்டது நமது கொடி. நடுவில் அசோகச் சக்கரம்.


1) கொடி ஏற்றப் படும் போது காவி நிறம் மேலே இருக்கும் வண்ணம் ஏற்ற வேண்டும்.


2) வேறு எந்தக் கொடியோ, முத்திரையோ தேசியக் கொடியை விட மேலேயோ, அதற்கு வலது புறமோ இருக்கக் கூடாது.


3 மற்ற அனைத்துக் கொடிகளும் வரிசையாக பறக்க விடப்பட்டால் தேசியக் கொடியின் இடதுபுறம் வரிசையாக பறக்க விடப் பட வேண்டும்.


4) அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும்போது குறிப்பாக மற்ற கொடிகளையும் ஏந்திச் செல்லும் நிலையில், அணிவகுப்பின் முன்னணியிலோ, அல்லது வலது புறமோ தேசியக் கொடியை ஏந்திச் செல்ல வேண்டும். ...


5) சாதாரணமாக தேசியக் கொடிகள் பாராளுமன்றம், ஜனாதிபதி அலுவலகம், உச்ச நீதிமன்றம், தலைமை நீதிமன்றங்கள், தலைமைச் செயலகங்கள், கமிஷனர் அலுவலகங்கள் போன்ற முக்கிய அரசு அலுவலகங்களில் பறக்க விடப் படலாம்.


6) வியாபாரங்களுக்கோ, மற்ற விளம்பர விஷயங்களுக்கோ தேசியக் கொடியை உபயோகிக்கக் கூடாது.


7) சூர்ய அஸ்தமனத்துக்கு முன் கொடி இறக்கப் பட வேண்டும்.


குடியரசு தினம், சுதந்திர தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் தவிர மற்ற நாட்களில் சாதாரண பொது ஜனம் தேசியக் கொடியை எங்கும் ஏற்ற அனுமதி இல்லாமல் இருந்தது. தொழிலதிபர் நவீன் ஜிண்டால் தன்னுடைய அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க, அவர் மேல் கொடி அவமதிப்பு வழக்கு தொடரப் பட்டது. அவரும் தன் உரிமைக்கு வாதாடினார். அந்த வழக்கில் சமீபத்தில் வந்த தீர்ப்பின் படி சில மாறுதல்கள் செய்யப் பட்டுள்ளன. தகுந்த மரியாதைகள் செய்யப் பட்டால் கொடி ஏற்றிக்கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளது. மேலும் இருட்டு இல்லாத இடமாக இருக்கும் படியும், நல்ல ஒளி விளக்குகள் கொடியின் மீது படும் வண்ணமும் வைத்தால் மாலை ஆறு மணிக்குமுன் கொடி இறக்கப் பட வேண்டும் என்ற விதியும் தளர்த்தப் பட்டுள்ளது.


தேசியக் கொடி பற்றி சில சுவாரஸ்ய விவரங்களும் கூடவே தரப் பட்டுள்ளன.


* முதல் முறை அந்நிய மண்ணில் இந்திய தேசியக் கொடி ஏற்றப் பட்டது ஜெர்மனியில்...ஸ்டாட்கராத் என்ற இடத்தில் பிக்காஜி ருஸ்தம் காமா என்ற அம்மையாரால்...1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் நாள்.


* 1953 மே 29 ஆம் தேதியன்று உலகின் உயரமான இடமான எவரெஸ்ட் மலையின் மீது தேசியக் கொடி ஏற்றப் பட்டது.


1984 ஆம் ஆண்டு தேசியக் கொடி விண்வெளியில் பறந்தது..! விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா விண்வெளிப் பயணம் மேற்கொண்ட போது அவரது விண்பயண உடையில் பதக்கமாக அணிவிக்கப் பட்டது