இது எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்லிவிட முடியாது.
எவ்வளவு பேருக்குப் பிடிக்கவில்லையோ, அவ்வளவு பேருக்குப் பிடிக்கவும் பிடிக்கும்!!!
இது என் அம்மா மிக எளிதாக, எளிமையான ஒன்றாக மோர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள ஒரு காலத்தில் செய்து கொடுத்தது. மிக நீண்ட இடைவெளிக்குப்பின் சில வருடங்களுக்கு முன்னால் மீண்டும் செய்து கொண்டேன்.
என்
பாஸுக்கு பூண்டுப்பொடி - பூண்டு வாசனை - முன்னால் எல்லாம் பிடிக்காது.
ஆனால் இப்போது பூண்டின் மருத்துவ குணங்களுக்காக வேண்டி பூண்டு ரசம்,
போன்றவற்றை சாப்பிடுகிறார் என்றாலும், இந்த அளவு பூண்டு வாசனை பிடிக்காது .
சென்னை பித்தன் ஸாரும் இதற்கு எதிர்ப்பாளர் என்று நினைக்கிறேன்!
சரி, கதை போதும். செய்முறைக்கு வருகிறேன்!
நாட்டுப்
பூண்டு எடுத்துக் கொள்ளவும். மலைப்பூண்டில் வாசனை இருக்காது. பூண்டை
உரித்துக் கொள்ளவும். எந்த அளவு பூண்டு உரித்துக் கொள்கிறீர்களோ, அதைப்
போல மூன்று மடங்கு காய்ந்த மிளகாய் எடுத்துக் கொள்ளவும்.
மிளகாயை
முதலில் மிக்ஸியில் இட்டு லேஸாக அரைத்துக் கொண்டு பின்னர் பூண்டையும்
போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
அதை
அப்படியே ஒரு கிண்ணத்தில் உருட்டி வைத்துக் கொண்டால், மோர் சாதத்துக்கு,
(அட, தயிர் சாதத்துக்கும்தான்!) மற்றும் இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ளலாம்.
இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ளப் போட்டுக் கொள்ளும்போது சிறிதளவு நல்லெண்ணெய்
இட்டுக் குழைத்துக் கொள்ளலாம்.
சிலர் மிளகாயை
வறுத்துக் கொள்வார்கள். சிலர் இலேஸாக புளி சேர்ப்பார்கள். சிலர்
கொஞ்சூண்டு வெல்லம் சேர்ப்பார்கள். சிலர் பூண்டைக் கூட வதக்கிக்
கொள்வார்கள். ஆனால் நாங்கள் இதில் எதுவுமே செய்வதில்லை. மேலே
சொல்லியிருக்கும்படி..
அவ்வளவே...!
பிடித்தவர்கள் செய்து பார்த்துச் சொல்லுங்கள்.
சகோதரி ஏஞ்சலின் எங்கள் ப்ளாக் ரெசிப்பிகளை அவ்வப்போது செய்து பார்த்துப் பகிர்ந்துகொள்வது பார்க்கும்போது, படிக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. நன்றி! சேனைக் கிழங்கி கோப்தா, தேங்காய் சாதம் போன்றவற்றை செய்து பார்த்துப் பகிர்ந்திருந்தார்.
