14.6.25

ரஜினி மடியில் உள்ள பையன் மற்றும் நான் படிச்ச கதை

 

================================================================================================


 எஃகினானல் ஆன வளைவுப் பாலத்திற்குப் பின்புலத்தில் இருக்கும் பெண் : பேராசிரியர் மாதவி லதா மற்றும் செனாப் ரயில் பால அதிசயம்

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் உயரமான பகுதியில், அமைதியான சூழலில் இருக்கும் பிரம்மாண்டமான இமயமலையின் பகுதியில் கரடுமுரடான நிலப்பரப்புடைய ஆழமான பள்ளத்தாக்கு வழியாகப் பாயும் செனாப் நதியின் மேலே, உலகின் மிக உயரமான, உலக அதி்சயமாகிய ரயில்வே பாலமான செனாப் ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது.


இந்த அரிய சாதனைக்குப் பின்னால் இருப்பவர், பொறியியல் திறமை மட்டுமின்றி, தொலைநோக்குப் பார்வையும், தைரியமும், தொழில்நுட்ப நிபுணத்துவமும், சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் வல்லமையும் கொண்ட புவி தொழில்நுட்ப நிபுணர் பேராசிரியர் ஏ.எஸ். மாதவி லதா அவர்கள்.

யார் இந்த பேராசிரியர் ஏ எஸ் மாதவி லதா?

பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் (IISc) சிவில் பொறியியல் துறையைச் சேர்ந்தவர்தான் பேராசிரியர் ஏ.எஸ். மாதவி லதா.

புகழ்பெற்ற கல்வியாளர். புவிதொழில்நுட்ப பொறியியலில் பலரது கவனத்தையும், மதிப்பையும் பெற்ற நிபுணர், இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் தலைமைத்துவத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குபவர். புவிதொழில்நுட்ப நிபுணரான இவர் பாறை கட்டுமானத்தில் மட்டுமின்றி சரிவான பகுதியில் கட்டுமானம் நிலையாக இருப்பது, மண் நிலத்தின் தன்மை, செயல்பாடுகள் இவற்றிலும்  நிபுணர் என்பதால் செனாப் பாலம் உட்பட பல தேசிய உள்கட்டமைப்பு திட்டங்களில் முக்கியமான ஆலோசகரும் கூட. செனாப் பாலம் திட்டத்தில் மிகவும் ஆர்வமாக ஈடுபட்டதோடு, முக்கியமாக, உலகின் மிகவும் சிக்கலான புவியியல் அமைப்புகளை உடைய பகுதியில் கட்டப்பட்ட பாலத்தின் அடிப்படைகளான அத்தளத்தைப் பற்றிய ஆய்வு, மதிப்பீடு, அடித்தள வடிவமைப்பு மற்றும் சாய்வான அப்பகுதியில் பாலத்தை வலுவாகக் கட்டுவது ஆகியவற்றில் அவரது ஈடுபாடு அளப்பிடற்கரியது என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

முன்னோடி வல்லுநர்களின் தயக்கம்

தலைப்புச் செய்திகளில் இடம் பெற வேண்டும் என்று உழைப்பவர் அல்லர் பேராசிரியர் மாதவி லதா.  கரடுமுரடான, சேதங்களுக்குள்ளாகும் நிலப்பரப்பில் நிலையான, வலுவான கட்டமைப்புகளை உருவாக்கும் அறிவியலான புவி தொழில்நுட்ப பொறியியலில் ஏற்கனவே பல தசாப்தங்களாக அவர் அமைதியாகச் சாதனைகளைச் செய்து  வருபவர்.

இந்திய ரயில்வே, அதன் லட்சியமான உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு (USBRL) திட்டத்தின் கீழ், செனாப் நதியிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் - ஈபிள் கோபுரத்தை விட உயரமான ஒரு பாலத்தை கற்பனை செய்தபோது - இதற்கு வழக்கமான பொறியியல் தொழில்நுட்பத்தை விட அதிகமான நிபுணத்துவம் தேவை என்பதை அவர்கள் உணர்ந்தனர். அதற்கு அறிவு, தைரியம், மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை தேவைப்பட்டது.

எனவே நிபுணர் குழுவில் சேர்வதற்கு, பேராசிரியர் மாதவி லதா அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அச்சமில்லை...அச்சமில்லை...

"அந்த நிலப்பரப்பு இடிந்து விழுந்தால் என்ன ஆகும்? நிலச்சரிவு ஏற்பட்டால் என்ன ஆகும்? சூரைக் காற்று அடித்து பாலத்தை இடித்துத் தள்ளினால் என்ன ஆகும்?" என்ற தொடர் கேள்விகளுக்கு, நான் தொடர்ந்து கேட்ட கேள்வி - நாம் வெற்றி பெற்றால்?” - இதை பேராசிரியர் மாதவி லதா நேர்காணல்களில் நினைவு கூர்ந்தார்.

அவரது பணி மிகவும் மகத்தான பணி. செனாப் அருகே உள்ள நிலப்பரப்பு, செங்குத்தான சரிவுகள்; உடைந்துவிடும் தன்மை கொண்ட பாறைகள்; நில அதிர்வு ஏற்பட்டால் அதிகமான பாதிப்புகள் ஏற்படும் தன்மை கொண்ட ஆபத்தான நிலப்பரப்பு. ஆனால் பாறை கட்டுமானத் துறை நிபுணரான மாதவி லதா, ஒரு ஆலோசகராக மட்டுமின்றி, தனது குழுவினருடன் செனாப் நதி பகுதியில் பாறைகளின் தன்மையை ஆய்வு செய்து, பாறைகளின் இடுக்குகளையும் பிளவுகளையும் வலுவான அஸ்திவாரமாகப் பயன்படுத்தி, இரும்பு தூண்களால் பாலத்தை கட்ட பரிந்துரை செய்தார்.

