காசு சோபனாவின் சொந்த ஊரில், ஒரு கோயில் கும்பாபிஷேகம். அந்தக் கோயில் கட்டுமானப் பணியில் அவருடைய பங்களிப்பும் இருந்தது. கும்பாபிஷேகத்திற்கு, மற்ற ஆசிரியர்களை அழைத்திருந்தார். (ஆனா அவரு மட்டும் கடைசி நேரத்தில் ஜூட் விட்டுட்டார்!)
அந்த நேரத்தில், மற்ற ஆசிரியர்கள் நால்வரில் ஒருவர் ஆஸ்பத்திரியில், ஓர் சிறிய அறுவை சிகிச்சைக்காக. இன்னொருவர், மதுரையில். மீதி இருந்த இருவர் எப்படி லீவு போடலாம், என்று யோசித்து,'ஆஸ் அயம் சஃபரிங் ஃப்ரம் மை ப்ரதர் இன் லாஸ் ஃபாதர்'ஸ் ஹன்ட்ரத் பர்த் டே' என்றெல்லாம் எழுதிப் பார்த்து, கிழித்துப் போட்டு, கடைசியில் வேறு வழி இல்லாமல் கிளம்பினோம்.
5-1 = 4 எப்படி? நாங்கள் யாரும் வரவில்லை என்றால், சோபனா, எங்கள் ப்ளாக் ஆசிரியர் குழுவிலிருந்து, தான் ராஜினாமா செய்துவிடுவதாக பயமுறுத்தினார். இரண்டு ஆசிரியர்கள் மட்டும் கும்பாபிஷேகத்திற்கு சென்று, படம் வீடியோ எல்லாம் எடுத்து, காசு சோபனாவிற்கு மின் மடல் இணைப்பாக அனுப்பினோம். ஆகையால், ஐவர் நால்வர் ஆகவில்லை.
காசு சோபனாவின் சொந்த ஊர், (அவருடைய கொள்ளுத் தாத்தா வாழ்ந்த ஊர்) கல்யாணமகாதேவி என்கிற கிராமம். ஆனால் அவர் அந்த ஊரைப் பற்றிக் கேள்விப்பட்டது மட்டும்தான். பார்த்தது இல்லையாம்! அந்த ஊரில், ஓடுகின்ற பாண்டவாறு (பாண்டவ ஆறு) பக்கத்தில், மணல் மேட்டு மாரியம்மன், அய்யனார் ஆகியோர் கோயில் கொண்டுள்ளனர். கொள்ளுத் தாத்தாவின் டயரியில், கல்யாணமகாதேவி கல்யாண வரதப் பெருமாள் கோவில், கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் என்றெல்லாம் சில கோவில்கள் பற்றியும், குறிப்புகள் காணப்பட்டதாம்!
இப்பொழுது கும்பாபிஷேகம் நடந்தது, கல்யாண வரதர் கோவிலுக்குதான். இந்த கும்பாபிஷேகம் பற்றிய விவரங்கள், வேறொரு பதிவில் வரும்.
5+1 = 6 ஏன்?
கல்யாண சுந்தரேஸ்வரரும், கல்யாண மீனாட்சியும், கோவில் இல்லாமல், குடிசையில் தற்சமயம் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு கோவில் கட்டுவதற்கு, அஸ்திவாரம் மட்டும் போடப்பட்ட நிலையில், கட்டிடம் நின்றிருக்கிறது. காசு சோபனா, எங்களிடம், கல்யாணமகாதேவி கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் புனருத்தாரண கமிட்டியை சேர்ந்த ஒருவரை, ஆசிரியர் குழுவில் சேர்த்துக் கொள்ளச் சொன்னார்.
நாங்க அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. எங்களுக்கு அதிர்ஷ்ட எண் ஐந்துதான். ஆறு ஏழு பேர் எல்லாம் சரிப்பட்டு வராது என்றோம். ஆசிரியராக யாரையும் சேர்க்க மாட்டோம், ஆனால், கோயில் புனருத்தாரணக் கமிட்டி சார்பில் விவரங்கள் எழுதி கொடுத்தால், அதை ஒரு பதிவாக போடுகிறோம் என்று சொன்னோம்.
எனவே, ஐந்து ஆசிரியர்கள் என்ற நிலை தொடரும்.
கல்யாணமகாதேவி கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் புதுப்பிக்கப்பட நன்கொடைகள், யாருக்கு, எப்படி அனுப்பலாம் என்ற விவரங்கள் விரைவில், ஒரு பதிவாக வெளியிடுகிறோம்.