6.6.25

சொந்தம் தர வரும் ஆனந்தம் சிந்தும் கவி மழை ஆரம்பம்

படம் : மெட்டி.  பாடல் :  சந்தக்கவிகள் பாடிடும்   
பாடியவர் பிரம்மானந்தம் ; எழுதியவர் கங்கை அமரன் ; 
இசை இளையராஜா;  படம் வெளியான ஆண்டு 1982.  
கதையும் இயக்கமும் மகேந்திரன்.  

இந்தப் படத்தில் 'மெட்டி ஒலி காற்றோடு' என்னும் இளையராஜா ஜானகி அம்மா பாடிய மென்மையான பாடல், 'ஜோக்' ராகத்தில் இருந்தாலும், இன்று நான் பகிரப்போவது, பெரும்பாலும் 'ஆரபி' ராக அடிப்படையில், அதே படத்தில் அமைந்திருக்கும் 'சந்தக் கவிகள் பாடிடும் மனதினில் இன்பக் கனவுகளோ' பாடல்.   ஏன் பெரும்பாலும் என்று சொல்கிறேன் என்றால் இளையராஜா இது மாதிரி பாடல்களில் சட்டென இன்னொரு ராகத்தை தொட்டு விட்டு வந்து விடுவார் என்று திறமையான இசை வல்லுநர்கள் பிரமித்து எழுதியவற்றைப் படித்திருக்கிறேன்.

இந்தப் பாடலில் குரலின் இனிமை 30% என்றால், இன்டர்லூட் எனப்படும் இடையிசையின் இனிமை 70%

பாடலின் ஆரம்ப இசை ஒரு அற்புதம்.  முதல் சரணத்துக்கு முன்பும், இரண்டாவது சரணத்துக்கு முன்பும் இடம்பெறும் இசைகள் ஒரு அற்புதம்.  கேட்கும் காதுகள் அல்லது ரசிக்கத் தெரிந்த காதுகள் பாக்கியம் பெற்றவை.

சந்தக் கவிகள் பாடிடும்
மனதினில் இன்பக் கனவுகளே
சந்தக் கவிகள் பாடிடும்
மனதினில் இன்பக் கனவுகளே

சொந்தம் தர வரும் ஆனந்தம்
சிந்தும் கவி மழை ஆரம்பம்
சொந்தம் தர வரும் ஆனந்தம்
சிந்தும் கவி மழை ஆரம்பம்
தோன்றாத பேரின்பம்
தொடர்ந்து வரும் 
என்னுடனே தினம் பல…………

சந்தக் கவிகள் பாடிடும்
மனதினில் இன்பக் கனவுகளே……ஏ….ஏ….ஏ….

சின்னஞ்சிறு வயதே பாடும் அவள் மனதே
சின்னஞ்சிறு வயதே பாடும் அவள் மனதே
சீர் காண வேண்டும் திருநாளும் வரவேண்டும்
சீர் காண வேண்டும் திருநாளும் வரவேண்டும்

மலர் மாலை சூடும் உறவோடு கூடும்
என் உள்ளம் கண்டாடும் உறவுகளில்
இனிய சுகம் தினம் பல

சந்தக் கவிகள் பாடிடும்
மனதினில் இன்பக் கனவுகளே…..ஏ….ஏ….ஏ….

தட்டும் ஒலி இசையில் மெட்டி கவிதை தரும்
தட்டும் ஒலி இசையில் மெட்டி கவிதை தரும்
என் அன்பு நெஞ்சில் புது ராகம் அது பாடும்
என் அன்பு நெஞ்சில் புது ராகம் அது பாடும்

மடைபோல ஓடும் மனதோடு கூடும்
என் உள்ளம் கண்டாடும் உறவுகளில்
இனிய சுகம் தினம் பல…………

​சந்தக் கவிகள் பாடிடும்
மனதினில் இன்பக் கனவுகளே
சொந்தம் தர வரும் ஆனந்தம்
சிந்தும் கவி மழை ஆரம்பம்
தோன்றாத பேரின்பம்
தொடர்ந்து வரும் என்னுடனே தினம் பல…………

சந்தக் கவிகள் பாடிடும்
மனதினில் இன்பக் கனவுகளே……


===========================================================================================

சினிமாவின் மறுபக்கம் - ஆரூர்தாஸ் புத்தகத்திலிருந்து...  

