25.5.25

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - 21:: நெல்லைத்தமிழன்

 


பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை

அன்றைக்கு பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக்குச் செல்லலாம் என்று தோன்றியது.  மனைவிக்கோ, விஷ்ணு கோயிலுக்குச் சென்ற பிறகு எதற்கு பள்ளிப்படையெல்லாம் செல்வது என்று கேட்டாள். வருவதற்கு அவளுக்கு அவ்வளவு இஷ்டம் இல்லை. எனக்கோ இந்த முறை அந்த இடத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம். அதனால் போனால் போகிறது என்று அப்போ வந்தாள். ஆனால் பிறகெல்லாம் நான் செல்லும் கோவில்களுக்கு எல்லாம் அவளும் வருவாள். வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இடங்களை நான் எப்போதும் தவறவிடுவதில்லை.

வாழைத்தோப்பு, வயல்களின் ஓரத்தில் அமைந்துள்ள பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில்  (உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாதவன் உளுந்தூர்பேட்டையில் ஒட்டகம் பிடிக்கப் போனான் என்ற கதையாக, கீழடியைத் தோண்டி தமிழர்கள் வரலாற்றைக் கண்டுபிடிக்கப்போகிறேன் என்று புறப்படுபவர்களுக்கு, இருக்கும் வரலாற்றுச் சின்னங்களை, இடங்களை இன்னும் செம்மைப்படுத்துவோமே என்ற எண்ணம் வருவதில்லை. ஏனென்றால் அப்படிச் செய்தால் தங்கள் அரசியலுக்கு உபயோகமில்லை என்று கருதுகிறார்கள் போலிருக்கிறது). 

பஞ்சவன் மாதேவி பள்ளிப்படையின் நுழைவாயிலைப் பார்த்தாகிவிட்டது. (சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாதிரி இடங்களை வெளியூர் மக்கள் மாத்திரம் பார்த்தால் போதாது. உள்ளூர் மக்களும் அடிக்கடி இந்த இடங்களுக்குச் செல்லவேண்டும். அப்போதுதான் கோயில்கள் காலம் காலமாக நிலைத்து நிற்கும். இது நமது கடமையாக நினைத்துச் செய்யவேண்டும்.

இந்த பஞ்சவன் மாதேவி பள்ளிப்படையில், பள்ளிப்படையைப் பற்றிய விவரம் ஒன்று வைத்திருக்கிறார்கள். அதில் குறிப்பிட்டிருப்பதைக் கீழே கொடுத்துள்ளேன்.

சோழப் பெருமன்னர்கள் வரிசையில் திலகமெனத் திகழ்ந்த முதலாம் ராஜராஜ சோழனின் மனைவியே இந்த பஞ்சவன் மாதேவி. இவர் சேரர் குறுநில மன்னர்களுள் ஒருவராகிய பழுவேட்டரையரின் மகள். திருச்சி மாவட்டம் உடையார்குடி தாலுக்காவில் உள்ள பழுவூரே இவரது ஊராகும். பழுவூர் கோவிலில் உள்ள முதலாம் ராஜராஜனின் 27ம் ஆண்டு கல்வெட்டில் இவரைப் பற்றி அவனி சுந்தரி புரத்து பழுவூர் தேவனாரின் திருமகள்-பழுவேட்டரையரின் மகள்என்று கூறுகிறது திருப்புகலூர் கல்வெட்டால் இத் தேவியின் மற்றொரு பெயர் நக்கன் தில்லையழகிஎன்று அறிய முடிகிறது.

பஞ்சவன் மாதேவி ஒரு தளிச்சேரி பெண் என்றும், ஆடல் கலை மற்றும் போர்த்திறனிலும் சிறந்து விளங்கியவள் என்றும் ராஜராஜன் உள்ளம் கவர்ந்த அன்பு மனைவி என்றும், ராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவில் எழுப்பிய பொழுது மன்னுக்கு எல்லாமுமாக இருந்து உதவி செய்தவர் என்றும், ராஜேந்திர சோஅனை தன்னுடைய சொந்த மகனாக பாவித்து வளர்த்தவர், அதனால் ராஜேந்திரனைத் தவிர வேறு யாரும் ஆட்சிக்குப் போட்டியாக வந்துவிடக்கூடாது என்று மூலிகை மருந்து உண்டு தன்னை மலடாக்கிக் கொண்டவர் என்று செவிவழிச் செய்திகள் உண்டு.