அவரது குழு பல மாதங்களாக ஆபாத்தான காலநிலைகளிலும் கூட உழைத்தது. பல்வேறு நிபுணத்துவம் வாய்ந்த ஆண்கள் மற்றும் பெண்களுடன் பணிபுரிந்த அவர் எல்லோரையும் ஒருங்கிணைத்து ஊக்கப்படுத்தினார்.

நூற்றுக்கணக்கான மீட்டர் கீழே இருந்து பாறைத் துண்டுகளின் மாதிரிகள் பிரித்தெடுக்கப்பட்டன. காற்று மற்றும் நில அதிர்வுக்கு அவற்றின் செயல்பாடுகளையும், உறுதித் தன்மையையும் ஆய்வகங்களில் பரிசோதித்தனர். அவருக்குத் திருப்தியான முடிவுகள் வராத சமயங்களில் மீண்டும் ஆய்வுக்கு உட்பத்தப்பட்டன. அவர் யூகத்திற்கு இடம் கொடுக்கவில்லை. இந்திய வீரர்களும் குடிமக்களும் ஒரு நாள் அந்தப் பாலத்தைக் கடப்பார்கள் என்ற உறுதியான நம்பிக்கையோடு செயல்பட்டார்.

எஃகு மற்றும் கிரிட்டில் நின்று கொண்டு

476 மீட்டர் நீளமுள்ள வளைவு வடிவமைப்பின் பணிகள் தொடர்ந்து கொண்டிருந்த போது, பேராசிரியர் மாதவி லதா, அடித்தளத்தையும் சாய்மானத்தையும் வலிமையாக்கியதோடு பாலத்தின் அடித்தளம் அதிக எடையைத் தாங்கும் வலுக் கொண்டதா என்பதையும் உறுதி செய்தார். இதன்படி பாறைகளின் இடுக்குகளில் பிரம்மாண்ட இரும்பு தூண்கள் நிறுவப்பட்டு பிரத்யேக சிமென்ட் கலவையால் மூடப்பட்டன. சில இடங்களில் பாறைகள் மிக ஆழமாக துளையிடப்பட்டு இரும்பு தூண்கள் பொருத்தப்பட்டன. இதன்காரணமாக உலகின் மிகவும் வலுவான பாலங்களில் ஒன்றாக செனாப் ரயில் பாலம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. இது வெறும் பாறை மற்றும் கான்கிரீட் மட்டுமல்ல. ரிக்டர் அலகில் 8 என்ற அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டால்கூட பாலத்துக்கு சிறுசேதம்கூட ஏற்படாது. 40 கிலோ வெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்தினால்கூட தகர்க்க முடியாது. பாலத்தின் சில தூண்கள் சேதமடைந்தாலும் பாலம் உடையாது. 266 கி.மீ. வேகத்தில் காற்று வீசினால்கூட பாலத்துக்கு பாதிப்பு ஏற்படாது. இந்த பாலம் 120 ஆண்டுகள் நீடித்து நிலைத்து நிற்கும் என்று தரச்சான்று அளிக்கப்பட்டிருக்கிறது.

திரைக்குப் பின்னால் இருந்தாலும், அவரது பணி, திட்டத்தின் ஒருமைப்பாட்டின் அடித்தளமாக மாறியது. செனாப் பாலத்தை இப்போது அடையாளப்படுத்தும் சின்னமான எஃகு வளைவு அதன் உலோக வேலைப்பாடுகளால் மட்டுமல்ல, பூமியைப் படித்து, அதன் அதிர்வுகளை அவதானித்து, ஒவ்வொரு போல்ட்டையும் துல்லியமாகத் திட்டமிட்டுப் பொருத்தப்பட்ட வளைவாகும்.

ஒரு தேசத்தை கட்டியெழுப்பிய ஆசிரியர்

செனாப் பாலத்தில் பணிபுரிந்தபோதும் கூட, பேராசிரியர் மாதவி லதா தன் ஆசிரியர் பணியை தொடர்ந்து செய்து வந்திருக்கிறார். IISc-யில் அவரது மாணவர்களுக்குக் காலையில் ஆற்ற வேண்டிய விரிவுரைகளுக்காக காஷ்மீரிலிருந்து இரவு விமானங்களில் எப்படிப் பயணம் செய்தார் என்பதை அவரது மாணவர்கள் நினைவுகூர்கிறார்கள். வடிவமைப்பு செய்வதில், யதார்த்தத்தில் உள்ள பிரச்சினைகளை வகுப்பறையில் கலந்துரையாடி, இளம் இந்தியர்களை - குறிப்பாகப் பெண்களை - பொறியியல் என்பது வெறும் பாடப்புத்தகங்களைப் படிப்பது மட்டுமல்ல, ஒரு நாட்டின் விதியை வடிவமைப்பது பற்றியது என்று சொல்லி ஊக்கப்படுத்துவதையும் மாணவர்கள் சொல்கிறார்கள். செனாப் பாலம் இறுதியாகக் கட்டி முடிக்கப்பட்டு, ரயில்கள் ஓடத் தயாராகும்போது, உலகம் இந்த சாதனையைப் பாராட்டியது. ஆனால் இந்த வரலாற்று நிகழ்வின் ஓரிடத்தில் முக்கிய அம்சமாக, ஒரு கனவை எஃகாக மாற்ற உதவிய, இத்தேசத்தின் சிறந்த மகள்களில் ஒருவரான - பேராசிரியர் ஏ.எஸ். மாதவி லதாவும் இருக்கிறார் என்பதை இத்தேசம் நினைவில் கொள்ளும்.

