பழையாறை வட தளி சிவன் கோயிலைத் தரிசித்துக்கொண்டிருக்கிறோம். சோமேசுவரரைத் தரிசித்து முடித்த பிறகு சோம கமலாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனையும் வணங்கிக்கொண்டோம்.
அடுத்த படம் ஜேஷ்டாதேவி சிற்பம். பத்திரமாக இருக்கணும்.
கோபுரத்தில் வித்தியாசமான, வீரன் அமர்ந்திருக்கும் யாளி சிற்பம். வேறு கோயில்களில் நான் பார்த்ததில்லை.
உள்ளிருந்து கோவில் பிரதான கோபுரம். செடிகள் மண்டிக்கிடக்கும் கோபுரம். சீர் செய்ய காலம் யாரையாவது அனுப்பும். (செங்கல் கட்டுமானங்களில் கோபுரம் பறவைகளின் எச்சங்களால் ஆல் அரசு போன்ற செடிகள் வளர்ந்து சீரழித்துவிடும்)
அருள்மிகு சோமநாத ஸ்வாமி ஆலயத்தை வணங்கிவிட்டு, இற்றைக்கு ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முந்தைய மஹோன்னத சோழ அரசை நினைவுக்குக் கொண்டுவந்து அங்கிருந்து கிளம்புகிறோம். (அதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கோவில் இருந்திருக்கிறது. அதற்கும் முற்பட்டது என்பதற்கும் வரலாற்றுச் சான்றுகள் உண்டு. மகேந்திர பல்லவனால், திருநாவுக்கரசருக்காக சமணர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட சிவன் கோவிலை மீட்டுத் தரவைத்தது அல்லவா?)
நந்திபுர விண்ணகரம் (நாதன் கோயில்)
பழையாறை வட தளியிலிருந்து நடந்து செல்லும் தொலைவில்தான் நந்திபுர விண்ணகரம் என்ற பத்தாம் நூற்றாண்டுப் பெயர் கொண்டிருந்த நாதன் கோயிலில் வைணவ திவ்யதேசக் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு பத்துப் பதிகங்களை திருமங்கையாழ்வார் 8ம் நூற்றாண்டில் பாடியுள்ளார். (இதைப்பற்றி மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவள், குருபரம்பரை பிரபாவம் போன்ற வைணவ நூல்கள் சொல்வது சரியில்லை என்று எப்படிச் சொல்வீர்கள்-அதாவது திருமங்கையாழ்வார் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருந்திருப்பார், அப்போதைய அரசர்களும் நீங்கள் சொல்லும் சரித்திர அரசர்கள் பெயரையே கொண்டிருந்திருக்கலாமே என்று கேட்டார். சரி இந்த விவாதத்தில் இறங்குவது வேண்டாத வேலை என்று விட்டுவிட்டேன். நான் சரித்திரம் சொல்லும் ஆண்டுக்கணக்கையே என் பதிவுகளில் குறிப்பிடுகிறேன்).
பழையாறை வட தளிக்கோயிலுக்கு பெரும்பாலும் நான் நந்திபுர விண்ணகரம் (நாதன் கோயில்) திவ்யதேசப் பெருமாளைச் சேவித்துவிட்டுத்தான் செல்வேன். நாதன் கோயிலிலிருந்து பழையாறை கோயில் நடந்து செல்லும் தூரம்தான். பழையாறை, அதற்கு முன்பு நந்திபுர விண்ணகரம் என்ற பெயர் பெற்றிருந்தது என்பதை இந்தத் தொடரின் ஓரிட த்தில் சொல்லியிருக்கிறேன்.
இந்தத் தலம் கும்பகோணத்திலிருந்து சுமார் ஐந்து கிமீ தூரம். முன்னாளில் மன்னார்குடி தொடங்கி இந்த இடம் வரை செண்பகாரண்யம் என்று வழங்கப்பட்ட காடாக இருந்தது. மூலவர் ஜெகந்நாதன், அமர்ந்த திருக்கோலம், தாயார் செண்பகல்லித் தாயார்.
புராணம், நந்திதேவர் வைகுண்டத்திற்குச் சென்று திருமாலை தரிசிக்க நுழைந்த போது வாயிற்காப்போர்களின் அனுமதி பெறாமல் உள்ளே சென்றாராம். அதனால் கோபமடைந்த துவாரபாலர்கள் கொடுத்த சாபத்தினால் உடல் முழுதும் வெப்பம் ஏறி சூட்டினால் துன்பமுற்றாராம். பிறகு சிவனின் ஆலோசனைப்படி இந்த செண்பகாரண்யத்தில் வந்து தவமிருந்து மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைக்கப்பெற்று சாபநிவர்த்தி பெற்றார். அதனைக்கொண்டுதான் இந்தத் தலம் நந்திபுரம் என்ற பெயர் பெற்றது.