பஞ்சவன் மாதேவி அளித்த கொடைகளும் சாதனைகளும் பலவாகும். நினைவு கூறத்தக்க வகையில் புகழ் மிகுந்து திகழ்ந்த தால் சோழ நாட்டில் ஒரு ஊருக்கே இவர் பெயரால் பஞ்சவன் மாதேவி சதுர்வேதி மங்கலம் என்ற பெயர் மாற்றம் ஏற்பட்ட து.

பஞ்சவன் மாதேச்வரம் என்பது ராஜராஜனின் தேவி பஞ்சவன் மாதேவி மறைந்த பிறகு, ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் தன் சிற்றன்னைக்காக எடுக்கப்பட்ட நினைவாலயம்.

இத் திருக்கோவிலில் காணப்படும் ராஜேந்திர சோழனின் கல்வெட்டு இதனை பழையாறையான முடிகொண்ட சோழபுரத்துப் பள்ளிப்படை பஞ்சவன் மாதேவிச்வரம்என்று குறிப்பிடுகிறது. இதே கல்வெட்டில் ராஜேந்திர சோழனின் தளபதி அருண்மொழியான உத்தம சோழ பிரம்மராயன் பற்றியும், சைவ மடங்களுள் ஒன்றான லகுலீசமடம் பற்றியும் அதன் தலைவர் லகுலீச பண்டிதர் பற்றியும் பல வரலாற்றுத் தகவலைச் சுமந்து நிற்கிறது.

இக்கோவில் திருச்சுற்றில் உள்ள விநாயகர், பிச்சை தேவர், ஆலமரச் செல்வர், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை போன்ற சிற்பங்கள் ராஜேந்திர சோழனின் தனி முத்திரைகளாகும். இரண்டு சிவபெருமானின் கோல நிலைகளில் பல்லவர்களின் கலைமணம் கமழ்கிறது. இவை கிபி 710-715 வரை ஆண்ட இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் காலத்தில் அவனது கோநகரான பழையாறையில் இடம் பெற்று இருந்த சிலைகளாக இருக்கலாம்.

கருவறையின் அர்த்த மண்டபத்தில் உள்ள நந்தியும் கல்தூணும் பழுவேட்டரையர்களின் கலைப்படைப்பாகும். இதே போன்ற நந்தியும் தூணும் பழுவூரிலும் காணப்பட்கிறது. பழுவேட்டரையரின் மகள் என்பதால் இத் தேவி பிறந்த மண்ணின் கலைமணம் கருவறையில் வீசுகிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

சோழப் பெருமன்னர்களின் தலைநகராகவும் சோழ அரச குடும்பத்தினர் இறுதிவரை வாழ்ந்த இடம் என்ற பெருமையை உடைய பழையாறை மாநகரின் ஒரு பகுதியாகத் திகழ்ந்த பட்ட்ச்வரம் எனும் சிற்றூரில் அமைந்துள்ளஹ்டு. இந்த பஞ்சவன் மாதேவிச்வரம். பட்டீச்வரம் தேனுபுரீச்வரர் திருக்கோவிலில் இருந்து அரை கி.மீ துரத்தில் உள்ளது இந்தப் பள்ளிப்படை கோயில். தற்போது இந்தக் கோவில் ராமநாதன் கோவில் என்று அழைக்கப்பட்கிறது. 

1978ல் டாக்டர் நாகசாமி அவர்களின் மாணவர் குழு ஒரு கோயிலைக் கண்டுபிடித்தனர். அப்போது அது மண் புதர்களால் மறைக்கப்பட்டு செடி கொடி மரங்கள் முளைத்து முழுவதுமாக மறைந்திருந்த து.  கருவறையும் மண் மூடிக் கிடந்திருக்கிறது. அந்த மாணவர் குழு (அவர்களில் முனைவர் பத்மாவதி அவர்களும் ஒருவர்) மண்ணை முழுவதுமாக அகற்றி, சிவலிங்கத்தை வழிபாட்டுக்குரியதாகச் செய்திருக்கிறார்கள். கோயிலைச் சுற்றியுள்ள காடுகள் போல மண்டியிருந்த மரம் செடி கொடிகளைச் சரி செய்து கோயிலை மீட்டெடுத்திருக்கிறார்கள். பிறகு கோயிலின் முன் கோபுரம் கட்டப்பட்டு, கோயில் வழிபாட்டுக்குரியதாக ஆக்கப்பட்டு உள்ளூர் மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட தாம்.