பாலங்கள் வெறும் இரும்பினால் கட்டப்படவில்லை - அவை தொலைநோக்குப் பார்வை, நம்பிக்கை, மன உறுதி, மட்டற்ற  மனித ஆற்றல், உணர்வுகள் இவற்றால்  கட்டப்பட்டுள்ளன என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். 

==============================================================================================

ஒரு இந்திய விவசாயி அரிசி வைக்கோலை (Rice Husk) உபயோகித்து மக்கக்கூடிய (biodegradable) தட்டுகளை உருவாக்கத் தொடங்கினார். இன்று அவை பிளாஸ்டிக் பதிலாக சுற்றுச்சூழலுக்கு நன்மை தரும் தீர்வாக வளர்ந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது பசுமை தொழில் வளர்ச்சிக்கும், விவசாய வருமான வளர்ச்சிக்கும் உதவியுள்ளது.


Thank you JKC Sir..
===============================================================================

 

நான் படிச்ச கதை (JKC)

மறைந்து திரியும் கிழவன்

கதையாசிரியர்: சுரேஷ்குமார இந்திரஜித்

இயற்பெயர் என்.ஆர். சுரேஷ்குமார். சுரேஷ்குமார இந்திரஜித் ராமேஸ்வரத்தில் ராமநாதன், காந்திமதி இணையருக்கு அக்டோபர் 5, 1953-ல் பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்தபின் மதுரைக்குக் குடிபெயர்ந்தார். மதுரை நாகமலையில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் புதுமுக வகுப்பு பயின்றார். மதுரை மஜுரா கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தமிழக அரசில் தாசில்தாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கர்நாடக சங்கீத ரசனையுள்ளவர்.

மிகக் குறைந்த சொற்களில் தன்னுடைய புனைவை வடிவமைத்துக் கொள்வது அவருடைய எழுத்து முறை. மற்ற எந்த வகையான பொதுமைப்படுத்தல்களையும் இவருடைய படைப்புலகில் காணமுடியாது. எல்லா வகையான கதை சொல்லும் முறைகளையும் தன்னுடைய சிறுகதைகளில் வெற்றிகரமாக அவர் கையாண்டிருக்கிறார்.”

ஜெயமோகன் 'இடப்பக்க மூக்குத்திதொகுப்பின் வெளியீட்டின்போது 'சுரேஷ்குமார இந்திரஜித் வரைபடம் மட்டுமே அளிக்கிறார், வாசகரே பயணித்து தங்களது இலக்குகளை அடைய வேண்டும்' என்று கூறியுள்ளார்.

முன்னுரை

இன்று வரும் இக்கதையும் சென்ற வாரம் போலவே ஒரு அமானுஷ்யம் கதை. இந்தக்கதையை எஸ்ரா அவருடைய 100 சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்த்திருக்கிறார். ஆனால் கதை அவ்வளவு சிறப்பானதாக எனக்குத் தோன்றவில்லை. காரணம் கதையே இல்லை, அல்லது எனக்குத்தான் புரியவில்லையோ என்று தெரியவில்லை.

மறைந்து திரியும் கிழவன் கதை இருபது வருடங்கள் நாவலை ஞாபகப்படுத்தியது. எம்.எஸ்.கல்யாணசுந்தரம். அதே கதையை நாம் புலிநகக்கொன்றை நாவலிலும் காண்கிறோம். அடூர் கோபாலகிருஷ்ணனின் ஒரு சினிமாமுகாமுகம் என ஞாபகம், அதிலும் இதே கதை வருகிறது. ஜே. ராகவேந்தர். ராகவேந்தர் மினிமலிசம் என்ற புது வார்த்தையையும் அதற்கு சான்றாக குறைவான கோடுகள் கொண்டு வரையப்பட்ட பாரதி படத்தையும் சுட்டிக்காட்டுகிறார். இந்த கதையும் மினிமலிசம் என்ற முறையில் குறைவான வெளிப்படுத்தல்களால் எழுதப்பட்டதாகக் கூறுகிறார்

மறைந்து திரியும் கிழவன்

TCX 6838 என்ற எண்ணுள்ள என் ஸ்கூட்டரில் விருமாண்டியைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தேன். சாலையின் இருபுறமும் தென்னந்தோப்புகளும், வயல்வெளிகளும் மாறிமாறி வந்து கொண்டிருந்தன. விருமாண்டி என் நண்பன். ஓடும் ஆற்றின் கரைகளில் விருமாண்டித்தேவர் குடும்பத்திற்குச் சொந்தமான தென்னந்தோப்புகள் இருக்கின்றன. தென்னந்தோப்புக்குள் ஓர் அழகான வீடும் அவர்களுக்கு இருந்தது. அநேகமாக விருமாண்டி மட்டுமே அங்கு இருப்பான். அவன் குடும்பத்தினர் ஊருக்குள் குடியிருந்தனர். தென்னந்தோப்பு வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர்  தொலைவில் ஒரு கள்ளுக்கடை. அங்கே அயிரை மீன் குழம்பு கிடைக்கும். ஆற்றில் வெகு நேரம் குளித்துவிட்டு விருமாண்டியின் தோப்பு வீட்டில், வாங்கி வைத்திருந்த கள்ளைக் குடித்துவிட்டு அயிரை மீன் குழம்புச் சாப்பாடு முடித்துத் திரும்பி வருவது ஆனந்தமான அனுபவம்.

