26.5.25

"திங்க"க்கிழமை    : தாளகக் குழம்பு - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 

Sriram,

தாளகக் குழம்பு செய்முறை  அனுப்பச் சொல்லி ஜே சி சார் கேட்டிருந்தார் அனுப்பி இருக்கேன். ஏற்கெனவே போட்டதாகவும் நினைவு. இருந்தாலும் திரும்பப் போடுவதெனில் போடலாம்.

தாளகக் குழம்பு 

கீதா சாம்பசிவம்

======>என் தளத்தில் இக்குழம்பின் சுட்டி<======

நாளைக்குத் திருவாதிரை. எல்லா வீட்டிலேயும் களியும், குழம்பும் பண்ணுவாங்க. நம்ம வீட்டிலே மாமியாருக்கு இன்னும் வருஷம் ஆகாததால் பண்ண முடியாது. ஆனால் அதுக்காகச் சும்மா இருக்கிறதா! களி பண்ணாட்டி என்னவாம்! குழம்பு பண்ணலாமே, ஒரு நாள் சாப்பாட்டில் மாறுதலா இருக்குமேனு நினைச்சேன். இன்னிக்கு நெ.த.வோட காசி அல்வாவைப் பார்த்தேனா, இன்னிக்குத் தான் "சபாஷ்! சரியான போட்டி!" என்று நினைத்துக் கொண்டேன்.  ஆனால் பாருங்க திருவாதிரைக்கான ஏழுதான் குழம்பு பண்ணலை. எங்க குடியிருப்பிலே குடித்தனம் வந்திருக்கும் ஒரு திருநெல்வேலி மாமி திருநெல்வேலியின் சிறப்பான, "தாளகக் குழம்பு" பத்திச் சொன்னார். அதைத் தான் இன்னிக்குச் செய்தேன். நெல்லைத் தமிழனுக்கு நெல்லைத் தமிழச்சி சொன்ன சமையல் குறிப்புத் தானே சரியான போட்டியாகும்? ஹிஹிஹி! என்ன நெ.த. சரி தானே?

இது முழுக்க முழுக்கத் திருநெல்வேலி முறைப்படியானது. இதுக்குத் தேவையான பொருட்கள். முதல்லே காய்கறி! இங்கே வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி பாரணைக்கு 21 காய்கள் சேர்க்கணும்னு எல்லாத்திலேயும் வெட்டிப் போட்டுக் கொடுக்கிறாங்கனு ஆதி வெங்கட் சொல்லி இருந்தாங்க. நம்ம ரங்க்ஸை அதை வாங்கி வரச் சொன்னேன். எதுக்கும் இருக்கட்டும்னு என்னென்ன காய்கள் என்பதையும் சொன்னேன். 21 காய்கள் கொண்ட பையிலே பாகற்காய், பீன்ஸ், காரட், உ.கி. போன்றவையும் இருந்திருக்கின்றன. எனக்குத் தேவையோ நாட்டுக் காய்கள் தான்! ஆகவே அவற்றில் இருந்து ரங்க்ஸ் சேனைக்கிழங்குத் துண்டங்கள், சர்க்கரை வள்ளிக்கிழங்குத் துண்டங்கள், கொத்தவரை, சாட்டைப்பயறு போன்றவற்றைக் கொஞ்சம் வாங்கிக் கொண்டார். பின்னர் வாழைக்காய், கத்தரிக்காய், அவரைக்காய், பச்சை மொச்சை, பறங்கிக்காய், பூஷணிக்காய் போன்றவற்றையும் வாங்கிக் கொண்டார். போதுமான காய்கள் சேர்ந்தாச்சு. எல்லாவற்றையும் நறுக்கியும் வைச்சாச்சு!

பச்சைக்காய்கள் நறுக்கியது. வாழைக்காய், கத்திரிக்காய், அவரைக்காய், கொத்தவரை, சாட்டைப்பயறு, பச்சை மொச்சை, அவரைக்காய், பூஷணி, பறங்கிக்காய் வகைகள். கடாயில் வேகும்போது எடுத்த படம். நீர் குறைவாக வைத்து மூடி வைத்து வேக விட்டேன்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கும் சேனைக்கிழங்கும் தனியாக வேக வைத்துக் கொண்டேன். இரண்டிலும் கொஞ்சம் போல் உப்புச் சேர்த்து மஞ்சள் பொடி போட்டு வேக வைத்தேன்.