இந்தத் தலத்தில்தான் கவி காளமேகம் பிறந்தார். சிபிச் சக்கரவர்த்திக்கு மகாவிஷ்ணு இந்தத் தலத்தில்தான் காட்சியளித்த தாக புராணம் பகர்கிறது.
விஜயரங்க சொக்கப்ப நாயக்கரின் அன்னைக்குத் தோன்றிய குண்மநோயைத் தீர்க்கவேண்டி இந்தத் தலத்துப் பெருமானை வேண்டி அவ்விதமே நோய் நீங்கியதால் பல அரிய திருப்பணிகளைச் செய்தாராம். இந்தக் கோவிலில் நாயக்கர் தன் இரண்டு மனைவியர் மற்றும் தாயுடனும் இருக்கும் சிற்பம் உண்டு.
இங்கு ஒரு விஷயம் எழுத நினைக்கிறேன். நான் தாராசுரம் பற்றிய நெடுந்தொடரை எழுதிக்கொண்டிருந்த போது, இடையில் நிறைய சோழர் வரலாறெல்லாம் எழுதியது நினைவிருக்கும். அதுவும், தாராசுரம் கோயில் சிற்பங்களே பல வாரங்கள் வெளிவருவதால் படிப்பவர்களுக்கு அயர்ச்சியை உண்டாக்கும், அதனால் இடையில் அவ்வப்போது வெளியிட என்னுடைய மெக்சிகோ பயணத் தொடரைத் தருகிறேன் என்று கேஜிஜி சாரிடம் பகிர்ந்திருந்தேன் (நீங்கள் நினைப்பது சரிதான்..அதுவும் நெடிய தொடர்தான்). ஆனால் கேஜிஜி சாரோ.. சோழர் வரலாற்றை எழுதிக்கொண்டு வரும்போது, இடையில் தடங்கலாக வேறு தொடரை நுழைக்க வேண்டியதில்லை. முதலில் இது முடியட்டும் என்று சொல்லிவிட்டார். ஆனால் பாருங்க… ஒன்றைத் தொடர்ந்தால், தொடர்ந்து சோழர் காலக் கோயில்கள், பள்ளிப்படைகள், கங்கைகொண்ட சோழபுரம் கோயில், பிறகு நம் எல்லோருக்கும் மிகவும் பரிச்சயமான தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் என்று இழுத்துக்கொண்டே போகும். அத்துடன் நிறுத்த முடியாது, அதனைத் தொடர்ந்து கும்பகோணம் அருகில் உள்ள சிற்பங்கள் நிறைந்த கோயில்கள் என்று எழுதவேண்டியிருக்கிறது. சரி… எழுதுவதைத் தொடர்ந்து எழுதுகிறேன், வெளியிடுகிறவர் பாடு, படிப்பவர்கள் பாடு.
( வாசகர்களுக்கு ஒரு விளக்கம் : நெ த கேட்டுக் கொண்டபடி, சிற்பக் கோயில்கள் தொடர் - பகுதி 22 க்குப் பிறகு நிறுத்திக்கொண்டு - அவர் எழுதும் மெக்ஸிகோ பயணத் தொடர் 14 வாரங்களுக்கு வெளியாகும். அதற்குப் பிறகு, சிற்பக் கோவில்கள் கட்டுரைகள் தொடரும்)
பழையாறை வட தளியிலிருந்து அருகில் நாதன் கோயில் செல்லும் வழி.
என்னடா இது, முதல் படத்திற்கும் இரண்டாம் படத்திற்கும் காலநிலை வித்தியாசம் இருக்கிறதே என்று நினைக்கவேண்டாம். இந்தக் கோயில்கள் அனைத்திற்கும் நான் பல முறைகள் சென்றிருந்திருக்கிறேன். இரண்டாவது படம், ஒரு தடவை விஸ்வரூப தரிசனத்திற்காகச் (அதற்குமே இரண்டு முறை சென்றிருக்கிறேன்) சென்றிருந்தபோது எடுத்தது. விஸ்வரூப தரிசனம் என்றால், காலையில் முதல் தரிசனம். கோயில் நிர்வாகத்தினர், அர்ச்சகர் கோயில் கதவைத் திறந்த பிறகு, அர்ச்சகர் கருவறையைத் திறந்து-திரை போட்டிருக்கும், மூலவருக்கு விளக்கு ஏற்றி, மாலை அலங்காரத்தைச் சிறிது சரி செய்து, புதிய மாலையை அணிவித்து பிறகு திரையை விலக்கி வந்திருக்கும் பக்தர்களுக்கு மூலவருக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து தரிசனம் செய்யவைப்பார். இந்தச் சமயத்தில், நாம் தரிசனம் செய்வதைவிட, மூலவர் நம்மை நோக்குகிறார் என்பதே ஐதீகம். பல பெரிய கோயில்களில் (விஷ்ணு ஆலயங்கள்), பசு மற்றும் யானை, கருவறை பெருமாளைப் பார்த்தபடி இருக்கும் (பசு திரும்பி இருக்கும்). அதற்கும் கற்பூர ஆரத்தி காண்பிப்பார்கள். சில கோயில்களில் பசு மாத்திரமே விஸ்வரூப தரிசனத்திற்கு வரும். இது பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன்.