சாலையில் ஓர் உருவம் வண்டியை நிறுத்தும் சைகையுடன் கைநீட்டி நின்று கொண்டிருந்தது. சற்று அருகில் வந்ததும்தான் நின்றுகொண்டிருக்கும் உருவம் இந்திரஜித் என்று தெரிந்தது. ஸ்கூட்டரை நிறுத்தினேன். விருமாண்டியைப் பார்த்துவிட்டு வரும் வழியில் தன்னுடைய மோட்டார் சைக்கிள் பழுதடைந்து நின்று விட்டதாக இந்திரஜித் கூறினான். தற்செயலாக நான் வந்தது நல்லதாகப் போயிற்று என்றும், மெக்கானிக்கை எனது வண்டியில் போய் அழைத்து வருவதாகவும் கூறினான். ‘உன்னுடைய மோட்டார் சைக்கிளுக்கு நான் காவலா?’ என்று கேட்டேன். ‘அந்த மோட்டார் சைக்கிளை எவனும் எடுத்துச் செல்ல முடியாது. அப்படி ஓர் கோளாறு. நீ இங்கு காத்திருக்க வேண்டாம். அதோ தெரிகிறதே ஓர் இடிந்த வீடு அதுவரை நடந்து சென்றுவிட்டு வா. பொழுது போகும்என்று கள் வாசனையடிக்க கூறினான் இந்திரஜித். ‘எதற்கு அங்கே போக வேண்டும்?’ என்று நான் கேட்டதற்கு, ‘போய்ப் பார் தெரியும்என்றவாறே என் ஸ்கூட்டரை வாங்கிக் கொண்டான். அவன் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் போது ஞாபகம் வந்தது. விருமாண்டி, தோப்பு வீட்டில் இருக்கிறானா என்று கேட்டேன். விருமாண்டி, தென்னை மரங்களுக்கு உரம் வைக்கும் வேலையைச் செய்து கொண்டிருப்பதாகக் கூறிவிட்டு இந்திரஜித் கிளம்பினான். வயல் வெளியைப் பார்த்தேன். சற்று தூரத்தில் இடிந்த வீடு தெரிந்தது. அதை ஏன் பார்க்கச் சொல்கிறான் என்று எனக்குப் புரியவில்லை. போய்ப் பார்க்கலாம் என்று தோன்றியது. தென்னந்தோப்பையும், கதிர்கள் நிற்கும் வயல்களையும் கடந்து அந்த இடத்திற்குச் செல்ல வேண்டும். நடக்க ஆரம்பித்தேன். தென்னந்தோப்பைத் தாண்டி வயல்வரப்புகளில் செல்லும் போது எனக்குத் தடுமாற்றமாக இருந்தது. இரண்டு பெரிய புளிய மரங்களும் இடிந்த வீடும் திடல் போன்று காணப்பட்ட அந்த இடத்தில் இருந்தன. ஆள் அரவமற்ற இடம். நான் இடிந்த வீட்டை நோட்டமிட்டுக் கொண்டே உள்ளே ஜாக்கிரதை உணர்வுடன் நுழைந்தேன்.

உடைந்து கிடந்த சுவர்களின் மீது ஏறி நின்று உள் அறையை நோக்கினேன். உத்திரம் ஒன்று குறுக்காக விழுந்து கிடந்திருந்தது. உள் அறையின் ஜன்னலைப் பார்த்ததும் எனக்குத் திகில் ஏற்பட்டது. துருப்பிடித்த ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு நிலைத்த பார்வையுடன் ஒரு கிழ உருவம் நின்றுகொண்டிருந்தது. நிலைத்திருந்த கண்கள் அசைந்து என்னை நோக்கின. பைத்தியம் போல எனக்குத் தோன்றியது. உள் அறையின் வாசலில் கிடந்த செங்கற் குவியலின் மீது ஏறி நின்று அந்தக் கிழ உருவம் என்னை நோக்கியது. குளித்துப் பல காலம் ஆகியிருக்கும் போல அப்படி ஓர் அழுக்குத் தோற்றம். அடர்ந்த வெள்ளைத் தாடி, மீசை, தலை முடிகளுக்கிடையே கண்கள் அசைந்து கொண்டிருந்தன.

கிழவன் என்னை நோக்கிக் கேட்டான். ’நீ யார்?’ நான் என் பெயரைச் சொன்னேன். ‘நீ வெள்ளைக்காரன் உளவாளியா? உண்மையைச் சொல், யார் நீ?’ என்றான் கிழவன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘எந்த வெள்ளைக்காரன்?’ என்றேன். ‘எந்த வெள்ளைக்காரனா? அன்னியனை ஒப்புக் கொண்ட துரோகியா நீ?’ என்றான் கிழவன். ‘அன்னியன் போனது உங்களுக்குத் தெரியாதா?’ என்றேன். கிழவன் என்னைச் சற்றுநேரம் உற்றுப் பார்த்தான். ‘அப்படித்தான் சிலர் சொல்கிறார்கள். ஆனாலும் நம்புவதுதான் சிரமமாக இருக்கிறது. நம்பி வெளியே வந்தால் திரும்பவும் சூடு வைத்து விடுவார்களோ என்றுதான் இப்படித் திரிந்துகொண்டிருக்கிறேன். அன்னியர்களின் சூழ்ச்சியையும், தாட்சண்யமற்ற தன்மையையும் நான் நன்கு அறிந்திருக்கிறேன். அதனால்தான் நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.’ என்றான் அவன்.

நீங்கள் எவ்வளவு காலமாக மறைந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். ‘பல வருடங்கள் ஆனது போன்ற உணர்வை ஏற்படுத்தக் கூடியவை அந்தப் பத்து நாட்களும்!’ என்றான் கிழவன். ‘பத்து நாட்கள் என்பது என்ன கணக்கு?’ என்றேன். ‘பத்து நாட்கள் என்பது ஓர் யுகம்தான். 1942 ஆகஸ்டு 18-ந்தேதி பிடிபட்டு, ஒரு பத்து நாட்களைப் பல வருடங்களாகக் கழித்தேன். பத்து நாட்கள் என்பது பல காலம் ஆன மாதிரி, பல காலம் பத்து நாட்களாக நீண்டு கொண்டே செல்கின்றது. பத்து நாட்களிலும் நான் நரக வேதனையில் இருந்தேன் என்பதை அறிய வேண்டும். என் நண்பர்களைச் சித்திரவதையில் இழந்தேன் இதோ பார் சூடுபட்ட காயங்களை….’ என்று சட்டையைக் கழட்டி நெஞ்சையும் முதுகையும் காட்டினான். குறுக்கும் நெடுக்குமாகச் சூடுபட்ட வடுக்கள் குரூரமாகக் காட்சி தந்தன.

