இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28.12.16

செண்டுவெளிக் களியாட்டம்



IV  விரிவாக 15 வரிகளுக்கு மிகுந்து விடையளி :                                                                                                                15
 
 
 
செண்டுவெளிக் களியாட்டம் என்றால் என்ன? செண்டு என்பதை விளக்குக.

 
 
விடை  : 

     பழந்தமிழ் மக்களின் வீர விளையாட்டுகளில் செண்டு வெளிக் களியாட்டம் மிகச் சிறந்ததென்பதைக் காப்பியங்கள் எடுத்துக் காட்டுகின்றன.  அந்தக் களியாட்டம் வீரனை நிர்ணயித்தது.  அக்காலத் தமிழ் மன்னர்களுடைய அரண்மனை ஒவ்வொன்றுக்குள்ளும் செண்டுவெளியென்ற பெரும் பயிற்சி அரங்கமொன்று இருந்து வந்தது.  ஆயிரக்கணக்கான மக்கள் வட்டமாகச் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க அந்த வெளியில் வசதியிருந்ததன்றி, மன்னரும் மற்றப் பெருங்குடி மக்களும் அமருவதற்குப் பெரும் மேடைகளும் அமைக்கப்பட்டிருந்தன.  செண்டு வெளியில் சமதரை சாதாரண நாட்களில்கூடப் பழுதுபார்க்கப்பட்டு வந்ததால், புரவிகள் வெகு வேகமாகச் செல்வதற்கும் அவற்றில் கால்கள் இடறாமலும் வழுக்காமலும் இருப்பதற்கும், எப்பொழுதும் வெகு சீராக வைக்கப் பட்டிருந்தது.  அந்தத் தரையின் அழகை ஒட்டியும், குதிரைகளைப் பழக்குவதற்குக் கூட அது உபயோகப்படுத்தப்பட்ட காரணத்தாலும் அதை வையாளி வீதியென்றும் மக்கள் அழைத்து வந்தார்கள்.  அரண்மனையின் அந்தச் சிறப்பு வெளிமுற்றத்தில் சாதாரண நாட்களிலும் வீரர்கள் குதிரையேற்றப் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.  செண்டாயுதப் பயிற்சியும் அங்கு தினந்தோறும் நடக்கும்.  ஆனால் மக்களுக்கு முரசு அறிவித்து நடத்தப்படும் செண்டுவெளிக் களியாட்டம் பெரும் பிரமை அளிக்கவல்லது.  கவிஞன்
நாவுக்கு வலு அளிப்பது, நாட்டுக்குக் கவிதை அளிப்பது வரலாற்று வித்தாக விளங்கியது.
 
 
 


     செண்டுவெளியாட்டம் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே மன்னர் ஆணையாளர் முரசு மூலம் செண்டு வெளி நடக்கும் தேதியை மக்களுக்கு அறிவிப்பார்கள்.  மூன்று நாட்களுக்கு முன்பிருந்து மீண்டும் செண்டு வெளித் தரையும், மன்னரும், மற்றோரும் அமரும் உயர் மேடைகளும் மிக மும்முரமாகச் செப்பனிடப்படும்.  மன்னனை வெளியிலிருந்து காக்க அழகிய பெரும் துணி கொம்புகள்மீது விரிக்கப்படும்.  உண்மையில் இதுகூட அவசியமில்லை.  ஏனென்றால் அந்தக் களியாட்டத்தில் ஏற்படும் வெறி, மாலை நேர வெய்யிலையோ வெப்பத்தையோ வானப் பொழிவையோகூட அலட்சியம் செய்யும்.  அன்று மக்களுக்கோ மன்னனுக்கோ அரண்மனைப் பெண்களுக்கோ மது சிறிதும் தேவையில்லை. போதையேற்ற செண்டுவெளி வீர நாடகமே போதும்.  அந்த வீரவிளையாட்டை "மண்டிலர் குதிரை நாடு வட்டம் போர் கூத்துமாகும்.  செண்டு செண்டாயுதம் பந்தெறி வீதி" ("நாநார்த்த தீபிகை" --- "ஒரு சொல் பல பொருள்" -- திருநெல்வேலிக்கவிராயர் முத்துசாமிப் பிள்ளை எழுதியது  -- பக்கம் 173 - சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு) எனப்பாடி இதைப் போர்க் கூத்து எனச் சிறப்பிப்பாரும் உண்டு.

     இந்தப் போர்க் கூத்தில் கையாளப்படும் செண்டு என்ற ஆயுதம் கிட்டத்தட்ட வேல் போன்றது.  வேல் போன்ற கூரிய முனையுடன் மட்டுமின்றி அந்த முனைக்குச் சற்றுக் கீழே பிடியைச் சுற்றிச் சின்னஞ்சிறு சூலங்கள் பலவும் வார்ப்படம் செய்யப்பட்டிருந்தபடியால் முனையின் அடிப்பாகம் செண்டு போல் பார்ப்பதற்கு அழகாகவும், வேகமாகப் பாய்ந்தால் சதையைப் பிய்த்துக் கொண்டு ஆழ உள்ளே சென்று தேகத்தில் நிலைத்துப் பறிக்க முடியாத முறையில் உயிரைக் குடித்துவிடும் தன்மை வாய்ந்ததாகவும் இருந்தது.  சிலசமயம் ஈட்டி முனைக்குக் கீழேயிருந்து சிறு சூலங்களில் சின்னஞ்சிறு துணிகள் சுற்றப்பட்டு எண்ணெயூற்றி நெருப்பும் வைக்கப் படுமாதலால், செண்டால் தாக்கப்படுபவர் தீப்புண் சுட்டு அப்புண்ணுக்குப் பலியாவதும் உண்டு.  நீண்ட மப்பிடியுடன், தலையில் கூரிய இரும்பு வேலும் அதையொட்டி சிறு இரும்பு சூலங்கள் பலவும் செண்டு போல் வார்க்கப் பட்டிருந்ததால் பார்வைக்கு மிக அழகாக இருந்த செண்டாயுதம் உண்மையில் உயிரை எளிதில் குடிக்கக்கூடிய பயங்கர ஆயுதமாக இருந்தது.  இத்தகைய ஆயுதத்துக்குத் தெய்வத்தன்மையும் கற்பிக்கப்பட்டிருந்தது.  இதை ஐயனாரின் ஆயுதமாகச் சிறப்பித்து வந்தார்கள் பைந்தமிழர்கள்.  இதன் காரணமாக ஐயனாருக்கு 'செண்டாயுதன்' என்ற திருநாமமும் வழங்கலாயிற்று.