அடுத்ததாகப் புளி ஓர் எலுமிச்சை அளவுக்கு எடுத்து நீர்க்கக் கரைத்துக் கொண்டேன். இந்தக் குழம்பிற்குத் துவரம்பருப்பு வேக வைத்துச் சேர்க்கக் கூடாதாம். ஆகவே நோ பருப்பு!

வறுக்க

மி.வத்தல் 3 (காரம் அதிகம் என்பதால் 3 மட்டும்)

துவரம்பருப்பு ஒன்றரை டேபிள் ஸ்பூன்

அரிசி இரண்டு டீஸ்பூன்

கருகப்பிலை இரண்டு ஆர்க்கு உருவியது

எள் 3 டீஸ்பூன், களைந்து கல்லரித்து முதலில் வறுத்து எடுக்கவும்.

தேங்காய்த் துருவல் சின்ன மூடின்னா ஒரு தேங்காய் மூடி அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன் துருவல்

இந்த மசாலா சாமான்களை வெறும் சட்டியிலேயே வறுக்கலாம். விருப்பமானால் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து வறுக்கலாம். மிவத்தல், துவரம்பருப்பு, அரிசியை வறுத்துவிட்டு அந்தச் சட்டி சூட்டிலேயே கருகப்பிலையைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். இவை ஆறியதும் இவற்றோடு எள், தேங்காய்த் துருவலைச் சேர்த்து நன்கு நைஸாகப் பொடித்துக் கொள்ளவும்.

எள் வறுத்தது. காமிரா கொஞ்சம் அசங்கி விட்டதால் முழுசா வரலை! மன்னிக்கவும்! :(

மி.வத்தல்

துவரம்பருப்பும் அரிசியும் வறுத்தது!

மிக்சி ஜாரில்   பொடிக்கையில்!

குழம்பு கொதிக்கிறது!

இப்போ வெந்து கொண்டிருக்கும் தான்களை ஒன்றாகச் சேர்த்துக் கொண்டு கரைத்து வைத்திருக்கும் புளி ஜலத்தை அதில் விட்டுத் தேவையான உப்பை மட்டும் சேர்த்துக் கொதிக்கவிடவும். நிறம் அதிகம் வேண்டும் எனில் மஞ்சள் பொடி சேர்க்கலாம். ஏற்கெனவே காய்கள் வேகும்போது தனித்தனியாக உப்புச் சேர்த்திருக்கோம். ஆகவே இப்போப் புளி ஜலத்துக்கு மட்டுமான உப்புச் சேர்த்தால் போதும். சேர்ந்து கொதித்ததும் பொடித்த பொடியைப்போட்டுக்கலக்கவும். நன்கு கலக்க வேண்டும். பொடி கட்டியாக ஆகாமல் கலக்க வேண்டும். அது முடியலைனால் தேவையான பொடியை மட்டும் எடுத்துக் கொண்டு அரைக் கிண்ணம் நீர் விட்டுக் கரைத்துக் கொண்டு குழம்பில் ஊற்றலாம். பொடி போட்டு ஐந்து நிமிஷம் கொதித்தால் போதும். பின்னர் கீழே இறக்கும் முன்னர் தே.எண்ணெயில் கடுகு, கருகப்பிலை, மி.வத்தல் ஒன்றே ஒன்று தாளித்துப் பச்சைக் கொத்துமல்லி போட்டு இறக்கவும்.

பி.கு. இன்று மதியம் இதான் சாப்பாட்டுக்குப் பண்ணினேன். ரங்க்ஸுக்கு என்ன இருந்தாலும் நம்ம ஏழுதான் குழம்பின் ருசி இதில் இல்லைனு சொல்லிட்டார்! :) ஹெஹெஹெ முக்கியமான ஒண்ணு, பெருங்காயம் சேர்க்கலை! எள் வறுத்துச் சேர்ப்பதால்னு நினைக்கிறேன். ஆனால் பொதுவாகத் திருநெல்வேலி சமையலிலேயே பெருங்காயம் குறைவாகத் தான் சேர்க்கின்றனர்.  பெருங்காயம் சேர்க்காதது தான் குறையோ? தெரியலை! பொதுவாக வெங்காய சாம்பார், வெங்காயம் சேர்க்கும் பொருட்கள், ஜீரக ரசம் போன்றவற்றிற்குப் பெருங்காயம் சேர்க்க மாட்டார்கள்.