நான் கிழவனை அமரச் சொன்னேன்.

(படம் உதவி இணையம்.)

நீங்கள் என்னைக் கண்டு அஞ்ச வேண்டாம். நான் உங்கள் நண்பன். நீங்கள் வெளியே வரலாம். அன்னியன் இங்கு இல்லை என்பதுதான் உண்மைஎன்றேன். ‘அன்னியன் இங்கு இல்லை என்றால் சுபாஷ் சந்திரபோஸ் வந்துவிட்டாரா? 1941 ஜனவரி 26-ந்தேதி வீட்டுச் சிறையிலிருந்து தப்பித்த போஸ் வந்து விட்டாரா? அவரிடமிருந்து கடிதம் கொண்டு வந்தால் நான் மறைவிலிருந்து வரலாம். திரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் நான் அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். போஸ் அன்று கோபத்திலும் வருத்தத்திலும் இருந்தார். நான் மிகவும் கொந்தளித்துப் போயிருந்தேன். அவர் என்னைச் சமாதானப்படுத்தும் நோக்கில் பேசினார்.’ என்றான் கிழவன்.

நான், போஸ் இறந்துவிட்டதாகக் கூறப்படுவதைக் கூறலாமா என்று நினைத்து, பிறகு கூறாமல் பேச்சை மாற்றும் விதமாக, ’நீங்கள் எந்தக் கட்சியில் சேர்ந்திருந்தீர்கள்?’ என்று கேட்டேன். அதற்குக் கிழவன், நான், சங்கரய்யா, பெருமாள் ஆகியோர் நாராயணசாமி தலைமையில் இயங்கும் தலைமறைவு இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களாகச் சேர்ந்தோம். நீங்கள் பெயரைக் கேள்விப்பட்டிருக்கலாம்என்று சொல்லி யுவபாரத்என்ற பெயரை ரகசியமாகச் சொன்னான். நான் அந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருப்பதாக ரகசியத்தைக் கேட்கும் பொறுப்பில் நானும் பாவனை செய்தேன்.

குதிராம் போஸ் என்னைத் தனிப்பட்ட முறையில் கவர்ந்திருந்தார். அறுபத்து நான்கு நாட்கள் உண்ணாவிரதமிருந்து இறந்த ஜதீன் போஸ், சிட்டகாங் ராணுவத் தளவாடப் பாசறையைச் சூறையாடிய சூர்யா சென் ஆகியோர் எங்கள் அனைவரையும் ஈர்த்திருந்தார்கள். இவற்றையெல்லாம், ஏன் சொல்கிறேன் என்றால் நீண்டகாலமாகிவிட்ட பத்து நாட்களில் இவற்றையெல்லாம் பலர் மறந்திருக்கலாம். பலருக்குத் தெரியாமலேயே இருந்திருக்கலாம். பலருக்கு இட்டிலி தின்று கொண்டேயிருக்க வேண்டும் என்று தோன்றிக்கொண்டேயிருக்கும். வேறு விஷயங்கள் நினைவிலிருக்காது. யுவபாரத் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?’ என்றான் கிழவன். ‘தலைமறைவு இயக்கம் என்று நீங்கள் சொல்லும்போது அது பற்றி விபரங்கள் எனக்கு எப்படித் தெரியும். அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்பதைத்தான் நான் ஏற்கனவே கூறிவிட்டேனேஎன்றேன்.