சாண்டில்யனின் "ராஜமுத்திரை" வரலாற்றுக்கு கதையிலிருந்து வளர்த்துக்கொண்ட பொது அறிவு.
 
 
 




படங்கள் இணையத்திலிருந்து.... நன்றி


22.12.16

பிறமொழிக்கதைகள் :: ராவி நதியில் - உருது - குல்ஸார்



     இந்த வருட தினமணி தீபாவளி மலர் ஒரு விஷயத்தில் மிகவும் ரசிக்க வைத்தது.  தீபாவளிக் கதைகள் என்ற தலைப்பில் சில பொக்கிஷக் கதைகளை பிரசுரித்திருக்கிறார்கள்.  துமிலன் (நவீன தீபாவளி), 'சித்ராலயா' கோபு (தீபாவளி எப்படி), பெ நா அப்புஸ்வாமி (தீபாவளி பட்சணம்).
 
 


     அடுத்த பொக்கிஷம் பிறமொழிக் கதைகள்.  இதில் தகழி சிவசங்கரன்பிள்ளை - மலையாளம் (வெள்ளம்), சுனில் கங்கோபாத்தியாய - வங்காளம் (கதாநாயகி), திருபென் படேல் - குஜராத்தி (மகாத்மாவின் மனிதர்கள்), குல்ஸார் - உருது (ராவி நதியில்).   சிவசங்கரி அந்தந்த எழுத்தாளர்களை நேர்கண்டு அந்த உரையாடல்களுடன் தொகுத்திருக்கும் புத்தகம் "இலக்கியத்தின் மூலம் இந்திய ஒருங்கிணைப்பு"  (வானதி பதிப்பகம்).
 
 
 


     இது தவிர அசோகமித்திரன், சா. கந்தசாமி, பொன்னீலன், ஸிந்துஜா, இரா. சோமசுந்தரம், பா. முத்துக்குமரன், எஸ். சங்கரநாராயணன்,  ஜேஎஸ் ராகவன் ஆகியோரின் சிறுகதைகளும் உண்டு.
 
 
 


     தகழி எழுதியிருக்கும் 'வெள்ளம்' கதை கண்களை நிறைத்தது.  என்போன்ற நாலுகால் ஜீவன்களை நேசிக்கும் எல்லோருக்கும் அந்தக் கதை பிடிக்கும்.

     இதில் குல்ஸார் எழுதி இருக்கும் கதை படித்ததும் மனம் ஒரு கணம் ஆடி நின்றது.  குல்ஸாரை நேர்கண்டு எழுதி இருக்கும் சிவசங்கரி அவரிடம் இதை பற்றிக் குறிப்பிடும்போது "அக்கதையில் நீங்கள் எழுதி இருந்த கடைசிப் பகுதியைப் படிக்கும்போது உடம்பு உதறிப் போட்டது!" என்கிறார்.
 
 
 


     அதற்கு அவர் பதில் "என் சிறுகதைகள் ஒரு வகையில் கவிதைகள் போன்றவைதாம். மேலெழுந்தவாரியாகப் படித்தால் ஒரு சிறுகதை போலத் தோன்றும்.  ஆனால் அதற்கு கீழே ஒரு அடுக்கு உள்ளது.  அதற்குள் புகுந்து பார்க்கும்பொழுது முழுக்கதையையும் வேறொரு கோணத்திலிருந்து பார்ப்பது சாத்தியமாகும்.  பாகிஸ்தானில் பிறந்து பிரிவினையின்போது இந்தியாவுக்கு வந்த நான்தான் அந்த இரட்டைக் குழந்தைகள்.  இது ஒரு கண்ணோட்டம்.  இரட்டைக் குழந்தைகள் இரண்டு நாடுகளைக் குறிக்கின்றன என்பது இன்னொரு கோணம்.  வெறும் ஒரு நிகழ்வை மட்டும் அந்தக் கதை சொல்ல வரவில்லை.  அதையும் தாண்டி பல்வேறு நடப்புகளை உள்ளடக்கியது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இப்படி ஒவ்வொரு கதையின் கீழும் பல அடுக்குகள் உள்ளதால்தான் அவை கவிதைகள் போன்றவை என்றேன்".
 
 
 


     குல்ஸார் ஹிந்தியில் எழுதி இருக்கும் பல திரைப் பாடல்கள் எவ்வளவு உயர்ந்த தரம் என்பதை என் அரைகுறை ஹிந்தி அறிவிலேயே புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது.  படித்து முடித்ததும்  இந்தக் கதை என்னையும் உலுக்கிப் போட்டது.  இதே போன்றதொரு கதையை எழுத்தாளர் சுப்ரஜா ஸ்ரீதரன் எழுதி இருக்கிறார்.  அம்மா பற்றிய அந்தக் கதை அப்போது  என்னை திடுக்கிட வைத்தது.
 
 
 


     குல்ஸாரின் அந்தக் கதையை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



ராவி நதியில் (உருது)
 
குல்ஸார்




          தர்ஷன் சிங்குக்கு இன்னும் பைத்தியம் பிடிக்காமல் இருப்பது எப்படி என்று எனக்குப் புரியவில்லை.  அவன் அப்பா இறந்து விட்டார்.  அம்மா குருத்துவாராவின் கலவரத்தில் காணாமல் போய்விட்டாள்.  ஷாஹ்னி இரட்டைப் பிள்ளைக் குழந்தைகளைப் பிரசவித்துள்ளாள்.  அவனுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.  அவன் விஷயத்தில் விதி நன்றாக விளையாடி விட்டது.  ஒரு கையால் கொடுத்து விட்டு, மற்றொன்றால் பறித்துக் கொண்டுவிட்டது.