குழம்பு கொதிச்சு முடிச்சுத் தாளிதம் ஆன பின்னர்!

------------------------------------


இன்னொரு தாளகம் பார்க்க வேண்டுமா?


எங்கள் ப்ளாகில், 'திங்க' பதிவில் "இரட்டையர் – தாளகம் vs வறுத்து அரைத்த குழம்பு (வறுத்தரைச்ச குழம்பு) - கீதா ரெங்கன் ரெஸிப்பி" 

 

16 கருத்துகள்:

  1. ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு நெடிய நல்ல சமையல் குறிப்பு, மீள் பதிவாக இருந்தாலும்.

    அந்த நாட்கள் நினைவை மீண்டும் வர வைத்துவிட்டீர்கள். தாளக்க் குழம்பும், முன்பு போல பல படங்களும் அருமையாக இருக்கின்றன

    பதிலளிநீக்கு
  2. ஏழு தான்கள் என்றால் எண்ணுவதும் சுலபம், தான்களும் அதிகமாக இருக்கும், இருபத்தி ஒன்று தான்களால் (அதாவது நிறைய தான்களால்) எதையும் முழுமையாக ருசிக்க முடியவில்லை என்பதால் அவருக்குப் பிடிக்கவில்லையோ?

    அவ்வப்போது எழுதுங்கள் கீதா சாம்பசிவம் மேடம். அதுவே உற்சாகமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரி

    இன்று தங்கள் செய்முறையான தாளக குழம்பு நன்றாக உள்ளது. தங்கள் தளத்தில் இம்முறை வெளியான போது நான் அங்கு வரவில்லை போலும். அங்கும் சென்று படித்து வந்தேன். ஏழு காய்களுடன் தாளக செய்முறை அருமை. நானும் இப்படித்தான் செய்வேன். இதில் ஒவ்வொரு காயின் ருசிகளும், குழம்போடு சேர்த்து எள் வாசனையுடன் நன்றாக இருக்கும். அப்போது வீட்டில் கு. சா பொ இல்லாத காலத்தில் கற்சட்டியில் வேக வைத்து செய்யும் இக்குழம்பு மறுநாள் வரை வாசம் குன்றாமல் அப்படியே இருக்கும். (மறுநாள் தயிர் சாதத்திற்கு அதுவும் பழைய நீர்விட்டு வைத்த சாதத்தில் கலந்த தயிர் சாதத்திற்கு) இந்த குழம்பை தொட்டு சாப்பிட்டால் அது அமிர்தம்.( ஆனால், அந்த சாமன்களின் தரமான ருசிகள் இப்போது கம்மி எனத்தான் தோன்றுகிறது. ஒரு வேளை நம் நாக்கின் ருசியும் மாறி விட்டதோ எனவும் யோசிக்கிறேன்.) இதைப்போல சமயங்களில் (திருவாதிரை நாள் மட்டுமல்லாமல்) நான் செய்வேன். அன்றைய நாள் மதிய உணவுக்கு தொட்டுகையாக இக்குழம்பின் தாள்கள் மட்டுமே போதும். நீங்கள் செய்து சேர்த்த முறைகள் மிகவும் நன்று. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா அதே அதே....மறுநாள் சாப்பிட அத்தனை ருசியாக இருக்கும். பழையதோடு.

      அது போல நம் வீட்டிலும் இந்த தினம் தான் என்றில்லாமல் சாதாரண நாட்களிலும் செய்வதுண்டு.

      மஞ்சப் பொங்கல் செய்யும் போதும்...

      கீதா

      நீக்கு
  5. ​அட திங்கக்கிழமைக்கும் நேயர் விருப்பம் வந்துட்டது. இனி நேயர்கள் விரும்பும் பதார்த்தை கீசா மாமி தளத்தில் இருந்து எடுத்து ரீமேக் செய்யலாம்.

    எல்லாம் சரி குழம்புக்கு கொத்தமல்லி விதை (தனியா) கூடாதோ? அதைப்பற்றி படமும் இல்லை. சொல்லவும் இல்லை.

