--------- பாஹே எழுதுகிறார் ------------
தமிழ் எழுத்துத் துறையில் நவீன எழுத்துக்கு வித்திட்டவர் 'கல்கி' அவர்களே.
அவரின் நினைவு தினம் டிசம்பர் ஐந்து.
1954 இல் மறைந்தார். அதற்குமுன் சுமார் பதினைந்து ஆண்டுகள் தமிழில் பல சாதனைகளைப் படைத்தவர்.
அவரால் உருவானவர்கள் பின்னால் பிரபலத்துவம் பெற்ற பல எழுத்தாளர்கள். பலர் ஏகலைவர்களாக எழுத்துத் துறைக்கு ஈர்க்கப் பட்டவர்கள்.
துவக்கக் காலத்தில் ஜெமினி வாசனுடன் இணைந்து பணியாற்றினார். விகடன் ஆசிரியராக இருந்து பின்னர் கருத்து வேறுபாட்டில் இருவரும் பிரிய நேரிட்டாலும் அதிலும் கண்ணியம் காக்கப் பட்டது. ஜெமினி நிறுவனம் 'சம்சாரம்' படம் வெளியிட்டபோது அதைத் தாக்கி விமர்சித்தார் கல்கி. நட்பு இதற்குத் தடையாக இருக்கவில்லை.
1940 வாக்கில் 'கல்கி' பிறந்தது. தமிழில் நளினமான நகைச்சுவையைக் கையாண்டவர் 'கல்கி; அதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே எழுதிக் கொண்டிருந்த பலரைத் தமிழிலும் எழுத வைத்தவர். முக்கியமானவர் எஸ்விவி.
கருத்து வேறுபாடுகள், கட்சி மாற்சர்யங்களை மீறி, பாராட்ட வேண்டியவர்களை வஞ்சனையின்றிப் புகழ்ந்த பெருந்தன்மை அவருடையது.
சி என் அண்ணாதுரையின் 'ஓர் இரவு' படம் வெளியான போது 'தமிழ்நாட்டின் பெர்னார்ட் ஷா' என்று அவரைப் புகழ்ந்தார்.
மஹாகவி பாரதிக்கு எட்டையபுரத்தில் மணிமண்டபம் எழுப்ப தம் எழுத்துலகச் செல்வாக்கை முழுதும் பயன்படுத்தி பலரையும் அதில் ஈடுபட வைத்தார்.
விடுதலைப் போராட்டக் காலத்தில் அவருடைய பங்குப் பணி கணிசமானது.
காந்திஜியின் அஹிம்சையை வழிமொழிந்தது போலவே நேதாஜியின் ஆயுதப் போராட்டத்தையும் புகழத் தெரிந்தவர்.
'ரட்லம் ஜங்க்ஷன்' என்ற சிறுகதையில் நேதாஜியின் மர்ம முடிவு பற்றி பூடகமாக எழுதி அவருக்குத் தன் அஞ்சலியைச் செலுத்தியவர். படித்திராதவர்கள் இதை அவசியம் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும்.
ராஜாஜியின் அதி தீவிர ஆதரவாளர்; இதனால் பலரின் விரோதமும் சம்பாத்தியம்.
முப்பதுகளில் ராஜாஜி திருச்செங்கோட்டில் தங்கி ஹரிஜன முன்னேற்றத்துக்கு உழைத்தபோது தீண்டாமை ஒழிப்பாக 'விமோசனம்' இதழில் ஆசிரியப் பொறுப்பேற்றுத் திறம்பட நடத்தியவர்.
வரலாற்றுப் புதினங்களின் முன்னோடி.'சிவகாமியின் சபதம்', 'பொன்னியின் செல்வன்', 'மோகினித்தீவு', போன்றவற்றோடு 'கள்வனின் காதலி' போன்ற சமூக நாவல்களும் படைத்தார். இக்கதை படமாயிற்று. சிவாஜி, பானுமதி நாயக, நாயகியாக நடித்தவர்கள். "வெயிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு" என்ற பானுமதியின் பாடல் அப்படத்தின் சிறப்புகளில் ஒன்று.
எம் ஜி ஆர் பின்னாளில் பெரும் பொருட்செலவில் 'சிவகாமியின் சபதம்' அல்லது 'பொன்னியின் செல்வன்' இரண்டில் ஒன்றைப் படமாக்க திட்டமிட்டது ஏனோ நிறைவேறவில்லை.
திரு வி க வின் மாணவர் கல்கி. அவர் பத்திரிகையின் பெயரே தன் ஆசிரியர் பெயரை முன்னிறுத்தியது என்றும் ஒரு செய்தி உண்டு. இதற்கு மறுப்பும் உண்டு.
ஆனந்த விகடனில் அக்கால அட்டைப் படங்கள் ஒரு நகைச்சுவைத் துணுக்கோடுதான் வெளிவந்தன. அதை முதல் முறையாக மாற்றி 'கல்கி'யின் உருவம் தாங்கி அவர் மறைவை ஒட்டி விகடனில் வாசன் மனம் உருகி எழுதிய அஞ்சலிக் கட்டுரை 'நெஞ்சு நிறைந்த துயரத்துடன் இதை எழுதுகிறேன்' என்று துவங்கும். எப்போதும் அட்டையில் சிரிப்புடன் இருக்கும் 'விகடன் சிம்பல்' அவ்விதழில் கண்ணீர் சொரிந்து காட்சி தந்தது.
குற்றால முனிவர் டி.கே.சி யுடன் கல்கிக்கு ஆழ்ந்த நட்பு உண்டு. ஆச்சிக் கை தோசை பற்றி நிறைய புகழ்ந்து எழுதி இருக்கிறார்.
எம் எஸ் திரைவானில் ஜொலிக்க ஆரம்ப வித்திட்டவர்களில் கல்கி முக்கியமானவர். அக்கால கல்கி இதழ்களில் தவறாமல் ஒரு கால் பக்க விளம்பரம் இருக்கும். பம்பாய், கல்கத்தா, புது டெல்லி தமிழ்ச் சங்கங்களின் வளர்ச்சிக்காக எம் எஸ் உதவும் கச்சேரி பற்றியவை அவை. வேறு பல பொதுநல அமைப்புகளுக்கும் தன் இசையால் உதவியவர் எம் எஸ் என்றால், அதை உலகறியச் செய்தவர் கல்கி.
எம் எஸ் தன் 'மீரா' பட வருவாய் முழுக்க கல்கி இதழின் வளர்ச்சிக்கே துவக்கக் காலத்தில் கொடுத்து உதவியதும் வரலாறு.
கல்கி வளர்ச்சிக்கு சதாசிவம் உழைப்பும் கணிசமானது.
குறைந்தபட்சம் 'அது ஒரு பொற்காலம்' என்ற கி ராஜேந்திரனின் நூலையாவது படிப்பவர்க்கு மேற்காணும் தகவல்கள் கிடைக்கக் கூடும். இதை எழுதுகிறவனின் தகப்பனார் காலமான தேதி 1954, அக்டோபர் 24; இவனின் ஸ்வீகார ஞானத் தந்தையான கல்கி அடுத்த நாற்பத்திரண்டு நாளில் காலமானபோது இவன் அனுபவித்தத் துயரம் மிக அதிகம்.
எழுத்துலகப் பிதாமகனுக்கு எழுத்துலக ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்துவோம். நமக்கு அது ஒரு நன்றிக் கடன்.
கல்கி வாழ்கிறார். வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