பம்பப்படையூர், பட்டீஸ்வரம் எல்லாம் இந்தக் கோவிலைச் சுற்றி உள்ள ஊர்கள். இங்கிருந்து சிறிது தூரத்தில்தான் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை உள்ளது. இவை எல்லாமே பழையாறை என்ற பழைய சோழத் தலைநகரின் பகுதிகளாகும்.
ஹனுமான் மற்றும் விஜயரங்க சொக்கப்ப நாயக்கர் தன் மனைவியருடன்.
திருமங்கையாழ்வார் இந்தத் தலத்துப் பெருமானை பத்து பாசுரங்களால் பாடியுள்ளார்.
தீது அறு நிலத்தொடு எரி காலினொடு* நீர் கெழு விசும்பும் அவை ஆய்*
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை* அவை ஆய பெருமான்*
தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு* தட மார்வர் தகைசேர்*
நாதன் உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.
பொருள்: குற்றமற்ற பூமியும் தீயும் வாயுவும் நீரும், இவற்றுக்கெல்லாம் இருப்பிடமாயுள்ள ஆகாசமும் ஆகியவற்றிர்க்கு அந்தராத்மாவாய், குற்றமற்ற மனத்தினோடு உறக்கம், கனவு, மரணம் ஆகியவற்றையும் நியமனம் செய்யும் பெருமான், தன் தாயாகிய யசோதை, சீறிக் கயிற்றிஅக் கொண்டுவந்தபோது அதற்குப் பயந்திருப்பவன் போல, தயிர் உண்டு குடக்கூத்தாடினவனும், விசாலமான மார்பை உடையவனும், அனைத்து கல்யாண குணங்களும் நிரம்பப்பெற்றவனுமான பெருமான் இருக்கும் நகரான, நந்திபுர விண்ணகரத்தை மனமே நாடிடுவாயாக.
தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல்* நந்தன் மதலை*
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ* நின்ற நகர்தான்*
மந்த முழவு ஓசை மழை ஆக எழு கார்* மயில்கள் ஆடு பொழில் சூழ்*
நந்தி பணிசெய்த நகர்* நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.
பொருள்: இந்த நந்திபுர விண்ணகரம் , தந்தை நந்தகோபன் மனத்தை வருத்தும் துயர் நீங்கும்படியாக, இரவிலே வந்த குழந்தை கண்ணனை, தேவர்கள், இவன் எங்களுக்கு ஸ்வாமி என்று மணம் மிக்க மலர்களைக் கொண்டு தொழும்படி நின்ற நகர். மந்தமான வாத்தியங்களின் ஓசையைக் கேட்டு, மேக முழக்கம் என்று கருதி கார்காலத்து மயில்கள் ஆடும் சோலைகள் சூழந்த, நந்தி என்னும் ஒரு அரசன் பணி செய்த நகரான நந்திபுர விண்ணகரத்தை மனமே நீ அடைந்திருவாயாக.
திருவல்லிக்கேணியில் தொண்டையர்கோன் போலவும், பரமேச்சுர விண்ணகரத்தில் பல்லவன் மல்லையர்கோன் போலவும், அட்டபுயகரத்தில் வயிரமேகன் போலவும். திருநறையூரில் செங்கணான் கோச்சோழன் போலவும் இத்திருப்பதியில் நந்திவர்மனென்னும் ஓர் அரசன் சில சில திருப்பணிகள் செய்தனனாகச் சொல்லுகிறார் திருமங்கையாழ்வார்..
இந்தப் பதிகப் பாசுரங்கள் தாளகதியில் சேவிப்பதற்கு ஏற்றபடி சந்தத்துடன் அமைந்துள்ளது சிறப்பு. அதுவும் தவிர, அரசர்கள் பெயரை திவ்யப்பிரபந்தங்களின் பாசுரங்கள் பல கூறுவதால், அந்த அந்த ஆழ்வாரின் காலம் மற்றும் வரலாற்றுச் செய்திகளையும் நாம் அறிய முடியும்.