          சுதந்திரம் கிடைக்கப்போகிறது என்று தெரிந்தது.  ஆனால் அது லாயல்பூரை எப்போது அடையும் என்பது தெரியவில்லை.  குருத்துவாராவில் இந்துக்கள், சீக்கியர் - இரு மதத்தவருமே ரகசியமாகக் குழுமத் துவங்கிவிட்டார்கள்.  ஷாஹ்னி இரவும் பகலும் பிரசவ வலியால் முனகினாள்.  அதுதான் அவளுக்கு முதல் பிரசவம். 

          கலவரத்தைப் பாரிய புதிய தகவல்களை அவ்வப்போது தர்ஷன் சிங் சொல்வான்.

          அவனைச் சமாதானப்படுத்தும் விதமாக, "ஒண்ணும் ஆகாதுப்பா.... பயப்படாதே.  ஒரு இந்து, இல்லே சீக்கியரோட வீடாவது இதுவரைக்கும் தாக்கப்பட்டிருக்கா?" என்பார் அப்பா.

          ஆனா, குருத்துவாரவைத்த தாக்கியிருக்காங்களே, அப்பா?  ரெண்டு தரம் அதற்கு நெருப்பு கூட வச்சிருக்காங்க".

         "அப்பாவும் அங்கதான் போகணும்னு சொல்றீங்க!"

          தர்ஷன்சிங் உடனே மௌனமாகி விடுவான்.  மக்கள் என்னவோ தங்கள் வீடுகளை விட்டுவிட்டு குருத்துவாராவில்தான் அடைக்கலம் புகுந்தார்கள்.

          "எல்லாரும் ஒண்ணா சேர்ந்திருந்தா பாதுகாப்பாயிருக்கு, அப்பா.  நம்ம தெருவுல ஒரு இந்துவோ, சீக்கியரோ பாக்கி இல்லே...  நாம மட்டும் தான் தனியா இருக்கோம்"

          பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்னால், ஒரு நாள் இரவு முற்றத்தில் அப்பா விழும் சத்தம் கேட்டது.  திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார்கள்.  குருத்துவாரா இருந்த திசையிலிருந்து. 'ஜோ போலே ஸோ நிஹால்' என்ற மந்திர ஒலி கேட்டது.  மந்திர சத்தத்தில் விழித்துக்கொண்ட அப்பா, மொட்டைமாடிக்குப் போய்ப் பார்த்திருக்கிறார்.  திரும்ப இறங்கி வரும்போது, படிகளில் தடுக்கி, முற்றத்திலிருந்த கோடாரியை தலை மோதிக் கொள்ள, விழுந்து விட்டார்.

          அப்பாவின் இறுதிச்சடங்குகளை எப்படியோ செய்து முடித்தார்கள்.  தொடர்ந்து, தங்களது விலையுயர்ந்த உடைமைகளை ஒரு தலைகாணி உரையில் அடைத்துக்கொண்டு, குருத்துவாராவில் தஞ்சம் புகுந்தார்கள்.  அங்கு ஏற்கெனவே பயத்துடன் சிலர் இருப்பதை பார்த்தபோது, இவர்கள் பாதுகாப்பாக உணர்ந்தார்கள்.  அப்புறம் அவன் பயப்படவில்லை.

          "இங்கு நாம் மட்டும் தனியாய்ல்லே, அதோட கடவுளும் நம்ப கூடவே இருக்கார்" என்றான் தர்ஷன்சிங்.

          இளைஞர்கள் குழு ஒன்று இரவு பகலாக வேலை செய்தது.  மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து மாவு, பருப்பு, நேயையெல்லாம் தங்களுடனே கொண்டுவந்திருந்தார்கள்.  அங்கிருந்த சமயலறையில் இரவும் பகலும் அடுப்பு எரிந்தது.  ஆனால் அங்கேயே எவ்வளவு நாள் வசிப்பது?  எல்லோர் மனதையும் இதே கேவிதான் வாட்டியெடுத்தது.  அரசாங்கம் சீக்கிரமே உதவி செய்யும் என்று நம்பினார்கள்.

          "எந்த அரசாங்கம்?" என்று யாரோ கேட்டார்கள்.  "இங்கிலீஷ்காரங்க நம்ம நாட்டைவிட்டுப் போயிட்டாங்க".

          "பாகிஸ்தான்னு தனி நாடு உருவாயிடுச்சு.  ஆனா அரசாங்கம் இன்னும் அமையலையே.:"

          "எங்க பார்த்தாலும் ராணுவக்காரங்கதான் உதவி பண்றங்களாம்., நாடு விட்டு நாடு போறவங்க எல்லைக்குப் போய்ச்சேர."

          "நாடு விட்டு நாடு போறவங்களா?  யாரது?"

          "அகதிங்க..."

          "இப்படியொரு வார்த்தைய இதுவரைக்கும் நான் கேட்டதேயில்லே."

            சில குடும்பங்களால் இந்த அழுத்தத்தைத் தாங்க முடியவில்லை.

            "நாங்க ஸ்டேஷனுக்குப் போகப் போறோம்.  ரயிலெல்லாம் மறுபடி ஓடுதாம்.  இங்கயே எத்தனை நாள்தான் இருக்கறது?"

          "நாமதான் தைரியமா இருக்கணும்.  கடவுளா நம்மை தோள்ல சுமப்பார்?"

          "நானக் நாம் ஜஹாஸ் ஹை,  ஜோ சத்தே ஸோ உத்தரே பார்!"  (குரு நானக்கிற்கு ஆயிரம் பெயர்கள் உண்டு.  அவரை நம்புபவர் அக்கரையை அடைவார்) என்று அவர்களுள் ஒருவர் உரக்கக் குரல் கொடுத்தார்.

