17.6.25

கொடுத்த படத்திற்கான சிறுகதை :: ஹனிமூன் - நெல்லைத் தமிழன்

 

என்னாச்சு உங்க எல்லாருக்கும்? வெளில பரத் உம்முனு ‘வாங்க ஆன்டி’ என்றுகூடச் சொல்லாமல் உட்கார்ந்திருக்கான். நீங்க ரெண்டுபேரும் ஹால்ல கன்னத்துல கையை வச்சுக்கிட்டு இருக்கீங்க. என்ன நடந்தது?

வாடீ பத்மா. என்னத்தச் சொல்ல? கல்யாணமாகி ரெண்டுபேரும் ஹனிமூன் போறோம்னு சிக்கிமுக்குப் போயிருக்காங்க. மூணு நாளாச்சு.. பேசவே இல்லை. நாங்களும் கூப்பிட்டால் நாட் ரீச்சபிள்னு வருது. காலைலேர்ந்து இதே கவலை.

ஏம்மா.. ஹனிமூன் போன ஜோடியை அர்ஜண்ட்டா கூப்பிட என்ன தேவையிருக்கு? ஒரு வாரம் நிம்மதியா, அவங்க ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கலாம், எஞ்சாய் பண்ணலாம்னு போயிருக்காங்க. அதுக்குள்ள எதுக்கு உங்களுக்கு விசாரம்?

உனக்கென்ன நீ சுலபமாச் சொல்லிட்ட. ரெண்டு வாரமா மேகாலயாக்கு ஹனிமூன் போன ஜோடியைக் காணலை, அப்புறம் தங்கின இடத்துலேர்ந்து 20 கிலோ மீட்டர் தள்ளி மாப்பிள்ளையோட உடல் கிடைச்சது, பொண்ணை இன்னமும் தேடிட்டிருக்காங்கன்னுலாம் ஊரே அல்லோலகல்லோலப்படுது. அந்தப் பக்கம்தான் போயிருக்குற தீபக்குக்கும் மேகாவுக்கும் என்னாச்சுன்னு நாங்களான்னா நேத்துலேர்ந்து கவலைப்பட்டுக்கிட்டுருக்கோம்.

இந்தக் கவலைலதான் நியூஸ் பார்க்கலையா? அந்தப் பொண்ணைத்தான் உத்திரப் பிரதேசத்துல கண்டுபிடிச்சுட்டாங்களே.

அதெல்லாம் பார்த்தோம். இப்போ எங்க கவலையெல்லாம், நம்ம மேகா முழு மனசோடத்தான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாளா, கல்யாணத்துக்கு முன்ன அவளுக்கு யாரும் பாய் பிரண்ட் இருந்தானாங்கறதையெல்லாம் கேட்க விட்டுட்டோமே. இந்த தீபக்கும், மேகாவோட அன்பா இருப்பானா, இல்லை அவள்ட ஆரம்பத்திலேயே கோபமா நடந்துக்கிட்டான்னா அவளுக்குப் பிடிக்காமல் போய், பின்னால ரொம்ப பிரச்சனையாயிடுமேங்கறதை எல்லாம் நினைச்சு ரொம்பவே கவலைப்பட்டுக்கிட்டிருக்கோம்.

ரெண்டு பேருக்கும் விருப்பமில்லாமலா இந்தத் திருமணம் நடந்திருக்கும்? அவங்கதான் மூணு மாசமா, எவ்ளோ ஆசையா மண்டபம், அலங்காரம், டிரெஸ், கேடரர் என்று ஒவ்வொண்ணுலயும் எப்படி சேர்ந்து முடிவு செஞ்சாங்க. எங்க ஹனிமூன் போகணும்னு முதல்லயே ப்ளான் பண்ணி, டிக்கெட்லாம் புக் பண்ணிப் போயிருக்காங்க. இதெல்லாம் தெரிஞ்சிருந்தும் உங்களுக்கு சந்தேகமா?

