முன்கதைச்சுட்டிகள்...! [ 1 ], [ 2 ]
[ 3 ]
அப்பா பேத்தியை இழுத்து பக்கத்தில் அணைத்துக் கொண்டவர் அவளுக்கு எடுத்து ஊட்டினார். பவானி பதிலுக்கு எடுத்து அவருக்கு ஊட்டியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. திட்டமிட்ட காட்சியில் கடவுளின் கருணையும் கிடைத்தாற்போலத் தோன்றியது. சட்டையைத் தளர்த்திக் கையை மடக்கி விட்டுக் கொண்டவர் சாப்பிடத் தொடங்கினார். என் கண்கள் கலங்குவதை என்னால் கட்டுப் படுத்தவே முடியவில்லை.
'அப்பா......'
கை கழுவ வந்த பவானியிடம் "கை கழுவிட்டு உன் ரூமை தாத்தாவுக்குக் காட்டப் போறியா " என்று உற்சாகமாகக் கேட்பது போலக் கிளப்பி விட்டேன்.
குழந்தைக் கச்சிதமாக நான் நினைத்ததைச் செய்தாள். சாப்பிட்டு விட்டு உட்காரப் போனவரைக் கையைப் பிடித்து மாடிக்கு இழுத்தாள். முதலில் மறுத்தவர் மெல்ல ஆவலுடன் மாடி ஏறினார்.
கீழே கதவைத் தாளிட்டு விட்டு நானும் தொடர்ந்தேன். எப்படித் தொடங்குவது என்ற குழப்பங்கள் விலகி, காட்சிகள் ஒவ்வொன்றாக அமையத் தொடங்குவது சந்தோஷம் தந்தது. என்றாலும் இப்போது எப்படித் தொடங்குவது என்ற சிந்தனைக்கும் சற்று நேரத்திலேயே விடை கிடைத்தது.
மாத்திரை!
கரெக்ட்.... நேற்றே அப்பாவுக்குத் தேவைப் படும் என்று வாங்கி வைத்திருந்த சர்க்கரை மாத்திரை, ரத்த அழுத்த மாத்திரை!
மேலே வந்தவர் "குழந்தைக்கு தனி ரூமா..... என்னம்மா இது... உங்களுடன் படுக்க மாட்டாளா..." என்றார். அவர் குரலில் லேசான காரம் இருந்தது. அதில் குழந்தைப் பாசத்துக்கும் மேலாக என் கணவரின் மேல் குற்றம் காணும் தன்மை தெரிந்தது!
மனதுக்குள் புன்னகையுடன்,
"இல்லப்பா.... எங்களுடன்தான் படுப்பா.... அவ ரூம்னு அவ சொல்றது அவளோட ப்ளேயிங் ரூம்.... அதோ....! இதோ இருக்கறது எங்க பெட்ரூம். மூன்று பேரும் அங்கதான் தூங்குவோம். இடது பக்கம் இருக்கறது அவர் ரூம். அந்தப் பக்கம் வலது பக்கம் இருக்கறது என் ரூம்... பகலில் நான் என் ரூமிலும் அவர் அவர் ரூமிலும் செலவு செய்யும் நேரங்கள் உண்டுப்பா....."
பவானி ரூமுக்குள் சென்று அவள் விளையாட்டு சாமான்களைக் கண்டவர் புன்னகைத்தார். எதிர்பார்த்தேன். சிறுவயதில் என் அறையை அவர் அமைத்திருந்தது போலவே அமைத்திருந்தேன்.
'கிளைக்கொமேட்' மாத்திரையையும் 'லோசார் ஏ' மாத்திரையையும் எடுத்து அவர் கையில் ஒரு தம்ளர் தண்ணீருடன் தந்தேன். அவர் கண்ணில் வியப்பு தெரிந்தது. வியப்பு கேள்வியாக மாறி சந்தேகம் தெரிந்தது அவர் கண்களில். "எப்படித் தெரியும் உனக்கு இது?"
நான் அங்கு இருக்கும்போது அவருக்கு எந்த நோயும் இல்லை. அப்புறம் வந்த காலங்களில் ஒரு நாள் அவருக்கு லேசான மயக்கம் வந்து டாக்டரிடம் சென்ற பின் சாப்பிட நேர்ந்த மாத்திரைகள் இவை.
"சொல்றேன்பா....."
கொஞ்ச நேரம் விளையாடிய பவானி தூங்கி விழத் தொடங்க, "வாங்கப்பா.... இவளை என் ரூமுக்குச் சென்று படுக்க வைக்கலாம்" என்று பவானி அருகில் செல்வதற்குள் அப்பா அவளைப் பூப்போலத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு ரெடியானார். இந்த சின்னச் சின்ன செயல்கள் என் நெஞ்சத்தை விம்மச் செய்தன. முத்துக்குமாருக்கு மானசீகமாக நன்றி சொன்னேன்.
