5.11.25

நம் பாரம்பரியத்தில் இல்லாத 'ஹாலோயின்' கொண்டாட்டங்கள் இப்போது நம் நாட்டில் கொண்டாடப்படுவதைப் பற்றி ..

 


கேள்வி பதில்கள் 

கீதா சாம்பசிவம்: 

ஒரு கதையைப் படிக்கையிலேயே இது ஆண் எழுதியது அல்லது பெண் எழுதியது எனக் கண்டுபிடிக்க முடியுமா?

# சில சமயம் முடியும்.‌ சில சமயம் முடியாது.‌ பெண்களை வர்ணிக்கும் போது ஆண் எழுத்தாளர்கள் மாதிரி பெண் எழுத்தாளர்கள் வர்ணிக்க மாட்டார்கள் என்பதை நான் கவனித்திருக்கிறேன்.‌ அதேபோல் அதீத வன்முறை சித்தரிப்புகள் பெண்கள் எழுதுவது இல்லை.

இப்போதைய இளம்பெண்கள் கணவனின் பெற்றோரைத் தங்களுடன் வைத்துக்கொள்வதை விரும்பவில்லை எனப் பரவலாகச் சொல்கின்றனர். அதே சமயம் தன்னுடைய பெற்றோர் தன்னுடன் இருக்கணும் என்றும் தன்னை வளர்த்து ஆளாக்கிப் படிக்கவைச்சிருக்காங்க, கைவிட முடியாது என்றும் சொல்கின்றனர். அதே போல் தானே கணவனின் பெற்றோர்களும்? அவங்களுக்கு மட்டும் இது பொருந்தாதா?

# தர்மரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் எது சரி எது தவறு,  எது செய்யலாம் எது செய்யக்கூடாது என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது.  அவரவர் மனசாட்சிக்கு (அது ஆண்களானாலும் பெண்களானாலும்) எது சரி / தப்பு என்பது நிச்சயம் புரிந்திருக்கும். இதை மீறி தர்ம நியாயத்திற்குப் புறம்பாக யாரோ ஒருவர் ஏதோ ஒன்றை செய்கிறார் என்றால் அது அவருடைய பிறழ் மனப்பான்மையைக்  காட்டுகிறது. 

இது ஒரு புறம் இருக்க எப்பொழுதும் இளையவர்கள் மட்டுமே தவறு இழைக்கிறார்கள் என்று சொல்வதில் முழு உண்மை இருக்க முடியாது என்பது என் கருத்து. நம்மைப் போன்றவர்களின் கட்சியில் நாம் சேர்ந்து கொள்வது என்பது மனித இயல்பு.

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

நம் பாரம்பரியத்தில் இல்லாத  'ஹாலோயின்' கொண்டாட்டங்கள் இப்போது நம் நாட்டில் கொண்டாடப்படுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

# கேளிக்கையோ உட்பொருளோ இல்லாத ஒரு அனாவசிய விஷயம் என்றுதான் நான் நினைக்கிறேன். பீட்சா பர்கர் போன்ற வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான ஆனால் மூன்றாம் தலைமுறை  விரும்புகிற ஒரு மனப்பான்மையை நாம் வளர்த்துக் கொண்டு விட்டோம்.‌ அவ்வளவுதான்.

& குடியிருப்பில் உள்ள குழந்தைகளுக்கு ஒரு திரில் மற்றும் பொழுதுபோக்கு. ஏதோ சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று பார்க்கும்போது நமக்கும் ஒரு திருப்தி! காலையிலேயே zepto மூலம் ஆர்டர் செய்து பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்கி வைத்திருந்தேன். வேடமணிந்து வந்திருந்த சிறுவர்களைப் பார்த்து என் உதவியாளர் மிகவும் சந்தோஷம் அடைந்தார்! 


எங்கள் குடியிருப்பில், வந்த குழந்தைகளிடம், trick யாரும் செய்யவில்லை! Treat மட்டும்தான்! 

கே. சக்ரபாணி சென்னை 28:

பாசஞ்சர் ரயில்கள்  மற்றும். குட்ஸ்  ரயில்களில்   கடைசி  பெட்டியில். கார்டு  என்று. ஒருவர்   இருப்பார்   அவர். இருப்பதை. எஞ்சின்  டிரைவர்  பார்க்கமுடியாது. எஞ்சின்  டிரைவரை  கார்டு  பார்க்க. முடியாது.   இன்னும். குட்ஸ்    ரயில் களில். எங்கோ. 30/40   பெட்டிகள்  தாண்டி  கார்டு  இருப்பார்.    ரயில்   ஓடும் போது. கார்டுகள்  அவர்கள். இருக்கையில்  அமர்ந்து விடுவார்கள்.   கார்டுக்கும்  எஞ்சின்  டிரைவருகும்  என்ன  கருத்து   பரிமாற்றம்   இருக்கும்.  Guard  க்கு  என்ன வேலை. என்று  God only. Knows. 