          ஒருசிலர் அந்த இடத்தக்கைவிட்டு அகன்றதால், அங்கே ஒரு சூனியம் உருவாயிற்று.  வேறு சிலர் அங்கே நுழைந்து வெளியுலகத்திலிருந்து செய்தி கொண்டு வரும்போதெல்லாம் அந்த சூனியம் நிரம்பியது.

          "ஸ்டேஷன்ல பெரிய ஜனக்கூட்டம் முகாம் போட்டிருக்கு."

          "சில பேர் பசியில சாகரங்க.  சில பேர் ஒரேயடியாக திங்கறாங்க.  தொத்து நோய் வேற பரவுதாம்."

          "அஞ்சு நாளைக்கு முன்னால இந்த வழியா ஒரு ரயில் போச்சு...   எள்ளு விழ இடமில்லே...  அதுல கூரை மேல்கூட மனுஷங்க உட்கார்ந்திருந்தாங்க."

          அன்று சங்கராந்தி.  காலையிலிருந்து இரவு நெடுநேரம் வரை குருத்துவாராவில் பிரார்த்தனைகள் நடந்தன.  அந்த சுபதினத்தில்தான் அவள் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்தாள்.  ஒன்று ரொம்ப பலவீனமாக இருந்தது.  அந்தக் குழந்தை உயிர் பிழைப்பதே கடினம் என்று தோன்றியது.  ஆனால் அதைப் பிழைக்க வைக்க ஷாஹ்னி போராடினாள்.

          அன்றிரவு யாரோ அறிவித்தார்கள்.  "அகதிகளுக்காக ஸ்பெஷல் ரயில் வந்திருக்கலாம்.  போகலாம், வாங்க."

          ஒரு பெரிய கூட்டம் குருத்துவாராவிலிருந்து கிளம்பியது.  தர்ஷன் சிங்கும் அதில் சேர்ந்து கொண்டான்.  ஷாஹ்னி மிகவும் பலவீனமாக இருந்தாலும், தன் மகன்களுக்காகக் கிளம்ப ஒப்புக்கொண்டாள்.  ஆனால் தர்ஷன் சிங்கின் அம்மா மறுத்து விட்டாள்.

          "நான் அப்புறமா வரேம்ப்பா... அடுத்த கூட்டத்தோட வரேன்.  உன் பெண்டாட்டியையும் பிள்ளைகளையும் கவனி".

          தர்ஷன் சிங் அவளோடு விவாதிக்க, கோவில் குருக்களும் சொல்லிப் பார்த்தார்.  ஆனால், "நீங்க கிளம்புங்க சர்தார்ஜி.  ஒவ்வொருத்தரா நாங்களும் எல்லைக்கு வந்துடுவோம்.  அம்மாவ எங்களோட அழைச்சிட்டு வரோம்" என்று சமாதானப்படுத்தினார்கள் தொண்டர்கள்.

            மற்றவர்களுடன் தர்ஷன் சிங்கும் கிளம்பினான்.  தன் குடும்பத்து சொத்தே அதுதான் என்பது போல, குழந்தைகளை ஒரு கூடையில் வைத்து தன் தலைமீது தூக்கிக் கொண்டாள்.

            ஸ்டேஷனில் காத்திருந்த ரயிலில் துளிக்கூட இடமில்லை.  பெட்டிகளின் கூரைகளில் புற்களைப்போல மக்கள் முளைத்திருந்தார்கள்.

            சின்னஞ்சிறு சிசுக்களை, சோர்ந்து போயிருந்த அவர்களின் அம்மாவையும் பார்த்தவர்கள், பரிதாபப்பட்டு கூரையில் கொஞ்சம் இடம் ஒதுக்கிக் கொடுத்தார்கள்.

            பத்து மணிநேரம் கழித்து நகராத துவங்கியது ரயில்.  அந்திவானம் சிவந்து, சூடாக இருந்தது.  ஷாஹ்னியின் மார்பகங்கள் தொடர்ந்து உறிஞ்சப்பட்டு, வறண்டே போய்விட்டன.  ஒவ்வொரு குழந்தையாய் மாறி மாறி பால் கொடுத்தாள்.  அழுக்குத் துணிச் சுருளில் இருந்த இரண்டும், குப்பைத் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்டவை போலக் காட்சியளித்தன.

            ரயில் தொடர்ந்து ஓடி இரவுக்குள் நுழைந்தது.  சில மணிநேரம் கழித்து, ஒரு குழந்தை தன் கைகால்களை உதைத்தும் அழுதவாறும் இருக்க, மற்றொன்று அசைவற்றிருந்ததை தர்ஷன் சிங் கவனித்தான்.  துணிச்சுருளுக்குள் கையை விட்டுத் தொட்டுப் பார்த்தபோது, குழந்தையின் உடல் சில்லிட்டிருப்பதையும், அது இறந்துபோய் சற்றுநேரம் ஆகியிருக்கவேண்டும் என்பதையும் உணர்ந்தான்.

          தர்ஷன் சிங் உரக்க விசும்பத் துவங்கினான்.  சுற்றியிருந்தோருக்கு விஷயம் புரிந்தது.  இறந்த குழந்தையை ஷாஹ்னியிடமிருந்து அகற்றப் பார்த்தார்கள்.  ஆனால் அவளோ   அமர்ந்து, கூடையைத் தன் மார்போடு இறுக்கிக் கொண்டிருந்தாள்.

            "தம்பி இல்லாம இவனும் பால் குடிக்க மாட்டான்."

            எல்லோரும் வற்புறுத்தியும் அவள்  கூடையை விலக்க மறுத்துவிட்டாள்.

          ரயில் பல முறைகள் நின்று நின்று கிளம்பியது. 

          இப்போது எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்று இருட்டில் துழாவிப் பார்த்துப் புரிந்துகொண்டார்கள்.

          "கைராபாத்தைத் தாண்டிட்டோம்."