இந்தக் கோயில் தற்போது மிகவும் சிறிய கோயிலாகத் தோற்றமளிக்கிறது. பழைய காலக் கோயில் என்பதற்கான அடையாளங்களும் பெரிதாகத் தென்படவில்லை. இருந்தாலும் இந்தக் கோயில் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது. மூலவர் பல ஆயிரம் ஆண்டுகளைக் கண்டவர்.
இங்கும் ஒன்று எழுத நினைக்கிறேன். பல கோயில்களில் மூலவர், இடையில் சிதைவுற்றதால் புதியதாக அமைக்கப்பட்டவர்கள். உதாரணமாக கும்பகோணம் அருகிலுள்ள திரு ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் மூலவர் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்டவர், அதற்கு முந்தைய மூலவர், சிறிது பழுதுபட்டிருந்த தால், அதனை மாற்றியிருக்கின்றனர். முந்தைய படிமம் கோயிலின் திருச்சுற்றில் பூஞ்செடிகளுக்குக் கீழே இருக்கிறது. ஒப்பிலியப்பன் கோயிலில் (திருவிண்ணகர்) தற்போதிருக்கும் மூலவர் ஒரு நூற்றாண்டுகளுக்குள் அமைக்கப்பட்டவர். பழைய மூலவர், திருக்குளத்தில் இருக்கிறாராம். உங்களுக்குத் தெரிந்திருக்கும், காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் மூலவர் முன்பு அத்தி மரத்தினால் அமைக்கப்பட்டவர். பிறகு சிறிது சிதைவுற்றதால் (என்று நினைக்கிறேன்) புஷ்கரணியில் அமிழ்த்தப்பட்டு, புதிய மூலவர் அமைக்கப்பட்டார். அதனால் அத்திவரதரைத்தான் என் முன்னோர்கள் சேவித்திருப்பார்கள் (இராமானுஜர் காலத்திலும் அத்திவரதர்தான் இருந்திருக்கவேண்டும்) என்று நம்புகிறேன்.
முன்பு ஒரு சமயம் இந்தக் கோவில் சுந்தரச் சோழர் விண்ணகரம் என்ற பெயரினைப் பெற்றிருந்தது. இதன் காரணம் 8ம் நூற்றாண்டில் சுந்தரச் சோழர் இந்தக் கோவிலுக்கு நிவந்தங்கள் விட்டிருக்கலாம். பெரிய அளவு திருப்பணிகள் செய்த து போலத் தெரியவில்லை. அல்லது காலப் போக்கில் படையெடுப்புகளினால் சிதைவுற்றிருக்கலாம். பூரி ஜெகன்னாதர் கோயிலைப் போல இங்கும் மூலவர் ஜெகன்னாதப் பெருமாள் என்பதால் இதனை தக்ஷிண ஜெகன்னாதர் கோயில் என்று அழைக்கின்றனர்.
கொடிமரம், பலிபீடம் மற்றும் அருகிலிருக்கும் தாயார் சன்னிதி.
இந்தக் கோயிலின் நிர்வாகம் வானமாமலை மடத்தினுடையது.
தாயார் கோயில் வளாகத்தினுள்ளேயே இருக்கிறது. மிகவும் சக்திவாய்ந்த தாயார் என்று சொல்வார்கள். நாங்கள் ஒரு முறை சோழநாடு யாத்திரை சென்றிருந்தபோது இந்தக் கோயிலுக்குச் சென்றிருந்தோம். அப்போது தாயார் கோயிலின் முன்பு யாகம் மிக விமர்சையாக நடந்துகொண்டிருந்த து. பெரிய கூட்டமாக மக்கள் இருந்தனர்.
நான் ஒரு யாத்திரை செல்லும்போது, ஏற்கனவே சென்றிருந்த யாத்திரையில் உபயோகித்த உடைகளை (குறிப்பாக ஷர்ட்) எடுத்துச்செல்ல மாட்டேன். இது யாத்திரைக்கு மாத்திரமல்ல, பயணங்களுக்கும். மேலே உள்ள படம் வேறு ஒரு தடவை கோயிலுக்குச் சென்றிருந்தபோது எடுத்தது.
கோயிலுக்கு வெளியே இருந்த மரத்தின் அடிப்பகுதியில் இந்த உடைந்துபோன சிலைகளைப் பார்த்தேன். வரலாறை வெகுவேகமாக நாம் மறந்துவிடுகிறோம். அதனைப் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணம் நமக்குக் குறைவே.
