23.6.25

'திங்க'க்கிழமை – கடலைமிட்டாய் - நெல்லைத்தமிழன் ரெஸிபி

 

எனக்கு கடலைமிட்டாய் ரொம்பப் பிடித்தமானது. அதனால் நல்ல கடலைமிட்டாயைப் பார்த்தால் வாங்கி வருவேன். எனக்கு வாங்குவதிலும் ரொம்ப கட்டுப்பாடு கிடையாது.  வாங்கினால் 10 பாக்கெட் என்பது போல வாங்கி வருவேன். முன்னால், அடையாறில் இருந்தபோது, அண்ணாநகரில் தயார் செய்து வரும் ஒரு பிராண்ட் எனக்கு ரொம்பவே பிடித்தமானது. என்னிடம் உள்ள கெட்ட குணம் (என்றுதான் நான் நினைப்பேன்), எப்போதும் தயார் செய்யும் இடத்தில் வாங்க முனைவது. காரணம், இந்த ரீசெல்லர்கள் ஒரு வேலையும் செய்யாமல் (அதாவது அந்த பிராடக்டுக்கு எந்த உதவியும் செய்யாமல்) வெறும்ன விற்பதன் மூலமாக நிறைய கமிஷன் அடிக்கிறார்கள் என்பது என் எண்ணம். அதனால் அடையாறில் அந்த கடலைமிட்டாய் பிராண்டை கடைகளுக்கு சப்ளை செய்யும்போது, அந்த ஆட்கள் நம்பரைப் பிடித்து அவர்களிடம் நேரடியாக வாங்குவேன். (நெல்லையைச் சேர்ந்தவர்கள்தாம்). அவங்க என்னிடம் சொல்வாங்க, சார், கடைகள்னா பலவித பொருட்களையும் கொடுத்துவிடுவோம், மாதம் 5000-10000 ரூ என்று வாங்குவாங்க. ஆனால் உங்களைப் போல கேட்பவர்களுக்குக் கொடுப்பது சரியா வராது என்பார்கள். கும்பகோணத்திலும் ஒரு கடையில்தான் கடலைமிட்டாய் வாங்குவேன், ரொம்ப நல்லா இருக்கும். நெல்லைப்பகுதியில் இரயிலில் விற்பார்கள். அதுபோல சில மாதங்கள் முன்பு தமிழகத்திலிருந்து வடநாட்டுக்கு இரயிலில் பயணித்தபோது, ஆந்திரா பகுதியில் பெரிய கடலைமிட்டாய், அரைகிலோ 140 ரூ என்று விற்பனை செய்தார்கள். அதுவும் நன்றாக இருந்தது. பல நேரங்களில் நான் இவற்றை வாங்கி என்னுடைய மேசை டிராயரில் வைத்திருந்தாலும், இனி இனிப்பைச் சாப்பிட்டு எடையைக் கூட்டக்கூடாது என்று நினைத்து உபயோகிக்காமல் வீணாக்கவும் செய்வேன். எனக்குத் தெரிந்த ஒருவர், பிரபல பிராண்ட் இனிப்பகத்தின் பெரிய பதவியில் இருக்கிறார். அவர் சொல்வார், லட்டு போன்றவை செய்யும்போது நாங்கள் க்ளூகோஸ் உபயோகித்துப் பிடிப்பதால், உடையாமல் பளபளன்னு இருக்கும், ஆனால் அவை உடலுக்கு நல்லதல்ல என்பார்.

பாருங்க..எப்போதும்போல, என்ன செய்முறை என்பதை எழுதுவதற்குப் பதிலாக வளவளவென்று சப்ஜெக்டை விட்டுவிட்டு எழுத ஆரம்பித்துவிட்டேன்.

