நோன்புக் கஞ்சி. சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நோன்புக் கஞ்சி. சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13.6.16

"திங்க"கிழமை 160613 :: நோன்புக் கஞ்சி.


     இது முஸ்லீம் நண்பர்களுக்கு நோன்புக் காலம்.  ரம்ஜான் மாதம். 


     இளவயதில் தஞ்சையில் மருத்துவக் கல்லூரிச் சாலையில் இருந்த மசூதிக்கு நானும் என் மூத்த சகோதரர் பாரதியும் சென்று வருவோம்.  எங்களுக்கு அங்கு ஒரு அருமையான நண்பர் இருந்தார்.  அப்துல் ஹக்கீம். 


     இத்தனை வருடங்கள் கழிந்தும் பெயர் மறக்கவில்லை.  அன்பானவர்.  எங்களை விட வயதில் மூத்தவர்,  நாங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம்.  அவர் மருத்துவக் கல்லூரி மாணவர்.  நாங்கள் தொலைத்த பணத்தைக் கொடுத்து உதவி இருக்கிறார்.  ரேஷனில் வாங்கி வந்த சர்க்கரை அப்படியே தெருவில் கொட்டிப் போக, அவர் எங்களுக்காக கடையில் வாங்கித் தந்து வீட்டில் அடி வாங்காமல் தப்பிக்க வைத்திருக்கிறார்.  அண்ணா என்று அழைப்போம்.  ஓரிரு முறை சும்மா மசூதியை ஆர்வமாய் எட்டிப் பார்த்த எங்களை உள்ளே அழைத்துக் காட்டியவர்.  அவ்வப்போது சென்றிருக்கிறோம்.   

   அலுவலகத்தில் எங்கள் நெருங்கிய முஸ்லீம் நண்பர்  எனக்காக ஸ்பெஷலாக இந்த நோன்புக் கஞ்சி செய்து கொண்டு வந்து கொடுப்பார்.
    

     சென்னை பித்தன் ஸார் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் நோன்புக் கஞ்சியில் சைவம் கிடையாதா என்று கேட்டிருந்தார்.  நான் ருசி பார்த்திருக்கிறேன் என்பதால் ஆணித்தரமாக உண்டு என்று பதிலளித்திருந்தேன்.  
 
 
 
 
 
     அதன் ரெஸிப்பி கூட அப்போது சாப்பிட்ட காலத்தில் கேட்டு அறிந்திருந்தேன்.  ஆயினும் இத்தனை நாட்களில் அது மறந்து விட்டதால், சென்னை பித்தன் ஸாருக்கு பதிலளித்த கையோடு என் மதிப்புக்குரிய குழந்தை நல மருத்துவ நண்பரிடம் கேட்டேன்.  அவர் தந்திருக்கும் ரெஸிப்பி கீழே..
 
 

     இந்த நோன்புக் கஞ்சியின் விசேஷம் உண்ணாவிரத நோன்பால் சோர்ந்திருக்கும் வயிற்றுக்கு அதிக வேலை தராமல் எளிதாக ஜீரணம் செய்வதற்கான உணவுதான் இது.
 
 
 
 
     வெந்தயம் ஒரு ஸ்பூன், பச்சரிசி குருணை (மிக்ஸியில் பச்சரிசியை இட்டு ஒன்று இரண்டாக லேசாக அடித்துக் கொண்டால் போதும்) ஒரு டம்ளர், ஒரு உரித்த பூண்டு இவற்றை மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு (1:3) குக்கரில் வைத்து இரண்டு விசில் வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும்.  அரை வேக்காடு போதும்.
 
 

     ஸ்டீம் போன பிறகு பொடியாக நறுக்கிய கேரட், ஒரு தக்காளி, ஒரு உருளைக்கிழங்கு, ஒரு பச்சை மிளகாய், பட்டாணி ஆகியவற்றை அதில் சேர்த்து இன்னும் கொஞ்சம் அடுப்பில் வைத்து ஒரு விசில் வைத்து இறக்க வேண்டும்.




     வாணலியில் அல்லது Pan இல் எண்ணெய் விட்டு, பட்டைக்கிராம்பு, பத்து சின்ன வெங்காயம், கொஞ்சம் இஞ்சி, இரண்டு பல் பூண்டு போட்டுத் தாளித்துக்கொண்டு, கொஞ்சம் சோம்புப்பொடி போட்டு, அதை இந்த அரிசிக் கஞ்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  தேங்காய்ப் பால் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடலாம்.  
 

    
     அவ்வளவுதான்.  எல்லோருக்கும் எடுத்துக் கொடுக்கலாம் ; குடிக்கலாம்.

     ரொம்ப சிம்பிள்... இல்லை?


     சென்னை பித்தன் ஸாருக்கு இந்தப் பூண்டு மற்றும் மசாலாக்கள் அலர்ஜி!  இல்லையா ஸார்?