Nigamaanandhaa லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Nigamaanandhaa லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18.7.11

காதல் மீடியா கேஸ் நித்யா நடனம் பொதுஜனம் -வெட்டி அரட்டை


                        
மாண்டலின் ராஜேஷுடன் காதல் முடிந்து விட்டது என்று மீரா ஜாஸ்மின் சொல்லியிருக்கிறாராம். காதல் என்ன கட்டுரையா நாவலா... முடிய? இந்தக் காதல் எல்லாம் எந்த வகையில் சேர்த்தி? அல்லது காதல் ஒரு ஜோக்கா? 
                     
தினமலரில் சமீபத்தில் ரசித்த ஜோக். ராகுல் காந்தி திடீர் திடீரென உத்தரப் பிரதேசத்தில் நுழைந்து ஏர் பிடிக்கிறேன், கூழ் குடிக்கிறேன், ஏழைகளுடன் குடிசையில் தங்குகிறேன் என்று ஃபிலிம் காட்டிக் கொண்டிருப்பதை கிண்டலடிக்கும் ஜோக். "சீக்கிரம் கூழைக் குடிச்சித் தொலை.. ராகுல் அடுத்த தெரு கிட்ட பாத யாத்திரை வந்துட்டாராம்.." நியூஸ் சானல்களுக்கு ராகுல் ஃபாலோ அப் நல்ல தீனி. 
                            
தயாநிதி ராஜினாமா செய்த நாளில் மற்ற அனைத்து சேனல்களும் அதைச் சொல்ல கலைஞர் டிவியில் மட்டும் 'பிரபுதேவா ரமலத் விவாகரத்துக்கு முக்கியத்துவம் தந்த அளவு இதைப் பற்றி ஒரு வரி கூட கிடையாது! தி மு கவுக்கு இரண்டு இடம் நிறுத்தப் பட்டுள்ளது என்கிறது காங்கிரஸ். பிரச்னை இல்லாமல் இருக்க வேண்டுமானால் அவர்களுக்குக் கொடுக்க புதிய துறைகள் உருவாக்கலாம். அறிக்கைத்துறை, சமாளிப்புத்துறை, இப்படி...
                          
"மீடியாக்கள் ராஜ்ஜியம் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் நடக்கிறது... யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம்...தயாநிதி விதிவிலக்கல்ல" என்பது கலைஞரின் கருத்து. கலைஞர் டிவி, சன் டிவி மீடியாக்கள் இல்லையா... இவர்கள் செய்யாததா... இது ஒருபுறமிருக்க இதில் ஓரளவு நியாயம் இருக்கிறது.
                        
சமீபத்தில் அன்னா ஹசாரே பாபா ராம்தேவ் ஆகியோருக்கு மீடியாக்கள் தந்த முக்கியத்துவம் ஒரு யோக்கியமான காரணத்துக்காக (கங்கையைக் காப்பாற்றுங்கள்) இந்த வருடம் பிப்ரவரி முதல் உண்ணாவிரதம் இருந்து யாராலும் கவனிக்கப் படாமல் உயிர் நீத்த சுவாமி நிகமானந்தா பற்றி செய்தி எங்காவது வெளியில் வந்ததா... துக்ளக்கிலும் கல்கியில் ஞானியும் சொல்லியிருக்கிறார்கள். சம்பவம் நடந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் பா ஜ க வும் கண்டு கொள்ளவில்லை, காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை, மீடியாக்களும் கண்டு கொள்ளவில்லை.

ஆனால் எல்லோரும் கண்டு கொண்ட ஆட்டம் ஒன்று உண்டு!   ராம்தேவின் நள்ளிரவு போராட்டக் கலைப்புக்கு கண்டனம் தெரிவித்த நிகழ்வில் பி ஜே பியின் சுஷ்மா ஸ்வராஜ் நடனமாடியது செய்தியாகியதாம். தேசபக்திப் பாடல்களுக்குத்தானே ஆடினேன் என்ன தவறு என்றாராம் அவர்! ஆனால் நடுத்தர மக்கள் உண்மையிலேயே ஆடிப் போய்விட்டார்கள் கேஸ் சிலிண்டர் அநியாய விலை ஏற்ற விவரம் கேட்டு. 
                        
கேஸ் சிலிண்டர்கள் புதிய செய்தி ஒன்று படித்தேன்..வருடத்திற்கு நான்கு சிலிண்டர்கள் இப்போது இருக்கும் விலையில் அதற்கு அப்புறம் வாங்கும் எல்லா சிலிண்டர்களும் சுமார் எழுநூறு ரூபாய் விலையில் வழங்கப் படலாம் என்கிறது செய்தி. பத்மநாப சுவாமிதான் இந்திய மக்களுக்கு அருள் செய்ய வேண்டும்!
                        