# கார்டு என்பவர் வண்டியின் கடைசிப் பகுதியில் இருப்பார் . வண்டி முழுவதுமாக ஒவ்வொரு நிலையத்தையும் தாண்டிச் செல்கிறது என்பதை உறுதி செய்வது இதனால் சாத்தியம்.  அதேபோல இன்ஜின் டிரைவர் வண்டியை ஓட்டுவதில் கவனமாக இருப்பதால் ஒரு இடத்தைத் தாண்டும் போது அதற்கு உண்டான சரியான சிக்னல்கள் இருக்கின்றனவா ஸ்டேஷன் மாஸ்டர் வண்டி கடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாரா என்பதை எல்லாம் சரி பார்ப்பது கார்டின் வேலை . அவர்  டிரைவரோடு பேச உள்நிலைத் தொலைபேசித் தொடர்பு இருக்கும் என்று ஊகிக்கிறேன். நிச்சயமாகத் தெரியவில்லை.

நெல்லைத்தமிழன் : 

1. திருமணத்திற்கு பெண்கள் மிகக் குறைவாகக் கிடைப்பதன் காரணம் என்ன? கன்சர்வேடிவ் ஆக நினைக்கிறேன் என்று எண்ணவேண்டாம். முன்காலத்தில் பெண்கள் சம்பாதிக்காமல் இருந்ததால், அதனை ஒரு அட்வாண்டேஜாக எடுத்துக்கொண்டு, அவர்களை அடிமைப்படுத்தியதால்தான், சம்பாதிக்கும் பெண்களுக்கு, எனக்கும் அவனுக்கும் என்ன வேறுபாடு? திருமணம் என்று வந்தாலே அது பார்ட்னர்ஷிப் மாதிரித்தான் என்ற எண்ணம் அதிகமாகிவிட்டதோ?   

#   உத்தியோகம் புருஷ லட்சணம் என்று இருந்த நிலை மாறி இப்பொழுது பெண்களும் வேலைக்கு போகிறார்கள் பல இடங்களில் பெண்கள் அதிகமாகவே சம்பாதிக்கிறார்கள் என்னும்போது அவர்களுடைய மனப்போக்கில் ஒரு மாற்றம் நிகழத்தானே செய்யும்.‌ பெண்களின் எண்ணிக்கை குறைவாகவும் அவர்கள் எதிர்பார்ப்புகள் அதிகமாகவும் ஆகிவிட்டதா நீங்கள் குறிப்பிடும் பலமும் நடப்பது உண்மைதான்.  ஆனால் இன்னும் பத்து வருடங்களுக்குள் நிலைமை மாறிவிடக்கூடும் என  நான் நினைக்கிறேன்.

2.   ஒரு மனிதனின் இறப்பு எப்போது நிகழும் என்று ஜோதிட ரீதியாக சரியாகக் கணிக்க முடியும் என்கிறார்களே. ஏன் எல்லோருக்கும் அவர்கள் அதனைக் கணித்துச் சொல்லக்கூடாது? வாழ்க்கைக்கு அது ரொம்ப உபயோகமாக இருக்குமே.  

# உயிர் பிரியும் நேரத்தை சரியாக கனித்து தெரிந்து கொள்வதால் எந்த வித நன்மையும் இருக்காது மாறாக பலருக்கும் அனாவசிய பயம் திகில் ஏற்படும் என்பது மட்டுமே உண்மை.

3. தொழிற்சாலைகள் குறைந்த விலையில் உணவு அளிக்கும் வழக்கம் ஏன் வந்தது? இதுவும் உற்பத்தியைப் பெருக்கும் உத்தியா இல்லை தொழிலாளர்களின் நலன் சார்ந்த காரணமா?  

# அக்கம் பக்கத்தில் உணவு வசதி இல்லாத தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு உணவளிப்பது அவசியமாகிறது .  அதைக் குறைந்த விலையில் அளிப்பது தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி -  திருப்தி அளிப்பதுடன் அவர்கள் வேலையையும் சிறப்பாகச் செய்யச் செய்கிறது. கொடுக்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை இப்படியாகக் கொடுப்பது ஒரு நல்ல உத்திதானே.

4.  அரசு ஏற்றுச் செய்யும் எந்த ஒரு நிறுவனமோ தொழிலோ மக்கள் நலன் சார்ந்தவைகளோ உருப்படியாக இருப்பதில்லையே, அது ஆஸ்பத்திரிகளாகட்டும், பள்ளிக்கூடங்களாகட்டும், பேருந்துகளாகட்டும் இல்லை எதுவாகவேண்டுமானாலும் இருக்கட்டும். எதுவுமே உருப்படியாக இல்லாததன் காரணம் என்ன?  