நந்திபுர விண்ணகரப் பெருமான் மூலவர் (இணையம்)
கருவறையைப் பார்க்கும்போது அதன் பழைமை புலப்படவில்லை. அதனால் இந்தக் கோவில், காலத்தால் பழுதுபட்டிருக்கும் என்று எனக்குத் தோன்றியது. இது முஸ்லீம் படையெடுப்புகளின் காரணம் அல்லது கவனிப்பாரற்றுக் கிடந்திருக்கலாம்.
வீற்றிருந்த கோலத்தில் ஜெகன்னாதப் பெருமாள் உபய நாச்சியார்களுடன். மூலவர் படத்தை மிக அழகாக எடுத்திருக்கிறார்கள்.
மூலவரின் முன்பு, உற்சவர் திருமஞ்சனம் கண்டருளுதல். படம் மிக அழகாக எடுக்கப்பட்டிருக்கிறது. உற்சவர் திருமேனி ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்டதாக இருக்கவேண்டும். (இணையத்திலிருந்து) (அப்பா புண்ணியவான்களா.. உங்களையெல்லாம் படங்கள் எடுத்துக்கொள்ள அனுமதித்திருக்கிறார்கள்)
ஒரு தடவை, இந்தக் கோயிலில் விஸ்வரூபம் சேவிப்பதற்காகச் சென்றிருந்தோம். (அது ஒரு மார்கழி மாதம்). அப்போது ஒருவர் (பண்டாரம் அல்லது சிவன் கோவில் பூசாரி போன்ற ஒருவர்) அங்கு திருப்பாவை சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது கோயில் திறந்திருக்கவில்லை. பிறகு அங்கு தரிசனம் முடிந்த பிறகு, என்னுடைய ஆர்வத்தால் அருகில் பட்டீஸ்வரன் கோயில் பக்கத்தில் இருக்கும் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக்குச் செல்ல ஆசைப்பட்டேன். அதுபோல அங்கு சென்றபோது அந்தக் கோயிலில் திருப்பாவை திருவெம்பாவை ஒலித்துக்கொண்டிருந்தது. அங்கு இவர்தான் கோவிலைப் பார்த்துக்கொள்கிறாராம்.
அதனால் நந்திபுர விண்ணகரத்தைத் தொடர்ந்து நாம் காண இருப்பது பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில். அதற்கு அடுத்த வாரம் வரை காத்திருங்கள்.
(தொடரும்)
= = = = = =
முதல் இரண்டு படங்கள் செமையா இருக்கு, நெல்லை.
பதிலளிநீக்குகீழே ஜேஷ்டா அம்மனின் பாவாடை ஏன் இப்படி சைடில் தொங்குது? தோச்சு காயப்போட்டிருக்காங்களோ!!! கட்டி விட்டிருக்கலாம்.
கீதா
வாங்க கீதா ரங்கன் க்கா. அந்தக் கோவிலில் ஆளரவமே இல்லை. அதனால் உடையெல்லாம் கவனிக்கவே ஆளிருக்காது
நீக்குஆளரவம் இல்லைன்றது தெரிந்தது, நெல்லை
நீக்குகீதா
முதல் படத்தில் வலது பக்கப் படத்தைப் பார்க்கறப்ப அது சுத்தி வரமுடியாது போல் இருக்கிறதே செடிகள் எல்லாம் முளைத்து. பராமாரிப்பு இல்லையோ?
பதிலளிநீக்குகீதா
பராமரிப்பு மிகவும் குறைவு. ஜாக்கிரதையா நடந்தால் சுற்றிவரலாம்
நீக்குசோம கமாம்பிகை அம்மன்? சோம கமலாம்பிகை என்று வரணுமோ?
பதிலளிநீக்குஅழகான பெயர்!
கீதா
மிக அழகிய தமிழ் பெயர். தட்டச்சு தவறு
நீக்குஆமாம், நெல்லை, வித்தியாசமான யாளி. எனக்கும் தோன்றியது கேட்க நினைச்சேன் கீழ நீங்களே சொல்லிட்டீங்க.
பதிலளிநீக்குகீதா
கோவில் கோபுரத்தில் இருந்தது வித்தியாசமான யாளிதான். ஆனால் அழகா இருக்குல்ல?
நீக்குஆமா ரொம்ப அழகா இருக்கு....இப்படி வித்தியாசமாகவும் பார்த்ததில்லை வீரன் அமர்ந்து..
நீக்குகீதா
தூண் சிற்பங்கள் (நெட்டுக்கா எடுத்த படம்) சமீபத்தில் இதே போன்று நாம் பார்த்தோம். ஒவ்வொரு நடன posture.
பதிலளிநீக்குபின்னர் வருகிறேன். வேலைகள் துரத்துகின்றன.