          " நிச்சயமா இது குஜ்ரன்வல்லாதான்."

          "இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு.  லாகூர் தாண்டியதும் இந்துஸ்தான் வந்துடும்."

          சற்றே நம்பிக்கை பிறந்ததும், சிலர் உரக்கக் கூச்சலிட்டார்கள்.

          "ஹர் ஹர் மகாதேவ்!"

          "ஜோ போலோ ஸோ நிஹால்!".

          ரயில் பாலத்தை அடைந்ததும், கூட்டத்தில் பரவசம் ஏற்பட்டது.

          "ராவி நதியை அடைஞ்சிட்டோம்."

          "இதுதான் ராவி.  நாம இப்போ லாகூர்ல இருக்கோம்."

          அந்தக் குழப்பத்தில், தர்ஷன் சிங்கின் காதில் யாரோ கிசுகிசுத்தார்கள்.  "சர்தார்ஜி,  இறந்த குழந்தையை ராவி நதியில வீசிடுங்க.  அவனுக்குப் புண்ணியம் கிடைக்கும். அவனைத் தூக்கிட்டு அந்தப்பக்கம் போவானேன்?"

          தர்ஷன் சிங் வெகு ஜாக்கிரதையாக மனைவியிடமிருந்து கூடையைப் பிடித்து இழுத்தான்.  அதிலிருந்து துணிச்சுருளை அவசரமாக உருவி, கடவுளின் பெயரைச் சொல்லியவாறு அதைத் தூக்கி ராவி நதியில் வீசினான்.

          இருட்டில், ஒரு சின்னக்குழந்தையின் அழுகையொலி அவன் காதில் விழுந்தது.  தர்ஷன் சிங் பீதியுடன் மனைவி இருந்த பக்கமாகப் பார்த்தான். இறந்துபோன குழந்தையை அவள் தன் மார்போடு அணைத்திருந்தாள்.  அப்போது புயலென எழுந்தன உரத்த குரல்கள் - "வாகா, வாகா."

          "இந்துஸ்தான் ஜிந்தாபாத்!"
 
 
 
 
 
 


சிவசங்கரியின் "இலக்கியத்தின் மூலம் இந்திய ஒருங்கிணைப்பு"  (வானதி பதிப்பகம்) கதையை தினமணி தீபாவளி மலர் புத்தகத்தில் வெளியிட்டிருப்பதிலிருந்து.




20.10.16

முன்னுரை : பிரதாப முதலியார் சரித்திரம்



     புத்தகங்களுக்கு எப்போது முன்னுரை எழுதும் வழக்கம் ஏற்பட்டது?  
     முதலிலிருந்தே.....!


     முதல் முன்னுரை!
 
    
     தமிழ் நவீனத்தின் முதல் முன்னுரை!


 
     தேடினால், தமிழின் முதல் நவீனமாம் "பிரதாப முதலியார் சரித்திரம்" புத்தகத்துக்கே முன்னுரை இருக்கிறது.  இல்லாமல் இருக்குமா என்கிறீர்களா?  அதுசரி!  முன்னுரையில் அப்போதைய பாணி எப்படி இருந்தது என்று தெரிய வேண்டாமா?





     தமிழின் முதல் நாவல் வகை நூல்.  1857 இல் எழுதப்பட்டு, 1879 இல் வெளியானதாம். ஏன் அவ்வளவு இடைவெளியோ!  அதுவரை செய்யுள் நடையில் எழுதப்பட்டுக் கொண்டிருந்த புனைவிலக்கியத்துக்கு முதல் முறையாக வசன நடையில் ஒரு படைப்பு.



     அதன் ஆசிரியர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய அந்த முன்னுரையை இந்த வாரம் பார்ப்போம்.


     கதை இருக்கும் நடையில் முன்னுரை இல்லை!  இந்தக் காலத் தமிழை ஒட்டியே இருக்கிறது.  தமிழ் வாசகர்களின் ரசனை, சுவை மேல் ஆசிரியருக்கு இருக்கும் நம்பிக்கையை, நாடி பிடித்துப் பார்த்திருப்பதை தனது வரிகளில் வெளிப்படுத்துகிறார்.  அல்லது அதைப் படித்த வாசகர்கள் (அப்போதுதான் தொடங்கும் வழக்கங்கள் என்பதால்) உண்மை, உண்மை என்று படித்திருக்கக் கூடும்.
 

     "இந்திய வாசகர்களுக்கு ராஜா ராணிகள் பற்றிப் படிப்பதில் மிகுந்த ஆசையுண்டு.  கண்ணைக்கட்டி காட்டில் விட்டால் அலைந்து திரிவதில் மிகுந்த உற்சாகம் உண்டு. பொன்னால் ஆக்கப்பட்ட அரச மாளிகையைப் பார்த்துக் கொண்டே இருப்பதிலும், பூங்கா வனத்தருகில் உள்ள நீர் வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு படுத்திருப்பதிலும் அவர்களுக்கு மிகுந்த பிரியம் உண்டு."




     "பல்வேறு காட்சிகளில் பல உப பாத்திரங்கள் பல்வேறு வகைகளில் தங்கள் பாகங்களில் சிறப்புற நடித்திருக்கின்றனர். " என்று அவர் சொல்வது புதுமையாக இருக்கிறது, நாடகம் போடுவது போல ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.  


     கதையை ஒரு போதனை முறையில் எழுதியிருப்பதைச் சொல்கிறார்.  சமயம் சார்ந்து எழுதியிருப்பதையும் சொல்லும் அதே நேரம் பிற சமயத்தினர் மனதை புண்படுத்தும் வகையில் எழுதவில்லை என்றும் சொல்கிறார்.  தனது படைப்பில் என்னென்ன இருக்கிறது என்று ஒரு சிறு முன்னோட்டம் மாதிரித் தருகிறார். 

     கதையைப் பொறுத்தவரை சமூக நாவலாகத் தொடங்கும் கதை, பின்னர் ராஜா ராணி கதைக்குள்ளும் சென்று வருகிறது.

