Kumbakonam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Kumbakonam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9.2.12

மகா ம(கா)கக் குடந்தை! - பாஹே


கும்பகோணம்.  
   
கோபி ரசித்து எழுதியிருப்பதை நானும் மிக ரசித்து எப்படிப் படிக்க முடிந்தது? என் இளமைக்கால வாழ்க்கையும் அம்மாநகரோடு பின்னிப் பிணைந்திருந்தது என்பதால்தான். 

குடந்தைப் பணிமனையே,
கோடி செய்திப் பேசும் குவலயமே!
நாலரை ஆண்டுகள்
நானிருந்தேன் உன்னோடு!
மகிழ்வித்தாய் -
மறக்கவொண்ணா
மா துயர்கள் கூட்டுவித்தாய் -
மறப்பேனா உன்னை நான்!

'தென்னாட்டின் கேம்ப்ரிட்ஜ்.'
   
ரைட் ஹானரபில் வி.எஸ் சீனிவாஸ சாஸ்திரியார் பயின்ற, பணியிலிருந்த அரசினர் கலைக் கல்லூரியுள்ள நகர்.

என் நினைவுகளில் சுவையும் அதிகம், சோகமும் அதிகம். 
   
நான் முதன்முதலில் தந்தை அந்தஸ்த்தைப் பெற்றது அந்நகரில் இருக்கும்போதுதான். 
    
என் தந்தையை இழந்ததும் அந்த ஊரில்தான். பேத்தியைப் பாராமலேயே-இருவருடங்களுக்கு முன்பே - அவர் காலமாகியது என் மற்றொரு சோகத் தழும்பு. 
        
கடந்த ஐம்பத்தேழு வருடங்களாக நான் தீபாவளி கொண்டாடுவதில்லை என்பது ஒரு தீபாவளி நாளில் அந்தப் புலர்காலைப் பொழுதில் அவர் இறுதியாத்திரை அமைந்ததுதான்.
             
அவ்வூரில் என் குடியிருப்பு கு.ப.ரா வீட்டுக்கு அடுத்த வீடு. இரண்டு மாடிகளுக்கும் இடையில் ஒரு குட்டிச் சுவர்தான் இருக்கும். என் மனைவியும் திருமதி கு.ப ராவும் இரு பக்கமும் நின்று பேசிக் கொண்டிருப்பார்கள். அம்மணி என்பது அவர் பெயர் என்று நினைவு. அவர் மூத்த மகன் ராஜாராமனுக்கு, நான் பெண் பார்த்தது தனிக் கதை. இதில் எனக்கு உதவிய பிரபல தஞ்சை பிரகாஷ், தொழில் முறையில் அறிமுகமான ஆப்த நண்பர்.
             
அதே தெருவில் இரண்டு வீடு தள்ளி எழுத்தாளரும் கு.ப.ராவின் சகோதரியுமான கு.ப. சேது அம்மாள் வசித்து வந்தார். மனைவிக்குப் பழக்கம். நான்கைந்து தெரு தள்ளி இன்னொரு பிரபல எழுத்தாளர் ந.பிச்சமூர்த்தியின் ஜாகை. அப்போது அவர் வேதாரண்யம் கோவிலில் நிர்வாக அலுவலராக இருந்து ஓய்வு பெற்ற நேரம். வாசல் தாழ்வாரத்தில் அமர்ந்து தெருவில் வருவோர் போவோரை வெறித்துக் கொண்டிருப்பார். அவர் பார்வையில் அடிக்கடி பட்ட இளைஞன் நான்!
       
தலைமுடி முன்பக்கம் வாரப்படாமல் பின் கழுத்தில் மிச்சம் கொண்டிருக்க, நீண்ட வெண்தாடி அடிவயிறு வரை நீண்டிருக்கும். வ.வே.சு ஐயரை நினைவு படுத்தும் தோற்றம்.
             
தன முன்னுரை ஒன்றில் ந.பி இப்படிக் குறித்திருக்கிறார். "பொழுது போகாத வேளைகளில் நான் தெருவில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருப்பேன்"
                      
அறிமுகம் இல்லாதிருந்தும் அவர் பார்வை வெளிச்சம் என்னை ஆசீர்வதித்திருக்கிறது.
                    
என் வீட்டுக்கு இன்னொருபுறம் டபீர் தெரு. குடந்தையில் இன்னொரு பிரபல எழுத்தாளர் கி.ரா.கோபாலன் இங்கு குடியிருந்தார். தன வீட்டில் அடிக்கடி இலக்கியக் கூட்டம் நடத்துவார். ஒருமுறை ஆனந்தவிகடன் ஆசிரியர் தேவன் வந்து உரையாற்றியதும் நான் ஏதோ கேள்விகள் கேட்டதும் மங்கலாக நினைவிருக்கிறது.
                  
12 வருடங்களுக்கு ஒரு முறை மகாமகம் நடக்கும். கூட்டமான கூட்டம். அப்படி ஒரு நாளில் என் பழைய பாக்ஸ் கேமிராவோடு மகாமகக் குளக்கரையின் நான்கு பக்கங்களையும் முற்பகல் சென்று படமெடுத்துக் கொண்டிருந்தபோதுதான் நான் முதல் முறையாக தந்தையான தகவல் வந்தது.
      
அப் புகைப் படங்களை ஆல்பத்தில் ஒட்டி அதன் கீழே நான் எழுதிய வரிகள் இன்னும் நினைவில் இருக்கிறது-  
     
"பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பணமும் நேரமும் பகுத்தறிவும் பாழாகும் விந்தை காணீர்"
       
திருவாரூரில் உள்ள என் தம்பியும் தொழில் பிரமுகருமான ராகவன், இன்றும் இவ்வரிகளை நினைவு வைத்துக் கொண்டு அப்படியே திருப்பிச் சொல்வது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.
       
அதுவா ஆச்சர்யம்?-அவ்வரிகளின் பாதிப்பு ராகவனைக் கவர்ந்திருக்கிறது என்பது இனிக்கவும் செய்கிறது, இடிக்கவும் செய்கிறது. 
                               
அன்புடன் :: பா ஹே.