அப்பா உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் அவரைப் பார்க்க வேண்டி, மதுரையில் சகோதரர் வீட்டுக்கு வந்திருக்கிறேன்.
அங்குள்ள சமையல் செய்யும் பெண்மணி நேற்று தோசையும், அதற்கு வெங்காயக் கார சட்னியும் செய்து கொடுத்தார்.
"திங்க"கிழமைப் பதிவைப் பற்றிய எண்ணமே இருந்ததால் எதற்கும் இருக்கட்டும் என்று அதை இரண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன்!
மொபைலிலிருந்து ப்ளாக்கில் எழுதுவது மகா இம்சை. படங்கள் இணைப்பது அதை விட!
எனவே சுருக்கமான பதிவாக எழுதி விடலாம் என்று எண்ணம்! ஆனால் பாருங்கள் முன்னுரையே நீண்டு விட்டது!
தக்காளி வெங்காய சட்னியை மனத்தில் நினைத்துக் கொண்டு "தோசைக்கு என்ன சட்னி அரைக்கட்டும்? தேங்காய்ச் சட்னி? " என்று கேட்டவரிடம் "அதான் நேத்து அரைச்சாச்சே... வெங்காய சட்னி செய்து விடுங்களேன்" என்று சொல்லி விட்டேன்.
[இவரிடம் ஓரிரண்டு ஐட்டங்கள் கேட்டுக் கொண்டிருக்கறேன். அடுத்ததடுத்த வாரங்களில் தருகிறேன்!]
அவர் பச்சை வெங்காயக் கார சட்னி செய்து கொடுத்து விட்டார்! நன்றாகத்தான் இருந்தது.
நானும் இந்த வகை சட்னி செய்திருக்கிறேன். இதே போலத்தான், ஒன்றே ஒன்றைத் தவிர! மிளகாயை வறுத்துக் கொண்டதில்லை. மேலும் வெங்காயச் சட்னியிலும், தக்காளி வெங்காயச் சட்னியிலும் நிறைய மாதிரிகளில் முயற்சித்துச் சாப்பிட்டிருக்கிறோம் - உங்களை எல்லாம் போலவே!
ஏழெட்டு சின்ன வெங்காயம் எடுத்து உரித்து வைத்துக் கொண்டாராம். மூன்று பல் பூண்டு எடுத்துக் கொண்டாராம். உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொண்டாராம். ஏழெட்டு காய்ந்த மிளகாயை எடுத்து கருக வறுத்துக் கொண்டாராம். மிகக் கொஞ்சம் புளி சேர்த்துக் கொண்டாராம்.
சேர்த்து மிக்ஸியில் அரைத்து விட்டார்.
அவ்ளோதாங்க.. யாரும் செய்யாதது இல்லை. சிறு சிறு மாறுதல்களுடன் எல்லோரும் செய்வதுதான்! நேற்று எங்கள் வீட்டில் இது! அவ்ளோதான்! ஹிஹிஹி...