எம்.ஜி.ஆர் – பானுமதி மோதல்

எம்.ஜி.ஆரும், பானுமதியும் பல படங்களில் ஜோடியாக நடித்தார்கள். ‘‘மலைக்கள்ளன்’’ படத்தில் இருந்து இருவரும் வெற்றி ஜோடியாக வலம் வந்தார்கள். தமிழின் முதல் முழு நீள வண்ணப்படமான ‘‘அலிபாபாவும் 40 திருடர்களும்’’ படத்திலும் அவர்கள்தான் இணைந்து நடித்தனர். ‘‘பொருத்தமான ஜோடி’’ என்று ரசிகர்கள் வரவேற்றனர். இந்த நிலையில் அவர்களுக்குள் பெரும் மோதல் ஏற்பட்டது. பூகம்பம் வெடித்தது. இதனால், நாடோடி மன்னனில் பானுமதியின் கதாபாத்திரம் திடீரென்று சாகடிக்கப்பட்டது. இதற்குக் காரணம் என்ன?

எம்.ஜி.ஆரின் சொந்தப்படமான ‘நாடோடி மன்ன’னை தொடக்கத்தில் டைரக்ட் செய்தவர், கே.சுப்பிரமணியம். அவர் டைரக்ஷனில் ‘நாடோடி மன்னன்’ சில ஆயிரம் அடிகள் வரையில் வளர்ந்தது.

பிறகு எம்.ஜி.ஆர். என்ன நினைத்தாரோ, மேற்கொண்டு படத்தை தானே டைரக்ட் செய்து கொள்வதாகக்கூறி, சுப்பிரமணியத்தை நிறுத்தி விட்டார். அவரும் சுமூகமாக விலகிக்கொண்டு விட்டார். ஆனால் ஆரம்பக் கட்ட ‘‘நாடோடி மன்னன்’’ பட விளம்பரங்களிலும் ஸ்டூடியோவில் ‘ஷூட்டிங் கால்ஷீட்’டிலும் சுப்பிரமணியத்தின் பெயரே காணப்பட்டது.

அடுத்தபடியாக கதாநாயகி பி.பானுமதி பிரச்சினை ஆரம்பம் ஆனது. எம்.ஜி.ஆரை பானுமதி எப்பொழுதுமே ‘‘எம்.ஜி.ஆர்.’’ என்றும், ‘‘மிஸ்டர் ராமச்சந்திரன்’’ என்றும் அழைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்!

அதற்கு ஒரு கதையும் காரணமும் உண்டு.

1949–ல் மதுரை முருகன் டாக்கீ பிலிம் கம்பெனி தயாரித்து, பி.யூ.சின்னப்பா கதாநாயகனாகவும், பானுமதி நாயகியாகவும் நடித்து கிருஷ்ணன் – பஞ்சு டைரக்ட் செய்த ‘‘ரத்னகுமார்’’ படத்தில் எம்.ஜி.ஆர். சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

அது மட்டுமல்ல – தான் ஒரு பிரபல புகழ் பெற்ற நடிகை என்பதுடன் கூட, படத் தயாரிப்பாளர், பரணி ஸ்டூடியோ சொந்தக்காரர் என்ற ‘காம்ப்ளக்ஸ்’ பானுமதிக்கு இருந்தது! அவரும் எம்.ஜி.ஆரைப்போலவே யாருக்கும் தலைவணங்கமாட்டார். ‘பெண் சிங்கம்’ எனலாம்.

(அவரை நான் ‘லேடி எம்.ஜி.ஆர்’ என்று அவருக்கு நேராகவே கூறுவேன். அதைக்கேட்டு அவர் வாய்விட்டுச் சிரிப்பார். நான் சொன்னதை ரசிப்பார்.

இந்த லேடி எம்.ஜி.ஆருக்கு, நான்தான் அதிகப்படங்களுக்கும், அவருடைய 2 சொந்தப் படங்களுக்கும் வசனம் எழுதி இருக்கிறேன்.)

கே.சுப்பிரமணியம் விலகிக்கொண்டு எம்.ஜி.ஆர். டைரக்ட் செய்தது பானுமதிக்குப் பிடிக்கவில்லை. ஏனென்றால் டைரக்ஷனைப்பற்றி பானுமதிக்கும் தெரியும்.

மெல்ல மெல்ல – அவ்வப்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு தோன்றத்தொடங்கியது.

