உலகத் தமிழ் மகாநாடு என்பது தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்களால் நடத்தப் படுமானால் அரசியல் கட்சி பேதம் இன்றி அனைத்து அறிஞர்களும் பங்கு தமிழுக்குப் பெருமை சேர்க்கும் நடவடிக்கைகளுக்கு அடிகோலலாம். முதல்வரின் புகழ் பாட கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பம், கலைமாமணி போன்ற பட்டங்களும் பரிசுகளும் பெற ஒரு குறுக்கு வழி என்று ஆகி விட்டால், அதன் பின் தமிழாவது தமிழ் வளர்ச்சியாவது!
இதுவரை இரண்டு மகாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. கரகம், காவடி ஆட்டம், பொய்க்கால் குதிரை போன்ற தமிழ் நாட்டுப்புறக் கலைகள் கவனத்தை ஈர்த்தது தவிர வேறு என்ன சாதித்தது என்று அறிஞர்கள் சொன்னால் கேட்டுக் கொள்ள தயாராக இருக்கிறோம். கணினியில் தமிழ் விசைப்பலகை ஒருமுகமாக்கவும் தமிழ் எழுத்துக்களுக்கு தர ஒருமைப்பாடு செய்யவும் முயற்சிகள் மகாநாட்டை மீறி நடந்ததாகவே எண்ணுகிறேன்.
ஆட்சி மொழி அந்தஸ்து மத்திய அரசில் தமிழுக்குக் கிடைக்கவேண்டும், நாடாளுமன்றத்தில் தமிழ் மொழி பெயர்ப்பு, தமிழ் பேசும் உரிமை போன்ற சில்லறைத தகுதிகள் தமிழுக்கு என்ன பெருமை சேர்க்க முடியும்? . நீதி மன்றத்தில் தமிழ் வேண்டும் என்கிறார்கள். தமிழ் கலைச் சொற்களை வளப்படுத்த யாரும் ஏதும் செய்ததாகத் தெரியவில்லை. மத்திய அரசு என்றால் வடமொழி, நடுவண் அரசு என்றால் தமிழ் என்று தனித்தமிழ் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள். சென்றிடுவீர் எட்டு திக்கும் கலை செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர் என்று பாரதி பாடினார் என்றால், பிக்காசோ ஓவியங்களை திருடிக் கொண்டு வந்து இங்கு வைப்பது அல்ல, வேற்று மொழியிலிருந்து கலைச் சொற்களை கொண்டு வருவது என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?
குருணை தவிர்த்துக் குத்திய நெல்லே,
கருணாநிதியே கவிகளின் அரசே,
உதவிக்கு முந்தும் உத்தமத தலைவனே
பதவிக்கு வந்தும் பாங்குகள் செழிப்போனே
ஸ்டாலின் என்றொரு தத்துவப் பேழையில்
ஸ்டேஇன் செய்ய வந்தது தமிழே
கனிமொழி என்றொரு கவிக்குயில் போன்று
இனியொரு மேதை இனியும் வருமோ
என்ற பாணியில் புகழ் பாட ஒரு சந்தர்ப்பமாக இது அமையலாம்.
எம் ஜி ஆர என்ற ஏழை பங்காளனுக்குப் பின்
எஞ்சிய தர்மம் யாவும் ஏற்றமாய்ச் செய்ய
வயதறியா வள்ளண்மை வாய்த்த செல்வியே
ஜெயலலிதா வேவாழ்க நின் கொற்றம்
எனப் பரணி பாடி பரிசு வாங்கலாம். கலை மாமணி, கவிக்கோ போன்ற பட்டங்களும், இயல் தமிழ் விருதுகளும் பண முடிப்பும் பெறலாம். மற்ற படி தமிழ் வாழ, வளர என்ன செய்யவேண்டும் என்ற ஆய்வுக்குக் கூட அவகாசம் அளிக்காமல், தேர்தலுக்கு முன் காண்ட்ராக்ட்டில் காசு பார்க்கும் உரிமம் யாருக்கு என்று ஏலம் விடலாம்.
புற நானூற்றில் பூரி மசால் என்று ஆராய்ச்சி செய்வதில் பொருள் இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும்.
K.G.Y.Raman