எலெக்டிரானிக் சாமியார்: இங்கே பாருங்க கே வி - சும்மா வள வளன்னு கதை சொன்னா யாருக்கும் புரிய மாட்டேங்குது. நான் கேட்கின்ற கேள்விகளுக்கு சுருக்கமா பதில் சொல்லுங்க.
கே வரதராஜன்: சரி.
எ சா : மாயாவுக்கு உதவவேண்டும் என்று நினைத்தீர்களா?
கே வி : ஆமாம்.
எ சா: ஏன்?
கே வி : மாயாவின் நிலை பரிதாபமாக இருந்தது. ஓ ஏ தன்னிலை அறிய என்னால் முடிந்த உதவி செய்ய நினைத்தேன். மேலும் மாயா, எனக்கு அலுவலகக் குழப்பத்தை சரி செய்ய 'ராமாமிர்தம்' உதவுவார் என்று கூறியதும் ஒரு காரணம்.
எ சா: மேஜையின் முதல் இழுப்பறையில் நீல நிற பாட்டிலும், அதனுள் இரண்டு காவி கலர் மாத்திரைகளும் இருந்தனவா?
கே வி: ஆமாம்.
எ சா: பிறகு என்ன செய்தீர்கள்?
கே வி: காலையில் எழுந்து, அலுவலகம் செல்லத் தயார் ஆனவுடன், அந்த நீல நிற பாட்டிலை எடுத்துக் கொண்டு, மேஜை இழுப்பறையை முன்னிருந்தபடியே பூட்டி வைத்துவிட்டேன்.
எ சா: அந்த அறையை உங்களுக்குக் கொடுத்த முதியவர் வந்தாரா?
கே வி: இல்லை. நான் அங்கிருக்கும் வரை அவர் திரும்பி வரவில்லை. அவர் கூறி இருந்தபடி, அறையைப் பூட்டி, சாவியை காலு சிங்கிடம் கொடுத்து விடுவது என்று முடிவெடுத்தேன்.
எ சா: பிறகு நீங்க என்ன செஞ்சீங்க?
கே வி: நான் என்னுடைய பெட்டியை எடுத்துக் கொண்டு, ஒரு கையில் ஒரு காவி கலர் மாத்திரையை தயாராக எடுத்து வைத்துக் கொண்டு, அறையைப் பூட்டி, காலு சிங்கின் வருகைக்காகக் காத்திருந்தேன்.
எ சா: பிறகு என்ன நடந்தது?
கே வி: காலை ஏழு ஐம்பத்தைந்து மணிக்கு, மாயா கூறியிருந்தபடியே, காலு சிங் ஒரு டிரேயில் கோக்க கோலா, ஆரஞ்சு ஜூஸ் இருக்கின்ற தம்ளர்களை வைத்து எடுத்து வந்தான். டிரேயை எதிர் அறைக் கதவிற்கு அருகே, கைப்பிடிச்சுவரில் வைத்து விட்டு, அந்த அறையின் அழைப்பு மணியை அழுத்தச் சென்றான்.
எ சா: அப்புறம்?
கே வி: நான் என் கையில் இருந்த மாத்திரையை, கோக்க கோலா இருக்கின்ற கிளாசில் போட்டுவிட்டு, காலு சிங் அழைப்பு மணியை அழுத்துவதற்குள், சென்று, அவனை மெதுவே பெயர் சொல்லி அழைத்தேன். அவன் திடுக்கிட்டுத் திரும்பி, என்னைப் பார்த்ததும் குழப்பம் நீங்கியவனாக, 'என்ன சாப்?' என்றான்.
எ சா: நீங்க என்ன சொன்னீங்க?
கே வி: நான் நிறைய அபிநயங்களுடன், எனக்குத் தெரிந்த அரைகுறை இந்தியில். 'ஆபீசுக்கு நேரமாகிவிட்டது. நான் கிளம்புகின்றேன். பெரியவர் வந்தால் என் நன்றியைத் தெரிவித்துவிடு. இதோ அவருடைய ரூம் சாவி. உன்னிடம் கொடுக்கச் சொன்னார்.' என்று சொல்லி சாவியை அவனிடம் கொடுத்து, என் பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.
எ சா: ஆபீஸ் சென்றதும் ராமாமிர்தத்தைப் பார்த்தீர்களா?
கே வி: இல்லை.
எ சா: ஏன்?
கே வி: எங்கள் ஆபீசில் ராமாமிர்தம் என்று யாரும் இல்லை.
எ சா: அடக் கடவுளே! மாயாவின் ஆவி உங்களை ஏமாற்றிவிட்டதா?
கே வி: அதுவும் இல்லை.
எ சா: அப்படி என்றால்?
கே வி: நான் ஆபீஸ் சென்றதும், தலை முதல் கால் வரை உள்ள எல்லா ஊழியர்களையும் என்னுடைய ஆடிட் அறைக்கு வரவழைத்தேன். கணக்கில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களையும், ஸ்டாக் விவரங்கள் சரி இல்லாததையும், அதனால் பேரிங் கம்பெனிக்கு லட்சக் கணக்கில் ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தையும் எடுத்துக் கூறி, இதை சரி செய்ய, குற்றவாளியைக் கண்டுபிடிக்க, எல்லோருடைய உதவியும் எனக்குத் தேவை என்று சொன்னேன். எல்லோரும் ஒத்துழைப்பு கொடுக்க சம்மதித்தார்கள்.
அதன் பிறகு, நான் எல்லோரையும் பார்த்து, "ராமாமிர்தம் யார்?" என்று கேட்டேன். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. நான் மீண்டும் உரக்கக் கேட்டேன். உங்களில் யாருக்காவது 'ராமாமிர்தம்' என்று யாரையாவது தெரியுமா? சொல்லுங்கள் என்றேன். அறை முழுவதும் ஒரு கடின அமைதி. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அப்பொழுது, அந்த ஆபீசின் தேநீர் அளிக்கும் ஊழியர் ஒருவர் உள்ளே வந்து, எல்லோருக்கும் தேநீர் உள்ள கோப்பைகளை கொடுத்துக் கொண்டே சென்றார். உடனே அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் இருக்கும் டி பி அகர்வால் என்பவர், "ராமாமிர்தம் ஈஸ் ஹமாரா தூத் வாலா" என்றார். அறையில் இருந்த எல்லோரும், மிகவும் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டனர். சிலர் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டு, புன்னகை புரிந்தனர்.
(தொடரும்)