எம்.ஜி.ஆரிடம் எப்பொழுதுமே ஒரு வழக்கம் உண்டு. சினிமாவைப் பொறுத்தமட்டில் அவர் எதையும் முன்கூட்டியே ஆலோசித்துத் திட்டமிட்டு செய்யமாட்டார். அவ்வப்போது திடீர் திடீர் என்று தனக்குத் தோன்றுவதைச் சொல்வார் – செய்வார்!

எடுத்த காட்சிகளையே திரும்பத் திரும்ப எடுப்பார். ‘எடிட்’ செய்து பார்த்துவிட்டு அதையே மீண்டும் மாற்றி எடுப்பார்.

பாட்டு எழுதி அதற்கு ‘மெட்டு’ அமைத்து இசை அமைப்பாளருடனும் பாடகர்களுடனும் பலமுறை ஒத்திகை பார்த்து முடித்த பின்னர், அதை ஒலிப்பதிவு செய்த பின்போ அல்லது அதற்கு முன்போ திடீரென்று ‘‘இந்தப்பாட்டும் மெட்டும் எனக்குப் பிடிக்கவில்லை. வேறு பாட்டு எழுதி அதற்கு ‘டியூன்’ போட்டு இன்னொரு நாளைக்கு எடுத்துக்கொள்ளலாம்’’ என்று இசை அமைப்பாளரிடம் கூறிவிட்டு, காரில் ஏறிப் போய்விடுவார்; செலவைப்பற்றி கவலைப்படமாட்டார்!

எரிமலை வெடித்தது

இப்படிப்பட்ட எம்.ஜி.ஆருக்கும், அப்படிப்பட்ட பானுமதிக்கும் இடையில் நீறுபூத்திருந்த அந்த ‘‘காம்ப்ளக்ஸ்’’ நெருப்பு ஒருநாள் படப்பிடிப்புத் தளத்திலேயே கனிந்து கொழுந்து விட்டு எரியத் தொடங்கி விட்டது!

பானுமதி நடித்த குறிப்பிட்ட ஒரு ஷாட்டை எம்.ஜி.ஆர். திரும்பத் திரும்ப வழக்கம்போல பலமுறை எடுத்தார். பொறுமை இழந்த பானுமதிக்கு கோபம் வந்துவிட்டது.

பானுமதி:– ‘‘இதோ பாருங்க எம்.ஜி.ஆர்! ஒரே ஷாட்டை மறுபடியும் மறுபடியும் எத்தனை தடவை எடுப்பீங்க?’’

எம்.ஜி.ஆர்:– ‘‘நல்லா வரணுங்குறதுக்காக எத்தனை தடவை எடுத்தா என்னா?’’

பானுமதி:– ‘‘அதுக்கு நீங்க வேற ஆளைப்பாருங்க. நல்லா வருங்குற தன்னம்பிக்கை ஒங்களுக்கு இல்லே. நீங்க என்ன எடுக்குறீங்கன்னு ஒங்களுக்கே தெரியலே.’’

எம்.ஜி.ஆர்:– ‘‘தெரிஞ்சுத்தான் எடுக்குறேன்.’’

பானுமதி:– ‘‘இல்லே. நான் ஒங்களை கவனிச்சிக்கிட்டுதான் இருக்கேன். டைரக்ஷனைப் பத்தி எனக்கும் தெரியும். இவ்வளவு நாளா சொல்லக்கூடாதுன்னு இருந்தேன். இப்ப சொல்றேன். நீங்க டைரக்டர் கே.சுப்பிரமணியத்தை நிறுத்துனது ரொம்ப தப்பு. அவருக்குப்பதிலாக வேற ஒரு டைரக்டரை வச்சிருந்தா அது நியாயம். அதை விட்டுட்டு அந்தப் பெரிய பொறுப்பை நீங்களே எடுத்துக்கிட்டது அவரை அவமானப்படுத்துனது மாதிரி. அவர் ஒரு பெரிய டைரக்டர்! அதனால அமைதியாக போயிட்டாரு. வேற யாராவது இருந்தா ஒங்களை சும்மா விட்டிருக்க மாட்டாங்க.’’

எம்.ஜி.ஆர்:– ‘‘என் டைரக்ஷன்ல ஒங்களுக்கு நடிக்க இஷ்டம் இருந்தா நடிங்க. இல்லேன்னா விட்டு
டுங்க.’’