     46 அத்தியாயங்கள் கொண்ட இந்தக் கதையை இங்கு படிக்கலாம்.

     இன்னொரு விஷயம்.  பிரதாப முதலியார் சரித்திரம் தமிழின் முதல் நாவல் இல்லை என்று சிட்டி சிவபாதசுந்தரம் சொல்கிறாராம்.  






     வித்துவான் சேஷையங்கார் என்பவர் எழுதிய "ஆதியூர் அவதானி சரிதம்" என்கிற நூல்தான் முதல் நாவலாம்.  அதை பற்றி இங்கு படிக்கலாம்!  இந்தப் புத்தகம் 1875 இல் இந்தக் கதை வெளியானதால்.  


      ஆனாலும் நம்முடைய ( !!! ) பிரதாப முதலியார் சரித்திரம் 1857 முதலே எழுதப் பட்டு வந்தது அன்றோ?  அப்போது [நம்மைப் பொறுத்தவரை] அதுதான் முதல்!!


     இனி முன்னுரை :  (முழுதாகப் படிப்பீர்கள் அல்லவா!)



==============================
================================
பிரதாப முதலியார் சரித்திரம் -  மாயூரம் ச. வேதநாயகம் பிள்ளை 


ஆசிரியர் முன்னுரை :  


தமிழில் உரைநடை நூல்கள் இல்லையென்பது ஒப்புக்கொள்ளப் படுகிறது.   இந்தக் குறைபாட்டைப் பற்றி எல்லோரும் வருந்துகின்றனர்.  இக்குறையை நீக்கும் நோக்கத்துடன் தான் இந்தக் கற்பனை நூலை எழுத முன்வந்தேன்.  மேலும் நீதி நூல், பெண்மதி மாலை, சமரசக் கீர்த்தனம் முதலிய ஏற்கெனவே வெளிவந்துள்ளன. எனது நூல்களில் குறிப்பிடப் பட்டிருக்கும் அறநெறிக கொள்கைகளுக்கு உதாரணங்களைக் காட்டவும் இந்த நவீனத்தை எழுதினேன்.


இந்தக் கதைக்கு நிலைக்களம் தென் இந்தியா.  கதா நாயகன் இப் பக்கத்தகவர்; நன்கு கல்வி பயின்றவர்;  மகா புத்திசாலி; நகைச்சுவையுடனும் அருகி சுடர் வீசும் வகையிலும் பேச வல்லவர்.  அவர் தனது பிறப்பு, வளர்ப்பு, பெற்றோர், கல்வி பயின்றது, திருமணம் செய்து கொண்டது போன்ற தனது வாழ்க்கையில் முக்கியமான சம்பவங்களை விவரிக்கிறார்.  கதையில் இடையிடையே ஹாஸ்ய சம்பவங்களும் தமாஷான பேச்சுக்களும் பின்னப்பட்டிருக்கின்றன.  அறத்துறை சம்பந்த கருத்துக்களும் இடம் பெற்றிருக்கின்றன.


இந்த நவீனத்தில் முக்கியமான பங்கு கொள்பவர்கள் கதா நாயகனின் அன்னை 'சுந்தர அண்ணி'யும் அவருடைய மனைவி 'ஞானாம்பாளும்' .  இவ்விருவரும் உயர்குடியில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர்கள்.  எல்லாவிதமான நற்பண்புகளும் உடையவர்கள்;  பெண் குலத்திற்கு அணிகலனான எல்லா லட்சணங்களும் பொருந்தியவர்கள்.  


வாழ்க்கையில் பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் அவர்களுடைய உயர் குணங்கள் பிரகாசிக்கின்றன.  தங்களுக்கு நேரக்கூடிய கஷ்டங்களையும் பொருட்படுத்தாமல்,  அவர்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நீதியையும், மனித தர்மத்தையும் காக்க முன்வருகின்றனர்.  தன்னால் கட்டுப்படுத்த முடியாத பல சந்தர்ப்பங்களில், எதிர்பாராத சேர்க்கையினால் 'ஞானாம்பாள்' ஆண்வேடம் பூண்டு மகோன்னத சக்தி பெற்று, புத்தி சாதுர்யத்துடனும் திறமையுடனும் ஆட்சி புரிகிறாள்.  இந்திய வாசகர்களுக்கு ராஜா ராணிகள் பற்றிப் படிப்பதில் மிகுந்த ஆசையுண்டு.    கண்ணைக்கட்டி காட்டில் விட்டால் அலைந்து திரிவதில் மிகுந்த உற்சாகம் உண்டு. பொன்னால் ஆக்கப்பட்ட அரச மாளிகையைப் பார்த்துக் கொண்டே இருப்பதிலும், பூங்கா வனத்தருகில் உள்ள நீர் வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு படுத்திருப்பதிலும் அவர்களுக்கு மிகுந்த பிரியம் உண்டு.  இம்மாதிரி மனப்பாங்குள்ள வாசகர்களின் சுவையைத் திருப்தி செய்வதற்காக ஞானாம்பாளை மனிதர் அடையக் கூடிய மகோன்னத பதவிக்கு உயர்த்தி யிருக்கிறேன்.  


கதாநாயகனின் தந்தையும், மாமனாரும் உயர் குடும்பத்தில் பிறந்தவர்கள்;  ஆனால் கல்விப் பேறு பெறாத நாட்டு மக்கள்;  வக்கிர போக்குடையவர்கள்;  விசித்திர குணம் படைத்தவர்கள்.  ஆனாலும் சுந்தர அண்ணியும், ஞானாம்பாளும் கையாளும் பண்பு மிக்க தந்திரங்களால் அவர்களிடம் மயங்கி கிடந்த நற்பண்புகள் பிரகாசித்து, அவர்களும் புகழத்தக்க செயல் புரிகின்றனர்.  பல்வேறு காட்சிகளில் பல உப பாத்திரங்கள் பல்வேறு வகைகளில் தங்கள் பாகங்களில் சிறப்புற நடித்திருக்கின்றனர்.  அவர்களுடைய செயல்களில் பெற்றோரிடம் பாசம், சகோதர வாஞ்சை, கணவன் மனைவி அன்பு, கற்பு, எல்லோருக்கும் நலம் புரிதல், நாணயம், நன்றி முதலிய நற்பண்புகளை உதாரணங்களைக் காண்கிறோம்.  சமயம் போதிப்பதும், அனுபவம் உணர்த்துவதுமான நற்குணமின்றி இந்த வாழ்க்கையில் கூட இன்ப வாழ்வு வாழ முடியாது என்னும் மூதுரைக்கும் கதையில் உதாரணங்கள் காணப்படுகின்றன. 