எங்கள் டவரில் (வளாகத்தில் 5-6 டவர்கள் உண்டு. எங்களது 18 மாடி. சில 32 மாடிகளைக் கொண்டவை) ஒருவர், கோலாப்பூரிலிருந்து வருடத்திற்கு ஒரு முறை அவரது உறவினர் ஃபேக்டரியிலிருந்து வெல்லம் மற்றும் வெல்லப்பொடி கொண்டுவந்து விற்பார். வெல்லம் கிலோ 60, வெல்லப்பொடி 120 ரூ என்று நினைவு. கோலாப்பூர் வெல்லம் எப்போதுமே மிக சுத்தமாக இருக்கும், நல்லா பாகு வரும். இதை எழுதும்போது எனக்கு மூணாறு பயணத்தின்போது நாங்கள் சென்றிருந்த நேரம் மரையூரில் பார்த்த வெல்லம் நினைவுக்கு வருகிறது. அது மிகவும் புகழ்பெற்ற ஒன்று. கிலோ 100 ரூபாய். நான், வருடத்திற்கு எங்கள் டவரிலேயே 8 கிலோ வெல்லம் வாங்கிவிடுவேன். அதனால் எதுக்கு என்று வாங்கவில்லை.

கடலைமிட்டாயை கடையில் வாங்குவதைவிட வீட்டிலேயே செய்தால் என்ன என்று யோசித்தேன். அருகே இருக்கும் மார்க்கெட்டில் வறுத்த கடலை கிடைக்கும் (விலை அதிகமில்லை. கிலோ 140 ரூ). அதனை வாங்கிவந்து, 90 சதம் தோலை எடுத்துவிடுவேன். பிறகு மனைவி மிகுதியை எடுத்து புடைத்து கடலையைத் தயார் செய்துவிடுவாள். பிறகு நான் சென்று கடகடவென கடலைமிட்டாய் செய்துவிடுவேன். அவள் போனால் போகிறதென்னு அவள் தயார் செய்து வைத்திருக்கும் ஏலக்காய் பொடியையும் உபயோகிக்க அனுமதிப்பாள். இந்தக் கடலைமிட்டாயை, எனக்கு இனிப்பு சாப்பிடணும் என்று தோன்றும்போது எடுத்துக்கொள்வேன். இது பிற இனிப்புகளைவிட உடலுக்கு மிக நல்லது என்று நான் நினைக்கிறேன். இனி செய்முறை.

தேவையானவை:

வறுத்த கடலை, நல்ல பாகு வெல்லம், கொஞ்சம் ஏலக்காய் பொடி

அரிசிமாவு கொஞ்சம், கடலைமிட்டாய் கலவையைக் கொட்ட ஒரு தட்டு

அளவு

வறுத்த கடலை கப் 4

வெல்லம் 2 கப் (சில நேரங்களில் நான் 2 ¼, 2 ½ என்று உபயோகிப்பது உண்டு)

செய்முறை

தட்டில் பட்டர் பேப்பரைப் பரத்திவைத்துவிடவும்.

கடாயில் வெல்லத்தை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

வெல்லப்பாகு தக்காளிப் பதம் எட்டும் சமயத்தில், ஒரு ஸ்பூன் ஜீனி போடவும்.

தக்காளிப்பாகு வந்த சிறிது நேரத்தில், எடுத்துவைத்திருக்கும் கடலையைச் சேர்க்கவும்.

நன்கு கிளறி, உடனே தட்டில் பரத்திவிடவும்.

அழுத்தவேண்டும் என்றால் ஒரு டபராவை உபயோகிக்கவும்.

சிறிது நேரம் கழித்து கத்தியால் துண்டம் போடுவதற்காக நன்கு கீறிவிட்டுவிடவும்.

நன்கு ஆறிய பிறகு, நாம் போட்ட கோட்டிலேயே நன்கு கீறி, துண்டங்களை எடுக்கவும்.

படங்கள்:  








சமீபத்தில் செய்த கடலைமிட்டாய்.