இந்தக் காலத்துப் பெண்கள் மனசுல என்ன இருக்குன்னு யாருக்குத் தெரியும்?… இந்த மேகாலயா கேஸ் போல ஏதேனும் ஆச்சுன்னா, பெரிய பிரச்சனை ஆயிடுமே. இல்லை போன இடத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஆனால், போலீஸ் வீட்டுக்கு வந்துடுமே.. அடுத்து பத்திரிகையில் எங்க பேரப் போட்டு நாறடிச்சுடுவானேன்னு ஒரே கவலையா இருக்கு. ஹனிமூனை பக்கத்துல இருக்கற ஊர்ல கொண்டாடினா என்னவாம்? இல்லை மாடீலயே இருந்தால் என்னவாம்? வேளாவேளைக்கு என்ன வேணுமோ அதை நானே பண்ணிக்கொடுத்துடுவேனே.

எப்போதும் நியூஸ் பார்த்துக்கிட்டே இருக்காதீங்கன்னு சொன்னா யார் கேட்கிறா?. எல்லாரும் சீரியல்களிலேயே மூழ்கினால் நியூஸ் சேனல் எப்படி நடத்துவதுன்னு யோசிச்சு, இந்த மாதிரி எக்குத் தப்பான செய்திகளை மசாலாலாம் சேர்த்து தெனமும் ஒளிபரப்பிடறான். சரி சரி உங்களுக்குத்தான் கவலை. இந்த பரத்துக்கென்ன. அவனுக்குத் தெரியாதா அவங்களைப் பத்தி?

டேய் பரத்.. இங்க வாடா.

ஆன்டீ..

மண்டபத்துல ரெண்டு பேருக்கும் நீதான உதவிலாம் செஞ்ச. இந்த டிக்கெட் புக் பண்ணினது, ஹோட்டல் புக் பண்றதுலாம் உன்கிட்டத்தானே சொன்னாங்க. அப்புறம் என்ன? நீ ஏன் மூஞ்சியை உம்முனு வச்சிருக்க?

இல்லை ஆன்டீஇந்த மேகாலயா ஜோடியைப் பத்தின நியூசை பேப்பரில் தினம் தினம் படிச்சு எனக்கு தூக்கமே வரலை. டிவிலயும் வித விதமாச் சொல்றாங்க. ஒருவேளை தீபக்குக்கும் மேகாவுக்கும் ஏதாவது ஆயிருந்ததுன்னா என்ன பண்ணறது? அப்புறம்….

அப்புறம் என்னடா? ஏதேனும் ரகசியமா?  பரத் பக்கத்தில் சென்று கேட்டாள்.

ஆன்டீ.. அம்மாக்குத் தெரிய வேண்டாம். நான் மேகா தங்கச்சி நேகாட்ட இன்னும் ஐ லவ் யூசொல்லலையேன்னு கவலையா இருக்கு. அண்ணனும் அண்ணியும் பத்திரமா வந்தாத்தானே அடுத்து என் லவ்வை ஆரம்பிக்கலாம்?

கதைக்கு ஆதாரமான செய்தி

சமீப வாரங்களில் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த சோனம் ரகுவன்ஷி மற்றும் ராஜா ரகுவன்ஷி, மே 11ம் தேதி திருமணத்திற்குப் பிறகு தேனிலவுக்காக மேகாலயா சென்றதும், (மே 21), பிறகு மே 23லிருந்து இவர்கள் இருவரையும் காணாததையும், இதற்குக் காரணம் பெண் கடத்தலா இல்லை கொள்ளையடிப்பா என்று மேகாலயா போலீஸ் தலையைப் பிய்த்துக்கொண்டதும் பெரிய செய்தியாகி பேப்பரில், தொலைக்காட்சிகளில் வந்ததைப் பார்த்திருப்பீர்கள். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஜூன் 2ம் தேதி, ராஜாவின் சிதைந்த உடலைக் கண்டுபிடித்தார்கள். சோனமை ஒருவேளை கடத்தியிருப்பார்களா என்ற சந்தேகம் வந்தது. ஆனால் அந்த ஏரியாவில் இருந்த ஒருவன், இந்த இருவரையும் இன்னும் மூன்று பேர்களோடு, நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் பாதையில் மே 23ல் பார்த்ததாகத் தகவல் சொல்லவும், மேகாலயா போலீஸ் உத்திரப் பிரதேசத்திற்கு வரவும், ஜூன் 9ம் தேதி சோனம் சரணடையவுமான நிகழ்வுகள் நடந்தன., இன்னும் என்ன நடந்தது என்று மேகாலயா போலீஸ் முழுமையாகக் கண்டுபிடிக்கவில்லை. இப்போதைக்கு சோனம், மூன்று ஆட்களை ஏற்பாடு செய்து கணவனை மேகாலயாவில் கொன்றார் என்று சொல்கின்றனர். இதற்கிடையில், சோனம் நடத்திக்கொண்டிருந்த பிஸினெஸில் வேலை பார்த்த ராஜ் குஷ்வாஹா என்பவனுக்கும் சோனத்திற்கும் முன்பே பழக்கம் இருந்ததாகவும், இந்த மாதிரி கொலை செய்ய அவன் திட்டம் போட்டுக் கொடுத்ததாகவும் கிளைக்கதை ஒன்று ஓடுகிறது.