தேசியப் பண்பு, இல்வாழ்க்கை, தென்னிந்திய மக்களின் பழக்க வழக்கங்கள் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன.  இடையிடையே நகைச்சுவை மிக்க சம்பவங்களும், சுவை மிக்க அஃதைகளும் இடம் பெற்றிருக்கின்றன.  உலகத்தோரிடம் பொதுவாகக் காணப்படும் பலஹீனங்களும், குறைபாடுகளும் ஆங்காங்கே கேலி செய்யப்பட்டிருக்கின்றன,. நான் கடவுள் பக்தி புகட்டியிருக்கிறேன்.  குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் யாவரும் செய்ய வேண்டிய கடமைகளையும் வற்புறுத்தியிருக்கிறேன்.  நல்வழியின் இயல்பான சிறப்பையும், தீய வழியில் உள்ள கொடூரங்களையும் நான் விவரிக்க முயற்சித்திருக்கும் முறையில் வாசகர்கள் நல்லதை விரும்பித் தீயதை வெறுக்க முன்வருவார்கள்.  பல்வேறு பாத்திரங்களையும், சம்பவங்களையும் விவரிப்பதில் நான் இயற்கையை ஒட்டியே எழுதியிருக்கிறேன்.  அற்புதங்களையோ உணர்ச்சி வசப்பட்டோ எழுத்துவதைத் தவிர்த்திருக்கிறேன்.  எந்த மதத்தினர் சமய பற்றையும் புண்படுத்தாமல் ஜாக்கிரதையாகவே எழுதியிருக்கிறேன்.


சில நாவலாசிரியர்கள் மனித இயல்பை உள்ளது உள்ளபடியே வருணித்திருக்கிறார்கள்.  இவர்கள் மனிதர்களில் கடையவர்களை வருணிப்பதால் அனுபவமற்ற இளைஞர்கள் இந்த உதாரணங்களைப் பின்பற்றுகின்றனர்.  இந்தக் கதை எழுதுவதில் இந்த முறையை நான் பின்பற்றவில்லை.  முக்கியமான பாத்திரங்களை நான் பூரண சற்குணம் படைத்தவர்களாகவே சித்தரித்திருக்கிறேன்.  பிரபல அற நோக்குள்ள ஆங்கில ஆசிரியர் டாக்டர் ஜான்சனையே இவ்விஷயத்தில் நான் பின்பற்றியுள்ளேன்.  அவர் 'ராம்ப்ளர்' என்னும் நூலின் நான்காவது பகுதியில் கூறுகிறார்.


"வரலாற்று அடிப்படைக்கு கதைகள் தவிரப் பிறவற்றில் நற்குணத்துக்குச் சிறப்பான உதாரணமாக விளங்கும் பகுதிரங்களை ஏன் சிருஷ்டிக்கலாகாது என்பது எனக்கு விளங்கவில்லை.  நற்குணமட்டுமென்றால் தெய்வீகத் தன்மை வாய்ந்ததென்றோ, நடக்கக் கூடாத சம்பவமென்றோ அர்த்தமில்லை.  ஏனெனில் நாம் உணரமுடியாததைப் பின்பற்ற மாட்டோம்.  ஆனால் மனிதர்கள் முயற்சித்து அடையக்கூடிய உயர்தர - தூய்மை மிக்க - நற்பண்பு புரட்சிகரமான சந்தர்ப்பங்களில் சில விபத்துகளைச் சமாளிப்பதிலோ அல்லது அனுபவிப்பதிலோ நாம் காட்டக் கூடிய சிறப்புகளை நாம் அடையலாம்.  அல்லது நாமே செய்து காட்டலாம் என்பதை நமக்கு உணர்த்துகிறது.  தீமையையும் காட்ட வேண்டியதுதான்;  ஆனால் காட்டப்படும் தீமை அருவருக்கத் தக்கதாக இருக்க வேண்டும்.  தீமை தோன்றும் இடங்களிலெல்லாம் அதைக் கையாளும் முறையிலிருந்து அதனிடம் வெறுப்புக் கொள்ள வேண்டும்.  அதன் அற்புதத்தனமான தந்திரங்கள் மூலம் அதனிடம் நமக்கு நிந்தையான எண்ணம் உதயமாக வேண்டும்.  ஏனெனில் தீமையை ஆதரிப்பது போல் காட்டினால் அதை யாரும் கண்டு அஞ்ச மாட்டார்கள்."


தமிழில் இம்மாதிரி உரைநடை நவீனம் பொதுமக்களுக்கு இதுவரை அளிக்கப் படவில்லை.  ஆகையால் இந்த நூல் வாசகர்களுக்கு ரசமாகவும், போதனை நிறைந்ததாகவும் இருக்கலாம் எனப் பெருமை கொள்கிறேன்.  இம்மாதிரிப் புதிய முயற்சிகளில் ஏதாவது குற்றங்குறைகள் இருப்பின் பொறுத்தருளுமாறு பொது மக்களை வேண்டிக் கொள்கிறேன்.



ச. வேதநாயகம் பிள்ளை.


==============================
===================================

13.1.16

ரசித்தவை, ருசித்தவை :: சுஜாதா வர்ணனைகள்..