இதற்கு முன்பு வெல்லப்பாகு டங்குபதம் வைத்து கடலைமிட்டாய் செய்தபோது

வித்தியாசங்கள்: 

நான் ஒரு தடவை டங்குபதம் (கடைசிப் பதம்) பாகு வைத்து அதில் கடலைமிட்டாய் செய்தேன். மிக அருமையாக வந்தது. ருசி சொல்லி மாளலை. ஆனால் அதைக் கடிக்கும்போது கொஞ்சம் கடினமாக இருந்தது. அதைவிடப் பெரிய பிரச்சனை, பாகு பற்களில் நன்கு பிடித்துக்கொண்டால், பற்கள் கெட்டுப்போகும். எனக்கே கடிக்கும்போது எங்கே ஒரு சில பற்களில் உள்ள கேப் Cap வெளியில் வந்துவிடுமோ என்று பயம் வந்தது. வந்தால் பத்தாயிர ரூபாய் பழுத்துவிடும். இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது கீதா ரங்கன் அக்கா, வெல்லப் பாகில் சிறிது சீனி சேர்த்தால் இந்தப் பிரச்சனை இருக்காது என்றார். அதன்படி ஒரு முறை செய்தபோது சுலபமாக உடைந்தது.

இந்த வார திங்கள் செய்முறை உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். செய்துபாருங்கள்.

 = = = = = =

34 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ரார்த்தனைக்கு நன்றி கமலா ஹரிஹரன் மேடம். நாங்கள் இப்போது தேவப்பிரயாகை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்

      நீக்கு
  2. நெல்லை கடலை மிட்டாய் ஸூப்பர்.  எனக்கும் பிடிக்கும்.  யாருக்குதான் பிடிக்காது, இல்லையா? 

    மளிகை, காய்கறி   வாங்கும் போதெல்லாம் அந்தக் கடையில் விற்கும் ஒரு கடலை மிட்டாய் பாக்கெட் வாங்கி விடுவேன்.  சிறிய சிறிய சதுரங்களாக கரகரவென நன்றாய் இருக்கும். 

    கோவில்பட்டி கடலைமிட்டாய்தான் ரொம்பப் பெயர் பெறாது என்று சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம். கோவில்பட்டி கடலைமிட்டாய் ரொம்ப ஃபேமஸ். காரணம் அங்கு கடலை விளைச்சல் அதிகம் இருட்டுக்கடைபோல போலிகள் அதிகம்

      கடலை மிட்டாய் எளியவர்களின் இனிப்பு

      நீக்கு
  3. வெல்லமும் உடலுக்கு நல்லதுதானே?  இரும்புச்சத்து!  கடலையும் நல்லதுதான்.  நான் வெறும் கடலையாக அதைச் சாப்பிட்டால் எனக்கு  தொந்தரவுகள் செய்யும்.  கடலைமிட்டாயாக சாப்பிடும்போது அவ்வகை தொந்தரவுகள் எனக்கு வராது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கடலையை ஊறவைத்துச் சாப்பிடுவேன். நல்லதல்ல. க.மிட்டாய் அல்லது வறுத்த கடலை ப்ளஸ் வெல்லம் நல்ல காம்பினேஷன். நல்லது

      நீக்கு
  4. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவில் தங்களது செய்முறையான கடலைமிட்டாய் செய்முறை, படங்களுடன் அமர்க்களமாக உள்ளது.படிபடியான தகவல்களுடன் செய்த வேர்க்கடலை மிட்டாய் நன்றாக உள்ளது. எனக்கும் வேர்க்கடலை மிட்டாய் மிகவும் பிடிக்கும். அப்போதெல்லாம் தி. லிருந்து சென்னை திரும்பும் போது கோவில் பட்டி மிட்டாய் வாங்காமல் திரும்பியதில்லை. அது ஒரு காலம்.