# அரசியலில் ஊழல் மலிந்தது மட்டுமே பொதுத் துறை நிறுவனங்களில் இழப்பு ஏற்படுவதற்கு முழுமுதற் காரணம்.  HMT வாட்ச் பிரபலமாக இருந்த காலம் ஒன்று இருந்தது.‌ இன்று கூட அரசின் சாராய வியாபாரம் ஓஹோ என்று நடக்கவில்லையா ? அரசு கேபிள் ?

5. சிவாஜி ரசிகன், கமல் ரசிகன், ரஜினி ரசிகன், விஜய் அஜித் ரசிகன் என்று கூறிக்கொள்பவர்கள், வாழ்க்கை முழுவதுமே அந்த நடிகரது ரசிகர்களாக இருக்கிறார்கள். ஆனால் நடிகைகளின் ரசிகர்கள் அப்படியே விசுவாசமாக ஒருவருக்கே ரசிகனாக இருக்கிறார்களா?

# இந்த ரசிகர் கூட்டம் என்பது அறிவார்ந்த விஷயமல்ல. அதுவும் நடிகை என்று வந்துவிட்டால் அது அநேகமாக அழகை அடிப்படையாகக் கொண்டு ரசிக்கும் பட்டாளங்களின் கேலிக் கூத்து என்பதாக இருக்கும். காலப்போக்கில் அது நசிந்து போவது இயல்பு.  " இன்னாருடைய நடிப்பு எனக்குப் பிடிக்கும் " என்று சொல்வது புரிந்து கொள்ளக் கூடியது.‌  அதற்காக ஒரு மன்றம் அமைத்து ஆட்டம் போடுவது தேவையற்ற அறிவற்ற‌‌ நிலைப்பாடு.‌

= = = = = = = = = = =

படமும், பதமும். 

நெல்லைத்தமிழன் : 

ரொம்ப வருடங்களுக்கு முன்பு (சுமார் 20 வருடங்கள் இருக்கலாம்) துபாயில் ஹோட்டலில் தங்கியபோது, என் அறைக்கதவைத் திறந்ததும் அறையில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் என்னை வரவேற்று ஒரு ஸ்லைட் போட்டிருந்தார்கள். அது எனக்கு ஆச்சர்யமாகத் தெரிந்தது. எனக்கு வழங்கப்பட்ட அறைக்கதவைத் திறந்ததும் இந்த மாதிரி மெசேஜைப் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது.


ஹோட்டலில் அறையை அலாட் செய்த பிறகு கார்ட் கொடுப்பார்கள். உடனேயே என்னுடைய அறைக்கதவைத் திறந்ததும் தொலைக்காட்சியில் இந்த டிஸ்ப்ளே இருப்பதைப் பார்க்கமுடியும். சில பல நேரங்களில் பழங்கள் நிறைந்த டிரே ஒன்றும் வைத்திருப்பார்கள் (ரொம்ப அடிக்கடி நான் தங்குவதால்). அங்கிருக்கும் மினி குளிர்சாதனைப் பெட்டியில் உள்ள எதையும் நான் தொட மாட்டேன். காசு பழுத்துவிடும். இது பற்றி என் அனுபவத்தை இன்னொரு பகுதியில் சொல்கிறேன்



- - - - - - - - -


இது லண்டனில் இருந்த வாக்கி டாக்கி டவர் (வாக்கி டாக்கி போல பில்டிங் இருப்பதால்). இதன் வளைவான முகப்பு ஒளியை பிரதிபலிக்கக்கூடியது. இதன் வளைவான தன்மையால், சூரிய ஒளி இதில் பட்டு, குழி ஆடியைப் போன்று பிரதிபலித்து, அந்தக் கட்டிடத்தின் எதிரே நிறுத்தியிருந்த ஒரு ஜாக்குவார் காரின் பாகங்களை உருக்கிவிட்டது (2013). இது பெரிய பேசுபொருளாக ஆனது. பில்டிங் டிசைனைப் பலரும் குறை சொன்னார்கள். பிறகு உடனேயே அதனைச் சரிசெய்தார்கள். இந்தப் படம் அந்தக் கட்டிடம் கட்டியபோது இருந்த நிலைமை. 


ஒளியைப் பிரதிபலிப்பதால் மற்றவர்களுக்கு இடைஞ்சல் என்று புரிந்துகொண்டு சரி செய்த பிறகு நான் எடுத்த படம். அந்தத் தெருவிலிருந்து எடுத்தால் சரியாக விழவில்லை (கட்டிடம் மிக உயரம் என்பதால்). அதனால் சிறிது தூரத்திலிருந்து இந்தப் படத்தை எடுத்தேன். 

= = = = = = = = = =

KGG பக்கம் 

எந்த ஆட்சியாக இருந்தாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது ஆங்காங்கே நடந்துகொண்டுதான் உள்ளது. 

