எல்லோருக்கும் சாப்பாடு என்பது முக்கியமான சமாச்சாரம். தஞ்சாவூர் ஜில்லா வாசிகளுக்கு வித விதமான் சமையல்களில் மிகுந்தஆர்வம் உண்டு. சமையலுக்கு உப்பு புளி பண்டங்களைத்தவிர சமையலறையும் சமையல் அடுப்பும் மிக இன்றிமையாதது. தஞ்சை வட்டாரத்து வீடுகளில் சமையல் அறை அமைப்பே அதன் முக்கியத்வத்தை தெள்ளென விளக்கும்.
1950களில்; வீடுகளில் மண் அடுப்பே அதிகளவில் உப்யோகத்தில் இருந்தது. பொங்கலுக்கு முன்பு பழைய அடுப்பை உடைத்துவிட்டு புதிய அடுப்பை புழக்கத்திற்கு கொணர்வர். மண் அடுப்பே மிகுந்த கலை நயத்துடன் இருக்கும். தனி அடுப்பு,கொடி அடுப்பு என் வகை வகையாக செய்வர்.விறகு வைக்க ஏதுவாகவும், பாத்திரங்கள் வைக்க முண்டுகளுடன் அம்சமாயிருக்கும். அதை முதல் நாளே மெழுகி கோலமிட்டு காலையில் குளித்தபின்தான் நெருப்பேற்றுவர். காப்பி போடுவதற்கு இதை உபயோகிக்கமாட்டார்கள். காலை மூட்டிய அடுப்பு இரவு உபயோகித்த பின் நீர் தெளித்து சுத்தம் செய்யும் வரை கனன்றுகொண்டிருக்கும். வைணவர்கள் தளிகை செய்வதற்கான சடங்கு செய்யாமல் ச்மையல் அறைக்குள் வீட்டு பெண்டிரைக்கூட அனுமதிக்க மாட்டர்கள். சுத்தம் என்பது சம்ப்ரதாயத்துடன் இணைந்து கோலோச்சியது.
மண் அடுப்பிற்கான விறகு வாங்குவது, சேமிப்பது, உபயோகிப் பது எல்லாமே கடினம். வைப்பதற்க்கு பெரிய இடம் வேண்டும். மழை காற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும். தேவையான அளவிற்கு வெட்டவேண்டும். எப்படி அதை உபயோகித்தோம் என்று இப்போது மலைப்பாயிருக்கு.
கரி உபயோகித்து நிதானமான சூட்டில் சமையல் செய்ய குமுட்டி சிறிய அளவில் உபயோகப்பட்டது. இது மண்ணாலோ அல்லது இரும்பினாலோ ஆனது.
காலப் போக்கில் மண் அடுப்பு மாறி கெரஸின் ஸ்டவ் உபயோகத்திற்கு வந்தது. அதிலும் திரி ஸ்டவ் மற்றும் பம்ப் ஸ்டவ் என இரு வகை உண்டு. திரி ஸ்டவ்வில் திரி மாட்டுவது பெரிய காரியம். சரியான சைஸ் திரி பெரும்பாலும் கிடைக்காது. அதை மாட்டுவதற்குள் கை கொப்பளித்துவிடும் பம்ப் ஸ்டவ்வில் கெரஸினும் காற்றும் சரி அளவில் பொருந்தி எரியும் வரை பகீரத ப்ரயத்தனம்தான். ஸ்டவ் உயரத்திற்கு தலையை குனிந்து கொண்டு ஸ்டவ் நாசிலை (nozzle) ப்ரத்யேகமான ஊசியால் க்ளீன் செயவது "கடினம் "என்பது மிக சுலபமான வார்த்தை.
பின், ரோலிங் மில் உபயத்தால் எங்களூரில் உமியை கிட்டித்து மூட்டும் உமி அடுப்பு புது வரவானது. அந்த உமி , ஆணியை பாலிஷ் செய்ய உபயோகித்தபின் ரீ-சைக்ளிங்காக உபயோகமானது. எல்லோரும் உப்யோகிக்க ஆரம்பித்தபின் டிமாண்ட் ஜாஸ்தியானதால் மில்லில் ப்ரச்னை உண்டாகி அதன் உப்யோகம் நிறுத்தப்பட்டது.
அதன் பின் நெய்வேலியிலிருந்து லீக்கோ கரி அடுப்பு. நாகையில் கிருஷ்ணமூர்த்தி ஸாஸ்த்ரிகள் ஏஜன்ஸி எடுத்து மார்கட் பண்ணினார். அதன் சூடு மிக அதிகம் அதனால் பாத்திரங்களின் ஆயுள் குறைகிறது என்ற காரணத்தால்/புரளியால் அது பாப்புலராகவில்லை.
காஸ் அடுப்பு எல்லாவற்றிற்கும் தீர்வாக அமைந்தது. அரசாங்க ஆதரிப்பால் மள மளவென எல்லோர் வீட்டிலும் இடம் பெற்றது. ஃப்ளாட்கள் பெருகியதற்கு இதன் பங்கு மிக அதிகம். இந்தத் தலைமுறையினர் பெரும்பாலோருக்கு காஸ் அடுப்புக்கு முன் எப்படி சமைததார்கள் என்பதே தெரியாது. அந்த காலத்திய சாதனங்களான கோடாரி, ஊதுகுழல், சாமணம், திரி நாடா பற்றி தெரியாது. எலெக்ட்ரிக் அவன, மைக்ரோவேவ் அவன், இண்டக்க்ஷன் ஸ்டவ் என பல மார்க்கட்டில் இப்போது வந்துவிட்டாலும் காஸ் அடுப்புதான் ராஜா.
உள்ளூரில் கிடைக்கும் மண், விறகு, சுள்ளி இவை சிக்கலில்லாத எரி தேவை தீர்வு. அவசரம் என்பது இல்லாமல். உணவில் ருசிக்கு, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அதிகம் தரவேண்டும். இன்றும் மண் அடுப்பில், மண் பானையில் செய்த சமையலுக்கு ருசி அதிகம் என்று சொல்லும் ஆர்வலரகள் உள்ளனர்.
நாகையில் இசக்கியாப்பிள்ளை உணவகம் மேற்கு வீதியில் இருந்தது. அதில் மண்பானை சமையல் என்றே போர்டு வைத்திருந்தார்கள். ஹோட்டல் இன்றும் இருக்கிறது. ஆனால் மண்பானை சமையல்தான் இல்லை.
அன்புடன்
ரங்கன்