    வேர்க்கடலைப்பருப்பு, வெல்லம் பற்றிய தகவல்களும் அருமை. படங்களில் பாகு வெல்லத்தின் தரம் தெரிகிறது. கிளறும் இறுதியில் சற்று ஏலக்காய்ப் பொடியையும் சேர்த்தால், (தங்கள் மனைவியிடமிருந்து வாங்கிய ஏலக்காய் பொடி) வாசனை நன்றாக இருக்கும்.

    வேர்க்கடலையை வெல்லம் சேர்க்காமல் வெறும் வறுத்த கடலை அதிகம் சாப்பிட்டால், உடம்பில் பித்தம் அதிகமாகி விடும். அதனால் வெல்லம் கலந்த கடலை நல்லது. அதுவும் ஒரளவுக்கு மேல் சாப்பிட்டால் (தினமும்) பித்தத்தை கிளப்பி விடும். அதனால் , அதை வறுத்து புடைக்கும் போது முனைகளை (சிறு பருப்பு போல் இருக்கும்) நீக்கி விட்டு பாதி, பாதியாக்கி க. மிட்டாய் செய்வோம். அதுதான் அதிக அளவு பித்தத்தை உண்டாக்கும் சக்தி பெற்றவை. ஆனால், அது மிகவும் சாப்பிட சுவையாக இருக்கும். மேலும் , வேர்க்கடலை பருப்பை தோல் நீக்காமல், தோலோடு சேர்த்து உண்டால், அதுவும் (அந்த தோல்) நல்லதென்று, பித்தத்தை குறைக்கும் எனவும் எங்கள் அம்மா சொல்வார்கள்.

    முன்பு அம்மா வீட்டில் (அம்மாவின் தாய்மாமாவின் தயவில்) வேர்க்கடலை வயலில் விளைந்து மூட்டை மூட்டையாக வரும். இப்படி மிட்டாய் செய்து, உப்பு சேர்த்து வேக வைத்து, அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு தந்து என சில மாதங்களில் காலி செய்வோம். இப்போது ஆசைப்பட்டால் கடைகளில் வே. க. மிட்டாய் வாங்கி சாப்பிடும் காலமாகி விட்டது. நீங்கள் தந்த தகவல்களுக்கும், செய்முறைகளுக்கும் மிக்க நன்றி. தங்களது செய்முறை, படங்கள் அனைத்தும் ஒரு தடவை செய்து பார்க்கும் ஆவலை உண்டாக்கியது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா ஹரிஹரன் மேடம்..மிக ரசனையாக நிறைய, நான் எழுதவிட்டுப்போன தகவல்களுடன் நன்றாக எழுதியிருக்கீங்க. கை பரபரவென்று கடலை மிட்டாயைத் தேடுகிறது.

      திருநெவேலி செல்லும் ஆவல் வந்துவிட்டது. விஞ்சை விலாஸ், சந்திரவிலாஸ், சந்திரா ஸ்வீட்ஸ், சாந்தி ஸ்வீட்ஸ், பாளை ஸ்ரீராம் லாலா, கல்லிடைக்குறிச்சி ஆஞ்சநேயா ஸ்வீட்ஸ், ஜங்ஷன் இரயில் நிலையம் அருகில் தம்பையா அல்வா எனப் பல இடங்களும் பல கோயில்களும் அழைக்கின்றன

      நீக்கு
    2. நெல்லைக்குப் போனால் உடன்குடி கருப்பட்டி, ஓலைப்பெட்டி சுக்கு வெல்லம், மனதில் நிற்கும் பூரிமசால்..ஆஹா

      நீக்கு
    3. /திருநெவேலி செல்லும் ஆவல் வந்துவிட்டது. விஞ்சை விலாஸ், சந்திரவிலாஸ், சந்திரா ஸ்வீட்ஸ், சாந்தி ஸ்வீட்ஸ், பாளை ஸ்ரீராம் லாலா, கல்லிடைக்குறிச்சி ஆஞ்சநேயா ஸ்வீட்ஸ், ஜங்ஷன் இரயில் நிலையம் அருகில் தம்பையா அல்வா எனப் பல இடங்களும் பல கோயில்களும் அழைக்கின்றன/

      அதனாலென்ன..! இப்போது யாத்திரை சென்ற இடங்களில் தரிசனம் முடிந்தவுடன், வந்து சற்று நாட்கள் ஓய்வெடுத்த பின், இறைவன் அருளால்,தி. லி பக்கமும் சென்று வாருங்கள்.