குற்றம் இழைப்போருக்கு அந்த தைரியத்தை அளிப்பது எது என்று யோசித்துப் பார்த்தால், மதுவும், போதை மருந்துகளும், முதலிடம் பெற்றாலும் போலீஸ் என்றாலே முன்பு இருந்த பயமும் மரியாதையும் போய், காசு கொடுத்தோ அல்லது கட்சி ஆதரவு கொண்டோ வெளி வந்து விடலாம் என்னும் நம்பிக்கையும் காரணம் ஆகிறது. 

ஊரைக் கெடுக்கின்ற சீரியல்கள், பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் கேலி செய்யும் திரைக் காவியங்கள் எல்லாம் ஒருபக்கம் இளைஞர்களைக் கெடுக்கின்றது. 

இந்தக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை, பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றுதல் போன்ற கடும் நடவடிக்கைகள் இருந்தால்தான் இத்தகைய குற்றங்கள் குறையும் என்று தோன்றுகிறது. 

வாசகர்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது பற்றி கருத்துரை பதியவும். 

- - - - - - - - - - - 
வாக்காளர் பட்டியல் திருத்தம் தமிழகத்தில் இந்த மாதம் நிகழ்கிறது. வாக்காளர்கள் எல்லோரும் சற்று சிரமம் பார்க்காமல், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உங்கள் விவரங்களைப் பதிவு செய்து, நீக்கப்படவேண்டிய வாக்காளர் விவரம், சேர்க்கப்படவேண்டிய வாக்காளர் விவரம் எல்லாவற்றையும் உங்கள் பூத் முகவர் துணையுடன் சரி செய்துகொள்ளவும். 

இப்போது தவற விட்டுவிட்டு வாக்குப் பதிவு நாளில் என் பெயர் இல்லை என்று குறைபட்டுத் திரிவத்தில் அர்த்தம் இல்லை. 

= = = = = = = = = = =

 

52 கருத்துகள்:

  1. நம்ம பாரம்பர்யத்தை விட்டு எங்கோ போய்விட்டோம். இதுல ஹாலூவின் கொண்டாட்டமும் இருந்துட்டுப் போட்டமே. இப்போ உள்ள ஜெனரேஷன் ஆங்கில கொலோக்கியல் கெட்ட வார்த்தைகளை உபயோகித்தால் வெள்ளைக்காரன் குஞ்சுக்குப் பொறந்தவங்க நாகரீகத்தில் சிறந்தவங்க என்ற கற்பனை உலகத்தில் இருக்காங்க. என்னத்தச் சொல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை... நீங்களும் Bad வர்ட் யூஸ் பண்ணிட்டீங்களே...! ஹா.. ஹா.. ஹா,...

      நீக்கு
    2. ஹா ஹா ஹா. வெள்ளைக்காரனுக்குப் பொறந்தவங்க என்ற அர்த்தத்தில் சொன்னேன்

      நீக்கு
  2. இளம் பெண்கள் கணவனின் பெற்றோர்களை.... வதிவிலக்குகளை விட்டுவிட்டால், மருமகளை வேலைக்காரியாகவும் அடிமையாகவும் நடத்திய மாமியார்களே இந்த நிலைமைக்குக் காரணம். பெண் என்றால் சலுகை மருமகள் என்றால் கடுகடு என இருந்ததால் உங்க சங்காத்தமே வேண்டாம்னு இருந்துடறாங்க. அதனால பல மாமியார்கள் நல்லா நடந்துக்க ஆரம்பித்திருப்பது வரவேற்கத் தகுந்தது

    மாமனாரைக் குறை சொல்லும் மருமகளே இல்லையே அது எதனால்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமியார்கள் மாறுவதில்லை... சில விதி விலக்குகள் தவிர...