சோனா ரகுவன்ஷி, ராஜா ரகுவன்ஷி.   அடுத்த படத்தில் கைது செய்யப்பட்ட பிறகு.

அது சரி. இந்தச் செய்தியில் எனக்கு என்ன ஆர்வம் என்று யோசிப்பவர்களுக்காக. நான் ஓரிரு மாதங்கள் முன்பு இந்த இடத்திற்கெல்லாம் சென்று வந்திருக்கிறேன். ஒரு சில இடங்களைப் பார்க்க முடியாததால் (சுற்றுலாவை நடத்தியவருக்கும் பங்குகொண்டிருந்த பலருக்கும் அவற்றில் ஆர்வம் இல்லாததால்), நான் என் மனைவியை அழைத்துக்கொண்டு இந்த இடங்களுக்கு மீண்டும் செல்லவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். இதற்கிடையில் இந்தச் செய்தி ஓடவும், தனியாக இப்படி டிராவல் ஏஜெண்டுகளை நம்பிச் செல்லலாமா என்று மனதில் தயக்கம் ஏற்பட்டது. இப்போது இந்தச் செய்தி ஓரளவு சுபமாக முடிந்துவிட்டதால் (ஹா ஹா ஹா. பிரச்சனை மேகாலயாவில் இல்லை. திருமணத் தம்பதிகளிடையே என்று ஓரளவு தெரிந்துவிட்டதால்) வரும் ஜனவரி/ஃபெப்ருவரியில் அசாம், மேகாலயாவிற்கு மீண்டும் செல்லலாம் என்று நினைத்திருக்கிறேன்.

சிரபுஞ்சி அருகே உள்ள ஒரு நீர்வீழ்ச்சி.

நாங்க போயிருந்த நேரம் பனிமூட்டம். அதனால அரை மணி நேரம் காத்திருந்தும் நீர்வீழ்ச்சியைப் பார்க்க முடியலை. அன்றைக்கு நாங்கள் மூன்று வெவ்வேறு நீர்வீழ்ச்சிகளுக்குப் போயிருந்தோம். முதல் நீர்வீழ்ச்சியில் மெல்லியதாக நீர் வந்துகொண்டிருந்த து. சிரபுஞ்சியில் இந்த நீர்வீழ்ச்சியைப் பார்க்க முடியவில்லை. இதற்கு அடுத்துச் சென்ற நீர்வீழ்ச்சிக்கு நுழையும்போது அங்கேயும் இதே பனிமூட்டம். அதனால் எதற்கு 50 ரூபாய் டிக்கெட் வெட்டிச் செலவு என்று நாங்கள் உள்ளே நுழையவில்லை. டிக்கெட் கவுண்டரில் இருந்தவர், சிறிது நேரம் காத்திருந்தால் பனிமூட்டம் விலகிவிடும் நீர்வீழ்ச்சியைக் காணலாம் என்று சொன்னாலும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

= = = = = = = = =

26 கருத்துகள்:

  1. சீரியஸான படத்திற்கு நகைச்சுவையாக யோசித்திருக்கும் உங்களை பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். மிக்க நன்றி.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ரார்த்தனைக்கு நன்றி கமலா ஹரிஹரன் மேடம்.