கோயிலில் உள்ள நந்தி, பழுவேட்டரையர் கட்டுமானத்தைப் பிரதிபலிப்பதாக, அழகிய கொம்புகள், மணிகள் அமைந்த மாலைகள் போன்றவற்றுடன் செய்யப்பட்டிருக்கிறது சிறப்பு.  மூலஸ்தானத்திற்கு முன்புறம், ந ந்திக்கு முன்புறம் இருக்கும் துவாரபாலகர்கள் மிகச் சிறப்பாகவும் வித்தியாசமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றனர்.

பஞ்சவன் மாதேவி என்பவர் இராஜராஜ சோழனின் மனைவியருள் ஒருவர். பழுவேட்டறையர் குலத்தைச் சேர்ந்தவர். அவர் ராஜேந்திர சோழனின் சிற்றன்னை. அவனுக்கு அனுசரணையாக குழந்தை பெற்றுக்கொள்ளாமலேயே இருந்துவிட்டார் என்கின்றார். இராஜராஜ சோழன் மறைவுக்குப் பிறகு (?) பஞ்சவன் மாதேவி சிவதீட்சை எடுத்துக்கொண்டுவிடுகிறார். சிவதீட்சை பெற்றுக்கொண்ட பிறகு, அவர்கள் இறக்கும்போது அவரது உடலைத் தீக்கு இரையாக்காமல் பள்ளிப்படுத்தி (பூத உடலை சதுரமான குழி வெட்டி அதில் உட்கார்ந்த நிலையில் வைத்து, நீராட்டுதன்ல் போன்ற சடங்குகளைச் செய்த பிறகு மேலே மூடி, தலைக்கு மேல் சிவலிங்கத்தை வைத்து சிறு கோயில் எழுப்புவது பள்ளிப்படை என்பதாகும். இது சைவ சமயத்தில் காளாமுக, பாசுபதப் பிரிவுகளின் வழக்கமாம்.   (சிவதீட்சை ஏற்றுக்கொண்டவர்களை தீக்கு இரையாக்கினால் அது சிவன் கோயிலையே தீக்கு இரையாக்குவது போல அர்த்தமாம். அப்படிச் செய்தால் நாட்டில் பசி பட்டினி பஞ்சம் வருமாம்) இப்படிப்பட்ட பள்ளிப்படைகளை ஒட்டிய மாதிரி ஒரு மட த்தை அமைத்து அதில் லகுலீச பாசுபதர் என்பவர் பொறுப்பில் விடுவார்களாம். அவர் இந்த பள்ளிப்படையைப் பார்த்துக்கொள்வாராம். (நினைவு நாள், பிறந்த நாளில் வழிபாடுகள் செய்யவும், வருகின்ற அதிகாரிகளுக்கு உணவு படைக்கவும் மடத்தின் வருமானத்தைச்-தானத்தின் மூலம் கிடைப்பது செலவிடுவார்களாம்). இந்த மாதிரி பள்ளிப்படைகளை அமைக்கும் முறையை திருமூலரின் திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறார்களாம்.

நான் வயல்வெளிகளுக்குள் கிடந்த இந்த பஞ்சவன் மாதேவி பள்ளிப்படையை மீட்டெடுத்திருக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் இதனைச் சுத்தப்படுத்தி கல்வெட்டுகளைப் படியெடுத்துப் படித்து இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து என்று பெரிய வரலாறே இதன் பின்னால் இருக்கிறது. இதனை மனதில் வைத்து படங்களைக் காண வேண்டும்.

கோயில் முகப்பிலேயே பெரிய அளவில் துவாரபாலகர்கள். இது பொதுவாக சோழர்களின் கோயில் அமைப்பு.  





விநாயகர், பிக்ஷாடனர்

எங்குபார்த்தாலும் அதிஷ்டானத்தில் கல்வெட்டுகள். 



லிங்கோத்பவர். 



கொஞ்சம் அதிகாலைதான். அதனால்தான் புகைப்படம் பளிச் என்று வரவில்லை. இன்னொரு முறை இந்தக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு இன்னும் வரவில்லை.