பானுமதி:– ‘‘நானும் அதைத்தான் சொல்ல வந்தேன். ஒரு நடிகர் நடிகராகத்தான் இருக்கணும். நீங்க தேவை இல்லாம டைரக்ஷன்ல கவனம் செலுத்திக்கிட்டு ஒங்க நடிப்பைக் கோட்டை விடுறதோட மத்த நடிகர்களையும் படுத்தி வைக்குறீங்க. இது நல்லா இல்லே. நீங்களே இந்தப் படத்தோட புரொடியூஸர்ங்குறதுனால எல்லாரும் அட்ஜஸ்ட் பண்ணிப் போறாங்க. அதை நீங்க ஒங்களுக்குச் சாதகமா எடுத்துக்குறீங்க.’’

எம்.ஜி.ஆர்:– ‘‘இல்லே. நீங்க சொல்றது தப்பு.’’

பானுமதி:– இல்லே. நான் சொல்றதுதான் சரி. (அதிகக் கோபத்துடன்) மிஸ்டர் ராமச்சந்திரன்! ஒங்களைப்பத்தி எனக்கு நல்லாத்தெரியும். இதுக்கு முந்தி ‘‘அலிபாபாவும் 40 திருடர்களும்’’, ‘‘கலையரசி’’, ‘‘மலைக்கள்ளன்’’, ‘‘மதுரை வீரன்’’, ‘‘தாய்க்குப்பின் தாரம்’’ படத்தில் எல்லாம் நாம சேர்ந்து நடிச்சிருக்கோம். அப்போவெல்லாம் நீங்க வெறும் ஹீரோ மட்டும்தாங்குறதுனால நமக்குள்ளே எந்தப் பிரச்சினையும் இல்லை.

எனக்கு உங்களைப் பிடிக்கலேன்னா எப்பவோ ஒரு படத்தோட உங்களோட நடிக்கிறதை விட்டிருப்பேன். ஜனங்களுக்குப் பிடிக்கிறதுனால நாம் சேர்ந்து நடிக்கிறோம். நான் உங்களுக்குக் கொடுத்த கால்ஷீட்ல முக்கால்வாசி முடிஞ்சிபோச்சு. இன்னும் என்ன கதைன்னே எனக்குத் தெரியவில்லை.

சுப்பிரமணியம் போனதுக்கப்புறம் உங்கள் உதவியாளருங்க எங்கிட்டே வந்து ஒவ்வொரு நாளும் ஒரு கதை சொல்றாங்க. ஒண்ணுமே புரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கு. இப்பவும் சொல்றேன். உங்களுக்கு அனாவசியமாக நஷ்டம் வைக்க நான் விரும்பவில்லை. முதல்லே கதையை முடிவு பண்ணுங்க. வேறு ஒரு நல்ல டைரக்டரை போடுங்க. இன்னும் எவ்வளவு கால்ஷீட் வேணுன்னாலும் கொடுக்கிறேன். அதுக்குப் பணம் வேண்டாம். நல்லா யோசித்து சொல்லுங்கள். இன்னிக்கு எனக்கு ‘மூடு’ போயிடுச்சு! இதுக்கு மேல என்னால நடிக்க முடியாது. ஐயேம் ஸாரி. வர்றேன்.’’

– இவ்வாறு பொரிந்து தள்ளிவிட்டுப் போய்விட்டார் பானுமதி. அன்றைய ஷூட்டிங் அம்போ!

மறுநாள் மத்தியானம் பானுமதி வீடு.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பு நிர்வாகி வந்து பானுமதியிடம் ஒரு கவரைக் கொடுத்துவிட்டு உடனே அங்கிருந்து போய்விட்டார்.

பானுமதி அந்த உறையைப் பிரித்துப் பார்த்தார். உள்ளே ஒரு காசோலையும், அதனுடன் சேர்ந்து ஒரு கடிதமும் இருந்தது.

அன்புடையீர், வணக்கம்.

உங்களை வைத்து, மேற்கொண்டு படத்தைத் தொடர்வதில் எங்களுக்கு விருப்பம் இல்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பேசிய தொகையில் இதுவரையில் உங்களுக்குக் கொடுத்ததுபோக, பாக்கித் தொகைக்கான ‘செக்’ இத்துடன் இருக்கிறது. பெற்றுக்கொள்ளவும். நன்றி.

நிர்வாகி – எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்.

மறுநாள் காலை.

சென்னை ராயப்பேட்டை எம்.ஜி.ஆர். இல்லத்திற்கு நேர் எதிர் சந்து முனையில் இருந்த எம்.ஜி.ஆரின் துணைவியார் வி.என்.ஜானகி அம்மாவின் முகவரி இட்டு, பானுமதியின் ‘பரணி பிக்சர்ஸ்’ நிர்வாகி ஒரு கவரைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

ஜானகி அம்மா அதைப் பிரித்துப் பார்த்தார். உள்ளே ஒரு செக்! அத்துடன் ஒரு சிறு கடிதம்.