      நீக்கு
  5. நானும் கடலைமிட்டாய் பிரியர்தான்
    இப்போதெல்லாம் கடைகளில் மற்றும்
    சூப்பர் மார்க்கெட் களில். விற்கப்படும்
    கடலை மிட்டாய்கள் வெல்லப்பாகில்
    செய்யாமல் சக்கரைபாகில் தான் செய்து வருகிறது
    என்பதுதான் வருத்தம்
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சக்கரபாணி சார். உங்களைச் சில நாட்கள் காண முடியவில்லையே.

      நல்ல கடலை மிட்டாயைக் கெடுக்க ஜீனி குளூகோஸ்லாம் சேர்க்கறாங்க. 70ல் கமி மேல் கலர் தேங்காய் போட்டிருப்பாங்க. பிறகு பொரி சேர்த்த போலிகள் வந்தன

      நீக்கு
  6. ​கடலை மிட்டாய் செய்முறை விளக்கம் நன்றாக உள்ளது. எந்த இனிப்புக்கும் செய்முறை சரியானாலும் பக்குவம் சரியில்லை எனில் கெடுத்து விடும். உ-ம் மைசூர் பாக், அல்வா போன்றவை. அந்த பக்குவத்தை சரியாக சொல்லித்தர முடியாது. அது அனுபவத்தால் வருவது.

    மஹராஷ்டிராவில் நடந்த கடலை மிட்டாய் ஊழல் பற்றி (சிக்கி ஊழல்) அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். நான் சுமாராக இனிப்பு செய்வேன். 30 சதவிகித நேரத்தில் நினைத்தமாதிரி வராது. எங்க உறவினர் இனிப்பு செய்வதில் எக்ஸ்பர்ட். சமீபத்தில் 40 பேருக்கு கேசரி செய்யும்போது சொதப்பிவிட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

      சிக்கி ஊழல் படிக்கலையே. பாசிடிவ் செய்தியோடு கோர்த்துவிடுங்கள் ப்ளீஸ் நல்ல தலைப்போடு

      நீக்கு
  7. மிகவும் பிடித்த பதார்த்தம். ஆனா பாருங்க சாப்பிட முடியாம ....

    நெல்லை, படங்கள், செய்முறை எல்லாமே ஸ்டெப் பை ஸ்டெப் எல்லாம் சூப்பரா இருக்கு

    நல்லா செய்திருக்கீங்க நெல்லை.

    முன்ன அடிக்கடி செய்தவை. மிட்டாயாகவும், உருண்டையாகவும்.

    நம் வீட்டில் எல்லாருக்கும் ரொம்பப் பிடிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆனால் சாப்பிட முடியாமல்//- அதனாலென்ன. தம்பி வரும்போது நம்பிக் கொடுக்கலாமே

      உருண்டை பிடிப்பது தலைவலி பிடித்த வேலை, எனக்கு

      நீக்கு
  8. என் பாட்டியின் நினைவு வந்தது. நான் கடலைமிட்டாய் உருண்டை எல்லாம் செய்ய அப்பாவின் அம்மா / பாட்டியிடம் கற்றுக் கொண்டேன். அவர் அடிக்கடிச் செய்வார். குழந்தைகளுக்காகவும், தனக்கும் பிடிக்கும் என்பதால்!