      நீக்கு
    2. //மாமனாரைக் குறை சொல்லும் மருமகளே இல்லையே அது எதனால்?// உங்களுக்குத் தெரியவில்லை என்றால் இல்லை என்று ஆகி விடுமா? எங்கள் வீட்டிற்கு எதிரில் ஒரு மாமி இருந்தார். அந்த மாமியின் மாமானார் படுத்திய பாட்டில் மாமனார் இறந்த பிறகும் அவருடைய புகைப்படத்தை பார்க்கக் கூட பயம் என்பார் அந்த மாமி. மாமனார் கொடுமையை பற்றி கதை கதையாக சொலியிருக்கிறார். என் பெரிய அக்காவின் மாமனார் ரொம்ப படுத்தல். அது அந்த தெருவிற்கே தெரியும். அவர் இறந்ததும் என் அக்காவின் பக்கத்து வீட்டில் வசித்து, பின்னர் வீட்டை மாற்றிக் கொண்டு சென்ற ஒருவர்(அவர் பணி புரிந்த வங்கியில்தான் என் அக்காவின் மாமனார் கணக்கு வைத்திருந்தார்)ஆவர் மனிவியிடம், "ஒரு குட் நியூஸ், ___வின் மாமனார் செத்துப் போய் விட்டாராம்" என்றாராம். ஏன் என்னிடமே கூட சிலர், " உங்க அக்காவின் மாமனார் செத்துப் போயிட்டாராமே? அப்பாடா?" என்றார்கள். இதைத்தவிர தான் கிழித்த கோட்டை தாண்டக் கூடாது என்று மகனையும், மருமகளையும் சேர்த்து படுத்திய ஆண்கள் உண்டு. இப்போது கூட இருக்கிறார்கள். என்ன..? ஆண் என்றால் ஆணவமாக, யதேச்சாதிகாரியாக இருக்கலாம் என்று நம்பும் சமூகம் நம்முடையது, அதனால் ஆணின் படுத்தல்களை ஏற்றுக் கொண்டோம். எங்களுக்குள் மாமனாரின் கொடுமையை பேசிக் கொள்வோம். அந்த்க் காலத்தில் மீடியாவில் ஆண்கள் கோலோச்சியதால் ஆண்கள் செய்த அட்டூழியங்கள் வெளியே வரவிடாமல் பார்த்துக் கொண்டார்கள். தூங்கும் நேரத்தில் என் பிரஷரை ஏற்றி விட்டீகளே நியாயமா?

      நீக்கு
    3. பானுமதி சொல்வதை நூற்றுக்கு இரு நூறு ஆமோதிக்கிறேன். சிலரின் அதிர்ஷ்டம் இருவரும் மாமனார்/மாமியார் கூட்டு சேர்ந்து கொண்டு படுத்துவது தான். எங்க வீட்டிலேயே உறவுகளிலேயே பல உதாரணங்கள் உண்டு. சிலவற்றை வெளிப்படையாகச் சொல்வது கஷ்டம்.

      நீக்கு
    4. பா.வெ மேடம். நான் சொல்றது மருமகளைப் படுத்திய மாமனார் கிடையாது. மனைவியைப் படுத்திய கணவர், மகனைக் கைப்பிடியில் வைக்கும் அப்பாக்கள் உண்டு

      நீக்கு
    5. நெல்லை, மருமகளைப் படுத்திய மாமனார்களும் உண்டு!

      மாமியாரும் மாமனாரும் சேர்ந்து படுத்தும் வீடுகளும் உண்டு!

      கீதா

      நீக்கு
  3. பதில்கள்
    1. ஓம் முருகா..

      வாங்க செல்வாண்ணா... வணக்கம்.

      நீக்கு
  4. /// ஊரைக் கெடுக்கின்ற சீரியல்கள், பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் கேலி செய்யும் திரைக் காவியங்கள் எல்லாம் ஒருபக்கம் இளைஞர்களைக் கெடுக்கின்றது. ///

    எல்லாவற்றுக்கும் சுதந்திரம்... சனநாயகம்..
    முறைப்படுத்தப்படவேண்டியது அவசியம்...

    ஆனாலும் அடங்க மாட்டார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன Dude இப்படி சொல்லிட்டீங்க...!

      நீக்கு
    2. இந்த Dude என்பதின் சரியான அர்த்தம் என்ன? Dude திரைப்படத்தைச் சொல்லலை. உண்மையான பொருள், எந்த நோக்கத்தில் சொல்லப்படுகிறது?

      நீக்கு
  5. கேள்வி பதில் பகுதி சிறப்பு

    பதிலளிநீக்கு
  6. பாரம்பரியத்தில் இல்லாத 'ஹாலோயின்'

    அதுதான் இல்லையே.. பின்னே எதற்கு?...

    அக்கிரமங்கள் பெருகிக் கொண்டு இருக்கின்றன..

    எல்லாம் வியாபார தந்திரங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாறும் காலங்களில் மனிதனும் மாறித்தானே ஆகவேண்டும்....  மாற்றமில்லாதது மாற்றம் மட்டும்தானே!

      நீக்கு
    2. அது எப்படி ஸ்ரீராம்? நம் கலாச்சாரமே வேறு அல்லவா? ஆனால் உடை உணவு பேச்சு பார்க்கும் படங்கள் சீரியல்கள் மாறிவிட்டன. ஹாலூவினையும் கொண்டாடிவிடுவோமே. ஆனால் தெருக்கூத்து மேக்கப் ஓல்ட் ஃபேஷன். ஹா ஹா ஹா

      நீக்கு
  7. ஹாலோயின் அனுசரிக்க அரபு நாடுகளில் அனுமதி உண்டா?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களை விட அதை நீங்கள் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்...