அன்புள்ள வி.என்.ஜானகிக்கு, பானுமதி எழுதிக்கொண்டது.

உங்கள் கணவரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். உங்கள் கம்பெனியில் இருந்து எனக்கு வந்த இந்த செக்கை நான் ஏற்றுக்கொள்வதற்கு இல்லை. மன்னிக்கவும்.

அன்புள்ள, பி.பானுமதி ராமகிருஷ்ணா.

பின்நாட்களில் 1975, 76–ல் பானுமதி அம்மாவுக்குச் சொந்தமான பரணி பிக்சர்ஸ் தயாரித்த ‘இப்படியும் ஒரு பெண்’, ‘வாங்க சம்பந்தி வாங்க’ இரண்டு படங்களுக்கும் நான் வசனம் எழுதி, சிவகுமார், பத்மினி, நாகேஷ், எம்.என்.நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், மனோரமா ஆகியோர் நடித்து பானுமதி அம்மாவே டைரக்ட் செய்து அவரது பரணி ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் – ஒருநாள் மாலை சிற்றுண்டி இடை நேரத்தில் எம்.ஜி.ஆரைப்பற்றி ஏதோ பேச்சு எழுந்தது. அப்பொழுது, ‘‘நாடோடி மன்னன்’’ படத்தில் எம்.ஜி.ஆருக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை?’’ என்று நான் கேட்டதற்கு அவர் சொன்ன விவரத்தைத்தான் அப்படியே இங்கே எழுதி இருக்கிறேன்.

இத்துடன் இன்னொரு சிறப்பு செய்தி. அவரை நான் கேட்டேன்:
‘‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸிலிருந்து உங்களுக்கு வந்த கடிதத்திற்கான பதில் கடிதத்தை ஜானகி அம்மாவுக்கு ஏன் அனுப்புனீங்க?’’

அதற்கு அவர் சொன்ன பதில்:– ‘லேடி டூ லேடி.’ என் படத்துக்கு நீங்கதானே பேர் வச்சிங்க அதுதான்.

‘இப்படியும் ஒரு பெண்’ – அது நான்தான்!’’ என்று சொல்லிவிட்டு கண்ணாடி ரவைகளைப் பளிங்குத் தரையில் கொட்டியது போல கலகலவென்று சிரித்தார்!

இசைக்கல்லூரி

அதே எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்து தமிழக முதல்–அமைச்சர் ஆன பிறகு ஒருநாள் – தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரிக்கு யாரை முதல்வராக நியமிப்பது என்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்கள் அறிந்த இசைக்கலைஞர்கள் யார் யார் பெயரையோ குறிப்பிட்டார்கள்.

எல்லாவற்றையும் கேட்ட எம்.ஜி.ஆர். இறுதியில் தன் முடிவைத் தெரிவித்தார்.

‘‘இந்தப் பதவிக்குத் தகுதியானவர் பி.பானுமதி அம்மா ஒருவர்தான். அரசு அவரை நியமித்திருப்பதாக ஒரு கடிதம் தயாரித்து எடுத்து வாருங்கள். நான் கையெழுத்திடுகிறேன்.’’

இசைக்கல்லூரியின் முதல்வர் நியமனத்துக்கான கடிதம் எம்.ஜி.ஆரின் கையெழுத்துடன் பானுமதி அம்மாவின் கைக்கு வந்தது!

அதைப்பார்த்து ஆச்சரியத்திலும், ஆனந்தத்திலும் ஆழ்ந்துபோன அம்மா பானுமதி, உடனே தொலைபேசி வாயிலாக எம்.ஜி.ஆரை அழைத்து தன் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

எம்.ஜி.ஆரின் துணைவியார் வி.என்.ஜானகி அம்மாவுக்கும் நன்றி சொல்ல அவர் மறக்கவில்லை.

அவர்தான் எம்.ஜி.ஆர்! – இவர்தான் பானுமதி!

 Source : தினத்தந்தி

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு இளையராஜா இசை நிகழ்ச்சியின் நடுவே நேர்காணலில் ஒரு ரசிகை அல்லது ரசிகர் இளையராஜாவிடம் கேட்டார்.  "இந்தப் பாடலில் (பொன்மேனி உருகுதே) எஸ். ஜானகி அம்மா எக்ஸ்ட்ரா சத்தங்கள் எல்லாம் கொடுக்கிறாரே..  அதெல்லாமும் நீங்கள் சொல்வதுதானா?"