கல்வெட்டுகள் தெளிவாகத் தெரிகின்றனவா?







கருவறை விமானம். சுற்றிவர உள்ள மதில்கள் சோழர் கோயில் என்று சொல்லாமல் சொல்லும்.

சமீபத்தைய பயணத்தின்போது பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக்கு மீண்டும் செல்லவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நேரம் ஒத்துவரவில்லை. இந்தப் பள்ளிப்படையைப் பார்க்க நினைப்பவர்கள் பகல் 12 ½ க்குள் செல்வது நல்லது. அப்போதுதான் கோயில் திறந்திருக்கும் என்று படித்தேன். சோழர் வரலாற்றைப் படித்து, பல கோயில்களுக்கும் செல்லும்போது, திரும்பவும் ஒரு கோயிலைக் காணும்போது அதன் வேறு சிறப்புகளும் நமக்குப் பிடிபடும். இதற்காகத்தான் ஒரு தடவைக்கு மேல் இந்த மாதிரி வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்குச் செல்ல நினைப்பது.

இதன் கடைசிப் பகுதியை அடுத்த வாரம் காணலாம்.

(தொடரும்) 

30 கருத்துகள்:

  1. இன்றைய பகுதி விவரிப்பு மிகவும் சிறப்பு. படங்களோ மற்ற தளங்களில் காணப்படாத சொந்தத் தேர்வு என்ற தனித்தகுதியைப் பூண்டிருக்கிறது.
    தானாதிகாரி பழுவேட்டரையர், அவரைத் தொட்டு நந்தினி என்று மனவோட்டம் அலையாமல் பஞ்சவன் மாதேவி பார்த்துக் கொண்டார். உங்களுடன் கைபிடித்துக் கூட்டிச் சென்றமைக்கு நன்றி, நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார். நாம் படித்த தனாதிகாரி பழுவேட்டரையர், ந்ந்தினி போன்றவர்கள் ராஜேந்திர சோழனின் பெரியப்பா ஆதித்த கரிகாலன் காலத்தைச் சேர்ந்தவர்கள்.

      சிவதீட்சை பெற்றவர்களுக்கு உடலோடு கூடிய பள்ளிப்படை வைத்திருந்தாலும், தாத்தா சுந்தரச் சோழனுக்கும் அவருடன் உடன்கட்டை ஏறிய மனைவிக்கும் தஞ்சை அருகே இரண்டு பள்ளிப்படைகள் அருகருகே அமைக்கப்பெற்றன. அவை இரட்டைக்கோயில் என்று பெயர் பெற்றிருந்தன. அவற்றைப் பற்றி இந்தத் தொடரில் நான் எழுதவுல்லை. ஆனாலும் அதன் வரலாறும் நம் புருவத்தை உயர்த்தக்கூடியதுதான்.

      நீக்கு
    2. பழுவேட்டையரின் மகள் தான் பஞ்சவன் மாதேவி. ஆக ஒன்றைத் தொட்டு ஒன்று நினைவுகள் சுற்றுவது இயல்பு தானே!

      நீக்கு
    3. நீங்கள் சொல்லியிருப்பது சரிதான் ஜீவி சார். அதனால்தான் பழுவேட்டரையர்களின் தனித்தன்மையான சிற்பங்கள் இந்தப் பள்ளிப்படையிலும் இருக்கின்றன

      நீக்கு
    4. பெரிய பழுவேட்டையரின் ஆசை மனைவி நந்தினி. தன் காதலன் வீரபாண்டியனைப் பழிவாங்கியவர்களுக்கெதிராக ஆபத்துதவிகளுடன் கைகோர்த்த அவள் சதித்திட்டங்கள்.
      தான் பெறாத மைந்தன் அரசுக் கட்டிலேற உதவும் தியாகமாய் தன்னையே மலடாக்கிக் கொண்ட சிற்றன்னை; இலங்கைப் போரில் வாள் சுழற்றி வளர்ப்பு மகனுக்கு உறுதுணையாய் போரிட்ட அந்த வீரத்தாய் பஞ்சவன் மாதேவி. இதற்கு மேல் சொன்னால் சுவாரஸ்யம் கெட்டு விடும் நெல்லை.