      நீக்கு
  3. கதையை வாசித்துச் சிரித்துவிட்டேன், நெல்லை. அதுவும் பரத் சொல்வது.

    சோகமா இருக்கற படங்களுக்கு, நகைச்சுவைக் கதை...

    உடனேயே உங்களுக்கு ஐடியா தோன்றி நல்லா எழுதியிருக்கீங்க நெல்லை...

    உங்க எல்லாருடைய திறமைகளையும் பார்க்கறப்ப என்னை நினைச்சுக்கிட்டேன்......!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன் க்கா.... அக்காவுக்கேற்ற தம்பி.

      நீக்கு
    2. அக்காவுக்கேற்ற தம்பி.//

      ஹாஹாஹாஹா.....தம்பி, என்னை நினைச்சுக்கிட்டேன்னு சொல்றதை முடிக்கலையே நான்!!!!!! அது நீங்க நினைக்கறா மாதிரி இல்லை!!!!!!!!

      கீதா

      நீக்கு
  4. இதை வாசிக்கறப்ப, இந்தக் கதைக்கும் கூடப் பொருத்தமா, அதாவது சோகத்தின் இடையிலும் ஒரு சின்ன நகைச்சுவை வெளிப்படுவது போல் தோன்றுகிறது....ஹிஹிஹி எனக்கு அப்படித் தோன்றுகிறதோ!!!!

    பானுக்கா கதைல கூட இந்த உணர்வு தோன்றியது!!!

    ஏ ஐ எடுத்துக் கொடுக்கும் படங்கள் பின்ன எப்படி இருக்குமாம்!!!!!! ஹிஹிஹிஹி....

    நல்ல ஓவியர்கள் வரைவதற்கும், படங்களை வைத்தே விளையாடிய ஓவியர் இளையராஜா நினைவுக்கு வருகிறார். என்ன அற்புதமான கலைஞர்! ஏ ஐ க்கும் மனிதன் செய்வதற்கும் வித்தியாசம் இதுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை கீதா ரங்கன். இதற்கு சோகமான கதை எழுதலாம் ஆனால் இயற்கையா இருக்காது. எந்த ஒரு சோகத்திலும் மூவரின் கவலைகள்/சோகம் ஒன்றாக இருப்பது கடினம். அந்த நிகழ்வு எப்படி அவங்களை பாதிக்கிறது என்பதைப் பொறுத்து வேறுபடும்.

      நீக்கு
  5. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

    படத்துக்கேற்ற மாறுபட்ட கதை (நீங்கள் மாற்றியமைத்த கதை) நன்றாக உள்ளது. கதையில் ஹனிமூன் சென்ற தம்பதிகள் நலமாக திரும்பி வரட்டும் என வேண்டிக்கொண்டேன். (பரத்துக்காகவும்.:))) )

    ஆனால், அதற்கான உண்மை கருவை படிக்கையில், மனதிற்கு வருத்தமளித்தது. இந்தச் செய்தியை இப்போதுதான் அறிகிறேன். திருமணம் முடிந்த சந்தோஷங்களில் ஆழ்ந்திருந்த அந்த இரு குடும்பங்களுக்கு இந்த விஷயம் கேள்விபட்டவுடன் அவர்கள் மனது எப்படி துடித்திருக்கும் என நினைக்கையில் நம் மனதிற்கும் கஸ்டமாக உள்ளது.

    பழைய கால பாடலாகிய "வாராய்.. நீ வாராய். போகுமிடம் வெகு தூரமில்லை.." என்ற பாடலும் ஏனோ நினைவுக்குள் வந்தது. ஆக, காலங்கள் மாறவில்லை. மனிதர்கள்தான் (ஏ)மாறிக் கொண்டேயிருக்கிறார்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். மேகாலயா கதைதான் இந்த ஏர் இன்டியா விபத்துக்கு முந்தைய ஒரு வாரம் ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு குடும்பங்களும் மிக்க அதிர்ச்சியை அடைந்திருக்கும். அந்தப் பெண்ணின் மூத்த சகோதரன், அவளுடைய மாமியாரைப் பார்த்து, அழுது, குற்றம் தன் சகோதரியிடம் இருந்தால் தூக்கில் தொங்கட்டும் என்று சொன்னான். ஒருவரது தவறு பலரைப் பாதித்துவிடும், தீராக் களங்கத்தை ஏற்படுத்திவிடும். (எந்தப் புண்ணியவான் எல் டி டி இ பிபாகரனுக்கு ராஜீவ் காந்தியைக் கொன்றுவிட்டால் தங்கள் போராட்டத்துக்கு நல்லது என்று ஆலோசனை சொன்னானோ... அது லட்சக் கணக்கான ஈழத் தமிழர்கள் வாழ்வில் நெடிய துயரத்தை ஏற்படுத்திவிட்டது.

