தொலைக்காட்சியில் வெண்ணிற ஆடை மூர்த்தி & வடிவேலு பங்கு பெறும் நகைச்சுவை காட்சி ஒன்று வந்துகொண்டிருந்தது. வெ ஆ மூ, வடிவேலு வாய் திறக்கும் பொழுதெல்லாம், அவர் பேசும் வார்த்தைகளைக் கொண்டே அவரிடம் கேள்வி கேட்டு மடக்கும் காட்சி. (டேபிளைக் கண்டுபிடித்தது யாரு, டேபிள் ஃபேன் கண்டுபிடித்தது யாரு') என்று கேட்டு கலாய்க்க, வடிவேலு, 'ஐயோ போதும்பா' என்று அலறிக் கொண்டு ஓடும் காட்சி. எல்லோரும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த அந்த வேளையில் ...
மாமா ஃபோன் செய்தார்.
"ஆதித்த கரிகாலன் தலைப்புல வந்த புத்தக அறிமுகம் எழுதி இருந்தது படித்தேன்... நன்றாக இருந்தது... மர்மங்கள் என்ன என்று சொல்லாமல் நிறுத்தியிருப்பது நல்ல காரியம்...."
"நீங்க படிச்சீங்களா மாமா..?" ஏனென்றால் அவர் இதெல்லாம் படிக்கும் பழக்கங்கள் இல்லாதவர்.
"இல்லை.... எனக்கு அபபடி ஃபோன் வந்தது... "
"யார் ஃபோன் செய்தது?"
"நீ கண்டுபிடி.."
"எனக்கு எப்படித் தெரியும்... நீங்களே சொல்லுங்க..."
"உங்கள் பையன், பொண்ணுன்னா படிக்க மாட்டாங்க.... மேலும் சொல்லணும்னா என் கிட்டயே சொல்லிடுவாங்க..."
"என்னைக் கேட்கறியா... இல்லை பதிலா"
"பிரகாஷ்.."
"இல்லை... ஒரு சான்ஸ் போச்சு... கேள்வி கேளேன்... கேள்வி கேட்டு கெஸ் பண்ணு"
"இந்த ஊரா... வெளியூரா..."
"இப்போ வெளியூர்..." அப்போ உள்ளூர்தான், இப்போ வெளியூர் போய் இருக்கார் என்று கொள்ள வேண்டுமா அல்லது வேறு அர்த்தமா... கேட்காமல் தொடர்ந்தேன்.
"என்னையும் தெரிஞ்சவங்க என் கிட்டயே பேசியிருப்பாங்க.... உங்களை நல்லாத் தெரிஞ்சு என்னை லேசாத் தெரிஞ்சிருந்தா உங்க கிட்ட சொல்லியிருப்பாங்க..."
"எதாவது சொல்றியா... நீயே பேசிக்கிறியா.. எப்படியும் ரெண்டாவது சான்சும் காலி"
"விடுங்க மாமா... யாரோ சொன்னாங்க... அவ்வளவுதானே... அந்த அளவு போதும்.."
"......... " மௌனம்.
"சந்திர சேகரா...." அது அவர் மச்சினர்.
"இல்லை... மூணாவது சான்சும் காலி"
"விடுங்க மாமா... நான்தான் யார்னு தெரிய வேணாம்கறேன் இல்ல..."
"அதென்ன.. காசா பணமா... இன்னும் ரெண்டு சான்சஸ்தானே... ட்ரை பண்ணு"
டக் டக்கென வேறு இரண்டு பெயர்கள் சொல்லி 'கிச்சானை'க் காலி செய்தேன்.
அப்புறமும் விடை சொல்லவில்லை. சொல்லமாட்டார்! அவர் கேள்வி மட்டும்தான் கேட்பார்!
"கேள்வி கேக்கறதுன்னா என்ன பயம் உனக்கு.... எப்படிக் கேள்வி கேட்டு பதிலை வாங்கறதுன்னு கத்துக்கணும்டா...".
வேறு ஏதோ பேசி விட்டு விஷயங்களை எங்கெங்கோ தொட்டுப் பேசிய போது வந்த ஒரு க்ளூவில் ஒரு பெயர் சொன்னேன்.
"தப்பாச் சொல்லும்போதெல்லாம் தப்பு, தப்புன்னு சொன்னேன்... சரியாச் சொல்லும்போது சரின்னு சொல்லிடறதுதானே நியாயம்..."
"உங்க விருப்பம் மாமா..." மேற்கொண்டு கேள்விகளில் மாட்டிக் கொள்ளாதிருக்க முடிந்தவரை ஜாக்கிரதையாக பதில் சொன்னேன்.
"ஓகே...கரெக்ட்..." அப்புறம் அவர் எதற்கு ஃபோன் செய்யும்போது இதைப் பற்றி என் பேச்சு வந்தது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்த போது என்னை அறியாமல் மீண்டும் ஒரு கேள்வி வந்து விழுந்துவிட்டது!
"அவர் உங்களுக்கு என்ன வேண்டும்... எந்த ஊர்ல இருக்கார் இப்போ..?"
"உனக்கு அஞ்சு சான்ஸ்..."
"மதுரை.."
"இப்போதானே சொன்னேன்... எடுத்த உடனே விடையைச் சொல்லலேன்னா அடிக்கவா போறேன்.... கேள்வி கேட்டு கெஸ் பண்ணிச் சொல்லு..."
"அவர் எந்த ஊர்"
"உதைக்கப் போறேன்.."
"நம்ம ரிலேஷன்ஸ் யார் இருக்கா அந்த ஊர்ல.."
"அவர்தான்... அவர் நம்ம ரிலேஷன்தானே..."
"சரி... அந்த ஊர்ல என்ன ஸ்பெஷல்..."
"கேலண்டர்...."
"சிவகாசி.."
"ஓகே.... எப்படியோ உடனே சொல்லிட்டே...."
"மாமா... கேள்வியா கேக்காம பேசலாமா...?"
"நீ மட்டும் கேள்வி கேக்கலாமா?"
"நீங்க கேள்வி கேட்டுட்டு யாருக்குமே நீங்க பதிலே சொன்னதில்லையா மாமா..."
"ஏன் சொல்லணும்? பதிலை நீங்க தேடணும்... அப்போதான் அது மனசுல நிற்கும்..."
"உங்களுக்கு பதில் தெரியாதுன்னு வச்சிக்கலாமா...?"
"வச்சிக்கோ... நஷ்டம் எனக்கு இல்லை... உன் கேள்விக்கு ஒரு பதில் சொல்றேன். ஒருத்தருக்கு பதில் சொல்லியிருக்கேன். அதுவும் வேற வழியில்லாமன்னு வச்சிக்கலாம்.. ம்... சொல்லப் போனா ரெண்டு பேருக்குச் சொல்லியிருக்கேன்.."
"அட....! யார் அது?"
"ஐ... அதெப்படி நான் சொல்வேன்? உனக்கு அஞ்சு சான்ஸ்..."
"ஐயோ! நான் வரலை இந்த விளையாட்டுக்கு..."