    நெல்லை, நீங்க சொல்லியிருப்பது போல், என் பாட்டி சீனி சேர்க்க மாட்டார். வெல்லம் மட்டும் நல்ல பாகு பதத்தில் பண்ணும் போது அந்தச் சுவை செமையா இருக்கும். நல்ல அடர் ப்ரௌன் நிறத்தில்

    ஆனால் அதை உடைப்பதே சில சமயம் கடினமாக இருக்கும் இல்லைனா பல்லில் ஒட்டும். அப்ப ஒரு சமையல் செய்யும் மாமாவிடம் கற்றது குறிப்பாக அவர் மனஹோரம் செய்தப்ப (நம் வீட்டில் என் மாமாவின் முதல் பெண்ணுக்கு அதுத்டான் அப்ப முதல் நிகழ்வு எங்க கூட்டுக் குடும்பத்தில். அப்ப நான் கல்லூரியில்.

    அவர் மனஹோரம் செய்தப்ப கொஞ்சம் சீனி சேர்த்தார் அவர் சொல்லித்தான் இப்பக்குவம்...சீனி சேர்த்தால் உடைக்க வரும் என்று. அதிகம் தேவையில்லை கொஞ்சமே கொஞ்சம். நாம் எடுக்கும் வெல்லத்தைப் பொருத்து, சீனி.

    பள பள தோற்றமும் கொடுக்கும் உடைக்கவும் வரும் பல்லில் ஒட்டாமலும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன் க்கா. மனோகரத்திலும் நீங்க சொன்னபடி சீனி சேர்த்துப் பண்ணும் ஆசை வந்துவிட்டது

      பாட்டியின் நினைவு. ஆஹா. அந்த நாளும் வந்திடாதோ

      நீக்கு
  9. பாட்டி செய்யும் போது கடலையை சுளகில் போட்டு தொலி எடுத்து அதன் மூக்கையும் எடுத்துவிடுவார் அதுதான் பித்தம் சேர்க்கும் என்று.

    வறுத்துக் கொடுத்தாலும் எங்களை அதை எடுத்துவிட்டுச் சாப்பிடச் சொல்வார். இல்லை என்றால் அவரே சுளகில் போட்டு எடுத்துக் கொடுத்துவிடுவார்.

    என் பாட்டி எங்களோடுஇருந்தப்ப, என்னிடம் கடலை உருண்டை அலல்து மிட்டாய் கேட்பார். செய்து கொடுப்பேன். அப்புறம் போகப் போக, "கோந்தே, நீ மிட்டாய் பண்ணாட்டாலும் பரவால்ல, கடலை வறுத்து ஒரு கிண்ணத்துல போட்டுட்டு, இன்னொரு கிண்ணத்துல வெல்லம் போட்டுக் கொடுத்துடு போறும்" என்று. கடலையை நானும் சுளகில் போட்டு மூக்கு உடைத்து பாட்டியிடம் கொடுப்பேன்.

    வெந்து கொடுத்தாலும் வெல்லம் கேப்பார்!!!!

    இப்ப இங்கு வெந்த கடலைதான், அப்படியேவோ அல்லது, சாலாடாகவோ ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /கோந்தே/- உணர்ச்சிவசப்பட வைக்கும் பதம். அந்த அன்புக்கு என்ன கைம்மாறு செய்துவிட முடியும்?

      கடலையின் மூக்கு பற்றி நீங்கள் சொன்னது நினைவில் இருக்கிறது

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. படிப்படியாக கடலை மிட்டாய் செய்முறை மிக அருமை.
    படங்கள் நன்றாக இருக்கிறது.
    கீதா ரெங்கனின் வெல்லப்பாகில் சீனி சேர்பது முக்கிய குறிப்பு நன்றாக இருக்கிறது.