      நீக்கு
    5. நாவல் என்ற முறையில் எழுதும்போது நிறைய மசாலாக்களுடன் படிப்பதால் நமக்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும் ஜீவி சார். நிஜத்தில் இப்படியெல்லாம் நடந்திருக்கும் என்று நினைக்கறீங்களா? எனக்கென்னவோ ஆட்சிக்குப் போட்டி ஏற்படுத்தாமல் தனக்காகவே, ஆதரவாக எப்போதும் இருந்திருந்ததால் அந்தப் பாசம் வந்திருக்கலாம், அல்லது பழுவேட்டரையர்களின் நம்பிக்கையை இன்னும் அதிகமாகப் பெற அப்படி நடந்திருக்கலாம். ஆனால் நாவல் எழுதுகிறவர்களால் மிகவும் சுவாரசியமாக இந்த மாதிரி உறவுகளை, நிகழ்வுகளை எழுதி நம்மைக் கட்டிப்போட முடியும். நீங்கள் ஏன் ஒரு வரலாற்று நாவலை எழுத முனையவில்லை? இலக்கிய வரிகளையும் சேர்த்து அட்டஹாசமாக எழுதியிருப்பீங்களே

      நீக்கு
    6. சிறுகதையை எழுதி முடித்து விட்டேன். தங்கள் தகவலுக்காக.

      நீக்கு
    7. செவ்வாய்க்குக் காத்திருக்கிறேன் ஜீவி சார். அதற்கு முன்பாக ஒரு சாதாரண கதையை எழுதி, ப்ரொஃபஷனல் கதாசிரியர்கள் திறமை என்ன என்று நிரூபிக்கணும்.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ப்ரார்த்தனைக்கு நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இன்றைய கோவில் தரிசன பதிவு அருமை. பள்ளிப்படை பற்றிய செய்திகளை வாசித்தறிந்தேன். அருமையான விபரங்கள். சோழப் பேரரசி பஞ்சவன் மாதேவியின் வரலாறும், அதனால் உண்டான அவரது அதிஷ்டானமும் பற்றி சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறீர்கள்.

    கோவிலின் விமானத்தை தரிசித்துக் கொண்டேன். மூலவருக்கு இருபுறமும் இருக்கும் துவார பாலகர்களையும் தரிசித்துக் கொண்டேன். கல்வெட்டுகள் நன்றாக தெரிகின்றன. அழகான கல்வெட்டுக்களை பார்த்து ரசித்தேன். விநாயகர், பிக்ஷாடனர், லிங்கோபத்பவர், உமையொரு பாகன், மஹிஷாசூரமர்த்தினி, சிலைகளை அற்புதமாக செதுக்கியுள்ளனர்.ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்தேன்.

    கோவிலின் முகப்பு வாயிலில் எடுத்த தங்களது புகைப்படமும், அதிகாலை பொழுதில் எடுத்த புகைப்படமும் நன்றாக வந்துள்ளது. கோவிலின் மற்ற எல்லா படங்களுமே துல்லியமாக எடுத்துள்ளீர்கள். இங்கெல்லாம் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைக்கப் போகிறதோ, இல்லையோ..தெரியவில்லை.. ! ஆனால், உங்களின் பதிவை படித்து, அதன் வாயிலாக உங்களுடனேயே பல கோவில்களை தரிசித்த ஒரு திருப்தி ஞாயறுதோறும் வருகிறது. அது போதும் எனக்கு. உங்களின் இந்த மாதிரியான அருமையான எழுத்துக்கு என் பணிவான வந்தனங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தச் சமயங்களில்தான் எனக்கு சோழர்கால வரலாற்றுச் சின்னங்களை, கோயில்களைக் காணவேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அதற்கான முதல் முயற்சிதான் இந்தப் பள்ளிப்படை விஜயம்.

      வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய இடங்கள் பேணப்படவேண்டும்.

      ஆனால் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன.

      நீக்கு

  4. ​பள்ளிப்படை பற்றிய விளக்கம் நன்று. ஒன்றை தவிர மற்ற படங்கள் சரியான ஒளியில் எடுத்தாக உள்ளன. சிற்பங்களின் நுண்ணிய வேலைப்பாடுகளும் நன்றாக உள்ளன.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். வரலாற்றில் சில பள்ளிப்படைகளே எஞ்சியிருக்கின்றன. அவற்றுள் சரம உடலுக்குமேல் எழுப்பிய பள்ளிப்படைகளுள் இதுவும் ஒன்று.

