வெயில் காலத்தை வீணாக்க மனம் வரவில்லை.
வெள்ளிக்கிழமை மாலை திடீரென எழுந்தது அந்த (விபரீத) எண்ணம்.
'வாங்குவோம் - பிறகு என்ன செய்யலாம் என்று பார்ப்போம்' என்று தீர்மானித்து வாங்கி வந்திருந்த முத்துப்பல்லழகி ஜவ்வரிசி பாக்கெட்டிலிருந்து என்னைப் பார்த்துச் சிரித்ததால் வந்த எண்ணமாக இருந்திருக்கும்.
எனக்குத் தோன்றிய வகையில் ஜவ்வரிசி வடாம் தயார் செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம்தான் அது.
முக்கியமாக என் நடவடிக்கைகள் என் மனைவிக்குத் தெரியக்கூடாது. (பாஸ் என்று குறிப்பிடவில்லை என்பதை புத்திசாலி வாசகர்கள் கவனித்து, இந்தப் பதிவை எழுதியவர் யார் என்று தெரிந்துகொண்டுவிடுவார்கள்) மனைவிக்குத் தெரிந்தால், ஒவ்வொரு ஸ்டெப்பிலும் X போட்டு, எனக்கு சைபர் மார்க் போட்டுக்கொண்டே இருப்பார்.
இரண்டு கரண்டி ஜவ்வரிசியை எடுத்து, ஒரு பாத்திரத்தில் இட்டு, ஆறு கரண்டி தண்ணீரில் அதை மூழ்கடித்து, பாத்திரத்தை ஓசைப்படாமல் மூடிவைத்துவிட்டு வந்தேன்.
சனிக்கிழமை அதிகாலையில், அந்தப் பாத்திரத்தை அடுப்பிலேற்றி, நூறு டிகிரி சென்டிகிரேடிலேயே வைத்திருந்தேன். (இண்டக்ஷன் ஸ்டவ் வாழ்க) கொஞ்சம் கொஞ்சமாகக் கொதித்து, ஜவ்வரிசிகள் எல்லாமே கிளியர் கண்ணாடி கோலிகளாகக் காணப்படும்பொழுது, அடுப்பணைத்து, பாத்திரத்தை இறக்கிவைத்தேன்.
(மனைவி கண் விழித்துவிட்டார்கள். இன்னும் ஒருமணி நேரத்திற்கு, எல்லா சானலிலும் வருகின்ற தெய்வதரிசனங்கள் அவருக்குப் பொழுதுபோக்கு)
ஜவ்வரிசிக்கூழ் ஆறிவிட்டது. (அல்லது கைபொறுக்கும் சூடு)
ஒரே ஒரு பச்சைமிளகாய் எடுத்து, சிறிய துண்டுகளாக நறுக்கி, அதை மிக்சி சிறிய ஜாரில் போட்டு, ஒரு கரண்டி தண்ணீர் விட்டு, அரைத்து, அந்த மிக்சரை, ஒரு டீ வடிகட்டி மூலமாகக் கூழில் ஊற்றினேன்.
கூழை நன்றாகக் கலக்கிவிட்டேன்.
அரை மூடி எலுமிச்சம்பழத்தை டீ வடிகட்டி மூலமாக கூழில் பிழிந்து, மீண்டும் கிளறிவிட்டேன்.
தேவையான அளவு உப்புப் பொடி போட்டு, மீண்டும் கிளறல்.
அப்புறம் என்ன சேர்க்கலாம் என்று சுற்றுமுற்றும் பார்த்தபொழுது கண்ணில் பட்டது எல் ஜி பெருங்காயப்பொடி. போடு அதையும் என்று இரண்டு சிட்டிகை பெருங்காயப் பொடியையும் கூழில் போட்டேன். கலக்கிவிட்டேன்.
வடாம் மாவு தயார்.
நான் ஒரு அரைச் சோம்பேறி. வடாம் இடுவதற்கு துணி எல்லாம் தயார் செய்வது என் இயல்புக்கு ஒவ்வாத விஷயம். ரிலையன்ஸ் ஃபிரெஷ் கடையில் லூசாக (ஹி ஹி நான் ஒரு லூசுப்பய) அரிசி வாங்கிய பை இருந்தது. அதை எடுத்து, பெரிய பரப்பளவு வரும் வகையில் கட் செய்து, வெய்யிலில் வைத்து, நான்கு பக்கங்களிலும் பேப்பர் பறக்காமல் இருக்க கல் வைத்தேன்.
ஜவ்வரிசி வடாம் கூழை, ஒரு சிறிய ஸ்பூனால் எடுத்து, டக் டக் டக் என்று பேப்பரில் இட்டேன். இரண்டு நிமிட நேரத்தில் அறுபது டாட் வடாம் இட்டாச்சு.
காக்கா வராமல் இருப்பதற்கு, வடாமிட்ட பேப்பரின் மேலே, துணி உலர்த்தும் ஸ்டாண்ட் வைத்தேன். மாலையில் வெயில் போனதும், பேப்பரோடு எடுத்து உள்ளே வைத்தேன்.
ஞாயிற்றுக்கிழமை காலையில், பேப்பரிலிருந்து ஒவ்வொரு வடாமாக எடுத்து, (சுலபமாக எடுக்கமுடிந்தது) ஒரு தட்டில், ஈரம் இருக்கும் பக்கம் மேலே இருக்கும் வகையில் போட்டேன். அறுபது டாட் வடாமுக்கு இரண்டு தட்டுகள் போதும்.
(படத்தில் காணப்படுவது, மறுநாள், பேப்பரிலிருந்து எடுக்கப்பட்டு, தட்டில் வைக்கப்பட்ட வடாம்கள், துணி ஸ்டாண்டுக்குக் கீழே)
ஞாயிறு மாலையே வடாம்கள் தயார்.
இன்று காலை பெரிய சஸ்பென்ஸ் என்று நினைத்து, மனைவியிடம் போய், "கடந்த இரண்டு நாட்களில் நான் என்ன செய்தேன் தெரியுமா?" என்று கேட்டேன். "எல்லாம் தெரியும். ஜவ்வரிசி வடாம் என்று நினைத்துக்கொண்டு ஏதோ செய்திருக்கிறீர்கள். இதையெல்லாம் எண்ணெயில் பொரித்து, நான் எண்ணெயை வேஸ்ட் செய்வதாக இல்லை."
எண்ணெய் ஜாடியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
யாராவது இந்த வடாம்களை பொரித்துக் கொடுக்கிறீர்களா?
எண்ணெயில்லாமல் பொரிக்கலாம் என்று பார்த்தால், என்காக்கை அலை சூளை (ஹி ஹி மைக்ரோ வேவ் ஓவன்!) பழுதாகிப் பல நாட்கள் ஆகிவிட்டன.
எப்பொழுதாவது சந்தர்ப்பம் கிடைத்தால், பொரித்து, புசித்துப் பார்த்துச் சொல்கிறேன்.