      நீக்கு
    2. //"வாராய்.. நீ வாராய். போகுமிடம் வெகு தூரமில்லை.."// இந்தக் கதைக்குள் இந்தப் பாடலின் அர்த்தமே வெகுவாக மாறுகிறதே. ஹா ஹா ஹா

      நீக்கு
    3. ஹா ஹா ஹா. நீங்கள் எழுதிய கதைக்கு அந்தப்பாடலை குறிப்பிடவில்லை. நீங்கள் தந்த அந்த உண்மை சம்பவத்திற்கு குறிப்பிட்டேன். அந்தப் பாடல் இடம் பெற்ற" மந்திரி குமாரி " படத்தில் வில்லன் தன் மனைவியை அப்படி பாடித்தான் அவளை மலை உச்சியிலிருந்து கீழே தள்ளி விடவேண்டி மலை உச்சிக்கு அழைத்துச் செல்வான். கடைசியில் அவள் அவனை தள்ளி விட்டு விடுவாள். எப்போதோ தொலைக்காட்சியில் பார்த்தது இந்த படம். சம்பவங்கள் அந்த நினைவை உண்டாக்கியது.

      நீக்கு
    4. இந்த மேகாலயா நிகழ்வு ரொம்பவே ஆச்சர்யமாக இருக்கிறது. எப்படித்தான் மூளை இல்லாமல், கணவனைக் கொல்ல நினைத்தாளோ அந்த நவீன பத்தினி. போலீஸ் பிடித்துவிடும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லையே அவளுக்கு. எந்தக் குற்றமுமே தடயங்கள் இல்லாமல் செய்ய முடியாது அல்லவா?

      நீக்கு
    5. ஆம்.. நிறைய இடங்களில் இந்த முயற்சியைப் பற்றி சிறிதும் கவலையுறாமல், சிந்திக்காமல் அரங்கேற்றி விடுகிறார்கள். சில இடங்களில் சிலர் அப்போதைக்கு தப்பி விட்டாலும், "தெய்வம் நின்று கொல்லும்" என்ற பழமொழிக்கேற்ப பிறகு மாட்டிக் கொள்வார்கள். எப்படியும் "வினை விதைத்தவன் வினையை அறுத்தானே" ஆக வேண்டும்.

      நீக்கு
  6. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    நீங்கள் மேகாலயாவில் எடுத்த படங்கள் அருமையாக உள்ளது. நீர் வீழ்ச்சி கண்களுக்கு தெரியாதபடி மறைக்கும் பனி மூட்டம். எனக்கும் இந்த மாதிரியான இடங்களை பார்க்க ஆசைதான். ஆனால், அதற்கான கால நேரங்களில் அங்கு பயணிக்க வேண்டும். உங்களின் அந்த பயண ஆசையும் நீங்கள் நினைத்தபடி நிறைவேறட்டும். நீர் வீழ்ச்சிகளை கண்டு ரசித்து விட்டு வந்து, பதிவாக எபியில் எங்களுக்கு தாருங்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீர் வீழ்ச்சியைக் காணாவிட்டாலும், வட கிழக்குப் பயண விவரங்களை ஞாயிறு தொடராக எழுத நினைத்திருக்கிறேன். இன்று எழுதினாலும் வெளிவர வரும் மார்ச் மாத்த்திற்கு மேல் ஆகிவிடும்.