      காலை நேரம், எதிர் வெயில் இல்லாமல் எடுத்த படங்களில் குறை இருக்கலாம்.

      நீக்கு
  5. கல்வெட்டுக்களுடன் கோவில் படங்களும் விரிவான விளக்கங்களை தருகிறது.

    பஞ்சவன் மாதேவியின் விரிவான தகவல்களும் அறிந்தோம்.

    வரலாற்று சிறப்புமிக்க கோவிகளை. உங்கள் பகிர்வின் மூலம் நாங்களும் கண்டு களிக்கின்றோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  7. பஞ்சவன் மாதேவியை பற்றி பாலகுமரன் எழுதிய உடையார் தொடரில் மிக சிறப்பாக சொல்லி இருப்பார்.

    ராஜராஜ சோழனின் மனைவி பஞ்சவன் மாதேவிபற்றி நீங்களும் நிறைய விவரங்கள் சொல்லி இருக்கிறீர்கள்.

    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படையின் படங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்.

      சோழ அரசுக்கு பழுவேட்டறையர்களின் வாரிசு வந்துவிடக்கூடாது என்று நினைத்திருப்பார்களோ? பஞ்சவன் மாதேவிக்கு இறந்த பிறகு சரியான சிறப்பு செய்தால், பழுவேட்டறையர்களின் ஆதரவு தொடர்ந்து சோழ அரசகுலத்துக்கு நிலைத்து நிற்கும் என்று நினைத்திருப்பார்களோ?

      யாருக்குத் தெரியும்?

      நீக்கு
  8. //1978ல் டாக்டர் நாகசாமி அவர்களின் மாணவர் குழு ஒரு கோயிலைக் கண்டுபிடித்தனர்.//

    டாக்டர் நாகசாமி அவர்களின் மாணவர் குழுவிற்கு நன்றி சொல்ல வேண்டும் பள்ளிபடையை மீட்டு கொடுத்ததற்கு .
    வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை மீட்டு அதை பராமரிக்க வேண்டும்.

    நிறைய சிலைகள் மீண்டும் மருந்து சாற்றி மறுபடியும் வைத்து இருக்கிறார்கள் போலும் , கோயிலைச்சுற்றி புற்களை அகற்றி சுத்தபடுத்தி இருப்பார்கள் போலும் படங்களில் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாகசாமி அவர்களைப் போன்றவர்கள் வரலாற்றிர்க்கு மிகுந்த சிறப்பு செய்துள்ளனர். அவர்களால் மீட்கமுடியாமல் போன இடங்கள் எத்தனையோ.....

      உதாரணமாக சுந்தரச் சோழர், அவர் மனைவி இருவரின் பள்ளிப்படைகள் இருந்த இடத்தில் தற்போது வீடு இருக்கிறது, அந்த வீட்டிலேயே சிற்பங்களும் இருக்கின்றனவாம். இதுதான் இரட்டைக்கோயில் என்று முன்பு வழங்கப்பட்டுவந்தது (இருவரின் பள்ளிப்படை என்பதால்)

      நீக்கு
  9. கல்வெட்டுக்கள் தெளிவாக தெரிகிறது.
    அடுத்த பதிவு இந்த கோயிலின் நிறைவு பகுதியா? தொடர்ந்து வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைவுப்பகுதி என்றுதான் நினைவு. காரணம் கௌதமன் சார் வேறு ஒரு தொடரை வெளியிடப்போவதாகக் கூறியிருந்தார், 22 அத்தியாயங்களுக்குப் பிறகு.

      நீக்கு
  10. ‘நக்கன் தில்லையழகி’//

    பெயரே என்ன அழகான பெயர்!

    பஞ்சமாதேவி தகவல்கள் சூப்பர். பள்ளிப்படை யை மீட்டெடுத்துக் கொடுத்த டாக்டர் நாகசாமி அவர்களின் மாணவர் குழுவிற்கு நன்றி சொல்ல வேண்டும்.

    படங்கள் சூப்பர், நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன் க்கா. பயணம் நல்லபடியா அமைந்ததா?

      ஆமாம் இந்தப் பெயரை நீங்க ஒரு பெண் குழந்தைக்கு வைப்பீங்களா இந்தக் காலத்தில்?