யார் என்கிறீர்களா.... என் காதல் கணவன்.
என் அறைக்குள் சென்றதும் குழந்தையை என் படுக்கையில் விட்டவர் திரும்பி அந்த அறையைப் பார்த்தவர் பேசாமல் நின்று விட்டார். மூன்று பக்கங்களிலும் அப்பாவின் பெரிய பெரிய படங்கள். திரும்பத் திரும்ப அவற்றை உற்றுப் பார்த்தவர் என்னைப் பார்த்துத் திரும்பியபோது அவர் கண்களில் சந்தேகம், கோபம், குழப்பம் எல்லாம் தெரிந்தது. ஏனென்றால் அவை எல்லாம் அவரின் சமீப காலப் புகைப் படங்கள்.
"என்னம்மா இது.... எனக்கு ஒண்ணும் புரியலையே..... என்ன நடக்குது.... இந்தப் படங்கள் எப்படி உன்கிட்ட....?"
"அப்பா.... " மேலே பேச முடியாமல் என் கண்களில் நீர்த் திரையிட்டது. அவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். கை காட்டி விட்டு எழுந்து போய் தண்ணீர் எடுத்து நிதானமாகக் குடித்தேன். கோபமாக இருந்தாலோ துக்கம், அழுகை வந்தாலோ என்னை சமனப் படுத்திக் கொள்ள அப்பாவும் பாட்டியும் சொல்லிக் கொடுத்திருந்த வழிதான் அது.
திரும்ப வந்து அவர் எதிரில் அமர்ந்தேன். என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். கை நகங்களைப் பார்த்தபடி கொஞ்சம் நேரம் சும்மா இருந்தேன்.
'எங்கு ஆரம்பிப்பது?'
"என்னம்மா... யார் இந்தப் படங்கள் உன் கிட்டக் கொடுத்தது? நான் இந்த மாத்திரை சாப்பிடறேன்னு உனக்கு எப்படித் தெரியும்?"
"அதான்பா..... எங்க ஆரம்பிக்கறதுன்னு யோசிக்கறேன்.... நான் ஒருத்தரை விரும்பறேன்னு நான் சொல்றத்துக்கு முனாடியே நீங்க அதைத் தெரிஞ்சிகிட்டீங்க.... உங்கள் ஆளுங்க ராஜப்பாவும், சாமியும் உங்க கிட்ட சொல்லி, நீங்களும் விசாரிக்க ஆரம்பிச்சீங்க... நமக்குள்ள வாக்குவாதமும் ஆரம்பிச்சுது. அப்பா.... அம்மா செத்துப் போனப்புறம் சின்ன வயசுலேருந்தே பாட்டியும் நீங்களும்தான் என்னை வளர்த்தீங்க.... "
"அதுக்குத்தான் நீ...." ஆரம்பித்த அப்பாவை இடைமறித்தேன்.
"அப்பா ப்ளீஸ்.... நான் கொஞ்சம் சொல்லிடறேன்... அப்புறம் கேளுங்க.. எனக்காக நீங்க வேற கல்யாணமே பண்ணிக்கலை... எனக்காகன்னு நான் நினைச்சாலும் அம்மாவை நீங்க எந்த அளவு நேசிச்சீங்கன்னு பாட்டி சொல்லியிருக்கா.. ஆனாலும் உங்களுக்கு என்னை கவனிக்க நேரம் கம்மியா இருந்ததுப்பா.... உங்க பிசினஸ் உங்களை முழுசும் பிடிச்சு வச்சிருந்தது.. என்னுடைய தேவைகளைப் பார்த்துப் பார்த்து செஞ்சாலும் உங்க கிட்ட வேலை செஞ்சவங்க மூலமாத்தான் அதெல்லாம் நடந்தது. நீங்க என் கிட்ட செலவு செய்த நேரம் கம்மின்னாலும் அந்த நேரத்துல உங்க பாசத்தை எனக்கு காமிச்சுக்கறதுல ஒரு சிக்கனத்தை, கட்டுப் பாட்டைக் கடைப்பிடிச்சீங்க.... "
மெதுவாக, நிதானமாக வார்த்தைகளை எண்ணி, எண்ணி, நிறுத்திப் பேசினேன். சிறிய இடைவெளி விட்டுத் தொடர்ந்தேன்.
"ஆனா எனக்கு உங்க பாசம் தெரியும்பா.... நான் அதுல சந்தேகமே படல.... அதே சமயம் என்னால இடைல வந்த காதலையும் மறுக்கவோ மறக்கவோ முடியல.... நீங்க உங்க அம்மா பார்த்து வச்ச பொண்ணை, அம்மாவைக் கட்டிகிட்டீங்கன்னு தெரியும்பா... ஆனால் அதுக்காக எங்க காதலை அவ்வளவு மூர்க்கமா எதிர்ப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை..."
(அடுத்த பதிவில் நிறைவு பெறும் )