      நீக்கு
    2. மார்ச் மாதமா? (9 மாதங்கள்.) ஆனாலும் எழுதுங்கள். நாங்களும் அந்த இடங்களுக்கெல்லாம் உங்களுடன் பயணித்ததைப் போன்ற உணர்வை, உங்களின் சிறப்பான எழுத்துகள், மற்றும் சிறந்த புகைப்படங்களினாலும் பெறுவோம். ஆவலோடு காத்திருக்கிறோம். நன்றி.

      நீக்கு
    3. ஜனவரி வரை முன்னமே எழுதிக் கொடுத்துவிட்டேன் என்று நினைவு. இன்னும் பத்து பகுதிகளும் கொடுக்கணும். அதன் பிறகுதான் புதிய தொடருக்கு இடம் கிடைக்கும் கமலா ஹரிஹரன் மேடம். இதற்கிடையில் எப்போது பத்ரி யாத்திரை, கயா யாத்திரை எழுதுவது என்று யோசிக்கிறேன்.

      நீக்கு
    4. ஓ.. ஜனவரி வரை தந்து விட்டீர்களா? நல்லது. மீதியையும் எழுதி தொடருங்கள். அத்தனையையும் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். உங்களின் எழுத்தார்வத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

      பத்ரி யாத்திரை, கயா யாத்திரைக்களை மேற்கொண்டு சிறப்புடன் சென்று வரவும் என் பிரார்த்தனைகள். இறைவனின் துணையால் நல்லபடியாக சென்று வாருங்கள். நன்றி.

      நீக்கு
  7. ஆரம்பத்தில் சோகமாக ஆரம்பித்து, சோகப்படங்களுக்குள் நல்லதோர் ரசனையான கதை தந்துள்ளீர்கள். பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. படக்கதை நன்றாக இருக்கிறது நெல்லை.

    //ஆன்டீ.. அம்மாக்குத் தெரிய வேண்டாம். நான் மேகா தங்கச்சி நேகாட்ட இன்னும் ‘ஐ லவ் யூ’ சொல்லலையேன்னு கவலையா இருக்கு. அண்ணனும் அண்ணியும் பத்திரமா வந்தாத்தானே அடுத்து என் லவ்வை ஆரம்பிக்கலாம்?//

    இதை தான் சொல்வார்களோ ! அவர் அவர் கவலை அவர்களுக்கு என்று.
    அண்ணனும், அண்ணியும் பத்திரமாக வந்து நேகாவிடம் காதலை சொல்லி எல்லாம் சுபமாக முடியட்டும்.
    சிரபுஞ்சி நீர்வீழ்ச்சி பார்க்க முடியவில்லையே! நீங்கள் பார்த்து இருந்தால் எங்களுக்கு கிடைத்து இருக்கும் நீர்வீழ்ச்சி காட்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவர் அவர் கவலை அவர்களுக்கு// - நான் இந்தத் தலைப்புதான் கதைக்கு வைத்திருந்தேன். ஸ்ரீராம், வெளிப்படையா தெரிகிற மாதிரி இந்தத் தலைப்பு வைக்கக்கூடாது என்று ஆலோசனை சொன்னார்.

      நாங்கள் சென்ற நேரம் குளிர், பனிக்காற்று. அதனாலும் ஒவ்வொரு இடத்திலும் நிறைய நேரம் செலவழிக்கும்படி (பனி விலகும்வரை) இல்லாததாலும், நினைத்த அளவு நீர் வரத்து அந்த சீசனில் இல்லாததாலும் நீர்வீழ்ச்சிகள் பார்க்க இயலவில்லை. இதுல ஒரு சோகம், சிக்கிம் கேங்க்டங்கில், இந்திய-சீனா எல்லைக்குப் போகும் வழியில் மலையிலிருந்து பார்த்த ஓரிரு நீர்வீழ்ச்சிகளை இறங்கிப் படமெடுக்க ஆசைப்பட்டபோது, ஜீப் ஓட்டுநர், மலையிலிருந்து இறங்கும் இடத்தில் ஒரு நீர்வீழ்ச்சிக்குப் போகிறோம் அங்கு படங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னார், ஆனால் அந்த நீர்வீழ்ச்சியிலோ தண்ணீர் வரத்தே இல்லை.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!