சொல்கிறேன். யுவபாரத் நாராயண சாமி தலைமையில் துவங்கியது. பெங்காலைச் சேர்ந்த அஜாய் போஸ் என்பவருக்கும் அவருக்குமிடையே தொடர்பு இருந்தது. நானும், என் நண்பர்கள் சங்கரய்யரும், பெருமாளும் அவரைத் தேவகோட்டையில் ஓரிடத்தில் ரகசியமாகச் சந்தித்தோம். எங்கள் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நம்பிக்கை தொடர்ந்தது நான் மிகுந்த துணிச்சல்காரன் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே. காட்டுக்குள் போலீஸ் பட்டாளத்திடமிருந்து, சாலமோன் ஆர்னால்டிடமிருந்து நான் மட்டும் தப்பித்து வந்தது மட்டுமே என் துணிச்சலைக் காண்பிக்காதா? அதுகூட தப்பு. அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். நாகனாறு பாலத்தை நாங்கள் வைத்த குண்டுதான் தகர்த்தது. சூப்பிரண்டு பெஞ்சமினைச் சங்கரய்யர்தான் சுட்டுக் கொன்றான். சங்கரய்யர் காங்கிரஸ் கட்சியிலும் இருந்துகொண்டு யுவபாரத்திலும் உறுப்பினராக இருந்தான். நாங்கள் ரகசியமாகக் கூடி ஒரு இடத்தில் மறைந்திருந்தபோது எங்களைப் போலீஸ் சுற்றிக் கொண்டது. பெருமாள் எல்லோரும் இறந்து விடலாமா என்று கேட்டான். பிறகு நாங்கள் கைதாகி நீதிமன்றத்தின் மூலம் சுதந்திர உணர்வை மக்களுக்கு உருவாக்கலாம் என்று நினைத்துக் கைதானோம். அது என்ன சந்தர்ப்பம் என்று தெரியுமல்லவா. காந்தி ஆகஸ்டு 8-ந்தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்திருந்தார். நாங்கள் 18-ந்தேதி கைதானோம். ஆனால், நாங்கள் போலீஸ் ஸ்டேசனுக்கோ நீதிமன்றத்திற்கோ கொண்டு செல்லப்படவில்லை. எங்கள் கண்களையும் கைகளையும் இறுகக் கட்டி அவிழ்த்தனர். காடு போலத் தோன்றியது. பிறகு கால்களில் விலங்கு போட்டனர். போலீஸ் அதிகாரி ஆர்னால்டு எங்கிருந்தோ வந்தான். அவன் வந்ததும், எங்களைத் தனித்தனியே மரத்தில் கட்டினர். அதற்கு முன் எங்கள் ஆடைகளை அவிழ்த்து விட்டனர். கையில் வைத்திருந்த லத்தியினால் முதலில் நாங்கள் பார்க்க, பெருமாளை அடித்தான். வலி பொறுக்க முடியாமல் பெருமாள் அலறியதை நாங்கள் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டுமிருந்தோம். கை ஓய்ந்ததும் சாவகாசமாகத் தண்ணீர் குடித்து ஓய்வெடுத்தான் ஆர்னால்டு. பெருமாளின் முகம், உடம்பெல்லாம் தடியினால் அடிபட்டு வீங்கிச் சிவந்திருந்தது. வலியில் முனகிக் கொண்டிருந்தான். ஓய்வெடுத்த பின் சங்கரய்யரை அடித்தான். என்னை அடிக்கும் முறை வருவதற்குள் நான் இறந்துவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இறக்கவில்லை. சங்கரய்யரை அடித்து ஓய்வெடுத்த பின் என்னருகே வந்து என்னை அடித்தான். அதைப் போன்றதொரு இம்சையை உங்களால் கற்பனை பண்ண முடியாது. வலியை அனுபவிக்காமல் இறந்துவிட வேண்டும் என்று மனம் விரும்பியது. வலியில் உயிர் துடித்தது. அப்படியே எங்களை விட்டுவிட்டு ஆர்னால்டும் அவரது பட்டாளமும் சென்றுவிட்டன. வலியில் எங்களுக்குப் பேசுவது கூட இயலாத காரியமாகிவிட்டது. பசி கொன்று கொண்டிருந்தது. நா வறட்சியில் தொண்டை தவித்துக் கொண்டிருந்தது. இரவு முழுக்கக் குளிர் பயங்கரமாகத் தாக்கியது. ஏதேதோ பூச்சிகள் உடம்பில் ஊர்ந்தன. உயிர் சீக்கிரம் போக வேண்டும் என்பதே பிரார்த்தனையாக இருந்தது. சூடு வாங்கித்தான் ஆக வேண்டும் என்று இருக்கும் போது என்ன செய்வது? அடுத்த நாள் ஆர்னால்டு பட்டாளத்துடன் வந்தான். சாவகாசமாக சிகரெட் பிடித்துக் கொண்டே நெருப்பை உருவாக்கச் சொன்னான். கையோடு கொண்டு வந்திருந்த இரும்புக் கம்பியை அதில் பழுக்கக் காய்ச்சச் சொன்னான். அவன் காரியம் எல்லாம் பதற்றமின்றி நிதானமாக இருந்தது. ஆத்திரப்பட்டோ, ஆவேசம் கொண்டோ காரியம் செய்யவில்லை. மிகவும் நிதானமாக காய்ச்சிய இரும்புக் கம்பியை எடுத்து வந்து சங்கரய்யரின் உடம்பில் இழுத்தான். கடைசியாக சங்கரய்யரின் வயிற்றில் குத்தினான். ஓர் அலறலில் சங்கரய்யரின் கழுத்து சாய்ந்தது. உயிர் போக வேண்டும் என்று என்னையறியாது அவசரமாகவும் வேகமாகவும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். ஆர்னால்டு கம்பியை நெருப்பில் காய்ச்சக் கொடுத்துவிட்டு, ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். பிறகு சாவகாசமாக எழுந்து, அதை எடுத்து பெருமாளின் வயிற்றில் மாறி மாறிச் சொருகினான். அதற்குப் பிறகு கம்பியைக் காய்ச்சக் கொடுத்துவிட்டு ஓய்வெடுத்தான். பின் கம்பியை வாங்கிக்கொண்டு என்னை நோக்கி வந்தான். அவன் முகத்தில் அப்படி ஓர் அமைதி தவழ்ந்தது. என் உயிர் எழுந்து அவன் குரல்வளையை நோக்கிப் பாய்ந்தது. பிறகு சூன்யத்திற்குள் உயிர் சுருண்டது. கம்பியின் இழுப்பில் அலறினேன். உடம்பெல்லாம் எரிந்தது. சாவகாசமாகக் கம்பியினால் என் உடலில் கோடுகள் வரைவது போல் இழுத்தான். உயிர் அலறித் துடித்தது. சற்று நேரத்தில் கோடுகள் வரைவது நின்றது. கண்களைத் திறந்தேன். சாவகாசமாக சிகரெட் பிடித்துக்கொண்டு ஆர்னால்டு நின்றிருந்தான். பின் சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டுத் தன் பட்டாளத்துடன் வாகனத்தில் சென்றுவிட்டான். என்னை ஏன் கொல்லாமல் விட்டுச் சென்றான் என்று தெரியவில்லை. நினைவுகள் மங்கிக் கொண்டிருந்தன. உயிர் சாகத் துடித்துக் கொண்டிருந்தது. யாரோ போலீஸ்காரர் வெள்ளையாக இருந்தார். வானத்திலிருந்து வந்த வெள்ளைப் போலீஸா அல்லது இயேசுநாதரா என்று தெரியவில்லை. என் கட்டுகளை அவிழ்த்தார். என் கால் விலங்குகளை உடைத்தார். மடியில் கிடத்தி, வாயில் நீரூற்றினார். மருந்து போட்டார். என் காதருகே பிராயச்சித்தம் என்றார். போர்வையால் போர்த்தினார். வானத்தில் பறந்து மறைந்து சென்றார். பிறகு தோன்றினார். எனக்கு உணவூட்டினார். மறைந்தார். தோன்றினார். ஒரு நாள் மறைந்தே விட்டார். ரணத்தோடு எழுந்தேன். வெகு தூரம் நடந்து, பிச்சை எடுத்து உண்டு, அந்தப் புதிய இடத்தில் ஓர் அரசாங்க ஆஸ்பத்திரியில் சேர்ந்தேன். என்னை யாருக்கும் தெரியவில்லை. வானத்திலிருந்து வந்த வெள்ளைப் போலீஸ் அல்லது இயேசுநாதர் எனக்கு அப்படி ஓர் பாதுகாப்பை அளித்திருந்தார். அவரை என்னால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ‘மறைந்திருஎன்றார். நானும் மறைந்திருக்கிறேன். இன்னும் மறைந்துகொண்டேயிருக்கிறேன். சுதந்திரத் தாய் வெற்றி கொண்ட பின் வரலாம் என்றிருக்கிறேன்.’ கிழவன் பேச்சை முடித்துவிட்டு வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