      நெல்லை.. செல்வாண்ணா என்னவோ கேட்கிறார் பாருங்க...

      நீக்கு
    2. அரபு தேசங்களில் பர்கர் பிட்சா உண்டு. பாரம்பரிய உடைக்கு மேல் கோட்டு போட்டுப்பாங்க. ஆனால் ஹாலூவின் போன்ற நிலத்துங்குச் சம்பந்தமில்லாத அபத்தங்கள் இல்லை

      நீக்கு
    3. அதுதான் நல்லது

      நீக்கு
    4. எனக்குத் தெரிஞ்சு இல்லை. இருந்திருந்தால் முகநூலில் கத்தார்/தோஹா செய்தியில் பகிர்ந்திருப்பாங்க. பஜனைகள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சி என அறிவிப்புகள் வருகின்றன. போன மாசம் இளையராஜாவின் நிகழ்ச்சி ஏதோ இருந்ததாகப் பையரும் சொன்னார். ஆனால் இவங்க இருவரும் இதிலெல்லாம் ஈடுபாடு காட்டுவதில்லை. தமிழ் தெரியாதது முக்கியக் காரணம்.

      நீக்கு
  8. நடிகைகளின் ரசிகர்... படம் போட ஏதுவா கேள்வி கேட்டால் கேஜிஜி படம் போடறதில்லை. ஆசிரியர் தனக்கு வயதாகிவிட்டது என நினைக்கிறாரோ?

    பதிலளிநீக்கு
  9. பாலியல் குற்றங்கள்.. ஒரு அரசு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்று சொன்னால் எனக்குத் தோன்றும் இந்தக் குற்றத்தில் அவங்க கட்சிக்காரங்க சம்பந்தப்படவில்லை போல.. அவங்க ஆளுன்னா வேற பிரச்சனைகளைப் பற்றி மீடியாவைப் பேசச் சொல்லி ஆணையிட்டுட்டாங்க போலிருக்கு என எண்ணுவேன்.

    பாலியல் குற்றங்களுக்கு தகுந்த தண்டனை முழுமையாக எடுத்துவிடுவதுதான். டாஸ்மாக்கின் பங்கு இதில் அதிகம்.

    அரபு நாடுகளில் இதற்கு வாய்ப்பே இல்லை.

    நம்மூர்ல பலர் காள்காள்னு கத்தினா அரசுக்கு கெட்ட பெயர் வரக்கூடாதுன்னு என்கவுன்டர் செய்யறாங்க. மக்களும் மறந்துடறாங்க.

    பதிலளிநீக்கு
  10. பாலியில் குற்றங்களுக்கு கடுமையான தண்டணைகள் கொடுக்கப் படுவதாக சொல்லப்படும் அரபு நாடுகளில் அந்த குற்றங்கள் நடக்காமலா இருங்க்கின்றன? வெளியே வராது அம்புட்டுத்தான். பெண் ஒரு போகப்பொருள் அல்ல என்று ஆண் குழந்தைகளுக்கு கற்பித்து வளர்த்தாலே ஒழிய இத்தகைய குற்றங்களை தவிர்க்க முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் குற்றங்களின் எண்ணிக்கையையும் பெண்களுக்கு அந்த தேசங்களில் இருக்கும் பாதுகாப்பையும் எண்ணிப் பார்க்கணும். ஆண்களும் பெண் ஒரு போகப்பொருள்னு சதா சர்வகாலமும் ஜெபமா பண்ணிக்கிட்டிருக்காங்க? முடிந்தவரை வாய்ப்புகளைத் தவிர்க்கணும். என் ஆசை என்ன உடை வேணும்
      னாலும் அணிவேன் நடு ராத்திரியிலும் திரிவேன் என்று இருக்கும்போது டாஸ்மாக் ஆண்கள் நிலை தடுமாறராங்க கடைசியில் தண்டனை பெறுஙிறார்கள்

      நீக்கு
  11. //இது ஒரு புறம் இருக்க எப்பொழுதும் இளையவர்கள் மட்டுமே தவறு இழைக்கிறார்கள் என்று சொல்வதில் முழு உண்மை இருக்க முடியாது என்பது என் கருத்து.// இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. சமீபத்தில் எனக்கு மிகத் தெரிந்த சிலர் பெரியவர்களை மதிக்காமல் குடும்பத்திலிருந்து விலகி இருக்கிறார்கள். எல்லோருக்கும் வயதான மாமியார்/மாமனார் உண்டு. அவங்க சிரமம் இவங்களுக்குப் புரியலை என்பதே உண்மை.