கீதா
நிறைய கோவில்களில் இந்தமாதிரித் தூண்களைப் பார்க்கிறேன்
நீக்குபடங்கள் நன்றாக கம்போஸ் செய்யப்பட்டு எடுக்கப்பட்டிருக்கின்றன. விளக்கங்களும் சிறப்பு.
பதிலளிநீக்குயாளியின் மீது போர் வீரன் சிற்பத்தை வேறு ஏதோ கோவிலில் பார்த்த நினைவு.
வாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம். சோழர் காலக் கோவில்களில் இது மாதிரி பல இடங்களில் பார்த்திருக்கிறேன். நன்றி
நீக்குசீர் செய்யப்பட இருக்கும் கோபுரம் என்ன ஒரு அழகு!
பதிலளிநீக்குஉங்க ஹஸ்பெண்ட் சொன்னது போன்று எனக்கும் தோன்றியதுண்டு!!!!
துவாரபாலகர்கள் கூட சாபம் கொடுப்பாங்களோ! அவங்களுக்கும் அந்த பவர் உண்டோ?
உங்க பாடு, கௌ அண்ணா பாடு.
எப்படிப் படிச்சாலும் நினைவில் இருக்கப் போவதென்னவோ துளியூண்டு! அதாவது வரலாறு மன்னர்கள் பெயர்....சொந்தபந்தம் எல்லாம்!!!!!! உங்க கூட ஊர் சுத்தறோம்!!!
கீதா
துவாரபாலகர்கள் என்ன யார் வேண்டுமானாலும் சாபம் கொடுக்கலாம். நியாயமானது பலிக்கும். சாபமிடுபவர் புண்ணியம் குறையும்.
நீக்குசரித்திரத் தொடரை நானும் மீண்டும் ரெஃபர் பண்ணினால் மட்டுமே நினைவுக்கு வரும்
எங்க ஊர்ல இருந்தவரை தினமுமே விஸ்வரூப தரிசனம் தான்....பின்ன கோயில்ல கொடிமரம் கீழ கழுவி, துடைத்து, வாசல் பெருக்கி தெளித்து ரெண்டு இடத்திலும் கோலம் போடப் போனதால்.
பதிலளிநீக்குகீதா
அதுவே பெரும் பாக்கியமல்லவா கீதா ரங்கன்? நான் திருவண்பரிசாரம் சென்றபோது ஓரிருமுறை விஸ்வரூபம் தவறியிருக்கிறது.
நீக்குஹாஹாஹா நெல்லை....
நீக்குஆமா எங்க ஊர்ல கூடச் சொன்னாங்க....பாரு தினம் கோலம் போட்டு புண்ணியம் செய்யற...பாரு நீ ஓஹோன்னு இருப்பன்னு!!!!
எனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்பதை விட எதிர்பார்ப்பு இல்லை. இப்படிச் செய்தால் இது கிடைக்கும் அது கிடைக்கும்னு....இன்சென்டிவ்.
பாட்டி பழக்கியது முதலில் சின்ன வயசுல அலுப்பா இருக்கும் ஆனா அப்புறம் எனக்குப் பிடித்திருந்தது செய்தேன். அவங்க போனப்புறமும் ஊரை விட்டு வரும் வரை.
இங்கு பெங்களூரில் முந்தைய இடத்தில் வீட்டருகில் 10 நிமிட நடையில் இருந்த ஒரு கோவிலில் செய்து வந்தேன். அக்கோயில் 7 மணி, 7.30க்குமேலதான் திறப்பாங்க.
கீதா
எதிர்பார்ப்பு இல்லாமல் தொடர்ந்து இந்த மாதிரி சேவைகள் செய்துவாங்க கீதா ரங்கன். சேவை செய்யணும் (உடலுழைப்பு) என்ற எண்ணமே நிறையபேருக்கு வராது. பாராட்டுகள்
நீக்குநன்றி நெல்லை ஹிஹிஹி ஆனா இங்க எதுவும் வாய்ப்பு அமையலை.
நீக்குகீதா
நெல்லை என்னாச்சு? காணும்? தமிழ்நாட்டுக்குப் போய்ட்டீங்களா...ஹோட்டல்ல சாப்பிட!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குகீதா
இன்று அதிசயமாக இன்டெர்னெட் இல்லை. தனிமையா என்ன பண்ணறது?
நீக்குயாத்திரை - பயணம் ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் நெல்லை?
பதிலளிநீக்குசமஸ்கிருத வார்த்தை தானே யாத்திரை? அதனால் அதை கோவில் களுக்குப் போறதுக்குப் பயன்படுத்தறீங்களா?
மலையாளத்தில் எல்லாத்தையுமே யாத்திரைன்னு தான் சொல்வாங்க.