பிறகு எழுந்து, ‘உன்னிடம் சொன்னதை யாரிடமும் சொல்லாதே. நான் மறையப் போகிறேன். யாரிடமும் சொல்லாதேஎன்று எழுந்து என்னைப் பார்த்து மலங்கலாக விழித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு வருகிறேன்என்று சொல்லிவிட்டு வயல்களினூடே ஓடி, பார்வையிலிருந்து மறைந்தான்.

நான் திகைத்து நின்றிருந்தேன். கண்டதெல்லாம் கனவா அல்லது நினைவா என்ற பிரமை ஏற்பட்டது. மனம் துயரமாக இருந்தது. சிந்தனையிலேயே தென்னந்தோப்பையும் வயல்வெளிகளையும் கடந்து சாலைக்கு வந்தேன். சாலையில் என் ஸ்கூட்டர் மட்டும் நின்றிருந்தது. சாவி ஸ்கூட்டரிலேயே இருந்தது. இந்திரஜித் என்னைச் சந்தித்ததும் என் ஸ்கூட்டரை வாங்கிச் சென்றதும் உண்மைதானா என்று சந்தேகம் ஏற்படும் படியாக ஸ்கூட்டர் சாவியுடன் நின்று கொண்டிருந்தது. சாலையில் ஒருவரும் இல்லை.

ஜூன் 1993

ஆசிரியர் பற்றிய விவரங்களுக்கு :   சுரேஷ்குமார இந்திரஜித் - Tamil Wiki

பின்னுரை.

கதை கீழ் வரும் செய்தியின் அடிப்படையில் அமைந்திருப்பதாக நான் கருதுகிறேன்.

On January 24, 1972, local farmers on Guam discover Shoichi Yokoi, a Japanese sergeant who fought in World War II, still hiding in the jungle—26 years after the official end of the war. Japanese soldiers had been trained that death was preferred to the disgrace of being captured alive.

நான் கதையில் கண்ட சில முரண்பாடுகள். : 

ஊருக்குள் பலரும் வந்து போகும் தோப்பில் மறைந்து வாழ்வது எப்படி? உணவும் தண்ணீரும் எப்படி கிடைத்தது. ?

கதை ஜூன் 1993 இல் எழுதப்பட்டதாக தோன்றுகிறது. சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 50 வருடங்கள். 50 வருடங்களாகவா கிழவனுக்கு செய்தி தெரியாமல் இருக்கும்?

இது போன்ற ஐயங்களை தீர்ப்பதற்காக

நான் திகைத்து நின்றிருந்தேன். கண்டதெல்லாம் கனவா அல்லது நினைவா என்ற பிரமை ஏற்பட்டது. மனம் துயரமாக இருந்தது. சிந்தனையிலேயே தென்னந்தோப்பையும் வயல்வெளிகளையும் கடந்து சாலைக்கு வந்தேன். சாலையில் என் ஸ்கூட்டர் மட்டும் நின்றிருந்தது. சாவி ஸ்கூட்டரிலேயே இருந்தது. இந்திரஜித் என்னைச் சந்தித்ததும் என் ஸ்கூட்டரை வாங்கிச் சென்றதும் உண்மைதானா என்று சந்தேகம் ஏற்படும் படியாக ஸ்கூட்டர் சாவியுடன் நின்று கொண்டிருந்தது. சாலையில் ஒருவரும் இல்லை.” என்று வாசகர்களை சிந்திக்க வைக்கிறார்.

உண்மையில் கதை INA, வெள்ளையர்களின் அட்டகாசம், ஜப்பானிய சிப்பாயின் மறைவு வாழ்க்கை, இவை மூண்றையும் கலந்து எழுதப்பட்ட ஒன்றாக தோன்றுகிறது. எழுதக்கூடியவர்களுக்கு எதையும் கருப்பொருளாக்கி கதை புனைய முடியும் என்பது புலனாகிறது.  

12 கருத்துகள்:

  1. இன்றைய பாசிட்டிவ் செய்திகள் நன்று.

    கதை கம்யூனிஸ்டுகள் பற்றிச் சொல்கிறது. அமானுஷ்யம்லாம் இல்லை

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கமும் நன்றியும்

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.