இளையராஜா பதில் சொன்னார்.  "பின்னே?  பாடல் ரெடி.  ரிகர்சல் முடித்தாயிற்று.  இசைக்கலைஞர்கள் இசையை வாசிக்க தயாராய் காத்திருக்கிறார்கள்.  நான் ஒரு மைக்குடன் வெளியே அமர்ந்து விட்டேன்.  ஜானகி அம்மா ரெக்கார்டிங் ரூமுக்குள் போய்விட்டார்.  நான் வெளியிலிருந்து அவரை மைக்கில் அழைத்து இந்தந்த இடங்களில் இப்படி இப்படி சத்தம் கொடுக்க வேண்டும் என்று சொன்னேன்.  ஒவ்வொரு இடத்திலும் நான் சொல்வதை கவனித்து அதே போல அம்மா குரல் கொடுத்தார்.  எல்லாம் நான் சொல்லிக்கொடுத்த சத்தங்கள்.  அவராகவா இதை எல்லாம்  பாடுவார்?"


============================================================================================

ஓகே, இரண்டாவது பாடலுக்குப் போவோமா?  

படம் : தைப்பொங்கல்  ; வெளியான ஆண்டு 1980  ;  இயக்கம், மற்றும் பாடல்கள் : எம் ஜி வல்லபன்  ;  இசை : இளையராஜா 

இந்தப் படத்தின் நான்கு பாடல்களில் மூன்று பாடல்கள் எனக்குப் பிடிக்கும் என்றாலும், இன்று ஒரு பாடல் மட்டுமே பகிர்கிறேன் என்று தயக்கத்துடன் சொல்லிக் கொள்கிறேன்.  கையைக் கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.

பகிர எனக்கு நேரமும் பொறுமையும் இருந்தாலும் கேட்க உங்களுக்கு பொறுமை வேண்டுமே..  

ஆமாம், எல்லோருமே பாடல்களை ஒலிக்கவிட்டு கேட்கிறீர்களா?  அல்லது 'ஓ இந்தப் பாடலா?  கேட்டிருக்கிறேனே...' என்று கடந்து விடுவீர்களா?!


இன்று பகிரும் இந்தப் படத்தின் பாடல் 'கண்மலர்களின் அழைப்பிதழ்'.  இளையராஜாவும் ஜானகியம்மாவும் பாடியது.  பாடலின் ஆரம்பம் மட்டும் ABBA வின் MoneyMoney பாடலின் தொடக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.   மற்றபடி இளசின் ராஜாங்கம்தான்.  அந்த ஆரம்ப இசையை கட்டாயம் கேட்கவேண்டும்.  நடுநடுவே குழலோசை, அப்புறம் குழலோசையும் வயலினும் அடுத்தடுத்து...   ஜானகி அம்மா குரல் பற்றி சொல்லவே வேண்டாம்!

இளையராஜா  : கண்மலர்களின் அழைப்பிதழ் 
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
கண் மலர்களின் அழைப்பிதழ் பொன் இதழ்களின் சிறப்பிதழ்

இனி வரும் இரவுகள் இளமையின் கனவுகள் தான்
காண்போமே சேர்ந்தே நாமே…..

கண்மலர்களின் அழைப்பிதழ் பொன் இதழ்களின் சிறப்பிதழ்

ஜானகியம்மா : நான் ஆளும் மனம் பூவோ
மீன் நாளும் தமிழ்ப் பாவோ
இளையராஜா : பூவாடும் விழி தானோ
நீ பாட மொழி ஏனோ

ஜானகியம்மா : என்ன இன்று
இளையராஜா : ஆஹா
ஜானகியம்மா : கண்ணில் என்னை வென்று
இளையராஜா : ஆஹா
ஜானகியம்மா : கண்ணன் எண்ணுவதோ

இளையராஜா : எனக்கென ஒரு கணமோ
விளக்கங்கள் தரும் மனமோ
நமக்கென விழித்திடும்
மலர்களோ மனங்களோ
ஜானகியம்மா : கண்மலர்களின் அழைப்பிதழ் 
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
இளையராஜா : லல லலலா…..​

இளையராஜா : தாம்பூல நிறம் தானே
மாம்பூவின் இளம் மேனி
ஜானகியம்மா : ஆ…….தாங்காது இனிமேலே
தூங்காது மனம் நாளை