    கமலா ஹரிஹரன் சொன்னது போல கடலையின் மூக்கு நீக்கி சாப்பிடுவது நல்லது. என் மாமனார் என் குழந்தைகளுக்கு கடலை சாப்பிடும் முறை சொல்லி கொடுத்த போது கடலையின் மூக்கு நீக்கி சாப்பிடும் முறையை சொல்லி கொடுத்தார்கள். கடைசியில் கொஞ்சம் வெல்ல கட்டி சாப்பிட வேண்டும் பித்தம் சேராது என்றும் என் அம்மா சொல்வார்கள்.

    முன்பு மாலை நேரம் இரும்பு வாணலியில் மண் போட்டு வறுத்து சூடாய் தருவார்கள் தள்ளு வண்டியில் வருபவர்கள் . வாசம் , அந்த சூடான கடலையை நினைக்க வைத்து விட்டீர்கள்.
    அதை வாங்கி தோல் நீக்கி ஊதி சாப்பிட்டுக் கொண்டு அப்படியே பேசிக் கொண்டு நடந்த காலங்கள் நினைவுக்கு வருகிறது.
    பச்சை வேர்கடலை மாயவரத்தில் அடிக்கடி வாங்குவோம். மாவடும், கடலையும் இந்த சீஸனில் கிடைக்கும்.

    வேக வைத்து கடலையை சுண்டலாக செய்து கொடுத்தால் என் கணவருக்கு பிடிக்கும் .
    இப்போது வறுத்த கடலையை வெல்லத்தோடு பொடி செய்து சில நேரம் உருண்டை பிடித்து சாப்பிடுவேன். வறுத்த எள்ளோடு வறுத்த கடலையை பொடி செய்து அதனோடு வெல்லம் போட்டு மிக்ஸியில் ஓட்ட வேண்டும் அதிக ஓட்டி விட்டால் இரண்டும் எண்ணெய் கக்கி விடும் அதனால் அளவாய் ஓட்டி எடுத்து உருண்டை பிடிக்க வேண்டும்.
    நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /இப்போது வறுத்த கடலையை வெல்லத்தோடு பொடி செய்து சில நேரம் உருண்டை பிடித்து சாப்பிடுவேன். வறுத்த எள்ளோடு வறுத்த கடலையை பொடி செய்து அதனோடு வெல்லம் போட்டு மிக்ஸியில் ஓட்ட வேண்டும் அதிக ஓட்டி விட்டால் இரண்டும் எண்ணெய் கக்கி விடும் அதனால் அளவாய் ஓட்டி எடுத்து உருண்டை பிடிக்க வேண்டும்.
      நன்றாக இருக்கும்./

      ஆமாம். சகோதரி இப்படி பொடி செய்து சாப்பிட டால், பற்களுக்கு பிரச்சனை இல்லாமல் சௌகரியமாக உள்ளது. இல்லையென்றால் பல்வலி வந்து விடும். நான் வீட்டில் எனக்காகத்தரும். வே. மிட்டாய்/ உருண்டைகளையும் இப்படி மிக்ஸி சின்ன ஜாரில் போட்டு பொடித்து சாப்பிடுவேன். எள்ளு மிட்டாயும், பற்களில் மாட்டிக் கொள்ளும்.
      பொடித்துச் செய்யும் எள்ளுருண்டை (வறுத்து பொடி செய்தது நன்றாக இருக்கும். பொதுவாக எள்ளை வறுத்து அப்படியே வெல்லப்பாகில் சேர்த்து செய்யும் முத்துருண்டை பிடிப்பதில்லை. அது அசுப நாட்களில்தான் செய்ய வேண்டுமென ஒரு ஐதீகம் .) அப்படியல்ல...! அது எல்லாநாட்களிலும் செய்யலாம். நன்றி.

      நீக்கு
    2. கோமதி அரசு மேடம்.. கடலையைப்பற்றிய குறிப்புகள் அருமை. பலாச்சுளைக்கும் கடைசியில் சிறிய துண்டு பலாக்கொட்டை சாப்பிடுவது நல்லது என்பார்கள்.