கீதா
யாத்திரை கோவில் தரிசனத்துக்கு மாத்திரமே. அதனால்தான் யாத்ரா தானம் என்ற ஒன்று வந்தது. பயணம் சுற்றுலா பிறகு வந்த வழக்கம்தானே
நீக்குமரத்தடியில் இருக்கும் உடைந்து போன சிலைகள், வரலாறு ஒரு புறம்....அதைக் கஷ்டப்பட்டு செதுக்கின சிற்பிக்குக் கொடுக்கும் மரியாதை!!!!!!!!!!!!!! இவ்வளவுதான் என்றும் சொல்லலாமோ
பதிலளிநீக்குகீதா
பல சிற்பங்கள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. அல்லது ஒரே சிற்பியின் சில சிற்பங்கள் உயர்ந்த இடத்திலும் சில கவனிப்பாரற்றும் கிடக்கின்றனவோ?
நீக்குஒரே சிற்பியின் சிற்பங்கள் உயர்ந்த இடத்திலும் சில கவனிப்பாரற்றும் இருப்பதை எப்படிப் பார்க்கலாம்? அதாவது கொடுத்துவைத்தவர்கள், கொடுத்துவைக்காதவர்கள் என்று மக்களில் பெரும்பான்மையோர் சொல்வது போல....கொடுத்து வைத்தவை, கொடுத்துவைக்காதவை என்று சொல்லப்படுமா?
நீக்குகீதா
படங்களும் விவரங்களும், சூப்பர், நெல்லை.
பதிலளிநீக்குகீதா
மிக்க நன்றி கீதா ரங்கன் க்கா
நீக்குவாசித்து விட்டேன், நெல்லை.
பதிலளிநீக்குபஞ்சவன் மாதேவி பள்ளிப்படையை ஆதாரமாகக் கொண்டு நமக்குத் தெரிந்த இராஜேந்திர சோழன் வாழ்க்கை வரலாற்றைத் தொட்டு ஒரு சரித்திர சிறுகதை சமீபத்தில் எழுதி வைத்திருக்கிறேன். Just தகவலுக்காக.
வாங்க ஜீவி சார். நான் பஞ்சவன் மாதேவி -இராஜேந்திரசோழன் வைத்து பலவற்றை யோசித்துவைத்தேன். கதை நாவல் எழுதுவது தனித்திறன். எனக்கு அது இல்லை. உங்கள் படைப்பைப் படிக்க ஆர்வமுடன் இருக்கிறேன்
நீக்குஉங்கள் மனம் தோய்ந்த ஆத்ம பூர்வமான விவரிப்புகளின் ஆழத்தை பல இடங்களில் உணரும் பேற்றை நானும் பெற்றேன்.. அந்த உணர்வுகளை
பதிலளிநீக்குஇறைக்காமல் இருப்பதே உத்தமம் என்று மனசுக்குள் பொத்தி வைத்துக் கொண்டு விட்டேன். இந்த ஆழ்ந்த அனுபவதைத் தந்ததற்கு பரஸ்பர உபசார வார்த்தையாக நன்றி சொல்லி மலினப்படுத்தவும் மனம் இடம் கொடுக்கவில்லை. மன்னிக்கவும்.
எழுதும்போது எனக்குத் தோன்றும் உணர்வுகளோடு எழுதுகிறேன். தவறுகள் இருக்கலாம். ஆனால் எதுவும் எனக்குப் புரிந்திருக்கணும். உங்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகள் எனக்கு எழுத்தினால் ஏற்படும் சோர்வைப் போக்கும். மிக்க நன்றி
நீக்குசோமேசுவரரைத் தரிசித்து முடித்த பிறகு சோம கமலாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனையும் வணங்கிக்கொண்டோம்.//
பதிலளிநீக்குநானும் வணங்கி கொண்டேன்.
கமலாம்பிகை படம் அருமை.
பச்சை பட்டு உடுத்தி மிக அழகான தோற்றத்தில் இருக்கிறார்.
வீரன் அமர்ந்திருக்கும் யாளி சிற்பம் இரண்டும் நன்றாக இருக்கிறது, இரண்டும் பழையாறை கோயில் தானா?
வாங்க கோமதி அரசு மேடம். இரண்டுமே பழையாறை கோயில்தான்.
நீக்குசெடிகள் மண்டிக்கிடக்கும் கோபுரத்தை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது, நீங்கள் சொன்னது போல காலம் நேரம் கூடி வரும் போது விரைவில் யாரையாவது அனுப்புவார் இறைவன்.
பதிலளிநீக்குஇந்த கோபுரத்தைப் பார்க்கும்போது பழைமை தெரிகிறது. அரச மற்ற செடிகளை மாத்திரம் யாரேனும் உழவாரப் பணி செய்தால் நன்றாக இருக்கும்.