    //நம்மைப் போன்றவர்களின் கட்சியில் நாம் சேர்ந்து கொள்வது என்பது மனித இயல்பு.// நான் எந்தக் கட்சியிலும் (அரசியல் கட்சி உள்பட) இல்லை. அதோடு நான் தற்சமயம் இருப்பது என் பையரோடும் மருமகள், பேத்தியோடும். பொதுவாக தமிழ் கூறும் நல்லுலகில் நடக்கும் விஷயங்களைத் தான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். எங்க வீட்டிலேயே 40 வயதாகியும் திருமணம் ஆகாத ஆண்கள் இருக்காங்க. அவங்களுக்குப் பெண் பார்க்கையில் நடக்கும் கூத்துக்களைத் தான் சொல்லிண்டு இருக்கேன். மனம் நொந்து போய்விடும். அந்த அளவுக்குப் பெண்கள் அவங்க பெற்றோர்கள் பேச்சும் படுத்தலும். :(

    பதிலளிநீக்கு
  12. அக்கா அவர்களது கருத்தை ஆதரிக்கின்றேன்...

    பதிலளிநீக்கு
  13. /// நெல்லை.. செல்வாண்ணா என்னவோ கேட்கிறார் பாருங்க.. ///

    பதினைந்து வருடங்களுக்கு மேல் அரபு தேசத்தில் வாசம்... இந்த விஷயங்கள் தெரியும்... உயர்வு நவிற்சி அணி போல கருத்து...

    அங்கே இன்னும் மே/1, டிச/25 விடுமுறை கிடையாது...

    தனக்குத் தானே கொண்டாடிக் கொள்கின்ற பிறந்த நாள்களில் கூட ஆர்வமில்லாதவர்கள்...

    பதிலளிநீக்கு
  14. இறை தூதர் முஹம்மது அவர்களது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கூடக் கிடையாது.. இறை தூதரின் மறைவு நாளும் அதுவே...

    பதிலளிநீக்கு
  15. மாற்றுச் சமயத்தின் ஒரு பிரிவினர் நடு வகிட்டில் குங்குமம் வைத்துக் கொள்ள - இங்கே பாழ் நெற்றி அல்லது ஊசி முனைத் திலக தரிசனம்...

    பதிலளிநீக்கு
  16. நக்ஷத்திர ஓட்டல்களில் இந்தியாவில் காஃபிப் பொடி, எலக்ட்ரிக் கெட்டில், காஃபி மேக்கர், டீத்தூள், பால் இருக்கும் சாஷேக்கள் தவிர்த்துச் சிலர் ஸ்னாக்ஸ், பழங்கள், வெண்ணெய், ப்ரெட் வைக்கிறார்கள். அம்பேரிக்க ஓட்டல்களில் சின்னதாக மின் அடுப்பு, மைக்ரோவேவ் அவன், குளிர்சாதனப் பெட்டி பொருட்களுடன் இருக்கும்; நாங்களும் அதிலிருந்து பால் கேன் தவிர்த்து எதையும் எடுத்தது இல்லை. வைஃபை இருக்குனு சொல்லுவாங்க. உபயோகித்தால் டாலர் கணக்கில் பணம் கட்டியாகணும். ஆகவே எங்கே போனாலும் டாடா கார்ட் தான்.

    பதிலளிநீக்கு
  17. ஊசி முனைத் திலகத்துடன் கூந்தலை மூன்றாகப் பிரித்து இந்தப் பக்கம் ஒரு கற்றை அந்தப் பக்கம் ஒரு கற்றை நடு முதுகில் ஒரு கற்றை...

    இதுதான் கோயிலுக்கு வருகின்ற லட்சணம்...


    இதையும் மீறி இறுக்கமான உடைகளுடன் தலைவிரி கோலம் கொள்வாரும் உள்ளனர்

    பதிலளிநீக்கு
  18. துஷ்ட நிக்ரஹமே பிரத்யட்சமாக இருக்க துஷ்டங்களைப் போல வேடமிட்டுக் கொண்டு கூத்தடிக்கின்ற சீர்கேட்டிற்கு எதையெல்லாம் பணயம் வைக்க வேண்டியிருக்குமோ ???

    பதிலளிநீக்கு
  19. கேள்வி பதில்கள் பலதையும் எடுத்துக் கூறின.

    நமது பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் மறக்காமல் கடைப்பிடிப்பது இளம் சமூகத்துக்கு வேண்டியதே.
    எமது பேரனும் பிரித்தானியாவின் ஆங்கில வகுப்பு கலோவின் கொண்டாட்டத்துக்கு உடை அணிந்து சென்றான்.சிலதை தவிர்க்கவும் முடிவதில்லை.

    பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் தகுந்த தண்டனை கிடைத்தால் மட்டுமே குற்றங்கள் குறைவடையலாம் .அதுதான் அரசியல் செல்வாக்குகளாலும் பணத்தாலும் தப்பிவிடுகிறார்களே.