இளையராஜா : கண்ணில் என்ன
ஜானகியம்மா : லாலா
இளையராஜா : மின்னல் கண்ட பின்னும்
ஜானகியம்மா : லாலா
இளையராஜா : இன்னும் மின்னுவதோ

ஜானகியம்மா : உனக்கென்று ஒரு மனமோ
நமக்கென்று திருமணமோ
இணைக்கின்ற இயற்கையின்
உறக்கமோ…….மயக்கமோ……

இளையராஜா : கண் மலர்களில் அழைப்பிதழ்
ஜானகியம்மா : லல லலலா…..
இளையராஜா : பொன் இதழ்களின் சிறப்பிதழ்
ஜானகியம்மா : லல லலலா…..

ஜானகியம்மா : இனி வரும் இரவுகள்
இளமையின் கனவுகள் தான்
இருவர் : காண்போமே சேர்ந்தே நாமே…..
ஜானகியம்மா : லல லலலா…..
இளையராஜா : லல லலலா…..

27 கருத்துகள்:

  1. இரண்டு பாடல்களுமே கேட்ட ஞாபகம் இல்லை. முதல் பாடலை பாடியிருக்கும் பிரும்மானந்தம் வேறு பாடல்கள் ஏதாவது பாடியிருக்கிறாரா? இந்த பாடலை ஏசுதாஸ் அல்லது ஜெயசந்திரன் பாடியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றியது.
    பாடலின் அழகை நீங்கள் விவரித்திருக்கும் விதத்தில் என்னைப் போன்ற இசையறிவு குறைந்தவர்கள் கூட நன்றாக ரசிக்க முடிகிறது. நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா...    அப்பாடி..  இன்று முத்தலிப் கமெண்ட் வரவே எட்டு மணி ஆகிவிட்டது!  

      பிரம்மானந்தம் தமிழில் வேறு பாடல்கள் பாடியதாக நினைவில்லை.  ஒரு பாடலை ஒரு குரலில் நாம் முதலில் கேட்டு விட்டோம் என்றால், அந்தக் குரல்தான் அந்தப் பாடலுக்கு என்று நம் மனம் ஸ்டாம்ப் செய்து விடும்.  அந்த வகையில் யேசுதாஸோ, ஜெயச்சத்திரனோ இந்தப் பாடலுக்கு பொருந்தி இருக்க மாட்டார்கள்! 

      சரணங்களில் அவர் குரலில் வரும் குழைவை கேட்டீர்களா?


      He also sang for a dozen Tamil films, for composers such as Ilaiyaraja...Santha Kavigal for Tamil movie "Metti" from Director Mahendran and Shankar–Ganesh, and composed the music for two movies, `Malayathi Pennu' and `Kanni Nilaavu'

      Brahmanandan was born in Kadakkavoor, which is located north of Trivandrum district in Kerala, on 22 February 1946. His parents were Pachan and Bhavani. He was the third child of his parents, who totally had eight children. He began to study Carnatic music since a young age, firstly from his uncle Kadakkavoor Sundaram Bhagavathar, and later from the eminent musician D. K. Jayaraman. Brahmanandan was the father of Rakesh Brahmanandan, another Malayalam singer.[2]

      Brahmanandan died at his home in Kadakkavoor on 10 August 2004, at the age of 58

      நீக்கு
  2. பதில்கள்
    1. முருகா...   வாங்க செல்வாண்ணா..  வணக்கம்.

      நீக்கு
  3. வியாழன் பதிவு போல இத்தனை வகையறா தொகையறா...

    பிரமிப்பு...
    தகவல் களஞ்சியம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணையத்திலிருந்து எடுப்பதுதானே..   ஒரே மாதிரி இருக்க வேண்டாம்   ,கொஞ்சமாவது வித்தியாசம் காட்டுவோமே என்றுதான்...

      நீக்கு
  4. ஸ்ரீராம், முதல் பாடல் ஆஹா ஆஹா ஆஹா...கண்ணை மூடிக் கொண்டு ஆரம்ப இசையைக் கேட்கும் போது மனதில் விரியும் காட்சிகள்...படத்தின் பாடல் காட்சி அல்ல. படமோ பாடல் வீடியோவோ பார்த்ததில்லை.....என் மனதில் அப்படியே இயற்கைக் காட்சிகள் விரியும்...சுகம்...