      டாக்டர் நாகசாமி குழுவினர், மற்றும் பல்வேறு அறிஞர்கள், குடவாசல் பாலசுப்ரமணியம் உட்பட பாராட்டப்பட வேண்டியவர்கள்

      நீக்கு
  11. சிற்பங்களும் வேலைப்பாடுகளும். சோழர்காலத்தவை என்று தெரியப்படுத்துகின்றன. பராமரிக்க வேண்டும், கலர் அடிக்காம.

    இப்படியான கோவில்களைப் பராமரித்தாலே போதும்.

    நீங்க சொல்லிருப்பது போல் உள்ளூர் வாசிகளும் கோவிலுக்குச் சென்று வர வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கேர்ந்துதான் இந்த கெமிக்கல் பெயிண்டைக் கண்டுபிடித்தார்களோ. வகை தொகை இல்லாமல் பழங்காலக் கோயில்களில் அடித்துவிட்டு, கோவிலைப் புதுமை செய்தோம், புனருத்தாரணம் செய்தோம் என்று கணக்கு எழுதிடறாங்க. கல்வெட்டுகள் சிற்பங்கள் பற்றி அவர்களுக்கு என்ன கவலை.

      உள்ளூர்வாசிகள் கோயிலுக்குச் செல்லும்போதுதான் நடைமுறைகள் மற்றும் சொத்துகள் பாதுகாக்கப்படும்.

      நன்றி கீதா ரங்கன். தமிழக டிபன் சாம்பார் கொண்டுவந்திருந்தீர்கள் என்றால் சொல்லுங்க, இன்றே டிபன் சாப்பிட வருகிறேன்.

      நீக்கு
  12. நல்ல தகவல்கள் மற்றும் படங்கள். பஞ்சவன் மாதேவி பற்றி பாலகுமாரன் தன்னுடைய 'உடையார்' நாவலில் எழுதியிருப்பார். அதில் தனக்கு குழந்தை பிறக்கக்கூடாது என்பதற்காக அவள் மூலிகை மருந்து உட்கொண்டு கருப்பையை சுருங்கி போக செய்து கொண்டாள் என்றும், ராஜராஜனை கொல்வதற்காக எய்யப்பட்ட விஷம் தோய்ந்த கத்தியை தான் ஏற்றுக்கொண்டதால் அந்த விஷம் அவள் உடலை பாதித்து பற்கள் கொட்டி, தலை முடி கொட்டி தன் தோற்றப்பொலிவை இழந்தாள் என்றும் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். நான் இப்போதான் தாமதமா உங்க கருத்தைப் பார்த்தேன்.

      நாவல்ல எழுதறதுல எவ்வளவு தூரம் ஆதாரம் இருக்கும்? நல்ல சுவாரசியமா இருப்பதற்காகவும் மெய் போல எழுதியிருப்பார்னு எனக்குத் தோன்றும்.

      1. பஞ்சவன் மாதேவி ராஜேந்திரனிடம் ரொம்ப அன்பாக இருந்திருக்கவேண்டும். அப்பாவுடன் ஏற்படும் கருத்து மோதல்களை பதவிசாக பஞ்சவன் மாதேவி பேசி, ராஜராஜனின் நல்லெண்ணம் ராஜேந்திரனிடம் நீங்காமல் பார்த்திருக்கவேண்டும். அரசியல் பிரச்சனைகள், பலரின் சூழ்ச்சியினால் ராஜேந்திர சோழன் பாதிக்கப்படாமல் காத்திருக்கவேண்டும். (தற்காலத்தைய இராமதாஸ், அன்புமணி, அவரின் சகோதரி மகன் என்று பாமக தலைமை அல்லாடுவதை ஒப்பிட்டுப் பாருங்கள்)

      2. ராஜேந்திர சோழனுக்கு பழுவேட்டரையர்கள் நல்ல பக்கபலமாக போர்களில் இருந்திருக்கவேண்டும். ரொம்ப விசுவாசமாக இருந்திருக்கவேண்டும். அதனால் அவர்களின் குலக்கொடி பஞ்சவன் மாதேவி மீது இன்னும் பாசம் அதிகமாக இராஜேந்திரனுக்கு இருந்திருத்தல் வேண்டும்.

      இதுபோல பல காரணங்கள் உண்மையாக இருந்திருத்தல் கூடும்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!