    இன்றைய கதைப்பகிர்வும் நன்றாக உள்ளது. இறுதியில் படிக்கும் போது அமானுஷ்யத்தின் திருப்பம் தெரிகிறது. ஆசிரியர் கதையை சிறப்பாக எழுதியிருக்கிறார்.இங்கு கதையை பகிர்ந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. முகமது யாசின் ,மாதவி லதா இருவருக்கும் பாராட்டுகள். மாதவி லதா அவர்களின் செயல்திட்டம் மிகுந்த முக்கியத்துமும், பயனும் உடையது

    வயோதிபரின் கதை சுதந்திரபோராட்ட காலத்தை நினைவு படுத்தியது படிக்கும்போது . . அனுமானிசமாக முடித்துள்ளார்.

    பதிலளிநீக்கு
  5. முகமது யாசின் நல்ல குணம் பாராட்ட வேண்டும். அவன் ஆசையால் அவனுக்கு நன்மை கிடைத்தது. அவன் படிக்க நினைத்ததை படிக்கட்டும்.

    பேராசிரியர் ஏ.எஸ். மாதவி லதாவுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. கதை நன்றாக இருக்கிறது. சுதந்திரத்திற்கு எவ்வளவு பேரின் தியாகம் , உழைப்பு இருந்து இருக்கிறது. உண்மையில் அவர் இருக்கிறாரா அல்லது அவரின் ஆவி வந்து பட்ட கஷ்டங்களை சொல்லி விட்டு சென்றதா தெரியவில்லை.அல்லது

    //அதோ தெரிகிறதே ஓர் இடிந்த வீடு அதுவரை நடந்து சென்றுவிட்டு வா. பொழுது போகும்’ என்று கள் வாசனையடிக்க கூறினான் இந்திரஜித்.// ‘


    அந்தக்கால நினைவுகளில் நின்று விட்ட மனதை உடையவர் அங்கு இருக்கிறார் போல அதுதான் இந்திரஜித் அந்த வீட்டுக்கு போ நல்ல பொழுது போகும் என்கிறார். அவரும் அவர் கூறும் வரலாறை கேட்டு இருப்பார் போலும்.

    பதிலளிநீக்கு
  7. சிறுவன் முகமது யாசினின் நல்ல குணத்தைப் பாராட்ட வேண்டும்.

    அவன் படிக்க நினைத்ததைப் படித்து நன்றாக வரட்டும் வாழ்வில்.

    மாதவி லதா அவர்களின் திறமை வியக்க வைப்பதோடு, அரிய சாதனையைச் செய்திருக்கிறார். பாராட்டுகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. கதையில் அமானுஷ்யம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த வீட்டிலுள்ள பெரியவர், அவருக்கு நேர்ந்த கொடுமைகளால் மனம் கொஞ்சம் பிசகி, டெமன்ஷியாவில் இருக்கிறார். அந்த நினைவுகளிலேயே தங்கிவிட்டார். அதுவும் மறைந்தே, வேறு எந்த செயல்பாடுகளும் இல்லாமல் இருந்ததில் அப்படி ஆகிவிட்டார் என்றே தோன்றுகிறது. நம் வீட்டிலேயே கூடப் பெரியவர்கள் அப்படி இருந்தால் பழைய நினைவுகளிலேயே வாழ்வார்களே அப்படி.

    அந்த சுவாரசியத்தைக் காணத்தான் அவர் நண்பர் இந்திரஜித் அங்குப் போகச் சொன்னார் போலும். இந்திரஜித் போய்விட்டு வந்து ஸ்கூட்டரை அதே இடத்தில் வைத்துவிட்டுப் போயிருக்கிறார் அவ்வளவே.

    கதை எழுதப்பட்ட வருடம் 1993. மொபைல் இல்லாத காலம். 95 ல் தான் உள்ளே வந்த நினைவு ஆனால் அப்போதும் பொதுமக்கள் கையில் இல்லை.

    இருந்திருந்தால் ஃபோன் அடித்துக் கேட்டிருக்கலாமே. இந்திரஜித்தை....அவர் மெக்கானிக்கை அழைத்து வந்து தன் வண்டியை சரிபார்த்துவிட்டுப் போயிருந்திருக்கலாம் இல்லை மெக்கானிக்கோடவே வண்டியைத் தள்ளிக் கொண்டு சென்றிருந்திருக்கலாம்.

    எழுதிய விதம் நன்று. ஆசிரியரைப் பற்றி இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன். எவ்வளவு எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்று வியக்க வைக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அந்தப் பெரியவரின் விவரிப்பு, கலங்க வைக்கிறது. சுதந்திரத்தில் எத்தனை பேர்கள் இப்படி அல்லலுற்றிருப்பார்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. ​கதையைப் பற்றி, கதையில் வரும் கிழவனைப் பற்றி ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக தீர்ப்பு சொல்கின்றனர். நெல்லை கிழவனை மாவோயிஸ்ட் ஆக்கி விட்டார். கமலா ஹரிஹரன் மற்றும் மாதேவி இருவரும் கதை அமானுஷ்யம் என்று கூறுகிறார்கள். கோமதி அரசு, கீதா ரங்கன் இருவரும் கதை உண்மையாக இருக்கலாம், கிழவன், டிமென்சியா உள்ள ஒருவர். அந்த நினைவுகள் மாறாமல் அப்படியே அந்தக் காலத்தில் உறைந்து விட்டார் என்று முடிவு கூறுகின்றனர்.

    இப்படிப்பட்ட ஆராய்ச்சிகள், கதையை ஆழ்ந்து படித்து தரப்படும் விமரிசனங்களுக்காகத் தான் நான் படிச்ச கதை வாராவாரம் வருகிறது. இத்தகைய ஆராய்ச்சி மகிழ்ச்சி ஊட்டுகிறது. அனைவருக்கும் நன்றி.

    Jayakumar

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!