    பாடலுமே எப்படியான இசை என்று அடிக்கடிச் சொல்ல வைக்கும் ஒன்று

    ஸ்ரீராம், நீங்கள் சொன்னது போல் ஆரபி தான் மெயின்.

    எப்படி ஒவ்வொன்றுக்கும் இசைக்குறிப்புகள் எழுதியிருப்பார் என்று நினைத்ததுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. பானுமதி - எம் ஜி ஆர் - விஷயங்கள் செம சுவாரசியம். கருத்து வேறுபாடு வந்து படம் பண்ணவில்லை என்றாலும், இசைக்கல்லூரி முதல்வராக பானுமதிதான் என்ற எம் ஜி ஆர்....ஈகோ - 'தான்மை' (புதுசா இருக்கா இந்தச் சொல்? சீமான் அண்ணன் தான் சொன்னாப்ல!!! ) இல்லாமல் மரியாதை செய்தது....அதை பானுமதியும் ஏற்றுக் கொண்டது எல்லாம்....கருத்துவேறுபாடு தனி திறமையை மதிப்பது தனி என்ற என்ன அழகான தெளிவான சிந்தனை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போது அவர்கள் எல்லாம் ஓரளவுக்கு புரிதலுடன் இருந்திருக்கிறார்கள்.  சண்டை போட்டு பிரிந்த கண்ணதாசனுக்கு அவ்வப்போது (உரிமைக்குரல் போல) பாடலும், அரசவைக்கவிஞர் பதவியும் தந்திருப்பாரா எம் ஜி ஆர்?

      நீக்கு
  6. பொன்மேனி - இந்தச் செய்தியை எங்கோ பார்த்த நினைவு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி..   நான் உங்களுக்கு வாட்ஸாப்பில் பார்வேர்ட் செய்திருக்கக் கூடும்!

      நீக்கு
  7. ஆமாம், எல்லோருமே பாடல்களை ஒலிக்கவிட்டு கேட்கிறீர்களா? அல்லது 'ஓ இந்தப் பாடலா? கேட்டிருக்கிறேனே...' என்று கடந்து விடுவீர்களா?!//

    கேட்டிருந்த பாடலானாலும் ஒலிக்கவிட்டுக் கேட்பதுதான் நம்ம வழக்கம்!, ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... நன்றி கீதா... சந்தோஷமாயிருக்கு.

      நீக்கு
  8. abba வீடியோவைத் திறந்ததும்...என்னடா ஆரம்பம் மட்டும் இது அடுத்து இளசின் ராஜாங்கம்னு ஸ்ரீராம் எழுதியிருக்கிறார் ஆனா காணலையே ஆங்கிலப்பட்டாகத்தானே இருக்கு என்னாச்சுன்னு கேட்க நினைத்த சமயம் கொஞ்சம் கீழெ போனதும் தான் தெரிகிறது பாட்டு அடுத்த வீடியோன்னு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தடி சாக்கில் ஒரு ஆங்கிலப் பாடலையும் பகிர்ந்து விட்டேனில்ல....  முன்னரும் ஓரிரு ஆங்கிலப் பாடல்கள் பகிர்ந்த நினைவு. 

      நீக்கு
  9. கண்மலர்களின் பாடல் இப்போதுதான் கேட்கிறேன் ஸ்ரீராம்.

    அந்த ஆங்கிலப்பாடலின் தொடக்கத்திலிருந்து அப்படியே நைசாக நழுவி ராஜாவின் கைகளில் வந்துவிடுகிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. வேறு ஒரு பாட்டையும் நினைவுபடுத்துகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னவென்று இன்னும்  கண்டுபிடிக்கவில்லையா?

      நீக்கு
  11. வேறு ஒரு பாட்டையும் நினைவுபடுத்துகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. முதலாவதுபாடல் பெரிதாக கேட்டதில்லை. இனியபாடல்.இசை சூப்பர்.

    இரண்டாவது :) இப்பொழுதுதான் கேட்டேன்.

    மூன்றாவது கேட்டு இருக்கிறேன். இப்பொழுதும் கேட்டேன்.

    பானுமதி எம்ஜி ஆர் தகவல்கள் எனக்கு புதிது.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. பாடல் பகிர்வும், நிறைய தகவல்களும் என்று பதிவு இருக்கிறது.
    பாடல்கள் கேட்டேன். முதல் பாடல் பாடியவர் விவரம் தெரிந்து கொண்டேன், பாடியவர் பேர் தெரியாமல் பாடலை கேட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!