பத்மநாப சுவாமியின் நகைப் பொக்கிஷத்தை உலகுக்கு காட்டிக் கொடுத்த சுந்தரராஜன் காலமாகி விட்டாராம். 70+ வயது. இயற்கை மரணமாகத்தான் இருக்கும். இவர் இந்திராகாந்திக்கு ஆலோசகராக இருந்தவராம். கோவிலுக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ள இவர் வீடு நோக்கி தினமும் ஒரு எதிர்ப்பு ஊர்வலம் நடந்ததாம். தெருவில் எதிர்ப்படுவோர் எல்லாம் இவரைத் திட்டிக் கொண்டே இருந்தார்களாம். இனி அதற்கெல்லாம் தேவை இல்லை. அவரை எதிர்த்து குதித்துக் கொண்டு இருந்தவர்கள் அடங்கி விட்டாலும் .... 
              
பிடதி ஆஸ்ரமத்தில் குருபூர்ணிமா அன்று நடந்த நித்யானந்தரின் புவி ஈர்ப்பு விசையை எதிர்க்கும் நிகழ்ச்சி அல்லது நடனம் எல்லா சேனல்களிலும் ஒளி பரப்பப் பட்டது. உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் 'நம்பி' தலையை உயர்த்தி யோகாவின் அரைமண்டியிட்ட போஸில் அப்படியே எழும்பிக் குதிக்கத் தொடங்கியது கண் கொள்ளாக் காட்சி! ரஞ்சியும் இருந்தார். சும்மா இருந்தவர் நித்தியானந்தா சைகை காட்டியதும் அவரும் ஒரு முறை முயற்சித்தார். ஒரு நிருபர் எதிர்த்ததையும் பார்க்க முடிந்தது. உச்சகட்ட பரவச நிலைக்குப் போன ஒரு பெண்மணி அந்தக் கால பாம்பு டான்ஸ் போல ஆடத் தொடங்கி தரையில் விழுந்து நெளிய அருகில் சேரில் அமர்ந்திருந்த ஒரு வயதான பெண்மணி அதைப் பார்த்த பார்வையில் அவர் கேலியாகப் பார்க்கிறார் என்று நம்பத் தொடங்கிய கணத்தில் அவர் உடம்பிலும் அதிர்வுகள் தொடங்கி, பாம்பு டான்சுக்கு ரெடியானதைப் பார்க்க முடிந்தது. தெய்வீகப் பரவச நிலை என்று இதை ஏற்றுக் கொண்டால் கூட - மனிதம் என்பதே சற்றும் இல்லாத சில நிகழ்வுகளையும் வருத்தத்துடன் சொல்லவேண்டி உள்ளது. 
     
ஓரிரு வருடங்களுக்கு முன்னால் அமைச்சர்கள் தலைமைச் செயலர் எதிரிலேயே ஒரு போலீஸ் ஆபீசர் வெட்டிக் கொல்லப் பட்டதைப் பார்த்தோம். உதவி கேட்டு அவர் எழுந்து எழுந்து அலறியும் யாரும் பக்கத்திலேயே போகவில்லை அப்போது. அதே போல ஒரு காட்சி சென்ற வாரம் கோவையில் அரங்கேறியது. 'குடிமகன்கள்' இடையே நடந்த சண்டையில் பைக்கில் மோதி கீழே தளளி அடித்துத் துவைத்து, தலையில் கல்லைப் போட்டு கொல்லுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெரிய கூட்டமான பொது ஜனம்...! cctv யில் ரெகார்ட் ஆனதை சேனல்களில் தமிழ்பட காட்சி போல காட்டிக் கொண்டிருந்தார்கள். பக்கத்திலேயே போலீஸ் ஸ்டேஷன் வேறு இருந்ததாம். ஏன் இந்தக் கொடுமையை பார்த்துக் கொண்டிருந்த பொது ஜனத்தில் ஒருவர் கூட தட்டிக் கேட்கவோ தடுக்கவோ முன் வரவில்லை? சிக்னல் விழுந்ததும் ஏதோ ரோடில் பிச்சை எடுப்பவர்களைத் தாண்டிச் செல்வது போல வாகனங்கள் தங்கள் வேலையைப் பார்க்க விரைந்தது ஏன்? கலிகாலம்.  
                      
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் ...