நீக்குஸ்ரீ ஜெகந்நாதப்பெருமாள் கோயில் படங்கள் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குமார்கழி மாதம் தல்லாகுளபெருமாள் கோயிலில் விஸ்வரூப தரிசனம் பார்த்து இருக்கிறேன்.
பகிர்ந்த பாசுரங்களை பாடி ஜெகந்நாதப்பெருமாளை வணங்கி கொண்டேன் இறைவன் படங்கள் எல்லாம் அருமை.
வரலாறும் அருமை.
நான் தல்லாகுளப் பெருமாள் கோயிலுக்குச் சென்றதில்லை. எம் எஸ் ஸி, நாகமலைப் புதுக்கோட்டை கல்லூரியில் படிக்கும்போது தல்லாகுளத்திலிருந்து மலையமான் என்ற நண்பனும் படித்தது நினைவுக்கு வருகிறது.
நீக்குநன்றி கோமதி அரசு மேடம். இப்போல்லாம், வாழ்க வளமுடன், மிஸ்ஸிங்.
அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
நீக்குகாலை வருவேன் எல்லோருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் சொல்வேன். இப்போது கொஞ்ச நாளாக லேட்டாய் வருகிறேன், மறு நாள் கூட வருகிறேன் அதனால் தான். இனி எப்போது வந்தாலும் வாழ்க வளமுடன் சொல்லி விடுகிறேன்.
தினம் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் என்று சொல்கிறேன் என் போன் ஸ்டேட்டஸ்ஸில். தினம் படிப்பவர்கள் அதை படிக்கும் போது வையகத்தை வாழ்த்துவார்கள் , வையகம் நன்றாக இருந்தால் நாமும் நன்றாக இருப்போம் இல்லையா?
வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த வார கோவில் தரிசன பகிர்வும் அருமை. படங்கள் தங்களின் வழக்கம் போல துல்லியமாக நன்றாக இருக்கின்றன. சோம கமலாம்பிகை அம்மனை தரிசித்துக் கொண்டேன். பச்சைப் புடவையில் அம்மன் அலங்காரம் கண்குளிர இருந்தது.
கோபுர தரிசனங்கள் நன்று. கோபுரத்தில் மரங்கள் வருவதைக் காண மனது கஸ்டமாக உள்ளது. சீக்கிரமே யாராவது பொறுப்பெடுத்துக் கொண்டு அவைகளை அகற்றினால் நல்லது. இங்கெல்லாம் நாங்கள் சென்றதில்லை.
நாதன் கோவில், நந்திபுரம் தகவல்கள் அறிந்து கொண்டேன். நீங்கள் செல்லும் கோவில்களின் வரலாறுகள் பயணிக்கும் அனைவருக்குமே பயன்தருவதாக இருக்கும். அரசர்கள் வரலாறுகள், கோவில்கள் உண்டான வரலாறுகள் என எல்லாவற்றையும் விபரமாக சொல்லியிருக்கிறீர்கள். உங்களின் எழுத்து திறமைக்கு எப்போதும் என் வந்தனங்கள். படங்களுடன் படிக்கும் போது நானும் உங்களுடன் எல்லா கோவில்கள் தரிசனத்தைப் பெற்ற உணர்வு வருகிறது.
நேற்று மகன் குடும்பத்துடன் காலையில் ஒரு கோவிலுக்குப் போக தீர்மானித்து அது நடக்கவில்லை. (அவன் அழைக்கவில்லை) பின் மதியம் இஸ்கான் கோவிலுக்கு சென்று வந்தோம். மாலை (முன்னிரவில்) நல்ல மழை. இரவு வீடு வர தாமதமாகி விட்டது. அதனால் நேற்று பதிவுக்கு வர இயலவில்லை. உங்களின் அற்புதமான பதிவுகளை படிக்க ஆவலாக உள்ளேன். தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். இன்னும் உடம்பு முழுமையாகக் குணமாகவில்லையோ என நினைத்தேன்.
நீக்குராஜாஜி நகர் இஸ்கான் கோயிலா? நான் அங்கு ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஆட்டமேடிக் ப்ளேயர் வாங்கணும்னு ரொம்ப நாளாக நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
இங்கும் இரவு நல்ல மழை. சென்னைக்காரங்களுக்குத்தான் பாவம்.
கோயில் பிரசாதம் கிடைத்ததா? அங்கு கோயில் பேக்கரி உண்டா?
பதிவின் கருத்துக்கு மிக்க நன்றி
நந்திபுரவிண்நகரம், நாதன்கோவில் தரிசனம் பெறாறோம்.
பதிலளிநீக்குவரலாறுகளும் அறிந்தோம் .நன்றி.