                                        Image result for sujatha s rengarajan images                                        Image result for sujatha s rengarajan images

இவற்றை எழுதியவர் யார் என்று கேட்பது அபத்தம்.  வரிகள் காட்டிக் கொடுத்து விடும்.  எனவே இந்த வரிகள் அவரின் எந்தப் படைப்பில் வெளிவந்தவை என்று கேள்வியை மாற்றிக் கொள்(ல்)கிறேன்! 

                              Image result for sujatha s rengarajan images              Image result for sujatha s rengarajan images           Image result for sujatha s rengarajan images

ஆனால் அதுவும் கஷ்டமான கேள்வியல்ல.  ஒன்றிரண்டைத் தவிர மற்றவற்றை எளிதாகச் சொல்லி விடலாம்!

 


1)  சரண்யா போனை வைத்தாள்.  அவள் திலீப்புக்கு சம உயரம் இருப்பாள்.  பூசின தேகம்.  முதல் பிரசவத்திலேயே மாமியாகி விடுவாள் என எச்சரித்தது.  எடையையும் இடையையும் கவனிக்கவில்லை என்றால் பருத்து விடுவாள்.  ஆனால் குழந்தை முகம்.  அவளுக்கு நாய்க்குட்டி, பூனைக்குட்டி, ஏன், எலி, அணில்கள் எல்லாம் பிடிக்கும்.  கர்னாடக சங்கீதம் கேட்பாள்.  லூயி கரால் படிப்பாள்.  

             Image result for sujatha s rengarajan images        Image result for sujatha s rengarajan images


2)  உள்ளே நுழைந்த பெண்ணுக்கு வயது பத்தொன்பதுக்கு மேல் ஒரு செகண்ட் கூட இருக்காது என்று தோன்றியது.  கரிய கூந்தல், கரிய கண்கள்,  உடலின் சாத்தியங்களை மழுப்பியிருந்த கரிய பளபளப்பு உடைகள்.  அதன் மார்புப் பகுதியில் எம்ப்ராய்டரி போட்டு, வசந்த்தின் இதயத் துடிப்பை கதிகலக்க சற்றே திறந்திருந்தது.  பிரதான மூக்கில் குத்தி ஒரே ஒரு சிறிய வைரம் பளிச்சிட்டது.  தூக்கலான மூக்குக்குத் தோதாக இருந்தது.

 


3)  "மே ஐ கமின்?" என்றாள்.


 "யெஸ்" என்றேன்.  நைலான் சாகரமாக உள்ளே நுழைந்தாள்.  அவள் அணிந்திருந்த புடைவையை நான்  விரும்பினேன்.  நான் மட்டும் தொடர் நாவலின் ஹீரோ சேகராக இருந்தால் அவளைக் கண்ட உடன் காதல் கொண்டிருப்பேன்.  அழகி.  மூக்கு நுனியில் ஒரு சிறு வளைவு ஒரே குறை.  யூனிவர்ஸிட்டி படிப்பினால் உதட்டோரத்தில் ஒர் அலட்சியம்.  நல்ல வளர்த்தி.  நல்ல வளர்ப்பினால் பொருத்தமான உடை, பொய்யில்லாத வளப்பம்.  புன்னகைக்காக சுப்ரீம் கோர்ட் வரை வாதாடலாம்.  மனித வாழ்க்கைக்கு அத்தம், காரணம் ஏற்படுத்தும் புன்னகை. 




                                          Image result for sujatha s rengarajan images         Image result for sujatha s rengarajan images


4)  எனக்காக அந்த மாது காத்திருந்தாள்.  "நீங்கள் பத்து நிமிஷம் லேட்"  என்றாள்.  நான் கதவைத் திறந்து என் தாமதத்தைப் புன்னகையால் மறைத்தேன்.   பின் குறிப்பாக "ஸாரி" என்றேன்.  அம்மாள் வெண்மை சாகரமாக இருந்தாள்.  அவளுக்கு வயது நாற்பத்தி எட்டு இருக்கலாம்.  லேசாக மீசை இருந்தது.  கண்களில் கண்ணாடி வட்டங்கள்.  தலையில் நரை என்பதே இல்லை.  விஸ்தாரமாக இருந்தாள்.




5)  நான்  கல்யாணத்துக்குப் பெண் பார்க்கப் போகிறவன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  பெண் என் முன் எப்படி வந்து உட்காருவாள்?  அப்படி வந்து உட்காந்தாள் மாயா.  தரை நோக்கி வந்தாள்.  ஒரு தடவை நிமிர்ந்து கரம் குவித்து, போர்த்திக் கொண்டு உட்கார்ந்தாள்.  தன் கை நகங்களைப் பார்த்துக் கொண்டாள்.  எளிய ஸாரி அணிந்திருந்தாள்.  கழுத்தில் காதில் நகைகள் இல்லை.  திருவள்ளுவரின் 'மனைமாட்சி' என்கிற அதிகாரத்திலிருந்து நேரே நடந்து வந்தவள் போலிருந்தாள்.  

           Image result for sujatha s rengarajan images                                      Image result for sujatha s rengarajan images


6)  "என்ன ரத்னா?" என்று குரல் கேட்டுத் திரும்பினேன்.  சரஸ்வதி!  ஆம்.  அவள்தான் சரஸ்வதியாய் இருக்க வேண்டும்.  அம்மாடி!  ஒரு இந்தியப் பெண்ணுக்கு இத்தகைய அதிக உயரம், வளர்த்தி, அடர்த்தி!  உடைகளை மீறி வழிந்து கொண்டிருந்தாள் சரஸ்வதி.  நல்ல உயர்தரப் பட்டுப்புடைவை அணிந்து கொண்டு சிக்கனமாக தலையை முடிந்து கொண்டு, நெற்றியில் ஒன்றுமில்லாமல்... நாற்பது வயதிருக்கும்.  இன்னும் அழகு தேங்கியிருக்கும் சரஸ்வதி.  காயத்ரியின் வருணனை கச்சிதமாகப் பொருந்துகிறது. 

                                                         
                                                                                  Image result for sujatha s rengarajan images