      முன்பு வேர்க்கடலை ஊறவைத்துச் சாப்பிடுவேன். சுண்டல் நல்லது என கீதா ரங்கன் சொன்னபிறகு அப்படடிச் சாப்பிடுகிறேன்

      கடலையும் வெல்லமும் ஆஹா. பொடி செய்தாலும் சுவை

      நீக்கு
    3. கமலா ஹரிஹரன் மேடம்... உடலுக்கான ப்ரோட்டீனுக்கு வெறும் எள்ளை வறுத்து தினமும் ஒரு கரண்டி சாப்பிடணுமாம். அதற்குப்பதில் ஒரு பாக்கெட் எள்ளுருண்டை சாப்பிடக்கூடாதாம். வெறும் எள்ளை எப்படிச் சாப்பிடுவது? ஆனால் எள்ளுப்பொடி வெல்லம் நல்லா இருக்கும்

      நீக்கு
    4. ஒரு பாக்கெட் எள்ளுருண்டையை எப்படி சாப்பிட முடியும்? (அதுவும் ஒருவரே) இங்கு ஒரு பாக்கெட் வாங்கினால், பல நாட்கள் வைத்திருந்து அனைவரும் (தினமும் அல்ல.) சாப்பிடுவோம். எள்ளும், கொள்ளும் அதிகம் எடுத்துக்கொண்டால், உடலுக்கு விதவிதமான பிரச்சனைகள் வரும என்பது அனைவரும் அறிந்ததே.

      நீக்கு
    5. ஐயோ. சில நேரங்களில் பாதி பாக்கெட்டுக்குமேல் கடகடவேன சாப்பிட்டுவிடுவேன் கமலா ஹரிஹரன் மேடம். அதனால் சில நாட்கள் டயட்டில் இருந்து குறைத்த எடை சட்னு ஏறிடுது

      நீக்கு
    6. கமலா , கடலை மிட்டாய், எள் உருண்டை எல்லாம் இப்போது கடையில் வாங்குவது பல்லில் ஒட்டிக் கொள்ளும் கடிப்பது கடினம் தான்.
      மிக்ஸியில் பொடி செய்து சாப்பிடுவது நல்லதுதான்.

      நீக்கு
  12. கடலை மிட்டாய் பல படங்களுடன் அட்டகாசமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. இப்போதுதான் தேவப்பிரயாகையில் ஸ்நானம் செய்துவிட்டு கண்டமெனும் கடிநகர் திவ்யதேசத்தில் தரிசனம் செய்துவிட்டு பிபல்கோட் நோக்கிச் செல்கிறோம். நீண்ட மறுமொழி கொடுக்க ஆசை. பார்ப்போம்

    பதிலளிநீக்கு
  14. கடலை மிட்டாய் எனக்கு மிகவும் பிடிக்கும். வீட்டில் கடலை உருண்டை அல்லது கடலை மிட்டாய் எப்போதும் இருக்கும். உங்கள் செய்முறை நன்றாக இருக்கிறது.
    பலருக்கு சாப்பிட பிடிக்கும்,ஆனால் கையை அசைக்க மாட்டார்கள், சமைத்து போடுபவர்களை நூறு குறை சொல்வார்கள். உங்களுக்கு பிடித்தவற்றை நீங்களே செய்வது பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம். சில உதவிகளை மனைவியிடமிருந்து பெற்றுக்கொள்வேன். ஆனால் என்னால் முடிந்த எல்லாவற்றையும் முடிந்தவரை நானே செய்துகொள்வேன்.

      கீரை வாங்கி ஆய்வது, சிலபல இனிப்புகள், ஆனியனில் எதுவேண்டுமானாலும் கட் பண்ணுவது என ஆவலுடன் செய்வேன்.

      இருந்தாலும் இந்த ஜெனரேஷன் மாதிரி இருவரும் சரிசமம் என்பதை நான் சின்ன வயதில் கற்றுக்கொள்ளவில்லை

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!