    பருப்பு இல்லாமல் குழம்பு மிகவும் நீர்க்க இருக்கிறது. பெயர் வெஜிடபிள் சூப் என்று கூறலாம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை அண்ணா, இக்குழம்பு பருப்பு இல்லாமல்தான் செய்யப்படும். கெட்டியாகத்தான் இருக்கும். நீர்க்க இருக்காது.

      படத்தில் அப்படித் தெரிகிறது. ஆனால் பச்சரிசியும் வறுத்து தேங்காயும் வறுத்துச் சேர்ப்பதால் கெட்டியாகும் குழம்பு.

      கீதா

      நீக்கு
    2. ஜெ கே அண்ணா, இக்குழம்பிற்குக் கொத்தமல்லி விதை திருநெல்வேலிப்பக்கங்களில் சேர்ப்பதில்லை. ஆனால் தஞ்சை, சென்னைப் பக்கங்களில் கொ வி சேர்க்கறாங்க. ஆனால் அதன் சுவை வேறாகிவிடுகிறது.

      இது தனிச்சுவை. ரொம்ப நல்லாருக்கும்...

      கீதா

      நீக்கு
  6. கீதாக்கா, தாளகக் குழம்பு நல்லாருக்கு. நம்ம வீட்டில் ரொம்பப் பிடித்த குழம்பு. அவ்வப்போது செய்வதுண்டு.

    கொஞ்சம் வித்தியாசத்துடன் நான் அனுப்பிய இதே திருநெல்வேலி வகை, எபியில் வந்தது.

    அதில் து ப கூடவே எள்ளு போட்டும் போடாமலும் செய்வதுண்டு அது குடும்பங்களைப் பொருத்து. இதை அந்தப் பழைய பதிவில் சொல்ல விட்டுப் போச்சு. து ப, உ ப...வெந்தயம், எள்ளு பச்சரிசி

    என் பாட்டி எப்படிச் செய்வார் என்பதும்

    ஸ்ரீராமும் சுட்டி கொடுத்திருக்கிறார். நன்றி ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. கீதாக்கா, தேங்காயை வறுத்துச் சேர்ப்பதுண்டு, திருநெல்வேலி வகையில். நன்றாகப் ப்ரௌன் - பொன் நிறத்தில்...

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. கீதா சாம்பசிவம் அவர்களின் தாளக குழம்பு செய்முறையும், படங்களும் அருமை. மீள் பதிவாக இருந்தாலும் கீதாவே நேரில் பேசுவது போல இருக்கிறது.

    பழைய நினைவுகளை மீட்டு எடுத்த பதிவு.
    சாம்பசிவம் சார் நலம் பெற்று வருகிறார்கள், பூரண நலம் பெற்று தாளகத்திற்கு கறிகாய்கள் வாங்கி வந்து பழைய மாதிரி கொடுத்து வித விதமாய் சமையல் குறிப்புகள், மற்றும் பதிவுகள் போட வேண்டும் கீதா என்று வேண்டிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. கீதா ரெங்கனின் தாளக குழம்பையும் பார்த்து வந்தேன், அங்கு நான் தாமதமாக படித்து கருத்து போட்டு இருக்கிறேன்.
    நன்றாக இருக்கிறது கீதா பதிவு. செய்முறை குறிப்பும் படங்களும், ஏஞ்சல், அதிராவை அழைத்து கொண்டே நீங்கள் சமைத்ததும் அருமை.

    பதிலளிநீக்கு
  11. தாளக குழம்பு செய்யும் விதம் மிக அருமை! இதை செய்து திருமதி கமலா சொல்லியிருப்பது போல மறு நாள் தயிர் சாதத்துக்கு தொடுகையாக சாப்பிட்டு பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  12. தாளாக குழம்பு இதைப் போல் நான் செய்ததில்லை. வறுக்கும் பொழுது தனியாவும் சேர்ப்பேன். இந்த முறையில் ஒரு முறைசெய்ய வேண்டும். நீண்ட நாட்களுக்குப் பிறகு கீதா அக்காவை தளத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  13. தாளகக் குழம்பு அருமை .

    21 காய்கள் சேர்ப்பது என்பதே ஆச்சரியம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!