    பதிலளிநீக்கு
  20. @ மாதேவி
    /// தகுந்த தண்டனை கிடைத்தால் மட்டுமே குற்றங்கள் குறையலாம்...///

    நமது பாரம்பர்யத்தில் பருவ வயதினருக்கு ஏகப்பட்ட நல் உபதேசங்கள் உள்ளன... அவற்றைப் புறந்தள்ளியதாலேயே குற்றங்கள்....

    எதற்கெடுத்தாலும்
    என் தட்டு என் உணவு - என்றால் என்ன தான் செய்வது!?..

    பதிலளிநீக்கு
  21. நெல்லை, நீங்கள் தங்கியிருந்த அறையே ஒரு மினிவீடு போல இருக்கிறது!!! சூப்பர்.

    வெல்கம் மெசேஜ் இப்படிப் போட்டால் ஆச்சரியமாகவும் ஒரு சின்ன சந்தோஷமும் ஏற்படும்தன இல்லையா?!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். ரிசப்ஷனில் முன்பின் தெரியாதவர்கள் நம்பைப் பேர் சொல்லி அழைத்தால் ஏற்படும் ஆச்சரியம் போல

      நீக்கு
  22. வாக்கி டாக்கி படம் இரண்டுமே நல்லாருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  23. குற்றம் இழைப்போருக்கு அந்த தைரியத்தை அளிப்பது எது//

    பெற்றோரின் வளர்ப்பு (பணக்காரர்களானாலும் ஏழைகானாலும் ) சரியாக இல்லாததுதான் முதற்காரணம். இரண்டாவது பெற்றோர் இல்லாத குழந்தைகள் வளரும் சூழல். ஒவ்வொரு குற்றவாளியின் பின் புலத்தை ஆராய்ந்தால் எங்கு தவறு என்று கண்டுபிடித்துவிடலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. பாலியல் குற்றம் புரிந்தோருக்கு முதலில் அந்தப் பார்ட்டைத் துண்டிக்க வேண்டும். மரணதண்டனையை விடவும் கொடுமையான தண்டனை இதுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த பார்ட் மனது மற்றும் மூளை. என்னைப் பொறுத்தவரையில் இரண்டு கால்களையோ அல்லது இரண்டு கைகளையோ முழுவதும் நீக்கினால் போதும்

      நீக்கு
  25. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  26. கேள்விகளும் , அதற்கு ஆசிரியர்கள் அளித்த பதிலகளும் படித்தேன்.
    பழையகால படங்களை பார்த்தால் தெரியும் அந்தக்காலத்தில் மாமானார்கள் எப்படி வரதட்சணை கொடுமை படுத்தினார்கள் என்று . தீபாவளி சீர் சரியாக செய்யவில்லை என்று மருமகளை அம்மா வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். கணவரை எதிர்த்து பேசமுடியாத மாமியார்கள் இருந்து இருக்கிறார்கள் .

    “குளந்தங்கரை அரசமரம் “என்ற கதை படித்து பார்த்தால் தெரியும் மாமனார் கொடுமை

    எங்கள் அத்தையின் மாமனார் பேச்சை என் அத்தை கணவர் தட்டவே மாட்டார் அதனால் என் அத்தை பட்ட கஷ்டங்கள் அதிகம் .

    பதிலளிநீக்கு
  27. சிறு வயதிலிருந்தே பெண்களை மதிக்கும் பழக்கம் , அன்போடும், பண்போடும் பழக பசங்ககற்றுக் கொள்ள வேண்டும் , சமுதாயத்திற்கும் பங்கு இருக்கு நல்லது அல்லாதவைகளை பெரிது படுத்தி, வெளிச்சம் பொட்டு காட்டுவது , நல்லதை பெரிது படுத்தாமல் இருப்பதும்தவறு.
    வீட்டில், பள்ளியில் நல்ஒழுக்கம் கற்பிக்க வேண்டும் . கெளதமன் சார் சொல்வது போல வன்கொடுமை செய்பவர்களுக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் அடுத்து செய்ய நினைப்பவர்களுக்கு பயத்தை கொடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  28. சிறு வயதிலிருந்தே பெண்களை மதிக்கும் பழக்கம் , அன்போடும், பண்போடும் பழக பசங்ககற்றுக் கொள்ள வேண்டும் , சமுதாயத்திற்கும் பங்கு இருக்கு நல்லது அல்லாதவைகளை பெரிது படுத்தி, வெளிச்சம் பொட்டு காட்டுவது , நல்லதை பெரிது படுத்தாமல் இருப்பதும்தவறு.
    வீட்டில், பள்ளியில் நல்ஒழுக்கம் கற்பிக்க வேண்டும் . கெளதமன் சார் சொல்வது போல வன்கொடுமை செய்பவர்களுக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் அடுத்து செய்ய நினைப்பவர்களுக்கு பயத்தை கொடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  29. படமும் பதமும் நன்றாக இருக்கிறது

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!